Saturday 16 January 2010

இந்த வார உலகம்: ஜனவரி 10-ஜனவரி 16, 2010

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

செய்திகள்-பிறந்தகம்
கொழும்பு நியூ மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவந்த தமிழ் அரசியல் கைதிகள் பத்து நாட்களின் பின் மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அவர்களின் மூலம் அரசு வழங்கிய உறுதிமொழியை அடுத்து தமது உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். ‘விசாரணை செய் அல்லது விடுதலை செய்' என்கிற கோஷத்துடன் முன்னெடுக்கப்பட்ட இந்த உண்ணாவிரதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனைய சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக உண்ணாவிரதத்தில் குதிக்கத் தயாராகிவந்த நிலையில், இந்தக் கைதிகளின் பிரச்சினைக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நீதியமைச்சர் மிலிந்த மொறகொடவுக்கு உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து கைதிகள் தமது போராட்டத்தை விலக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இதே வேளை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வாக்காளர்கள் இருவரதும் ஆதரவாளர்கள் மேற்கொள்ளும் தேர்தல் சம்பந்தப்பட்ட வன்முறைகள் அதிகரித்திருப்பதாகவும், தேர்தல் விதிகளுக்கு கட்டுப்பட்டு நடக்க அரசியல் தலைவர்கள் முன்வரவேண்டும் என்றும் தேர்தல் ஆணையர் தயானந்த திசநாயக்க தெரிவித்திருக்கிறார். எல்லா அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்து இது தொடர்பாகப் பேசி, இனிமேல் ஒழுங்காக நடந்துகொள்வதாக அவர்கள் அளித்த வாக்குறுதியின் பேரில்தான் திசநாயக்க இன்னும் தேர்தல் ஆணையாளராக நீடிக்கிறார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. ஏற்கனவே அவரது சொந்த விருப்பத்துக்கு மாறாக நீதிமன்ற ஆணை ஒன்றின் பேரிலேயே தேர்தல் ஆணையாளராக திசநாயக்க நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள்-புகுந்தகம்
தீவிரவாதத்துக்கு எதிரான தீவிரமான போர் என்ற பெயரில் அமெரிக்கா முன்னெடுக்கிற முட்டாள்தனமான போரில் இன்னொரு கனேடியர் காவுகொடுக்கப்பட்டிருக்கிறார். சார்ஜன் ஜோன் போட் (John Faught) என்பவரே இவ்வாறு மரணமடைந்திருக்கிறார். ஆஃப்கான் மக்களுக்கு வணக்கம் தெரிவித்தவேறே நடந்து சென்ற இவர் ஒரு பொறிவெடியில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்திருக்கிறார். ஒன்ராரியோவின் சோல்ற் செயின்-மரி பிரதேசத்தைச் சேர்ந்த இந்த இராணுவ அதிகாரி மேற்படி ஏகாதிபத்திய மற்றும் பிற்போக்குவாத சக்திகளின் முட்டாள்தனமான மோதலில் பலிவாங்கப்பட்ட 139வது இராணுவவீரர் ஆவார்.

மத்திய ரொரொன்ரோ தொகுதி இடைத் தேர்தல் மும்முரமடைந்திருக்கிறது. முன்னை நாள் ஒன்ராரியோ துணை முதல்வர் ஜோர்ஜ் ஸ்மிதர்மான் தன்னுடைய பதவியை ரொரொன்ரோ நகரபிதா பதவியில் போட்டியிடும் பொருட்டு ராஜினாமாச் செய்த காரணத்தால் அந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இதுவரை ஸ்மிதர்மானைத் தாண்டி அந்தத் தொகுதியை லிபரல்களிடமிருந்து கைப்பற்ற முடியாமலிருந்த மற்றக் கட்சிகள் மும்முரமாகப் பிரச்சாரத்தில் இறங்கியிருக்கின்றன. லிபரல்களுக்கு ஸ்மிதர்மானின் இடத்தைத் தக்கவைத்துக்கொள்வதில் பெரும் சிக்கல்கள் இருக்கிறது. காரணம், ஸ்மிதர்மானின் செல்வாக்கு அப்படி.

செய்திகள்-உலகம்
இந்த வாரம் உலகை உலுக்கியது ஹெய்ட்டி பூகம்பம். அரசியல் நிலையின்மையால் கிழிந்து போயிருந்த இந்த நாடு சமீபத்தில்தான் பெரும் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானோரை இழந்தது, லட்சக்கணக்கானோர் அகதிகளானார்கள். அந்த அழிவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துகொண்டிருந்த வேளையில் கடந்த 12ம் திகதி இடம்பெற்ற பாரிய பூகம்பத்தால் பலமாகச் சிதைக்கப்பட்டுவிட்டது. செஞ்சிலுவைச் சங்கம் 45,000-50,000 பேர்வரை மடிந்திருக்கலாம் என்ற கணிப்பை வெளியிட்டபோதும், ஹெய்ட்டி உள்நாட்டு அமைச்சர் ஆகக் குறைந்தது 200,000 பேராவது இறந்துவிட்டார்கள் என்று கணிப்புத் தெரிவித்திருக்கிறார். Moment Magnitude Scale ல் புவி மேற்பரப்பில் 7.0 என்ற சுட்டெண்ணுடன் பதிவான இந்த நிலநடுக்கத்தின் பின்னான முதல் 9 மணித்தியாலங்களில் 4.2 சுட்டெண்ணுக்கு மேற்பட்ட மேலும் 26 அதிர்வுகள் இடம்பெற்றதுதான் அழிவை மேலும் அதிகரித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஐ.நா. மற்றும் பல தன்னார்வ நிறுவனங்கள், உலக நாடுகளில் இருக்கக்கூடிய தொண்டர் அமைப்புகள், பல்வேறு நாட்டு அரசாங்கங்கள் எல்லாம் ஹெய்ட்டிக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கின்றன. மேற்கரைக் கோளத்தில் மிகவும் வறிய நாடு ஹெய்ட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான இயற்கைப் பேரழிவுகளின்போது மனிதம் வெளிப்படுகிறது. ஆனாலும் இயற்கையும் கொன்று நாமும் நம்மைக் கொல்லும் வேகத்தைப் பார்த்தால் 2012 பற்றிய புரளிகளில் உண்மை இருக்குமோ என்று பயப்பட வேண்டியதாய் இருக்கிறது.

வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்
ரோஜேர்ஸ் நிறுவனத்திம் வழங்கிவந்த HTC Dream Smartphone சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன. இதில் GPS பாவிக்கும் வசதி இருக்கிறது. ஆனால், அவ்வாறு GPS பாவிக்கும்போது அவசர உதவிக்கான 911 அழைப்புகளை ஏற்படுத்த முடியாமல் இருக்கிறதாம் HTC Dreamல். அதனால் அவசர அவசரமாக ஒரு குறுஞ்செய்தி மூலம் ஏலவே இந்த வகை smartphoneகளைப் பாவிக்கிற பாவனையாளர்களுக்கு சரியான வழிமுறைகளை அனுப்பி வைத்திருப்பதோடு, HTC Dream விற்பனையையும் நிறுத்தி வைத்திருக்கிறது ரோஜேர்ஸ் நிறுவனம்.

விளையாட்டு
கடந்த பத்தாண்டுகளின் மிகச் சிறந்த வீரராக அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ரிக்கி பொண்டிங் cricinfo இணையத் தளத்தினால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். பல புகழ்பெற்ற வீரர்களின் கடுமையான போட்டியைத் தாண்டி இவருக்கு இந்தக் கௌரவத்தை அந்த இணையத்தளம் கொடுத்திருக்கிறது. அடுத்து வந்த இடங்களை ஜக் கல்லிஸ், அடம் கில்கிறிஸ்ட், முத்தையா முரளிதரன், கிளென் மக்ராத், சச்சின் டெண்டூல்கர், ஷேன் வோர்ண், பிரயன் லாரா, ராகுல் ட்ராவிட், சிவநாராயணன் சந்திரபோல் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். மேற்படி கௌரவத்தைக் கொண்டாடுவதுபோல் பொண்டிங் அடித்தார் பாருங்கள் ஒரு இரட்டைச் சதம், அதுதான் பொண்டிங்.

அலன் போடர், மார்க் டெய்லர், ஸ்டீவ் வோ போன்ற தலைவர்கள் கட்டமைத்த அருமையான அணியில் விளையாடினார் போன்ற காரணங்களையும், நடுவர்கள் எதிரணி வீரர்களுடன் முரண்படுபவர் என்ற பழிச் சொல்லை மீறியும் பொண்டிங் சிறந்த வீரராகத் தெரிவுசெய்யப்படக் காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்பதற்கு இந்த இரட்டைச் சதம் ஒரு நல்ல உதாரணம். அதற்கு முன்னைய போட்டிகளில் அப்படி நாறியவர், அந்த இரட்டைச் சத இன்னிங்ஸ்சை எப்படிக் கட்டியமைத்தார் என்பது masterclass.

சினிமா-பொழுதுபோக்கு-பிற..
தைப் பொங்கலுக்குத் திரைக்குவந்த படங்களில் பலவற்றின் வலையுலக விமர்சனங்கள் அவ்வளவு நன்றாக இல்லை. செல்வராகவனின் 'ஆயிரத்தில் ஒருவன்' பிய்த்து எடுக்கப்படுகிறது. பாண்டியர்களின் நிறம்கொண்ட பார்த்திபனைச் சோழனாக நடிக்க வைத்ததிலேயே சறுக்கிவிட்டார் போலிருக்கிறது. தனுஷ் குட்டியில் கடைசிக் காட்சிகளில் கலக்கியிருக்கிறாராம். விரைவில் டி.வி.டி. வரட்டும். பார்க்கலாம்.

இந்த வருடம் வர இருக்கிற படங்களுக்கான பாடல்கள் நன்றாக இருக்கின்றன. ஏலவே நல்ல முறையில் சந்தைப்படுத்தப்பட்ட ‘ஹோசானா'வோடு ஏனைய பாடல்களிலும் ரஹ்மான் கவர்கிறார். வித்தியாசமான genreல் அமைந்த 'ஆரோமலே' ஆகட்டும், மெல்லிதாகப் பின்னணியில் நாதஸ்வரம் கலந்து படைக்கப்பட்ட 'ஓமனப் பெண்ணே' ஆகட்டும்... ராஜாவுக்குப் பிறகு எல்லைகளைத் தாண்டுபவராக ரஹ்மான் இருக்கிறார் என்பதை மறுக்கமுடியாது.

1 comment:

Anonymous said...

பாண்டியர் மட்டும் தான் கருப்போ ? அப்ப சோழர்? நீங்கள் கல்கியின் வர்ணனியில ரொம்ப சொக்கிப் போய்டீங்க சார். அப்புறம் டிவிடி பார்க்க போறீங்களா? வாழ்க