Friday 5 February 2010

மாட்டினார் மானஸ்தன்

நேற்றைக்கு உங்கள் நாட்டுச் சுதந்திர தினமாமே?

ஆமாம் விஜய். அப்படித்தான் சொல்வார்கள். நாங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது கொடியெல்லாம் ஏத்தி (சிங்கக்கொடிதான்) 'நமோ நமோ' எல்லாம் பாடிக் கொண்டாட வைக்கப்பட்டிருக்கிறோம்.

கொண்டாடா வைக்கப்பட்டீர்களா? உங்கள் நாட்டுச் சுதந்திர தினத்தை நீங்களாகவே கொண்டாட வேண்டாமா?

என்ன நீங்கள் ஒன்றும் தெரியாத மாதிரிக் கேட்கிறீர்கள். எங்கள் நாட்டின் வரலாறு தெரியும்தானே உங்களுக்கு. எதற்கு இந்த நமட்டுச் சிரிப்பு?

ஹா..ஹா. எனக்கு நன்றாகத் தெரியும். சும்மா கேட்டேன். இந்த ஆங்கிலேயர்கள் மட்டும் இல்லை என்றால் உங்கள் நாடும் துணைக் கண்டத்துடன் இணைந்து எங்கள் ஆட்சியில் இருந்திருக்கும். உங்களுக்குரிய உரிமைகளைத் தந்து நல்ல வாழ்வு வாழ வழி செய்திருப்போம். இப்போது நீ ஏன் சிரிக்கிறாய்?

சும்மாதான். ஆங்கிலேயர்களா எங்களைத் துணைக்கண்டத்தில் இருந்து பிரித்தார்கள்?

ஆம். அவர்கள்தான். அவர்கள்தான் இந்த ‘ஸ்தான்'களையும் உருவாக்கினார்கள். காந்தாரி பிறந்த காந்தார தேசம் கந்தகார் என்று முசுலிம்களின் தேசமாகி இருக்கிறது. சகுனி பிறந்த தேசம் அது. அதனால்தான் அங்கே இன்றைக்கும் அமைதி நிலவவில்லை. பிரித்தானியர்கள் பிரித்தாண்டிராவிட்டால் இன்றைக்கு எங்கள் தேசம்தான் உலகிலே பெரிய தேசமாக இருந்திருக்கும். முசுலிம்களை ஓட வைத்திருக்கலாம். ஆங்கிலேயர்கள் கெடுத்துவிட்டார்கள்.

இப்போது அது பிரச்சனையில்லை நண்பரே. ஆங்கிலேயர்களா உங்கள் தேசத்தில் இருந்து மாங்காய் வடிவத் தீவான எங்கள் தேசத்தைப் பிரித்தார்கள்?

ஆம். அதிலென்ன சந்தேகம்?

அப்படியானால் இராமாயணம் பச்சைப் புளுகுதானே?

ஙே.....