Monday 15 November 2010

தற்பாலினர் வெறுப்புக்கு (Homophobia) எதிரான கருத்துரைப்பும் கலந்துரையாடலும்

Gay/Lesbian/Trans-gender ற்கு எதிரான பல்வேறு வகையான கருத்துக்கள் இயல்பாக்கப்படுவதும் (Normalizing Discourses), அவர்களது தெரிவுசார் உரிமைகள் மறுக்கப்படுவதும், சமூகத்தின் அங்கத்தவர்களாக அவர்களது இருப்பு தொடர்ந்தும் ஒடுக்கப்படுவதும் தமிழ்ச்சமூகத்தில் நீண்டகாலமாக நிலவிவருகிறது. பரவலான இக்காழ்ப்புணர்வுக்கு  எதிராக எமது எதிர்க்குரல்களைப் பதிவு செய்தல் அவசியமாகின்ற இந்தவேளையில்....

பொது ஊடகங்கள் சிலவும் இக்காழ்ப்புணர்வு முழுத் தமிழ்ச் சமூகத்தின் நிலைப்பாடு என்ற பிரமையை ஏற்படுத்த முயல்கின்றன. ஊடகங்கள் தம் விழுமியங்களைத் தவறுவதைச் சுட்டிக்காட்டவும், எமது தன்னிலையை சுயவிமர்சனம் செய்யவும், விளிம்புநிலையாக்கம் (Process of Marginalization) குறித்தான விவாதங்களை மேற்கொள்ளவும்....

நாங்களும் நீங்களுமாய் ஓர் உரையாடலுக்கான பொதுக்களத்தில் சந்திப்போம்


Where: Scarborough Civic Centre
            150 Borough Road
           (McCowan & Ellesmere)

When: Friday, November 19, 2010
           At 6.00 PM


Friends Aganinst Homophobia
416 725 4862 begin_of_the_skype_highlighting              416 725 4862      end_of_the_skype_highlighting / 647 829 9230/ 416 841 6810 begin_of_the_skype_highlighting              416 841 6810      end_of_the_skype_highlighting
email: friendsagainsthomophobia@gmail.com
 
 

Sunday 31 October 2010

I am a Tamil Queer

CTBC வானொலி விளம்பரம், அதன் பின்பான சர்ச்சைகளை முன்வைத்து

"Toronto mayoral campaign ends on a hateful note" என்ற Globe and Mail தலையங்கம் சாலப்பொருந்தும், Canadian Tamil Broadcasting Corporation எனப்படும் CTBC வானொலியில் ஒலிபரப்பான 35 செக்கன்கள் நீடிக்கும் விளம்பரம் கிளப்பிய சர்ச்சைகளை ஒரு வசனத்தில் அடக்க. ரொரொன்ரோவின் நகரபிதாவைத் தெரிவு செய்வது தொடர்பில் நடந்த தேர்தல் சம்பந்தமான நிகழ்வுகளில் ஆகக்கூடிய கசப்புணர்வையும், இலங்கைத் தமிழர்கள்பால் கனேடிய மத்தியதர வகுப்பு பொது உரையாடற் தளங்களில் வெறுப்பை உமிழ்வதற்கு அடுத்த காரணத்தையும் இந்த விளம்பரம் ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் Globe and Mail செய்தியின் பின்னூட்டல்களில் அதிகம் வரவேற்பைப் பெற்றிருக்கிற பின்னூட்டம் பின்வருமாறு அமைந்திருக்கிறது:

This is another example of why the effects of Canada multiculturalism and immigration policies must be studied regarding how they affect gays/lesbians and women already living here. Frankly, I don't want a country ruled by superstitions imported from the third world.

மேற்படி பின்னூட்டத்தை 124 பேர் ஆதரித்திருக்கிறார்கள். 34,296,000 பேரை வெறும் 124 பேர் பிரதிநிதித்துவப் படுத்தமாட்டார்கள் என்று உதறித்தள்ளினால், “புள்ளிவிபரவியல்” என்கிற கோட்பாடு கிலுகிலுத்துப் போகும். இதுபற்றி எந்தவிதமான அக்கறையுமின்றி நாங்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

சர்ச்சையின் பின்னணி
2003 ம் வருடமே தற்போதைய நகரபிதா டேவிட் மில்லர் (நவம்பர் 30 வரை அவரே) மூன்றாம் முறையாக நகரபிதாத் தேர்தலில் நிற்கப்போவதில்லை என அறிவித்திருந்த நேரத்தில் இருந்தே 2010 டிசம்பர் 1ல் நகரபிதாவாகப் பதவியேற்கப் பலர் போட்டிபோட்டார்கள். ஜனவரி 4, 2010 தொடங்கி செப்டெம்பர் 10ம் திகதி வரைக்கும் வேட்பு மனுக்கள் இந்தப் பதவிக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டன. நகரபிதா பதவிக்கு மொத்தம் 40 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தார்கள். அதில் 13 பேர் தம்முடைய விண்ணப்பங்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்கள். அதில் முக்கியமானவர் ரொரொன்ரோ மாநகரப் போக்குவரத்துச் சபையின் அவைத்தலைவராக இருந்த அடம் ஜியாம்ப்ரோன் முக்கியமானவர். ஆரம்பக் கணிப்புகளில் இரண்டாம் நிலையில் இருந்த இவர், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டு தன்னுடைய வேட்பு மனுவை மீளப் பெற்றுக்கொண்டார். சேரா தொம்சன் மற்றும் ரோக்கோ ரொஸ்ஸி ஆகிய இருவரும் மீளளிப்பு நாட்களின் பின்னதாக தங்களின் பிரசாரத்தை இடைநிறுத்தி போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்கள். இறுதியில் உதிரி வேட்பாளர்கள் தவிர்க்கப்பட்டு இந்த நகரபிதா தேர்தல் களம் மும்முனைப் போட்டியாக மாறியது. 

தொடர்ந்து வாசிக்க... 

Sunday 19 September 2010

கனேடிய தமிழர் பேரவை உடைப்பும் கணனித் திருட்டும்

கனேடியத் தமிழர் பேரவையின் அலுவலகம் உடைக்கப்பட்டு கணனி ஒன்று களவாடப்பட்டது தொடர்பில் பெருமளவுக்கு எங்கள் ஊடகங்கள் அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. அருண்மொழிவர்மனின் பதிவொன்றின் மூலமாகவே இந்தச் செய்தி எனக்குத் தெரியவந்தது. அதுவும் கனேடியத் தமிழர் பேரவையின் பேச்சாளரான திரு டேவிட் பூபாலபிள்ளை முதலில் வைத்த பாரதூரமான குற்றச்சாட்டுகளை வைத்துப் பார்க்கும்போது இது நிச்சயமாக முதனிலை ஊடகங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய செய்தியாகவே இருந்திருக்கவேண்டியது. ஆனால் அதன் பின்னர் திரு. பூபாலபிள்ளை அடித்த குட்டிக்கரணங்களைப் பார்க்கும்போது ஊடகங்கள் புதுக்கடைத் திறப்புவிழாவுக்குப் போயிருந்தது நியாயமானதொரு செயலாகவே எனக்குத் தெரிகிறது.

தொடர்ந்து படிக்க.....

Sunday 15 August 2010

சில சமபவங்கள், வருத்தங்கள்

இரண்டு மூன்று விஷயங்களைப் பற்றிப் பேசவேண்டியிருக்கிறது. முதல் விஷயம் சமூக வலையமைப்பான facebook ல் அடிக்கடி நிகழ்வுகளுக்கான அழைப்புகள் வந்தபடி இருக்கின்றன. தமிழ்நாட்டில் ஏதோ ஒரு சபாவில் நிகழ்கிற அரங்கேற்றம் தொடங்கி நல்லூர்க்கந்தன் திருவிழா வரை எல்லாவற்றுக்கும் நீ வருவாயா? வரமாட்டாயா? வருவாய் அல்லது வராமல் விடுவாயா? என்று கேள்விகேட்டுக் கொல்கிறார்கள். நான் இருக்கிற நிலையில் இப்போது பனை வளர்த்துக் கள்ளுக் குடிக்க முடியாது. கொஞ்சமாவது இயல்பறிவைப் பாவித்து இப்படியான அழைப்புக்களை அனுப்பித் தொல்லை கொடுக்காமல் இருக்கலாம். அதைவிடக் கொடுமை இது தொடர்பாக அதே முகப்புப் பக்கத்தில் நடக்கிற விவாதங்கள். ஈழத்துக் கோவில்களில் எங்கேயய்யா சமத்துவமும் சமதர்மமும், சகோதரத்துவமும் கட்டிக்காக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு நாள் திருவிழா ‘ஒவ்வொரு பகுதியினர்’ உபயம் ஏற்று நடாத்தப்படும் என்பதின் பின்னால் இருக்கக்கூடிய தரக்குறைவான அரசியல் தெரியவில்லை. கோவில்களுக்குள் நுழைவதற்கான ‘விதிமுறைகள்’ பற்றி எதுவுமே தெரியவில்லை. உடனே கோவிலுக்கு இன்னமாதிரி உடைகளைப் போட்டுக்கொண்டு நுழைய வேண்டாம் என்று வந்த சட்டத்தை ஏன் கண்டிக்கிறாய் என்று சண்டைக்கு வராதீர்கள். நான் பேசுவது ‘இந்தக் கோவிலுக்குள் இன்னார்தான் நுழையலாம்’ என்று இருக்கிற விதிமுறைகளைப்பற்றி. எல்லாவற்றையும் விட கோவில் என்றதும் கோபம் வர இன்னொரு காரணமும் உண்டு.கோவிலுக்குச் செய்கிறேன் என்று செய்யப்படுகிற ஆடம்பரங்களின் மீதான விசனத்துக்கு முக்கிய காரணம் ஒரு காலத்தில் நானும் சமயபாட மிரட்டல்களுக்குப் பயந்து கோவில் குளம் என்றெல்லாம் திரிந்தமையே.

என்னுடைய அம்மாவழியால் எங்களுக்கு நெருக்கமாக இருந்த கோவில் நவிண்டில் குலனையம்பதிப் பிள்ளையார். அங்கேயும் கோவிலுக்குள் மூன்று சாதிக்கு மட்டும் அனுமதி இருந்தது. ஏனையவர்களை வெளிப்பிரகாரத்தோடு நிறுத்திவைத்து ஆதிக்கசாதிதான் கோலோச்சியது. அந்தக் கோவில் ஒரு முறை புனருத்தாரணம் செய்த போது (ஏனையவர்கள் தேவைப்பட்டார்கள், ஏனென்றால் கோவிலுக்கு மண் சுமந்தாலே அது ஆதிக்க சாதிக்கு மயிர் இழந்ததுக்கு சமம்) அதுவரை காவி மட்டுமே அடித்திருந்த கோவிற் சுவர்களுக்கு நிறங்கள் பூச முடிவுசெய்யப்பட்ட போது ஆலய மகாசபைத் தலைவராக இருந்த ‘ஆர்ட்டிஸ்ட்’ சுப்ரமணியம் வாத்தியார் குறுக்கே நின்று தடுத்தார். ‘வண்ணம் அடித்தால் உனக்கு பிள்ளையார் தெரிவாரா வண்ணம் தெரியுமா?’ என்கிற வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இருந்தது. கோவில்கள் ஆடம்பரமயமாதலுக்கு எதிரான விதை அவர்மூலம் விழுந்தது என்பது உண்மை. கோவில்களின் அவசியம் பற்றி இப்போது மனதில் வருகிற கேள்விகளுக்குக்கூட அந்த விதைதான் காரணமாயிருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. மேலும் பறைவேன் என்கிற இணையத்தளத்தில் ‘யாழ். போதனா வைத்திய சாலையும், தலை குனியவேண்டிய தர்மவான்களும்’ என்கிற தலைப்பில் திவ்வியரஞ்சினியன் எழுதிய ஒரு கட்டுரை, நோர்வேக் கோவிலில் ‘தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அதற்கொரு குணமுண்டு’ என்று எங்கள் வீரவான்கள் நிகழ்த்திக் காட்டிய வேடிக்கைகள் கனடாவில் நடக்கிற ஒரு கோவில் காணி வாங்குதலுக்கான நிதி சேகரிப்பு பற்றிய விளம்பரங்கள் எல்லாவற்றையும் பார்க்கிறபோது ஆயாசமாக இருக்கிறது.

*----*----*----*
பெற்றோர்-பிள்ளை உறவுச்சிக்கல்கள் பற்றிய இரண்டு சம்பவக் கோர்வைகள்

சம்பவக்கோர்வை-1
மயூரன் வெளிநாட்டுக்குப் போகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். என்ன வகையிலாவது வெளிநாடு போய்விடவேண்டும் என்கிற முனைப்பும், குடும்பச் சூழலும் அவனுக்கு. அந்த நேரம் அவர்களின் குடும்ப நண்பர் ஒருவர் மூலம் ஒரு சம்பந்தம் வருகிறது. தன் பதின்மங்களில் கனடா போய் வளர்கிற ஒரு பெண்ணுக்கு அந்தப் பெண்ணின் பெற்றவர்கள் மணமகன் தேடுவதாக அந்த நண்பர் சொல்கிறார். சாத்திரமும் எல்லாப் பொருத்தமும் இருப்பதாகச் சொல்ல, மயூரனை இலங்கையில் வைத்து சங்கரி மணமுடிக்கிறாள். கனேடியக் குடிவரவு முறைகட்கு உட்பட்டு மயூரன் கனடாவுக்கு வருகிற எல்லா ஏற்பாடுகளையும் சங்கரி செய்து முடிக்கிறாள். மயூரனும் வந்து சேர்ந்து வேலைக்குப் போய்வந்து கொண்டிருக்கிறான். ஒருநாள் வேலையால் வீடுவந்தவனை ஒரு கடிதம் வரவேற்கிறது. சங்கரிதான் கடிதம் எழுதியிருக்கிறாள். தான் ஏற்கனவே ஒருவரைக் காதலித்து வந்ததாகவும், தன்னுடைய பெற்றோர் ‘மருந்து குடிப்போம்’ என்று மிரட்டிய காரணத்தால் மயூரனை மணம் முடித்ததாகவும், அவனுக்கு உதவி செய்யும் பொருட்டு அவன் கனடா வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாகவும், இனிமேலும் மனதில் ஒருவனோடும் நிஜத்தில் மயூரனோடும் வாழ்கிற அருவருப்பான வாழ்க்கையைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், அதன் காரணமாக மயூரனை விட்டுத் தான் விலகிச் செல்வதாகவும் கடிதம் சொல்கிறது. மயூரன் இப்போதும் வேலைக்குப் போய்க்கொண்டிருக்கிறார், இரவு நேரத் தண்ணீர் விருந்துகளில் சங்கரியின் நடத்தையை விமர்சித்தபடி.

சம்பவக்கோர்வை-2
நர்மதாவின் தாயின் சகோதரிகள் கனடாவில் இருக்கிறார்கள். ‘குடும்பக் குத்துவிளக்கு’ என்கிற ஆண்சிங்கங்களின் வரையறைக்குள் அடங்கக்கூடிய பெண். நர்மதா திருமண வயதெய்தியதும் கனடாவில் மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் இனிதே நிறைவேறுகிறது. மயூரன் -சங்கரி போலவே கனடா மாப்பிள்ளை ரூபனும் நர்மதாவைக் கனடா வரவைக்கிறான். கனடாவில் வந்து இறங்கிய நர்மதாவை நேராக நர்மதாவின் சித்தி வீட்டில் விட்டுவிட்டு ரூபன் போய்விடுகிறான். ’அவருக்கு உன்னைப் பிடிக்கேலையாம். அவரிட அப்பா அம்மா சொல்லினபடியால் உன்னைக் கட்டினவராம்’ என்று சித்தி கனவுகளை உடைக்கிறாள். மூன்று மாதமாக அழுதபடி ஆங்கிலம் படிக்கிறாள் நர்மதா.

இந்தச் சோடிகள் என்ன பிழை விட்டார்கள்? எதற்காக அவர்களின் வாழ்க்கை இப்படிச் சிதைக்கப்பட்டிருக்கிறது. சங்கரியாவது பரவாயில்லை, தன் மனதுக்குச் சரியென்று பட்டதைச் செய்திருக்கிறாள், சமூகத்தின் விச நாக்குகள் அவளின் நடத்தைக்குத் தரக்கூடிய சான்றிதழ் பற்றிய கவலைகள் இல்லாமல். அந்த வகையில் அந்தப் பெண்ணுக்கு தலைதாழ்ந்த வணக்கங்கள். நர்மதாவின் கதி என்ன? சாதாரண தமிழ்க் குடும்பத்தில் ஆண்களுக்குச் சேவை செய்ய மட்டும் சொல்லி வளர்க்கப்பட்ட, குடும்பவாழ்க்கை பற்றிய கனவுகளோடு விமானம் ஏறிய அந்தப் பிள்ளையின் நிலமை என்ன? ‘ஸ்பொன்சர் பண்ணிக் கனடாவில விட்டாச்சுத்தானே?’ என்று கேட்கிற ரூபனுக்கு என்ன பதில் சொல்வது. ரூபனைச் சமாதானப்படுத்தி நர்மதாவுக்கு ‘வாழ்வு’ பெற்றுத்தர நர்மதா குடும்பமும், ரூபன் குடும்பமும் முனைகிறார்கள். அது வெற்றிபெறக்கூடாது என்பதே என் விருப்பம். நிச்சயமாக அவர்களின் மணவாழ்க்கை நல்லபடியாக அமையவே அமையாது என்பதுதான் உண்மை.

பிள்ளைகள் மீதான அக்கறை என்கிற பெயரில் பெற்றோர்கள் செய்கிற இந்த அட்டகாசங்களை என்னென்று சொல்வது? சின்னவயதில் இருந்து எல்லாமே பார்த்துப் பார்த்துச் செய்த அப்பா அம்மா இதில் மட்டுமா தீமை செய்வார்கள் என்று வாதிடலாம். ஆனால் மேற்படி இரண்டு சம்பவங்களிலும் ‘இந்தக் கலியாணம் நடக்காவிட்டால் மருந்து குடித்துச் சாவோம்’ என்று சொன்ன அதே பெற்றோர்கள், கலியாணம் குலைந்த பின்னரும் குத்துக்கல்லாட்டம் உயிரோடுதான் இருக்கிறார்கள். இப்படிப் பிள்ளைகளுக்குப் பிடிக்காத வாழ்க்கையை அமைத்துக்கொடுத்து ‘பெற்ற கடனை’ ஏன் நிறைவேற்ற வேண்டும்? இதை உண்மையான அக்கறை என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். தன்னுடையதும் தன்னுடைய குடும்பத்தின் சுயலாபம் கருதி சங்கரியின் மனதில் என்ன இருக்கிறது என்பதுகூடத் தெரியாமல், சீதனம் எல்லாம் வாங்கி, நாக்கைத் தொங்கவிட்டபடி கலியாணம் கட்டிய மயூரன் ‘உவள் வேசைக்கு நல்ல பாடம் படிப்பிக்காட்டி பார்’ என்று நண்பர்களிடையே நாக்கில் நரம்பில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறான். நர்மதாவுக்கு ரூபனை வசைபாடுதற்குரிய சொற்களையே நாங்கள் உருவாக்கி வைக்கவில்லை. இதைத்தான் ‘கட்டுக்கோப்பான குடும்ப வாழ்க்கை என்று வெள்ளைக்காரன் எங்களைப் பார்த்து அதிசயிக்கிறான்’ என்று பீற்றிக்கொள்கிறோம். குலம், கோத்திரம், அந்தப் பொருத்தம், இந்தப் பொருத்தம், ஏன் யோனிப் பொருத்தம் எல்லாம் பார்த்துத் திருமணம் செய்கிற சமூகம், இற்றைவரை மனப் பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்து வைத்ததில்லை என்பதுதான் உண்மை. அதுவும் கணவனைப் பிரிந்து வாழ்கிற பெண்கள் மீது அவர்களின் நடத்தையைக் கேவலமாக்கி வைக்கப்படக்கூடிய அவதூறுகள் காரணமாக ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்’ என்று வாழ்கிற சகோதரிகள் எத்தனை பேர். ’என சகோதரி அனுபவிக்கிற துன்பத்தை நாளைக்கு இன்னொருவன் சகோதரிக்கு நான் கொடுக்ககூடாது’ என்பதை நித்திரைக்கு முன்னரும், நித்திரைக்குப் பின்னரும் சொல்லிக்கொள்கிறேன். எனக்குள் ‘ஒளித்திருந்திற’ குரங்கு ‘ஒழிந்து’ போகாமல், ஒரு பெண்ணின் கண் பார்த்துப் பேசமுடியாமல் இருக்கிறது.

Friday 30 July 2010

பொழுது போகாதவன் புலம்புகிறான்: 3

அனேகமாக வலையாட வருகிற தொடக்கத்தில் எல்லோருக்கும் பெரியார், சே மீதான ஈர்ப்பும் தானாகவே வந்து ஒட்டிக்கொள்வது இயல்பு. அதற்கு நானும் விதிவிலக்கல்ல. பெரியாரின் பல கருத்துகளில் இன்னும் ஈர்ப்பிருக்கிறது. ஆனால் அவரை முன்வைத்து அரசியல் செய்பவர்கள் பலரது கருத்துக்களைப் பார்க்கிறபோது பெரியார் மீதான ‘அப்பழுக்கற்ற புரட்சிக்காரர்’ விம்பம் சிதைவதையும் குறிப்பிட்டாகவேண்டும். பெண்ணடிமைத்தனத்தை உடைத்தல், மூட நம்பிக்கைகளை இல்லாதொழித்தல், சாதீயக் கட்டுமானங்களை தகர்த்தல் முதற்கொண்டு பல நல்ல கொள்கைகளோடு செயற்பட்ட, தனித் துதிபாடலை எதிர்த்ததாகச் சொல்லப்பட்ட பெரியாரின் பெயர், நேர்மாறு சாதீயத்துக்கும் மாற்றுக் குறையாத தனிமனிதத் துதிபாடலுக்கும் பயன்பட்டுக்கொண்டிருப்பது வருந்தத்தக்கது. பார்ப்பனர்கள் என்று பெரியார் மற்றும் பெரியாரியத்தைத் தொடர்பவர்கள், முற்போக்குவாதிகள் விளிப்பது யாரை என்று இப்போது யாராலேயும் சரியாக அடையாளங்கண்டுகொள்ள முடியவில்லை என்பது வருந்தத்தக்கது. பல ‘பெரியாரிஸ்டுகள்’ நிச்சயமாக ‘பிராமணர்’ என்கிற ஒரு சமூகத்தை மட்டுமே குறிவைத்துத் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களிடமிருந்து ஏனைய ஆதிக்க சாதி ஒடுக்குமுறையாளர்கள் பற்றிய சத்தங்கள் வருவதில்லை. பார்ப்பன எதிர்ப்பு என்றதும் ‘பூநூல்’ வந்து குந்திக்கொள்கிறது. பார்ப்பனியம் என்றால் என்ன என்று பாரி அரசு என்பவர் எழுதிய ஒரு சின்னப் பதிவை வினவு தளம் மேற்கோள்காட்டி இருந்தது.

“உணவு, உடை, உறைவிடம், பிறப்பு, இறப்பு, பண்பு, குணம், தொழில், பொருளாதாரம், பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை, பண்பாடு, கல்வி, அறிவு, சிந்தனை, பாராம்பரியம், பரம்பரை, குலம், இனம், மொழி, மதம், நிறம்... இன்னபிற இப்படி எந்தவொரு காரணிக்கொண்டும் ஒரு மனிதனை உயர்ந்தவன் என்றும் இன்னொருவனை தாழ்ந்தவன்(இழிந்தவன்) என்றும் சித்தரிப்பது, பேசுவது, எழுதுவது, நடைமுறையில் கடைபிடிப்பது, பிரச்சாரம் செய்வது, கலையின் ஊடாக பதிவு செய்வது, இன்னபிற செயல்களின் வழியாக சமூகத்தில் ஏற்ற, தாழ்வுகளை உண்டு பண்ணுவதும் அதன் மூலம் சமூக உளவியலை சிதைத்து மனிதர்களிடையே உயர்ந்தோர், தாழ்ந்தோர்(இழிந்தோர்) என்கிற பாகுபாட்டை உண்டாக்குவதுமான செயலே பார்ப்பானியம்!
எ.கா: 1. சைவ உணவை உண்ணுபவர்கள் உயர்ந்த மனிதர்கள், அசைவ உணவை உண்ணுபவர்கள் தாழ்ந்தவர்கள்(இழிந்தவர்கள்) என்று கூறுவது.
2. கற்பூரத்தை கொளுத்தி, தீயில் நெய்யை ஊற்றி வழிபாடு செய்கிற செயலை உயர்ந்ததென்றும், அதை செய்பவரை உயர்ந்தோர் என்பதும்... கோயிலுக்கு ஆடு,கோழி வெட்டி வழிபாடு செய்வதை இழிந்த செயலாகவும் அதை செய்வோரை தாழ்ந்தவர் (இழிந்தவர்) என்பதுமான செயல்.
3. ஒரு மொழியை(சமஸ்கிருதம்)யும், அதிலுள்ள சில நூல்களை கற்றோரை மட்டுமே கடவுளுக்கு நெருக்கமான உயர்ந்தோராக கொள்வதும், இன்னொரு மொழி (தமிழ்) பேசுவோரை தாழ்ந்தவராகவும் கொள்வதுமான செயல். (நா.கண்ணன் என்கிற பதிவர் வடமொழியை இறைதன்மையுள்ள மொழி என்கிறார்... இறைதன்மையுள்ள மொழி ஏன் இறந்துபோனது?)
குறிப்பு : இங்கே குறிப்பிட்ட செயல்கள் மட்டுமல்ல... எதுவொன்று ஒருவனை உயர்ந்தவனாகவும், இன்னொருவனை தாழ்ந்தவனாகவும் சித்தரிக்கிறதோ அதெல்லாம் பார்ப்பானியமே! அதை செய்வோர் பார்ப்பானியவாதிகளே!”

ஆனால், பார்ப்பனிய எதிர்ப்புப் பேசும் அத்தனை பேருமே பிராமணர்களை மட்டுமே குறிவைத்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது கண்கூடு. இல்லையென்றால் எங்கெல்லாம் இது பற்றிய பேச்சு எழுகிறதோ அங்கெல்லாம் பூநூலும், ‘பெயர்களும்’ வந்து குந்திக்கொள்ளாது. இத்தனைக்கும் மேற்படி விளக்கத்தை மேற்கோள்காட்டிய வினவுகூட எப்போதும் பார்ப்பனியம் என்பது ஒரு குறிப்பிட்ட சாதி என்கிற புரிதல் வரும்வண்ணமே கட்டுரைகளை எழுதிவருவது குறிப்பிடத்தக்கது. அப்படிப் பார்க்கப்போனால் நான் பிறந்து வளர்ந்த  ஊர் பார்ப்பன ஆதிக்கம் இல்லாத ஊர் என்றுதான் நான் சண்டை போடவேண்டும். ஏனெனில் பிராமணர்களுக்கு வெள்ளாளர்கள் அளவுக்கு செல்வாக்கு இருந்ததில்லை. காரணம் வெள்ளாளர்களில் அனேகம்பேர் நிலப்பிரபுக்களாக இருந்தார்கள். ஆனால் வெள்ளாளர்கள் மட்டும்தான் பார்ப்பனர்களாக இருந்தார்கள் என்று சொல்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. செல்வம் அருளானந்தம் தேவகாந்தனுடனான ஒரு பேட்டியில் பின்வருமாறு குறிப்பிடுவார்


மேற்படி செல்வம் வாழ்ந்த ஊரில், பாரி அரசு சொன்ன வரைவிலக்கணப்படி, ஒதுக்கப்பட்ட பறையர்களின் பார்வையில், வெள்ளாளர்கள், கரையார்கள் மற்றும் பள்ளர்கள் யாவருமே ‘பார்ப்பனர்கள்’ என்கிற வகைக்குள் வரவேண்டியவர்கள் என்பது என் கருத்து.

ஆனால், இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட சாதி மறுப்பு, தலித் உரிமைகளைப் பேசிவருகிற சிலர்கூட பார்ப்பனர் என்றால் பிராமணர்கள் என்கிற ரீதியில்தான் பேசி வருகிறார்கள். வடலி வெளியீடான ‘கொலை நிலம்: தியாகு-ஷோபாசக்தி முரண் அரசியல் உரையாடல்கள்’ என்கிற புத்தகத்தில் சோபாசக்தி குறிப்பிட்டதாக கீழ்வருகிற வசனம் வருகிறது. ’

‘அய்ரோப்பாவில் புலிகள் இந்துக் கோயில்களை நடத்துவதும் அங்கே பார்ப்பனர்கள் தேவ பாசையில் மந்திரம் சொல்லிக் கொழுப்பதும் சோசலிசத்தை நோக்கியதா அல்லது சாதியத்தை நோக்கியதா?’ (பக்கம் 65, பந்தி 1, வரிகள் 8,9,10,11).

இங்கே ஷோபாசக்தியால் பார்ப்பனர் என்கிற சொல்லாடல் பிராமணரைக் குறித்தே பயன்பட்டிருக்கிறது. இலங்கையில் பிறந்த சாதாரணமான தமிழ்க் குடிமகன் ஒருவரிடம் ஒரு பிராமணனைக் காட்டி ‘உவன் ஒரு பார்ப்பான். உவனால்தான் எல்லாப் பிரச்சினையும். உவனை அடி’ என்று சொன்னால், நிச்சயம் அவ்வாறு சொல்பவர் விநோதமானவராகப் பார்க்கப்படுவார். காரணம், ஈழத்தில் பிராமணர்களாலான அடக்குமுறை மிக மிகக் குறைவு அல்லது இல்லை என்றே சொல்லலாம். ஆனால் அதேயளவுக்கு வெள்ளாள அடக்குமுறை இருந்துவந்திருக்கிறது. என்னுடைய கேள்வி, பாரி. அரசு சொல்கிற வரையறைக்குட்பட்டுப் பார்ப்பனியத்தைப் பார்த்தால் யாழ்ப்பாணத்து வெள்ளாளனும், பசும்பொன் தேவனும் ‘பார்ப்பனர்’ என்கிற வகைக்குள் அடக்கப்பட்டே அவர்கள் மீதான விமர்சனங்கள் வரவேண்டும். எனக்குத் தேவர்களைப் பற்றித் தெரியாது. ஆனால் வெள்ளாளரைத் தெரியும். அவர்கள் பூநூல் போடுவது சாவு வீட்டுச் சடங்கு, அந்தியோட்டி சபண்டீகரக் கிரியைகள் மற்றும் திவசங்களின்போது. அதுவும் பிராமணர்கள் கொடுக்கும் பூநூல் போட்டுத்தான் சடங்குகள் செய்வார்கள். பிராமணர் பூநூல் போடுவதுக்கும் சடங்குகளில் பூநூல் போடுவதுக்கும் வித்தியாசம் இருக்கிறது. வெள்ளாளர்களுக்கு ‘தேவ பாசை’ தெரியாது, மாமிசம் நன்றாகவே புசிப்பார்கள். பொதுவெளியில் வைக்கப்படுகிற பார்ப்பன விம்பத்துக்கும் இவர்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமுமில்லை. ஆகவே ஈழத்துச் சாதியம் பற்றிப் பேசுகிறவர்கள் ‘பார்ப்பனர்’ என்ற சொல்லைப் பயன்படுத்தும்போது ஒருமுறைக்கு இரண்டுமுறை யோசித்தாகவேண்டும். பார்ப்பனர்கள் என்றதும் ‘பூநூல், தேவபாசை’ இரண்டும் மனதுக்கு வரும்படியாக ஒரு விம்பத்தைப் பொதுப்புத்தியில் சமைத்திருக்கிறார்கள் இன்றைய சாதி மறுப்பாளர்கள். ஆக, ஈழத்துச் சாதியம் பற்றிப் பேசும்போது பார்ப்பனர்கள் என்று பொதுப்படையாகப் பேசுவதில் சிக்கல்கள் இரண்டு:
  1. பெரும்பாலும் கோயிலை ஒட்டியிருக்கிற வீடுகளில், கோயிலுக்கு அர்ச்சனைக்காக வருகிற பொருட்கள், திவசக் காணிக்கைகள், குரு தட்சிணை என்று மிகவும் கஷ்ட ஜீவனம் நடத்துகிற ஈழத்துப் பிராமணர்கள் மீது தவறான விம்பம் கட்டமைக்கப்பட்டுவிடும். (பணக்காரக் கோவில் அர்ச்சகர்களை இதற்குள் உள்ளடக்க வேண்டாம்)
  2. வெள்ளாளர்களின் சாதீய அடக்குமுறை பற்றிய உண்மைகள் உறங்கிவிடும்
ஆகவே ‘பார்ப்பான்’ என்கிற சொல்லாடலைக் கேள்விக்குள்ளாக்கி அதற்குரிய சரியான வரையறையைச் சமைக்கவேண்டிய கட்டாயம் சாதி மறுப்பாளர்களுக்கு இருக்கிறது. பார்ப்பான் என்றால் பிராமணன் என்று தொடர்ந்து பொதுப்புத்தியில் பதிந்து போய்விடுவதால், பிராமணர்கள் மீதான வன்மம் வளர்ப்பதும் ஒரு வகையில் சாதீயம் என்று சொன்னால், நான் பிராமணர்களுக்கு வக்காலத்து வாங்குவதாய் சொல்லுவார்கள் இன்றைய சாதி மறுப்பாளர்கள். ஆனால் அவர்களே அறியாமல், பிராமணர்கள் மீது பழியைப் போட்டு மற்ற ஆதிக்க சாதிகளின் அடக்குமுறைகளை மறைக்கிற வரலாற்றுத் தவறை அவர்கள் செய்துகொண்டிருப்பது கண்டனத்துக்குரியது. செல்வம் அருளானந்தம் வாழ்ந்த கத்தோலிக்கக் கிராமத்தில் எந்தப் பிராமணனும் செல்வாக்கோடு இருந்திருக்கவில்லை.
*----*----*----*

இதே விடயம் சம்பந்தமாகப் பெரியாரது தீவிர சாதி மறுப்பாளராக நான் பார்த்த விம்பத்தை தன்னையறியாமல் தமிழ் ஓவியா உடைத்தபோது வலித்தது. அவர் எழுதிய ‘நமக்கும் பார்ப்பனர்களுக்கும் என்ன வேறுபாடு ?’ என்கிற பதிவில் கீழ்க்கண்ட வசனம் பெரியார் சொன்னதாக மேற்கோள் காட்டப்படுகிறது:


பெரியார் என்ன சொல்ல வருகிறார் என்பதை விளங்கிக்கொள்ள முடிந்தாலும், “கீழ்மகனாக இருந்தாலும்”, “மானமற்ற ஈனத்தொழில் புரிகிறவனாக இருந்தாலும்” என்கிற வார்த்தைகளைப் பெரியார் சொன்னார் என்பதை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. தொழில் ரீதியாக மக்களைப் பிரித்து வைத்து வருணாசிரமம் சொன்னதென்று சொல்லிச் செய்யப்படுகிற அநியாயங்களைத் தட்டிக்கேட்கிறேன் என்று சொல்லிப் போராடிய ஒருவரின் வாயிலிருந்து ‘கீழ்மகன்’ ‘மானம்கெட்ட ஈனத்தொழில்’ என்கிற வார்த்தைகள் எல்லாம் எப்படி வந்தன? எப்படி ஒரு தொழிலை ‘ஈனத் தொழில்’ என்று சொல்லலாம். ஈனத் தொழில் என்று சொல்லப்படுகிற விபசாரத்தைக்கூட (விபசாரிகளிடம் போகிற கனவான்களை விடுங்கள். அவர்கள் ஈனர்கள் அல்லர்) தொழிலாகப் பார்த்து வரவு செலவுக் கணக்கெல்லாம் கேட்டவர் என்றுதானே பெரியாரைப் பற்றிச் சொல்லித் தந்தீர்கள் பெரியாரியர்களே???

தமிழ் ஓவியா ஒரு தீவிர தனிமனிதத் துதிபாடி என்பது பலருக்குத் தெரிந்ததே. கி.வீரமணியைத் தமிழினத் தலைவராகச் சித்தரித்துப் பரப்புரையாற்றும் ஒரு தொண்டர் என்பதும் தெரியும். ஒருவேளை ‘தன் தன்னிகரில்லாத் தலைவன் வீரமணியை’ உயர்த்தவென்றே பெரியார் சொல்லாத வார்த்தைகளையும் சேர்த்துச் சொல்கிறாரோ என்று அடிமனம் சமாதானப்பட முயன்றது. ஆனால் “30.08.1953 இல் ஆம்பூர் முகமதலி மைதானத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு: “விடுதலை” 08.09.1953” என்று வலுவான ஆதாரத்தையும் காட்டி அந்த எண்ணத்திலும் மண்போடுகிறார் தமிழ் ஓவியா . அப்படியானால் பெரியார் போராடியது தன் சாதியை விட உயர் சாதியென சமூகத்தில் நிலை நிறுத்தப்பட்ட ‘பிராமணர்களுக்கு’ எதிராக மட்டுமா? ஒட்டுமொத்த சாதீயக் கட்டமைப்புகளுக்கு எதிராக இல்லையா? ‘கீழ்மகன்’ ‘மானம்கெட்ட ஈனத்தொழில்’ போன்ற வார்த்தைகள் பார்ப்பனியம் பற்றிய முழுப்பிரக்ஞை உள்ள ஒருவரிடமிருந்து எப்படி வந்திருக்க முடியும்? இது ஒருவகையில் நேர்மாறு சாதீயம் இல்லையா? போன்ற சந்தேகங்கள் வந்து விழத்தானே செய்கிறது. நல்லவேளை, பசும்பொன் முத்துராமலிங்கம் உட்பட பலரையும் கண்டித்திருக்கிறார். அதனால் முழுவதுமாகப் பெரியாரை மறுதலிக்காமல் இருக்கமுடிகிறது.

வருணாசிரம விதிமுறைகள் சித்தரித்த ‘ஈனத் தொழில்களை’க் கேள்விக்குள்ளாக்கிய பெரியார் எப்படி அந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம்? பெரியார் காலத்தில் பார்ப்பன ஆதிக்கம் அல்லது பிராமண ஆதிக்கம் பயங்கரமாக இருந்தது அதனால் அவர்களைப் பெரியார் திட்டியதில் தவறேயில்லை என்று சொல்லிச் சப்பைக்கட்டெல்லாம் கட்டவேண்டாம். என்னுடைய கேள்வி பெரியார் யாரைத் திட்டினார் என்பதல்ல. ‘மானம் கெட்ட ஈனத் தொழில்’ என்று எதைச் சொல்கிறார்? உடனே சொல்வீர்கள் ‘பார்ப்பனர் அல்லது பிராமணர்’ செய்கிற தொழில்களைத்தான் பெரியார் ஈனத்தொழில் என்றார் என்று. ‘பார்ப்பான் முதலில் எங்கள் தொழில்களை ஈனத் தொழில் என்றான், அதனால் அவனது தொழில்களை ஈனத் தொழில் என்றோம். பழிக்குப் பழி, இரத்தத்துக்கு இரத்தம், கண்ணுக்குக் கண்’ என்ற வீரவசனம் எல்லாம் வேண்டாம். மேற்படி வார்த்தைகளைப் பெரியாரே சொல்லியிருந்தாலும், அவர் மீது என்ன அபிமானம் இருந்தாலும், அந்த வார்த்தைகள் தவறென்ற பிரக்ஞை இல்லாமல் அந்த வார்த்தைகளைக் கொண்டாடுவதை என்னென்று சொல்லலாம்? நேர்மாறு சாதீயம் என்பதைத் தவிர!

*----*----*----*
பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் பார்ப்பானை அடி- அன்றைக்குப் பெரியார் சொன்னது. இன்றைய பெரியாரியர்களைக் பார்த்தால் இன்னொன்றையும் சேர்த்திருப்பார் பெரியார்; பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் பார்ப்பானை அடி, பார்ப்பானையும் பெரியாரியனையும் கண்டால் பெரியாரியன் நின்ற இடத்தில் புல்பூண்டு முளைக்காமல் ஏதாவது குண்டு போடு என்று.

Saturday 24 July 2010

பொழுது போகாதவன் புலம்புகிறான்: 2

பேராசிரியர் சிவத்தம்பியின் இந்த உரைக்கும் (நன்றி: இரமணி)



இந்தக் கவிதைக்கும்

அன்றலர்ந்த ஆச்சா மரம் போல வீழ்ந்தானோ அவன்!
போச்சா, உள்ளிழு மூச்சு விடுவெளிமுன்னே
வீச்சாய்ச் செல்களம் மாறி
ஒளிந்திருந்தம்பெய்வான் பாதம்
இன்றே போய் நன்றே புக்கிப்
புலம் தொழுது வாழ் புல்லர்.                           

மல்லாக்காய் வீழ்ந்து மாண்டான் மாநிலவேந்தன்
இராவணன் இல்லாத்தலையையும் முள்கோலிக் கொய்து
தம்படி செப்படிவித்தை செல்லுபடியாக்கும்
பொல்லாவிபீஷணர் சுருக்குவால்களிலே
வல்லான் என்னான் கல்லாலனைக் கொல்
தர்மம் எல்லாம் நியாயமென்றோதிப் பறக்கிறது
இரவினும் பகலிலும் எல்லாப்பொழுதிலும்
கிழியக் கட்டிய இரவற்பீதாம்பரம்.

பெருகு தாரை உருகிச் சபித்த இராமன்கள்ளேறு
ஆண்குறிதன் அடிமுடி சவரம் செய்யப் பெருகுவது,
மாரீசத்தூதுவேடத்தே வெஞ்சினமாய்
தம்போக்குவாழாளையும் அழுகுழவியையும்
எல்லாம் சமமென்று தீயேற்றிக் கழி
இலங்கா(த்)தகனத்து களிகொள் மாருதி வாலல்ல;
எதிர்வீடிரவு விபீஷணர்தம் சொற்சிற்பத்துச்சிப்பம்.
இழவெடுவில்லத்தே இருப்புக்காய்
ஏற்றுக்கொண்ட இராமகீதங்களை,
கால் சுற்றிவளைக்கடி க்ருதிகளை
கருணை கொள் கசட்டுநிதிதரு
வல்லோர் எல்லாம் நல்லோரென்று
எனக்குப் புகட்டமுன்னே,
இதைச்
சொல்வேன் கேளும்:

"வாய்க்கால் சிவந்த முள்ளுக்களமேனும்
கால்வாய் கடந்திழியும் பனிநிலப்புலமேனும்
பிறழாச்சொல்நீதி பொருந்தாச் செய்கடமை
கொல்லப்புல்தின்ற கும்பகர்ணன் விட்ட
கடைசிக்குசுவெனக் கொள்ல்க என்னை.

அவப்பொழுதே
மணத்திருப்பேன்
நும்மூக்கில்"

சம்பந்தம் இல்லையென்று நான் சொல்லி நீங்கள் நம்பவா போகிறீர்கள்?

அது சரி... எப்படி பேராசிரியர் என்ன பேசப்போகிறார் என்று கவி யாத்தவருக்கு முன்னமே தெரிந்தது??? பேராசிரியரின்  பேச்சுக்கு சில வாரங்கள் முன்னமே விமர்சனம் செய்திருக்கிறார் கவிதையில். இதைத்தான் காலத்தை வென்ற படைப்பு என்பார்களோ???

Sunday 18 July 2010

மக்கள் போராட்டம் ஒன்றின் "மகத்தான" பின்விளைவுகள்

தியனன்மென் சதுக்கத்துப் படுகொலைகள் பற்றிய ஆவணப்படம். மாணவர்கள், உழைக்கும் வர்க்கம், அறிவுஜீவிகள் என சாமன்ய மக்கள் அடக்குமுறைக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த போது..............................

Saturday 17 July 2010

பதிவுலகில் நான் அப்படிப்பட்டவன் இப்படிப்பட்டவன்...

வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
ஆரம்பத்தில் Keith Kumarasamy பின்னர் கீத் குமாரசாமி, அடுத்து கிருத்திகன் குமாரசாமி, தொடர்ந்து Kiruthikan Kumarasamy கடைசியாக கிருத்திகன்

அந்தப் பெயர்தான் உங்கள் பெயரா? இல்லை பதிவில் தோன்றும் பெயரை வைக்க என்ன காரணம்?
அந்தப் பெயர்கள் என் பெயர்கள் அல்ல. என் பெயர் பிரபல பதிவர் குமாரசாமி கிருத்திகன். என்னுடைய பதிவுகளின் ‘ஆழத்தையும்’ ‘அர்த்தத்தையும்’ புரிந்துகொண்டு படைப்புலகம் வழங்கிய சின்னப் பட்டங்கள்தான் அந்தப் பெயர்கள்.

நீங்கள் தமிழ் வலைப் பதிவுலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?
சிறுவயதில் இருந்தே நான் நிறைய எழுதுவேன். 1989ம் வருடம் தங்கவேலின் நேர்சரியில் ‘அம்மா’ (ammaa) எழுதியதைப் பார்த்தே ஜெயமணி ரீச்சர் சொன்னார்கள் “பிற்காலத்தில் நீ பெரிய பதிவனாக வருவாய்” என்று. அப்போது விதைக்கப்பட்ட கனவு செடியாகி, விருட்சமாகி வளர்ந்தது. மூன்றாம் வகுப்பில் தேன்மதி ரீச்சர் “what is your name?" என்று கேட்க “my name is Famous Blogger Kumarasamy Kiruthikan" என்று சொன்னேனாம். வீட்டில்கூட என்னை ‘பிரபல பதிவர் குமாரசாமி கிருத்திகன்’ என்றே அழைத்தார்கள். I eat pathivulagam, I drink pathivulagam, I sleep pathivulagam, I shit pathivulagam. அதோடு சின்ன வயதிலேயே என்னிடம் எதிர்ப்புக் குணம் நிறைய இருந்தது. அய்யோ பெருமாளே.. ஏன் ஜனங்களுக்கு இவ்வளவு அலட்சியம். யாருக்கும் ஒழுக்கமில்லை, யாருக்கும் பொறுப்பில்லை, யாருமே rulesஐ follow பண்ணுவதில்லை என்று விசனப்பட்டபடியே இருந்தேன். ஆகவே என் மக்களை, என் நாட்டை, ஏன் இந்த உலகத்தையே உய்விக்க, நான் பதிவுலகு வருவது தவிர வேறு எந்த option அவர்களுக்கு இருக்கவில்லை. பதிவுலகத்துக்கு வருவது நான் எடுத்த முடிவில்லை. மக்களாக எடுத்த முடிவு.

உங்கள் வலைப்பதிவைப் பிரபலமடையவைக்க என்னவெல்லாம் செய்தீர்கள்?
இதற்குப் பதில் சொல்ல ஒரு வலைப்பதிவு காணுமா தெரியவில்லை. நான் எழுதிய படைப்புகள் எல்லாமே காலத்தால் அழியாதவை. ஏனென்றால் அவற்றை நான் தமிழ்மணம் மூலம் pdf கோப்புகளாக்கி ஐந்தாறு கணனி வன்தட்டுக்களில் சேமித்து வைத்திருக்கிறேன். அட, தமிழ் மணம் pdf என்றதும்தான் ஞாபகம் வருகிறது. திரட்டிகளில் என் பதிவை இணைத்ததன் காரணமாகவே நான் ‘மிகப் பிரபல பதிவர்’ ஆனேன். ஏன் என்னை ஒரு ஜந்து போல் பார்க்கிறீர்கள்? நான் சொல்கிற பொய் தெரிந்துவிட்டதா? அட. வலு கெட்டிக்காரர் நீங்கள். திரட்டிகளில் இணைந்தேன் பிரபலமானேன் என்பதெல்லாம் சுத்தப் பொய். பிரபலமாவதற்கு வேறுசில பிரபலமான வழிமுறைகள் இருக்கின்றன. விளக்குகிறேன் வாருங்கள்.


பிரபல பதிவர்களைத் தேடிப்பிடித்தல்
எதிர்காலப் பிரபல பதிவரான நீங்கள் நிகழ்காலப் பிரபல பதிவர்களைத் தேடிப் பிடித்து அவர்களைப் பின் தொடரவேண்டும். அவர்களுக்கு ‘அக்கா, அண்ணா’ என்றெல்லாம் விளித்துப் பின்னூட்டம் இடவேண்டும். அதுவும் யாராவது ஒரு so called பிரபல பதிவர் பின்னூட்டம் போட்டால் ‘ஜென்ம சாபல்யம் அடைந்தேனே’ என்று பணியத் தெரிய வேண்டும் (பின்னூட்டம் படிக்கவும்). ஆகக்குறைந்தது ஒரு 300 வலைப்பதிவுகளையாவது தொடரவேண்டும். முடிந்தால் யாராவது பிரபல பதிவர்களைத் தாக்க முயலலாம். இப்படித் தாக்கும்போது அந்த வலைப் பதிவர்கள் பற்றி இன்னும் கொஞ்சம் தேடுதல் நலம். ‘சுனா தீனா’ என்ற பெயரைப் பெண்ணென்று நினைத்து ‘தோழி’ என்றெல்லாம் விளித்து ‘நானும் ரவுடிதான்’ என்று காட்டினால், வால்பையன் வந்து ‘முதல்ல அவரு தோழி சுகுணா கிடையாது!சுகுணா திவாகர் என்ற புனை பெயரில் எழுதும் பத்திரிக்கை நிருபர்!அவரு எழுதும் முன் ஆயிரம் முறை யோசித்திருப்பார்! என்று மூக்குடைப்பார். கவனமாக இருக்க வேண்டும்.

பின்னூட்ட மாயம்
வலைப் பதிவுகளைத் தொடரத் தொடங்கியதும், தொடர்கிற வலைப் பதிவர்களைப் புகழ்ந்து, குழைந்து பின்னூட்டம் இடவேண்டும். உதாரணமாக ஒரு சினிமா விமர்சனத்துக்கு ‘இன்னும் படம் பார்க்கவில்லை. அருமையான விமர்சனம்’ என்கிற Template பின்னூட்டம் மிக அவசியம். படத்தையே இன்னும் பார்க்கவில்லை, அதற்குள் எப்படி விமர்சனம் அருமையா இல்லையா என்று சொல்வது என்றெல்லாம் அறிவுபூர்வமாகச் சிந்தித்தால் நீங்கள் பிரபலமாகமுடியாது. அதே போல் நீங்கள் தொடரும் பதிவர்களுக்கு வலையுலகத்தில் ஏதாவது பிரச்சினை என்றாலோ, இல்லை வலையுலகத்தில் ஏதாவது ஒரு பொதுப் பிரச்சினை என்றாலோ வலியப் போய் கருத்துச் சொல்லவேண்டும். கருத்துகளில் காட்டமான வார்த்தைப் பிரயோகம் இருந்தால் மட்டுமே போதும். ‘பருத்தித்துறை வீதியில் கொடிகாமச் சந்தி கடந்ததும் கோப்பாய் வருகிறது’ போன்ற பிழைகளையெல்லாம் கவனிக்காமல் எதிராளியைத் தாக்குவதிலேயே குறியாக இருக்கவேண்டும். ’நான் தான் பர்ஸ்டா’ 'me the first' போன்ற அர்த்தம் மிகுந்த பின்னூட்டங்கள் தீராத் தேடலும், அதன் மூலம் கிடைக்கிற ஆழ்ந்த அறிவும் உங்களைத் தொடமுடியாத உயரத்துக்குக் கொண்டுபோகலாம்.


சினிமா விமர்சனம்
நிறைய சினிமா விமர்சனம் படித்து, அவரது பதிவில் கொஞ்சம், இவரது பதிவில் கொஞ்சம் என்று திருடி, படம் பார்க்காமலே ஒரு படத்துக்கு விமர்சனம் எழுதத் தெரியவேண்டும். முக்கியமாக 2004ல் வந்த ஒரு ஆங்கிலப் படத்தைச் சுட்டு 1996ல் தமிழில் படம் எடுத்தார்கள் என்று ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகளை வைத்தேயாகவேண்டும். ஆங்கிலப் படங்களின் பெயர்களை எங்கேயாவது தேடிப்பார்த்து விக்கிபீடியாவில் கதைச் சுருக்கம் வாசிக்கப் பழகிக்கொள்ளல் நலம். கேபிள் சங்கரின் வலைப் பதிவுகளை வாசித்து சினிமாவின் technical terms கொஞ்சம் உருவிக்கொள்ளலாம். தொடர்ந்து சினிமாப் பதிவுகளில் காரசாரமாக விமர்சித்து புகழ் பெறலாம்.


சுயத்தை இழத்தல்
உங்களுடைய அடையாளங்களைத் துறந்து எழுதப் பழகவேண்டும். உங்கள் வழக்கில் இல்லாத சொற்களை எழுதப் பழகவேண்டும். ('டவுன்', '‘ஆல் சிலோன் டூர்', 'வேன்', 'ஆர்மி', 'செம பசி''ரொம்பவே', 'பூரா ரொம்பவே செக்ஸியாக குஜிலிங்க சிரிச்சது (அட, ஃபோட்டோல தாங்க). பின்னர் யாராவது கேள்வி கேட்டால் அதை நியாயப்படுத்தத் தெரியவேண்டும். வாசிக்கிற ஒரு சாராருக்கு ஒரு நடையிலும், இன்னொரு சாராருக்கு இன்னொரு நடையிலும் எழுதத் தெரிந்திருத்தல் உத்தமம். ’என்னுடைய வாசகர்களுக்குத் தானே நான் எழுதமுடியும்?’ ‘இப்போது அங்கே இப்படித்தான் பேசுகிறார்கள். உங்களுக்கு என்ன தெரியும்?’ என்றெல்லாம் கேள்விகேட்டு வாயை அடைக்கவேண்டும். அப்படிக் கேள்விகேட்டால் பின்பக்கம் புண்ணாகும். அதுபற்றி எல்லாம் கவலைப்படக்கூடாது. ’மாட்டாய்ங்க, வருவாய்ங்க, போவாய்ங்க, மக்கா போன்ற வட்டாரவழக்குச் சொற்கள் இருப்பது அவசியம். (ஆஷ்-அபி ஜோடி ச்சோ க்யூட்). உதாரணம் கேட்பீர்களேயாயின் இந்த வலைப் பதிவில் சனிக்கிழமை ஆவணி 8, 2009 க்கு முன்னான அனைத்துப் பதிவுகளையும் வாசித்துப் பார்க்கலாம். (ஆள் நல்ல யாவாரி)

மொக்கை
மொக்கை என்ற பெயரில் ஏதாவது புலம்பத் தெரிய வேண்டும். அருமையான உதாரணம்.... ஹி ஹி.. இப்போது நீங்கள் வாசித்துக்கொண்டிருப்பது. (அதையும் சொல்லித்தான் தெரியோணுமே? என்ன சனமடா இது)


நானும் றவுடி
வலையுலகச் சண்டைகளில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்தல் மிக மிக அவசியம். பார்ப்பான், நர்சிம், மூர்த்தி, போலி, முல்லை, சுந்தர் மூக்கு, பர்தா, ரோசாவசந்த் போன்ற சில வரலாறுகளை இந்தப் பதிவை வாசிக்கிற புதிய பதிவர்கள் வாசிப்பது நலம். அப்படியென்றால்தான் இன்னொரு சண்டையில் கருத்துக் குருத்துச் சொல்லலாம். கமல்ஹாசன், மணிரத்னம் படங்கள் வருகிற காலங்களில் மிகவும் விழிப்பாக இருந்தால் உங்களை றவுடியாக நிலைநிறுத்திக்கொள்ளலாம். எந்த வலைச் சண்டைபற்றியும் துணிந்து பதிவிடுங்கள், திட்டு வாங்கியோ பாராட்டு வாங்கியோ பிரபலமாகலாம்.


Template இடுகைகள் மற்றும் விருதுகள்
‘பதிவர் அருண்மொழிவர்மன் எழுதிய அ ஆ இ ஈ உ ஊ இடுகையில் இருக்கிற ‘ம்’ என்ற எழுத்து என்னை எழுதத் தூண்டியது’ என்றோ, அல்லது ‘அன்பு அண்ணன் வந்தியத்தேவனின் அழைப்பை ஏற்று’ என்றோ ஆரம்பிக்கிற இடுகைகளை எழுதத் தெரியவேண்டும். (சுதனையும், வந்தியைம் போட்ட சண்டைக்கு வரமாட்டினம் எண்ட நம்பிக்கை) ஏனென்றால், அதற்கு ஒரு வலுவான காரணமிருக்கிறது. ஓமோம், வலுவான காரணமிருக்கிறது. (நன்றி: மெ.மு.). கண்ட கண்ட பேரில் விருதுகளை உருவாக்கி ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி விருது கொடுத்துக்கொள்ள வேண்டும். விருது பெறும்போதெல்லாம் ‘கத்துக்குட்டிக்கெல்லாம் விருது தந்த இன்னாருக்கு நன்றி’, ‘என்னைக் கௌரவப் படுத்திய அன்னாருக்கு நன்றி’ என்றெல்லாம் அவைக்கடங்க வேண்டும். விருதுகள் அத்தனையும் உங்கள் வலைப்பூவின் sidebar ஐ அலங்கரிக்கவேண்டும். (சுள்ளான் கொடுத்தது, கொக்கா C கொடுத்தது, அவர் தந்தது, இவரிட்ட வாங்கினது). இத்தனைக்கும் ஒரு விருதை நிறுவ Google images Microsoft paint இரண்டுமே போதுமானது.


முதுகு சொறிதல், திரட்டிகள், ஓட்டு & கள்ள ஓட்டு, Hits Counter
ஒரு குழுமம் சேர்ப்பது நீங்கள் பிரபலமாக மிக அவசியம். அந்தக் குழுமம் மட்டுமே உங்களுக்கு ஓட்டுப் போட்டு திரட்டிகளில் முன்னுக்குக் கொண்டுவர அயராது உழைக்கும். முக்கியமாக தமிழ் மணத்தில் பல கள்ளப் பெயர்களில் கள்ள ஓட்டு போடத் தெரிந்திருந்தல் நீங்கள் எழுதுகிற எல்லா இடுகையும் ‘வாசகர் பரிந்துரையில்’ இடம்பெறும். அடுத்து ‘30,000 ஹிட்டுக்களை அள்ளிக்கொடுத்த், 300,000 ஹிட்டுக்களைக் கொட்டிக்கொடுத்த’ போன்ற வசனங்கள் எழுதத் தெரியவேண்டும். அப்படியென்றால்தான் வாசிக்கிறவன் எல்லாம் ‘இவன் பெரிய ஆள்’ என்று நம்புவான். ‘முலைக்கு வேலை’ என்று தேடி வந்தவனை ‘மூளைக்கு வேலை’ பக்கத்துக்கு கூகிளாண்டவர் அனுப்ப, அவன் தேடிய முலை இது இல்லை என்று அவன் 10-15 seconds மட்டுமே உலாவிவிட்டுப் போய்விடுவான். இதெல்லாம் hits counterல் one more visit தான். இந்த மாயைகளெல்லாம் யாருக்கும் தெரியப்போவதில்லை. ஆகவே இந்த hits பற்றிப் பீற்றிக்கொண்டாலும் உங்களைப் பிரபல பதிவராகக் காட்டிக்கொள்ளலாம்.


இப்பிடியே எழுதிக்கொண்டிருந்தால் பதிவு முடிஞ்சமாதிரித்தான். அதாலை நீங்களும் பிரபலமாவதற்குரிய குறுக்கு வழிகளை, வழிகளை உங்கள் தேடல் மூலம் கண்டறியுமாறு கேட்டுக்கொண்டு (உ-ம்: யாரும் அழைக்காமலே தொடர்பதிவு எழுதுதல்).....


வலைப்பதிவு மூலம் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்ததுண்டா?
யாரைப் பார்த்து என்ன கேள்வி. இவ்வளவு நேரமும் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன். நிறைய சொந்த அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறேன். அவை யாரைக் காயப்படுத்தியதோ இல்லையோ என் குடும்பத்தைக் காயப்படுத்தி இருக்கின்றன. (மே.ப. வசனம் இந்தப் பதிவின் mood இலிருந்து மொத்தமும் விலகியது. நான் எழுதிய ஒரு பதிவுக்கு ‘கொப்பன் (கெட்டவார்த்தை) குமாரசாமி கள்ள உறுதி எழுதிற மாதிரி நீ மெய்யெண்டு புலம்புறாய் என்ற தன் பெயர் வெளியே சொல்லாக் கோழைகளின் பின்னூட்டம் காயப்படுத்தியது. என் கருத்தும் பெற்றவன் கருத்தும் ஒன்றில்லையே). Back to original mood.... முக்கால்வாசிப்பேர் நாங்கள் சொந்தக் கதைதான் எழுதுவோம். கூடப் படித்த நண்பனை சாதி காட்டிக் கொன்று போட்டுவிட்டு, சாதியை உடைக்க வசனம் பேசுவோம். Treadmill, Snooker, Cricket, Football, ARR Music, Slum dog Millionaire, Clooney, Star Movies, Star Sports, Coke, Pepsi குடிக்கிற வாழ்க்கை வாழ்ந்துவிட்டு, ‘யாழ்ப்பாணத்தில் சாதி இல்லை’ என்போம். எங்கள் வீட்டுப் பெண்களை நாங்களே அடக்கிவிட்டு, ‘ஆணாதிக்க எதிர்ப்புப் பதிவு’ எழுதுவோம். ‘பெண்களை அடிமைப் படுத்தியதில் ஆண்களுக்குப் பெரும் பங்கு உண்டு’ என்பதை ஒரு ஆண் ஒப்புக்கொண்டு தன்னைச் சுய விமர்சனம் செய்ய முயன்றால் ‘பெண் விடுதலையில் ஆணுக்கென்ன அக்கறை. இது பெண்களை இன்னும் கோழையாக்கும் முயற்சி’ என்று கண்டிப்போம். மொத்தத்தில் ஒருத்தன் திருந்தினாலும் பிழை, திருந்தாவிட்டாலும் பிழை என்று உளறிக்கொட்டிக்கொண்டே...................... இருப்போம். இதெல்லாம் சொந்த அனுபவங்களைப் பகிர்தலும், பகிர்தலால் வருகிற வினைகளும்.


பொழுதுபோக்குக்காக பதிவு எழுதுகிறீர்களா? சம்பாதிப்பதற்கா?
சம்பாதிக்கத்தான். பெயர், புகழ் எல்லாம் சம்பாதிக்கத்தான். எப்படியாவது ஒரு நாளைக்கு பெரிய ‘இலக்கியவாதி’ ஆகி பணம் சம்பாதிக்கத்தான். (வேலை வெட்டி இல்லாமல் பொழுது போகாமல் திண்டது தினவெடுக்கத்தானே இருந்ததாலதானே வலையுலகுக்கே வந்தேன், அது தெரியாமல் கேள்வியைப் பார்)


மொத்தம் எத்தனை வலைப்பதிவுக்கு நீங்கள் சொந்தக்காரர்?
இரண்டுக்கு மேல் வைத்திருக்க வசதியில்லை. ஒரே ஒரு blogger id தான் இருக்கிறது. கண்டபடி திட்டிப் பின்னூட்டம் போட பல id களை எப்படி வேறு வேறு IP முகவரிகளைப் பயன்படுத்தி உருவாக்குவது என்றே தெரியவில்லை. ஒரு வலைப் பதிவில் நான் எழுதுவதையே சில சமயம் படிக்க முடிவதில்லை. இதுக்குள்ள எத்தனை வலைப்பதிவு என்று கேள்வி வேற....


மற்றப் பதிவர்கள்மீது கோபம் அல்லது பொறாமை உண்டா? ஆம் என்றால், யாரந்தப் பதிவர்?
யார்மீதும் எனக்குப் பொறாமை இல்லை. ஒவ்வொருவரையும் போல் எழுதவேண்டும் என்ற ஒரு ஆர்வம் மட்டும் இருக்கிறது.............. நோ நோ.. யார்மீதும் எனக்குப் பொறாமை இல்லை. என்மீதுதான் எல்லாரும் பொறாமை கொண்டே அலைகிறார்கள். என்னுடைய பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்க சதி நடந்துகொண்டே இருக்கிறது. யாரும் என் பதிவுகளுக்கு ஓட்டுப் போடுவதில்லை, யாருக்கும் பொறுப்பில்லை, யாருக்கும் ஒழுக்கமில்லை, யாருக்கும் அறிவேயில்லை. அதனால் எல்லாப் பதிவரிலும் கடும் கோபம்.


உங்களை முதலில் தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? என்ன பாராட்டினார்?
என்னைப் பாராட்டாத ஆளே கிடையாது. என்னுடைய பல கட்டுரைகளைப் படித்துவிட்டு எர்னெஸ்டோ சே குவேரா பல தடவை தொடர்புகொண்டு பாராட்டியிருக்கிறார். தாஸ்தயேவ்ஸ்கிக்கும், மிஷெல் பூக்கோவுக்கும், நீட்ஷேயுக்கும் என்னுடைய எழுத்துக்கள் என்றால் உயிர். யூ.ஜி. கிருஷ்ணமூர்த்தி, பெரியார் போன்றோர் என்னை மேற்கோள் காட்டியிருக்கிறார்கள். இதைவிட என்ன வேண்டும் எனக்கு? (இந்தப் பெயர்களைத் தேடித்தந்த கூகிளாண்டவருக்கு நன்றி. என்னையெல்லாம் யார் பாராட்டினான்? அந்தளவுக்கு நான் கூட்டம் சேர்க்கவில்லை. சேர்த்த கொஞ்சப் பேரும் சும்மா ஒப்புக்குச் சப்பாணியாப் பாராட்டுறாங்களே ஒழிய ஒரு மசுத்துக்கும் பிரயோசனமில்லை. என்னால் தண்ணியும் வாங்கிக் கொடுக்கமுடியாது. பிறகு?) (நான் பாராட்டினேனே என்று இரமணி சொல்வது கேட்கிறது).


பதிவுலகத்துக்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?
என்னத்தைச் சொல்ல. எல்லாரும் நல்லா இருங்கோ என்னைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கோ.. நல்லா முதுகு சொறியுங்கோ.. ஏலுமானளவுக்கு எதிர்க்கருத்து மட்டுமே சொல்லுங்கோ..... அவ்வளவுதான்.

Monday 12 July 2010

பொழுது போகாதவன் புலம்புகிறான்

ஏதிலிகள் அமைப்பின் சுடரில் இருள் நிகழ்வு பல நல்ல அனுபவங்களையும் நண்பர்களையும் தரவல்லது. சென்ற சனி கூட நிறையப் பேசினார்கள். கேட்டுக்கொண்டிருந்தேன். மெக்சிக்கோ தேசத்து ஏதிலி ஒருவர், பன்னாட்டு நிறுவனங்கள், மெக்சிக்கோ அரசின் ஆதரவுடன் தங்கள் பூர்வீக நிலங்களைச் சூறையாடுவது பற்றிச் சொன்னார். கனடாவில் வாழ்ந்த பூர்வீகக் குடிகளைத் துரத்தி நிர்மாணிக்கப்பட்ட ஒரு நகரத்தின் மண்டபம் ஒன்றில் இன்னொரு பூர்வீகக் குடி மக்களின் நிலைபற்றி உச்சுக்கொட்டுகிறோம் என்கிற முரண்நகையை இளங்கோவிடம் சொன்னேன். ‘அதுவும் ஸ்காபுறோ உண்மையிலேயே பூர்வீகக்குடிகள் நிரம்ப வாழ்ந்த இடம்’ என்றார் இளங்கோ. அவரின் தகவலை எங்கே உறுதிப்படுத்தலாம் என்றெல்லாம் நான் தேடிக்கொண்டிருக்கப்போவதில்லை. சந்தேகப்படுபவர்கள் அவரிடமே கேட்டுக்கொள்ளலாம். அந்த மெக்சிக்கோ தேசத்து நண்பர் சொன்ன மாநிலத்தின் பெயர் சரியாகப் புரியவில்லை. Oaxaca வாகத்தான் இருக்கவேண்டும். Chiapas தமக்குப் பக்கத்து மாநிலம் என்று சொன்னதாக ஞாபகம், கோணேஸ் Chiapas பற்றிக்கேட்டபோது. அங்கே நடக்கிற பிரச்சினை என்ன என மேலும் அறிய கூகிளாண்டவரைக் கேட்டேன். ஓரளவு நெருங்கியதாக Mexico's Gaza என்ற இணைப்பை மட்டுமே தந்தார். கூகிளாண்டவரின் கொடுமையைப் பற்றி ட்விட்டரில் (கீச்சு என்றா அழைப்பர் இதை. இரமணிதான் சொல்லவேண்டும்) புலம்புகையில் அருண்மொழிவர்மன் “அம்படாது கீத் அனுமதிக்கப்பட்ட மக்கள் பிரச்சனைகளே கூகிளில் கூட இடம்பெறும்” என்றார். அதுவும் சரிதான். வழமைபோலவே தன் வாசிப்புகள் பற்றிய கட்டுரை ஒன்றுக்கான இணைப்பும் தந்தார். அவரது கட்டுரையின் மூலவிடயங்கள் மூன்றில் ஒன்றான மூன்றாம் பாலினர் பற்றிய பகுதியில் சு. சமுத்திரம் எழுதிய “வாடா மல்லி” பற்றிச் சொல்லியிருந்தார். அந்த நாவல் ஆ.வி. யில் (இல்லை குமுதத்திலா?) தொடராக வந்த போது ‘ஒளித்திருந்து” வாசித்த ஞாபகம் இருக்கிறது, இப்போது சுதந்திரமான மறுவாசிப்புச் செய்யவேண்டும் என்றேன். கனடாவில் “வாடா மல்லி” எங்கே கிடைக்கும் தெரியவில்லை. அகிலனைத் தொல்லைப்படுத்தி இந்தியாவிலிருந்துதான் வாங்க வேண்டுமோ? ரொரன்ரோ பொது நூலகத்தில் சமுத்திரத்தின் ஒன்பது புத்தகங்கள் இருக்கின்றன. அவரின் முக்கியமான படைப்பான வாடாமல்லி இல்லை. என்ன செய்வது, பொது நூலகத்துக்கு நாங்கள்தானே புத்தகம் தேர்வு செய்கிறோம். என் உறவு ஒருவரும் புத்தகம் போடுகிறார். அடுத்த கோடைகாலத்திலிருந்து அநேகமாக வாடாமல்லி பொது நூலகத்தில் கிடைக்கலாம்.
*---*----*----*

இந்த தேசத்திலே புலம் பெயர்ந்த தமிழர்கள் கோடை காலங்களில் நடத்தும் ‘கிராம ஒன்றுகூடல்கள்’ பற்றிய விமர்சனம் எனக்கு எப்போதுமே இருந்ததுண்டு. இவற்றை ஒழுங்கு செய்வது அந்தந்த ‘ஊர்ச்சங்கங்கள்’. நான் அவற்றைச் சாதிச்சங்கங்கள் என்றே பெயரிட்டு அழைக்க விரும்புகிறேன். ஒவ்வொரு ஊரிலும் யார் ஆதிக்கசாதியாக இருந்தார்களோ அவர்கள்தான் இங்கே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பது கண்கூடு. நேரடியாக இல்லாவிட்டாலும் ‘அவரவர் உணவு அவரவர்க்கு’ போன்ற சில விசமத்தனங்கள் மூலம் சாதிப் பெருமை கொடிகட்டிப் பறக்கிறது என்பதுதான் உண்மை. சில நாட்கள் முன்பு இந்தியா சென்றுவந்த ‘காலம்’ செல்வம் அருளானந்தத்திடம் சில நண்பர்கள் கனடாவில் சாதி கொடிகட்டிப் பறக்கிறதாம் என்று கேட்டார்களாம். உண்மை நிலவரம் என்ன என்று ஏதிலிகள் கூட்டத்தில் செல்வம் கேள்வி எழுப்பினார். ‘கொடிகட்டிப் பறக்கிறது’ என்று ஒருவரைத்தவிர மற்றபேர் ஒப்புக்கொண்டோம். அந்த ஒருவர் மட்டும் ‘காங்கேசன்துறை ஊர்ச்சங்கத்தில்’ சாதி இல்லை. அதுதான் நான் பார்த்த சங்கம். அதனால் மற்ற இடங்களிலும் சாதி இல்லை என்று வாதிட்டார். தென்னாபிரிக்காவில் நூற்றாண்டுகளுக்கு முன்னர் குடியேறிய இந்தியக் குடிகளிடம் சாதி இல்லை என்று வாதிட்டார். நல்லவேளை கயானாவையும் உதாரணமாகக் காட்டி, “மொட்டைத்தலையும், முழங்காலும் ஒன்றே” என்று பிரகடனம் மட்டும் செய்யாமல் போனார். நண்பர் ஒருவர் எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊர் ஒன்றுகூடல் ஒன்றுக்கு இன்னொரு நண்பரின் அழைப்பின் பேரில் போயிருந்தபோது ஏதோ ஒரு போட்டியில் இரண்டாவதாக வந்த ஆதிக்க சாதிப் பிள்ளைக்குத் தகப்பன் அடித்தாராம் ‘வேற்றுச் சாதிப் பிள்ளை முதலாவதாய் வர நீ இரண்டாவதாய் வந்தாய்’ என்று. நாங்கள் யார், “ஆதியிலும் புலையனல்ல, சாதியிலும் புலையனல்ல.. சவுதியில புலையனானேன்’ என்று கூத்துக்கட்டிய இனமல்லவா? மறப்போமா கோவணத்துப் பெருமைகளை?
*----*----*----*

IIFA விழாப் புறக்கணிப்பு பற்றிய இணையச் சண்டை ஒன்றில் நானும் வாயைக் கொடுத்து சூத்தைப் புண்ணாக்கிக்கொண்டேன். இன்னமும் மனதில் பட்டதைத் தெளிவாகச் சொல்கிற வித்தை வரவில்லை என்னிடம். தலைகீழாய் நின்று யோசித்தும் IIFA விழாவின் வெற்றியால் இலங்கைத் தமிழன், அட தமிழன் என்ன தமிழன், ஒரு சாதாரண இலங்கைப் பிரசைக்கு பொருளாதார ரீதியாக என்ன நன்மை கிடைத்திருக்கும்? இல்லை அந்த விழா தோற்ற காரணத்தால் மேற்படி இலங்கைப் பிரசைகளுக்கு பொருளாதார ரீதியாக என்ன இழப்பு? மண்ணாங்கட்டி.... 30 வருசமாக சண்டையிலை கிழியாத சட்டையா IIFA க் காற்றில் கிழியப்போகுது? அதே பிரச்சினையில் நான் எழுப்பிய இன்னொரு கேள்வி, அசினுக்குத் தடை பிசினுக்குத் தடை என்றெல்லாம் போராட்டம் நடத்துகிற சீமான் போன்றவர்கள், இலங்கை மற்றும் இலங்கை சம்பந்தப் பட்ட இடங்களிலிருந்து தமிழ்த்திரைக்கு வருகிற பெருந்தொகைப் பணத்தைப் புறக்கணிக்கத் தயாரா? ‘தம்பி’ சூர்யாவுக்காக கொள்கை தளர்த்தியவராயிற்றே நம்மவர்?

சீமானை முழுமையாகத் திட்டக்கூட விட மாட்டேன் என்கிறார் இந்தக் கருணாநிதி. வழமை போலவே சீமான் உணர்ச்சிவசப்பட்டு ஏதோ சொல்ல ‘வன்முறையையும் பிரிவினையையும் தூண்டுகிறான்’ என்று உள்ளே போட்டுவிட்டார்கள். “தமிழக மீனவர்கள் கேட்பாரின்றி கொல்லப்படும் சூழ்நிலை உருவானால் தமிழகத்தில் ஒரு சிங்களவர் கூட நடமாட முடியாது” என்பதுதான் சீமான் சொன்ன கருத்து. சீமானின் இந்த உணர்ச்சிவசப்பட்ட நிலை முட்டாள்தனமானது என்றாலும், இதுவே வன்முறையையும் பிரிவினையையும் தூண்டும் என்றால், சத்தியராஜ் பேசிய பேச்சுக்கு (ஒகேனக்கால் பிரச்சினை) அவரைத் தூக்கிலல்லவா போட்டிருக்கவேண்டும். என்ன சத்தியராஜ் பாராட்டு விழாக்களில் கருணாநிதிக்கு நன்றாகப் பின்பக்கம் கழுவிவிடுவார். சீமான் அதைச் செய்வதில்லை.
*----*----*----*

சந்தேகம் ஒன்று

நிலவு பெத்த மகளும், நிலவின் அத்தை மகனும் காதல் செய்தல் Incest இல்லையா?
*----*----*----*

Sunday 20 June 2010

வேருலகு (அ) முதுகு சொறிதல்

சம்மாட்டியார் வாய்களிலே
சதைகளை நாம் தீத்தி வைத்தோம்
முள்ளை மட்டும் நாங்களுண்டோம்
முதுகெலும்பு வளைத்துழைத்தோம்
கைகளிலே முள்ளுக்காயம்
காலையிலே பள்ளிக்கூடம்
கணக்கு வாத்தி கம்பெடுத்தால்
கண்ணீரிலும் வெடுக்கு நாறும்...

இந்த வார்த்தைகள் மெலிஞ்சி முத்தனுடையவை. அவர் எழுதிய கூத்தில் வருபவை. மட்டமான ஒலிப்பதிவு காரணமாக சரியாக விளங்கப்பட முடியாமல் அவரது வாயால் மீண்டும் சொல்லப்பட்டவை. அப்படியும் ‘கணக்கு வாத்தி கம்பெடுத்தால் கண்ணீரிலும் வெடுக்கு நாறும்’ என்கிற வரிகள் தவிர மற்றவை படியாமல் போக அவருக்கு மடல் அனுப்பிப் பெறப்பட்டவை. ‘வெள்ளாளச் செருக்கேறிய’ மனங்களைக் கொஞ்சம் குத்திப்பார்ப்பவை. இதற்கு முன் சிலாகித்த வரிகள் பலவற்றை ஒளிமங்கிப் போக வைத்தவை. இப்படியான வலிமிக்க வரிகளைத் தரக்கூடிய மெலிஞ்சிமுத்தன் என்கிற விஜயநாதன் இயூஜின் மசனெட்டின் நான்காவது நூல் (நான் வாசித்த முதல் நூல்), ‘வேருலகு’.

மெலிஞ்சி முத்தன்
மே.ப. நபர் 20.10.1975 யாழ் மாவட்டம் மெலிஞ்சி முனையில் (எங்கிருக்கிறது அந்த இடம்?) பிறந்தார். மெலிஞ்சியில் பிறந்த காரணத்தால் மெலிஞ்சி முத்தன் என்று பெயர் வந்ததா அல்லது ‘மெலிந்த உருவத்தில் முத்தல் கதைகள் பேசுவதால்’ வந்ததா என்பது பற்றிய ஆய்வுகள் எமக்குத் தேவையற்றவை. ‘சிதையும் என்னுள்’, ’என் தேசக் கரையோரம்’, ’முட்களின் இடுக்கில்’ என்று ஏலவே மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டபின் சமீபத்தில் கனடாவில் வெளிவிட்ட இவரது ’குறுநாவல்’தான் ‘வேருலகு’. (இதைக் குறுநாவல் என்று அழைப்பதை விட, ‘கனவுகளின் தொகுப்பு’ என்று அழைப்பதையே மெலிஞ்சி விரும்புவதாக இளங்கோ சொல்கிறார்). முதல் இரண்டு தொகுப்புகளும் ஈழத்திலும், மூன்றாவது தொகுப்பு பிரான்சிலும் வெளிவந்ததாகவும் அதே இளங்கோ சொல்லியிருக்கிறார். மெலிஞ்சி புழங்கும் வட்டத்துக்குள் நான் புதிது என்பதாலும், இளங்கோ அந்த வட்டத்தில் ஒரு... ஒரு.... என்ன சொல்லலாம், மூத்த அங்கத்தவர் என்பதாலும் மெலிஞ்சி பற்றிய சில தகவல்களை இளங்கோவிடமிருந்து உருவுவதென்பது இலகுவானதும், நம்பகமானதாயுமிருக்கிறது. மெலிஞ்சி முத்தனின் ’வேருலகு’ (உயிர்மை வெளியீடு) பற்றிய என்னுடைய பகிர்வுகளே கீழே.

வேருலகு
வேருலகில் மெலிஞ்சி என்ன சொல்லியிருக்கிறார் என்கிற சுருக்கமெல்லாம் நான் இங்கே எழுதிக்கொண்டிருக்கப் போவதில்லை. இதை ஒரு திறனாய்வு என்றுகூடச் சொல்லமுடியாது. ஏனென்றால் திறனாய்வுசெய்வதற்கு நான் ஒன்றும் இலக்கியவாதி அல்ல. சாதாரண வாசகன். மெலிஞ்சியின் வேருலகில் சஞ்சரிக்கிற சில பாத்திரங்கள், கனவுகள் போல் நடந்த சம்பவங்களைப் பற்றியே பார்க்கப்போகிறோம். புத்தகத்தை வாங்கி வாசிப்பதன் மூலமே மெலிஞ்சி முத்தன் என்கிற படைப்பாளியின் வீரியத்தை உணர்ந்துகொள்ள முடியும்.

ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து பரிஸ் விமான நிலையத்திலிருந்து ஸ்பெயினூடாக மெக்சிக்கோ போகிற நோக்கத்துடன் வருகிற, கடற்கரை வீதி, கெட்டில், யாழ்ப்பாணம், இலங்கை என்ற முகவரியுடைய சூசை மரியதாசனின் பயணத்தில் ஏற்படுகிற இடர்களுடன் ஆரம்பிக்கிறது வேருலகு. இங்கேயே ஒரு வாசகன் (ஈழத்தைச் சேர்ந்தவனாக இருக்கும் பட்சத்தில்) கனவுகளின் தொகுப்போடு ஒன்ற ஆரம்பிக்கிறான். காரணம், ஈழத்தில் இருந்து இப்படி எத்தனையோ சூசை மரியதாசன்கள் பெயர்ந்திருக்கிறார்கள். அதுவும் ஐரோப்பிய நாடுகளில் ‘கறுப்பாடுகளாக’ப் பிடிக்கப்படுகிற சூசை மரியதாசன்களுக்கு நடத்தப்படுகிற விதத்தை ‘அனுபவப்பட்டவர்கள்’ சொல்லக் கேட்டிருக்கிறேன். ‘அங்கேயா இங்கேயா’ என்று தெரியாத நிலை, பணத்துக்கான அல்லாட்டம், இன்னொருவரின் வதிவிட அட்டையில் (அடையாளம் தொலைத்து) வேலை செய்வது, பசி, அகதிக் கோரிக்கை வழக்குகள், அவற்றின் தோல்விகள், கள்ளமாக அடுத்த நாட்டுக்குப் பயணம், ஒதுக்கித் தள்ள நினைக்கிற சொந்தங்கள், கைகொடுக்கிற மூன்றாமவன் எனப் பலவிடயங்கள் நேரடி அனுபவமாகவும், நண்பர்களின் கதைகளாயும் ஏற்கனவே மனதின் முக்கால்வாசி இடத்தை அடைத்து இருந்த காரணத்தால் ஒரு கட்டத்தில் அந்த சூசை மரியதாசனாக இந்த வாசகனும் மாறிப்போகிறான். கதைக்களம் அரிப்புத்துறைக்கு மாறும்போதும் கதைசொல்லியுடன் வாசகனை ஓரளவுக்காவது பொருந்திப்போக வைத்திருக்கிறார் மெலிஞ்சி.

இத்தனைக்கும் அரிப்புத்துறை என்றொரு ஊர் இலங்கையில் இருக்கிறதா என்று இணையத்தில் தேடிப்பார்க்குமளவுக்குத்தான் என் சந்ததியில் இலங்கையின் நிலப் பிரதேசம் பற்றிய அறிவு இருக்கிறது. விக்கிபீடியா சொல்கிற தகவல் சரியாக இருப்பின் மேற்படி அரிப்புத்துறை என்பது மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் இருக்கிற ஒரு ஊர். நானாட்டான் என்ற இன்னொரு பிரதேச செயலர் பிரிவு இந்த முசலி பிரதேச செயலர் பிரிவுக்கு வடக்கே இருக்கிறதாம். அந்தப் பிரிவில் நானாட்டான் என்ற பெயருடைய ஊரும் இருக்கிறதாம். மெலிஞ்சியின் வேருலகிலும் இந்த நானாட்டான் வருகிறது. ஆகவே விக்கிபீடியா சொல்லும் அரிப்புத்துறையும் மெலிஞ்சி சொல்கிற அரிப்புத்துறையும் ஒன்றாக இருக்கலாம் என்கிற முடிவுக்கு வரக்கூடியதாய் இருக்கிறது. கதை விரிகிற பிரதேசம் உண்மையா அல்லது புனைவா என்றே தெரியாத, அந்தப் பிரதேச வழக்குகள், வாழ்வியல் பற்றி எதுவும் அறியாத ஒரு வாசகனை கதைக்குள் இழுத்துவைத்திருப்பதுதான் மெலிஞ்சியின் முன் இருந்த பெரும் சவாலாக நான் கருதுகிறேன். சம்மனசு, உலுவிந்தம் பழம் போன்ற சொற்களால் மெலின்ஞ்சியின் எழுத்திலிருந்து அந்நியப்பட்டுப்போகாமல் என்னை ஈர்த்து வைத்திருந்தது அவரது கதாபாத்திரங்களும், அவரது கனவுகளுமே. மெலிஞ்சியின் வார்த்தைகளில் சொல்வதானால் அரிப்புத்துறை அவரது கனவுகளை இறக்கிவைப்பதற்குப் பொருத்தமாயிருந்த ஒரு நிலம் மட்டுமே. மற்றபடி எந்த ஒரு ஊரையோ, குழுவையோ தனிப்பட்ட மனிதனையோ அவர் சுட்டவில்லை அல்லது சுட்ட விரும்பவில்லை. ஊர்காவற் துறை தொட்டு அரிப்புத்துறைவரை மெலிஞ்சி கண்ட ஈழத்து வாழ்க்கையின் ஒரு சில படிமங்களைத் தொட்டுச் சென்றிருக்கிறார்.

மெலிஞ்சி சொல்கிற பொன்னுக் கிழவி என்னைப் பாதித்தாள். அவளது பனங்கூடல் கொட்டில் பாதித்தது. எனக்கு எங்கள் வீட்டின் பின்னால் இருந்த பனங்கூடல் கடந்து இன்னொரு பனங்காணிக்குள் கொட்டில் போட்டு, பின்னர் குடிசையாக்கிக் குடியிருந்த நடுவிலம்மா வந்து போனார். நடுவிலம்மாவுக்கு சந்தியாகுக் கிழவர் போல புருசன் இருந்ததாக ஞாபகமில்லை. ஆனால் ஆடுகள் கொஞ்சம் வளர்த்ததாக ஞாபகம். ஒரு நாய் வளர்த்தார். அந்த நாய்க்காக அக்காக்களின் பாவாடைகளுக்குள் ஒளித்த ஞாபகம் இருக்கிறது. பொன்னுக்கிழவிக்குப் பூச்சியாடு மாதிரி, நடுவிலம்மாவுக்கு அவரது மகள். நடுவிலம்மாவின் அந்தக் காணியும், கிணறும், குடிலும் மறக்கவே மறக்காது. கல்வீடுகளிலிருந்து கொஞ்சம் தனியனாக இருந்த வீடு அது. நடுவிலம்மா செத்த பிறகொருகாலத்தில், எனக்குப் பதினொரு வயதிருக்கும்போது பிள்ளையார் கோவில் திருவிழாவின் இடையில் துரைராசர் படிப்பிக்க வந்ததும், அவர் போன பின் கோபமாக அம்மாவுடன் அடம்பிடித்து மறுபடி கோவிலில் அப்பாவிடம் கொண்டுபோய் விடக் கேட்டதும், போகிற வழியில் நடுவிலம்மாவின் குடில் கடந்தபோது எதையோ ஓங்கி அடிப்பது போல் கேட்ட நடுவிலம்மாவின் மருமகனின் முக்கல் ஒலிக்கும், ‘விடுங்கோப்பா நோகுது’ என்று நடுவிலம்மாவின் மகளின் முனகலுக்கும் காலம் கடந்து அர்த்தம் தெரிந்ததும், முதலில் ‘ச்சேய்’ என்றதும் பிறகு அவர்களின் ‘சுதந்திரம்’ கண்டு வியந்ததும், அந்த கூட அந்தப் பனங்கூடல் குடில் மீதான ஈர்ப்புக்கான ஒரு காரணமாய் இருக்கலாமோ என்னவோ. நடுவிலம்மா தவிர்த்து ஆடுகளுடனும், மாடுகளுடனும் ஏன் மிளகாய்ச் செடிகளுடனும் பேசுகிற எத்தனையோ கிழவிகளைக் கண்டிருக்கிறேன். அவர்களின் முகங்களையெல்லாம் பொன்னுக்கிழவியுடன் பொருத்திப்பார்க்க முயன்றது ஒரு புதுவித அனுபவம்.

மெலிஞ்சியின் வேருலகப் பாத்திரங்களில் இன்னொன்று சசியக்கா. இவள் கண்மணி மாமியின் மகள். கண்மணி மாமி குடும்பத்துடன் சில புரட்சிக்கார இளைஞர்கள் நெருங்கிப் பழகுகிறார்கள். அவர்களில் ஒரே ஒரு இளைஞன் மட்டும் ‘சேமலையண்ணன்’ என்கிற பெயரால் அடையாளப்படுத்தப்படுகிறான். அந்த இளைஞர்களுக்கு கால்களில் சிரங்கு இருக்கிறது. “கண்மணி மாமி வீட்டில் சசியக்காவுக்கே முதலில் சிரங்கு தொற்றிக்கொண்டது” என்கிற ஒரு வசனத்திலேயே சேமலைக்கும் சசிக்கும் காதல் என்பதை ஊகிக்ககூடியதாய் இருந்தும் அவர்கள் நெருங்கியிருக்கும் காட்சிகள் சில பற்றி மெலிஞ்சி விவரிக்கும்போது கொஞ்சம் ஆயாசமாயிருக்கிறது. அதுவும் அவர்களின் முத்தக் காட்சி பற்றிய வர்ணனையெல்லாம் எதற்கு என்று எண்ணும்போது “அன்றைய இரவு நான் கண்ட கனவு வித்தியாசமாய் இருந்தது” என்று சொல்லி அதன்பின் மெலிஞ்சி சொல்கிற சில விஷயங்கள் சிலருக்கு ஜீரணிக்க முடியாதவையாய் இருக்கலாம். அப்படி ஜீரணிக்க முடியாதவர்களும் மெலிஞ்சி சொல்கிற அந்த அனுபவங்களை எங்கோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு கணத்தில் கடந்திருப்பார்கள் என்றே சொல்லலாம்.

ஆட்டுத்திருடன் சிமியோன், அவனுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை, அதன் பின்விளைவுகள், கண்மணி மாமியின் காணாமல் போன உள்பாவாடை, சிப்பாயின் தலையை வெட்டி வேலிமட்டையில் கொழுவும் உலுந்தை, கக்கா இருக்கும்போது பாம்புகளை வரந்த, பாம்பு கடித்துச் செத்துப்போன அத்தாம்புள்ள, அல்லி பற்றிய அமானுஷ்யக் கதைகள், கண்மணி மாமியின் இளைய மகள் சின்னன், சீத்தைத் துணிக்காடு, பூச்சியாடு.................................................. சொல்லிக்கொண்டே போகலாம். ஆனாலும் ஈழத்துத் தமிழ்ப்படைப்பளி ஒருவனிடமிருந்து வந்திருக்ககூடிய ஒரு நல்ல படைப்புக்கு நான் செய்யக்கூடிய சிறிய மரியாதை, அந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள் என்கிற சிபாரிசு மட்டுமே, மெலிஞ்சியின் புத்தகக் காசுகூட இன்னும் கொடுக்கவில்லை என்ற உறுத்தலுடன்.

*----*----*----*

என்னதான் வேருலகைச் சிலாகித்தாலும் மெலிஞ்சியின் அந்தக் கூத்து வரிகள் அந்த மெல்லிய பாம்பு மனிதனிடம் இன்னும் நிறைய இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றன. அஜந்தனாய், காந்தனாய், பெயர்களே தெரியாத அந்தக் கற்கோவளத்து உதைபந்தாட்ட வீரர்களாய் மாறி மெலிஞ்சி யாழ்ப்பாணத்து வெள்ளாளச் செருக்கை எட்டி உதைக்கிறார்,

சம்மாட்டியார் வாய்களிலே
சதைகளை நாம் தீத்தி வைத்தோம்
முள்ளை மட்டும் நாங்களுண்டோம்
முதுகெலும்பு வளைத்துழைத்தோம்
கைகளிலே முள்ளுக்காயம்
காலையிலே பள்ளிக்கூடம்
கணக்கு வாத்தி கம்பெடுத்தால்
கண்ணீரிலும் வெடுக்கு நாறும்... என்கிற வரிகளூடாக.

பி.கு: சக மனிதனின் திறமைகளைச் சிலாகிப்பதுக்கு இன்னொரு பெயர் முதுகு சொறிதல் என்றால்..... நான் மெலிஞ்சிக்கு சொறிந்துதான் விட்டிருக்கிறேன்.

Monday 17 May 2010

இந்தியா ஒளிர்கிறது

ஈரோடு தமிழன் (வீரமணி மணி) என்பவரின் வலைப்பூவில் சிக்கியது. பகிரலாம் என்று தோன்றிய காரணத்தால் பகிர்கிறேன். இடைக்கிட வருகிற தமிழ்ப்பாட்டு ஏதோ செய்கிறது. ஈரோடு தமிழன் ‘சாதிக்கொடுமைகள் இந்தியாவில் இல்லை என்று மறுப்பவர்களுக்கு’ என்று தலைப்பிட்டு இந்தக் காணொளிப் பட்டியலை இணைத்திருந்தார். இதேபோல் எங்கள் ஊரிலும் யாராவது செய்யவேண்டும். தோலுரிக்கப்பட நான் தயார். தோலுரிக்க யாராவது இருக்கிறீர்களா?

Sunday 16 May 2010

Wednesday 28 April 2010

பேரைக் கேட்டாலே...

ரஜினியின் சிவாஜியில் வரும் ‘பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல’ என்கிற வசனத்தை நான் கிண்டலடிப்பதுண்டு. அதெப்படி பேரைக் கேட்டால் அதிர முடியும்? என்ன தூங்கிக்கொண்டிருப்பவன் காதுக்குள் ஒலிபெருக்கி வைத்தா சொல்வார்கள் என்றெல்லாம் கேட்பதுண்டு. இந்த வசனத்தை எழுதினாரே என்று சுஜாதாவில் கொஞ்சம் கோபமும் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட பேரைக் கேட்டால் அதிர்வது மட்டுமில்லை, ‘என்ரை அய்யோ’ என்று வாகனம் ஓட்டியபடியே வாய்விட்டுக் கத்துகிறேன். என்ன மூடிய வாகனத்துக்குள் கத்துவதால் என்னை யாரும் பைத்தியம் என்று நினைத்துவிட முடியாது. அந்தப் பெயர் King (தமிழ்ப்படுத்தவும்) இப்ராகிம்.

காலை வேளைகளில் வேலைக்குப் போகும்போது கனேடியப் பல்கலாசார வானொலி (CMR) கேட்டபடி போவதுண்டு. அடிக்கடி ஏதாவது சுவாரஷ்யமான தலைப்புகளில் நேயர்களை தொலைபேசச் சொல்லி உரையாடுவார்கள். ஏப்ரல் முட்டாள்கள் தினத்து அனுபவங்களைக் கேட்டு அதிலேயே ஏப்ரல் முட்டாள்களாக ஆக்கப்பட்ட (ஆக்கியவன் நானே) அறிவிப்பாளர்களும் உண்டு. இடையிடையே ‘இன்றைய பொருளாதார நெருக்கடி உங்கள் வாழ்க்கையை எப்படிப் பாதித்திருக்கிறது?’ ‘தொழிற்சாலைகளில் நியாயமான சம்பளங்கள் வழங்கப்படுகின்றனவா?’ ‘மரண தண்டனை சரியா தவறா’ போன்ற சில தலைப்புகளில் வாய்ப்புமளித்து அவை தொடர்பான புள்ளிவிபரங்களையும் சொல்வார்கள். சில சமயங்களில் ‘ஏப்ரல் முட்டாள் அனுபவங்கள்’ ‘பாட்டுக்கு மெட்டா மெட்டுக்குப் பாட்டா?’ என்கிறமாதிரியான சுவாரஷ்யமான தலைப்புகளும் வருவதுண்டு. இந்த நிகழ்ச்சிக்கு கிட்டத்தட்ட 20-30 நிமிடம் மட்டுமே ஒதுக்கப்படுவதால் பங்குபெறுபவர்களை ஓரளவுக்காவது கொடுத்த விஷயத்தை வெட்டொன்று துண்டிரண்டாகப் பேசச் சொல்லிக் கேட்பார்கள். இந்த நிகழ்ச்சியைத்தான் மேற்சொன்ன King இப்ராகிம் ரணகளப்படுத்துகிறார். நான் காருக்குள் கத்துவதுமாதிரி ஒரு நாளைக்கு அறிவிப்பாளர்கள் கத்துவார்கள். King இன் அழைப்புகளைத் துண்டிக்க அவர்கள் படும்பாடு பெரும்பாடு.

ஒரு நிகழ்ச்சி. ‘உங்களுக்கு வருமான வரித் திணைக்களத்திலிருந்து மீள் கொடுப்பனவு (Refund) கிடைத்தால் என்ன செய்வீர்கள்?’ இதுதான் அன்றைய வாதப்பொருள். அதாவது வருடாந்தத் தனிநபர் வருமான வரி அறிக்கையை அரசத் திணைக்களத்திடம் சமர்ப்பித்தால், அந்த வருடத்தில் வருமானத்தின் அடிப்படையில் நீங்கள் கூடுதலான வரியைச் செலுத்தியிருந்தால் அந்தளவு பணமும் மீளளிக்கப்படும். அப்படி மீளளிக்கப்படுகிற பணத்தை என்ன செய்வீர்கள் என்பதை சுருக்கமாகச் சொல்லுங்கள் என்பதுதான் கேள்வி. ‘வாகனக் கடனுக்குச் செலுத்துவேன், கடனட்டை நிலுவையைச் செலுத்துவேன், பிள்ளைகளுக்கு பொருட்கள் வாங்கிக் கொடுப்பேன், சேமிப்பேன்’ இப்படியான சுலபமான பதில்களுக்குரிய கேள்வி. அழைத்தார் King. காதால் ரத்தம் வழியுமளவுக்கு ‘நாங்கள் இதற்கு ஆறேழு மாதமாகத் திட்டமிடவேண்டும். எப்படிக் கூடுதலான வரியைப் பெறலாம் என்று ஒரு வருடத்துக்கு முன்னர் திட்டமிடவேண்டும்’ என்று ஆரம்பித்து காதால் ரத்தம் ஒழுக ஒழுக கதைத்தார் மனிதர். நல்லவேளை ‘யாருடைய உதவியோடு வருமான வரிப் பத்திரங்களைத் தயார் செய்ய வேண்டும் என்று நாங்கள் அம்மாவின் வயிற்றில் இருக்கும்போதே முடிவு செய்யவேண்டும். போன ஜென்மத்திலேயே என்ன திகதி இந்தப் பத்திரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று முடிவு செய்யவேண்டும்’ என்றெல்லாம் சொல்ல முன் அறிவிப்பாளர்கள் பெரும்பாடுபட்டு அழைப்பைத் துண்டித்தார்கள்.

அதே போல் இன்னொருநாள். ‘வீட்டுக் கடன் பற்றிய சட்டங்களில் புதிதாக அரசாங்கம் கொண்டுவந்த இறுக்கமான நடைமுறைகளால் வீடு வாங்குவது தொடர்பான உங்கள் திட்டங்களில் ஏதாவது மாற்றங்கள் ஏதாவது இருக்கின்றனவா?’ என்கிற தொனியில் உரையாடல் நடந்தது. மீண்டும் வந்தார் மன்னாதி மன்னர். ‘முதலில் நாங்கள் எங்களுடைய மக்கள் கூடி வாழ்கிற இடங்களாகவும், வர்த்தக நிலையங்கள் உள்ள இடங்களாகவும் பார்த்து வீடு வாங்கவேண்டும். அப்படி இல்லாமல் வீடு வாங்கினால் அதை விற்க முடியாது. இப்படியாகத் திட்டமிட்டே வீடு வாங்கியதால்தான் நான் நல்ல நிலையில் இருக்கிறேன்’ என்று ஆரம்பித்தார். கேள்வி வீட்டுக் கடன் பெறுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக உங்களது வீடு வாங்கும் திட்டத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதே. ‘ஒரு இரண்டு மாதம் தள்ளிப் போட்டிருக்கிறோம், சட்டம் அமலுக்கு வர முன்னரே கடனைப் பெற்றுக்கொள்வது நல்லது’ போன்ற பதில்கள் இருக்கத்தக்கதாக எங்கே எப்படி என்ன மாதிரி வீடு வாங்கவேண்டும் என்ற ஆராய்ச்சி முடிவுகளைச் சொல்கிற மனிதனை என்ன செய்யமுடியும்?

இது தனியே ஒரு King இப்ராகிம் பற்றிய பதிவு அல்ல. எமது சமூகத்தில் எத்தனையோ King இப்ராகிம்கள் இருக்கிறார்கள். ஒரு முறை இதே வானொலியில் ‘இலங்கைத் தேர்தல் நிலவரம்’ பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது இன்னொரு King வந்து ‘இந்த நிகழ்ச்சி இப்போது தேவையான நிகழ்ச்சி. இதை ஒழுங்கு செய்த வானொலி நிறுவன இயக்குனருக்கு முதற்கண் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கு முதற்கண் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அறிவிப்பாளர்களுக்கு முதற்கண் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பிக்கும் ஆய்வாளருக்கு முதற்கண் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கருத்துத் தெரிவித்த நேயர்களுக்கு முதற்கண் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வானொலி கண்டுபிடித்த மார்க்கோனிக்கு முதற்கண் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று நன்றியுரையாற்றத் தொடங்க அறிவிப்பாளர் ஓரளவுக்குச் சமாளித்து பேசவந்த விஷயத்தைப் பேசவைத்தார். இது நம்மவரிடையே இருக்ககூடிய பிரச்சினைகளில் முக்கியமானதொன்று.

காத்திரமான நிகழ்ச்சிகளை இலத்திரனியல் ஊடகங்கள் தருவதில்லை என்ற குற்றச்சாட்டை நானே எழுப்பியிருக்கிறேன். ஆனால் அவர்களிலும் முழுமையாகத் தவறில்லை. உணர்ச்சிப் பிழம்புகளும், உயர்வு நவிற்சிகளும் (மைக் செட் காரரோடு சேர்த்து பதினொரு பேர்- சுஜாதா) மட்டுமே நிரம்பிய ஒரு சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட நேர எல்லைக்குள் பயனுள்ள விடயங்களைப் பேசவைத்து ஒரு நிகழ்ச்சி செய்வதைவிட பேசாமல் தொலைக் காட்சி நாடகங்களையும் படங்களையும் போட்டு மக்களைத் தாக்காட்டிவிடலாம் என்ற ஒரு நிலைப்பாட்டை அவர்கள் எடுத்ததில் தவறில்லையோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது. ‘உன்வீட்டுக்கு எதிர்வீட்டுக்கு என்ன வழி?’ என்று கேட்டால் ‘எங்கள் வீட்டிலிருந்து கிழக்கு நோக்கிப் போய் வருகிற 133 பஸ் வண்டியில் ஏறி வடக்கே ஐந்து கிலோமீற்றர் போய் அங்குள்ள தரிப்பில் இறங்கி, ரோட்டைக் கடந்து மற்றப் பக்கம் வந்து மீண்டும் பஸ் பிடித்து நீங்கள் முதலில் ஏறிய தரிப்பில் இறங்கி எங்கள் வீட்டுக்கு சரியாக 10 மீற்றர் குறுக்கே நடந்தால் எங்கள் வீட்டுக்கு எதிர்வீடு வரும்’ என்று சொல்கிற King இப்ராகிம்கள் கொஞ்சம் யோசித்தால் நல்லது.

பி.கு: CMR நேயர்கள் யாராவது இதை வாசித்து உங்களுக்கும் Kingஐத் தெரியும் பட்சத்தில் அவருக்குச் சொல்லுங்கள், இனிமேலும் இப்படி விசரடிக்க வேண்டாம் என்று.

Wednesday 14 April 2010

ரசித்தது

இணையத்தில் மேய்ந்தபோது சிக்கியது. நன்றாயிருந்தது பகிர்கிறேன். கிரிக்கெட் பைத்தியமாக நான் இருப்பதால் பிடித்திருக்கலாம். உங்களுக்கும் பிடிக்கும்....












Wednesday 24 March 2010

பிரவுணி, டெவில் மற்றும் சீக்கோக்கள்

சீக்கோக்களை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். யாழ்ப்பாணத்து வீதிகள் பலவற்றில் இவர்களின் ராச்சியம்தான் நடக்கும். பல நிறங்களில், பல பருமன்களில் போகிற வருபவர்கள் எல்லோரையும் மிரட்டுவதில் சீக்கோக்களுக்கு நிகர் சீக்கோக்கள்தான். ஆனால் நித்தனும் சிறிமாவோ பண்டீரிநிக்காவும் சீக்கோக்களுக்குப் பயப்பட மாட்டார்கள். சைக்கிளில் போகும்போது நிம்மதியாக நித்திரை கொண்டுகொண்டிருக்கும் சீக்கோக்களை ஓங்கி உதைப்பார்கள். அடுத்த நாள் அதே வீதியில் போனால் உதை வாங்கிய சீக்கோக்கள் ஞாபகம் வைத்துக் கலைக்கும். சைக்கிளில் எம்பி மிதித்து ஓடி சடாரென பிரேக் பிடிக்க சீக்கோக்கள் வாலைச் சுருட்டிக்கொண்டு ஓடும் பாருங்கள், அந்த வேகத்துக்கு யாருமே ஈடுகொடுக்க முடியாது. இப்போது சிந்தித்துப் பாருங்கள், சீக்கோக்களை உங்களுக்குத் நிச்சயம் தெரியும்தானே.

எனக்கு சீக்கோ என்கிற பெயரை நித்தன்தான் சொல்லித்தந்தான். அதற்குமுன் ‘நாய்கள்' என்கிற பெயரிலேயே அவர்களை அழைத்துவந்தேன் (இப்போது doggy). நித்தனோடு சேர்ந்த பின் சீக்கோக்களுக்கு நானும் சிம்ம சொப்பனம்தான். அவர்களை உதைக்காவிட்டாலும் ‘ஊய்' என்று சத்தமிட்டு மிரட்டி, சைக்கிளைக் கலைக்கவைத்து, பிரேக் போட்டு வாலைச் சுருட்டி ஓடவைப்பதில் ஒரு த்ரில் இருந்தது. அந்தக் கொடுமைக்கு எல்லாம் சேர்த்து கனடாவில் வைத்து ஒரு சீக்கோ இடது முழங்கைக்கு சற்று அருகிலும், முன்தொடையிலும், பிட்டத்திலும் கடித்து கடுக்கக் கடுக்க ஊசி போடவைத்தது என்பது வேறுகதை. ஆனாலும் இன்றைக்கும் சீக்கோக்கள் மீதான வெறுப்பு இருந்துகொண்டேயிருக்கிறது. கல்லால் அடிக்க, காரால் ஏற்ற ஆசையிருக்கிறது. ஆனால் சீக்கோக்களை வளர்ப்பவர்கள் மில்லியன் கணக்கில் என்னிடம் நட்டஈடு கோரலாம் என்று பயப்படுத்துகிறார்கள்.


நான் ஒன்றும் சின்னவயதில் இருந்தே சீக்கோக்களை வெறுத்ததில்லை. எங்கள் வீட்டில் மெல்லிய மண்ணிறத்தில் கழுத்தில் சின்னதான ஒரு வெள்ளைப் பொட்டுடன் ஒரு சீக்கோவும், கொழுத்துப் போன அழுக்கு மண்ணிறத்தில் ஒரு வயதான சீக்கோவும் இருந்தன. வயதான சீக்கோ ஆணோ, பெண்ணோ என்றெல்லாம் ஞாபகம் இல்லை. அந்த சீக்கோவுடன் எனக்குப் பெரியளவு பரிச்சயம் ஏற்படமுன்னமே அது செத்தும்போனது. மற்ற சீக்கோ நல்ல வீரன். வைரமுத்துப் பெரியப்பா கொண்டுவந்து தந்த சீக்கோ அது என்று அப்பா சொல்லுவார். நல்ல இளைஞன். தெருவில் மற்ற சீக்கோக்களை உறுமி அடக்கும் ரவுடி சீக்கோ அது. அதுக்கு ‘பிரவுணி' என்றும் ‘ராஜா' என்றும் பெயர்கள் வழங்கியதாக ஞாபகம். ஒரு நாள் பிரவுணி (எ) ராஜா (எ) மண்ணிற சீக்கோ அக்கா அரிசியைக் கடித்துவிட்டது. ஏலவே யாரும் நொண்டி நடந்தால் பிடிக்காது இந்த சீக்கோவுக்கு. அக்கா அரிசி பாவம். ‘அக்கா அரிசி, அக்கா அரிசி' என்று பிச்சை புகுந்து வாழ்கிற அவருக்கு கால் புண்ணுக்கு மருந்துபோடவோ காலுக்கு செருப்பு போடவோ வழியில்லை. நொண்டி நடந்தவரை சீக்கோ பதம்பார்த்துவிட்டான்.

அக்கா அரிசியை சின்னத்துரை கடைக்குப் பக்கத்தில் இருந்த நேர்சக்காவிடம் கூட்டிச் சென்று மருந்துச் செலவை அப்பா ஏற்றுக்கொண்டார். ஏற்கனவே இரண்டொருவரை பதம் பார்க்க சீக்கோ முயன்று கடைசியில் அக்கா அரிசியைப் பதம் பார்த்த காரணத்தால் சீக்கோவைக் கட்டிப்போடுவது என்று முடிவாயிற்று. அன்றிலிருந்து சீக்கோ கட்டிப்போட்டப்பட்டான்.

ஒரு நாள் மதியவேளை சீக்கோ அலறிக்கொண்டிருந்தான். அவனது கழுத்துப்பட்டியில் இருந்த ஒரு கம்பி கழுத்துக்குள் போய்விட அதிலிருந்து மீளும் முயற்சியில் சீக்கோவின் கழுத்தில் பெரிய காயம். இரத்தம் கொட்டியது. அப்பா ஒருவாறு அவிழ்த்து விட்டதும் ஓரிடமும் போகாமல் ஓடோடி வந்து வீட்டு வாசலில் படுத்து உருண்டு புரண்டு அழுதான் பிரவுணி (எ) ராஜா (எ) மண்ணிற சீக்கோ. (பிற்காலத்தில் அல்சர் கான்சராக்கிய வைரமுத்துப் பெரியப்பாவும் வயிற்றுவலியால் அப்படித் துடித்ததாக ஞாபகம்). எனக்கு வயிற்றுக்குள் ஏதோ செய்தது. கழுத்தில் ஏதோ ஒரு அவஸ்தை தோன்றியது. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு சீக்கோ பழையமாதிரி உற்சாகமாக இல்லை. காயம் மாறிய பின்னரும் அவனது பழைய உற்சாகத்தைக் காணவில்லை. கொஞ்ச நாளில் சீக்கோ இறந்துபோனான். எங்கள் வீட்டு வளவின் தென்கிழக்கு மூலையில் ஒரு தென்னமர அடியில் சின்னக் கிட்டிணி தோண்டிய கிடங்கில் சீக்கோவைப் புதைத்தார்கள்.

அவனுக்குப் பிறகு வீட்டில் நிரந்தரமாய் ஒரு சீக்கோ வந்தது எனக்கு பத்து வயதிருக்கும்போது. பக்கத்தில் இருந்த ‘அண்ணன்'மார் விட்டுப்போன பெண் சீக்கோ ஒன்றின் பிள்ளைகளில் நான் தெரிந்தெடுத்த சீக்கோ அவன். ‘மயாவி', ‘மாயவி' என்றெல்லாம் வாசித்து கடைசியில் 'மாயாவி' என்று மனதில் பதிந்த முகமூடி வீரர் மாயாவியின் சீக்கோவின் பெயரான ‘டெவில்' என்று பெயர் வைத்து அவனை வளர்த்தேன். கமலாம்மா அடிக்கடி சொல்லுவார்கள், 'எறும்பு போட்ட பால் குடிச்சா நல்ல வீரமா வளரும்' என்று. அம்மாக்குத் தெரியாமல் கறந்த பசும்பாலில கொஞ்சமாக கமலாம்மா அல்லது ஆசையம்மாவிடம் வாங்கி, எறும்பு பிடித்துப் போட்டு டெவிலை வளர்த்தேன். அவனும் என்னோடேயே வளர்ந்தான்.

பக்கத்தில் ‘அண்ணண்மார்' இருந்ததால் யாழ்ப்பாணத்தில் பிரச்சினை வரும்போதெல்லாம் அப்பா பிறந்த வீட்டில் போய் நிற்போம். அப்படி நாங்கள் போகிற நாட்களில் டெவிலை ஏனோ மறந்துபோய்விட்டேன். டெவிலுக்கும் குண்டுச்சத்தமும், புக்காரா, சுப்ப சொனிக் சத்தமும் அடிவயிற்றைக் கலக்கும் என்று புத்திக்கு உறைக்கவில்லை. பிரச்சினை கொஞ்சம் ஓய்ந்து வீட்டுக்குப் போனால் டெவிலைக் காணவில்லை. அவன் பக்கத்துவீட்டு அன்ரி வீட்டில் நிரந்தரமாகிவிட்டான். எறும்புப் பாலை மறந்து மிஞ்சிய சோறைச் சாப்பிடப் பழகிவிட்டான். அவர்கள் வீட்டுக்கு நான் போனால் ஓடிவந்து வாலை ஆட்டினாலும் எங்கள் வீட்டுக்குக் கூப்பிட்டுப் பார்த்தால் வரவே மாட்டேன் என்றுவிட்டான். மற்ற சீக்கோக்களிடம் கடிபட்டு ரத்தம் ஒழுக வந்தவனை ‘வீட்ட வாடா. உனக்கு எறும்புப் பால் தந்து வீரமாக்கிறன்' என்று சொல்லியும் வரமாட்டேன் என்றுவிட்டான். காலம் போகப்போக என்னைக் கண்டாலும் குரைக்கவும் பழகிக்கொண்டான். நானும் சீக்கோக்களை வெறுக்கப் பழகிக்கொண்டேன். தெருச் சீக்கோக்கள் கடித்துச் செத்த டெவிலின் மரணம் சின்னச் சலனத்தோடு என்னைக் கடந்துபோயிற்று.

Sunday 21 March 2010

மேய்கிற மனம்

ரைகர் வூட்சின் போதாத காலம். நவம்பரில் வெடித்த புயலை ஒருவாறு அடக்கி மீண்டும் வருகையில் அவர் அனுப்பிய குறுந்தகவல்களை வெளியிட்டிருக்கிறார் அவரது ‘வைப்பாட்டிகளில் ஒருவர்' என்று ஆங்கில ஊடகங்கள் செல்லமாக அழைக்கும் ஜோசலின் ஜேம்ஸ். 'உன்னுடன் இப்படிக் கூடவேண்டும், அப்படிப் புணரவேண்டும்' என்று கொஞ்சம் ஆக்ரோஷமான உடலுறவை வேண்டி நிற்கின்றன பெரும்பாலான குறுந்தகவல்கள். ‘உனக்குத் தெரிந்த, நம்பிக்கைக்குப் பாத்திரமான யாராவது பெண் இருந்தால் சொல். Threesome செய்ய ஆசையாயிருக்கிறது என்று வேண்டுகோள் வேறு. டைகர் வூட்ஸ் பற்றிய செய்திகள் வரத் தொடங்கியகாலகட்டத்தில் இருந்து இந்த விசித்திர உறவுகள் பற்றி சில கேள்விகள் மனத்தில் எழுந்தவண்ணம் இருந்தன.

வூட்சைப் போலவே பல பெண்கள் வாசம் பிடிக்கிறவர்கள் எத்தனையோபேர் இருக்கிறார்கள். அதாகப்பட்டது, திருமணத்துக்குப் புறம்பான உறவுகள் இன, மத, நிற, கலாச்சார அடையாளங்களைக் கடந்து எல்லா இடத்திலும் விஞ்சிவிரவிக் கிடக்கின்றன. இருந்தும் பலபேர் நல்லவ(ன்/ள்)களாக பொதுவெளியில் தெரிவதை ‘தப்புக்கள் கண்டுபிடிக்கப்படும்வரை எல்லோரும் நல்லோரே' என்று சுஜாதா அடிக்கடி மேற்கோள்காட்டுகிற கோட்பாட்டுக்குள் அடக்கிவிடலாம். அப்படிப் பிடிபடுகிற சாதாரணர்கள் விவாகரத்து, கொலை என்று எதன் மூலமாவது பிரச்சினையை ‘முடிக்கிறார்கள்'. இதுவே ஒரு வூட்சோ, கிளின்ரனோ, நயன்தாராவோ, ரஞ்சிதாவோ மாட்டுப்பட்டால் உலகம் முழுக்க அலறுவார்கள். வூட்ஸ் பிரச்சினை முதன் முதலாக வெடித்தபோது ‘அடப் பாவமே... எவ்வளவு அடித்தாலும் தாங்கக்கூடிய இன்னொருத்தன் மாட்டினான்' என்றொரு பரிதாபகரமான எண்ணம் தோன்றியது உண்மையே. பின்னர் பெண்கள் வரிசைகட்டி வர ஆரம்பித்ததும் பரிதாபம் வெறுப்பாக மாறியது. வூட்சின் மனைவி எலீன் தவிர மற்ற எல்லாப் பெண்கள் மீதும் அதேயளவுக்கு வெறுப்பு இருந்தது என்பதையும் இங்கே சொல்லியாகவேண்டியிருக்கிறது. வூட்ஸ் தனது மனைவிக்குச் செய்கிற துரோகத்துக்கு உடந்தையாயிருந்தவர்கள் தங்களுக்கும் வூட்ஸ் இதே துரோகத்தைச் செய்யலாம் என்று சிந்திக்கத் தவறியது விந்தை. அந்தளவுக்கு வஞ்சகம் நிறைந்தவராக வூட்ஸ் இருந்திருக்கிறார் என்பதையும் இங்கே கவனித்தாகவேண்டியிருக்கிறது.

வேறு சில கலாசாரங்களோடு ஒப்பிடுகிறபோது மேலைத்தேயக் கலாசாரங்களில் பெண்களுக்கு கொஞ்சம் சுதந்திரம் இருப்பதாகப் பேசிக்கொண்டாலும் உண்மை அதுவாகவில்லை. கிட்டத்தட்ட 99 சதவீத ஆண்கள் (நான் உட்பட) பெண்களைப் போகப் பொருளாகவே பார்க்கிறோம் என்பது உண்மை. எத்தனையோ ஆங்கிலேய நண்பர்கள், என்னுடைய வேலையிட வாடிக்கையாளர்கள் பெண்களைப் போகப்பொருள் என்கிற கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கக் கண்டிருக்கிறேன். இதனால் ஆண்-பெண் உறவு பற்றிய கண்ணோட்டத்தில் எங்கள் கலாசாரத்தைவிட அவர்கள் கலாசாரம் ஒன்றும் உயர்ந்ததல்ல. எங்களிடம் இருக்கும் பெண்கள் சார்ந்து அமைந்த கெட்ட வார்த்தைகளைப் போலவே அவர்களிடமும் பெண்கள் சார்ந்தே கெட்டவார்த்தைகள் இருக்கின்றன என்பது நிதர்சனம். மெலிஞ்சிமுத்தன் சொல்லுவார், ‘ஒரு ஆண் எந்தப் பெண்ணை முதலில் பார்த்தாலும் அவள் அவனுடன் உடலுறவு கொள்வதற்குத் தோதானவளா என்பதையே முதலில் நோக்குகிறான். அதன் அடிப்படையில்தான் அவளுடனான அடுத்தகட்ட உறவு (சகோதரி, தோழி, ஆசை நாயகி, கனவில் கூடுபவள்; அடைப்புக்குறி என்னுடையது) தீர்மானிக்கப்படுகிறது. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொள்ள இருவருக்கும் அரவாணி நிலை வாய்க்கப்பெறுவது நன்று' என்று (மெலிஞ்சி சொன்ன வார்த்தைகளின் வடிவம் வேறு). வார்த்தைக்கு வார்த்தை ஒப்புக்கொள்ளமுடியாத கருத்தாயினும், அவர் சொல்கிற தீர்வு எனக்குப் பிடித்திருக்கிறது.

எதையோ பேசவந்து எங்கெல்லாமோ போகிறோம் போலிருக்கிறது. சரி, வூட்ஸ், கிளின்ரன், கமலஹாசன், நித்தியானந்தன், ரஞ்சிதா, மொனிக்கா லூவின்ஸ்கி இவர்கள் மீதான சமூகத்தின் விமர்சனம்/கோபம் எந்த அடிப்படையில் உருவாகிறது என்கிற ஒரு கேள்வியும் இருக்கிறது. என்னுடைய சிற்றறிவுக்கு இரண்டு காரணங்கள் வந்து விழுகின்றன. ஒன்று, அளவில்லாத ஏமாற்றம். இரண்டு அளவு கடந்த வெளியே சொல்ல முடியாத பொறாமை.

அளவில்லாத ஏமாற்றம்
வூட்ஸ் என்கிற மனிதனைப் பலருக்கு மிகவும் பிடித்திருந்தது. பணக்காரர்கள் விளையாட்டில் அவன் பணக்காரன். அழகான மனைவி குழந்தைகள் பெரிய வீடு என்று வாழ்க்கை. எங்கு திரும்பினாலும் புகழ். அவன் பலருக்கு முன்மாதிரி. பல கனவான்கள்கூட அவனைப் போல வாழவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். பலர் வெளியில் சொன்னார்கள். அப்படிப்பட்ட ஒருவன் ஒரு 'காம வெறியன்' என்பதாக அறிந்ததும் வந்த ஏமாற்றம்தான் வூட்ஸ் மீதான கோபத்துக்கு முதல் காரணம். எனக்கு சச்சினை மிகப்பிடிக்கும். சச்சின் குடும்பதோடு வாழ்கிற முறை பிடிக்கும். அடக்கம் பிடிக்கும், அது பிடிக்கும், இது பிடிக்கும் இன்னும் எத்தனையோ பிடிக்கும். சச்சின் இப்படி திருமணத்துக்கு வெளியே ஒரு பெண்ணுடன் உறவுகொண்டார் என்று செய்தி வந்தாலே நிச்சயம் உடைந்துபோவேன். அப்படியாக உடைந்துபோன வூட்சின் விசிறிகளின் ஏமாற்றம் அவர்மீதான கோபமாக மாறியது. அதனால் போகிறவன் வருபவனெல்லாம் விமர்சித்தான் அல்லது திட்டித்தீர்த்தான், தன்னுடைய தவறுகள் பிடிபடும்வரை தானும் நிரபராதி, பிடிபட்டாலும் இப்படி யாரும் கேட்கமாட்டார்கள் என்கிற அசட்டுத்துணிவில் மனச்சாட்சியைக் கழற்றித் தூரவைத்துவிட்டு. இது நித்தியானந்தன் பக்தர்களுக்கும் பொருந்தும்

அளவுகடந்த பொறாமை
நேற்றைக்கு அவுஸ்திரேலியா-நியூசிலாந்து போட்டியின் ஸ்கோர் விபரங்களைப் பார்க்கும்போதுதான் கவனித்தான், விக்கட் காப்பாளர் ஹாடினின் முதலெழுத்துகள் BJ. உடனே எனக்கு என்ன ஞாபகம் வந்தது தெரியுமா? வெட்கத்தைவிட்டுச் சொல்கிறேன். ரஞ்சிதாவின் முகம்தான். ‘கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்திடிச்சு' என்று ஆடிய, பல இளசுகளின் கால்சட்டை அல்லது சாறம் நனைத்த அந்தப் பெண்ணின் BJ தான் ஞாபகம் வந்தது. அதாவது எனக்குள் இருந்த ஆணின் பொறாமை முகம் விழித்துக்கொண்டது. இதுதான் கிட்டத்தட்ட வூட்ஸ், நித்தியானந்தன், கிளின்ரன் என்று எல்லோரையும் விமர்சிக்கும் இன்னொரு பகுதியின் மனநிலையாக இருக்கமுடியும்.

ஆக, உலகமெங்கும் திருமணத்துக்குப் புறம்பான உறவுகளும், முறைதவறிய உறவுகளும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. பெண்கள் போகப்பொருளாகப் பார்க்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். கணபதிக்குச் சேவை செய்கிற ரத்தினங்களும். இந்திரன் பொடிகொடுத்த தங்காள்களும் சத்தமில்லாமல் இதையே செய்துகொண்டிருப்பார்கள். வதனிகளை வீரமணிகள் கெஞ்சிக் கூத்தாடித் திருமணம் செய்து கொடுப்பார்கள். பிரபலங்கள் இப்படி மாட்டுப்படுவதற்குப் பயந்தாவது நிறுத்திக்கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. என்ன அப்படி நிறுத்திக்கொண்டால் கணபதியைப் பற்றி தங்காளைப் பற்றிப் பக்கம் பக்கமாக செய்தி போடமுடியாது. மணிக்கணக்கில் வீடியோ காட்டமுடியாது. இப்படி பதிவு போட முடியாது...ம்ஹூம்.

*----*----*----*
ஒரு கவிஞர்/எழுத்தாளர். கனடாவில் வசிப்பவர். தமிழ்நாட்டு தலித் அரசியல்வாதி ஒருவரின் பெயர்கொண்டவர். எனக்குத் தெரிந்த ஒருவருடன் ‘கவிஞர்' ஒருவரை தரங்குறைத்துப் பேசியிருக்கிறார். அவருடைய கவிதையில் இப்படியான பிழைகள் இருக்கின்றன, இன்ன காரணத்தால் அவரது கவிதைகள் இன்றைய சமூகத்துக்கு ஒத்துப்போகாது, அவருடைய தமிழ் அறிவை இன்ன இன்ன துறைகளுக்கும் பரப்பிக்கொள்ளவேண்டும் என்று விமர்சிப்பது வேறு, அவரெல்லாம் வெறும் தமிழ்ப் பண்டிதர்தான். அவருக்கும் கவிதைக்கும் வெகுதூரம் என்று மட்டம்தட்டுவது வேறு. மட்டம் தட்டியவரைப் பற்றி ‘கவிஞரிடம்' கேட்டால் எடுத்ததுக்கெல்லாம் தன்புகழ் பாடும் அவரும் இவரை மட்டம்தட்டுவார் என்பது திண்ணம். வேறுபாதையில் பயணிப்பதால் மட்டும் இன்னொரு படைப்பாளியை மட்டம்தட்டுவதை எப்போதுதான் நிறுத்துவார்களோ.
*----*----*----*

Friday 5 February 2010

மாட்டினார் மானஸ்தன்

நேற்றைக்கு உங்கள் நாட்டுச் சுதந்திர தினமாமே?

ஆமாம் விஜய். அப்படித்தான் சொல்வார்கள். நாங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது கொடியெல்லாம் ஏத்தி (சிங்கக்கொடிதான்) 'நமோ நமோ' எல்லாம் பாடிக் கொண்டாட வைக்கப்பட்டிருக்கிறோம்.

கொண்டாடா வைக்கப்பட்டீர்களா? உங்கள் நாட்டுச் சுதந்திர தினத்தை நீங்களாகவே கொண்டாட வேண்டாமா?

என்ன நீங்கள் ஒன்றும் தெரியாத மாதிரிக் கேட்கிறீர்கள். எங்கள் நாட்டின் வரலாறு தெரியும்தானே உங்களுக்கு. எதற்கு இந்த நமட்டுச் சிரிப்பு?

ஹா..ஹா. எனக்கு நன்றாகத் தெரியும். சும்மா கேட்டேன். இந்த ஆங்கிலேயர்கள் மட்டும் இல்லை என்றால் உங்கள் நாடும் துணைக் கண்டத்துடன் இணைந்து எங்கள் ஆட்சியில் இருந்திருக்கும். உங்களுக்குரிய உரிமைகளைத் தந்து நல்ல வாழ்வு வாழ வழி செய்திருப்போம். இப்போது நீ ஏன் சிரிக்கிறாய்?

சும்மாதான். ஆங்கிலேயர்களா எங்களைத் துணைக்கண்டத்தில் இருந்து பிரித்தார்கள்?

ஆம். அவர்கள்தான். அவர்கள்தான் இந்த ‘ஸ்தான்'களையும் உருவாக்கினார்கள். காந்தாரி பிறந்த காந்தார தேசம் கந்தகார் என்று முசுலிம்களின் தேசமாகி இருக்கிறது. சகுனி பிறந்த தேசம் அது. அதனால்தான் அங்கே இன்றைக்கும் அமைதி நிலவவில்லை. பிரித்தானியர்கள் பிரித்தாண்டிராவிட்டால் இன்றைக்கு எங்கள் தேசம்தான் உலகிலே பெரிய தேசமாக இருந்திருக்கும். முசுலிம்களை ஓட வைத்திருக்கலாம். ஆங்கிலேயர்கள் கெடுத்துவிட்டார்கள்.

இப்போது அது பிரச்சனையில்லை நண்பரே. ஆங்கிலேயர்களா உங்கள் தேசத்தில் இருந்து மாங்காய் வடிவத் தீவான எங்கள் தேசத்தைப் பிரித்தார்கள்?

ஆம். அதிலென்ன சந்தேகம்?

அப்படியானால் இராமாயணம் பச்சைப் புளுகுதானே?

ஙே.....

Saturday 16 January 2010

இந்த வார உலகம்: ஜனவரி 10-ஜனவரி 16, 2010

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

செய்திகள்-பிறந்தகம்
கொழும்பு நியூ மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவந்த தமிழ் அரசியல் கைதிகள் பத்து நாட்களின் பின் மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அவர்களின் மூலம் அரசு வழங்கிய உறுதிமொழியை அடுத்து தமது உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். ‘விசாரணை செய் அல்லது விடுதலை செய்' என்கிற கோஷத்துடன் முன்னெடுக்கப்பட்ட இந்த உண்ணாவிரதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனைய சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக உண்ணாவிரதத்தில் குதிக்கத் தயாராகிவந்த நிலையில், இந்தக் கைதிகளின் பிரச்சினைக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நீதியமைச்சர் மிலிந்த மொறகொடவுக்கு உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து கைதிகள் தமது போராட்டத்தை விலக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இதே வேளை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வாக்காளர்கள் இருவரதும் ஆதரவாளர்கள் மேற்கொள்ளும் தேர்தல் சம்பந்தப்பட்ட வன்முறைகள் அதிகரித்திருப்பதாகவும், தேர்தல் விதிகளுக்கு கட்டுப்பட்டு நடக்க அரசியல் தலைவர்கள் முன்வரவேண்டும் என்றும் தேர்தல் ஆணையர் தயானந்த திசநாயக்க தெரிவித்திருக்கிறார். எல்லா அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்து இது தொடர்பாகப் பேசி, இனிமேல் ஒழுங்காக நடந்துகொள்வதாக அவர்கள் அளித்த வாக்குறுதியின் பேரில்தான் திசநாயக்க இன்னும் தேர்தல் ஆணையாளராக நீடிக்கிறார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. ஏற்கனவே அவரது சொந்த விருப்பத்துக்கு மாறாக நீதிமன்ற ஆணை ஒன்றின் பேரிலேயே தேர்தல் ஆணையாளராக திசநாயக்க நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள்-புகுந்தகம்
தீவிரவாதத்துக்கு எதிரான தீவிரமான போர் என்ற பெயரில் அமெரிக்கா முன்னெடுக்கிற முட்டாள்தனமான போரில் இன்னொரு கனேடியர் காவுகொடுக்கப்பட்டிருக்கிறார். சார்ஜன் ஜோன் போட் (John Faught) என்பவரே இவ்வாறு மரணமடைந்திருக்கிறார். ஆஃப்கான் மக்களுக்கு வணக்கம் தெரிவித்தவேறே நடந்து சென்ற இவர் ஒரு பொறிவெடியில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்திருக்கிறார். ஒன்ராரியோவின் சோல்ற் செயின்-மரி பிரதேசத்தைச் சேர்ந்த இந்த இராணுவ அதிகாரி மேற்படி ஏகாதிபத்திய மற்றும் பிற்போக்குவாத சக்திகளின் முட்டாள்தனமான மோதலில் பலிவாங்கப்பட்ட 139வது இராணுவவீரர் ஆவார்.

மத்திய ரொரொன்ரோ தொகுதி இடைத் தேர்தல் மும்முரமடைந்திருக்கிறது. முன்னை நாள் ஒன்ராரியோ துணை முதல்வர் ஜோர்ஜ் ஸ்மிதர்மான் தன்னுடைய பதவியை ரொரொன்ரோ நகரபிதா பதவியில் போட்டியிடும் பொருட்டு ராஜினாமாச் செய்த காரணத்தால் அந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இதுவரை ஸ்மிதர்மானைத் தாண்டி அந்தத் தொகுதியை லிபரல்களிடமிருந்து கைப்பற்ற முடியாமலிருந்த மற்றக் கட்சிகள் மும்முரமாகப் பிரச்சாரத்தில் இறங்கியிருக்கின்றன. லிபரல்களுக்கு ஸ்மிதர்மானின் இடத்தைத் தக்கவைத்துக்கொள்வதில் பெரும் சிக்கல்கள் இருக்கிறது. காரணம், ஸ்மிதர்மானின் செல்வாக்கு அப்படி.

செய்திகள்-உலகம்
இந்த வாரம் உலகை உலுக்கியது ஹெய்ட்டி பூகம்பம். அரசியல் நிலையின்மையால் கிழிந்து போயிருந்த இந்த நாடு சமீபத்தில்தான் பெரும் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானோரை இழந்தது, லட்சக்கணக்கானோர் அகதிகளானார்கள். அந்த அழிவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துகொண்டிருந்த வேளையில் கடந்த 12ம் திகதி இடம்பெற்ற பாரிய பூகம்பத்தால் பலமாகச் சிதைக்கப்பட்டுவிட்டது. செஞ்சிலுவைச் சங்கம் 45,000-50,000 பேர்வரை மடிந்திருக்கலாம் என்ற கணிப்பை வெளியிட்டபோதும், ஹெய்ட்டி உள்நாட்டு அமைச்சர் ஆகக் குறைந்தது 200,000 பேராவது இறந்துவிட்டார்கள் என்று கணிப்புத் தெரிவித்திருக்கிறார். Moment Magnitude Scale ல் புவி மேற்பரப்பில் 7.0 என்ற சுட்டெண்ணுடன் பதிவான இந்த நிலநடுக்கத்தின் பின்னான முதல் 9 மணித்தியாலங்களில் 4.2 சுட்டெண்ணுக்கு மேற்பட்ட மேலும் 26 அதிர்வுகள் இடம்பெற்றதுதான் அழிவை மேலும் அதிகரித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஐ.நா. மற்றும் பல தன்னார்வ நிறுவனங்கள், உலக நாடுகளில் இருக்கக்கூடிய தொண்டர் அமைப்புகள், பல்வேறு நாட்டு அரசாங்கங்கள் எல்லாம் ஹெய்ட்டிக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கின்றன. மேற்கரைக் கோளத்தில் மிகவும் வறிய நாடு ஹெய்ட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான இயற்கைப் பேரழிவுகளின்போது மனிதம் வெளிப்படுகிறது. ஆனாலும் இயற்கையும் கொன்று நாமும் நம்மைக் கொல்லும் வேகத்தைப் பார்த்தால் 2012 பற்றிய புரளிகளில் உண்மை இருக்குமோ என்று பயப்பட வேண்டியதாய் இருக்கிறது.

வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்
ரோஜேர்ஸ் நிறுவனத்திம் வழங்கிவந்த HTC Dream Smartphone சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன. இதில் GPS பாவிக்கும் வசதி இருக்கிறது. ஆனால், அவ்வாறு GPS பாவிக்கும்போது அவசர உதவிக்கான 911 அழைப்புகளை ஏற்படுத்த முடியாமல் இருக்கிறதாம் HTC Dreamல். அதனால் அவசர அவசரமாக ஒரு குறுஞ்செய்தி மூலம் ஏலவே இந்த வகை smartphoneகளைப் பாவிக்கிற பாவனையாளர்களுக்கு சரியான வழிமுறைகளை அனுப்பி வைத்திருப்பதோடு, HTC Dream விற்பனையையும் நிறுத்தி வைத்திருக்கிறது ரோஜேர்ஸ் நிறுவனம்.

விளையாட்டு
கடந்த பத்தாண்டுகளின் மிகச் சிறந்த வீரராக அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ரிக்கி பொண்டிங் cricinfo இணையத் தளத்தினால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். பல புகழ்பெற்ற வீரர்களின் கடுமையான போட்டியைத் தாண்டி இவருக்கு இந்தக் கௌரவத்தை அந்த இணையத்தளம் கொடுத்திருக்கிறது. அடுத்து வந்த இடங்களை ஜக் கல்லிஸ், அடம் கில்கிறிஸ்ட், முத்தையா முரளிதரன், கிளென் மக்ராத், சச்சின் டெண்டூல்கர், ஷேன் வோர்ண், பிரயன் லாரா, ராகுல் ட்ராவிட், சிவநாராயணன் சந்திரபோல் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். மேற்படி கௌரவத்தைக் கொண்டாடுவதுபோல் பொண்டிங் அடித்தார் பாருங்கள் ஒரு இரட்டைச் சதம், அதுதான் பொண்டிங்.

அலன் போடர், மார்க் டெய்லர், ஸ்டீவ் வோ போன்ற தலைவர்கள் கட்டமைத்த அருமையான அணியில் விளையாடினார் போன்ற காரணங்களையும், நடுவர்கள் எதிரணி வீரர்களுடன் முரண்படுபவர் என்ற பழிச் சொல்லை மீறியும் பொண்டிங் சிறந்த வீரராகத் தெரிவுசெய்யப்படக் காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்பதற்கு இந்த இரட்டைச் சதம் ஒரு நல்ல உதாரணம். அதற்கு முன்னைய போட்டிகளில் அப்படி நாறியவர், அந்த இரட்டைச் சத இன்னிங்ஸ்சை எப்படிக் கட்டியமைத்தார் என்பது masterclass.

சினிமா-பொழுதுபோக்கு-பிற..
தைப் பொங்கலுக்குத் திரைக்குவந்த படங்களில் பலவற்றின் வலையுலக விமர்சனங்கள் அவ்வளவு நன்றாக இல்லை. செல்வராகவனின் 'ஆயிரத்தில் ஒருவன்' பிய்த்து எடுக்கப்படுகிறது. பாண்டியர்களின் நிறம்கொண்ட பார்த்திபனைச் சோழனாக நடிக்க வைத்ததிலேயே சறுக்கிவிட்டார் போலிருக்கிறது. தனுஷ் குட்டியில் கடைசிக் காட்சிகளில் கலக்கியிருக்கிறாராம். விரைவில் டி.வி.டி. வரட்டும். பார்க்கலாம்.

இந்த வருடம் வர இருக்கிற படங்களுக்கான பாடல்கள் நன்றாக இருக்கின்றன. ஏலவே நல்ல முறையில் சந்தைப்படுத்தப்பட்ட ‘ஹோசானா'வோடு ஏனைய பாடல்களிலும் ரஹ்மான் கவர்கிறார். வித்தியாசமான genreல் அமைந்த 'ஆரோமலே' ஆகட்டும், மெல்லிதாகப் பின்னணியில் நாதஸ்வரம் கலந்து படைக்கப்பட்ட 'ஓமனப் பெண்ணே' ஆகட்டும்... ராஜாவுக்குப் பிறகு எல்லைகளைத் தாண்டுபவராக ரஹ்மான் இருக்கிறார் என்பதை மறுக்கமுடியாது.