Wednesday 30 December 2009

மார்கழித் திங்கள்

நாளுக்கு நாள் மணக்கும் மட்டன், ருசிக்கும் றால், சிவாஸ் ரீகல், ஹெனிக்கன், ஜமேக்கன் ரம், வித விதமாய் சோறு, சலாடுகள், பழக் கலவைகள், ஐஸ் கிரீம் என்று கிட்டத்தட்ட களிப்பாகத் தான் போகிறது இந்த மார்கழி. நத்தார் கொண்டாட்டமும் புதுவருட வரவேற்பும். இதிலெல்லாம் நான் பங்கெடுப்பதில்லை என்று பொய்சொல்ல மனம் ஒப்பாவிட்டாலும், எதையோ ஒன்றை இழந்த மனநிலை எப்போதும் இருந்துகொண்டேயிருக்கிறது. ஊரில் இருந்தபோது மார்கழி ஒவ்வொரு வயதுக்கு ஒவ்வொரு கோலமாய் மகிழ்வித்துப் போனது. அந்த சுகமான அனுபவங்களை மனம் அசைபோட்டுப் பார்க்கும்போதே சில்லிடுகிறது மனம்.

சின்ன வயதில் மார்கழி விடுமுறையில் பகல் முழுதும் பட்டம் பறக்க விடுவதிலேயே கழியும். மார்கழிக்கென்றே இரு வகை வாசனைகள் தனித்துவமானவை. ஒன்று மார்கழி முடிகிற தறுவாயில் கடையிலிருந்து அடுத்த வருடப் பாடசாலைத் தேவைகளுக்காக அப்பா கொண்டுவரும் புதுக் கொப்பிகளைப் பிரிக்கும்போது வரும் காகித வாசனை. அதுவும் அக்காக்கள் வீட்டில் இருந்த வரையில் அப்பா ஐந்தாறு டசின் கொப்பிகளைக் கொண்டுவருவார். அவற்றைப் பிரித்து அட்டைக்கு உறை போடுவோம். அதுவும் ‘ஸ்ரேப்ளர்' அடித்த நாற்பது தாள், அறுபது தாள் கொப்பிகளை அப்பா ‘கொறளோன்' நூல் போட்டுக் குத்திக்கட்டித்தான் உறை போடுவார். மண்ணிறத்தாள், மணிலாத்தாள் இரண்டில் ஏதாவது ஒன்றில் அக்காமார் உறை போட, எனக்கு மட்டும் ‘ஸ்போர்ட்ஸ் ஸ்ரார்' தாங்கி வரும் வண்ண வண்ணப் புகைப்படங்கள் உறைகளாவது பெருமையாயிருக்கும். சில வேளை அதற்கு மேலே மணிலாத் தாள் போட்டாலும், அதைக் கிழித்து படங்களைக் வெளியே காட்டுவதில் ஒரு மிதப்பு இருக்கும்.

இன்னொன்று பட்டத்து நூலின் நைலோன் வாசனை, பட்டத்தாளின் வாசனை, பட்டம் ஒட்டக் கிண்டிய கோதுமைப் பசையின் வாசனை என்று ஒன்றுகட்டி வரும் இன்னொரு வாசனை. எனக்குத் தெரிந்து நான் பிறந்து வளர்ந்த பிரதேசத்தில் இந்த வாசனைகளை அனுபவிக்காமல் யாருடைய குழந்தைப் பருவமும் கடந்திருக்குமா என்பது சந்தேகமே.

எங்கள் மார்கழியின் இன்னொரு அழகான அனுபவம், திருவெம்பாக் காலம். சின்னப் பொடியன்கள் எல்லாம் சங்கு, சேமக்கலம் எல்லாம் எடுத்துக்கொண்டு விடியலிலேயே புறப்பட்டுவிடுவார்கள், துயிலெழுப்ப. பதின்ம வயதுகளுக்கு வரும் முன்னர் அம்மா என்னையும் துயிலெழுப்பி விடுவார். அப்பா கோயிலை என்றைக்கும் மறக்காதவர். சங்கு, சேமக்கலக் கூட்டத்தோடு போகாவிட்டாலும் நடுங்கும் குளிரில் அம்மா வைத்த சுடுதண்ணீரில் குளித்து அப்பாவுடன் கோயில் போவதில் ஒரு ‘த்ரில்' இருந்தது என்றே சொல்லலாம். ‘லிங்கம் பேக்கரி' ராசலிங்கத்தின் மகள்களுக்கும் எனக்கும் அந்தப் பனியில் ஒரு பனிப்போர் நடக்கும், கோயில் மணியை யார் அடிப்பது என்று. அநேகமான தருணங்களில் அப்பா நேரத்துக்கே கோயிலுக்குப் போய்விடுவதால் குலனையில் மணியை நான் குத்தகைக்கு எடுத்துவிடுவேன். ஆனால் குழவியடி அம்மனுக்கு அவர்கள் குறுக்குப் பாதையால் ஓடிவந்து என்னை முந்திவிடுவார்கள். பிரசாதம் மட்டும் தட்டுப்பாடில்லாமல் கிடைப்பதால் அதில் போட்டிபோட மாட்டோம். சிலவேளைகளில் குலனை அய்யரோ, அம்மன் கோயில் அய்யரோ விபூதி, சந்தனம், குங்குமம் அல்லது பூத்தட்டு இதில் ஏதாவது ஒன்றைத் தந்து ‘எல்லாருக்கும் காட்டுங்கோ' என்று சொன்னால் பயங்கரப் பெருமையாக இருக்கும்.

இதே காலங்களில் பனியில் நனைந்து சிரிக்கிற பூக்கள் அழகாயிருக்கும். தொடரும் தை மாசியிலும் பனி பொழிவதால் அந்தக் காலைவேளைகள் மனதை மகிழ்விப்பதாயே இருக்கும். நாள்தோறும் தாயறையில் சாமிப் படங்களுக்கு அப்பா பூப்பறித்து வைப்பார். அதற்காக வளர்க்கப்பட்ட பூமரங்கள் முற்றத்தை அலங்கரித்திருக்கும். மூன்று நிறங்களில் செவ்வரத்தை நின்றது. நந்தியாவெட்டை, நித்தியகல்யாணி, தேமா, மல்லிகை, நீலோற்பலம், ரோசா எல்லாம் நின்றது. அதிலும் இந்த நந்தியாவெட்டையும், நித்தியகல்யாணியும் கோடை காலத்திலேயே பயங்கரக் குளிர்ச்சியாயிருக்கும். பனிக்காலத்தில் செல்லவும் வேண்டுமா? அந்தக் குளிர்மைக்காகவே அவற்றில் சிலவற்றை எட்டிப் பறிப்பதுண்டு.

வரப்போகிற புதிய ஆண்டை வரவேற்பதற்குரிய ஆயத்தமாகவே ஊரில் மார்கழி மாசம் இருக்கும். தை பிறக்கும்போது புது வகுப்புக்குப் போகிற ஆவல் தருகிற அடி வயிற்று அவஸ்தை தவிர, புதுசாகப் பிறந்ததுபோல் மனம் குதூகலிக்கும். புதிதாய்ப் பிறந்த வருஷத்திலும் முதல் இரண்டு மாதங்களுக்காவது தொடர்கிற அந்தப் பனிநிறைந்த காலைகள், பள்ளிசெல்லும்போது கடந்து செல்லும் தோட்டவெளிகள், அந்த வெளிகளிலிருந்து வரும் இனம்புரியாத வாசம், மத்தியானங்களில் எங்களுக்குப் பட்டம்விட வசதியாய் வீசும் காற்று, மறக்க முடியவில்லை மார்கழித் திங்களை.

வாழ்க்கை எப்படியெல்லாம் எங்களைப் புரட்டிப்போட்டுவிட்டது. பட்டம்விட்ட, காலையில் அப்பாவின் சைக்கிளில் முன்புறம் அமர்ந்து கோயில் போன, மணி அடித்த சிறுவன், இன்றைக்கு அதே மார்கழித் திங்கள் அதிகாலையில் பெயர்கூடத் தெரியாத அயலவனுக்கு வணக்கம் சொல்லி கொட்டும் ‘பனி' துடைக்கிறேன். சங்கும், சேமக்கலமுமாய் திரிந்த யாரும் இன்றைக்கு ஊரில் இல்லை என்று கேள்வி. மணி அடிக்கப் போட்டி போட்ட பெட்டைகளில் ஒருத்தி கல்யாணத்துக்கு முன் கர்ப்பமாகி, அவளது அம்மாவுக்கு சமாந்தரமாக ஒரு பிள்ளை பெற்று, அந்தப் பிள்ளையின் தகப்பனை ‘தேசத்துரோக' முத்திரைக்குப் பலி கொடுத்து, இடுப்பில் பிள்ளையோடும் கிழிந்த துணியோடும் அலைந்துகொண்டிருந்தாள் (அலைந்துகொண்டிருக்கிறாள் என்று எழுதமுடியவில்லை). சுவாமி காவுவதற்கே இளந்தாரிகள் இல்லையாம், மணியடிக்க சண்டை யார் போடப்போகிறார்கள்?

இருந்தும் சில விஷயங்கள் மாறவில்லை. அப்பா இன்றைக்கும் கோயிலுக்குப் போய்க்கொண்டிருக்கிறார், திருவெம்பாவைக்கு, அதிகாலையில் எழுந்து. இப்போதும் தீவிரமாகக் கடவுளை நம்புகிறார். இன்றைக்கும் வீட்டின்முன்னால் எல்லாப் பூமரங்களும் நிற்கும் என்று நினைக்கிறேன். சைக்கிளில் தாவி ஏறும்போது எட்டி ஒரு பூவைப் பறித்துக் கொண்டுபோகிற வழக்கம் தம்பியிடம் இருக்கிறதா தெரியவில்லை. வெளிநாட்டு வாழ்க்கை ஒரு வகையில் சொர்க்கம்தான். இருந்தும், சொர்க்கமே என்றாலும்......

வெடியரசன்-திருட்டுத்தனம்-தரமான இலக்கியம்

1.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற கலாசாரச் சீரழிவுகளைத் தட்டிக் கேட்கப் புறப்பட்டிருக்கும் மாணவர் படையின் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள், வெடியரசன் என்னும் அவர்களது இணையத்தளத்தில். உங்கள் சமூகத்தில் நடக்கும் கலாசாரச் சீரழிவுகளைத் தட்டிக் கேளுங்கள், இல்லையென்றால் எங்களிடம் சொல்லுங்கள் என்ற கோஷமும் இருக்கிறது. (இவர்களைவிடப் பலம்வாய்ந்த அமைப்பு ஒன்று எனது பாடசாலைக் காலத்தில் போட்ட கோஷமிது). இந்த அமைப்பினரின் முதல் நடவடிக்கையாக முறைகேடாக நடந்துகொள்ளும் ஆசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு எதிரான கண்டனங்கள் அமைந்திருக்கின்றன. அப்படியாக முதலாவதாக முகமூடி கிழிக்கப்படுபவர் கொக்குவில் இந்துக் கல்லூரி உப அதிபர் திரு.மு.வேலாயுதபிள்ளை என்பவர். அவர் பற்றிய அறிக்கை ஒன்றை மாணவர் படை வெளியிட்டிருக்கிறது.

வேலாயுதபிள்ளை மீதான குற்றச்சாட்டுகள் எவ்வளவு உண்மையானவை என்பது உறுதிப்படுத்தப்பட முடியவில்லை. அதேவேளை ‘அங்க இப்பிடியாம், அவர் அப்பிடியாம்' என்கிற கதையோடு மட்டும் நின்றுவிடாமல் ‘இன்னார் இன்ன தவறு செய்கிறார்' என்று நேரடியாக வெளிக்கொணர்வது நல்ல முயற்சியே. ஆனாலும், அதே நபரை உடல் ரீதியாகத் துன்பம் செய்யாமல் வேறு வழிகளில் திருத்த முயல்வது நலம் என்பது என்னுடைய அபிப்பிராயம். இந்த எச்சரிக்கைக் கடிதம் அந்த நம்பிக்கையைத் தரவில்லை என்பதையும் இங்கு குறித்துச் சொல்லியாகவேண்டும் (சிறு தண்டனைக்குள்ளாகிறார்?????).

இப்படியான போராட்டங்களில் மாணவர்கள் இறங்குவது வரவேற்கத்தக்கதே. இவர்களின் கலாசாரம் மீதான அக்கறை நவம்பர் 16 2005 தினேஷ் என்ற இளைஞனுக்கு நடந்த கொடூரம் போன்ற மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கு வழிகோலக்கூடாது. ‘பெண்களைத் தெய்வங்களாக மதிக்கும் யாழ்ப்பாணக் கலாசாரம்' என்கிற போலிப் போர்வையிலிருந்து இவர்கள் வெளிவந்து, பெண்களுக்கான சம உரிமை தொடர்பான போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும். பெண்களை பாலியல் குறியீடுகளுடன் கிண்டலடிக்கும் நண்பனைத் தட்டிக் கேட்க வேண்டும். சாதீயத்துக்கு எதிரான முழுமூச்சிலான முன்னெடுப்புகள் வேண்டும். இந்தக் குழுமங்களில் பெண்களுக்கும் முடிவெடுக்கும் உரிமை வழங்கப்பட்டு அவர்களும் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும். தனிப்பட்ட பகைமைகளைத் தீர்க்கும் வழியாக இந்த மாணவர்படை பயன்படுத்தப்படக் கூடாது. தண்டனை என்பது ‘உடல்ரீதியான தாக்குதல்' என்ற வடிவத்தை ஒருபோதும் எடுக்கக்கூடாது. இவர்களுக்கான மக்கள் ஆதரவு என்பது இனிமேல் இவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே இருக்கும். பல்கலைக் கழகத்தைச் சுற்றியிருக்கும் ‘பியர்' கடைகளை மூட முடியாமல் கள்ளச் சாராய ஒழிப்பைக் கைவிட்ட எம்.பி. போல் இவர்களும் ஆகாமலிருக்க வேண்டும் என்பது இவர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள்.

2.
சென்ற வார இறுதியில் விஜய் ரி.வி.யில் அனுஹாசனோடு ஆண்ட்ரியா மற்றும் ஜி.வி. பிரகாஷ்குமார் கோப்பி குடித்தார்கள். மாலை நேரம் வந்தால் பாடலில் ‘காதல் இங்கே ஓய்ந்தது?' என்கிற வரியை ‘காடல் என்கே வாய்ந்தது' என்பது மாதிரி பிழை பிழையாகப் பாடி ஒரு நாள் முழுக்க ஒலிப்பதிவு செய்தோம் என்று பெருமையாகச் சொன்னார் ஆண்ட்ரியா, அதற்கு ஒத்து ஊதினார் ஜி.வி. கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம் இருவரிடமும் இருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஓரளவுக்காவது செயற்கைத்தனம் இல்லாமல் பேசியது Season-1 ல் வந்த மணிவண்ணனும், இரண்டொருமுறை வந்த ஜெயராமும் மட்டுமே. மற்றபடி மேல்தட்டு மக்களுக்கான நுனி நாக்கு ஆங்கில நிகழ்ச்சியாகவே இது தெரிகிறது. ஜி.வி., ஆண்ட்ரியா பங்குகொண்ட நிகழ்ச்சியை முழுமையாகப் பார்த்தது 'ஆயிரத்தில் ஒருவன்' இருவருக்கும் தொடர்புடைய படம் என்பதால். அங்கேதான் ஜி.வி. ஒரு பெரிய குண்டைத் தூக்கிப்போட்டார்.

‘உன்மேல ஆசதான்' பாடல் ஏலவே யுவன் சங்கர் ராஜா போட்டுக் கொடுத்த மெட்டு என்பது கிட்டத்தட்ட குழந்தைக்கும் தெரியும். செல்வராகவனோடு சண்டை போட்ட பின் யுவன் சங்கர் ராஜா அந்த மெட்டை சர்வம் படத்தில் ‘அடடா வா அசத்தலாம்' என்று பாவித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். ஜி.வி. சொல்கிறார் ‘உன்மேல ஆசதான்' பாடலுக்கான காட்சிகளை ஏலவே செல்வராகவன் படமாக்கியிருந்தாராம். அந்தக் காட்சிகளுக்கு தான் மூன்று மணிநேரத்தில் இசையமைத்தாராம். யுவன் சங்கர் ராஜா சுட்டுத்தான் பாட்டுப் போடுகிறார், ஜி.வி. சுட்டால் என்ன?, அல்லது இருவரும் ஒரே loops பயன்படுத்தியிருக்கலாம் போன்ற சப்பைக் கட்டுகள் இங்கே எடுபடாது. ஒரே Loops பயன்பட்டிருந்தால் ஒலிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்திருக்கும், மெட்டுமா? ‘ஏற்கனவே யுவன் போட்ட மெட்டுக்கு செல்வா காட்சிகளை எடுத்து வைத்திருந்தார். பின்னர் அதே மெட்டை வைத்து முழுமையாக வேறொரு பாடலை உருவாக்கினேன்' என்று சொல்லக்கூடிய குறைந்தபட்ச நேர்மைகூட தமிழ் சினிமாக் கலைஞர்களிடம் இல்லை.

3.
சமீபத்தில் அரைவாசி வாசித்து முடித்த ஒரு புத்தகம் ஜே.ஜே. சில குறிப்புகள். பலரால் கொண்டாடப்படும் இந்தப் புத்தகம் சராசரி வாசகனான எனக்கு புரிவது மிகவும் கடினமாக இருக்கிறது. இதை மூடிவைத்துவிட்டு கொற்றவையைத் திறந்தாலும்கூட, பயங்கரமான வாசிப்பனுபவமும் இலக்கிய ரசனையும் உள்ளவர்களால் மட்டுமே இலகுவாக கிரகிக்ககூடிய ஒரு படைப்பாகவே இருக்கிறது (ஜே.ஜே. வை விட இலகுவான நடை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்). அதாவது முற்போக்கு, பிற்போக்கு இலக்கியங்கள் குறித்த குழுமத்தைச் சேர்ந்தவர்களால் மட்டுமே கிரகிக்ககூடியதாக இருப்பதுதான் கொடுமை. அதைப் பிழையென்று சொல்லமுடியாது. எல்லோருக்கும் விளங்கத்தக்கதாக படைப்புகள் வந்தாகவேண்டும் என்று யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. சிலவேளை இன்னுமொரு நான்கு ஐந்து வருடங்களின் பின் இந்தப் புத்தகங்கள் மீதான என்னுடைய கண்ணோட்டம் வேறாக இருக்கலாம். அதற்காக என்னால் புரிந்து கொள்ளமுடியாத புத்தகம் ஒன்றை சிலாகிக்க நான் தயாராயில்லை. பேசாமல் குருநாதரின் புத்தகங்களை வாசித்துச் சிரித்துவிட்டுப் போகலாம்.

இப்போதைக்குத் தரமான இலக்கியவாதிகளாக கணிக்கப்படுபவர்களுக்கு இரு குணவியல்புகள் இருக்கின்றன. ஒன்று, பெரும்பாலானவர்களுக்குப் புரிபடாமல் எழுதுவது. மற்றது தன்னைத் தவிர எழுதுபவன் எல்லோரையும் மட்டமான மொழியில் திட்டுவது.

நன்றி: நண்பன் செல்லம்மா. வெடியரசன் பற்றிய தகவல்களைப் பரிமாறிக்கொண்ட காரணத்துக்காக.

Saturday 26 December 2009

நான் பார்க்கும் உலகம்: டிசம்பர் 20-டிசம்பர் 26, 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

செய்திகள்-பிறந்தகம்
பிரதான எதிர்க்கட்சிகளின் தலைமை வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றன. ஜனாதிபதி ராஜபக்சவுக்கா அல்லது சரத் பொன்சேகாவுக்கா ஆதரவு வழங்குவது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் ஆலோசனை செய்துகொண்டே இருக்கிறது. இரு பகுதியினருடனும் பேரம் பேசிக்கொண்டு இருப்பதாகத் தெரிகிறது. தேர்தலைப் புறக்கணிக்கப் போவதில்லை, சிவாஜிலிங்கத்துக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என்கிற இரண்டு முடிவான முடிவுகளை மட்டும் எடுத்திருக்கிறார்கள் இதுவரைக்கும். யாருக்கு ஆதரவளிப்பார்கள் என்று தேர்தலுக்கு முன்னரே முடிவெடுப்பார்கள் என்பது மக்களின் நம்பிக்கை.

இதேவேளை, புலிகளின் முக்கிய தலைவர்களையும் குடும்பங்களையும் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின் பேரிலேயே சுட்டுக் கொன்றதாக சரத் பொன்சேகா கூறிய குற்றச்சாட்டு அபாண்டமானது என்றும் அது தொடர்பாக அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் இலங்கை அரசு அறிவித்திருக்கிறது. அதற்குப் பதிலளித்து சேறு பூசப்பட்டாலும் நாட்டைத் தூய்மைப்படுத்த நான் தயார் என்று சொல்லியிருக்கிறார் சரத். பிரச்சாரக் களத்தில் இரு முன்னாள் நாயகர்கள் ஒருவரை ஒருவர் வில்லன்களாக்கி ஆடும் இந்த ஆட்டத்தில் பகடைக்காய்கள் இந்தமுறையும் மக்களே.

செய்திகள்-புகுந்தகம்
உயர்ந்த மாடிக் குடியிருப்பு ஒன்றில் திருத்த வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நான்கு திருத்தப் பணியாளர்கள், அவர்களைத் தாங்கியிருந்த தளம் உடைந்து விழுந்ததில் பரிதாபகரமாக உயிரிழந்திருக்கிறார்கள். நத்தாருக்கு முதல் நாள் மாலை 2757 கிப்ளிங் வீதியில் அமைந்திருந்த மேற்படி கட்டிடத்தின் உப்பரிகைகளில் இருந்த சிறிய பாதிப்புக்களைச் சரிசெய்யும் வேலையில் ஈடுபட்டிருந்த ஐந்து பேர் கொண்ட குழுமம் 13 வது மாடியில் வேலை செய்துகொண்டிருக்கும்போது அவர்களைத் தாங்கியிருந்த தளம் உடைந்துபோக ஐந்து பேரும் கீழே விழுந்திருக்கிறார்கள். நால்வர் உடனேயே உயிரிழந்துபோக மற்றவர் நிலமை இன்னும் கவலைக்கிடமாகவே இருக்கிறதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெயர்கள் வெளிவிடப்படாவிட்டாலும், அவர்கள் அனைவரும் சமீபத்தில் கனடாவுக்குக் குடிவந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி நபர்கள் கனடாவுக்கு சமீபத்தில் குடிவந்தவர்கள் என்றதும் கனடாவிற்கு குடிவரும் பலர் எழுப்பும் குற்றச்சாட்டு ஒன்று நினைவுக்கு வருகிறது. வெளிநாடுகளில் அவர்கள் பெற்ற கல்வி இங்கு பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை. அவர்களின் படிப்புகளுக்கு இலகுவில் இங்கே வேலை கிடைப்பதில்லை. இங்கே அவர்களை மேம்படுத்திக் கொண்டாலும் மிகவும் கடின முயற்சியின் பின்னரே வேலை கிடைக்கிறது. இங்கே பிறந்து வளர்ந்தவர்களைவிட, ஒரே தரத்தில் வேலை செய்தாலும், சராசரியாக குறைவான சம்பளமே பெறுகிறார்கள். இப்படிக் குடிபெயர்ந்து வந்தவர்கள் யாரும் நன்றாக வாழ்ந்தால் அதற்கு ஒரே காரணம், இரத்தம் சுண்டும் உழைப்பு. மற்றபடி இப்படிக் குடிவந்து யாரும் சொகுசாக வாழ்ந்ததில்லை.

செய்திகள்-உலகம்
தொடர்ந்து மூன்றாவது வாரமாகவும் தெலுங்கானா பற்றிய செய்திகளைப் பகிரவேண்டி இருக்கிறது. தனித் தெலுங்கானாக் கோரிக்கை தொடர்பான வன்முறைகள் ஆந்திர மாநிலத்தில் அதிகரித்திருக்கின்றன. திங்கட்கிழமைக்கு முன்னர் தனித் தெலுங்கானா தொடர்பான தீர்வு ஒன்றை இந்திய நடுவண் அரசு அறிவிக்காவிட்டால் ஆந்திராவே ஸ்தம்பிக்கும் வண்ணம் (புதிதாக என்ன ஸ்தம்பிப்பு??) கடையடைப்பு நடைபெறும் என்று தெலுங்கானா போராட்ட கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்திருக்கிறது. ஏற்கனவே தெலுங்கானாவைச் சேர்ந்த அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் விலகி, ஆந்திராவில் மிகப் பாரிய அரசியல் நெருக்கடியையும், வன்முறைகளையும் தோற்றுவித்திருக்கும் நிலையில், இது தொடர்பாக விரைவில் ஒரு முடிவை முன்வைப்போம் என்று மன்மோகன் சிங் அறிவித்திருக்கிறார். தெலுங்கானா கொடுக்காவிட்டால் இவர்கள், கொடுத்தால் ராயல சீமா மற்றும் கடலோர ஆந்திரா மக்கள் என்று யாராவது வன்முறையில் ஈடுபடத்தான் போகிறார்கள். நடுவண் அரசின் நிலமை கவலைக்கிடமே.

இந்தியப் பெருங்கடல் நாடுகளில் பல சுனாமிப் பேரனர்த்தத்தின் ஐந்தாவது ஆண்டு நினைவுதினத்தை சனிக்கிழமை (டிசம்பர் 26) அனுஷ்டிக்கின்றன. கிட்டத்தட்ட 250,000 பேரைப் பலிகொண்ட இந்த இயற்கைப் பேரனர்த்தத்தில் பல உறவுகள் அழிந்து போயின. இருந்தும் சில உறவுகள் மலர்ந்தன. அப்படி ஒரு மலர்வு பற்றிய அல்-ஜசீராவின் காணொளி கீழே. என்ன செய்வது, மனித மனங்களின் அடியாழத்தில் புதைக்கப்பட்ட மனிதத்தைத் தோண்டி எடுக்கவாவது சில அனர்த்தங்கள் தேவையாய் இருக்கிறது.



வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்
சென்ற வாரம்தான் Blackberry தயாரிப்பாளர்கள் RIM பற்றிய நேர்மறைச் செய்தி ஒன்றைப் பகிர்ந்திருந்தேன். ஆனால் இந்த வாரம் அவர்களுக்கு நல்ல வாரமாக அமையவில்லை. இந்த வாரத்தில் மட்டும் இரண்டுதடவை இவர்களின் சேவைகளில் தடங்கல் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாகச் சமூகக் குழுமங்கள் அனைத்திலும் இவர்களுக்கு எதிரான அதிருப்தி அலை தோன்றியிருக்கிறது. இந்த வாரம் இவர்களின் பங்குகளின் விலைகள்கூட சிறிது சரிவுக்குள்ளானது. மென்பொருள் மேம்படுத்தலே இந்த சேவைத் தடங்கலுக்குக் காரணம் என RIM அறிவித்திருக்கிறது. எந்தத் தொழில்நுட்பம் RIM ஐ உயரத்துக்கு இழுத்துச் சென்றதோ, அதே தொழில்நுட்பம் இந்தவாரம் காலை வாரியிருக்கிறது. Appl i-Phone களத்தில் இருப்பதால் RIM உயர்மட்ட நிர்வாகத்துக்கு இது சோதனை காலம் என்றே சொல்லலாம்.

ரொரன்ரோ பங்குச்சந்தை நத்தார் வாரத்தில் நல்ல போக்கைக் காட்டியிருக்கிறது. சக்தி வழங்கல் துறைப் பங்குகளும், நிதித்துறைப் பங்குகளும் நல்ல விலைகளை எட்டியதும் இதற்குரிய காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. மேலும் நத்தார் காலப் பகுதியில் வழமை போல கொஞ்சமாவது அதிகரித்திருக்கும் நுகர்வோர் கொள்வனவும் இதற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

விளையாட்டு
இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா கைப்பற்றி இருக்கிறது, இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கத் தக்கதாக. மூன்றாவது போட்டி 21ம் திகதி கட்டக்கில் நடந்த போது ஒரு கட்டத்தில் 22 ஓவர்களில் 165-2 என்ற வலுவான நிலையில் இருந்த ஜடேஜாவின் பந்துவீச்சில் இலங்கை பரிதாபமாக 239க்கு சுருள, பொறுப்பாக 96 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் சச்சின் பெற்று இந்தியாவை 2-1 என்று முன்னணிப்படுத்தினார். 24ம் திகதி கொல்கத்தாவில் நடந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று சங்கா துடுப்பெடுத்தாடிய போதே சேவாக் சொன்னபடி தரங்கா (118), சங்கா (60) மற்றும் பின்வரிசை வீரர்களின் அதிரடி மூலம் இலங்கை பெற்ற 315 ஓட்டங்களை, சச்சின் (8), சேவாக் (10) என்று ஆட்டமிழந்த போதும் காம்பிர் (150*), கோலி (107) அபார ஆட்டத்தால் இலகுவாகக் கடந்து இந்தியா தொடரை வென்றது. இலங்கை ரசிகர்கள் சிலரால் crapinfo என்றழைக்கப்படும் cricinfo இந்தப் போட்டிக்காக எழுதிய match previewஐ சங்கா வாசித்திருக்கலாம். இலங்கையுடன் 2005 ம் ஆண்டுக்குப் பின்னர் விளையாடிய ஐந்து பரஸ்பர போட்டித் தொடர்களும் இந்தியா வசம்.

இலங்கையின் நட்சத்திர அதிரடி வீரர் சனத் ஜயசூரிய டிசம்பர் 26, 2009 சனிக்கிழமையுடன் சர்வதேசக் கிரிக்கெட் வாழ்வில் 20 வருடங்களைப் பூர்த்தி செய்திருக்கிறார். 1992 உலகக் கோப்பையில் நியூசிலாந்தின் மார்க் கிரேட்பட்ச் ஆரம்பித்து வைத்த முதல் 15 ஓவர்களில் பேயாட்டம் என்கிற சித்தாந்தத்துக்கு முறையான வடிவத்தைக் கொடுத்தவர் என்கிற ரீதியில் சனத்தின் இடம் கிரிக்கெட் வரலாற்றுப் பக்கங்களில் என்றும் பொறிக்கப்பட்டு இருக்கும்.

சினிமா-பொழுதுபோக்கு-பிற..
நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்கள் வழமை போலவே நடக்கின்றன. புலம் பெயர் தமிழர்கள் ‘போராட்டம்' நிகழ்த்திய களைப்பில் புட்டிகளைத் திறந்து களைப்பாறுகிறார்கள். ரொரன்ரோவுக்கு இந்த முறை 'வெள்ளை நத்தார்' இல்லை. அதாவது, பனிப்பொழிவு இல்லை. அத்திலாந்திக் கனடாவும், அமெரிக்காவின் சில பகுதிகளும் வெள்ளைக் நத்தார் கொண்டாடுகிறார்கள். பின்னே, 25-60 செ.மீ வரையிலான பனிப்பொழிவு இருந்தால் வெள்ளை நத்தார்தானே. இந்தக் குளிரிலும் எப்படித்தான் கொண்டாடுகிறார்களோ!!!

இதே வேளை வத்திக்கான் சிறப்புப் பிரார்த்தனையில் போப்பாண்டவரை ஒரு மன நலம் குன்றிய பெண் தள்ளி விழுத்தியது பரபரப்பாகிவிட்டது. 82 வயதான புனித 16ம் பெனடிக்ட் ஏற்கனவே ஒரு முறை கீழே விழுந்து கால் முறிவுக்குள்ளாகி இருந்தவர். இந்த முறை விழுந்த போதும் அவருக்கு முறிவு ஏதும் ஏற்படவில்லையாம். ஆனால் அவருக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 87 வயதான ரோஜர் கிட்கரே என்கிற பாதிரி விழுந்து காலை முறித்துக்கொண்டாராம்.



எப்புடீ??........
கிளென் மெக்ராத் மீது கிரிக்கெட் உலகம் ஏன் மரியாதை வைத்திருக்கிறது என்று தெரிய வேண்டுமா? இங்கே 'க்ளிக்'கி வரும் காணொளியின் முதல் மூன்று நிமிடங்களை வர்ணனையாளர்கள் மற்றும் ஷேன் வோர்ன், மெக்ராத் போன்றவர்களின் சம்பாஷணையோடு கேட்டுப்பாருங்கள். (காணொளி நன்றி: www.desipad.com)

Friday 25 December 2009

விடுமுறைக்காலம்- இரட்டை நீதி

நத்தார், புதுவருட விடுமுறை ஆரம்பமாகிவிட்டது. சொந்தங்களின் வீடுகளில் கொண்டாட்டங்களும் ஆரம்பமாகிவிட்டன. இந்த விடுமுறைக்காலத்தில் எப்படி ‘வெள்ளை'கள் குதூகலமாக இருக்கிறார்களோ, அப்படி நாங்களும் இருக்க வேண்டும் என்கிற எங்களவர்களின் தீராக் காதல் ஆச்சரியமளிக்கிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டினரும் ஒரு ஒன்றுகூடல் வைத்து, ஒன்றாகத் தாகசாந்தி செய்யாவிட்டால் உலகமே கவிழ்ந்துபோய்விடும் என்பதுபோல், இந்த விடுமுறைக்காலம் முழுக்க ஏற்கனவே ஒன்றுகூடல் நாட்களால் நிரம்பிப்போய் இருக்கிறது. இதிலும் சந்தித்த முகங்களை மீண்டும் மீண்டும் சந்தித்து, ஒரே விஷயங்களைத் திரும்பத் திரும்ப உரையாடிக்கொண்டிருப்பதென்பது ஆயாசமானதொன்றாகவே இருக்கிறது.

சொந்தங்கள் அழைக்கிறபோது போகாமல் இருந்துவிடுவதிலும் பயங்கரமான ஆபத்துகள் இருக்கின்றன. இலகுவில் எங்கள் மீதான முத்திரைகள் குத்தப்பட்டுவிடும். 'தாகசாந்தி' செய்தபடி பிரபாகரன் தொடக்கம் வேட்டைக்காரன் வரை யாரையும் காலுக்கு மேல் கால் போட்டபடி விமர்சிக்கும் சிங்கங்கள் மத்தியில் போயிருந்து ஆகக்குறைந்தது ‘ஆமாம் சாமி' போடாவிட்டால் (அதற்கு மேலேயும் போய் இவயளின்ர பழைய ‘வரலாறுகளை' கிளறுவது எனக்கு சுவாரஷ்யமாக இருக்கும் ஒரு விளையாட்டு), உங்களுக்கு ‘ஆட்களுடன் பழகத் தெரியாதவன்', ‘சபை நாகரிகம் தெரியாதவன்' போன்ற முத்திரைகளைக் கூப்பிட்டுக் கூப்பிட்டு முகத்தில் குத்திவிடுவார்கள். இத்தனைக்கும் முத்திரை குத்தும் சிங்கங்களில் சிலவற்றுக்கு தன்னுடைய சொந்த விஷயத்துக்காக வங்கிக்குப் போய்வருகிற கெட்டித்தனம்கூட இருப்பதில்லை, குடிகாரர்களுடன் சேர்ந்து கூத்தடிக்காத காரணத்துக்காக எங்களுக்கு ‘ஆட்களுடன் பழகத் தெரியாததுகள்' என்கிற முத்திரையை மட்டும் ஏகபோக உரிமை எடுத்துக்கொண்டு வழங்கிவிடுவார்கள்.

இதில் பெரிய தலையிடி, அரசியல். இலங்கை அரசைத் தோற்கடிக்க பிரபாகரன் எப்படியெல்லாம் சிந்தித்தாரோ, பிரபாகரனை வீழ்த்த அரசுகள் எப்படியெல்லாம் சிந்தித்தனவோ, அதையெல்லாம் விட மேதாவித்தனமாக சிந்தித்துக் கருத்துக்களை உதிர்ப்பார்கள். ‘முக்கால்கள்' செய்யும் அட்டகாசத்தை விமர்சித்து, அமெரிக்கர்களின் பராக்கிரமத்தை சிலாகிப்பார்கள். ஏதாவது நாங்கள் எங்கள் மனதில் படுவதைச் சொல்ல நினைத்து வாயைத் திறந்தால், ‘அது அவர் அப்பிடி யோசிக்கேல்லை. அவை இதால போய் அதால வந்து இங்கை அடிச்சு அங்கை உடச்சு அதைப் பிடிச்சு இதிலை கொடிநடத்தான் நினைச்சவை' என்று மற்றவர்களின் மனமே தாங்கள்தான் என்றமாதிரி அடித்துவிடுவார்கள் பாருங்கள், காதிலிருந்து ரத்தம் ஒழுகும்.

இப்படி ரத்தம் ஒழுகாமலிருக்க ஒரு விளையாட்டும் செய்யலாம். இவர்களின் இளமைக்காலத்தைக் கிளறிவிட்டு நக்கல் அடிக்கலாம். அப்படிச் செய்வதும் வினையாகிவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால் ஒருமுறை இப்படிக் கிளறிவிட சம்பாஷணை ‘அந்தக் காலத்தில உன்ர பெரியப்பர், என்ர சின்னமாவை லைன் போட்டவர் தெரியுமே' என்கிற ரீதிக்குப் போய்விட்டது. இன்னும் கொஞ்சம் போனால் குடும்பங்கள் குலையக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படும்போது, கதையை வேறுதிசைக்கு மாற்றக்கூடிய கெட்டித்தனம் இருந்தால், இப்படியான சபைகளில் சுவாரஷ்யமாக ஏதாவது கொஞ்சம் தேற்றலாம்.
*----*----*----*

கடந்த சில நாட்களில் மட்டும் இரட்டை நீதி என்பது எப்படியெல்லாம் இன்றைய சூழ்நிலையில் இருக்கிறது என்பதற்கு ஆதாரமாக இரண்டு சின்ன நிகழ்வுகள் அமைந்து மனத்தைக் குடைந்தன. முதலாவது எம் நாடு சம்பந்தப்பட்டது. மீண்டும் நேற்று நடந்த ஒரு ஒன்றுகூடலில் நினைவூட்டினார்கள். மற்றது இந்தியாவில் நடந்த வழக்கு சம்பந்தப்பட்டது.

முதல் சம்பவம், பிரபாகரனின் மகள் துவாரகாவின் உடல் என்று வெளியிடப்பட்ட உடல் சம்பந்தமானது. நேற்றைய ஒன்றுகூடலில் போதையில் ஒருவர் பெருமையாகச் சொன்னார் ‘அந்த முழுப்படத்தைப் பார்க்க சகிக்காது. மக்கள் பொங்கிவிடுவார்கள் என்பதற்காக தமிழ் நெற்றில் தணிக்கை செய்து அந்தப் படத்தை வெளியிட்டார்கள்' என்று. அதாவது துவாரகாவின் நிர்வாணம் மறைக்கப்பட்டது அவருக்குப் பெருமை. எனக்கும் முதன் முதலாக பச்சாதாபம் தேடுவதற்காக எங்கள் குலப் பெண்களின் முழு நிர்வாணமாக்கப்பட்ட உடல்களைக் காட்டாமல் விட்டார்களே என்று சந்தோஷம்தான். ஆனால், இதற்கு முன்னரும் இராணுவம் கொன்ற தமிழச்சிகளின் படங்கள் மட்டுமல்ல, காணொளிகளும் கிடைக்கப்பெற்றபோது, இப்படித் தணிக்கை செய்யப்படவேண்டும் என்று நாம் யாராவது சிந்தித்தோமா. பிரபாகரனின் மகளும் எங்கோ ஒரு மூலையில் அழுதுகொண்டிருக்கும் முகம்தெரியாத விநாயகமூர்த்தியினதும், ராஜேஸ்வாரனதும், சுப்பிரமணியத்தினதும் மகளும் ஒரே நோக்கத்துக்காக, ஒரே மூலத்தால் கொல்லப்பட்டவர்கள். பிரபாகரனின் மகள் என்பதற்காகத் துவாரகாவுக்குக் கொடுக்கப்பட்ட புனிதத்துவம், ஏன் சிந்துஜா, மாலினி, ஜெயந்திக்கும் ஏன் கொடுக்கப்படவில்லை???? இங்கு வெளிப்படுகிறது ஒரு இரட்டை நீதி.

இரண்டாவது இந்திய ஊடகங்களில் இப்போது பரபரப்பாகப் பேசப்படும் ருச்சிகா கிர்கோத்திரா என்கிற பெண்ணின் மீது பாலியல் வன்முறை செய்த ரத்தோர் என்பவருக்கு, 19 வருடங்களின் பின்னர் ஆறுமாத சிறையும், ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து, உடனே பெயிலும் கொடுத்த ‘நீதிமான்கள்' பற்றியது. 14 வயதுப் பெண்ணைக் கற்பழித்தவன், 19 வருடம் சுதந்திரமாக உலவியது அபத்தம் என்றால், அதைவிட அபத்தம் கொடுக்கப்பட்ட தீர்ப்பு. இந்தத் தீர்ப்புக்குப் போய் 19 வருடம் எடுத்துக்கொண்டார்கள் என்பது, அந்தக் வன்புணர்வைவிடக் கேவலமான செயல். இங்கும், அதிகாரத்தில் இருந்த வன்புணர்வாளனுக்கு தண்டனை இல்லை. 19 வருடங்கள் நீதியை நம்பியவனுக்கு ஒன்றுமில்லை. இங்கும் பல்லிளிக்கிறது இரட்டை நீதி.

Saturday 19 December 2009

நான் பார்க்கும் உலகம்: டிசம்பர் 13-டிசம்பர் 19, 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

அரசியல்-பிறந்தகம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவினுடையது என்று கூறப்படும் உடலம் ஒன்றின் புகைப்படங்கள் இந்தவாரம் வெளியாகியிருக்கின்றன. வழமைபோலவே நிர்வாணப்படுத்தப்பட்டு சுடப்பட்டு வெளியிடப்பட்ட இந்தப் புகைப்படங்களில் இருப்பது துவாரகாவிப் உடலம்தான் என்று ஊடகங்கள் சொல்ல, அது துவாரகாவின் உடலம் இல்லை என்று இலங்கை இராணுவத்தின் பேச்சாளரான உதய நாணயக்கார மறுப்புத் தெரிவித்திருக்கிறார். பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனி தவிர அவரது குடும்பத்தினரின் உடலங்கள் எதையும் நாம் இன்னும் அடையாளம் காணவில்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார். அது துவாரகாவின் உடலமா இல்லையா என்பதைவிட, கிடைத்த உடல்களை எல்லாம் நிர்வாணப்படுத்திப் படம் பிடித்து வலைகளில் மேயவிடுகிற வக்கிரம் கண்டிக்கத்தக்கது.

வருகிற ஜனவரி மாதம் நடக்க இருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் சுயேச்சையாகப் போட்டியிடுவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் அறிவித்திருக்கிறார். அதற்கான கட்டுப்பணத்தைத் தேர்தல் ஆணையத்தில் செலுத்தி, தேர்தல் களத்தில் முற்றுமுழுதாக இறங்கிவிட்டார். மேலும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேரின் ஆதரவு தனக்கு இருப்பதாக சிவாஜிலிங்கம் கூறியிருக்கிறார். இடதுசாரி முன்னணித் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ணவுடன் இணைந்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் தான் ஈடுபட இருப்பதாகவும், வடக்குக் கிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களிலும் தான் பிரசாரம் செய்யப்போவதாக சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.

அரசியல்-புகுந்தகம்
புவி வெப்பமாதல் பற்றி டென்மார்க்கில் நடந்த மாநாட்டில் கனடா மீது கடும் கண்டனங்கள் வெளிவிடப்பட்டிருக்கின்றன. சூழல் மாசடைதல் தடுப்பு முயற்சிகள் மற்றும் உமிழ்வுக் கட்டுப்பாட்டின் கனடா பின்தங்கியிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இருந்தபோதும் ரொரன்ரோ நகரத்தின் சூழல் மாசடைதல் தொடர்பான முயற்சிகளுக்கு நல்ல பாராட்டும் ஆதரவும் கிடைத்திருப்பது ரொரன்ரோ நகரவாசிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி என்பதாக நகரபிதா டேவிட் மில்லர் தெரிவித்திருக்கிறார். நகரசபை ஊழியர்களின் பல்வேறுவகையான முயற்சிகளும், ரொரன்ரோ வாசிகளின் முழுமையான ஒத்துழைப்புமே இதற்கு முக்கிய காரணம் என்று மில்லர் தெரிவித்தார்.

இதே வேளை இதே சூழல் மாசடைதல் கருத்தரங்கு கனடாவில் இன்னொரு சிறிய அரசியல் குழப்பத்தை உருவாக்கியிருக்கிறது. ஒன்ராரியோ மாநில சுற்றுச் சூழல் அமைச்சர் John Gerretsen மற்றும் கியூபெக் மாநில பிரதம அமைச்சர் Jean Charest, ‘அல்பேர்ட்டாவில் உமிழ்வு அதிகரித்துக்கொண்டே போகிறபோது நாங்கள் மட்டும் ஏன் உமிழ்வைக் கட்டுப்படுத்த வேண்டும்?' என்கிற ரீதியில் வெளிவிட்ட கருத்துக்களால் அல்பேர்ட்டா மக்கள் தனி நாடாகப் பிரிந்து போவது பற்றிப் பேசத்தொடங்கியிருப்பதாக அல்பேர்ட்டா பிரதமர் Ed Stelmach தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே இந்தப் பிரிவினைக் கோரிக்கையை வைத்துக் கியூபெக் வாழ்கிறது. இனி அல்பேர்ட்டாவும் அதே வழியில் போகுமா என்பதற்குக் காலமே பதில் சொல்லும்.

அரசியல்-உலகம்
தனித் தெலுங்கானா மாநிலம் தொடர்பான பிரச்சினை கொழுந்துவிட்டு எரிகிறது. 9 நாட்களாகக் கடையடைப்பு நடக்கிறது. பலபேர் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். பலரைப் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். சிரஞ்சீவியின் கட்சி இரண்டாகப் பிளவுபட்டிருக்கிறது. இதே வேளை தெலுங்கானா ராஷ்ட்ரிய சமதிக் கட்சியின் தலைவர் மணிபால் ரெட்டி என்கிறவர் விஜயவாடா காங்கிரஸ் எம்.பி. ராஜகோபாலின் தலையைக் கொண்டுவந்தால் 50 இலட்சம் பரிசு கொடுப்போம் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக மனித உரிமை ஆணயத்திடம் காங்கிரஸ் புகார் கொடுத்திருக்கிறது. காவல்துறை, நீதித்துறை எல்லாம் என்ன செய்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை.

மும்பையில் 26/11 நடந்த தாக்குதல் போல இலண்டனிலும் நடக்கலாம் என்று ஸ்கொட்லாந்து யார்ட் காவல்துறையின் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இது தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்திருப்பதாக ஸ்கொட்லாந்து யார்ட் அறிவித்திருப்பதால் இலண்டனில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்
Blackberry தயாரிப்பாளர்களான RIM என்றழைக்கப்படும் Research In Motion நிறுவனம் தன்னுடைய மூன்றாவது காலாண்டில் எதிர்பார்த்ததைவிடக் கூடுதலான இலாபம் ஈட்டியிருக்கிறது. நான்காவது காலாண்டு தொடர்பான அவர்களின் எதிர்வுகூறலும் நன்றாக இருப்பதால் பொருளாதார வல்லுனர்கள் இந்த ஆண்டு ஆரம்பத்தில் எதிர்வு கூறிய இலக்குகளை RIM நிறுவனம் வெகு இலகுவில் கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த நிறுவனத்தின் பங்குகளின் சந்தைவிலை கூடியிருக்கிறது.
2002 தொடக்கம் 2009 இரண்டாவது காலாண்டு வரை கிட்டத்தட்ட 75 மில்லியன் Blackberry Smartphone களை உற்பத்தியிடங்களில் இருந்து விற்பனை நிலையங்களுக்கு அனுப்பிய RIM நிறுவனம், 2009 ன் மூன்றாவது காலாண்டில் மட்டும் 10 மில்லியன் Blackberry களை உற்பத்தி சந்தைப்படுத்தியிருப்பது அவர்களின் வரலாற்றில் ஒரு மைல்கள் மட்டுமல்ல, ஒரு வியத்தகு சாதனை என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். நான்காவது காலாண்டிலும் அதே போல் 10 மில்லியன் Blackberry களைச் சந்தைப்படுத்தும் திட்டம் தங்களிடம் இருப்பதாக RIM கூறியிருக்கிறது.

விளையாட்டு
இலங்கை-இந்தியா ஒரு நாள் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருக்கின்றன. சேவாக் 146 அடித்து இந்தியாவை 414 என்ற இமாலய எண்ணிக்கை பெற வைக்க டில்ஷானின் 160 மற்றும் சங்காவின் 43 பந்துகளில் எடுத்த 90 சகிதம் 411 ஓட்டங்களைப் பெற்று முதல் ஒரு நாள் போட்டியில் போராடித் தோற்ற இலங்கை அணி, தோனியின் சதம் காரணமாக இந்தியா பெற்ற 301 ஓட்டங்களை டில்ஷானின் அருமையான சதத்தின் உதவியுடன் கடந்தது. என்னதான் துடுப்பாட்ட வீரர்களுக்கு மட்டும் சாதகமான ஆடுகளங்களாக இருந்தாலும் இரண்டு போட்டிகளும் மிகவும் பரபரப்பாகவே இருந்தன என்பதை மறுக்க முடியாது.

மிக ஆறுதலாக 50 ஓவர்களை வீசி முடித்தார் என்கிற காரணத்தால் தோனிக்கு இரண்டு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. போட்டி மத்தியஸ்தர் கிறிஸ் ப்ரோட் தோனிக்கு துணிவாக விதித்த இந்தத் தடை பாராட்டப்பட வேண்டியது. இப்போதெல்லாம் இந்திய வீரர்கள் கிரிக்கெட் என்கிற ஆட்டத்தைவிட வீரர்களான தாங்களே பெரியவர்கள் என்பது போல் நடந்து கொள்வது அதிகமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. பன்றிக் காய்ச்சலால் யுவராஜும் விளையாட முடியாமல் இருக்கிற நிலையில் இந்தியாவுக்கு இது பேரிழப்பே.

சினிமா-பொழுதுபோக்கு
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ஜேம்ஸ் கமரூனின் இயக்கத்தில் வெளியான விஞ்ஞானப் புனைவுப் படமான Avatar உலகம் முழுவதும் நல்ல தொடக்கத்தைப் பெற்றிருக்கிறது. அமெரிக்காவில் 73 மில்லியன் வசூலுடன் நேரடியாக முதலாவது இடத்துக்குத் தாவியிருக்கிறது. டிசம்பர் மாதம் வெளிவிடப்பட்ட ஒரு படத்துக்கு முதல் வாரத்தில் இவ்வளவு வரவேற்புக் கிடைத்திருப்பது தயாரிப்பாளர்களை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறது. இருந்த போதும் 2007ல் வில் ஸ்மித்தின் I am Legend படத்தில் 77.2 மில்லியன் சாதனையை முறியடிக்க முடியவில்லை இந்தப் படத்தால். இந்தியாவில் 18ம் திகதி வெளியிடப்பட்ட இந்தப் படம் முதல் நாளிலேயே 6.75 கோடி வருமானம் ஈட்டியிருக்கிறது.

புறக்கணிப்புகளுக்கு மத்தியிலும் ‘வேட்டைக்காரன்' நல்ல ஆரம்பம் பெற்றிருக்கிறதாம். புலம் பெயர் நாடுகளில் நிலவரம் தெரியவில்லை. இங்கிலாந்தில் 7 காட்சிகள் ஓடுகிறதாம். கனடாவில் சில முக்கிய தமிழர் திரையரங்குகள் புறக்கணித்திருந்தாலும், famous players பக்கம் கூட்டம் அலைமோதுவதாகக் கேள்வி.

அடப் பாவிகளா........
OnlineFamily.Norton நிறுவனத்தின் ஆய்வுப்படி 18 வயதுக்குட்பட்டவர்கள் 2009ம் ஆண்டு வலையில் தேடியது என்ன தெரியுமா? பாலுறவுப் படங்களையும், மைக்கல் ஜாக்சனையும்தானாம். சமீபத்தில் இவர்கள் வெளியிட்ட இந்த அறிக்கைப்படி இளம் ஆண்கள், பெண்களின் தேடுதல் பட்டியலில் முன்னுக்கு நிற்கும் விஷயங்கள் வருமாறு:

வயது ரீதியான பாகுபடுத்தல் வருமாறு:


Monday 14 December 2009

வேட்டைக்காரனும் சில வலிகளும்

1.
இப்போது வலையுலகில் சூடாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கிற 'தமிழீழம் காண' புதிய வழி இதுதான். ‘வேட்டைக்காரனைப் புறக்கணிப்போம்'.

அப்பர் அடிக்கடி ஒரு வாய்வார்த்தை சொல்லுவார். 'அழுவார் அழுவாரெல்லாம் தன் கவலை, திருவன் பெண்டிலுக்கு அழ ஆளில்லை' என்று. அப்படியாகிவிட்டது ‘தமிழ் உணர்வாளர்கள்' நிலமை.

இந்தப் படத்தைப் புறக்கணிக்கவேண்டுமா இல்லையா என்பதெல்லாம் எனக்கு முக்கியமில்லை. ஆனாலும் ஈழப் பிரச்சினையோடான தேவையில்லாத தொடர்புபடுத்தலாகவே இந்தப் புதிய புறக்கணிப்பைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. அதைவிட முக்கியமாக facebook ல் வேலையில்லாமல் இருக்கும் ஒரு தனிநபர் அல்லது ஒரு குழுவின் விசமமாகவே இதைக் கருதவேண்டியதாய் உள்ளது. ஆயிரத்துக்குமேல் நண்பர்களைச் சேர்த்த வினை ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களிலிருந்து ‘வேட்டைக்காரனைப் புறக்கணிப்போம்' என்றும், அதற்குக் கொஞ்சமும் சளைக்காத விகிதத்தில் இந்தப் ‘புறக்கணிப்பைப் புறக்கணிப்போம்' என்கிற மாதிரியும் facebook pages அழைப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. அந்தக் கடுப்பில் எழுத உட்கார்ந்தாயிற்று.

2.
கொஞ்சக் காலத்துக்கு முன்னர்தான் அஜித்தின் ஏகனை புலம்பெயர் தமிழ் மக்களால் நடாத்தப்படுகிற திரையரங்குகளில் புறக்கணிப்போம் என்று ஒரு கோஷம் எழுந்ததாக ஞாபகம். Facebook முழுவதும் ‘ஏகனைப் புறக்கணிப்போம்' என்று தனுஷின் உடம்புக்கு அஜித்தை ஒட்டிக் கதறினார்கள். பின்னர் அஜித் சும்மா ஒரு இரண்டு வார்த்த பேசியதும் ஏகனைப் புறக்கணித்தல் புறக்கணிக்கப்பட்டது. இந்த முறை விஜய் காங்கிரஸ் கட்சியோடு சேரப்போவதாய் வந்த செய்திகளுடன், இராஜ் வீரரட்ன என்கிற சிங்களவரோடு சேர்ந்து விஜய் அன்ரனி பணியாற்றினார் என்கிற காரணத்தையும் சேர்த்து வேட்டைக்காரனைப் புறக்கணிக்க வேண்டும் என்கிறார்கள்.

இந்தப் புறக்கணிப்பு சம்பந்தமான சர்ச்சையைச் சற்றே உற்றுப்பார்த்தால் தெரியும். இது ஒன்றும் ஈழ மக்கள் சார்பான சர்ச்சை அல்ல. விஜய் ரசிகர்கள், அவர்களின் எதிரிகள் விளையாடுவதற்கு ஈழ மக்களின் அவலத்தைப் பந்தாக உருட்டுகிறார்கள், அவ்வளவுதான். வேட்டைக்காரனைப் புறக்கணிப்பதால் எல்லாப் பிரச்சினையும் தீர்ந்துவிடப்போவதுமில்லை, புறக்கணிக்காமல் விடுவதால் நிலமை இன்னும் மோசமாகிவிடப்போவதில்லை. இது சமீபகாலமாக நிலவிவருகிற மோசமான ஒரு பற்று (fad). ஏதாவது புதுப்படம் வந்தால் அதற்குரிய சர்ச்சைகளும் கூடவே வருவது இப்போது அவசியமாகியிருக்கிறது. தம் இருப்பைக் காட்டிக்கொள்ள கிருஷ்ணசாமி, திருமாவளவன், இராமதாசு ஆகியோர் ஆரம்பித்த இந்தப் பற்று இப்போது நம்மவர்களைத் தொற்றிக்கொண்டு ஆட்டிவைக்கிறது என்றே சொல்வேன்.

3.
விஜய், விஜய் அன்ரனி ஆகிய இருவரும் இன்னொரு நாட்டவர்கள். அவர்களுக்கும் ஈழவர்களுக்கும் சம்பந்தம் எதுவுமில்லை. முன்பு தொப்பூள்கொடி உறவு இருந்ததாகக் கேள்வி. ஆனால் தெலுங்கானா மாநிலத்துக்கான அறிவிப்புடன் அந்தத் தொப்பூள்கொடி கொடூரமான முறையில் கூர் மங்கிப்போன, கறள்பிடித்த இறையாண்மை என்னும் கத்தியால் வெட்டியறுக்கப்பட்டு விட்டது. ஆகையால் அவர்கள் இனிமேலும் எங்கள் நலன்களை மனதில் வைத்துச் செயற்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது அடிமுட்டாள்தனம். வேற்று மொழிகளில் உருவாகிற திரைப்படங்களைக் கண்டுமகிழும் அதே மனநிலையில் அவர்களின் படங்களைக் கண்டுமகிழ வேண்டியதுதான். விஜய் மட்டுமல்ல, இனிமேலும் எந்த ஒரு நாட்டைச்சேர்ந்த அரசியல் பிரமுகரையோ, அல்லது பிரபலத்தையோ அவ்வாறு எதிர்பார்ப்பது தவறு.

இதையும் இங்கே பதிந்துவைக்க விரும்புகிறேன். வேட்டைக்காரன் படத்தைப் பார்ப்பதும், பார்க்காமல் விடுவதும் எங்கள் கையில்தான் இருக்கிறது. படத்தைப் பார்க்க வரும்படி எந்த நடிகனோ, தயாரிப்பாளனோ உங்களையும் என்னையும் வெற்றிலை, பாக்கு வைத்து அழைக்கப்போவதில்லை. வேட்டைக்காரனைப் புறக்கணிக்கும்படி விஜயையும், விஜய் அன்ரனியையும் தாக்கித் துண்டுப்பிரசுரம் அடிக்க உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அந்தளவு உரிமை காங்கிரசில் சேர விஜய்க்கும், இராஜ் வீரரட்னேயுடன் பணியாற்ற விஜய் அன்ரனிக்கும் உரிமை இருக்கிறது. அவ்வளவுதான் விஷயமே. மற்றபடி, தயவுசெய்து ஈழவர் பிரச்சினையை இப்படியெல்லாம் சில்லறைத்தனமாகப் பயன்படுத்தாதீர்கள். வலிக்கிறது.

4.
சயந்தன் சமீபத்தில் twitter ல் ஒரு நக்கல் அடித்திருந்தார். ‘நாங்க சிவாஜியைப் புறக்கணிச்சிட்டு இண்டர்நெட்டில இறக்கிப் பாக்கிறனாங்களாகும்' என்று அவர் நக்கலுக்காகவே சொல்லியிருந்தாலும், சுருக்கென்று தைக்கிற உண்மை, ‘எங்கள் புறக்கணிப்பும், ரோசமும் வெறும் வாய்ப்பேச்சோடு மட்டும்தான்' என்பதே.

Saturday 12 December 2009

நான் பார்க்கும் உலகம்: டிசம்பர் 06-டிசம்பர் 12 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

அரசியல்-பிறந்தகம்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பான ஆதாரங்களை இந்தியாவுக்கு இலங்கை வழங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இருந்தும் இன்னும் இறப்புச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றும் அது தொடர்பாக சட்டத்துறை ஆலோசனை செய்து வருவதாகவும் இலங்கைத் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மே மாதம் வன்னிக் காடுகளில் நடந்த கடுமையான சண்டைகளின் முடிவில் பிரபாகரனின் உடல் என்று ஒரு உடலைக் காட்டிய இலங்கையிடம் ராஜீவ் காந்தி கொலை வழக்கை முடித்து வைப்பதற்கு ஏதுவாக இறந்தது பிரபாகரன்தான் என்பதற்கான ஆதாரங்களையும், இறப்புச் சான்றிதழையும் கோரியிருந்தது இந்தியா. அந்த ஆதாரங்களில் இறப்புச் சான்றிதழ் தவிர மிகுதி எல்லாவற்றையும் தாம் இந்தியாவிடம் காட்டிவிட்டதாக இலங்கை தெரிவித்திருக்கிறது.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வலியுறுத்தி உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழ் மக்களிடம் வாக்கெடுப்புகள் ஆரம்பமாகியிருக்கின்றன. டிசம்பர் 12ம் திகதி பிரான்சின் இந்த வாக்குப்பதிவுகள் நடக்கின்றன. வருகிற பத்தொன்பதாம் திகதியன்று கனடாவிலும் நாடுதழுவிய வாக்கெடுப்புகள் நடக்க இருக்கின்றன. கனடா வாழ் தமிழர்கள் இது தொடர்பான மேலதிக விபரங்களை தமிழர் தேர்தலுக்கான கூட்டணியின் வலைப்பக்கத்துக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்.

அரசியல்-புகுந்தகம்
ஆஃப்கானில் கைதிகளை அந்நாட்டு அதிகாரிகளிடம் கையளித்தது தொடர்பான தணிக்கை செய்யப்படாத ஆவணங்களை பாராளுமன்றத்தின் கீழ்ச்சபையில் ஹார்ப்பர் அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான லிபரல் கட்சித் தலைவர் மைக்கல் இக்னாற்றியேவ் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அந்த ஆவணங்களை வருகிற ஜனவரி 25ம் திகதி மீண்டும் கீழ்ச்சபைக்கு வரும்போது ஹார்ப்பர் சமர்ப்பிக்க வேண்டும் என்று கீழ்ச்சபை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சென்ற வியாழக்கிழமை நடந்த பாராளுமன்றக் கீழ்ச்சபை ஒன்றுகூடலிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மேற்படி உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இருந்த போதும், சட்டரீதியான சில ஆவணங்களை மட்டுமே சமர்ப்பிக்க முடியும் என அரச தரப்பு அறிவித்திருக்கிறது. தேசியப் பாதுக்காப்பைக் கருத்தில் கொண்டும், இராணுவ வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், நேச நாடுகளின் வேண்டுகோள்களுக்கு இணங்கவும் ஒரு சில ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியாது என்கிற அரசின் வாதம் அடிபட்டுப் போகும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஏற்கனவே வெறும் 38% பெரும்பான்மை கொண்ட ஹார்ப்பர் அரசின் மீது, இவ்வாறான ஆவணங்களை மறைப்பது பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவல் அறியும் உரிமையை மட்டுமல்லாது சாதாரணக் குடிமக்களின் தகவல் அறியும் உரிமையையும் மறுக்கும் செயல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருக்கின்றன.

அரசியல்-உலகம்
சந்திர சேகர ராவின் உண்ணாவிரதம், மாணவர் கலகம் இவை எல்லாவற்றிம் முடிவாக ஆந்திர மாநிலத்தைப் பிரித்துத் தனித் தெலுங்கானா மாநிலம் என்று ஒன்றை உருவாக்க இந்திய அரசு கொள்கையளவில் சம்மதம் தெரிவித்திருக்கிறது. இனிமேல் அதற்குரிய அமைப்புரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட இருக்கின்றன. மத்திய அரசின் இந்தத் தீர்மானத்தை எதிர்த்து ஆந்திர மாநில அமைச்சர்கள் பதவி விலக முடிவு செய்திருக்கிறார்கள். இந்த ராஜினாமாக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் ரோசய்யா தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழும் வாய்ப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே ராஜசேகர ரெட்டியின் மகன் ஜகன்மோகன் ரெட்டியை முதல்வராக்க விருப்பம் தெரிவித்த பல கட்சி உறுப்பினர்கள் இவ்வாறு ரோசய்யாவை நட்டாற்றில் விடும் சந்தர்ப்பங்கள் இருப்பதாகத் தெரிகிறது. (ஏற்கனவே 138 சட்டசபை உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது).

இதே வேளை தமிழகத்தின் தென் மாவட்டங்களைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்பதாக ராமதாசுவும், உத்தரப் பிரதேசத்தை மூன்றாகப் பிரிக்கவேண்டும் என்று மாயாவதியும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். தேசப்பற்று என்கிற மாய நூல் மூலம் தைக்கப்பட்டிருந்த இந்தியாவின் தையல்கள் இத்துப்போக ஆரம்பித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அந்தத் தேசப்பற்று இன்னமும் அவர்களிடம் கொஞ்சமாவது மிஞ்சியிருக்கிறது. தம் நாட்டில் ஒருவர் உண்ணாவிரதம் இருந்து சாவதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாவிட்டாலும், இன்னொரு நாட்டில் இவர்களைத் தொப்பூள் கொடி உறவுகளாக நம்பிய ஒரு கூட்டமே கொத்துக் கொத்தாக செத்தபோது இறையாண்மை பேசினார்களல்லவா???

வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்
Globalive Wireless என்கிற தொலைத்தொடர்பு நிறுவனத்தைக் கனேடிய சந்தையில் அரசாங்கம் அனுமதித்தது பற்றி கனடாவின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றன. ரோஜேர்ஸ், பெல், ரெலஸ் ஆகிய மூன்று நிறுவனங்களுமே இவ்வாறான அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றன. அதிலும் ரோஜேர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மேற்படி அறிவிப்பைத் தொடர்ந்து 6.7% ஆல் மதிப்புக் குறைந்திருக்கின்றன. 725 மில்லியன் சந்தை முதலாக்கத்தையும் ரோஜேர்ஸ் இழந்திருக்கிறது. இருந்த போதும் எப்படியான போட்டியாளர்களையும் சந்திக்கத் தாங்கள் தயாராக இருப்பதாக இந்நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.

இதேவேளை Globalive நிறுவனத்தின் செல்லிடப் பேசிச் சேவையான Wind Mobile வரையறையற்ற பயனர் திட்டங்கள், ஒப்பந்தங்கள் இல்லாத சேவை போன்ற முன்னெடுப்புகளை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருப்பது மேற்படி மூன்று நிறுவனங்களையும் கலங்கிப்போக வைத்திருக்கும். இப்போதுதான் இவர்கள் system acess fee நீக்கினார்கள். இப்போது இன்னும் பல கட்டணங்களைக் குறைக்க வேண்டி வரும் போல் இருக்கிறது. வர்த்தக உலகில் போட்டிகள் அதிகரிப்பது யாருக்கு லாபமோ இல்லையோ சாதாரண பயனாளர்களுக்குப் பெரும் லாபம்.
விளையாட்டு
இந்தியா-இலங்கை இருபது-இருபது போட்டிகள் முடிவடைந்திருக்கின்றன. நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் 37 பந்துகளில் சங்ககார எடுத்த 78 ஓட்டங்கள் மற்றும் கப்புகெதர, மத்தியூஸ் ஆகியோரின் அதிரடி காரணமாக 215 ஓட்டங்களை இலங்கை அணி குவித்தது. பதிலுக்கு ஆடிய இந்தியாவுக்கு கம்பீரும், சேவாக்கும் திறமையாக ஆடிய போதும் 40 வயது இளைஞர் சனத்தின் அபாரமான பந்து வீச்சால் இந்தியா 29 ஓட்டங்களால் தோற்றுப்போனது. சனத் 4 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது போட்டியிலும் சங்கா, சனத், ஜயசிங்க, மத்தியூஸ் ஆகியோரின் அதிரடியில் இலங்கை 206 ஓட்டங்களைப் பெற்ற போதும் சேவாக் 64 (36 பந்துகளில்), யுவராஜ் 60 (25 பந்துகளில்), தோனி 46 (28 பந்துகளில்) ஆகியோரின் அதிரடி ஆட்டம் காரணமாக இந்தியா 6 விக்கெட்டுகளால் வென்று தொடரைச் சமன் செய்தது. இரண்டு போட்டிகளிலும் அரைச்சதம் கண்ட சங்கா ஆட்டத்தொடர் நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.

இருபது இருபது போட்டிகளில் சங்கா போன்றோர் ஓட்டம் குவிப்பதைப்போல் கிரிக்கெட்டில் வேறு எதையும் ரசிக்க முடியாது. இயலுமானளவுக்கு சரியான அடிகளை அடிக்கும் சங்கா, மகேல போன்றோர் ஓட்டம் குவிப்பதற்கும் மற்றவர்கள் ஓட்டம் குவிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக technically correct என்று சொல்லக்கூடிய வீரர்களில் இந்த இருவர் மட்டுமே இருபது இருபது போட்டிகளிலும் சாதித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
சினிமா-பொழுதுபோக்கு
12.12, ரஜினிக்குப் பிறந்தநாள். என்னதான் 60 வயதாகிவிட்டாலும் ரஜினி என்கிற காந்தம் இன்றும் பலரை இழுத்து வைத்திருக்கிறது என்பதற்கு அவரது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடிய விதமும், அவரைப் பற்றி வலைப்பதிவாளர்களின் பதிவுகளுமே சான்று. வழமைபோல பிறந்த நாளில் ரசிகர்களைச் சந்திப்பதைத் தவிர்த்து, எங்கோ ஒரு ஆசிரமத்தில் தியானம் செய்தாராம் ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் நடிப்பு, அவர் தெரிவு செய்கிற படங்கள், அவரது அரசியல் தெளிவின்மை போன்றவற்றின் மீது விமர்சனங்கள் இருப்பினும், அவரை ஒரே ஒரு விஷயத்துக்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும். திரையுலகில் திரைக்கு வெளியே அவர் காட்டுகிற எளிமை. நேற்று முளைத்த காளான்கள் முதல் என்றோ முளைத்த விருட்சங்கள் வரை எல்லோரும் இந்த ஒன்றை அவரிடம் கற்றுக்கொள்ளவேண்டும். மசாலாப் படங்களைத் தவிர்த்து, ரஜனிக்குள் பலவந்தமாக ஒளித்துவைக்கப்பட்ட அபார நடிப்புத் திறமையை வெளிக்கொணரும் படங்களில் இனி அவர் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ரஜனி-60 க்கான வாழ்த்து அல்லது வேண்டுகோள்.

அட........
அந்தத் தீவின் பெயரைத் தமிழில் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. பசிபிக் சமுத்திரத் தீவுக்கூட்டங்களில் ஒரு தீவு அது. பெயர் Vanuatu. இந்தத் தீவின் பிரதமர் எட்வேர்ட் நடாபே பதவி நீக்கப்பட்டிருக்கிறார். ஏன் தெரியுமா? பாராளுமன்ற சபாநாயகருக்கு முறைப்படி அறிவிக்காமல் மூன்று பாராளுமன்ற அமர்வுகளில் இவர் கலந்துகொள்ளவில்லையாம். இதனால் அந்நாட்டு அரசியல்வாதிகள் கூடி அவரைப் பதவியிலிருந்து தூக்கிவிட்டார்கள். பாராளுமன்றக் கூட்டங்களுக்கு சாதாரண உறுப்பினர்களே சமுகமளிக்காமல் திரிவதையும் பார்த்திருக்கிறோம். முறையான விளக்கமின்றி அமர்வுகளில் கலந்து கொள்ளாத காரணத்துக்காக பிரதமரையே பதவி நீக்குவது என்னும் செய்தியை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

Sunday 6 December 2009

அது அவர் குடும்பம்....

ஒரு சின்னப் பெண்ணுக்கு மனித குலம் எப்படித் தோன்றியது என்று நெடுநாளாகச் சந்தேகம். நிறைய வாசித்துக் குழம்பிப் போன அவள் கடைசியாக தன்னுடைய பெற்றோரிடம் இதைக் கேட்பது என்று முடிவெடுத்தாள். முதலில் அம்மாவிடம் போனாள்.

'அம்மா அம்மா, மனித குலம் உருவான வரலாற்றை எனக்குச் சொல்வாயா?' என்று கேட்டிருக்கிறாள். அம்மாவும், ‘மகளே. அதெல்லாம் கடவுளின் அற்புதம். அவர் அண்டத்தை, கோள்களை, நட்சத்திரங்களை, மலைகளை, கடல்களை, ஆகாயத்தை எல்லாம் படைத்து முடித்தார். இருந்தும் எதையாவது உருவாக்கும் தாகம் அவருக்குக் குறையவேயில்லை. இதற்காகவே நிறைய காலம் முயன்று ஆதாம் என்கிற ஆணையும், ஏவாள் என்கிற பெண்ணையும் படைத்தார். இவர்களைப் படைத்து முடிந்ததும் கடவுளின் கற்பனா சக்தி முடிந்துவிட்டது. இனிமேல் வரும் படைப்புகளை நீங்கள்தான் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கட்டளையிட்டுவிட்டு வேறு வேலைகளைப் பார்க்கப் போய்விட்டார் கடவுள். ஆதாமும் ஏவாளும் தங்களைப் போலவே மேலும் பல ஆண்களையும் பெண்களையும் படைத்தார்கள். அப்படி உருவானதுதான் மனிதகுலம்' என்றார்.

மகளுக்கு ஒரே சந்தோஷம். அப்பாவிடம் ஓடினாள். ‘அப்பா அப்பா, மனித குலம் எப்படித் தோன்றியது என்று எனக்குத் தெரியுமே!' என்றிருக்கிறாள் சந்தோஷமாக. 'அட, அப்படியா. எங்கே சொல்லு பார்ப்போம்' என்றிருக்கிறார் அப்பா. மகளும் சந்தோஷமாக அம்மா சொன்ன கதையைச் சொல்லியிருக்கிறாள். பொறுமையாகக் கேட்ட அப்பா மகளுக்குச் சொன்னார், ‘மகளே, அம்மாவுக்குப் பிழையாக அவளது குடும்பத்தினர் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். மனித குலம் அப்படியெல்லாம் தோன்றவில்லை. ஆதிகாலத்தில் இந்த உலகம் முழுக்க குரங்குகளால் நிரம்பி இருந்தது. காலம் செல்லச் செல்லப் பல்வேறுபட்ட காரணங்களால் அந்தக் குரங்குகள் கூர்ப்படைந்து மனிதனாகின. கூர்ப்பு என்றால் என்ன என்பது பற்றி நீ மேல் வகுப்புகளில் படிப்பாய். இப்போதைக்கு மனித குலம் குரங்குகளில் இருந்து தோன்றியது என்பதை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்' என்று நீண்ட விளக்கம் கொடுத்தார்.

சிறுமி இப்போது மிகவும் குழம்பிவிட்டாள். பெற்றோரிடம் கேட்க முன் இருந்ததை விட அவளுக்குக் குழப்பம் அதிகமாகிவிட்டது. மீண்டும் புத்தகங்கள், இணையம் எல்லா இடமும் அலசினாள். குழப்பம் கூடியதே தவிரக் குறையவில்லை. மீண்டும் அம்மாவிடம் போய், 'அம்மா, நீங்கள் கடவுள் ஆதாம் ஏவாளைப் படைத்து அதன் மூலம் மனித குலத்தைப் படைத்தார் என்று சொல்கிறீர்கள். அப்பா. குரங்கிலிருந்துதான் மனிதகுலம் வந்தது என்று சொல்கிறார். எது உண்மை. குழப்பமாக இருக்கிறது' என்றிருக்கிறாள். அம்மா மெல்லிய சிரிப்போடு சொன்னார், ‘இதில் என்ன குழப்பம் மகளே. அம்மா என்னுடைய குடும்பக் கதையைச் சொன்னேன். அப்பா அவருடைய குடும்பக் கதையைச் சொன்னார் அவ்வளவுதான்'.
*----*----*----* *----*----*----*

எங்கள் சொந்தத்தில் கேசு மாமா என்று ஒருவர் இருக்கிறார். பூபாலசிங்கம் என்ற அவருடைய பெயர் எப்படிக் ‘கேசு மாமா' ஆனது என்று தெரியவில்லை. ஆள் பயங்கர நகைச்சுவை உணர்வு மிக்கவர். இவருக்கு அடுப்பில் இருக்கிற சுடு நீரில் தேநீர் போட்டுக் கொடுத்தாலும் குடிப்பார். ஒரு முறை கேசு மாமா நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்திருக்கிறார். ஒரு வில்லங்கம் பிடித்த நபர் ஒருவர் கேசு மாமாவைப் பார்த்து, ‘இஞ்ச கேசா, நீ விண்ணாணக் கதையெல்லம் கதைக்கிறாய். ஏலுமெண்டால் நான் கேக்கிற கேள்விக்குப் பதில் சொல்லு பாப்பம்' என்றிருக்கிறார். கேசு மாமா ரியூசன் எல்லாம் நடத்தியவர். சவாலை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

அந்த நபர் கேட்ட கேள்வி இதுதான். ‘மணிக்கு அறுபது மைல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிற புகையிரதம் இப்ப என்ன செய்துகொண்டிருக்கும்?'. எப்பேர்ப்பட்ட கேள்வி பாருங்கள். சூழ இருந்தவர்கள் எல்லாம் திகைத்தார்கள். கேசர் தடுமாறுமாற்போல் இருந்தது. கேள்விகேட்டவர் முகத்தில் ‘எப்புடீ' என்கிற மாதிரி வெற்றிச் சிரிப்பு. கேசர் செருமிவிட்டுச் சொன்னார், ‘மணிக்கு அறுபது மைல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிற புகையிரதம் இப்ப உங்கினேக்க எங்கையாலும் வடலிக் காணியுக்கை பனம்பழம் சூப்பிக்கொண்டிருக்கும். நீ போய் பாத்திட்டு வா' என்று. கேள்வி கேட்டவர்கூட விழுந்து விழுந்து சிரித்தாராம்.

கேசர் எப்போதும் ஒரு பழைய சைக்கிளிலேயே திரிவார். ரோச் லைட் அடித்துத்தான் இரவில் பிரயாணம். சைக்கிளுக்கு பிரேக் கூட இருக்காது. காலை பின் சில்லின் ரயரில் தேய்த்துத்தான் பிரேக் எல்லாம் பிடிப்பார். அப்படி பிரேக்கும் பிடித்து, ரோச்சும் அடித்து கேசர் கஷ்டப்படுவதைப் பார்த்து அப்பா வற்புறுத்தி ஒரு டைனமோவும், சைக்கிள் ஹெட்-லைற்றும் வாங்கிக் மாட்டிக்கொடுத்தார். கொஞ்ச நாளால் கேசர் சைக்கிளோடு விழுந்துவிட்டார். ஆறடிக்கு மேல் உயரமான, கால் பிரேக் எல்லாம் போடக்கூடிய கேசர் சைக்கிளோடு தடுக்கி விழுந்துவிட்டார் என்பதை நம்பமுடியவில்லை. கொஞ்சக் காலம் கழித்துத்தான் உண்மையைச் சொன்னார்.

சைக்கிள்களை ‘லொக்' பண்ணி வைக்கப் பின் சில்லில் ஒரு பூட்டு இருக்கும். ஒரு சிறிய பாகத்தைத் தள்ளிவிட்டால் சில்லு பூட்டுப்பட்டுவிடும். (மேலே படத்தில் அந்தப் பூட்டி இருக்கிறது. டைனமோவோடு படம் சிக்கவில்லை). அந்தச் சின்னப் பாகத்தைப் போலவே டைனமோவிலும் ஒரு பாகம் இருக்கும். அதை அமுக்கினால் டைனமோ ரயருடன் உராய ஆரம்பிக்க, சிறு வயர்களால் மின்சாரம் கடத்தப்பட்டு சைக்கிள் ஹெட் லைட் எரிய ஆரம்பிக்கும். ஒரு இனிய இரவும் மாலையும் சந்திக்கிற ‘மம்மல்' இருட்டில் கேசர் டைனமோவை ரயரில் முட்ட வைக்கிறேன் என்று சைக்கிளை ஓடிக்கொண்டே பின் சில்லை 'லொக்' செய்திருக்கிறார். அதன் பின் குப்புறடித்து விழாமல் பறக்கவா முடியும்???
*----*----*----* *----*----*----*

இன்றைய யாழ்ப்பாணம்

இன்றைக்கு இருக்கிற யாழ்ப்பாணம் பற்றிய யாழ்ப்பாணத்துக் கலாச்சாரக் காவலர்களின் புலம்பல்கள் சிலவற்றை வாசிக்க நேர்ந்தது. யாழ்ப்பாணம் கலாசாரம் மிகுந்த ஒரு இடமாகவே இதுவரை பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் பெரும்பாலான யாழ் மைந்தர்களுக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருவதில்லை. எழுத்தாளர் சுஜாதா சொன்ன ‘தப்புக்கள் வெளியே தெரியாதவரை யாவரும் புனிதர்களே' என்கிற வாக்கியம் இன்றைக்கு யாழ்ப்பாணம் சீரழிந்துவிட்டதாகப் புலம்புகிறவர்களுக்கும் பொருந்தும். இதுவரை பெரியளவில் வெளியில் பேசப்படாமல், வெளியில் தெரியாமல் இருந்த சில விஷயங்கள் இப்போது வெட்டவெளியில் நடக்கின்றன. அவ்வளவுதான் வித்தியாசமே.

இவர்கள் வைக்கிற குற்றச்சாட்டுகளில் சிலவற்றைப் பார்ப்போமே. இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாமே facebookல் தம்பி ஒருவர் திரட்டிய பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டவை. இதற்கு நானும் கொஞ்சக்காலம் ‘கலாசார பூமி'யாகக் கட்டமைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் குப்பை கொட்டியவன் என்கிற காரணத்தால் எதிர்வினையாற்றவேண்டி வருகிறது. யாழ்ப்பாணத்தில் திறந்த வெளி விபசாரம் நடக்கிறதாம். நான் இருந்த காலத்திலும் நடந்தது. செல்வநாயகம் அண்ணா ஒரு பெண்ணுக்குப் பச்சை மட்டையால் அடியும் போட்டார். ஆனாலும், அந்தப் பெண்ணுடன் போன ஆண்கள் பற்றி யாருமே கவலைகொண்டாரில்லை. இங்கே பல்லிளிக்க ஆரம்பிக்கிறது பொதுப்புத்தி. எத்தனை பேருக்குத் தெரியுமோ தெரியாது. எங்கள் பகுதியில் பணக்காரன் வீடு என்று ஒரு சமூகம் இருக்கிறது. இவர்கள் பெரிய வளவுகளில் வீடு கட்டி வாழ்ந்தவர்கள். வீடு கட்டி வாழ்வதைவிட, அவர்களின் வளவுக்குள் சில ‘சின்ன வீடுகள்' இருப்பது கௌரவம் என்று வாழ்ந்தவர்கள். இதைச் சொன்னது எனக்குக் கணிதம் படிப்பித்த ஆசான் ஒருவர். அதாகப்பட்டது, ஒருவனுக்குப் பல பேர். ஆனால் ஒருத்திக்கு ஒருவன் என்கிற ஆணாதிக்கக் கட்டுமானம்தான் இவர்கள் இன்றைக்குப் புலம்பும் சீரழிந்துபோன ‘யாழ்ப்பாணக் கலாசாரம்'.

சிறுமிகள் அணியும் உடைகளை யுவதிகள் அணிகிறார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்கள். முக்கால் காற்சட்டையோடு, மேலே ஒன்றும் இல்லாமல் பருத்த வண்டிகள் குலுங்க இந்த ஆண் சிங்கங்கள் நடைபோடலாமாம், ஆனால் பெண்கள் இழுத்துப் போர்த்தி கலாசாரம் பேணவேண்டுமாம். இதை இளைய சமுதாயம் ஒரு குற்றச்சாட்டாய் வைக்க இனிமேலும் இடம் கொடுக்கக்கூடாது. நீ பாரம்பரிய உடைகளை அணிகிறாயா? நீ கலாசாரத்துக்கு ஏற்ப வாழ்கிறாயா? இல்லையே. பிறகு எப்படி நீ ஒரு பெண் போடுகிற உடைகளை மட்டுப்படுத்துகிற ஆளாக முடியும்? (இதைவிட ஆண்கள் முக்கால் கால்சட்டை போடக்கூடாது என்று உடை விஷயத்தைக்கூட தாங்கள் தீர்மானித்த ஒரு கூட்டமும் இருந்தது). இங்கே மாறவேண்டியது உடைகள் அல்ல. நாங்கள் பார்க்கிற பார்வை. ஒரு வட்டத்துக்குள் இருந்துகொண்டு இவ்வளவுதான் உலகம் என்று இருந்தோம் என்றால், சந்ததி சந்ததியாக முன்னேறாமல் பின்தங்கிப்போய்விட வேண்டியதுதான்.

சந்து பொந்துகளில் காதலன் மடியில் காதலி உட்கார்ந்திருக்கிறாளாம். அடச் சீ... அவர்கள் என்ன... வேண்டாம். என் வாயைக் கிளறவேண்டாம். தெருவில் கூடும் நாய்களைக் கல்லால் அடித்துப் பிரிக்கிற கூட்டம், ஒரு ஆணும் பெண்ணும் அந்நியோன்னியமாக இருந்து உரையாடுவதை விமர்சிக்கிறது. நான் இருந்த போது நான்கு சுவர்களுக்குள் நடக்கவேண்டியதை எல்லாம் சில பேர் யாழ்ப்பாணத்துப் பற்றைகளில் செய்தார்கள். கலாசாரம் காக்கிறோம் என்கிற பெயரில் அவர்களைப் பிடித்த ‘கலாசாரக் காவலர்கள்' ஆணை மிரட்டிக் கலைத்துவிட்டு, பெண்ணைத் தொட்டுப்பார்த்துவிட்டு அதைப் பெரிதாகப் பீற்றியுமிருக்கிறார்கள். அதாகப்பட்டது கலாசாரம் காக்கிறோம் என்கிற பெயரில் ஆணாகப்பட்டவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஒரு பெண் காதலன் மடியில் சாய்ந்து பேசிக்கொண்டிருந்தால் ‘கலாசாரம் சீரழிகிறது. கலாசாரம் சீரழிகிறது' என்கிற கூச்சல். இதில் ஆண்களின் செல்லிடப்பேசிகளில் பெண்களும், பெண்களின் செல்லிடப் பேசிகளில் ஆண்களும் மட்டுமே பேசுகிறார்கள் என்கிற புலம்பல்வேறு. இப்படிப் பேசுவதாலும் கலாசாரம் கெடுகிறது என்றால், ஒரு பொதுவிழாவில் ஒரு ஆணும் பெண்ணும் பேசினால்கூட கலாசாரம் கெட்டுவிடுமல்லவா???? என்ன அபத்தமான வாதம் இது?

அதே போல நீலப்படங்களை சீ.டி.க்களாகவோ அல்லது இணையத்திலோ தேடும் இளைஞர்களையும் குற்றம் சொல்ல முடியாது. அவர்களை அப்படி அலைய வைத்ததில் எங்களுக்கும் பங்கிருக்கிறது என்பதை இந்தக் கலாசாரக் காவலர்கள் உணரவேண்டும். அவர்களுக்கு நீலப்படம் போட்டுக்காட்டுங்கள் என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் ஆண் பெண் உடலமைப்பு முதல் இன்ன பிற விஷயங்களை உள்ளடக்கிய பாலியல் கல்வி என்பது நிச்சயமாக எங்களின் சமூகத்துக்குத் தேவை. எங்களின் சமூகம் மட்டுமல்ல. உலகில் பல சமூகங்களின் நிலையும் இதுதான். இது ஒன்றும் கேவலமானதும், விகாரமானதும் அல்ல. பொது வெளியில் பேசப்படவேண்டியது என்பதை முதலில் புரிந்துகொள்வது அவசியம். என் பதினமங்களில் எனக்கும் இது தொடர்பான தேடல், தவிப்பு இருந்தது. இங்கே தான் நான் எங்கள் பிதாமகன் சுஜாதாவுக்கும், ஆசான் ஜெவட்டி என்கிற ஜெபரட்ணத்துக்கும் நன்றி சொல்லவேண்டும். ஜெபரட்ணம்தான் பாலியல் பற்றிய கற்கை முக்கியமானது என்ற கருத்தின் விதையை எனக்குள்ளே விதைத்தவர், ஒரு நாற்பது நிமிட வகுப்பில் சர்வசாதாரணமாக அவர் சொன்ன 5 நிமிடக் கருத்தொன்றின் மூலமாக. தமிழ் சினிமாப் பாடல்களைத் தணிக்கை செய்கிற சமூகத்தில் பாலியல் பற்றிய பொதுவெளி உரையாடல்கள் சாத்தியமா என்பது சந்தேகமே.

இந்தக் குற்றச்சாட்டுகளைத் தவிர, அந்த நண்பர் கூறியிருக்கிற வேறு சில குற்றச்சாட்டுகளை நான் தலைகுனிந்து ஏற்றுக்கொள்கிறேன். ராணுவக் கோப்ரல் ஒருவரின் பெயரைச் சொல்லிச் சில இளைஞர்கள் அட்டகாசம் செய்கிறார்களாம். யாரையாவது அடிப்பதையே ஒரு நாள் இலட்சியமாகக் கொண்டு குழுமங்கள் பல அலைகின்றனவாம். இவைகளை நான் 'கலாசாரச் சீரழிவு' என்ற பதத்துக்குள் உட்படுத்தாமல் ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட சீரழிவாகப் பார்க்க விரும்புகிறேன். சினிமாக்களின் தாக்கம், இது வரையில் இருந்த, இப்போது இருக்கிற அடக்கு முறையால் ஏற்பட்ட மனச் சிதைவுகள் இவற்றுக்குரிய காரணங்களாக இருக்கலாம்.

இப்படியான செயற்பாடுகள் அந்த நண்பருக்கு வருத்தம் அளித்திருப்பதில் எனக்கு ஆச்சரியமில்லை. ‘கலாசாரத்துக்குப் பேர்போன யாழ்ப்பாணம்' என்கிற பொதுப்புத்திக்கு இந்தச் செய்திகள் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். யாழ்ப்பாணத்தில் இவற்றுடன் சாதீயமும் கோரமுகம் கொண்டு இருந்து வருவது உண்மை. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல் இருந்தாலும் இதையும் இங்கே சொல்லித்தானாகவேண்டும். யாழ்ப்பாணத்தில் sexual orientation என்கிற பதத்தில் அடங்குகிற அத்தனை வகைகளும் இருக்கிறது. அதே போல் incest கூட. நான் சொல்வது அதிர்ச்சியாகவும், யாழ்ப்பாணத்தை வசைபாடுவது போலவும் இருக்கலாம். என்றைக்காவது ஒரு நாள் என்னைப் போல இன்னொருவனும் இவற்றைக் கண்டுணர்வான். அல்லது கண்டுணர்ந்த ஒருவன் துணிந்து சொல்லுவான். இந்தப் பதிவுக்கு வரும் வசைகளுக்கு நான் சொல்கிற பதில்களுக்கு அப்படி ஒருவன் பலம் சேர்ப்பான்.

Saturday 5 December 2009

நான் பார்க்கும் உலகம்: நவம்பர் 29-டிசம்பர் 05 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

அரசியல்-பிறந்தகம்
வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவோம் என்று சிவாஜிலிங்கம் எம்.பி. சென்னையில் தெரிவித்திருக்கிறார். 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ராஜபக்சவையோ, பொன்சேகவையோ ஆதரிப்பது இயலாத காரியம். ஆகவே நாங்களும் ஒரு வேட்பாளரை நிறுத்தப் போகிறோம். அப்படி கட்சி ஒரு வேட்பாளரை நியமிக்காத பட்சத்தில் நானே சுயேட்சையாகப் போட்டியிடுவேன்' என்று சிவாஜிலிங்கம் தெரிவித்திருக்கும் காரணமும், வெளிப்படையாக அதைச் சொன்ன விதமும் வரவேற்கத்தக்கது. அந்த வேட்பாளர் யாராக இருப்பினும் ஜனாதிபதியாக வரமுடியாது எனிலும், வாக்குகளைப் பிரித்து, தமிழ் மக்களின் அரசியல் பலத்தையும், முக்கியத்துவத்தையும் ஓரளவுக்காவது நிரூபிக்கலாம். அதேவேளை தமிழ் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியுமா என்பதையும் இந்தத் தேர்தலே கோடிட்டுக் காட்டும். சுதந்திரமாக வாக்களிக்கத் தமிழ் மக்கள் அனுமதிக்கப்படுவார்களா, இல்லை 22 எம்.பி. க்களை அனுப்ப, செல்வராசா கஜேந்திரனை வரலாறு காணாத வெற்றி பெறவைக்க தமிழ் மக்கள் விதைத்த விதையை ஈ.பி.டி.பி. போன்ற ஒட்டுக்குழுக்களின் வாயிலாக அறுவடை செய்வார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

கொஞ்சக் காலத்துக்கு முன்னர் இலங்கைத் தமிழர் அரசியலில் முக்கியமான ஒரு ஆளாக இருந்த கே.பி. என்கிற செல்வராசா பதமநாதனை நினைவிருக்கிறதா பலருக்குத் தெரியவில்லை. பிரதிநிதி, துரோகி, புதிய தலைவர் மீண்டும் துரோகி என்று பல அவதாரங்களைக் கொடுத்து பின்னர் எவ்வளவு வேகமாக தமிழீழ அரசியலில் முக்கியமானாரோ அதைவிட வேகமாக மறக்கப்பட்ட கே.பி. தன்னிடம் 5 கப்பல்களும், 600க்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளும் இருப்பதாக இலங்கைப் புலனாய்வு அதிகாரிகளுக்குச் சொல்லியிருக்கிறாராம். இவரது தகவலின் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் மூன்று கப்பல்கள் மடக்கப்பட்டிருக்கின்றனவாம். இப்போது கே.பி.க்கு என்ன புது அவதாரம் கொடுக்கப்போகிறோம்?

அரசியல்-புகுந்தகம்
இந்த வாரம் ஒன்ராரியோ மாகாண அரசியலில் சூடான வாரம் என்று சொல்லலாம். மாகாண சட்டப்பேரவை உறுப்பினர்களான, கொன்சேர்வேற்றிவ் கட்சியைச் சேர்ந்தவர்களான ரிக் ஹில்லியேர் மற்றும் பில் மர்டோச் ஒருங்கிணைந்த விற்பனை வரியை ஒன்ராரியோ மாநிலத்தில் அறிமுகப்படுத்துவதற்கு எதிராக அமளி செய்த காரணத்துக்காக சட்டப்பேரவை முதல்வர் ஸ்டீபன் பீற்றேர்ஸ் அவர்களால் அவையிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டார்கள். ஆனால் மேற்படி சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருவரும் தொடர்ந்து இரு நாட்களாக சட்டப்பேரவையை விட்டு வெளியேறாமல் முரண்டு பிடித்தார்கள். இறுதியாக நேற்று சில நிபந்தனைகளுக்கு ஒன்ராரியோவை ஆளும் லிபரல் கட்சியினர் சம்மதிக்க, தம்முடைய போராட்டத்தை இருவரும் முடிவுக்குக் கொண்டுவந்தார்கள்.

இதுவரை காலமும் மத்திய அரசின் விற்பனை வரியாக 8%ம், மாநில அரசின் விற்பனை வரியாக 5% ம் அறவிடப்பட்டு வருகிறார்கள். வரும் ஜூன் 1 ம் தேதி இவை ஒருங்கிணைக்கப்பட்டு 13% விற்பனை வரி அறவிடப்படுவதற்கு ஒன்ராரியோ லிபரல்கள் முனைகிறார்கள். கொன்சேர்வேற்றிவ் கட்சி ஆளும் சில மாநிலங்களில் ஏற்கனவே இந்த முறமை இருக்கிறது. அப்போது HST என்பதை SHT அதாவது Stephen Harper Tax என்று வாசியுங்கள் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரையும், கொன்சேர்வேற்றிவ் கட்சியையும் நக்கலடித்தார் மத்திய லிபரல் தலைவர் மைக்கல் இக்னாற்றியேவ். இப்போது ஒன்ராரியோ மாநில லிபரல்கள் ஒருங்கிணைந்த விற்பனை வரியை ஆதரிக்க, ஒன்ராரியோ கொன்சேர்வேற்றிவ்கள் அதை எதிர்க்கிறார்கள். அரசியல்வாதிகள் எல்லா இடத்திலும் ஒரே மாதிரித்தான்.

அரசியல்-உலகம்
ரஷ்யாவின் பெர்ம் (Perm) நகரின் இரவு விடுதி ஒன்றில் நடந்த வெடி/தீ விபத்தில் 109 பேர் பலியாகியிருக்கிறார்கள். சோவியத் யூனியன் பிரிந்த காலத்துக்குப் பிறகு இடம்பெற்ற மிக மோசமான இந்த வெடி/தீ விபத்தில் 130 பேர் காயமடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த விபத்திற்கு எந்தவித தீவிரவாதத் திட்டமும் காரணமில்லை என்று ரஷ்யப் புலனாய்வு அதிகாரிகள் அறிவித்திருக்கிறார்கள். மாறாக ரஷ்ய அதிபர் திமீத்ரி மெட்வெடெவ் (Dmitri Medvedev) இப்படியான இரவு விடுதிகளின் பாவனையாளர்களுடைய பாதுகாப்புக்கு உகந்த வண்ணம் விடுதிகளின் உள்புறங்களை மீள் வடிவமைப்பதில் பின்னிற்கும் விடுதி உரிமையாளர்களைக் கடுமையாகச் சாடியிருக்கிறார். ரஷ்யாவில் நாளை திங்கட்கிழமை தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்பட இருக்கிறது.



வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்
கொஞ்சக் காலத்துக்கு முன்வரை வேலை தேடும் பலருக்குப் பலர் சொன்ன ஒரு அறிவுரை அல்பேர்ட்டா மாகாணத்தில் வேலைகள் இலகுவாகக் கிடைக்கும் என்பதே. இனிமேலும் யாராவது அதையே சொன்னால் செருப்பால் அடிப்பார்கள் கனேடியர்கள். கனேடியப் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் அல்பேர்ட்டா மாகாணத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கல்கரியில் மேலும் மேலும் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது என்பதே. இந்த வருடம் இது வரையிலும் கல்கரியில் மட்டும் 16,600 பேர் வேலை இழந்திருக்கிறார்கள். சென்ற வருட இறுதியில் 3.7 ஆக இருந்த வேலையமைவின்மைச் சுட்டெண் இப்போது 7 ஆக அதிகரித்திருக்கிறது.

இப்படியான சிக்கல்களுக்கு முழுமுதல் காரணமாக எல்லோரும் அரசாங்கங்களின் நிர்வாகத்திறமையைச் சுட்டிக்காட்டினாலும், சாதாரண குடிமக்களின் பொறுப்புணர்வின்மையையும் காட்டுகிறது. உதாரணமாக ஒருவருக்கு $75,000 தேவைப்பட்டால், அவருக்காக $150,000 கடன் அனுமதி எடுத்து, அதில் $60,000 கொமிஷனைத் தாங்கள் எடுத்து, $90,000 கடனை குறித்த நபரிடம் கொடுக்கும் அருமையான வங்கி அதிகாரிகள் இருக்கிறார்கள். $90,000 கடனைக் குறித்த நபர் திருப்பிக் கட்டமாட்டார். முழுக் காசையும் உருவிவிட்டு, அதில் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்தால் இவருக்கு வங்குரோத்துப் பாதுகாப்புப் பெற்றுத்தர ஆட்கள் இருக்கிறார்கள். இவர் மனைவியின் பேரில் ஐந்து அறை ரூமில் இன்பமாக வாழ்வார். நேர்மையாக முன்னேற நினைப்பவர்கள் இப்படிப் பொதுவெளியில் புலம்பிக்கொண்டிருப்போம்.

விளையாட்டு
இந்தியா-இலங்கை டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றும் நிலையில் இருக்கிறது. இன்னும் 4 விக்கட் தேவை. முதலில் துடுப்பெடுத்தாடி 393 ஓட்டங்களை இலங்கை பெற பதிலளித்தாடிய இந்தியா 726 ஓட்டங்களை 9 விக்கெட்டுக்குப் பெற்றது. சேவாக் அதிரடியாக ஆடி வெறும் 254 பந்துகளில் 293 ஓட்டங்களைப் பெற்றார். இரண்டாவது இன்னிங்ஸ்சில் இலங்கை 6 விக்கெட்டுக்கு 274 ஓட்டங்களைப் பெற்றிருக்கிறது. சங்ககார 133 ஓட்டங்களுடன் ஆடிக்கொண்டிருக்கிறார். தென்னாபிரிக்காவுடனான ஒரு நாள் தொடரை 2-1 என்று வென்று இங்கிலாந்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. நியூசிலாந்து-பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மேற்கிந்தியா போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

நடுவர்களின் முடிவைக் கேள்விக்குள்ளாக்கும் முறை பற்றிய சர்ச்சைகள் தொடர்கின்றன. இலங்கை இந்தியா தொடரில் இது இல்லாததால் இரண்டு முறை டில்ஷான் பாதிக்கப்பட்டார். இரண்டுமே மிக மோசமான முடிவுகள். ஆனால் அவுஸ்-மே.இ. தொடரில் கள நடுவர் பென்சன் எடுத்த சரியான முடிவு மூன்றாவது நடுவரால் பிழையாக மாற்றப்பட்டதால் பென்சன் கோபமடைந்து ஓய்வு பெற இருக்கிறார். எனக்கென்னவோ இந்த முறையை முற்றாக நீக்குவது நலம் என்றே படுகிறது. இந்த வருட முற்பகுதியில் ஹர்பஜனின் பந்தில் நியூசிலாந்தின் ரெய்லர் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார். இருந்த எல்லாத் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி ஆராய்ந்து வர்ணனையாளர்கள் நடுவர்களை ஒரு பாட்டம் திட்டி, மறுப்புத் தெரிவிக்காமல் வெளியேறிய ரெய்லரைப் பாராட்டி முடிந்தபின், அன்றைய நாள் பத்திரிகையாளர் சந்திப்பில் ரெய்லர் 'கூலாக'ச் சொன்னார், ‘அந்தப் பந்து என் மட்டையில் பட்டது என்று'. திருந்த வேண்டியது விளையாட்டை விளையாட்டாய் எடுக்கவும், நடுவர்களை மனிதர்களாகப் பார்க்கவும் தெரியாத கிரிக்கெட் வீரர்களே.

சினிமா-பொழுதுபோக்கு
முன்னாள் இளைஞர்களை மட்டுமல்லாமல் இன்றைக்கு அவர் படத்தைப் பார்ப்பவர்களையும் ஒரு கணம் சலனமடைய வைக்கும் மர்லின் மன்றோவின் அறியப்படாத வாழ்க்கை பற்றிய ஒரு காணொளி ஒன்றை கெயா மோர்கன் என்பவர் ஏலத்தில் எடுத்திருக்கிறார். அந்தக் காணொளியில் அந்த எப்போதும் பசுமையான கனவுக்க கன்னி போதை மருந்து புகைப்பது போன்ற காட்சிகள் இருக்கின்றனவாம். 50 வருடங்களுக்கு முன் மர்லின் ஒரு விருந்தில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட காணொளியிலேயே இந்த விஷயங்கள் எல்லாம் இருக்கின்றனவாம். ஜோன்.எஃப்.கென்னடி போன்ற அரசியல் பிரமுகரே மயங்கித் தவமிருக்க வைத்த மர்லின் மறைந்தே கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. (எனது ஞாபகத்தில் 1962ல் மர்லின் இறந்தார் என்று நினைக்கிறேன்). நமீதாவைப் பார்த்து ‘நீ மார்லின் மன்றோ குளோனிங்கா' என்று எழுதிய கவிஞனது கற்பனை....ஆஹா.... ஆஹா....அஹ்ஹ்ஹஹஹா... நல்லவேளை இதெல்லாம் கேட்காமல் மார்லின் இறந்து போனார். இல்லாவிட்டால் தன்னோடு ஒப்பிடப்பட்ட மாமிச மலையின் படத்தைப் பார்த்து நெஞ்சு வெடித்துச் செத்திருப்பார்)

நான் இன்னும் ‘பா' படம் பார்க்கவில்லை (படம் வந்து 2-3 மாதம் கழித்தே தரமான டி.வி.டி.க்களைத் தரவிறக்க முடிகிறது. அண்ணன் கானா பிரபா பார்த்து விமர்சனம் வேறு எழுதியிருந்தார். அதற்கிடையில் படம் பற்றிய சர்ச்சைகள் தொடங்கிவிட்டது. ஊனமுற்றவர்களைக் கேலிக்குள்ளாக்கியதாக ஒருவர் 'பா' படத்தைத் தடை செய்யச்சொல்லி வழக்குப் போட்டிருக்கிறார். இன்னும் பல விமர்சனங்களையும் படித்து, படமும் பார்த்த பின்தான் உண்மையிலேயே அமிதாப் பச்சனின் பாத்திரம் அப்படியாக ஊனமுற்றவர்களைக் கேலிக்குள்ளாக்குகிறதா, அல்லது இந்த வழக்கு இன்னொரு publicity stunt ஆ என்று சொல்லமுடியும். மிருகங்களை வைத்துப் படமெடுப்பதற்கு எதிராகக் கூடப் போராடுகிறார்கள், பெண்களையும், அரவாணிகளையும் கேவலாமாகச் சித்தரித்து எடுக்கும் படங்களைப் பற்றி யாருமே பேசுவாரில்லை.

அடப் பாவிகளா........

நிறம், மதம், மொழி, அது இது என்று எந்த வேறுபாடும் இல்லாமல் ஆண்கள் எல்லாம் செய்யும் ஒரு வேலை தெரியுமா நண்பர்களே? பல நாட்களாக அவதானித்து இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். நீங்களும் அவதானித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். என்ன வேலை தெரியுமே? Western Toiletல் நின்றபடி 'கொள கொள' சத்தத்தோடு ஒன்றுக்கடிப்பது. இன்றைக்கு படிக்கிற இடத்தில் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டவரும், ஒரு ஆபிரிக்கரும் அதைத்தான் செய்தார்கள். விஜய் அதைத்தான் செய்கிறார். வேலையிடத்தில் பல வெள்ளைக்காரர்கள் அதைத்தான் செய்கிறார்கள். மருமகனும் அதைத்தான் செய்கிறான். அவன் நண்பர்களும் அதைத்தான் செய்கிறார்கள். நான் மட்டும் Comet ல் உட்கார்ந்து போகிறேனோ என்று பயமாயிருக்கிறது. நான் போகிற வழியில் ஒரே ஒரு தொல்லை மட்டும் இல்லை. துன்னாலை அக்கவுண்டண்ட் சொல்லும் ‘ஒன்றுக்கிருந்துவிட்டு ஒருதரம் சுண்டாவிட்டால் நிண்டிட்டு விழுமாம் ஒரு துளி நீர்' என்கிற பிரச்சினை இருப்பதில்லை.

Wednesday 2 December 2009

இரண்டு படங்கள்-ஒரு வரலாறு

இந்தப் பதிவு நான் பார்த்த இரண்டு தமிழ்ப் படங்கள் மற்றும் ஒரு ஆவணப் படம் பற்றிய என்னுடைய எண்ணங்கள் என்று சொல்லலாம். இரண்டு படங்களும் ஏற்கனவே வலையுலகில் கிழித்துத் தொங்கப்போடப்பட்ட படங்களே. திரையரங்கில் தமிழ் சினிமாப் படங்கள் பார்ப்பதில் இப்போதெல்லாம் பெரிதாக நாட்டமிருப்பதில்லை என்பதால் நல்ல தரமான DVD Rip வலையில் கிடைக்கும்வரை காத்திருந்து பார்க்கவேண்டியதாயிற்று. படங்கள் ஆதவன் மற்றும் பேராண்மை. ஆவணப்படம் DVD Rip மூலம் கிடைத்தது அல்ல. சொந்தக் காசில் வாங்கிய DVD. யாழ்ப்பாண மத்திய நூலகம் எரிக்கப்பட்டது தொடர்பான சோமிதரனின் ஆவணப்படம் அது.

ஆதவன்
வலையுலகில் இவ்வளவு விமர்சனங்களைப் படித்த பின்னரும் இந்தப் படத்தைப் பார்த்ததுக்காக எனக்கு நானே முதுகில் தட்டிக்கொடுத்துக்கொள்கிறேன். படம் பெரிதாகப் பிடிக்கவில்லை. வடிவேலுவுக்காகக் கொஞ்சம் பார்க்கலாம். மற்றபடி ‘அஞ்சனா' பாடலும், 'ஏனோ ஏனோ' பாடலும் பிடித்திருந்ததாலும் படத்தைப் பார்த்து முடித்தேன். படத்தில் நிறைகளை விடக் குறைகளே அதிகம் தென்பட்டது ஆச்சரியமாக இருந்தது. (என்னாச்சு சூர்யா?).

பாரதி நடித்த பின் எப்போது தூள் படத்தில் தொடங்கி முழுமையான வர்த்தகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினாரோ அப்போதிருந்தே ஷயாதி ஷிண்டேயைக் கண்டாலே உச்சந்தலை தொடக்கம் உள்ளம் கால்வரை ஏறுகிறது. Gaptain படங்களில் Bakistan தீவிரவாதியாய் வருகிற அந்த ஆள் இன்னும் கடுப்படிக்கிறார். துணைப் பாத்திரங்களில் தொடங்கி வடிவேலு தவிர்ந்த எல்லா முக்கிய பாத்திரங்களுமே படத்தை எவ்வளவு நாறடிக்க முடியுமோ, அவ்வளவு நாறடித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லலாம். சூர்யாவின் நடிப்பில் பெரியளவு வித்தியாசம் ஏதுமில்லை. நயன்தாரா வழமைபோல பாடல்களில் ‘ஆடி'விட்டுப் போகிறார். மலையாள முரளி கூட இந்தப் படத்தில் அவரது இயல்பான நடிப்பைத் தொலைத்துவிட்டதுபோல் தோன்றுகிறது. பொருந்தாத பின்னணிக்குரல் காரணமாயிருந்திருக்கலாம்.

இந்தப் படத்தைப் பார்க்க இரண்டு மேலதிக காரணங்கள் இருந்தன. முதல் காரணம், சரோஜாதேவி. நான் சரோஜாதேவி படங்கள் அதிகம் பார்த்ததில்லை. அபிநயசரஸ்வதி என்கிறார்களே, அப்படி நடிப்பாரோ என்று ஆர்வத்தோடு பார்த்தேன். இவர் கொடுக்கிற அபிநயத்துக்காகத்தான் அந்தப் பட்டம் கொடுத்தார்கள் என்றால், அன்றைய இளைஞர்களின் ரசனை.... உவ்வேக். படத்தின் மிகப் பெரும் பலவீனமே இவர்தான். இரண்டாவது காரணம், தமிழில் கதை நாயகனுக்குரிய லட்சணங்கள் தப்பிப் பிறந்ததால் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட, என் பார்வையில் ‘நடிகர்களுக்கெல்லாம் திலகம்' என்று சொல்லக்கூடிய நாகேஷ் பெற்றெடுத்த வாரிசின் திரையுலக மீள்பிரவேசம். ஆனந்த்பாபுவும் ஏமாற்றிவிட்டார்.

கே.எஸ்.ரவிக்குமாரின் படங்கள் எப்படியாவது போட்ட முதலை எடுத்துத் தருமாம். இதுவும் எடுத்துத் தரும். ஆனால் கே.எஸ்.ஆர் தசாவதாரம் எடுத்த பின் அதே பிரமாண்டத்தை இதிலும் தரமுயன்று கவிழ்ந்திருக்கிறார். Better luck next time.

பேராண்மை
பலரும் கொண்டாடிய இயற்கை எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால் ‘ஈ' பார்த்த பின் எஸ்.பி.ஜனநாதன் மீது ஒரு மரியாதை இருந்தது. பேராண்மை பார்த்ததுக்கு ஒரே காரணம் அவரது இயக்கத்தில் வரும் படம் என்பதாலேயே.

அப்பட்டமாக அரசியல் பேசத் துணிந்த காரணத்துக்காகவே ஜனாவுக்கு ஒரு Royal Salute. வசனங்களைக் கண்டபடி கத்தரித்து படைப்பின் வீரியத்தை வலுவாகக் குறைத்திருக்கிறது இந்தியத் தணிக்கைக்குழு. ஆனால் 'ஈ' க்குப் பிறகு ஜனாவின் அடுத்த படம் இன்னும் வீரியமாக வரும் என்று பார்த்தால், ஏமாற்றம்தான் மிஞ்சியிருக்கிறது. சில வசனங்கள் மற்றும் காட்சிகளில் அமெச்சூர்த்தனம் விஞ்சி நிற்கிறது.

ஜெயம் ரவிக்கு குருவி தலையில் பனங்காய் நிலை. கஷ்டப்பட்டு சுமந்திருக்கிறார். அந்த ஐந்து பெண்கள் ஒன்றும் பேரழகிகள் இல்லை என்றாலும் கொடுத்த பணியை நிறைவாகச் செய்திருக்கிறார்கள். படத்தில் இவர்களைப் பார்க்கும்போது எரிச்சல் வருகிறதல்லவா? அதுதான் இயக்குனருக்கும் அந்தப் பெண்களுக்கும் வெற்றி. வடிவேலு வேஸ்ட். பொன்வண்ணன் துணிந்து சாதி வெறியை உமிழ்கிற ஒரு கதாபாத்திரத்தை செய்திருக்கிறார். இப்படியான கதாபாத்திரங்களை ஏற்கிற நடிகர்கள் கண்டுகொள்ளப்பட வேண்டும். என்ன, இவரது முக்கால்வாசி வசனங்களை தணிக்கை செய்தபடியால் பாத்திரப்படைப்பின் வீரியம் மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது.

காட்டில் வெள்ளைக்காரர்களோடு ஜெயம் ரவி+ 5 பெண்கள் மோதும் காட்சிகள் அநியாயத்துக்கு செயற்கைத்தனம். ஒரு forrest guard நவீனரக ஆயுதங்கள், ஒரு rocket launcher எல்லாவற்றையும் பற்றி விரல்நுனியில் அறிந்து வைத்திருப்பது விஜயகாந்த், அர்ஜூன் படங்களை நினைவூட்டுகிறது. ஜனநாதன் பொதுவுடமை, பழங்குடியினர் பிரச்சினை, முதலாளித்துவம், விவசாயம் அது இது என்று ஏகப்பட்ட விஷயங்களை ஒரே படத்தில் சொல்ல முயன்றிருக்கிறார். கொஞ்சம் over dose. இருந்தாலும், ஆதவன் போன்ற மட்டமான முயற்சிகளுக்கு இது எவ்வளவோ மேல்.

எரியும் நினைவுகள்- ஆவணப் படம்
நான் பிறப்பதற்கு முன் நடந்த, நான் செவிவழியாகக் கேள்விப்பட்ட ஒரு அநியாயம் பற்றிய ஆவணப்படம் இது. யாழ்ப்பாண மத்திய நூலகம் மே 31, 1981 ஞாயிற்றுக்கிழமை ஒரு திட்டமிட்ட கலவரத்தின்போது எரிக்கப்பட்டது. 97,000 புத்தகங்கள் தீயூட்டப்பட்டன. மீண்டும் தழைக்க முயன்ற நூலகம் திரும்பவும் 1985ல் மீண்டும் சேதமாக்கப்பட்டது. பின்னர் 1998ல் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவால் புதுப்பிக்கப்பட்டு, 2001ல் திறப்புவிழா செய்ய தடைகள் ஏற்பட்டு திறப்பு விழா இல்லாமல் இப்போது இயங்கிவரும் இந்த நூலகத்தின் கதையை ஆதி முதல் இன்றைய நிலைவரை படமாக்கியிருக்கிறார் சோமிதரன்.

வரலாறுகள் திருத்தி எழுதப்பட்டு பல உண்மைகள் புதைக்கப்படுகிற இந்தக் காலத்தில், யாழ்ப்பாண நூலக எரிப்பு, அதன் புனருத்தாரணம், இவற்றின் பின்னே இருந்த, இருக்கிற அரசியல் இவை பற்றிய செய்திகளும் திரிக்கப்படலாம் அல்லது இல்லாதொழிக்கப்படலாம். வரலாற்றில் ஒரு இனத்தின்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட மிக மிலேச்சத்தனமான ஒரு தாக்குதல் பற்றி வருங்காலத்தில் அந்த இனத்தின் சந்ததிகள் அறியாமல்கூடப் போய்விடலாம். காயங்களை மறந்தால்தான் சுபீட்சம் ஏற்படும் என்றால், தலதா மாளிகையின் கண்காட்சி அறையில் இருக்கிற தலதா மாளிகைத் தாக்குதல் சம்பந்தமான படங்களைச் சிங்களவர்கள் அகற்றுவார்களா என்றொரு கேள்வி இருக்கிறதல்லவா? நிச்சயமாக அகற்றமாட்டார்கள். அதே போல் எங்கள் காயம் பற்றிய ஆதாரங்களை எங்கள் மனதிலிருந்து அகற்றத் தம்மாலான முயற்சிகளைச் செய்வார்கள். அப்படியான முயற்சிகளைத் தாண்டி நிலைத்து நிற்கக்கூடிய அழியாத சரித்திரப் பதிவாக சோமியின் இந்த ஆவணப்படத்தைப் பார்க்கமுடிகிறது. சோமிக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.