Saturday 26 November 2011

தமிழ் விக்கி ஊடகப் போட்டி: எழுத்து மட்டுமே அறிவன்று

தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி ஒன்றை நடத்த உள்ளது. இதில் பங்கேற்போர் தமிழ்-தமிழர் தொடர்புடைய புகைப்படங்கள், ஒலிக் கோப்புகள், ஒளிக் கோப்புகள், அசைப்படங்கள், வரைபடங்கள் ஆகியவற்றைப் பதிவேற்றலாம். போட்டிக்காகப் பதிவேற்றும் கோப்புகள் பங்கேற்பாளரது சொந்தப் படைப்புகளாக இருக்க வேண்டும். இப்போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை 850 அமெரிக்க டாலர்கள். இப்போட்டியில் முதல் பரிசாக 200 டாலர்கள், இரண்டாம் பரிசாக 100 டாலர்கள், மூன்றாம் பரிசாக 50 டாலர்கள் என பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளன. ஆறுதல் பரிசாக 25 டாலர் வீதம் இரண்டு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. இவை தவிர தொடர்ச்சியாகப் பங்களிப்போருக்காக 100 டாலர் வீதம் மூன்று சிறப்புப் பரிசுகளும், தமிழர் தொழிற்கலைகளைப் பற்றிய சிறந்த ஊடகக் கோப்புக்காக 150 டாலர் சிறப்புப் பரிசாகவும் வழங்கப்பட உள்ளன.

போட்டி நவம்பர் 15, 2011 முதல் பெப்ரவரி 29, 2012 வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர் http://ta.wikipedia.org/wiki/contest என்ற இணையமுகவரிக்குச் சென்று முழு விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். போட்டி பற்றிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை tamil.wikipedia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தகுந்த பதில்களைப் பெறலாம்.

குறிப்பு:பரிசுத்தொகை வெற்றிபெறுபவரின் நாட்டின் நாணய அலகுக்கு மாற்றப்படும்.

Friday 18 November 2011

சமூக மாற்றத்துக்கான கல்வி- மேட்டிமைப்படுத்தலுக்கான கல்வி: முரண்கள்

சமூக ஏற்றத்தாழ்வுகளையும் கொடுமைகளையும் இல்லாமல் அழித்தொழிக்க சிறந்த ஒரே ஒரு ஆயுதமாகப் பார்க்கக்கூடியது கல்வி. கனடாவில் நடைபெற்ற குமார் மூர்த்தியின் பத்தாவது ஆண்டு நினைவு விழா அன்று பேராசிரியர் சின்னத்தம்பி அவர்கள் ‘கல்வியும் சமூகநீதியும்’ என்கிற பெயரில் ஆற்றியிருந்த சிறப்புரை இதுபற்றிய சிந்தனையைக் கிளறிவிட்டிருந்தது. சின்னத்தம்பி அவர்களின் உரையானது பெரும்பாலும் உயர்கல்வியைச் சம்பந்தமானதாகவே இருந்தது. இருந்தபோதும், எனது அனுபவத்தில் எங்களுடைய சமூகத்தில் சமூக நீதிக்கு உதவவேண்டிய கல்வியில் ஆரம்பநிலைகளிலேயே கோளாறுகள் இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன்.

என்னுடைய இளமைப்பருவத்தின் வளர் ஆக்கம் நாடக்கூடிய காலப்பகுதி யாழ்ப்பாணத்திலேயே கழிந்தது. வடமராட்சியில் பருத்தித்துறைப் பகுதியில் அமைந்திருக்கக்கூடிய ஹாட்லிக் கல்லூரியில் ஆறாம் வகுப்புத் தொடக்கம் பதின்மூன்றாம் வகுப்பு வரை படித்தேன். வடமராட்சியில் ஹாட்லிக் கல்லூரியில் கல்வி கற்பதென்பது பெரும் பேறாகவே கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. ஹாட்லிக்கல்லூரி, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி என்றவாறே “பெரிய பள்ளிக்கூட” வரிசை அமைந்திருந்தது. அதே போல் மகளிர் கல்லூரிகளுக்கும் பருத்தித் துறை மெதடிஸ்த மிசன் பெண்கள் கல்லூரி, வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி, வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி என்பதாக அந்த வரிசை அமைந்திருந்தது. இங்கே உச்சாணிக்கொப்பாக இருக்கிற ஹாட்லிக் கல்லூரி, மெதடிஸ்த மிசன் பெண்கள் கல்லூரி மற்றும் வட இந்து மகளிர் கல்லூரி ஆகியவற்றிலும், யாழ்ப்பாணத்தின் ஏனைய “பெரிய” பாடசாலைகளான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி, சென். ஜோன்ஸ் கல்லூரி, சென்.பற்றிக்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி போன்ற பாடசாலைகளிலும் என்னைப் பொறுத்தவரை இன்றுவரைக்கும் சமூகநீதி நோக்கிய கல்வியும், சமூகநீதி தொடர்பான பார்வையும் இருந்ததில்லை என்பதை நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். அதற்கான காரணங்களை வருகிற பகுதிகளில் ஆராய்வோம்.

இந்தப் பாடசாலைகளில் தமது பிள்ளைகள் கல்வி கற்பதை பெருமையாகக் கருதுகிற மனப்பாங்கு எங்கள் பிரதேச மக்களிடம் இருக்கிறது. அதற்குக் காரணம், இந்தப் பாடசாலைகளில் தரத்தில் மிகவும் உயர்ந்த கல்வி கிடைப்பதாக கட்டமைக்கப்பட்ட விம்பமேயாகும். இதை ஒரு விம்பம் என்று எப்படிக் குறிப்பிடமுடியும் என்று இங்கே கேள்வியெழுப்பல் அவசியமாகிறது. தனியார் பாடசாலைகள் அதிகளவு செல்வாக்குச் செலுத்துகிற நாடுகளில் (இந்தியா) கல்வித்தரம் பற்றிய பிரச்சினைகள் இருக்கும். ஆனால், ஒரே பாடத்திட்டம் அமுலில் இருக்கக்கூடிய இலங்கைப் பாடசாலைகளான ஹாட்லிக் கல்லூரிக்கும், நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்துக்கும் கல்வித் தரத்தில் அப்படிப் பெரிதாக என்ன வித்தியாசத்தை எம்மால் எடுத்துச் சொல்லிவிட முடியும்? நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் அமைந்திருந்த பிரதேசத்தில் வாழ்ந்த நான் தினமும் 20 கிலோ மீற்றர்கள் பயணம் செய்து ஹாட்லிக்கல்லூரிக்குச் சென்றதும், ஹாட்லிக் கல்லூரி இருக்கிற பிரதேசத்தில் இருக்கிற என் வயதொத்த இன்னொரு மாணவர் அதே இருபது கிலோ மீற்றர்கள் பயணம் செய்து நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்துக்குப் படிக்க வந்ததும் மிகவும் முரண்பாடான கேள்விகளைத் தோற்றுவிப்பது தவிர்க்கமுடியாதது. மேலும் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தை விட ஹாட்லிக் கல்லூரியில் படித்தால் எனது பிள்ளைக்கு தரமான கல்வி கிடைக்கும் என பெற்றோர்கள் நம்புவதற்கு ஏதாவது வலுவான காரணம் இருக்கமுடியுமா என்று கேட்டால், காரணம் இருக்கிறது என்றே சொல்லலாம். ஹாட்லிக் கல்லூரியில் மட்டுமல்லாமல், யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான “மேல்தட்டு” பாடசாலைகளில் இதற்கான திட்டமிடலும், செயற்பாடுகளும் கனகச்சிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதை சமூக அக்கறையோடு உற்று நோக்குகிற யாருமே விளங்கிக்கொள்ளலாம்.

இந்தப் பாடசாலைகள் பெரும்பாலும் ஆறாவது வகுப்பில் மாணவர்களைச் சேர்ப்பதில் ஒத்த நடைமுறைகளையே பயன்படுத்துகிறார்கள். தற்போதைய நிலமையில் எந்தப் பாடசாலைகள் யார் யாரை தமது பாடசாலைகளில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்பதை இவர்கள் பயன்படுத்திய அதே நடைமுறையை உத்தியோகபூர்வமாக்கியிருக்கிறது கல்வித் திணைக்களம். இன்றைய நிலையில் இப்பாடசாலைகளில் ஆறாம் வகுப்பில் சேர்கிற மாணவர்கள் அவர்களது ஐந்தம் வகுப்புப் புலமைப் பரிசில் பரீட்சை மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்தப் பரீட்சை ஒரு மாணவனின் எதிர்காலத்தைக் கல்வியியல் ரீதியாகத் தீர்மானிக்காவிட்டாலும், சமூகவியல் ரீதியாகத் தீர்மானிப்பதில் ஓரளவுக்காவது செல்வாக்குச் செலுத்துகிறது. அதாவது,  இலகுவாக நல்ல பெறுதிகளைப் பெறக்கூடிய மாணவர்களை நன்றாக வடிகட்டி எடுத்துக்கொள்ளுதல் அல்லது பெறுபேறுகளைப் பெற முடியாதவர்களை வெளியே தள்ளிவிடல் என்பது காலம் காலமாக இத்தகைய பாடசாலைகளில் நடைபெற்று வருகிறது. அதன் பின் இப்படியான பாடசாலைகளில் திறமைக்குப் புறம்பாக ஏற்றுக்கொள்ளப்படுபவர்கள் சமூகத்தில் மேன்மையான நிலையில் இருக்கக்கூடிய மக்களின் பிள்ளைகள். இப்போது யாழ்ப்பாணத்தில் சில பாடசாலைகளின் அனுமதிகிடைப்பது பெற்றோர் கொடுக்கக்கூடிய நன்கொடையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இப்படி வடிகட்டி எடுக்கப்படுகிற மாணவர்கள், எப்படியாவது முட்டிமோதி சமூகத்தில் நல்லநிலைக்கு, செல்வாக்குள்ளவர்களாக வருகிறார்கள். அதிலும் முக்கியமாக, கல்வித்துறையில் இம்மாணவர்கள் சேவையாற்ற வரும்போதுதான் சமூகநீதிக்கான கல்வி பற்றிய கோட்பாடுகள் ஆட்டம்கண்டு போகின்றன. 

மேற்படி பாடசாலைகளுக்கு வலுவான பழைய மாணவர் சங்கங்கள் உண்டு. மேலும், கோட்டக் கல்வித் திணைக்களம், வலயக் கல்வித் திணைக்களம் போன்ற கல்வி நிருவாகவியல் சார்ந்த தளங்களிலும் இப்பாடசாலைகளின் பழைய மாணவர்கள் இருக்கிறார்கள் அல்லது அந்தத் தளங்களில் இருப்பவர்கள் மீது செல்வாக்குச் செலுத்தக்கூடிய தளங்களில் பழைய மாணவர்கள் இருக்கிறார்கள். இங்கேதான் சமநிலை முற்றாகக் குழம்பிப் போகிறது. நல்ல பெறுபேறுகளைப் பெறக்கூடியவர்கள் என வடிகட்டப்பட்ட இந்த மாணவர்களுக்கு, நல்ல ஆசிரியர்கள், நல்ல திட்டங்கள் போன்ற எல்லாமே நல்லதாகக் கிடைக்க ஆரம்பிக்கிறது. அப்படிக் கிடைக்கத் தொடங்கியதும் அவர்கள் தருகிற பெறுபேறுகளும் நல்லவையாகவே இருக்கின்றன. இதன் மூலம் இப்பாடசாலைகளின் மேட்டிமைத்தனம் மேலும் மேலும் நிரூபணமாகி வளர்த்தெடுக்கப்படுகிறது. இந்தப் பாடசாலைகளில் அடித்தட்டைச் சேர்ந்த சிறிய தொகையேயான மாணவர்கள் ‘நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்குமாங்கே பொசியுமாம்’ என்பது போல பயனடைகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இருந்தபோதும் இப்படியான கல்விமுறையானது திரும்பத்திரும்ப ஒரு மேட்டிமைச் சமூகத்தைக் கட்டியெழுப்புவதிலேயெ முன்னிற்கிறது என்பது வெட்ட வெளிச்சம். இதை உடைப்பதில் பெரும் தடையாக இருப்பது இந்தப் பாடசாலைகள் தம்மைச் சுற்றி எழுப்பிவைத்திருக்கிற ஒளிவட்டமும், இந்தப் பாடசாலைகளில் கற்று வெளியேறுகிற மாணவர்களின் மத்தியிலே இயல்பாகவே விதைக்கப்படும் மேட்டிமைத்தனமுமே என்பதை மறுப்பதற்கில்லை. மேலும், பாடசாலைகளுக்கு வளங்களை ஒதுக்குவதில், முக்கியமாக பாடசாலைகளின் முக்கிய வளமான ஆசிரியர்களை ஒதுக்கும்போது கல்வித் திணைக்களம் நியாயமற்ற முறையில் நடந்துகொள்வது கண்கூடு.  நண்பர் ஒருவர் ஒருமுறை பேசும்போது “வடமராட்சி கிழக்கில இருக்கிறவனுக்கு எல்லாம் என்னத்துக்கு நல்ல வாத்திமார். அவங்களைத் தூக்கி எங்கட பள்ளிக்கூடங்களில போட்டாத்தான் சரி. அப்பிடியெண்டாத்தான் கூடப்பேர் யூனிவேசிற்றி போவாங்கள்’ என்ற போது அதிர்ச்சியாக இருந்தது. வளங்கள் மறுக்கப்பட்ட பிரதேசங்களுக்குக் கூடிய வளங்களைக் கொடுப்பதில் உரிமைகள் மறுக்கப்பட்ட நாங்களே எவ்வளவு மோசமான மனோநிலையுடன் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்குரியதும் வெட்கப்படவேண்டியதுமான ஒரு செயலே.

இன்றைக்கு ஓரளவுக்கு இந்த நிலையில் மாற்றங்கள் தென்பட ஆரம்பித்திருப்பதற்கு முக்கிய காரணமாக தனியார் கல்வி நிறுவனங்களையே (Tuition Centers) பார்க்கலாம். யாழ்ப்பாணத்தில் அதிகளவு பணம் புரள்கிற ஒரு தொழிலாக இந்தத் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் தொழில்களைப் பார்க்கலாம். அதற்காக அந்தக் கல்வி நிறுவனங்களில் கற்பிக்கக்கூடிய ஆசிரியர்கள் மீது முழுமையாக நாங்கள் பழிபோட்டுவிட முடியாது. இன்றைக்குக்கூட ‘குரு-சிஷ்ய’ உறவுக்கு மேலாக ‘பெற்றோர்-பிள்ளை’ உறவு போலத் தொடர்கிற இந்தத் தனியார் கல்விநிலைய ஆசிரியர்- மாணவர் உறவைக் காணமுடியும். முழுமையான அர்ப்பணிப்போடு கற்பிக்கிற அந்த ஆசிரியர்களை இந்த சமூகநீதி தொடர்பான பார்வையின்மைக்குக் காரணமான குற்றவாளிகளாகக் காட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை. கல்வி சந்தைப்படுத்தப்படுவதற்கு ஏதுவாக இருந்த முழுச் சமூகமும் இந்த விடயத்தில் குற்றவாளிகளே. கல்வியின் சந்தைத் திறலைச் சரியாக உணர்ந்துகொண்ட சில தனியார் கல்வி நிலைய உரிமையாளர்கள் வந்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பற்றிக்கொண்டார்கள். இந்த நிறுவனங்கள் மேற்படி மேற்றட்டுப் பாடசாலைகள் உருவாக்கிய மாயவிம்பத்தை ஓரளவுக்குச் சரிசெய்தாலும், அவை இன்னொருவகைச் சமச்சீரற்ற தன்மையை உருவாக்க ஆரம்பித்திருக்கின்றன. அதாவது, ஆசிரியர்களின் கற்பித்தல் திறனிலிருக்கக்கூடிய வேறுபாடுகளை இந்தத் தனியார் நிறுவனங்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த ஆரம்பித்தன. அதாவது நன்றாகச் சொல்லித்தரக்கூடியவராகக் கருதப்பட்ட ஆசிரியர்களை இந்நிறுவனங்கள் வடிகட்டித் தமதுடமைகளாக ஆக்கிக்கொள்ளத் தொடங்கின. இந்நிலை காரணமாக இந்தக் கல்வி நிறுவனங்களுக்கு இடையில் கூட மேலே சொன்ன ‘மேற்றட்டுப் பாடசாலைகள்’ மற்றும் ஏனைய பாடசாலைகளுக்கு இடையே இருந்த சமச்சீரற்ற தன்மை இக்கல்வி நிலையங்கள் மத்தியிலும் தோன்ற ஆரம்பித்திருக்கிறது.

இந்த சமச்சீரற்ற தன்மையை மாற்றுதல் தொடர்பில் மிகச் சிலரே ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக என்னோடு இதே சமூகத்தில் படித்து பொறியியலாளராக (அதாவது, எமது சமூகத்தின் மேன்மை மிகு தொழில் செய்பவராக) இருக்கிற நண்பர் ஒருவர் கல்வியின் சமூகநீதி தொடர்பான பாத்திரத்தை மறுதலிக்கக்கூடிய கல்வியியலாளர்களை நோக்கிக் காட்டமான ஒரு கேள்வியை முன்வைத்திருந்தார். 1985 ம் வருடம் பேராசிரியர் அழகையா துரைராசா அவர்கள் தமிழர் பிரதேசங்களுக்கான பொறியியல் பீடம் பற்றி வைத்த கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதில் இருக்கிற மோசமான குழிபறிப்புகள் பற்றியதாகவே அவரது கேள்வி அமைந்திருந்தது. அது தொடர்பில் அவர் எழுதிய பத்தியின் சில பகுதிகளை இங்கே தருகிறேன்.

மறைந்த முன்னாள் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரான மாமனிதர்.பேராசிரியர் அழகையா துரைராஜாவினால் 1985 ஆம்
ஆண்டு சமர்ப்ப்பிக்கப்பட்ட திட்டம் இன்று 25 வருடங்களைத் தாண்டியும்
கோப்புக்குள்ளேயே திட்டமாக இருந்து கொண்டிருக்க, 1999 ஆம் ஆண்டு முன்னாள் கல்வியமைச்சர் றிச்சட் பத்திரணவினால் சம்ர்ப்பிக்கப்பட்ட உறுகுணுப் பலகலைக்கழகத்தின் பொறியியல்ப்பீடம் இப்போது 10 வருடங்களைத் தாண்டி வெற்றிகரமனானதொரு பொறியியல்ப்பீடமாக மொறட்டுவை,பேராதனைக்குப் பின் அணி வகுக்கத் தொடங்கிவிட்டது. பொறியியல்ப் பீடத்தை தொடங்குவதில் இருந்த வாதப்ப்ரிரதிவாதத்தை விடுத்து அதன்
அமைவிடம், கிளிநொச்சியிலா யாழ்ப்பாணாத்திலா என்பது தொடர்பில் மேலும் காரசாரமான வாத்ப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.இது தொடர்பாக யாழ்மாவட்டப் பொறியியிலார்களுக்கிடையே பேராசிரியர் இரட்ணஜீவன் ஹூல் தலைமியேற்று நடாத்திய கூட்டத்தில் பங்குபற்றும் சந்தர்ப்பம் எனக்குக்கிடைத்தது.
 
மாணவர்,விரிவுரையாளர்களுக்கு ஏற்படும் வசதியீனக்களை முதன்மையகாக வைத்து ஹூலின் யாழ்பாணத்தில்தான் பீடம் அமைய வேண்டும் என்று விரும்புகிறார்(இப்போது ஹுல் நாட்டை விட்டு வெளியேறியிருந்தாலும் அந்தக் கூட்டத்தில் இதுவே அலசப்பட்டது நீண்ட நேரமாக).ஆனாலும் நீண்டகால அடிப்படையிலும் ஒட்டுமொத்த தமிழர் என்ற அடிப்ப்டையிலும் நோக்கினால் பேராசிரியர் துரைராஜாவின் கனவுப்படி கிளிநோச்சியில் ஆர்ம்பிப்பதனால் போரினால் மிகவும் சுக்குநூறாகிய அந்தப்பிரதேசம் அபிவிருத்திடியடையக்கூடியாதாக இருக்கும்.எமது இரத்த உறவுகள் மூன்று இலட்சம் பேர் உள்ளே இருந்தது தெரிந்திருந்தும் போருக்கு ஆணையிடச் சொல்லிவிட்டு போர் முடிந்த பின்னும் அதைப்ப்ற்றி ஆராய்ந்து,அதன் சரி பிழைகளைக் கதைத்து, அதன்மூலம் மிகச்சிறந்த அரசியல் அறிஞர்களாய் எங்களைக் காட்டிகொள்வதை விடுத்து நாங்கள் எதையும் பெரிதாய் செய்துவிடவில்லை. நான்காம் ஈழப் போரின் முழுவதையும் மூன்றாம் ஈழபோரின் பெரும்பகுதியையும் தம் தோளிலே சிலுவையாய் சுமந்த மூன்று இலட்சம் யேசுபிரான்கள் அவர்கள். அவர்கள் பிரதேசத்தில் அந்தப்பல்கலை அமந்து,அது நாளை ஆயிரமாயிரம் பொறியிலாளர்களை ஈன்று தரும் போது அந்த "அப்பாவி" சனங்களின் முகத்தில் வரும் சந்தோசத்தைக் காணும் போது எம் முகத்தில் வரும் பாருங்கள் ஒரு பூரிப்பு அதற்கு நிகராக ஒன்றும் இருக்காது இந்த உலகத்தில்.
மேற்படி துரைராசா அவர்களின் பிரேரணை ஓரளவுக்காவது கைகூடி வருவதைத் தடுப்பதில் முன்னிற்பவர்கள் யாரென்று பார்த்தால், கல்வி மூலமாகத் தம்மை மேட்டிமைப்படுத்திக்கொண்ட கல்வியியலாளர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் போன்றோரே. நல்லவேளை, மேற்படி நண்பர் போன்ற பரந்துபட்ட பார்வையுள்ளவர் சிலரும், சமூகம் தொடர்பான போராட்டங்களை முன்னெடுக்கிற ஆர்வலர் சிலரும் இருப்பதாலேயே ஓரளவுக்காவது பாதிக்கப்பட்ட மக்கள், அடித்தட்டு மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குறைந்தபட்ச நியாயமாவது கிடைக்கிற சாத்தியக்கூறுகள் பற்றிய நம்பிக்கைகள் இன்றைக்கும் குறைவின்றி இருக்கின்றன.

ஆயிரக்கணக்கான வருடங்களாக எம்மிடையே வாழ்கிற எமது சகோதரர்களையே முறையற்ற ஒடுக்குமுறைக்கு ஆளாக்கி வந்திருக்கிறோம். இந்தச் சமூக ஏற்றத்தாழ்வுகளை, ஒடுக்குமுறைகளை, வன்கொடுமைகளை இல்லாமலொழிக்கக்கூடிய வல்லமை மிகுந்த ஒரே ஆயுதம் கல்வி. சமூக மாற்றத்துக்காக மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட எமது இன விடுதலைக்காகவும் அனைவருக்குமான கல்வி அத்தியாவசியமாகிறது. இவ்வாறாக மனித நாகரிகத்தின் முக்கிய கூறான கல்வி சந்தைப் பொருளாவதையும், அது சரியான முறையில் கிடைக்கவேண்டியவர்களுக்குக் கிடைக்காமலிருப்பதையும் கண்டுகொள்ளாமல், கிடைக்கிற வரைக்கும் இலாபம் என சிந்திக்கும் திறணை, பகுத்தறிவைத் தன்னுள்ளே கொண்ட மனித குலம் சுரணையற்றிருப்பது மானுட குல வரலாற்றில் அழியாத கறை. 

Monday 24 October 2011

அடேலின் கைக்குட்டை-விமர்சனம் மற்றும் விசனம்

தமிழர் வகைதுறைவள நிலையத்தின் (தேடகம்) 20 ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தேடகம் மற்றும் தவநி கலையாற்றுக் குழு வழங்கிய அரங்கின் குரல் நிகழ்வு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் (22-23/10/2011) அன்று Toronto Yorkwoods Library Theater அரங்கில் நடைபெற்றது. சனிக்கிழமை அமர்வுக்குச் சென்று வசந்தா டானியலின் நெறியாள்கையில் உருவான “உயிர்ப்பு” என்கிற நாட்டிய நாடகத்தையும், பா.அ.ஜயகரனின் நெறியாள்கையில் உருவான “அடேலின் கைக்குட்டை” என்கிற நாடகத்தையும் பார்க்கிற வாய்ப்புக் கிட்டியது.

“அடேலின் கைக்குட்டை”-விமர்சனம்

“அடேலின் கைக்குட்டை” என்கிற பெயரில் ஜூன் - ஓகஸ்ற் 2009 காலம் இதழிம் பா.அ.ஜயகரன் எழுதிய சிறுகதையின் நாடகவடிவத்தை பா.அ.ஜயகரன் மேடையேற்றியிருக்கிறார். மிகவும் முக்கியமான ஒரு காலகட்டத்தில் வந்த அந்தக் கதை போரின்போது பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறை பற்றியதாக அமைந்திருந்ததும், இலங்கையில் நடந்த கொடூரமான யுத்தத்தைத் தொடர்ந்த காலங்களில் எழுதப்பட்டதும் இக்கதையின் முக்கியத்துவத்தை அதிகரித்திருந்தன என்றே கூறலாம். விமர்சகர்/நண்பர் அருண்மொழிவர்மன் மூலம் கிடைத்த அறிமுகத்தூடாக காலம் இதழில் இக்கதையை ஏலவே வாசிக்கிற வாய்ப்பும் கிட்டியிருந்தது. கதையைக் கிட்டத்தட்ட அப்படியே அரங்கேற்றியிருந்தார்கள், (மூலச் சிறுகதையில் அடேலோடு சேர்ந்து ஆறு பெண்கள் ஆறு கைக்குட்டைகள், நாடகவடிவத்தில் அடேலதும், எலனோரதும் பெயர் பொறித்த ஒரே கைக்குட்டை) . நாடக அரங்கில் தரப்பட்ட கையேடு ஒன்றில் “அடேலின் கைக்குட்டை”க்கான அறிமுகம் பின்வருமாறு அமைந்திருந்தது:

போர்களின் போது பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறையை இவ் நாடகம் வெளிக்கொணர்கிறது. இதன் கதை மையம் 1940 களின் ஜாவா, இந்தோனீசியா. 1941-42 காலப்பகுதியில் ஜப்பான் டச்சுக்காரர்களிடமிருந்து ஜாவாவைக் கைப்பற்றுகிறது. இதன் பிற்பாடு ஜப்பானியர்களால் டச்சு, ஜாவா பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறையை இவ் நாடகம் பேசுகிறது.

தற்போது கனடாவில் வசிக்கும் வயோதிபப் பெண் அடேலின் நினைவின் கோர்வையாக கதை சொல்லப்படுகின்றது. அடேலும் ஏனைய பெண்களும் பாலியல் தேவைகளுக்காய் பலாத்காரமாக ஜப்பானிய முகாம்களுக்கு கொண்டு வரப்படுகிறார்கள். இவர்களைப் பராமரிக்க டச்சு-ஜாவா கலப்புப் பெண்ணான எலனோர் கொண்டுவரப்படுகிறாள். டச்சுக்காரரின் பாலியல் பலாத்காரத்தால் பரம்பரை பரம்பரையாக பாலியல் தொழில் செய்யும் பின்னணி கொண்டவள் எலனோர். ஆண்களின் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இவ்விரு பெண்களின் மனப்போராட்டமாக இவ் நாடகம் நகர்கிறது.

பாதிக்கப்பட்ட இப்பெண்கள் நீதி கேட்டு இன்றும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஜப்பானிய அரசோ இக்கொடுமைகளை மறைத்தும், மறுத்தும் வருகிறது. போர்களின் போது பெண்களின்மீது இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி வேண்டி ஒலிக்கும் குரல்களில் ஒன்றாய் இவ் நாடகமும் ஓங்கி நிற்கும்

பா.அ.ஜயகரனின் முத்திரை நன்றாகவே பதிந்திருந்த இந்த நாடகத்தில் பங்குகொண்ட நடிகர்கள் சிறப்பாகத் தங்கள் பங்களிப்புகளை ஆற்றியிருந்தனர். ரொறன்ரோ நகரின் நவீன நாடகங்களின் அறிந்த முகங்களான சத்யா தில்லைநாதன், தர்ஷன் சிவகுருநாதன் போன்றவர்களின் பங்களிப்பு இருந்த நாடகத்தில் நடிகர்களின் பக்கம் பலமாகவே இருக்கும் என்பது ஐயமில்லை. அடேலாக நடித்த சத்யா தில்லைநாதனும் எலனோராக நடித்த அதீதாவும்தான் நாடகத்தின் தூண்கள். நாடகத்தில் அதிக காட்சிகளில் தோன்றிய ஆண் நடிகர்களின் முக்கிய வேலை வன்புணர்வதாகவே இருந்தபோதிலும் கிடைத்த சந்தர்ப்பங்களில் தேவையானளவு நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள். டச்சுப் பாதிரியாக நடித்த முத்துகிருஷ்ணனின் பங்கும் நிறைவாகவே இருந்தது. இருந்தபோதும் சத்யா தில்லைநாதன் மற்றும் அதீதா ஆகியவர்களின் முன்னால் மற்றவர்களின் நடிப்பு ‘சூரியனை விளக்கடித்துத் தேடுவது’ போன்றிருந்தது. நாடகத்தின் மிகப்பெரிய பலம் “போர்ச்சூழல்களிலெல்லாம் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையைக் கேள்வியெழுப்பல்” என்கிற மைய நோக்கமே.

நாடகத்தின் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இரண்டு காட்சிகள் இருக்கின்றன. ஒன்று, ‘புதிய பெண்கள்’ வேண்டுமென்பதால் மீண்டும் முகாமுக்கே திருப்பி அனுப்பப்படும் அடேல் (Use and Throw policy) அவர்களின் தேவாலயப் பாதிரியைச் சந்தித்து பாவமன்னிப்புக் கேட்கிறார். பாதிரியும் பாவமன்னிப்பு வழங்குகிறார். பின்னர் அடேல் தான் கன்னியாஸ்திரி ஆவதற்கு பாதிரியிடன் அனுமதி கேட்க, பாதிரி சொல்வார் “நீ கன்னியாஸ்திரி ஆவதில் ஆண்டவருக்கு விருப்பம் இல்லை போலிருக்கிறது” என்று. நிறுவனமயப்படுத்தப்பட்டுவிட்ட மதங்கள் மீதான அருமையான நக்கல் இந்தக் காட்சி. இன்னொரு காட்சியில் எலனோர் நிலத்தைச் சுத்தம் செய்வாள். அவள் சுத்தம் செய்கிற இடங்கள் கொஞ்ச நேரத்துக்கு கறுப்பாக மாறும். இது தற்செயலாக அரங்கின் ஒளி அமைப்பின் காரணமாக ஏற்பட்டதா, அல்லது நெறியாள்கையாளரான பா.அ.ஜயகரன் தெரிந்தே செய்த காட்சியமைப்பா தெரியவில்லை. சுத்தம்-கறுப்பு என்கிற இணை அமைந்த அந்தக் காட்சி நெறியாள்கையாளரால் தெரிந்தே அமைக்கப்பட்டிருக்குமாயின், நெறியாள்கை செய்த ப.அ.ஜயகரன் பாராட்டுக்குரியவரே.

நாடகத்தில் முரண்பாடான சில விடயங்களும் இருந்தன. நாடகத்தில் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களும், வன்முறைக் காட்சிகளும்’ இருப்பதால் சிறுபிள்ளைகளை அரங்கின் கீழேயுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் விடுமாறு கேட்டுக்கொண்டார்கள். அதே போலவே வன்முறைக்காட்சிகள் நிறைய இருந்தன. ‘வேசி’ எனும் சொல் அடிக்கடி கையாளப்பட்டது. ஒரு தம்பதி நாடகத்தின் நடுவே வெளியேறினார்கள். வேறு சிலபேர் முகம் சுழித்தார்கள். பொதுமேடைகளில் இதை சிலர் ஏற்றுக்கொள்வது அவர்களைப் பொறுத்தவரை கடினமே. ஆனால் முக்கிய பிரச்சினை இதுவல்ல. கடுமையான வார்த்தைகள் மற்றும் வன்முறைக்காட்சிகள் நிறைந்த ஒரு நாடகத்தில், குழந்தைகளை அரங்கை விட்டு அப்புறப்படுத்துமாறு வேண்டுகோளோடு ஆரம்பித்த நாடகத்தில், நான்கு குழந்தைகள் நடித்திருந்தார்கள் என்பதுதான் பிரச்சினை. மேலும், அடேலை ஜப்பானிய கேணல் ஒருவர், சிப்பாய் ஒருவர், வைத்தியர் ஒருவர் வன்புணர்வதான காட்சிகள் இருந்தன. திரைமறைவுக்கு அடேலை அவர்கள் இழுத்துச் செல்வதும், அங்கிருந்தான குரல்களின் மூலமாக பார்வையாளருக்கு என்ன நடக்கிறது என்பது சுட்டிக்காட்டப்பட்டிருந்தபோதும் மேற்படி காட்சிகளில் ஒன்றிரண்டைக் குறைத்திருக்கலாம் என்பது நாடகத்தின் பின்னர் தனியாகப் பேசிய நண்பர்கள் சிலரின் அபிப்பிராயமாக இருந்தது.

பா.அ.ஜயகரனின் “அடேலின் கைக்குட்டை”  நாடகத்தின் கருப்பொருள் மிகவும் முக்கியமானது, அதுவும் இன்றைய காலகட்டத்தில். அவ்வகையில் கனேடிய தமிழ் மேடைநாடகச் சூழலில் இந்த நாடகத்துக்கும் ஒரு முக்கிய இடம் இருக்கிறது.

“அடேலின் கைக்குட்டை”-விசனம்

நாடகம் மற்றும் சிறுகதையின் கருப்பொருளில் ஒத்துப்போனாலும், கதைக் களனான ஜாவாத் தீவு மற்றும் ஜப்பானிய-டச்சு யுத்தகாலத்துடன் ஒன்றிப்போக முடியவில்லை. காரணம், நான் பிறந்த நாட்டில் என்னுடைய இனத்தைச் சேர்ந்த பெண்கள் மீது இந்த வன்முறை இன்றைக்கும் பாவிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. முன்பு வன்புணர்வு செய்தார்கள், இன்றைக்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்துமாறு வற்புறுத்துகை செய்கிறார்கள். இப்படியிருக்கையில், ஓரளவாவது கருத்துச் சுதந்திரம் இருக்கிற கனேடியமண்ணில் தனது படைப்புக்களை வெளியில் கொண்டுவரும் ஒவ்வொரு படைப்பாளியும் அங்கீகரிக்கப்பட்ட அடக்குமுறையான அரச வன்முறைக்கு எதிராக உரத்துக் குரலெழுப்பவேண்டும். அதுவும் தனது கொள்கைகள் தொடர்பில் நேர்மையாகச் செயற்படுபவர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாலும், விமர்சகர்களாலும் ஒருங்கே நோக்கப்படுக் ப.அ.ஜயகரன் தான் எழுதிய சிறுகதையை நாடகமாக்கும்போதாவது கதைக் களனை மாற்றியிருக்கலாம் என்பது என்னுடைய அபிப்பிராயம். அல்லது ஆகக்குறைந்தது மண்டபத்தில் தந்த துண்டுபிரசுரத்தில் இற்றைவரை ஜாவாப் பெண்கள் மீதான வன்முறைகளை ஜப்பான் அரசு மறைத்தும் மறுத்தும் வருவதாகச் சொன்ன பா.அ.ஜயகரன், தேடகம், தவநி கலையாற்றுக் குழு இவர்கள் யாருக்கும் அந்தத் துண்டுப்பிரசுரத்திலாவது இலங்கை அரசைக் கண்டிக்கிற எண்ணம் இல்லாமலிருந்தது வருத்தத்துக்குரியது. பக்கத்து வீட்டு நிலவரம் தெரிகிறது, பக்கத்து ஊர் நிலவரம் தெரிகிறது, பக்கத்து நாட்டு நிலவரம் தெரிகிறது, ஏன் பக்கத்துக் கிரகத்து நிலவரம்கூடத் தெரிகிறது. ஆனால், வீட்டு முற்றம் எங்கள் கண்களுக்குத் தெரிவதேயில்லை. சிலவேளை சி.கா. செந்தில்வேல் போன்ற பொய்யுரைஞர்கள் யாராவது ‘புலிகளும் இப்படிப் பாலியல் வதை முகாம்கள் வைத்திருந்தார்கள்’ என்று புழுகியிருந்தால் இந்த நாடகத்தின் களம் இலங்கைத் தீவாக இருந்திருக்குமோ? வேறுபாடுகளை மறவுங்கள் என்று நான் கேட்கவில்லை. பழைய தவறுகளைத் திருத்தவேண்டாம் என்று தடுக்கவில்லை. ஆனால், மாற்றரசியல் என்றால் தனியே புலித்தூற்றல் மட்டுமல்ல, அங்கீகரிக்கப்பட்ட வன்முறையான அரசாங்க வன்முறைகளுக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்டிருக்கிற மக்களின் சார்பாகவும் குரலை உயர்த்தவேண்டிய கடமை எமக்கிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடலாகாது. இது வெறுமே ஒரு நாடக உத்தி, நாம் எம் பெண்களின் துயரையும் சேர்த்தே சொன்னோம் என்கிற கண் துடைப்பெல்லாம் வேண்டாம். இலங்கைத் தீவில் பிறந்த ஒடுக்கப்பட்ட ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு கலைஞனுக்கான அடிப்படை நேர்மையிலிருந்து பா.அ.ஜயகரன் கொஞ்சம் வழுவிவிட்டார் என்றே சொல்லவேண்டும்.

பிற்சேர்க்கை: சி.க.செந்தில்வேலை ‘பொய்யுரைஞர்’ என்று விளித்தது மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் பாவித்த பிழையான சொல்லாடல் என்பதாக நண்பர் ஒருவரின் சுட்டிக்காட்டலின் உணர்கிறேன். அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இணையத்தில் விடுத்த கருத்தைத் திரும்ப வாங்குவதும் மறைப்பதும் இலகு, ஆனால் நேர்மையில்லை என்பதை உணர்ந்திருப்பதால் பதிவில் மாற்றம் செய்யவில்லை

நவம்பர் 30, 2011

Saturday 15 October 2011

எனக்குச் சிவப்பு நிறம் பிடித்திருக்கிறது

உந்தையும் எந்தையும் ஒரு வயிற்றுச் சோதரர்
உன் தாயும் என் தாயும் தோழியர்
நீயும் நானும் விளையாடித்திரிந்த செம்பாட்டுப் புழுதி
என்றைக்கும் புட்டத்தில் ஒட்டியிருக்கிறது
ஐந்து ரூபாய் ‘ஐஸ் பழம்’ ஒன்று இருவர் நாவிலுங்கரைந்திருக்கிறது
முழங்கால் தழும்பினுள்ளே உன் எச்சில் ஒளிந்திருக்கிறது
உனக்குச் சின்னதாய்ப்போன கால்சட்டை ‘சிப்’
தந்த வடு என் சர்க்கரையில் உறுத்திக்கொண்டே இருக்கிறது

தள்ளுவண்டியில் என்னைத் தள்ளிக்கொண்டும்
எனக்குப் போட்டியாக வீரிட்டு அழுதுகொண்டும்
எனக்கு முதலே உனக்கு வந்துவிட்ட பல்லைக் காட்டிக்கொண்டும்
என் கையிலிருந்த பொம்மையைப் பிடுங்கியபடியும்
உன்வீட்டு பொம்மையை எனக்குத் தந்தபடியும்
என் தாயின் மார்பில் முகம் புதைத்துக்கொண்டும்
என்னை முத்தமிட்டுக்கொண்டும்
ஒரு யோகியின் முனைப்புடன் ’படலத்துக்கு’ ‘டிசைன்’ வெட்டிக்கொண்டும்
வெள்ளைச் சட்டையில் பள்ளிக்கூடத்துக்கு வழிநடத்திக்கொண்டும்
சைக்கிள் ‘கரியலில்’ என்னைச் சுமந்துகொண்டும்
என் சைக்கிள் பாரில் இருந்து டபிள்ஸ் போட்டுக்கொண்டும்
உன் பதின்மத்து துணையருகில் வெட்கச் சிரிப்போடும்

என் ஞாபக அடுக்குகளில்

அம்மையாய்
அப்பனாய்
பிள்ளையாய்
சகோதரமாய்
தோழமையாய்
இனிய எதிரியாய்
காதலாய்
குருவாய்
எல்லாமுமாய்
நீ இருக்கிறாய்.

ஆனால் நாயே... உன்னை நான் கொல்லவேண்டும்

ஏனென்றால்,

உனக்கு இளஞ்சிவப்பு நிறம் பிடித்திருக்கிறது

Saturday 29 January 2011

சதீஸ் கொலை/மரணம் தொடர்பில்... (இற்றைப்படுத்தப்பட்டது)

முன்னைய பத்தியில் சதீஸ் கொலை செய்யப்பட்டார் என ஆரம்பகட்டத்தில் இரண்டு மூன்று இணையத்தளங்களில் வந்த செய்திகளின் அடிப்படையிலேயே எழுதினேன். யாழ் இணையத்தில் ஈழநாதம் மற்றும் தமிழ்த்தாய் ஆகிய இணையத்தளங்களை மேற்கோள்காட்டி இதைப்பற்றி எழுதியிருந்தார்கள். தமிழ்த்தாய் இணையத்தளத்தில் செய்தி பின்வருமாறு அமைந்திருந்தது.
Picture
Picture
ஈழநாதம் செய்தி பின்வருமாறு அமைந்திருந்தது:
Picture
ஆனால் இப்போது உதயன் வெளிவிட்டிருக்கிற செய்தி இந்த இரு செய்திகளுக்கும் முற்றிலும் மாறானதாக இருக்கிறது. சதீசின் சாவு ஒரு வீதி விபத்தே என்று சட்ட மருத்துவப் பரிசோதனைகளில் தெரியவந்தது என்று உதயன் இணையப்பதிப்பில் செய்திவெளிவிடப்பட்டிருக்கிறது. குழப்பங்களின் எல்லையில் நான் நின்றுகொண்டிருக்கிறேன் இப்போது என்பதை மட்டுமே உறுதிப்படுத்தமுடிகிறது என்னால்.

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல, சதீஸ் எப்படி இறந்தார் என்பதை விட, அவர் இறப்பு தொடர்பில் இருக்கிற சில கருத்துக்கள் பிழையென்ற என்னுடைய கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. அதே போல் ஆனைவிழுந்தானுக்கும் வல்லிபுரத்துக்கும் இடைப்பட்ட ஆள்நடமாட்டமற்ற இடத்தில் இப்படியான மோசமான விபத்துக்கான சாத்தியங்கள் பற்றிய கேள்விகளும் மனதைவிட்டு அகல மறுக்கின்றன. அவரது மரணத்துக்கான காரணங்கள் தொடர்பில் தவறாக நான் வாசிப்போரை வழிநடத்தியிருந்தால் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.

பிணம்தின்னும் சாத்திரங்கள்

தெரிந்த முகங்களின் அகால மரணங்கள் இலகுவில் யாரையும் உலுக்குவதுண்டு. இந்த வருடத்தின் முதல் நாளிலும், இன்றைக்கும் எனக்குத் தெரிந்த முகங்களின் மரணங்கள் என்னை உலுக்கித்தான் இருக்கின்றன. முதல் மரணம் தவராசா கேதீஸ்வரன் என்கிற என்னுடைய வயதொத்த, என்னுடைய பாடசாலையில் படித்த (வணிகப்பிரிவோ, கலைப்பிரிவோ சரியாகத் தெரியாது), என்னுடன் பாடசாலை மாணவர் தலைவர்களில் ஒருவனாகக் கடமையாற்றிய இளைஞனுடையது. இவர் டிசம்பர் 31, 2010 இரவு கொல்லப்பட்டார். இரண்டாவது இன்று சனிக்கிழமை (சனவரி 29, 2011) கொல்லப்பட்ட இராசரத்தினம் சதீஸ் என்பவருடையது. இவரும் நான் படித்த பாடசாலையில் என்னைவிட இரண்டோ, மூன்று வகுப்புகளுக்கு முன்னால் படித்தவர். விளையாட்டுப்போட்டிகளில் என்னுடைய இல்லத்தைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் கொல்லப்பட்டதுக்காகச் சொல்லப்படுகிற காரணங்கள் மிகவிசித்திரமாக எனக்குத் தோன்றுகின்றன. இரண்டு காரணங்களும் முரண்களின் உச்சமாகப்படுகின்றன. ‘போரின் பக்கவிளைவுகள்’ என்று சொல்கிற அறிவுசீவிகள் மீது கோபத்தை ஏற்படுத்துகின்றன.
முதல் கொலை கேதீஸ்வரனுடையது. இந்தவருடம் பிறந்ததும் Face Book இணைப்புகள் மூலமாகக் கிடைத்த முதல் செய்தி இது. குடத்தனை பொற்பதிப் பகுதியில் வைத்துக் கேதீஸ் கொல்லப்பட்டான். ‘கேதீஸ்’ என்னுடைய உயிர் நண்பன் என்றெல்லாம் சொல்லி ஒரு பச்சாதாப நாடகம் ஒன்றை இங்கே அரங்கேற்ற நான் முயலவில்லை. ஆனாலும், ஓரளவுக்காவது கேதீசை எனக்குத் தெரிந்திருந்தது. கேதீஸ் எங்களுடைய பாடசாலையில் ஆறாம் வகுப்புமுதல் படித்தவனில்லை. அவன் எந்தவகுப்பில் பாடசாலைக்கு வந்தான் என்பதுகூட சரியாக எனக்குத் தெரியாது. என நண்பர்கட்கும் தெரியாது. ஆனால், இடையில் வந்தவன் என்பது தெரியும். அது நன்றாகப் ஞாபகமிருத்தலுக்கான காரணங்களும் உண்டு. அவற்றில், ’கேதீஸ் உயர்தரம் படிக்கிறபோது மாணவர் தலைவனாகத் (Prefect) தெரிவுசெய்யப்பட்டபோது அவனுக்கெதிரான ஒரு எதிர்ப்பலை இருந்தது’ என்கிற காரணம்தான் மிகப்பெரியது. ஆறாம் வகுப்புமுதல் படிக்கிற நிறையப்பேர் இருக்கத்தக்கதாக இடையில் வந்தவன் எப்படி மாணவர் தலைவனாகலாம் என்று நாங்கள் எங்களுக்குள் குசுகுசுத்ததுண்டு. இப்படியான மாணவர் தலைவர்களின் தலைவனாக இருந்தவன் இப்படியான அரசியல்கள் இல்லாமல் இருந்தகாரணத்தால் அந்த எதிர்ப்பு குசுகுசுப்போடே அடங்கிப்போனது. (அவனுக்கெதிராகவும் நாங்கள் கிளர்ந்த கதை வேறு). கேதீஸ் விஞ்ஞானம் அல்லாத பிரிவில் படித்ததுதான் அவனுக்கிருந்த ஒரே தகுதி என்று நக்கல்வேறு செய்வோம்.  விஞ்ஞானம் படித்த எங்கள் விண்ணாணம் தெரியவந்தபோது எந்த மூஞ்சையை வைத்து நக்கல் செய்தீர்கள் என்று அவன் கேட்டிருக்கலாம், கேட்கவில்லை. இப்போது அவன்கூட விஞ்ஞானம்தான் படித்தானோ என்கிற மாதிரி ஒரு சந்தேகம் வந்து தொலைக்கிறது. ஏன் சொல்கிறேன் என்றால், கேதீசுக்கும் எனக்குமான நட்பின் நெருக்கம், இவ்வளவுதான்.

கேதீஸ் கொலை பற்றிப் பலபேர் பல கதைகள் சொல்கிறார்கள். அவன் முன்னைநாள் போராளி என்கிறார்கள் சிலர். இல்லையில்லை அவனது அண்ணனே போராளி என்கிறார்கள் வேறு சிலர். இவன் ஒரு சூழல் பாதுகாப்புப் போராளி என்கிறார்கள் இன்னும் சிலர். ‘இலங்கையில இருந்துகொண்டு கையில கார்த்திகைப் பூவோட படம் போடுறது கொழுப்புத்தானே’ என்கிறார்கள் மற்றவர்கள். குழப்பமான இந்தக் கோணங்களில் இருந்து கேதீசை ஏன் கொன்றார்கள் என்கிற முடிவை என்னால் எட்டமுடியவில்லை. தன்னை ஏன் கொன்றார்கள் என்று கேதீசுக்குத் தெரிந்திருக்குமா, அல்லது கேதீசை ஏன் கொல்கிறோம் என்பது கொலையாளிகளுக்குத் தெரிந்திருக்குமா என்பதுகூட சந்தேகமே.

அவன் முன்னைநாள் போராளி அல்லது அவனது அண்ணன் முன்னைநாள் போராளி என்று வைத்துக்கொள்வோம். புனர்வாழ்வுக்கென்றுதான் அப்படியான போராளிகளைத் திருப்பியனுப்பி இருக்கிறார்கள், கொடுஞ்சிறைகளிலிருந்து. இதுதான் அரசாங்கமும், அறிவுசீவிகளும் முன்வைக்கிற வாதம். அப்படியானால் புனர்வாழ்வுக்காகத் திருப்பி அனுப்பப்பட்ட ஒருவனோ/ அவன் சார்ந்தவர்களோ ஏன் கொல்லப்பட்டார்கள்? குழுவாகக் கொன்றால் பிரச்சினை என்று தனித்தனியாகக் கொல்கிற திட்டமா? அல்லது உண்மையிலேயே புனர்வாழ்வுக்கு என்று வெளியே வந்துவிட்டு மீண்டும் பழைய போராளிக்குணங்களை வெளிக்காட்டினார்கள் என்கிற காரணமா? அப்படிப் போராளிக் குணங்களை வெளிக்காட்டினார்கள் என்றால் நாங்கள் இன்னும் கொஞ்சம் ஆழமாக இது தொடர்பில் பேசவேண்டி வரும். புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்ட பெரும்பாலான போராளிகள் மரணத்தின் எல்லைவரை போய் மீண்டவர்கள். அரசாங்கத்துக்கெதிரான சின்ன அசைவும் அவர்களுக்கு உடனடியாகத் தரக்கூடிய பரிசு பற்றித் தெளிந்தவர்கள். இதைவிடக் கேதீஸ் போல அண்மையில் மணமான ஒரு இளைஞனுக்கு வாழ்க்க தந்திருக்ககூடிய சுகமான புதிய பொறுப்புகள் பற்றிய அக்கறையும் இருந்திருக்கும். அவன் மீண்டும் ஒரு வன்முறைக்கிளர்ச்சியை நோக்கிப் போகக்கூடிய சாத்தியக்கூறுகள் குறைவு. அப்படி சாத்தியக்கூறுகள் குறைந்த ஒருவன் அந்த ஆபத்தான பாதையைத் தேர்ந்தெடுக்கிறான் என்று ஒரு விவாதத்துக்கு வைத்துக்கொண்டோமென்றால், அவன் எந்தளவுக்கு தூண்டப்பட்டிருப்பான் என்கிற கேள்வி வரும். அந்த தூண்டலுக்கான காரணம் என்ன அல்லது யார் என்கிற கேள்விகள் வரும். ’கார்த்திகைப் பூவோடு நின்று படம்போடும் கொழுப்பு’ எப்படி வந்தது என்ற கேள்வி வரும். இந்தக் கேள்விகளுக்கான பதில்களிலிருந்து பிரபாகரனை ஒழித்துவிட்டோம் என்று மார்தட்டிக்கொண்டே இலங்கை அரசு தான் சொன்னபடி தமிழ்மக்களுக்கான எந்தவொரு அடிப்படை உரிமையயும் கொடுக்கவில்லை என்பதோடு, இருந்த உரிமைகளையும் பறித்துக்கொண்டிருக்கிறது என்கிற தெளிவான முடிவுக்குத்தான் வரமுடியும்.

இல்லாவிட்டால் செய்திஊடகங்கள் சொல்கிறபடி கேதீஸ் ஒரு சூழல் பாதுகாப்புப் போராளி என்றே வைத்துக்கொள்வோம். கேதீஸ் மணற்தலைப் பகுதியில் நடக்கிற சட்டபூர்வமற்ற மணல் வியாபாரம் பற்றி அம்பலப்படுத்தியிருக்கிறான் வெறும் Face Book படங்களின் மூலம். இதற்காக கேதீஸ் கொல்லப்பட்டதாக வைத்துக்கொண்டால், இந்தக் கொலையயும் ‘போரின் பக்க விளைவு’ என்று சொல்கிற அறிவுசீவிகளைப் பார்த்து நான் சொல்லிக்கொள்வது ‘just go and fuck yourselves'. மணல் அள்ளப்படுதலும் கடல் உள்ளேறலும் இனப்பிரச்சினை அல்ல நண்பர்களே... அது ஒரு தேசத்தின் பிரச்சினை. தன்னை சிறிலங்காவின் பெருமைமிகு பிள்ளை என்று சொல்லிக்கொள்கிற இலங்கைப்பிரசைகள்கூட கவனிக்கவேண்டிய பிரச்சினை. வடமராட்சி கிழக்கில் வாழ்கிற சனங்கள் கால காலமாக அனுபவிக்கிற பெரிய பிரச்சினை. தமிழீழம் என்கிற கோரிக்கையை ஆதரிக்கிறவர்களுஞ்சரி, எதிர்க்கிறவர்களுஞ்சரி ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டிய பிரச்சினை. சுனாமியின் பின் அழுகிமிதந்துவந்த பிணங்களைச் சுமந்து சுமந்து சோர்ந்து போன மக்களின் வாழ்வு சம்பந்தமான பிரச்சினை. அந்தப் பிரச்சினையை வெளிக்கொணர்ந்த குற்றத்துக்காகத்தான் கேதீஸ்வரன் கொல்லப்பட்டான் எனில், நண்பர்களே கேளுங்கள், நாளைக்கே ஆயுதங்கள் தவிர்த்து யாவுமே செயலிழந்து போகும் அந்த நாட்டில்.

இரண்டாவது கொலை சதீஸ் அண்ணாவுடையது. இந்த சதீசும் எங்களின் பாடசாலையிலேயே படித்தவர். சதீசை ஞாபகத்தில் வைத்திருக்கப் பெரிய காரணம் சதீசின் பென்னாம்பெரிய உடல்வாகு. விளையாட்டுப்போட்டிகளில் சதீசின் அணிநடை பிரபலம். Left-Right என்று அவர் நடக்கும்போது பின்னிருந்து பார்த்து அவரது புட்டத்துத் தசைகளின் அசைவை நாங்கள் கிண்டல் செய்வதுண்டு. பின்னர் அணிநடையை எங்களுக்குப் பழக்குகிறேன் என்று சொல்லி இவர் கொன்றை மரத்தின் கீழ்வைத்து அதே கொன்றை மரத்துக் கம்புகளால் அடித்தும் இருக்கிறார். அடித்ததும் வருகிற கோபம் ‘லெப்பைலெப்’ என்ரு சொல்லி இவர் எங்களுக்குப் புட்டத்தைக்காட்டியபடி அணிநடை செய்துகாட்டும்போது போய்விடும். இவர், பருத்தித்துறை ஆனைவிழுந்தான் பகுதியில் வைத்து ‘இனம்தெரியாதோரால்’ சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். காலையில் இந்தக் கொலை நடந்து, மதியம்வரை சடலம் வீதியிலேயே கிடந்ததாக ‘யாழ்’ இணையத்தில் படித்தேன்.

சதீஸ் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி கிழக்குக்குப் பொறுப்பாளராக இருந்ததாகவும், சில நாட்களாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின்பால் விமர்சனங்களை இவர் கொண்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. யாழ் இணையத்தளத்தில் இவர் ‘கொல்லப்பட்ட பொற்பதிப் பொதுமகன்’ ஒருவரின் குடும்பத்துக்கு கொலையாளிகளை அடையாளம் காட்டுவேன் என்று உறுதியளித்ததாகவும் அதன்காரணமாகவே இந்தக் கொலை நிகழ்ந்திருக்கலாம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். சிலர் ‘ஆத்தியடி குத்தி’ எனப்படும் ஒரு நபரைப் பற்றியும் சொல்கிறார்கள். கேதீஸ் கொலைபோலவே சதீஸ் கொலைக்கும் சரியான(??!!) காரணங்கள் யாருக்குமே தெரியவில்லையாம். கொலைக்கு என்ன ‘சரியான காரணங்கள்’ இருக்கமுடியும். யாழ் இணையத்தளத்தில் ஒருவர் தெரிவித்திருந்தது போலவே ‘வேட்டை நாயொன்று செத்தது’ என்று சும்மா போவதும் சாத்தியமில்லை. ஒன்றையும் பெரிதாக நாங்கள் பிடுங்கிவிடப்போவதில்லை என்றபோதிலும் ஆகக்குறைந்தது இந்தக்கொலைகள் தொடர்பில் எம்மாலான பதிவுகளை விட்டுச்செல்லல் அவசியமாகிறது. கேதீஸ், சதீஸ் ஆகியோரின் அரசியல் பின்னணிகளைத் தாண்டி இரு இளைஞர்கள் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார்கள், அதுவும் யாரால், சொந்தச் சகோதரர்களால் என்கிற கோணத்தில் இதைப் பார்த்தாகவேண்டும். ’சகோதரப் படுகொலையாளி’ என்று பிரபாகரனைச் சுட்டிய அறிவுள்ளங்களே, தயவு செய்து இந்தக் கொலைகளை ‘போரின் பின் விளைவுகள்’ என்று நியாயப்படுத்தாதீர்கள். ‘இலக்கிய மாநாடு, ஒன்று கூடல், தமிழ் வளர்ப்பு’ என்றெல்லாம் குதிக்கும் கருத்தியல்களைக் கரைத்துக்குடித்து கொட்டாவி மட்டுமல்ல, குசுவும் விட்டு ஓய்ந்து போய்விட்ட புத்திமான்களே, இவை போரின் பக்கவிளைவுகள் என்றால், 70 களிலும் 80 களிலும் எங்கள் இளைஞர்கள் செய்தவை யாவுமே பல்லாண்டுகால அடக்குமுறை மற்றும் கையாலாகாத அரசியல் தலமைகளின் வயிற்றுப்போக்கு ஆகியவற்றின் பக்கவிளைவுகள்தாம்.

என்னுடைய சகோதரனை ஆயுதம் தூக்கி செத்துப்போ என்று சொல்கிற தார்மீக உரிமை எனக்கில்லை. ஆனால் அவன் படுகிற அவலங்களை மறைத்து அவன் சுபீட்சமாக இருக்கிறான் என்று பொய்சொல்கிற திறமையும் எனக்கில்லை. ‘இவங்கள் செய்யிற அநியாயங்களைப் பாத்துக்கொண்டு சும்மாயிருக்கேலுமோ?’ என்று அவன் கேட்கிற கேள்விக்கு மௌனித்துப்போகிறேன்.

பி.கு:
  1. கேதீஸ் கொல்லப்பட்டதன் பின்னான அரசியலைத் தவிர்த்து அவனது மரணச்செய்தியை எங்கள் பாடசாலை வட்டத்துக்குள் பகிராமல் பதுங்கியிருந்த கையாலாகாத்தனத்துக்கு வெட்கப்படுகிறேன். வெற்றிபெற்றவனை மட்டுமே உரிமை கோருகிறோம். 
  2. சதீஸ் கொலைய ‘ஒட்டுக்குழு உறுப்பினன் கொலை’ என்று மட்டும் பார்க்கிற மனோபாவத்தை வளர்த்துவிட்ட தலைமைகள், ஊடகங்கள் யாவரும் நாசமாய்ப் போகட்டும்.
 

Saturday 15 January 2011

செருப்பாய் இருப்போம்...

மன்மதன் அம்பு படத்தில் கமல்ஹாசன் எழுதிய வசனம் மற்றும் இன்னபிற சினிமாச் சர்ச்சைகளை முன்வைத்து.

'த்ரிஷாவின் செருப்பாக நடிக்கவும் தயார்’ என்கிறமாதிரி ஒரு எள்ளலை புலம்பெயர் தமிழர்களை நோக்கி அள்ளிவிட்டிருக்கிறார் அறிவுசீவி கமல்ஹாசன். Pre DVD Rip ல் ஒழுங்கான சத்தம், காட்சிகள் இல்லாமல் பார்த்த எனக்கே கோபம் பொத்துக்கொண்டுவந்தபோது, அறிவுசீவி கமலின் படங்களுக்கு முன்னோட்டம் பின்னோட்டம் எல்லாம் எழுதி முதல்நாள் முதல்காட்சி பார்த்தவர்கள் வயறெரிந்து சாபம் போடுவதில் பிழை ஒன்றும் இல்லைத்தான். ஆனால் இந்தக் கோபம் எதனடிப்படையில் வருகிறது என்று ஆராய்வோமானால் சில உண்மைகள் தெரியும். எந்தளவுக்கு தமிழக சினிமாவால், தமிழகத் தொலைக்காட்சிகளால் பீடிக்கப்பட்டிருக்கிறோம் என்பது தெரியவரும். இந்தக் கோபம் சிலவேளை நடிகை ஒருவருக்கு செருப்பாக நடிக்கிறேன் என்று சொல்லாமல் ‘விஜய்க்கு செருப்பாக நடிக்கத் தயார்’ ‘ரஜினிக்கு பின்பக்கம் கழுவ ரெடி’ ஏன் ‘அறிவுசீவிக்கு கொம்பு நீவிவிடுவது பாக்கியம்’ என்கிற ரீதியில் வசனம் எழுதப்பட்டிருந்தால் விசிலடித்துப் பாராட்டியும் இருப்போம்.

இந்தச் சர்ச்சையின்  அடிவேர் இரண்டு விடயங்களில் இருக்கிறது. ஒன்று கமல்ஹாசனின் அரசியல் தேர்வு. இரண்டாவது, இவ்வாறான எள்ளல்கள் மற்றும் ஈழத்தமிழர்களைத் தங்களின் ஒரு சந்தையாக மட்டும் பார்க்கக்கூடிய இந்தத் தமிழகச் சினிமாக்காரர்களின் மனநிலைக்கு எதிர் அரசியல் பேசக்கூடியளவுக்கு எமக்கான சினிமா எங்களிடம் இல்லாமை. இந்த இரண்டு விடயங்களின் அடிப்படையில் இந்தச் சர்ச்சையை அணுகலாம் என நினைக்கிறேன்.
Picture
கமல்ஹாசனிடம் இருந்துவந்த மேற்படி எள்ளல் கமலின் சமீபத்திய அரசியல் ஈடுபாடுகளைப் பார்த்து வருபவர்களுக்கு எக்காரணம் கொண்டும் பெரிய அதிர்ச்சியாக இருக்கப்போவதில்லை. அவரது ஒஹனேக்கல் பேச்சில் எனக்கு எல்லாரும் வேண்டும். ரஜனியும் வேண்டும், கும்ப்ளேவும் வேண்டும். சத்தியராஜும் வேண்டும். வைரமுத்துவும் வேண்டும் என்றும், இது நூறு கோடி மக்களின் பிரச்சினை என்றும் அவர் சொன்னதுதான் கிட்டத்தட்ட பொதுமேடை ஒன்றில் அவரது அரசியல் பூனை வெளிவந்த முதல் சந்தர்ப்பம் என்று நினைக்கிறேன். அதே போலவே, இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக நடிகர்கள் நடத்திய உண்ணாவிரதக் கண்காட்சியிலும் ‘ இது நான் தமிழன் என்பதால் பேசுவதாக என்னைக் குறுகியவட்டத்துக்குள் அடைத்துவிட வேண்டாம்’ என்ற கருத்தையும் உதிர்த்தார். இடையே ஹிட்லருக்கு எதிரான ஒரு கருத்தைச் சொல்லிவிட்டு அதன்பிறகு சிலவிடயங்களை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது மாதிரிச் சொன்னார். ‘அகதிகளாக அவர்களை ஏற்கிற பெருந்தன்மை எமக்கிருந்தாலும் அவர்களுக்கென்று ஒரு தன்மானம் இருக்கிறது’ போன்ற கருத்துகள் மூலம் அவர் சொல்லவந்தது,‘நீ வேறு நாங்கள் வேறு’ என்ற ஒன்றைத்தான். அவரது ‘தமிழன்-குறுகியவட்டம்’ என்கிற பார்வை அவருக்குள்ளே அவர் ஒளித்து வைத்திருக்கக்கூடிய இந்தியத் தேசியவாத அரசியலின் அபிமானம் அல்லது தமிழ்த்தேசியவாத அரசியலின்மீதான வெறுப்பின் குறியீடே. இதேதான் அவரது பெரும் செல்வாக்கில் உருவாகிய ‘உன்னைப் போல் ஒருவன்’ படம்கூட எடுத்துச்சொன்னது. ’உன்னைப் போல் ஒருவன்’ என்ற படத்தின் மூலக்கதை வேறொருவருடையது, அதை ‘சக்ரி டோலட்டி’ என்கிற இயக்குனர் இயக்கினார், இரா. முருகன் வசனங்களை எழுதினார். இவ்வாறிருக்கையில் அது எப்படிக் கமல்ஹாசனின் அரசியல் ஆகும்? என்று கேள்வி எழலாம். மேற்படி திரைப்படத்தை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கிற நோக்கத்தோடு விஜய் தொலைக்காட்சியில் இன்னொரு அறிவுசீவி கோபிநாத்துடன் சேர்ந்து அறிவுசீவி கமல்ஹாசன் செய்த சில நிகழ்ச்சிகள், அந்த நிகழ்ச்சிகள் படம் பேசுகிற அதே அரசியலைத்தான் கமல்ஹாசனும் மானசீகமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டியிருந்தன. இந்த அரசியல்தேர்வு கமல்ஹாசனின் பிறப்புரிமை. அந்தப் பிறப்புரிமையின் அடிப்படையில் தமிழ்த்தேசியவாதத்தின் மிகப் பெரிய குறியீடான ஈழத்தமிழர்கள் மீதான எள்ளல் அவருக்கு இயல்பாகவே வரும். அதில் பெரியளவு ஆச்சரியம் இருக்கப்போவதில்லை.

ஏற்கனவே கமல் தெனாலி என்றொரு படத்தில் நடித்திருந்தார். அதிலும் அவர் ஈழத்தமிழர்களை எள்ளல் செய்தார் என்று ஒருபுறமும், இல்லை ஈழத்தமிழர்களின் வலியைக் காட்டியிருந்தார் என்று மறுபுறமும் வாதிட்டுக்கொண்டிருந்தார்கள். அந்தத் ’தெனாலி சோமன்’ என்கிற பாத்திரப்படைப்பில் எனக்குப் பெரிய கோபமெல்லாம் இல்லை. இலங்கைத் தமிழர்கள் எப்போதும் இறுகிய முகத்தோடே அழுதபடிதான் இருப்பார்கள் என்பதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட நாடகத்தனம். இருந்தபோதும் அந்தப் பாத்திரம் பேசுகிற மொழி தொடர்பான விடயங்களில் நிச்சயம் கமல்ஹாசன் மெத்தனமாகவே இருந்திருக்கிறார். மிகமுக்கியமாக பி.எச்.அப்துல் ஹமீதுவின் உதவியோடு எழுதப்பட ’றேடியோ சிலோன்’ நாடகத்தமிழ் போன்ற விடயங்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். அவர் அப்படிச் செய்யாமல் விட்டதுகூட ஈழத்தமிழர்கள் மீதான அவரது பார்வையின் பிரதிபலிப்பாகக் கருதப்படலாம். ’போர் விளைவுகளால் மனநிலை தவறிய இளைஞன்’ கதாபாத்திரம் போரின் விளைவுகளைக் காட்டப் பயன்படுத்தப்பட்டதா அல்லது அப்போது தமிழகச் சினிமாவுக்குக் கிடைக்க ஆரம்பித்திருந்த புதிய சந்தையைத் தட்டித் திறக்கப் பயன்படுத்தப்பட்டதா என்பது படம் எடுத்தவர்களுக்கே வெளிச்சம். எனக்குத் தெரிந்தவரை இன்றைக்கு தமிழக சினிமாவில் பங்குபெறக்கூடிய நிறையப்பேரின் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவானது நேரடியாக அவர்களின் சினிமா வியாபாரத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்கப்படவேண்டியதாகவே இருக்கிறது.

தமிழக சினிமாக்களில் வெளிநாட்டு வர்த்தகத்தில் ஒரு குறிப்பிடக்கூடிய பங்கு புலம்பெயர் ஈழத்தமிழர்களிடம் இருந்தே கிடைக்கிறது என்பது உண்மை. இலங்கையில் இருந்தும் ஒரு பங்கு போகிற போதிலும் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கக்கூடிய வருமானத்தோடு ஒப்பிடும்போது கொஞ்சம் நலிவாகவே இருக்கும். இன்னும் கொஞ்சக்காலத்தில் நாங்கள் பதின்மங்களில் இருந்தபோது ஆரம்பமான ஒரு கெட்டபோக்குக் காரணமாக இந்த நிலமை மாறலாம். காரணம் ரஜனிகாந்தின் துதி பாட ஒரு மூவர் குழுமம் இயங்கிவருகிறது, நடிகர் விஜயை வைத்துச் சண்டை பிடிக்கிறார்கள். ஏன், ‘சச்சின்’ படமாக இருக்கவேண்டும், யாழ்ப்பாணம் மனோகரா திரையரங்கில் அபிஷேகம் செய்தார்கள். ‘ஜீ’ என்ற நடிகர் அஜீத்தின் படம் அதே திரையரங்கில் ஓடியபோது ஒரு சோகமான காட்சிக்கு விசிலடித்த நடிகர் விஜய் ரசிகர்கள் இருந்த பல்கணிக்கு குடித்துமுடித்த சோடாப்போத்தல்கள் பறந்ததும் நடந்தது. இப்போதுகூட போனவருடத்து கந்தசஷ்டிக் காலத்தில் வடமராட்சியில் ஒரு கோவிலில் சூரனும் முருகனும் ‘வாடா மாப்பிள்ளை’ பாடலுக்கு ஆடியிருக்கிறார்கள். புலம்பெயர் ஈழத்தமிழர்களின் ஒரே பொழுதுபோக்கு சினிமாவும், தமிழகத்துத் தொலைக்காட்சிகளாகவும் ஆகியிருக்கிறது. தமிழ் வன் மற்றும் தமிழ் விசன் ஆகிய இரண்டு தொலைக்காட்சிகளுமே முறையே கலைஞர் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சியிடம் இருந்தே நிகழ்ச்சிகளை வாங்கிப்போடுகின்றன. மொத்தத்தில் தமிழக சினிமா மற்றும் சினிமா சார்ந்தியங்கும் தொலைக்காட்சிகளே இன்றைக்கு ஈழத்தமிழர்களின் பொழுதுபோக்கு அம்சங்களாக மாறிவிட்டன என்கிற உண்மையை ஒப்புக்கொண்டேயாகவேண்டும். இந்தப் பெரிய சந்தையை இன்னும் இன்னும் ஊடுருவும் முயற்சியாகத்தான் நடிகர்களின் பிரபாகரனாக ஒருமுறையாவது நடிக்கவேண்டும் என்கிற ஆசைகளையும், இயக்குனர்களின் ஈழத்தை மையமாக வைத்து ஒருபடமாவது எடுக்கவேண்டும் என்கிற இலட்சியங்களையும், பிரேம்கோபால், பிரேமினி போன்றவர்கள் ஈழத்தின் துயரசாட்சியங்களாகக் காட்டப்படுவதையும் பார்க்கமுடியும்.

ஒரு சந்தை பெரும்பாலும் தேவை-வழங்கல் இரண்டின் அடிப்படையிலேயே இயங்குகிறது. தமிழக சினிமாவின் ஈழத்தமிழ் சந்தையானது முதலில் வழங்கலைவிடக் குறைந்த தேவையுடையதாகவே இருந்தது. அப்போதெல்லாம் பெரியளவில் தமிழகத்துச் சினிமாக்காரர்களுக்கு ஈழத்தமிழர்களைப் பற்றிய அக்கறை பெரிதாக இருந்திருக்கவில்லை. இங்கே எம்.ஜி.ராமச்சந்திரனின் ஈழ ஆதரவுக்கு அரசியல் காரணங்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது. எம். ஜி. ராமச்சந்திரனை சினிமாக்காரனாக அல்லாமல் அரசியல்வாதியாகப் பார்க்கவேண்டியிருக்கிறது. கொஞ்சக் காலத்தின் பிறகு ஈழத்தமிழர் சந்தையில் தமிழகச் சினிமாவுக்கான நுகர்வோர் அதிகரிக்க தேவை வழங்கலை விஞ்சியது. இப்போது ஈழத்தமிழர் சந்தையைத் தமிழக சினிமாக்காரர்கள் இன்னும் உற்றுக் கவனித்தார்கள். இந்தச் சந்தையைத் தம்மிடம் வைத்திருப்பது தொடர்பில் பல முயற்சிகளை மேற்கொண்டார்கள். அவர்களுக்கு ‘ஐங்கரன் International' பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. இந்தச் சந்தையின் மிகப்பெரிய ஆச்சரியமாகப் பார்க்கக்கூடியது சந்தையின் தேவை-வழங்கல் விதி வழங்கிகள் மற்றும் சந்தைப்படுத்துபவர்களால் உடைக்கப்பட்டதுதான். தனியே ஈழத்தமிழ்ச் சந்தையில் மட்டுமல்லாமல் இந்தியச் சந்தைகளிலும் வழங்கிகளும் சந்தைப்படுத்திகளும் இந்த விதியை உடைத்து தேவை இல்லாத இடத்தில்கூட நுகர்வோர் இவர்களின் சந்தைப் பொருளை கூடிய விலையில் வாங்குகிற நிலமையை ஏற்படுத்தியிருப்பதென்பது வியத்தகு விடயமே. விரும்பியோ விரும்பாமலோ ஒரு பொருளை நுகர்வோர் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும் என்கிற நிலமை இப்போது கருணாநிதி மற்றும் கலாநிதி மாறன் குடும்பங்களால் தொலைக்காட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது என்பதும் சுட்டிக்காட்டப்படவேண்டும். முக்கியமாக சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடர்பில் பொதுவெளியில் நடக்கிற உரையாடல்கள்கூட இந்தப்போக்கின் தொடர்ச்சியாகவே பார்க்கமுடியும். வலைத்தளங்களில் மட்டுமல்லாமல் சந்திப்புகளில்கூட எப்படியாவது நாங்கள் தமிழகச் சினிமாபற்றி உரையாடிக்கொண்டுதான் இருக்கிறோம். ஏன், இணையங்களில் கிறுக்குகிற என் போல எத்தனையோபேர் தமிழகச் சினிமாவை மட்டுமே கருப்பொருளாக வைத்து எவ்வளவுகாலம் எழுதிவந்தோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான மக்களால் படிக்கப்படுகிற ஆக்கங்களாக சினிமா விமர்சனங்களே இணைய எழுத்துலகில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றமையைக் கவனத்தில்கொள்ளவேண்டும். இதற்கான காரணங்களையும் தேடிப்பார்க்கவேண்டியிருக்கிறது.

ஈழத்தமிழர்களிடம் இருந்து இதுவரைக்கும் தமிழகச்சினிமாவை எதிர்த்து நிற்கக்கூடிய சினிமாக்கள் வரவில்லை என்பதுதான் பிரச்சினையே. சமீபத்தில் பெருமளவு கொண்டாடப்பட்ட ‘1999’ திரைப்படத்தில் எத்தனையோ நல்ல விடயங்கள் இருந்தபோதும் தமிழகச் சினிமாவின் தாக்கம் பெருமளவில் இருந்தது. ‘மரநாய்’ என்கிற ஒரு கதாபாத்திரத்தைக் கடைசிவரையில் திரையில் காட்டாமல், அந்தப் பாத்திரம் பற்றிய பயங்களை, தாக்கத்தை மனதில் விதைத்த இயக்குனர் லெனின்.எம். சிவம், கதாநாயகியைக்கூட சாதாரண  காட்சிகளில் காட்டாமல் இருந்துவிட்டு இரண்டு பாடல்களில் மட்டும் ஆடவைத்துக் காட்டியிருந்தார் என்பதை வருத்தத்தோடு குறிப்பிடவேண்டியிருக்கிறது. கனடாவில் நடந்த குறும்பட விழாவொன்று பற்றி டிசே தமிழன் எழுதிய ஒரு கட்டுரையில்கூட ஈழப்படைப்பாளிகளின் குறும்படங்களில் இருந்த கதைக்குறைபாடுகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். ஈழத்தமிழர்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பெரும்பாலும் கருத்தில் கொள்ளாமல் தமிழகச் சினிமாவின் பாதிப்பிலான படங்களை அல்லது தனியே அழுதுவடிகிற கதைகளை படமாக எடுப்பது எம்மவர் மத்தியில் இருக்கிற குறைபாடாக இருக்கிறது. யுத்தத்தின் மத்தியில் வாழ்ந்த மக்களின் மற்றைய பக்கங்கள் எழுத்தளவிலாவது இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. இப்படியான நிலையில் கிட்டத்தட்ட ஈழத்தவர் வாழ்க்கையில், முக்கியமாகப் புலம்பெயர்ந்த ஈழத்தவர் வாழ்க்கையில் ஒரு அங்கமாகக் கலந்துபோய்விட்ட தமிழக சினிமாவைப் பிரித்தெடுப்பது என்பது மற்று சினிமா மற்றும் கலைகளுக்கு முன்னால் இருக்கக்கூடிய மிகப்பெரிய சவாலாகும்.

தமிழக சினிமா தொடர்பில் ஈழத்தவரிடம் அல்லது சில விசிலடிச்சான் குஞ்சுகளிடம் இப்போது பெருகிவருகிற இன்னொரு நடைமுறை  சில நடிகர்களின் படங்கள் வருகிறபோது எழுப்புகிற புறக்கணிப்புக் கோசங்கள். நடிகர் விஜயின் வேட்டைக்காரன் என்ற படம் வந்தபோது அதற்கு சில நாட்களின் முன் விஜய் ராகுல் காந்தியைச் சந்தித்தார், காங்கிரசுக் கட்சியில் இணைகிறார், ஆகவே புறக்கணியுங்கள் என்கிற கோசம் முன்வைக்கப்பட்டது. அந்தப் படத்தின் இசையமைப்பாளர் பற்றியும் ஏதோ ஒரு சிக்கலை அப்போது முன்வைத்தார்கள். இப்போது விஜயின் காவலன் படத்துக்கான புறக்கணிப்புப் பிரச்சாரங்களில் நடிகை அசின் முன்னிறுத்தப்படுகிறார். காங்கிரசில் சேர்வதன் மூலம் ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகத்தை விஜய் ‘யாழ்நகர்’ என்ற ஊரின் மீட்பராக நடித்துக் களைந்துவிட்டாராம். இன்றைக்கு வரைக்கும் இந்தப் புறக்கணிப்புகளின் மூலகாரணம் ‘அஜீத்-விஜய்’ கதாநாயக வழிபாடுதவிர வேறொன்றுமில்லை என்பது திண்ணம். இல்லாவிட்டால் இந்த இருவரின் படங்களைப் புறக்கணியுங்கள் என்று ஈழத்தோடு தொடர்புபடுத்தி அடிக்கடி கத்திக்கொண்டிருக்கமாட்டார்கள். ஏன், ‘செருப்பாக இருப்பேன்’ என்ற வசனம் எழுதிய கமல்ஹாசனுக்கு எதிராக இதுவரை எந்தவிதமான புறக்கணிப்புக் கோசமும் வந்ததில்லை. இப்படியான கோசங்கள் தனியே விஜய் மற்றும் அஜீத் படங்கள் வரும்போதே எழுப்பப்படுகின்றன என்பதிலிருந்தே இவற்றின் உண்மை நோக்கம் தெரிந்துவிடும். இது நிச்சயமாக சில விசிலடிச்சான் குஞ்சுகளின் வேலையே. புறக்கணிப்பது என்று உணர்வு பூர்வமாக முடிவெடுத்துவிட்டால் முழுமையாகப் புறக்கணிக்கவேண்டும். அப்படி இல்லாமல் இந்த அரைகுறை விளையாட்டுகள் மூலம் வழங்கிகளால் ஆளப்படுகிற ஒரு சந்தையை உடைப்பது என்பது கடினமானதே. இந்தக் கோசங்களைத் தாண்டி மேற்படி படங்கள் இந்தச் சந்தையில் இலகுவில் நல்ல இலாபத்தோடு விலைபோகின்றமைக்கான காரணங்களை எடுத்தாயவேண்டியுள்ளது.

தமிழகச் சினிமா மற்றும் தொலைக்காட்சிகள் ஈழத்தமிழர் வாழ்வில் பாரிய செல்வாக்குச் செலுத்துவதற்கான பாரிய காரணம், ஏலவே சொன்னதுபோலவே எம்மிடம் மாற்று முயற்சிகள் இல்லாமல் போயிருக்கின்றமை அல்லது மாற்று முயற்சிகளுக்கான களம் இல்லாமல் போயிருக்கின்றமையே ஆகும். முக்கியமாகப் புலம்பெயர் சூழலில்கூட இந்தப் பிரச்சினை படைப்பாளிகளுக்கு இருப்பது வருந்தத்தக்கது. கனடாவில் இருக்கக்கூடிய மிகமுக்கியமான சில ஈழப்படைப்பாளிகள் தமிழகப்படைப்பாளிகளின் அங்கீகாரம் தொடர்பில் கொண்டிருக்கிற கருத்துக்கள் அதிர்ச்சியூட்டுபவையாகவே இருக்கின்றன. அவர்களின் அங்கீகாரம் மேலானதொன்றாகவே பார்க்கப்படுகிறது. இது தொடர்பில் கனடாவில் இருக்கிற முக்கியமான ஈழக்கவிஞர் ஒருவரோடு டிசே முரண்பட்டுமிருக்கிறார். முற்றுமுழுதாக தமிழகப்படைப்பாளிகளிடமிருந்து எம்மைத் துண்டித்துக்கொள்ளவேண்டும் என்கிற வாதம் இங்கே முன்வைக்கப்படவில்லை.தீர்ப்பெழுதும் நாட்டாமைகளாக அவர்களை அவர்களோ, அவர்களை நாங்களோ கருதவேண்டியதில்லை. எங்களுக்கான வழிகளை நாம் உருவாக்கிக்கொள்ளவேண்டும். எங்கள் வழியில் நாங்கள் அவர்களை எதிர்கொள்ளவேண்டும். இல்லையெனில் கமல்ஹாசன் போன்ற குழப்பநிலை அரசியல்வாதிகளிடமிருந்து இப்படியான இழிவுகள் வந்துகொண்டேதான் இருக்கும். மேலும், இளம்தலைமுறைக்கான ஒரு கடமையாக நான் பார்ப்பது, தந்திரமான வியாபாரிகளால் தமிழகச் சினிமாக்காரர்களிடம் நாங்கள் கட்டுண்டு போயிருக்கிறோம். எங்கள் எழுத்து மொழியில்கூட அவர்களின் மொழி ஆதிக்கம் செலுத்துமளவுக்கு நாம் மாசுபட்டிருக்கிறோம், எங்களின் சுயத்தை இழந்திருக்கிறோம். ரஜனிகாந்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்கிறோம். தவிக்கிற சகோதரனுக்கு உதவுவதற்கு வைக்கிற வேண்டுகோளில்கூட விஜய் படத்துக்கு விளம்பரம் செய்கிறோம், ‘நீங்களும் காவலனாகலாம்’ என்று. மாண்டவரை நினைக்கிற ஒன்றுகூடல்கள் கூட ‘சீமான் கலந்துகொள்ளும் கூட்டம்’ என்று சீமானை முன்னிறுத்தி விளம்பரம் செய்யப்படுகின்றன. இப்படியான விடயங்களை இயலுமானவரையில் எதிர்க்கவேண்டும். பொழுதுபோக்குக்காகக் கிடைக்கிற ஒரு சந்தைப்பொருள் எங்கள் வாழ்வியலாக மாறிவிடக்கூடாது என்பதில் கவனம் இருக்கவேண்டும்.

புறக்கணிப்புகளை ஆரம்பிக்கிற யாரும் நடக்கக்கூடிய விடயங்களைப் பேசுகிறார்களில்லை. என்னுடைய ஆசிரியர் ஒருவர் ‘இலங்கைப் பொருட்களைப் புறக்கணிப்போம்’ என்று தீவிர பிரச்சாரம் நடந்த காலத்தைப் பற்றி Face Book ல் சொல்லியிருந்தார். ’புறக்கணித்தால் வியாபாரம் என்னாவது?’ என்கிற மனநிலையில்தான் பலர் இருக்கிறார்கள். கனடாவில் இருக்கிற பெரிய கடைகளுக்கு ஆரம்பகாலத்து முதல் எங்கிருந்து வந்தது, அவை யாருடைய கடைகள் என்று பார்க்கவேண்டும். அவர்களே புறக்கணிப்புகளை இந்தமாதிரித்தான் எதிர்கொண்டார்கள். அதாவது, உணர்வு பூர்வமான, போராட்ட குணம் உள்ளவர்களாகக் காட்டிக்கொள்கிறவர்கள்கூட பெருவியாபாரிகளின் மனநிலையோடுதான் இருக்கிறார்கள். மூலதனத்தை மீட்பது, இலாபத்தைப் பெருக்குவது போன்றவைதான் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. இலாபப் பெருக்கமும், மூலதன மீட்பும் பிழையல்ல, மூலதனம் உங்கள் பணமாக இருக்கிறபோது. இன்னும் ஆழமாகச் சிந்தித்தால் மண்மீட்பு முதல், இனமானம் என்கிற சொல்லாடல் வரை எல்லாமே கிட்டத்தட்ட வியாபாரமயப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதே புறக்கணிப்பாளர்கள்தான் இலண்டனில் எடுக்கப்பட்ட ஒரு தமிழகச் சினிமாவில் தலைகாட்ட அலைந்து திரிந்து தலைகாட்டியும் இருக்கிறார்கள். இதே புறக்கணிப்பாளர்கள்தான் விஜயகாந்துக்கு காசில்லாமல் கனடாவில் தங்க ஏற்பாடும் செய்து கொடுத்திருக்கிறார்கள். ஈழத்துக் கலைஞர்களைக் கௌரவிக்கிற விழாவுக்கு பிரகஷ்ராஜ் வந்து போயிருக்கிறார். வடிவேலு முதற்கொண்டு கலக்கப்போவது யாரு படைவரை எல்லோரும் உழைத்துக்கொண்டு போவார்கள். சூப்பர் சிங்கர், மானாட மயிலாட போன்றவைதான் ‘கலை நிகழ்ச்சிகள்’ ஆகும். பிரேம்கோபாலும், பிரேமினியும் தமிழீழம் பெற்றுத் தருவார்கள். இப்படியாக எந்தவிதமான அடிப்படை அறமோ, ஓர்மமோ இல்லாமல் இருக்கிற எங்களை ‘செருப்பாய் இரு’ என்று ஒரு கழிசடை சொல்லும், இன்னொரு கழிசடை ‘யாழ்நகர்’ என்றெல்லாம் பொது அறிவெல்லாம் இல்லாமல் பெயரிட்டு விசரேற்றும், இன்னொரு கழிசடை உண்ணாவிரதப்பந்தலில் ‘பஞ்ச்’ பேசும். நாங்களும் ‘செருப்பாய் இருப்போம்’.

தமிழகச் சினிமா நல்ல பொழுதுபோக்காக இருக்கிறதா. பாருங்கள், மகிழுங்கள். தயவுசெய்து அந்த வியாபாரிகளை எங்கள் வாழ்வியலுக்குள் மூக்கை நுழைக்க விடாதீர்கள். கெட்ட அரசியல்வாதியைவிட மோசமானவர்கள் இந்தக் கெட்டிக்கார வியாபாரிகள்

 



Saturday 8 January 2011

செரிலாக்

’அப்ப என்ன மாதிரித் தம்பி. ஊரில எல்லாரும் சுகமா? அப்பா, அம்மா எல்லாரும் எப்பிடியடா இருக்கினம்? கதச்சனியே. நான் விசாரிச்சனான் எண்டு சொல்லடாப்பு’. அன்னாரை எனக்குக் கிட்டத்தட்ட 11 வருசமாகத் தெரிந்திருந்தது. திருமணவழியில் எங்கள் குடும்பத்துடன் உறவானவர். அன்னாரைப்பற்றி ‘ர்’ போட்டுக் கதைக்கிறபடியால் அவருக்கு பெரிய வயசெல்லாம் இல்லை. என்னிலும் ஒரு பதினைந்துவயது கூட இருக்கலாம். எங்களின் கிராமத்துக்குக் கொஞ்சம் தள்ளி இருக்கிற ஒரு ஊர்தான் அவருக்கு அடி. ‘அல்வாய்’ கிராமசேவகர் பிரிவுக்குள் கொஞ்சம் பெரிய ஊர். தகப்பனார் நல்ல உழைப்பாளி, தோட்டம் துரவு எல்லாம் இருந்தது. அந்தியோட்டிக் கல்வெட்டுகளில் விசாலமான அடைமொழிபோடுகிறவர்கள். எண்பதுகளின் கடைசியோ, தொண்ணூறுகளின் ஆரம்பமோ என்னவோ அன்னார் அங்கே வாழமுடியாத சூழ்நிலைக்கைதியாகி ஐரோப்பாவில் எல்லாம் சுற்றி கனடாவில் நிரந்தரமாகிவிட்டவர்.

அன்னார் ஒரு தேர்ந்த அரசியல்வாதி/விமர்சகர்/நோக்குனர். அதுவும் தாயக அரசியலில் அன்னாரின் பங்கு மகத்தானது. ‘சிவாஸ் ரீகல்’ கூடத் தேவையில்லை, ‘மொல்சன் கனேடியன்’ மணமே போதும், அன்னாரின் கருத்துரைகள் கடல்தேடு நதியெனப் பெருக்கெடுக்க. அன்னாரோடு சேர்ந்திருக்கும் இன்னார்கள் எல்லாம் ‘அவரிட ஐடியா என்ன எண்டால்...’ என்று தொடங்கி ஒவ்வொரு விஷயத்திலும் இருக்ககூடிய தங்களின் கருத்துக்களைச் சொல்லுவார்கள். உதாரணமாக, கமலஹாசன் எதை நினைத்து கையடிப்பார்... மன்னியுங்கள், கமலஹாசன் எதை நினைத்து தசாவதாரம் படத்தில் மேற்படி காட்சி எடுத்தார் என தங்களின் கருத்தை இப்படிச்சொல்வார்கள், ‘கமலிட ஐடியா என்னவெண்டால்........’. சதாம் ஊசேன், ஒபாமா, ராஜபக்சே, பிரபாகரன் எல்லோருடைய மனத்துக்குள் இருந்தவை, இருக்கிறவை எல்லாவற்றையும் இங்கிருந்தபடியே எப்படியெல்லாம் படிக்கிறார்கள் என்றெல்லாம் நினைத்தால் உங்களுக்கு உடனடியாகத் தண்ணியடிக்கத் தோன்றும்.

அன்னாருக்குக் கிட்டத்தட்ட எல்லாப்பரப்பிலும் விஷயஞானம் உண்டெனத் தோன்றும் எனக்கு. அதிலும் அன்னாருக்கும் இன்னார்களுக்கும் இடையில் நடக்கிற விவாதங்கள் அளப்பரிய கருத்தியல்களை சர்வசாதாரணமாகத் தொட்டுச்செல்லும். பெரும்பாலும் அன்னாரின் விவாதங்கள் ‘ஒன்றும் ஒன்றும் இரண்டு’ என்றுதான் ஆரம்பிக்கும். இடனே முதலாவது இன்னார் ‘இல்ல.. அது எப்படியெண்டால் ஒன்றும் ஒன்றும் மூன்று’. அடுத்த இன்னார் ‘ஒன்றும் ஒன்றும் ஐந்தெல்லோ’ என்பார். இது சுற்றிச் சுற்றி அன்னாரிடம் வருகிறபோது அன்னார் விகாரமாகச் சிரித்தபடி ‘ஒன்றும் ஒன்றும் மூன்று’ என்பார். உடனே முதல் இன்னார் ‘இல்லைப்பாருங்கோ.. ஒன்றும் ஒன்றும் இரண்டு’ என்பார். இப்படியே விவாதங்கள் தொடர்ந்தபடியிருக்கும்.

அன்னார் அடிக்கடி ‘இந்த யூனியன் வச்சிருக்கிற கொம்பனியளில வேலைக்கே போகக்கூடாது. சும்மா யூனியன் fee எண்டு காசைப் பிடுங்கிறாங்கள். இந்தக் கொம்யூனிஸ்ட்டுகளுக்கு வேற வேலையே’ இல்லை என்பார். எனக்கு யூனியன்களின் இருத்தலுக்கும் கொம்யூனிசத்துக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றும். கைத்தொழில் புரட்சி, அந்தப் புரட்சி இந்தப் புரட்சி என்று தொழிற்சங்கவாதிகளின் தோற்றத்துக்கு வேண்டுமானால் பொதுவுடமைவாதிகள் பெரும்பங்காற்றியிருக்கலாம். அதே போல் பொதுவுடமைவாதிகளால் தொழிற்சங்கத்தின் அடிப்படைகளைப் புரிந்துகொள்வது இலகுவானதொன்றாய் இருக்கலாம். இருந்தும், சாதாரண உழைப்பாளிகளுக்கு நேர்மையான ஒரு தொழிற்சங்கத்தின் அவசியம் பற்றிப் புரிந்துகொள்வதற்கு நீ பொதுவுடமைவாதியாயிருக்கவேண்டியதில்லை, உன்னைச் சுற்றிய முதலாளிகளின் சமூகம் உன்னை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறது என்று தெரிந்திருந்தாலே போதுமானது என்பது என்னுடைய கருத்து, தொழிற்சங்கங்களைப் பற்றி. தமிழகத்துச் சினிமாவில் வருகிற காக்கிச்சட்டைபோட்ட சந்திரசேகரைப் பார்த்துவிட்டு தொழிற்சங்கங்களைப் பற்றி அன்னார் கதைக்கும்போது அவரோடு வாதம் பண்ணுவதில் பிரயோசனமிருப்பதில்லை. ஒருமுறை ரசினிகாந்தும் கவுண்டமனியும்கூட அதே உடைபோட்டு ஒரு தொழிலாளியின் கைவெட்டுப்பட்ட காரணத்துக்காக ஏதோ வேலைநிறுத்தம் எல்லாம் செய்கிறோம் என்று சொல்லி....ம்ம்ம்ம், இப்படித்தான் அறிவூட்டப்பட்டிருந்தார் அன்னார். ஒருநாள் அன்னாரை downsizing  என்று சொல்லி வேலையைவிட்டுத் தூக்கிவிட்டார்கள். அன்னார் சொன்னார் ‘சே, எங்கட கொம்பனீல மட்டும் யூனியன் இருந்திருந்தால் என்ர நிலமையே வேற...’

ஒருநாள் அன்னாரின் வீட்டுக்குப் போயிருந்தபோது தாயக நிலமை பற்றிக் கவலைப்பட்டுப் பேசிக்கொண்டிருந்தார். எனக்கும் கவலை இருந்தது. கடலில் மூன்று நாட்களாக ‘ஓட்டி யாரடா’ என்று சொல்லி எஞ்சின் சுடப்பட்டு, துப்பாக்கி முனையில் ஓட்டி திருப்பி அழைத்துச் செல்லப்பட ‘ஜலசமாதியை’ எதிர்பார்த்துக் காத்திருந்த உறவு சொன்ன கதைகள் எனக்குள்ளும் இருந்தன. கடல் தண்ணீரைத் தாங்கள் குடித்ததோடு மட்டுமல்லாமல் பழுதாய்ப்போன செரிலாக் மாவை கடல் தண்ணீரில் குழைத்துக் குழந்தைகளுக்கு ஊட்டியதென்பது என்னைப் பொறுத்தவரை பெரும்கொடுமையாக இருந்தது. அப்படி செரிலாக் கூடக் கிடைக்காமல் செத்த எத்தனையோ பிள்ளைகள் பற்றியெல்லாம் செய்திகள் வந்துகொண்டிருந்த காலம். அன்னார் மும்முரமாக வீதிகளில் போராடிக்கொண்டிருந்தார். அன்றைக்கும் போர் முடிந்துவந்துதான் பேசிக்கொண்டிருந்தோம். ரீ.வி.ப் பெட்டியில் திவ்யதர்ஷிணி பேசிக்கொண்டிருந்தார். அன்னார் உச்சுக்கொட்டிக்கொண்டே சொன்னார், ‘இந்த மோட்டுச் சனங்களாலதான் எல்லாப் பிரச்சினையும். உவை என்னத்துக்குப் பாதுகாப்பு வலயத்துக்கு வாறம் எண்டு தாலிய அறுக்கினம்?’. ‘அப்பிடியில்லை அண்ணை. அவயளுக்கும் வாழோணும் எண்ட ஆசை இருக்குமண்ண. சாவு பற்றின பயத்தைவிட வேற எந்தப் பயமும் பெரிசில்லையண்ணை. அதான் அவையளும் வாழோணும் எண்டு நினைச்சு இஞ்சால வரப்பாக்கினம். நானும் நீங்களும் அவயளமாதிரி அங்க இருக்கேலாது எண்டு முடிவெடுத்து இஞ்ச வந்து இருக்கிறது எங்கட உரிமை. கடல் தண்ணீல பழுதான செரிலாக் கரைச்சு எட்டுமாசக் குழந்தைக்குக் குடுக்கிற சனம் உயிர்வாழ எண்டு எடுக்கிற முடிவுகூட அவேட உரிமை அண்ணை. பிறகு....’ முடிக்கமுன் இடைமறித்த அன்னார் சொன்னார், ‘தமிழனாப் பிறந்தவன் நாட்டுக்காக உயிரைக் கொடுக்கிறது அவேட கடமை’.

கொஞ்ச நேரத்துக்கு எதையுமே பேசாமல் இருந்தோம். திவ்யதர்ஷிணி ‘Judges  சொன்ன comments ஐ எல்லாம் improvise பண்ணி அடுத்தமுறை ஆடுங்க’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். Comments ஐ, improvise பண்ணி எப்படி ஆடுவது என்று சிந்திக்கமுயன்றேன். என் மூளைக்கெட்டிய பரப்புகளில் மட்டும்தானே சிந்திக்கலாம்? அன்னார் திடீரென்று குரலெடுத்துக் கத்தினார்... ‘இஞ்ச பாரப்பா.. ரீவி.யப் பாத்துக்கொண்டு என்ன செய்யிறாய்? ஆ... பார் பெடி என்ன செய்யுது எண்டு. பொறுப்பில்லாத நாயே’ என்று. நடுநடுங்கிக்கொண்டே அவரது துணைவி அவர்களில் மூன்று வயதுப்பிள்ளையில் கையிலிருந்த புத்தம்புதிதான, திறக்கப்படாத போத்தல் தண்ணீரைப் பிடுங்கினார். ’கண்டது நிண்டதையும் பிள்ளை எடுத்துச் சாப்பிட சனியனுக்கு ஆட்டக்காரியளைப் பாக்கிறதுதான் முக்கியமாப் போச்சு. போத்தில் தண்ணியக் குடிச்சு நாளைக்கு டையேரியா ஆக்கினா என்ன நிலமை? ஆ... முதல்ல பிள்ளைய ஒழுங்காப் பார்..........’ வசை தொடர்ந்தது.

*----*----*----*
2015 மே மாதம் ஒரு நாள். ரொரொன்ரோவில் 10 வயது மதிக்கக்கூடிய சிறுவன் ஒருவன் மேடையில் முழங்கிக்கொண்டிருந்தான். ‘நான் தமிழன். நாட்டுக்காக உயிரைக் கொடுப்பது என்னுடைய கடமை. அன்னார் முகத்தில் பெருமிதம் பொங்க HD Camcorder ஒன்றில் சிறுவனின் முழக்கத்தை ஆவணப்படுத்திக்கொண்டிருந்தார். அதே நாள் முரசுமோட்டையில் சுற்றாடல்கல்வி ஆசிரியை கொடுத்த வீட்டுவேலையில் ‘கடல் நீரின் பயன்கள் என்ன?’ என்ற கேள்விக்கு நிறைய யோசித்து ‘செரிலாக் கரைக்கலாம்’ என்று ஒரு எட்டுவயதுச் சிறுமி எழுதிக்கொண்டிருந்தாள்.