Sunday 31 May 2009

பாடமே படமாக...


நீங்கள் ஒரு கதையையோ, ஒரு நாவலையோ வாசிக்கும்போது அதில் வரும் கதாபாத்திரங்கள் மற்றும் சம்பவங்களை மனதுக்குள் காட்சிப்படுத்திப் பார்ப்பதுண்டா? நான் செய்வதுண்டு. இவ்வாறு நீங்கள் வாசித்த கதையோ, நாவலோ திரைப்படமாக வெளிவந்திருந்தால் அதைப் பார்ப்பதற்கு ஒரு தனி ஆவல் எற்படும். அவ்வாறு நான் வாசித்த நாவல் ஒன்றின் திரைப்பட வடிவத்தை திரைப்படமாகப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு சமீபத்தில் கிட்டியது. அது சர். ஆர்தர் கொனான் டொய்ல் (Sir. Arthur Conan Doyle) அவர்கள் எழுதிய த ஹவுண்ட் ஒஃப் த பாஸ்கெர்வில்ஸ் (The Hound of the Baskervilles) என்ற நாவலின் திரைப்பட வடிவம். உடனே ஆரம்பிச்சுட்டான்யா அடுத்த உலக சினிமா ரசிகன் என்று ஓடிவிடாதீர்கள். டொய்லும் அவரது நாவலும் எனக்கு எப்படி அறிமுகமானார்கள் என்று சொன்னால் நான் அந்தப் படத்தைப் பார்க்க ஏன் ஆவல் கொண்டிருந்தேன் என்று புரிந்து கொள்ளலாம்.

சிறீலங்காவில் நாங்கள் 11ம் வகுப்பில் நாடளாவியா ரீதியில் ஒரு பரீட்சை நடக்கும். அதற்கு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (General Certificate of Education, Ordinary Level) என்று பெயர். (13ம் வகுப்பில் நடப்பது க.பொ.த உயர் தரப் பரீட்சை). நான் 9ம் வகுப்புக்குப் போகும்போது என்று நினைக்கிறேன், தமிழ்மொழி, கணிதம், விஞ்ஞானமும் தொழிநுட்பவியலும், சமயம், சமூகக் கல்வியும் வரலாறும், ஆங்கிலம், கவின்கலை (சித்திரம், சங்கீதம், நடனம் ஆகியவற்றில் ஒன்று), சுகாதாரமும் உடற்கல்வியும் ஆகிய 8 பாடங்களோடு (கட்டாய பாடங்களை சரியாகவே பட்டியலிட்டிருக்கிறேன் என நம்புகிறேன்), புவியியல், தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், வர்த்தகமும் கணக்கியலும் அல்லது இலத்திரனியல் ஆகிய தெரிவுகளிலிருந்து இரண்டு பாடங்களுமாக 10 பாடங்களைத் தெரிவுசெய்து 11ம் வகுப்புவரை படிக்க வேண்டும் என்றார்கள் அரசாங்கம். நான் தெரிவுசெய்தது வர்த்தகமும் கணக்கியலும் மற்றும் ஆங்கில இலக்கியம். (மிகச்சொற்பமே ஆங்கில இலக்கியம் படித்தோம். 15 பேரைத் தாண்டாது. 3 பேர் A எடுத்தார்கள். எனக்கு B மட்டுமே. A எடுத்த மூவருமே ஸ்பெஷலாக ரியூசன் போனார்கள். அவர்களில் ஒருவன் ரஞ்சித் அங்கே ரியூசன் வருமாறு என்னை வற்புறுத்தாத நாளே இல்லை. நான் தான் சோம்பல் பட்டு போகவே இல்லை). அப்படி ஆங்கில இலக்கியம் படித்த போதுதான் Sir. Arthur Conan Doyle மற்றும் அவரது நாவலான The Hound of the Baskervilles பற்றித் தெரிந்து கொண்டேன்.

ஆங்கில இலக்கியப் பாடத்திட்டப்படி அரசாங்கம் ஒரு பாடப் புத்தகம் தந்தார்கள். அதில் கவிதைகள் மற்றும் 5 சிறுகதைகள் அடங்கியிருக்கும். இவை தவிர அவர்கள் சிபாரிசு செய்யும் ஐந்து நாவல்களில், மூன்று நாவல்களை நாம் தெரிவு செய்து வாசிக்கவேண்டும். தெரிவைச் சுலபமாக்கவென ஒரு நாவலைக் கட்டாயத் தேர்வாக அரசாங்கமே சொல்லியிருந்தது. அந்நாவல்கள் வருமாறு:
  1. Oliver Twist by Charles Dickens (Compulsury)
  2. Mangrove Island by Martin Wickramasinghe
  3. The Mill on the Floss by George Elliott (இந்த நாவலின் பெயரை மறந்தே விட்டேன். ஞாபகப்படுத்திய நண்பன் பகீதரனுக்கு நன்றி)
  4. Swami and Friends by R. K. Narayan
  5. The Hound of the Baskervilles by Sir. Arthur Conan Doyle
என்னுடைய அப்பாவின் ஈடுபாடு காரணமாக ஐந்து நாவல்களுமே எனக்குக் கிடைத்தன. (என்னிடம் மட்டும் தான் ஐந்தும் இருந்தது. ஆசிரியர்களிடம் கூட இல்லை). அப்போது வாசித்த அந்த ஐந்து நாவல்களில் அனைத்துமே எனக்குப் பிடித்திருந்தபோதும் நான் மீண்டும் மீண்டும் வாசித்தது டொய்ல் மற்றும் ஆர். கே. நாராயண் இருவரையும் தான். Oliver Twist ஐ நாடகமாக நடித்ததால் அது கிட்டத்தட்ட எனக்கு தலைகீழ் பாடம். இப்படி என் பதின்ம வயதுகளில் என் மனம் கவர்ந்த, இலக்கியத்தரம் மிகுந்த டொய்லின் துப்பறியும் நாவலின் திரைப்பட வடிவம் சமீபத்தில் ஒரு வலைமனையில் DVD Rip ஆகக் கிடைத்தபோது அதைப் பார்க்கும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டதில் அதிசயம் இல்லை.

கதை:
இது டொய்லின் புகழ்பெற்ற Sherlock Holmes வரிசைக் கதை. இங்கிலாந்தின் டெவன்சயர் பிரதேசத்தில் உள்ள ஒரு நிலப்பிரபுவான சார்ள்ஸ் பாஸ்கெர்வில் மர்மமான முறையில் இறந்து போகிறார். சொத்துக்களைப் பொறுப்பேற்க கனடாவிலிருந்து சட்டபூர்வ வாரிசான ஹென்றி பாஸ்கெர்வில் இங்கிலாந்து வருகிறார். சார்ள்ஸ் பாஸ்கெர்வில்லின் குடும்ப வைத்தியர் லண்டனில் ஷெர்லக் ஹோல்ம்ஸை சந்தித்து, சார்ள்ஸ் பாஸ்கெர்வில்லின் மரணத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாயும், புதிய வாரிசு ஹென்றிக்கும் துர்மரணம் சம்பவிக்கலாம் என்று தான் சந்தேகிப்பதாயும் கூறுகிறார். அத்துடன், பாஸ்கெர்வில் பரம்பரையில் முன்னொரு காலத்தில் வாழ்ந்த ஹுகோ பாஸ்கெர்வில் என்ற கொடியவன் ஒரு பெண்ணை வன்புணர முயன்றதால் பாஸ்கெர்வில் குடும்பத்துக்கு ஒரு சாபம் கிடைத்ததாயும், ஹூகோவை ஒரு வேட்டைநாய் கொன்றதாயும், அதன் பின் வந்த எல்ல பாஸ்கெர்வில்களும் ஏதாவது ஒருவகையில் துர்மரணம் அடைவதாயும் குறிப்பிடும் வைத்தியர், தான் இந்த சாபக் கதையை நம்பவில்லை என்றும், சார்ள்ஸின் மரணத்தில் வேறேதோ மர்மம் இருப்பதாயும் சொல்கிறார். ஹோல்ம்ஸின் உதவியையும் நாடி நிற்கிறார். லண்டன் வந்த ஹென்றியை டெவன்சயருக்கு வரவேண்டாம் என்று ஒரு எச்சரிக்கைக் கடிதம் வருகிறது, ஒரு மர்ம நபர் அவரையும் வைத்தியரையும் பின்தொடர்கிறார். முதலில் ஹென்றியின் புத்தம் புதிய ஸூ காணாமல் போகிறது. சிறிது நேரம் கழித்து புது ஸூ திரும்பக்கிடைத்து அவர் பாவித்த ஸூ காணாமல் போகிறது. ஹென்றியைப் பின் தொடர்ந்த மர்ம மனிதன் அவனை ஏற்றிச்சென்ற குதிரை வண்டிக்காரனிடம் தனது பெயர் ஷெர்லோக் ஹோல்ம்ஸ் என்கிறான். இந்த சம்பவங்கள் எல்லாம் நிஜ ஷெர்லோக் ஹோல்ம்ஸை இந்த சிக்கலான் வழக்கில் ஈடுபாடடைய வைக்கிறது. அதன் பின் ஹோல்ம்ஸ் என்ன செய்தார், சாபம் உண்மையா, சார்ள்ஸ் பாஸ்கர்வில்லின் மரணத்திலிருந்த மர்மங்கள் என்ன போன்றவற்றை டொய்லின் நாவலை வாங்கிப் படிப்பதன் மூலமோ, DVD மூலமோ தெரிந்து கொள்ளுங்கள்.

படம் பார்த்தபோது எனது மனதில் பட்டவை:
  • 1959ல் வந்த படம் என்பதால், நாடகத்தன்மை அதிகமாக இருந்தது. சில சீரியஸ் காட்சிகளில் நடிகர்களின் நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பு சிரிப்பூட்டியது.
  • Sherlock Holmes ஆக நடித்த Peter Cushing நான் மனதில் காட்சிப்படுத்திய ஹோல்ம்ஸைவிட கம்பீரமாக இருந்தார். (இவருக்கு முன் ஹோல்ம்ஸ் வேடங்களை Basil Rathbone என்பவர் செய்வாராம். பீற்றரால் பாசில் அளவுக்கு சோபிக்க முடியவில்லை என்பது அந்நாளைய விமர்சகர்களின் கருத்தாம்).
  • நாவலில் உள்ள சில கதாபாத்திரங்கள் படத்தில் இல்லை அல்லது பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறன.
  • 75 நிமிடம் ஓடும் படம் என்பதால் நாவலாசிரியர் சொன்ன பல நுணுக்கமான விடயங்கள் விடப்பட்டிருக்கின்றன. (உதாரணமாக, வில்லனின் Background and Identity).
  • நாவலைவிட படத்தில் கொஞ்சம் நகைச்சுவையுணர்வு தெறித்தது.
  • படத்தில் இந்நாளைய ஆங்கிலப்படங்களில் பாவிக்கப்படும் பிரபல F@@K Word பாவிக்கப்படவில்லை. இரண்டே இரண்டு வரைமுறை மீறாத முத்தக்காட்சிகளும் படத்தில் இருந்தன.
நான் ஒன்றும் பெரிய இலக்கிய விமர்சகனோ, சினிமா விமர்சகனோ இல்லை. ஆனால் துப்பறியும் கதை எழுத்தாளர்களின் God Father ஆன டொய்லின் கதையைப் படம் பண்ணும் போது இன்னும் கொஞ்சம் நுணுக்கமாகப் பண்ணியிருக்கலாம் (சுஜாதாவின் கதைகளில் வரும் கணேஷ்-வஸந்த் டொய்லின் Sherlock Holmes- Dr. Watson ஜோடி தந்த ஐடியா என்று சுஜாதா எங்கோ ஒரு பேட்டியில் குறிப்பிட்ட ஞாபகம், அந்தளவுக்கு டொய்ல் துப்பறியும் கதை எழுதுபவர்களிடம் ஆதிக்கம் செலுத்தினார். லண்டனில் ஷெர்லோக் ஹோல்ம்ஸின் அலுவலகத்தைத் தேடி அலைந்த வாசகர்கள் ஏராளமாம்). நாவல் வாசிக்கும்போது (அதுவும் மக்மில்லன் இந்தியாவால் குறுக்கிச்சொல்லப்பட்ட ஒரு Version) இருந்த பரபரப்பு, திகில், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், நிறைவு படத்தில் இல்லை. அந்தக் கதையை இன்றைக்கு ரீ-மேக் செய்தால் கூட ஓடும். ஏன், தமிழ்நாட்டில் ஒரு மூலையிலுள்ள குக்கிராமத்தில் நடப்பதுபோலக் கூடப் படம் எடுக்கலாம், பிய்த்துக்கொண்டு ஓடும். இருந்தும் சொல்கிறேன், ஒரு கதையை எழுதிய எழுத்தாளரின் நேரடிப் பங்களிப்பு இல்லாமல், கதையில் இயக்குனரால் சிறு மாற்றங்கள் செய்து எடுக்கப்படும் படங்கள் நாவலைப்போலவே மகா வெற்றி பெறுமா என்று கேட்டால், எனது பதில், இல்லை, ஒரு போதும் இல்லை.


Thursday 28 May 2009

ஜெயிப்பது நிச்சயம்- சொல்கிறார் சச்சின்


5ம் திகதி தொடங்குகிறது ICC World T20. சச்சினும் அது பற்றி ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். இந்தக் கோப்பையும் இந்தியாவுக்கே என்று தனது திருவாய் மலர்ந்திருக்கிறார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:
  • இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்தில் விளையாடுவதற்கு ஏற்றவர்கள். இசாந்த் சர்மா, ஜாகீர் கான், ஆர்.பி. சிங், இர்பான் பதான் மற்றும் பிரவீன் குமார் ஆகியோரைத்தெரிவு செய்திருப்பது இந்தியத் தேர்வாளர்களின் நல்லதோர் தீர்மானம் ஆகும். இவர்கள் அனைவரும் பந்து வீசும் வகையில் நிறைய variety இருக்கிறது. அவர்களுக்கான நாளில் உலகின் எந்த அணியின் துடுப்பாட்ட வரிசையையும் நாசம் செய்யக்கூடியவர்கள்.
  • IPL போட்டிகளில் கைவரிசை காட்டத்தவறிய சேவாக்கும் காம்பிரும் உடல் அசதியை தவிர்த்தால் சோபிக்க முடியும் எனவும், சேவாக் மிகவிரைவில் நல்ல ஃபார்முக்கு வருவார் எனவும் எதிர்வு கூறிய சச்சின். ஃபார்ம் ஏற்ற இறக்கங்கள் ஒரு கிரிக்கெட்டருக்கு சகஜம் என்றும் கூறினார்.
  • மேலும் இந்திய அணியின் ‘அணிச் சமநிலை' (Team Balance) அற்புதமாயிருப்பதாயும், அணிச் சமநிலையைப் பொறுத்தவர இந்தியாவே சிறந்தது எனவும் கூறியுள்ளார். இதன் காரணமாக இந்தியா நிச்சயம் கோப்பையை வெல்லும் என்கிறார் ‘லிட்டில் மாஸ்டர்'. மேலும் இந்த அணிச்சமநிலையை தான் குலைக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். (விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை...அட அவருக்குதான் மீசையே இல்லையே)
சச்சினிடம் நான் வேண்டி விரும்பிக்கேட்க விரும்பும் சில உதவிகளின் தமிழாக்கங்கள் இதோ:
  1. சச்சின், ஒரு நாள் போட்டிகளில் நீங்கள் சாதிப்பதற்கென்று ஏதாவது இருக்கிறதா? தயவு செய்து ஒதுங்கிக்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தலாமே? (பாண்டிங் டெஸ்ட் சாதனைகளை வைத்திருப்பது கிரிக்கெட்டுக்கே அவமானம்)
  2. தயவு செய்து லலித் மோடி நடத்தும் விளம்பரக் களியாட்டங்களை தவிருங்கள். Twenty Twenty இந்தியாவுக்காக ஆடினால் சந்தோசம். மும்பை இண்டியன்ஸுக்காக வேண்டாமே!! உங்களுக்கு T20 வேண்டாமென்பேன். இருக்கிற பெயரை ரிப்பேராக்காதீர்கள்.
  3. தயவுசெய்து எந்த அணிக்கும் தலமையேற்காதீர்கள். மும்பை இண்டியன்ஸ் கேப்டனாக நீங்கள் ஆடிய கூத்துக்கள் புச்சானன் மற்றும் நைட் ரைடர்ஸ் இல்லையென்றால் இந்த வருடத்தின் மிகப்பெரிய காமெடியாகியிருக்க வாய்ப்புகள் உண்டு. வந்தோமா, 'பேட்'டை எடுத்தோமா, பவுண்டரி அடித்தோமா என்று எங்களை மகிழ்ச்சிப்படுத்துவதை விட்டுவிட்டு இப்படி ‘கேப்டன்' என்ற பெயரில் காமடி பண்ண வேண்டுமா சச்சின்?
  4. கடைசி வேண்டுகோள்: தயவுசெய்து உங்கள் கருத்துக் கந்தசாமி வேலையை விட்டுவிடுங்கள். இந்திய தேசத்தின் செல்வமாக, தலைமுறைகள் கடந்த ஆதர்ச நாயகனாக, உங்கள் நாட்டில் மட்டுமல்ல, பக்கத்து நாட்டிலும், ஏன் உலகம் பூராவும் உள்ள பலரது காயங்களுக்கு மருந்தாக (96ல் இந்தியா செமிஃபைனலில் இலங்கையிடம் தோற்ற போது ஏதோ இழவு விழுந்தது போல திரிந்த பாலகுமார் அண்ணா ஞாபகம் வருகிறார்) இருந்த நீங்கள் இப்போது ஒரு கிண்டல் மையமாக (Laughing Stock க்கு தமிழ் தெரியவில்லை) மாறி வருவது வேதனை.
நான் கிரிக்கட் பார்க்கத்தொடங்கியதே சச்சின் 1996 உலகக் கோப்பையில் கென்யாவுக்கு எதிராக முதல் போட்டியிலேயே சதம் அடித்ததிலிருந்துதான். அப்போ அவர் அடித்த ஒவ்வொரு ரன்னுக்கும் கிடைத்த கரகோசம் தான் என்னை கிரிக்கெட் நோக்கி திருப்பியது. (பின் கிரிக்கெட் பைத்தியமாகி வாழ்வைத் தொலைத்த கதை வேறு). சச்சினை விமர்சித்த ஒரு நண்பனை அடித்துமிருக்கிறேன். அப்படி ஒரு ‘கிரிக்கெட் பைத்தியம்' நான். அதனால் தானோ என்னவோ சச்சினை ஒரு காமெடியனாகப் பார்க்க முடியவில்லை. (இப்போதெல்லாம் அவர் அதுதான் செய்கிறார் என்பது வேறு விடயம்). அந்த ஆதங்கம் தான் இந்தப் பதிவு.

பி.கு: சச்சின் இந்திய T20 அணிபற்றிச்சொன்ன கருத்துக்களைப் படிக்க இங்கே அழுத்தவும்.

Tuesday 26 May 2009

எளிமையாகத் தமிழ் இலக்கணம்- 07

வினைமுற்று முதலியன

படித்தான், படித்து, படித்த, - என்பன வினைச்சொற்கள் என்பது முன்பே கூறப்பட்டதன்றோ? இவற்றில் பொருள் முற்றி (முடிந்து) நிற்கும் வினைச்சொல் எது? படித்தான் என்பதே வினை முற்றி நிற்பது. ஆதலால் படித்தான் என்பது வினைமுற்று எனப்படும். படித்து, படித்த என்பவை முற்றுப் பெறாத வினைச் சொற்கள், இவை (1) படித்து (வந்தான்) என வேறொரு வினைச் சொல்லையும், (2) படித்த (பையன்) என ஒரு பெயர்ச் சொல்லையும் தழுவி நிற்க வேண்டுவனவாக இருக்கின்றன. இவற்றுள் வினையைத் தழுவும் முற்றுப் பெறாத வினைச்சொல் வினையெச்சம் எனப்படும். பெயரைத் தழுவும் முற்றுப் பெறாத வினைச்சொல் பெயரெச்சம் எனப்படும்.

படித்தான், படிக்கின்றான், படிப்பான் - வினைமுற்று.
படித்து, நடந்து, படிக்க (வந்தான்) - வினையெச்சம்.
படித்த, படிக்கின்ற, படிக்கும் (பையன்) - பெயரெச்சம்.


மூன்று காலங்கள்

கம்பர் இராமாயணம் பாடினார்.
பையன் பாடம் படிக்கிறான்.
குழந்தை பால் குடிக்கும்.
பாடினார், படிக்கிறான், குடிக்கும் - இவற்றுள் ஒவ்வொன்றும் எந்தக் கால
நிகழ்ச்சியை உணர்த்துகின்றது?
பாடினார் என்பது செயல் நடந்துவிட்ட (இறந்த) காலத்தையும்.
படிக்கிறான் என்பது செயல் இப்பொழுது நிகழ்கின்ற காலத்தையும்,
குடிக்கும் என்பது செயல் இனி நடைபெற இருக்கும் எதிர்காலத்தையும்
காட்டுகின்றன அல்லவா? இவை மூன்றும் முறையே,
இறந்த கால வினைமுற்று
நிகழ்கால வினைமுற்று
எதிர்கால வினைமுற்று
எனப்படும்.
பாடினார் - இறந்தகால வினைமுற்று.
படிக்கிறான் - நிகழ்கால வினைமுற்று.
குடிக்கும் - எதிர்கால வினைமுற்று.

செய்தான் - செய் + த் + ஆன்
செய்கிறான் - செய் + கிறு + ஆன்
செய்வான் - செய் + வ் + ஆன்
இம்மூன்று சொற்களும் வெவ்வேறு காலங்களை உணர்த்துகின்றன என்பதை நீங்களே உணரலாம். இங்ஙனம் தனித்தனிக் காலத்தை உணர்த்தும் உறுப்பு ஒவ்வொரு சொல்லிலும் எங்கே இருக்கிறது? மூன்றிலும் உள்ள `செய்' என்னும் முதல் உறுப்புப் பகுதி என்பதும், கடைசி உறுப்பு விகுதி என்பதும் உங்களுக்குத் தெரியும். பகுதி தொழிலை உணர்த்துகிறது; விகுதி தொழில் செய்யும் கருத்தாவை உணர்த்துகிறது; இவை இரண்டும் போக ஒவ்வொன்றிலும் எஞ்சியிருக்கும் உறுப்பே ஒவ்வொரு காலத்தை உணர்த்துகின்றது.

த் - இறந்த (செயல் நடந்த) காலத்தையும்
கிறு - நிகழ் (செயல் நிகழ்கின்ற) காலத்தையும்
வ் - எதிர் (செயல் இனி நடைபெறும்) காலத்தையும் உணர்த்துகின்றன. இவை
இவ்வாறு சொல்லின் இடையில் நிற்பதால் இடைநிலைகள் என்று பெயர் பெறும்; இவை
காலம் காட்டுவதால் காலம் காட்டும் இடைநிலைகள் என்று சொல்லப்படும்.

செய்தான் - செய் + த் + ஆன்
உண்டான் - உண் + ட் + ஆன்
கற்றான் - கல் + ற் + ஆன்
விரும்பினான் - விரும்பு + இன் + ஆன்.
இவை நான்கும் இறந்த காலத்தைக் குறிக்கும் வினைச்சொற்கள். ஆயினும் இடைநிலைகள் வெவ்வேறாக இருக்கின்றன அல்லவா? இவை இறந்த கால இடைநிலைகள். த், ட், ற், இன் - இறந்த கால இடைநிலைகள்.

உண்கிறான் - உண் + கிறு + ஆன்
உண்கின்றான் - உண் + கின்று + ஆன்
உண்ணாநின்றான் - உண் + ஆநின்று + ஆன்
இவை மூன்றும் நிகழ்காலத்தைக் காட்டுகின்றன ஆயினும் இடைநிலைகள் வெவ்வேறாக
இருக்கின்றன. இவை நிகழ்கால இடைநிலைகள்.
கிறு, கின்று, ஆநின்று - நிகழ்கால இடைநிலைகள்.

உண்பான் + ப் + ஆன்
செய்வான் - செய் + வ் + ஆன்
இவையிரண்டும் எதிர்காலத்தை உணர்த்துகின்றன; ஆயினும் இடைநிலைகள் வெவ்வேறாக இருக்கின்றன இவை எதிர்கால இடைநிலைகள். ப், வ் - எதிர்கால இடைநிலைகள்.

வினைமுற்றுக்களின் இடைநிலைகள் இருந்து காலம் காட்டுவது போலவே வினையெச்சத்திலும் பெயரெச்சத்திலும் இவ்விடைநிலைகள் நின்று காலம் காட்டும்.
உண்டு (வந்தேன்) - உண் + ட் + உ.
செய்து - செய் + த் + உ.
கற்று - கல் + ற் + உ.
இவை இறந்தகால இடைநிலைகளைக் கொண்ட வினையெச்சங்கள்; ஆதலால் இவை இறந்தகால வினையெச்சங்கள் எனப்படும்.

படிக்கிற (பையன்) - படி + கிறு + அ
மேய்கின்ற (பசு) - மேய் + கின்று + அ.
இவை நிகழ்கால இடைநிலைகளைக் கொண்ட பெயரெச்சங்கள்; ஆதலால் இவை நிகழ்காலப் பெயரெச்சங்கள் எனப்படும்.

நன்றி: ஜனார்த்தனன் கந்தையா
http://www.facebook.com/topic.php?uid=20995841343&topic=10951

Monday 11 May 2009

எளிமையாகத் தமிழ் இலக்கணம் -06

சொல் இலக்கணம்

ஆ (பசு), வீடு, வண்டு - இங்ஙனம் ஓர் எழுத்துத் தனித்தோ, இரண்டு முதலிய எழுத்துக்கள் தொடர்ந்தோ ஒரு பொருளைத் தெரிவிப்பது சொல் எனப்படும்.

(1) ஆ, வீடு, வண்டு - இவற்றுள் ஒவ்வொன்றும் ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல்லாதலால் பெயர்ச் சொல் எனப்படும்.

(2) கண்டான், கண்டு, கண்ட - இவ்வாறு ஒன்றன் வினையைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.

1. திணை

உலகத்து உயிர்களுள் விலங்கு, பறவை, நீர்வாழ்வன, ஊர்வன என்றும் உயிர்களைவிட மனிதன் பேராற்றல் படைத்தவனாக இருக்கின்றான்.

எனவே, மனிதன் மற்ற உயிர்களைவிட மேலானவனாகின்றான். இவ்வாறே நம் கண்ணுக்குத் தெரியாத தேவரும் நரகரும் உயர்ந்தவர் என்று நூல்கள் கூறுகின்றன. ஆகவே மக்கள், தேவர், நரகர் என்னும் முத்திறத்தாரும் ஏனைய உயிர்களை நோக்க உயர் ஒழுக்கம் (உயர்திணை) உடையவர் என்றும் மற்ற உயிர்கள் உயர்வு அல்லாத ஒழுக்கம் (அல் + திணை) உடையன என்றும் நம் முன்னோர் பிரித்துக் கூறினர். இப்பிரிப்பு இன்றளவும் இலக்கணத்தில் கூறப்படுகிறது.

மக்கள், தேவர், நரகர் - உயர்திணை.
பிற உயிர் உள்ளனவும் இல்லனவும் - அஃறிணை.

2. பால்
பால் - பிரிவு:

கண்ணன், பாண்டியன், பையன் - ஆண்பால்.
கண்ணகி, அரசி, பெண் - பெண்பால்.
அரசர்கள், மக்கள், பெண்கள் - பலர்பால்.
இம்மூன்று பால்களும் உயர்திணையைச் சேர்ந்தவை.

பசு, கிளி, பாம்பு, தவளை, மலை, மரம் - ஒன்றன் பால்.
பசுக்கள், கிளிகள், பாம்புகள், தவளைகள், மலைகள், மரங்கள் - பலவின்பால்.
இவை இரண்டும் அஃறிணைக்கு உரிவை.

3. எண்

எண் - பொருள்களின் எண்ணிக்கை.
ஒன்றைக் குறிப்பது ஒருமை: ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பன்மை.

கந்தன், கற்பகம், மாடு - ஒருமை எண்.
பெண்கள், பிள்ளைகள், மாடுகள் - பன்மை எண்.
நான், நீ, அவன், அவள், அது - ஒருமை எண்.
நாம், நீர், அவர்கள், அவை - பன்மை எண்.

4. இடம்

நான் நேற்று ஆசிரியரைப் பற்றிச் சொன்னபோது நீ மகிழ்ச்சி அடைந்தாய் - இந்த வாக்கியத்தில்,

நான் என்பது பேசுவோனைக் குறிக்கின்றது.
நீ என்பது முன்னின்று கேட்பவனைக் குறிக்கின்றது.
ஆசிரியரை என்பது பேசப்படுபவரைக் குறிக்கின்றது.
இம்மூவர் இடங்களும் முறையே (1) தன்மை இடம் (2) முன்னிலை இடம் (3)
படர்க்கை இடம் என்று பெயர் பெறும்.
(1) நான் - தன்மையிடம்.
(2) நீ - முன்னிலையிடம்.
(3) ஆசிரியர் - படர்க்கையிடம்.

நான் - தன்மை ஒருமை.
நாம், நாங்கள் - தன்மைப் பன்மை.
நீ - முன்னிலை ஒருமை.
நீர், நீவிர், நீங்கள் - முன்னிலைப் பன்மை.
அவன், அவள், அது - படர்க்கை ஒருமை.
அவர்கள், அவை - படர்க்கைப் பன்மை.
நான், யான் - தன்மை ஒருமை.
நாம், யாம், நாங்கள் - தன்மை பன்மை.
நீ - முன்னிலை ஒருமை.
நீர், நீவிர், நீங்கள் - முன்னிலை பன்மை.
தான் - படர்க்கை ஒருமை.
தாம் - படர்க்கை பன்மை.

நான் சொல்லுவது தனக்குத் தெரியும்.
தான் சொன்னதைக் கேட்டீர்களா?
தான், தாம் என்னும் படர்க்கைப் பெயர்களுக்குப் பதிலாக அவன், அவள், அவர்
என வழங்குதலே இன்றுள்ள பெரு வழக்காகும்.

5. வேற்றுமை

கண்ணன் - இஃது ஒரு பெயர்ச்சொல். இச்சொல் கண்ணனை (ஐ), கண்ணனால் (ஆல்), கண்ணனுக்கு (கு), கண்ணனில் (இல்), கண்ணனது (அது), கண்ணனிடம் (இடம்), கண்ணா! வருக - எனப் பலவாறு பொருளில் வேறுபட்டு வருதலைக் காணலாம். இவ்வேறுபாடு வேற்றுமை எனப்படும். இவ்வேற்றுமைகளை உண்டாக்கும் ஐ முதலிய உருபுகள் வேற்றுமை உருபுகள் எனப்படும்.

வேற்றுமை எட்டு வகைப்படும்.

முதல் வேற்றுமை.
கண்ணன் வந்தான் - இயல்பான பெயர்; முதல் வேற்றுமை.

இரண்டாம் வேற்றுமை
கண்ணனைக் கண்டேன் - இரண்டாம் வேற்றுமை (ஐ - இரண்டாம் வேற்றுமை உருபு.

மூன்றாம் வேற்றுமை
கண்ணனால் அழைக்கப்பட்டேன் - ஆல்
கண்ணனோடு சென்றேன் - ஓடு
கண்ணனுடன் வந்தேன் - உடன்
மூன்றாம் வேற்றுமை.
ஆல், ஓடு, உடன் - மூன்றாம் வேற்றுமை உருபுகள்.

நான்காம் வேற்றுமை
கண்ணனுக்குத் திருமணம் - நான்காம் வேற்றுமை.
கு - நான்காம் வேற்றுமை உருபு.

ஐந்தாம் வேற்றுமை
கண்ணனில் கந்தன் பெரியவன் - இல்
கண்ணன் வீட்டினின்று சென்றான் - நின்று
கண்ணன் மரத்திலிருந்து இறங்கினான் - இருந்து
ஐந்தாம் வேற்றுமை உருபு.
இல், நின்று, இருந்து - ஐந்தாம் வேற்றுமை உருபுகள்.

ஆறாம் வேற்றுமை
இது கண்ணனது பை - அது
இவை கண்ணனுடைய பைகள் - உடைய - ஆறாம் வேற்றுமை.
அது, உடைய - ஆறாம் வேற்றுமை உருபுகள்.

ஏழாம் வேற்றுமை
பையில் பணம் இருக்கிறது - இல்
கண்ணனிடம் கத்தி இருக்கிறது - இடம்
வீட்டின் கண் விருந்தினர் இருக்கின்றனர் - கண்
இல், இடம், கண் - ஏழாம் வேற்றுமை உருபுகள்.

எட்டாம் வேற்றுமை
பெயர் கூறி ஒருவனை அழைத்தலே எட்டாம் வேற்றுமை எனப்படும். அழைத்தல் - விளித்தல். இது விளி வேற்றுமை என்றும் சொல்லப்படும். முதல் வேற்றுமை விளி வேற்றுமை கண்ணன் கண்ணா! - மகன் மகனே! - ஈற்றில் ஏகாரம் மிக்கது. மக்கள் மக்காள் - ஈற்றயல் நீண்டது. முருகன் முருக! - பிள்ளை பிள்ளாய் ! - ஈற்று `ஐ' - `ஆய்' எனத் திரிந்தது.

6. ஆகு பெயர்

மயில் - ஒரு பறவையின் பெயர்.
மயில் வந்தாள் - மயில் போன்ற (சாயலையுடைய) பெண் வந்தாள். இவ்வாறு ஒன்றன் பெயர் அதனோடு தொட்புடைய வேறொரு பொருளுக்குத் தொன்று தொட்டு ஆகிவரின், அஃது ஆகுபெயர் எனப்படும்.

அவன் சிறப்பை மதுரை பாராட்டுகிறது. இங்கு `மதுரை' என்னும் இடத்தின் பெயர் அவ்விடத்திலுள்ள மக்களுக்கு ஆகி வந்தது. எனவே, `மதுரை', என்பது ஆகு பெயர். சித்திரை வந்தான் - `சித்திரை' என்னும் மாதத்தின் பெயர் அம்மாதத்தில் பிறந்த ஒருவனுக்குப் பெயராக வந்துள்ளது. எனவே, `சித்திரை' என்பதும் ஆகுபெயர். வீட்டிற்கு வெள்ளையடித்தான் - `வெள்ளை' என்னும் நிறத்தின் பெயர் அந்நிறத்தையுடைய சுண்ணாம்புக்கு ஆகி வந்தது. எனவே, `வெள்ளை' என்பதும் ஆகுபெயர்.

ஒரு `படி' வாங்கினேன் - `படி' என்னும் முகத்தலளவைப் பெயர், அந்த அளவுடைய ஒரு பொருளுக்கு ஆகி வந்தது. எனவே, `படி' என்பதும் ஆகுபெயர்.

7.தொழிற் பெயர்

வா, போ, நில், செய் - என்றாற் போல வருபவை வினை செய்ய ஏவப் பயன்படும்
சொற்களாகும். இவை வினைச் சொற்கள் எனப்படும். இவை ஏவல் வினைமுற்றுக்கள்
என்றும் சொல்லப்படும், இவற்றிலிருந்து,
வந்தான், வருகிறான், வருகிறாள், வருவார் எனவும்,
வந்து, போய், நின்று, செய்து எனவும்,
வந்த, போன, நின்ற, செய்த எனவும்,
வருதல், போதல், நிற்றல், செய்தல் எனவும் சொற்கள் பலவாறு வளர்ச்சியடையும்

இவற்றுள் முதல் மூன்று வகைப்பட்டவையும் வினைச்சொற்களாகும். வருதல், போதல், நிற்றல், செய்தல் என்பன வருதலாகிய தொழில், போதலாகிய தொழில், நிற்றலாகிய தொழில், செய்தலாகிய தொழில் எனத் தொழிலுக்குப் பெயராகி வருதலின் தொழிற் பெயர்கள் எனப்படும்.

தொழிற் பெயர் விகுதிகள்:
தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, தி, சி, காடு, பாடு, மதி, து, உ, மை
முதலியன.

செய் + தல் - செய்தல். இவற்றுள் `செய்' என்பது இச்சொல் வளர்ச்சிக்கு உயிர் நாடியாய் முன் நிற்பதால் பகுதி எனப்படும்.
`தல்' என்பது சொல்லின் கடைசியில் நிற்பதால் விகுதி, எனப்படும். செய்- பகுதி; தல் தொழிற் பெயர் விகுதி, ஓடுதல், அடல், ஓட்டம், நடத்தை, வருகை, தீர்வை, போக்கு, வாய்ப்பு, மறதி, முயற்சி, சாக்காடு, மெய்ப்பாடு, ஏற்றுமதி, நடந்தது, வரவு, நடந்தமை - இவை தொழிற் பெயர்கள்.

நன்றி: ஜனார்த்தனன் கந்தையா
http://www.facebook.com/topic.php?topic=10757&uid=20995841343

Saturday 9 May 2009

கடவுளும் தத்துவவாதியும்


29/04/2009 ஆனந்த விகடன் இதழில் மதன் பதில்கள் பகுதியில் வெளியான ஒரு கேள்வியும் பதிலும் எனக்கு பிடித்திருந்தது.அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்:

கேள்வி: ஏன் தத்துவவாதிகள் கடவுளை நம்புவதில்லை?

பதில்: தத்துவத்துக்கு கடவுள் தேவையில்லை. விஞ்ஞானம் முடியும் புள்ளியில் தத்துவம் தொடங்குகிறது. கடவுளை நம்புவது என்பது பகுத்தறிவான, "லாஜிக்"கான ஆதாரம் இல்லாத (மூட) நம்பிக்கை என்பது தத்துவவாதிகளின் பரவலான கருத்து.

ஒருமுறை கடவுள் ஒரு தத்துவ அறிஞரின் எதிரே வந்து நின்றார். "நான் தான் கடவுள். நல்லது, கெட்டது எல்லாவற்றுக்கும் அடிப்படையானவன்" என்றார். தத்துவவாதி, "ஓ.கே. எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் சொல்வதால் ஒரு விஷயம் நல்லது ஆகின்றதா? அல்லது, அது நல்லது என்பதால் நீங்கள் அப்படிச் சொல்கிறீர்களா?" என்று கேட்டார். கடவுள் "நான் தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை என்றேனே! நான் சொல்வதால்தான் ஒன்று நல்லதாகிறது!" என்று பதில் சொல்ல, "அப்படியென்றால் ஒரு குழந்தையை சித்திரவதை செய்து கொல்வது என்பது 'நல்லது தான்' என்று நீங்கள் சொல்வதால் நல்லதாகிவிடமுடியுமா?" என்றார் தத்துவவாதி. கடவுளுக்கு கோபம் வருகிறது. தத்துவவாதி தொடர்ந்து "அது நல்லது இல்லை. ஆகவே தான் நீங்களும் நல்லது இல்லை என்கிறீர்கள்! இது எனக்கே தெரியுமே. நீங்கள் எதற்கு?" என்கிறார். "நீ திருந்தமாட்டாய்!" என்று எரிச்சலோடு மறைந்துவிடுகிறார் கடவுள். (தத்துவமேதை பிளேட்டோ சொன்ன கதை)

நல்லது கெட்டது எது என்று பகுத்தறியத்தான் எமக்கு பகுத்தறிவு இருக்கிறது. பகுத்தறிவை சரியாகப் பயன்படுத்தாதவர்கள், பயன்படுத்த மறுப்பவர்கள் போன்றோரை நெறிப்படுத்த மனிதர்கள் உருவாக்கிய கருவிகளே மதங்களும் கடவுள் நம்பிக்கையும். இந்த நம்பிக்கையே பகுத்தறிவை மறைக்கும் கருவியாயும், சிந்திக்கும் திறணையே மழுங்கடிக்கும் விஷமருந்தாயும் மாறியத்துதான் இன்றைக்கு கடவுளின் பெயரால் நடக்கும் கொடுமைகளுக்கும், மோசடிகளுக்கும் காரணம். மதன் சொன்ன பதில் என்னை சிந்திக்க தூண்டியது. புதிதாக எனக்குள் முளைத்த கடவுள் மறுப்புக் கொள்கை சரியே என இன்னும் திடமாக நம்புகிறேன்.

Friday 8 May 2009

எளிமையாகத் தமிழ் இலக்கணம் -05

ஒலி வேறுபாடும் பொருள் வேறுபாடும்

(1) ர, ற


அரம், மரம் - இவற்றிலுள்ள ரகரத்தை உச்சரியுங்கள். நாவின் நுனி மேல்வாயைத் தடவுதலால் இவ்வெழுத்துப் பிறக்கின்றது என அறியலாம்.

வரம், கரி, கரை, குரவர் - இவற்றை உச்சரித்துப் பாருங்கள். அறம், மறம் - இவற்றில் வந்துள்ள றகரத்தை உச்சரியுங்கள். நாவின் நுனி மேல்வாயை மிகப் பொருந்துதலால் ற பிறக்கின்றமையை அறியலாம். இவ்வாறு இவை (ர- ற) பிறக்கும் முயற்சியில் வேறுபடுதலால்தான் உச்சரிப்பிலும் இவை வேறுபடுகின்றன. இவை உச்சரிப்பில் வேறுபடுதல் போலவே பொருளிலும் வேறுபடும்.

ர ற
அரம் - ஒரு கருவி அறம் - தருமம்
மரம் மறம் - வீரம்
இரை - உணவு இறை - தலைமை, வரி
கரி - யானை கறி - பதார்த்தம்
கரை - அணை கறை - அழுக்கு
திரை - அலை திறை - கப்பம்
பரவை - கடல் பறவை - பட்சி
மாரி - மழை மாறி - வேறுபட்டு
விரல் - ஓர் உறுப்பு விறல் - வலிமை, திறமை


இவ்வாறு இவை உச்சரிப்பிலும் பொருளிலும் வேறுபடுதலை அறியாமல் பலர் இரண்டையும் ஒன்று போலவே பிழைபட உச்சரிக்கின்றனர். இப்பிழையை நீங்கள் செய்யலாகாது. (2) ந,ன, ண நகம், நண்டு - இவற்றில் வந்துள்ள நகரத்தை உச்சரித்துப் பாருங்கள். நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடியைப் பொருந்துதலால் இவ்வெழுத்துப் பிறக்கின்றது. கந்தன், பந்தம் என்று இதனையடுத்துப் பெரும்பாலும் `த' வருதலாலும், மெய்யெழுத்துக்களின் வரிசையில் இந்நகரம் தகரத்தை அடுத்திருத்தலாலும் இது தந்நகரம் எனப்படும்.

கன்று, நன்று - இவற்றில் வந்துள்ள னகரத்தை உச்சரித்துப் பாருங்கள். நாவின் நுனி மேல்வாயை மிகப் பொருந்துதலால் இவ்வெழுத்துப் பிறக்கின்றது. மன்று, சென்று என இதனையடுத்துப் பெரும்பாலும் `ற' வருதலாலும், மெய்யெழுத்துக்களின் இறுதியில் றகரத்தை அடுத்து இந்த னகரம் இருத்தலாலும் இது றன்னகரம் எனப்படும். பணம், மணல் - இவற்றில் வந்துள்ள ணகரத்தை உச்சரியுங்கள். நாவின் நுனி மேல்வாய் நுனியைச் சேர்தலால் இந்த ண பிறக்கின்றது. நண்டு, வண்டு, கண்டம் எனப் பெரும்பாலும் இதனையடுத்து டகரம் வருதலாலும், மெய்யெழுத்துக்களின் வரிசையில் டகரத்தை அடுத்து இந்த ணகரம் அமைந்திருத்தலாலும் இது டண்ணகரம் எனப்படும். இவை மூன்றும் இங்ஙனம் பிறக்கும் முயற்சியில் வேறுபடுவதால், உச்சரிப்பிலும் பொருளிலும் வேறுபடும்.

(2) ந ன ண
நான் - பேசுவேன் நாண் - கயிறு
ஆன் - பசு ஆண் - ஆடவன்
ஆனை - யானை ஆணை - கட்டளை
கனி - பழம் கணி - சோதிடம்
பனி - குளிர்ச்சி பணி - வணங்கு

இவை இவ்வாறு உச்சரிப்பிலும் பொருளிலும் வேறுபடுதலை அறியாமல் பலர் இம்மூன்றையும் ஒன்று போலவே பிழைபட உச்சரிக்கின்றனர். இப்பிழையை நீங்கள் செய்யலாகாது.

(3) ல, ள, ழ

கலம், பலம் - இவற்றில் உள்ள லகரத்தை உச்சரித்துப் பாருங்கள். நாவின் ஓரம் மேல்வாய்ப் பல்லின் அடியைப் பொருந்துதலால் ல பிறக்கின்றது. குளம், குள்ளன் - இவற்றில் உள்ள ளகரத்தை உச்சரித்துப் பாருங்கள். நாவின் ஓரம் மேல்வாயைத் தடித்துத் தடவுதலால் ள பிறக்கின்றது. பழம், மழை - இவற்றில் உள்ள ழகரத்தை உச்சரித்துப் பாருங்கள். நாவின் நுனி மேல்வாயைச் சிறிது அழுத்தமாகத் தடவுதலால் ழ பிறக்கின்றது. இவை மூன்றும் உச்சரிப்பில் வேறுபடுகின்றன அல்லவா? அவ்வாறே அவை பொருளிலும் வேறுபடுதலைக் காண்க:

ல ள ழ

அலை - அலைதல் அளை - வளை அழை - கூப்பிடு
கலை - ஆடை களை - நீக்கு, களைப்பு கழை - கரும்பு, மூங்கில்
காலி - ஒன்றும் இல்லாதது காளி - ஒரு பெண் தெய்வம் காழி - ஓர் ஊர்
(சீர்காழி)
தலை - உறுப்பு தளை - கட்டு தழை - செழி
வலி - வலிமை, நோதல் வளி - காற்றுழூ வழி - பாதை
விலை - விற்பனை விளை - பயிராக்கு விழை - விரும்பு

(4) க்ஷ, ட்ச

பக்ஷம், மீனாக்ஷி, அக்ஷய பாத்திரம் - இவற்றில் வந்துள்ள க்ஷ என்னும் எழுத்து வடமொழி எழுத்து. இதற்குப் பதிலாக ஏறத்தாழ இதே உச்சரிப்பையுடைய ட்ச என்னும் இரண்டு எழுத்துக்களைப் பயன்படுத்தி பட்சம், மீனாட்சி, அட்சய பாத்திரம் என்பனபோல் எழுதுதல் தமிழர் வழக்கம். இவற்றுள் பட்சம், அட்சய பாத்திரம் என்பனவற்றைத் தமிழ் எழுத்துக்களில் எழுதுவதில் தவறில்லை. ஏனெனில் இவற்றின் பொருள் வேறுபடவில்லை. மீனாக்ஷி என்பதற்கு மீன்போன்ற கண்ணையுடையவள் என்பது பொருள்: இதைத் தமிழில் மீனாட்சி என எழுதினால் மீன் + ஆட்சி எனப் பிரியும். அக்ஷி என்னும் வட சொல்லுக்குக் `கண்ணையுடையவள்' என்பது பொருள்; ஆட்சி என்னும் சொல் ஊராட்சி, நகராட்சி என்பது போலக் காணப்படுகிறது. மீனாக்ஷி என்னும் வட சொல் தொடருக்குரிய பொருள், மீனாட்சி என்னும் தமிழ்த் தொடரில் பெறப்படவில்லை என்பது அறியற்பாலது. ஆதலால் பொருள் கெடாத வகையில் வட எழுத்துக்குச் சமமான தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்துதல் பொருத்தமாகும். பொருள் கெடவருமாயின், அங்கு வட எழுத்துக்களைப் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது. காட்சி - இது காண் + சி என்ற பிரிக்கப்படும். இது தமிழ்ச்சொல். இதனைப் பலர் காக்ஷி எனத் தவறாக எழுதுகின்றனர். திரைப்பட விளம்பரங்களில் இத்தவற்றைப் பெரும்பாலும் காணலாம். இத்தகைய தவறுகள் வராமல் பார்த்துக் கொள்வதும் உங்கள் கடமையாகும்.

நன்றி: ஜனார்த்தனன் கந்தையா
http://www.facebook.com/topic.php?topic=10718&uid=20995841343

Thursday 7 May 2009

எளிமையாகத் தமிழ் இலக்கணம் -04

யாப்பு இலக்கணம்
யாப்பு என்பதற்குப் புலவர்களால் செய்யப்பெறும் செய்யுள் என்பது பொருள். செய்யுள் இயற்றுதற்குரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும்.

யாப்பின் உறுப்புகள்

எழுத்து
அசை
சீர்
தளை
அடி
தொடை

உயிர் எழுத்துக்களும், உயிர்மெய்யெழுத்துக்களும் த்தம் ஒலி அளவுகளைப் பொருத்து குறில் அல்லது
நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து மற்றும் நெட்டெழுத்துக்களின் அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர். நேரசை மற்றும் நிரையசை ஈரசைகளாவன. குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ வருதல் நேரசையாகும். இருகுறிலிணைந்து வருதலும், குறில் நெடிலிணைந்து வருதலும், இவை இரண்டும் ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும். ஒலிப்பியல் அடிப்படையில் அசைகளே கவிதைகளின் அடிப்படைக் கூறுகளாவன. அசைகளின் கூட்டு சீர் எனப்படும். சீர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருதலால் தளைகள் உண்டாகும்.

யாப்பின் அடிப்படையில் பா வகைகள்
வெண்பா
ஆசிரியப்பா
கலிப்பா
வஞ்சிப்பா


அணி

அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணமாகும்.
அணி பலவகைப்படும். அவற்றுள் சில,

*தண்மை அணி
*உவமையணி
*உருவக அணி
*பின்வருநிலையணி
*தற்குறிப்பேற்ற அணி
*வஞ்சப் புகழ்ச்சியணி
*வேற்றுமை அணி
*இல்பொருள் உவமையணி
*எடுத்துக்காட்டு உவமையணி

கிரந்த எழுத்துக்கள்

கிரந்த எழுத்துக்கள் தென்னிந்தியாவில், விசேடமாகத் தமிழ் நாட்டில் சமஸ்கிருத மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். தற்காலத்தில் தேவநாகரி எழுத்துக்கள் பிரபலமடைந்ததால் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. தமிழில் மணப்பிரவாள எழுத்து நடை செல்வாக்கு செலுத்திய பொழுது கிரந்த எழுத்துக்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டது. இன்று, மணிப்பிரவாள எழுத்து நடை மறைந்தாலும், 'ஜ', 'ஷ', 'ஸ', 'ஹ' ,'க்ஷ' போன்ற கிரந்த எழுத்துக்கள் வடமொழிச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.

ஜ ja, ஜா jaa, ஜி ji, ஜீ jii, ஜு ju, ஜூ juu, ஜெ je, ஜே jae, ஜை jai, ஜொ jo, ஜோ joa, ஜௌ jow, ஜ் j

ஷ sha, ஷா shaa, ஷி shi, ஷீ shii, ஷு shu, ஷூ shuu, ஷெ she, ஷே shae, ஷை shai, ஷொ sho, ஷோ shoa, ஷௌ show/shou, ஷ் sh

ஸ Sa, ஸா Saa, ஸி Si, ஸீ Sii, ஸு Su, ஸூ Suu, ஸெ Se, ஸே Sae, ஸை Sai, ஸொ So, ஸோ Soa, ஸௌ Sow, ஸ் S

ஹ ha, ஹா haa, ஹி hi, ஹீ hii, ஹு hu, ஹூ huu, ஹெ he, ஹே hae, ஹை hai, ஹொ ho, ஹோ hoa, ஹௌ how, ஹ் h

க்ஷ ksha, க்ஷா kshaa, க்ஷி kshi, க்ஷீ kshii, க்ஷு kshu, க்ஷூ kshuu, க்ஷெ kshe, க்ஷே kshae, க்ஷை kshai, க்ஷொ ksho, க்ஷோ kshoa, க்ஷௌ kshow, க்ஷ் ksh

தமிழ் எழுத்துக்கள்

உயிரெழுத்து: அ, ஆ - இவை வேறோர் எழுத்தின் உதவியில்லாமல் தாமே இயங்குகின்றன. நமது உயிர், மெய்யின் (உடம்பின்) உதவியில்லாமல் தானே இயங்குகின்றது. அதுபோலவே இயங்கும் அ, ஆ, முதலிய பன்னிரண்டு எழுத்துக்களும் உயிரெழுத்துக்கள் எனப்படும். ( அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள - உயிர் எழுத்துக்கள் 12. )

மெய்யெழுத்து: க், ங் - `இக்', `இங்' என உச்சரிக்கப்படும்: `க்' என்னும் எழுத்தை உச்சரிக்க உயிரெழுத்தின் உதவி தேவைப்படுகிறது. நமது மெய் (உடம்பு) இயங்குவதற்கு உயிர் தேவைப்படுவது போல `க்' முதலிய எழுத்துக்களை உச்சரிக்க உயிர் எழுத்துக்கள் தேவைப்படுகின்றன. ஆதலால் `க்' முதலிய பதினெட்டு எழுத்துக்களும் மெய்யெழுத்துக்கள் என்று சொல்லப்படும். ( க், ங், ச், ஞ் ட், ண், த் ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் - மெய்யெழுத்துக்கள் 18. ) உயிர்மெய் எழுத்து: க என்னும் எழுத்தில் `க்' என்னும் ஒலியும், `அ' என்னும் ஒலியும் சேர்ந்திருக்கின்றன. அதாவது க(க்+ அ) - `க்' என்னும் மெய்யும் `அ' என்னும் உயிரும்

கூடிப் பிறந்த எழுத்தாகிறது. இவ்வாறு பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் பதினெட்டு மெய் எழுத்துக்களுடன் சேர்வதால் (18*12) 216 உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன. ( க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ - 12; இவ்வாறு உண்டாகும் உயிர் எழுத்துக்கள் 216. )

ஆய்த எழுத்து: ("ஃ" இங்ஙனம் மூன்று புள்ளி வடிவமாக இருப்பது ஆய்த
எழுத்து. இது அஃது இஃது எஃது என்றாற் போலச் சொல்லின் இடையில் வரும்.

உயிர் எழுத்துக்கள்: 12
மெய் எழுத்துக்கள்: 18
உயிர்மெய் எழுத்துக்கள்: 216
ஆய்த எழுத்து: 1
தமிழ் எழுத்துக்கள் மொத்தம்: 247

உயிரெழுத்துக்கள் பன்னிரண்டில்அ, இ, உ, எ, ஒ, என்னும் ஐந்தும் குறுகிய ஓசையுடையவை. ஆதலால் இவை குறில் எனப்படும்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் எழுத்துக்களும் நீண்ட ஓசையுடையவை. ஆதலால் இவை நெடில் எனப்படும். பதினெட்டு மெய்யெழுத்துக்களுள், க், ச், ட், த், ப், ற், என்னும் ஆறும் வலிய ஓசையுடையவை: ஆதலால் இவை வல்லினம் எனப்படும்.

ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறு எழுத்துக்களும் மெலிந்த ஓசையுடையவை; அதனால் இவை மெல்லினம் எனப்படும்.

ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறும் இடைத்தர ஓசையுடையவை; ஆதலால் இவை
இடையினம் எனப்படும்.

நன்றி: ஜனார்த்தனன் கந்தையா
http://www.facebook.com/topic.php?uid=20995841343&topic=10698

Tuesday 5 May 2009

எளிமையாகத் தமிழ் இலக்கணம் -03

சொல்லிலக்கணம்

ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.
எ.கா: வீடு, கண், போ

சொல்லின் வகைகள்

பெயர்ச்சொல்
வினைச்சொல்
இடைச்சொல்
உரிச்சொல்


பெயர்ச்சொல்

பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும். ஆதலால் பெயர்ச்சொல்


பொருட் பெயர்
இடப் பெயர்
காலப் பெயர்
சினைப் பெயர்
பண்புப் பெயர்
தொழிற் பெயர்
என்று ஆறு வகைப்படும்.

பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பவற்றைப் பொருளாதி ஆறு அன்றும், பொருள் முதலாறு என்றும் கூறுவர்.

பொருட்பெயர் : மனிதன், பசு, புத்தகம்
இடப்பெயர் : சென்னை, தமிழகம்
காலப்பெயர் : மணி, நாள், மாதம், ஆண்டு
சினைப்பெயர் : கண், கை, தலை
பண்புப்பெயர் : இனிமை, நீலம், நீளம், சதுரம்
தொழிற்பெயர் : படித்தல், உண்ணல், உறங்குதல்

இது தவிர வேறு பல விதமாகவும் வகைப்படுத்துவது உண்டு. இவற்றில் சிலவற்றைக் கீழே காணலாம்.

1. இயற்கைப் பெயர்கள் 2. ஆக்கப் பெயர்கள்
1. இடுகுறிப் பெயர்கள் 2. காரணப் பெயர்கள்
1. சாதாரண பெயர்கள் 2. பதிலிடு பெயர்கள்
1. நுண்பொருட் பெயர்கள் 2. பருப்பொருட் பெயர்கள்
1. உயிர்ப் பெயர்கள் 2. உயிரில் பெயர்கள்
1. உயர்திணைப் பெயர்கள் 2. அஃறிணைப் பெயர்கள்
1. தனிப் பெயர்கள் 2. கூட்டுப் பெயர்கள்

வினைச்சொல்

வினைச்சொல் என்பது ஒரு பொருளின் வினையை உணர்த்துவதாகும். முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனப்படும். முடிவு பெறாத வினைசொல் எச்சம் எனப்படும்.

முற்று இருவகைப்படும். அவை

1.தெரிநிலை வினைமுற்று
2.குறிப்பு வினைமுற்று

எச்சம் இரண்டு வகைப்படும். அவை

1.பெயரெச்சம்
2.வினையெச்சம்

தெரிநிலை வினைமுற்று

செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று ஆகும்

கயல்விழி மாலை தொடுத்தாள்


குறிப்பு வினைமுற்று

பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று
ஆகும்.

அவன் பொன்னன்.


பெயரெச்சம்

பெயரெச்சம் என்பது, பெயரைக் கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும். பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என் இருவகைப்படும்.

படித்த மாணவன்


வினையெச்சம்

வினையெச்சம் என்பது வினை முற்றினை கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும. வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம், குறிப்புப் வினையெச்சம் என் இருவகைப்படும்.

படித்துத் தேறினான்


இடைச்சொல்

இடைச்சொல் என்பது தனித்து நில்லாமல் பெயரையாவது வினையையாவது சார்ந்து வருவது.

ஐ முதலிய வேற்றுமை உருபுகளும்; போல, ஒப்ப முதலிய உவம உருபுகளும்; அ, இ, உ
என்னும் சுட்டுக்களும்; யா முதலிய

வினாவெழுத்துக்களும்; `உம்' முதலிய பிறவும் இடைச்சொற்கள் என்று
கூறப்படும்.

மேற்சொன்ன வேற்றுமையுருபுகள் முதலியனவும், இடை நிலைகள், சாரியைகள், விகுதிகள், தமக்கெனப் பொருளையுடைய ஏ, ஓ, மற்று, தான் முதலியனவும்
இடைச்சொற்களாகும்.

அவன்தான் வந்தான்
சேரனும் சோழனும் பாண்டியனும் வந்தனர்.

உரிச்சொல் என்பது பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும் உணர்த்தும் சொல்லாகும். பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் விட்டு நீங்காதனவாய் வரும்.
உரிச்சொல் இருவகைப்படும்

1.ஒரு பொருள் குறித்த பல சொல்
2.பல பொருள் குறித்த ஒரு சொல்


ஒரு பொருள் குறித்த பல சொல்

சாலப் பேசினான்.
உறு புகழ்.
தவ உயர்ந்தன.
நனி தின்றான்.
இந்நான்கிலும் வரும், சால, உறு, தவ, நனி என்னும் உரிச்சொற்கள் மிகுதி என்னும் ஒரு பொருளை உணர்த்துவன.

பல பொருள் குறித்த ஒரு சொல்

கடிமனை - காவல்
கடிவாள் - கூர்மை
கடி மிளகு - கரிப்பு
கடிமலர் - சிறப்பு
இந்நான்கிலும் வரும் கடி என்னும் உரிச்சொல் - காவல், கூர்மை, கரிப்பு, சிறப்பு முதலிய பல பொருள்களைக் உணர்த்தும்

பொருள் இலக்கணம்

பொருள் இரண்டு வகைப்படும். அவை,

அகப்பொருள்

புறப்பொருள்

நம் இலக்கியஙளுக்குப் பாடுபொருள்களாக அமைவன அகப்பொருள்களும் புறப்பொருள்களும்.ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் காதலித்து நடத்தும் வாழ்க்கை நிகழ்ச்சிகளை விளக்கிக் கூறுவது அகப்பொருள்.அறம், பொருள், வீடு ஆகிய (இன்பம் ஒழிந்த) மூன்று பேறுகளை பற்றியும் கூறுவது அகப்பொருள் எனவும், அறம், பொருள், வீடு ஆகிய (இன்பம் ஒழிந்த) மூன்று பேறுகளை தவிர்த்து கொடை, புகழ் முதலியன பற்றியும் கூறுவது புறப்பொருள்.


நன்றி: ஜனார்த்தனன் கந்தையா
http://www.facebook.com/topic.php?uid=20995841343&topic=10668

Monday 4 May 2009

எளிமையாகத் தமிழ் இலக்கணம் -02

குறில் எழுத்துக்கள்
உயிரெழுத்துக்களில் குறுகிய ஒலிப்புக் கால அளவு அதாவது ஒரு மாத்திரை அளவு மட்டுமே கொண்டிருக்கும் அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும் இவை முறையே 18 மெய்யெழுத்துக்களுடன் புணர்வதால் உருவாகும் உயிர்மெய்யெழுத்துக்களும் குறில் எழுத்துக்கள் அல்லது குற்றெழுத்துக்கள் என வழங்கப்படுகின்றன.

நெடில் எழுத்துக்கள்
உயிரெழுத்துக்களில் நெடிய ஒலிப்புக் கால அளவு அதாவது இரண்டு மாத்திரை அளவு மட்டுமே கொண்டிருக்கும் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழும் இவை முறையே 18 மெய்யெழுத்துக்களுடன் புணர்வதால் உருவாகும் உயிர்மெய்யெழுத்துக்களும் நெடில் எழுத்துக்கள் அல்லது நெட்டெழுத்துக்கள் என வழங்கப்படுகின்றன.

சார்பெழுத்துகள்

உயிர்மெய் எழுத்து
ஆய்த எழுத்து
உயிரளபெடை
ஒற்றளபெடை
குற்றியலுகரம்
குற்றியலிகரம்
ஐகாரக் குறுக்கம்
ஔகாரக் குறுக்கம்
மகரக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம்

எனச் சார்பெழுத்து பத்து வகைப்படும். முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதாலும், முதலெழுத்து திரிபு, விகாரத்தால் பிறந்ததாலும் இவை சார்பெழுத்துகள் என அழைக்கப்படுகின்ற்ன

உயிர்மெய் எழுத்து
ஒரு மெய் எழுத்துடன் ஓர் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகும்.

ஆய்த எழுத்து
'ஃ' இங்ஙனம் மூன்று புள்ளி வடிவமாக இருப்பது ஆய்த எழுத்து. இதற்கு அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.

உயிரளபெடை

உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பதற்கு உயிரளபெடை எனறு பெயர்.

உயிர் + அளபெடை = உயிரளபெடை

மொழி முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் உயிர்நெடில் அளபெடுக்கும்.

1 ஓஒதல் வேண்டும் முதல்
2 கெடுப்பதூஉம் கெட்டார்க்கு இடை
3 நல்ல படாஅ பறை கடை

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதை கானலாம.

ஓர் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அவ்வெழுத்திற்கு இனமான குறில் எழுத்து எழுதப்படும்.

ஒற்றளபெடை
ஒற்றளபெடை என்பது ஒற்றெழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து நீண்டொலிப்பதாகும்.
ஒற்று + அளபெடை = ஒற்றளபெடை

செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகளில் ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல் ,ள் என்பனவும் ஆய்தமும் மொழிக்கு இடை, கடை ஆகிய இடங்களில் குறிற்கீழும் குறிலிணையின் கீழும் அளபெடுக்கும்.
இதுவே ஒற்றளபெடை ஆகும்.

வெஃஃகு வார்க்கில்லை குறிற்கீழ் இடை
கண்ண் கருவிளை குறிற்கீழ் கடை
கலங்ங்கு நெஞ்ச்மிலை குறிலிணைகீழ் இடை
மடங்ங் கலந்த மன்னே குறிலிணைகீழ் கடை

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதை கானலாம்.

ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அதே எழுத்து எழுதப்படும்.

குற்றியலுகரம்

குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா கு, சு, டு, து) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துக்கள் (எ.கா: ற, கி, பெ, ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவேயாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது.

இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.

குற்றியலுகரம் = குறுமை + இயல் + உகரம்

(குறுகிய ஓசையுடைய உகரம்)

நாடு என்னும் தமிழ்ச் சொல்லில், கடைசியில் வரும் டு என்னும் எழுத்து (உகரம் ஏறிய ட் என்னும் வல்லின எழுத்து), தன் இயல்பான ஒரு மாத்திரை அளவு நீட்டிக்காமல், அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதில் தனி நெடிலுடன், வல்லின மெய்யோடு (ட்) சேர்ந்த உகரம் (டு)வந்துள்ளதைப் பார்க்கலாம். இவ்வுகரம் அரை மாத்திரையளவே ஒலிப்பதை காணலாம்.

பந்து என்னும் சொல்லில் கடிசியாக உள்ள து என்னும் எழுத்து அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதில் பல் எழுத்துகளைத் தொடர்ந்து இறுதியில் வல்லின மெய்யோடு (த்) சேர்ந்த உகரம் (து)வந்துள்ளது. இவ்வுகரம் அரை மாத்திரையளவே
ஒலிப்பதை காணலாம்.

இதே போல பருப்பு, சிறப்பு, நேற்று, வேடடு, பேசசு, கொடுக்கு, மத்து போன்றசொற்களில் கடைசியில் வரும் உகரம் ஏறிய வல்லின மெய்கள் குற்றியலுகரம் ஆகும்.

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், குறைந்து ஒலிக்கும் உகரமே குற்றியலுகரம்.

குற்றியலுகரத்தின் வகைகள்
குற்றியலுகரம் ஆறு வகைப்படும்.

நெடிற்றொடர்க் குற்றியலுகரம்
ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
வன்றொடர்க் குற்றியலுகரம்
மென்றொடர்க் குற்றியலுகரம்
இடைத்தொடர்க் குற்றியலுகரம்

குற்றியலிகரம்

நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதலெழுத்து யகரமாகவும் இருந்தால், அவையிரண்டும் புணரும்போது நிலைமொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம் இகரமாகத் திரியும். அவ்வாறு திரிந்த இகரம் அரை மாத்திரையளவே ஒலிக்கும். அவ்வாறு குறைந்தொலிக்கும் இகரம் குற்றியலிகரம் ஆகும்.

குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம்

(குறுகிய ஓசையுடைய இகரம்)

நாடு + யாது -> நாடியாது

கொக்கு + யாது -> கொக்கியாது

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரம். வருமொழியின் முதலெழுத்து யகரம். இவையிரண்டும் புணரும்போது குற்றியலுகரம் இகரமாகத் திரிந்து, அரை மாத்திரையளவாக ஒலிப்பதை காணலாம்

ஐகாரக்குறுக்கம்.

ஐகாரக் குறுக்கம் என்பது, ஐகாரம் தனக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரையாகவும் ஒரு மாத்திரையாகவும் ஒலிப்பது.

ஐகாரம் + குறுக்கம் = ஐகாரக்குறுக்கம்.

ஐகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்பொழுதே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதல், இடை, கடை ஆகிய இடங்களில் வரும்பொழுது, மொழிக்கு முதலில் ஒன்றரை மாத்திரையகவும், இடை மற்றும் கடையில் ஒரு மாத்திரையகவும் குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குரைந்தொலிப்பதே ஐகாரக் குறுக்கமாகும்

ஐந்து - ஐகாரம் மொழிக்கு முதலில் - 1 1/2 மாத்திரை
வலையல் - ஐகாரம் மொழிக்கு இடையில் - 1 மாத்திரை
மலை - ஐகாரம் மொழிக்கு கடையில் - 1 மாத்திரை

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் ஐகாரம் குறைந்து ஒலிப்பதை காண்க.

ஔகாரக் குறுக்கம்

ஔகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்போது மட்டுமே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதலில் வரும்போது ஒன்ற்ரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதுவே ஔகாரக் குறுக்கம் ஆகும்.

ஔவை

மேற்கண்ட எடுத்துக்காட்டில் மொழிக்கு முதலில் வந்த்துள்ள 'ஔ' தனக்குறிய இரெண்டு மாத்திரையிலிடுந்து ஒன்றரை மாத்திரையளவே ஒலிப்பதை காணலாம்.

குறிப்பு:

ஔகாரம் மொழிக்கு முதலில் மட்டுமே வரும். இடையிலும் கடையிலும் வராது.

மகரக்குறுக்கம்

"ம்" என்னும் எழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது மகரக் குறுக்கம் எனப்படும்.

மகரம் + குறுக்கம் = மகரக்குறுக்கம்

வரும் வண்டி
தரும் வளவன்

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் நிலைமொழியீற்றில் மகரமும் வருமொழி முதலில் வகரமும் உள்ளன. இது போல "நிலைமொழியீற்றில் மகரம் இருந்து வகர முதல் மொழியோடு புணரும் போது நிலைமொழியீற்றிலுள்ள மகரம் கால் மாத்திரையளவே ஒலிக்கும்". இவ்வாறு குறைந்தொலிக்கும் மகரம் மகரக்குறுக்கம் எனப்படும்.

ஆய்தக்குறுக்கம்

ஆய்தக்குறுக்கம் என்பது ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதாகும். ஆய்தம் + குறுக்கம் = ஆய்தக் குறுக்கம்.

எ.கா.: முள் + தீது = முஃடீது

மேற்கண்ட எடுத்துக்காட்டில், நிலைமொழியில் தனிக்குறிலின்கீழ் வரும் ளகரம் தகர முதன் மொழியோடு புணரும் பொழுது ஆய்தாமாக மாறியுள்ளது. அவ்வாறு மாறிய ஆய்தம் தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதை காணலாம். இதுவே ஆய்தக் குறுக்கமாகும்

மாத்திரை

தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது. நாம் இயல்பாகக் கண்ணிமைப்பதற்கு ஆகும் நேரம் சற்றேறக்குறைய கைநொடிப்பதற்கு ஆகும் நேரம் ஆகும். இதுவே ஒரு மாத்திரை ஆகும்.

குற்றெழுத்துக்களுக்கு (குறில் எழுத்துக்களுக்கு) மாத்திரை ஒன்று (எடுத்துக்காட்டாக: அ, இ, ப, கி, மு) நெட்டெழுத்துக்களுக்கு (நெடில் எழுத்துக்களுக்கு) மாத்திரை இரண்டு (எடுத்துக்காட்டாக: ஆ, ஈ, ஏ, கா, வா, போ)


இதுவரையில் நாம் பார்த்தவை அனைத்தும் எழுத்திலக்கணம் சார்ந்தவைகளாகும், இதனை முழுமையாக புரிந்துணர்ந்த பின்னர் நாம் சொல் இலக்கணம் பற்றிய புரிதலுக்கு செல்வோம்.

நன்றி: ஜனார்த்தனன் கந்தையா
http://www.facebook.com/topic.php?uid=20995841343&topic=10654

எளிமையாகத் தமிழ் இலக்கணம் -01

தமிழ் தமிழ் என்றும், தமிழே தலை சிறந்த மிகவும் மூத்த மொழி என்றும் நாம் அனைவரும் பல்வேறு நிலைகளில் சொல்லி வரும் போது, சில நேரங்களில் தமிழைப் பற்றிய அடிப்படை அறிவு பற்றிய கேள்விகளுக்கு நம்மால் விடை அளிக்க முடியாமல், திணறும் நிலை ஏற்படுகிறது, அந்நிலை மாற்றி, அடிப்படை தமிழ் இலக்கணம் நாம் அனைவரும் கற்றுணர்ந்த ஒரு ஆற்றலாக இருக்க வேண்டும். இந்த இழையில் தமிழை அடிப்படையில் இருந்து கற்போம், உங்கள் அய்யங்களை கேளுங்கள், நமக்குத் தெரிந்த அளவில் களைய முயல்வோம், இல்லையெனில் கற்க முயல்வோம்.

தமிழ் அரிச்சுவடி என்பது தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களின் வரிசை ஆகும். அரி என்னும் முன்னடை சிறு என்னும் பொருள் கொண்டது. இதனை தமிழ் அகரவரிசை, தமிழ் நெடுங்கணக்கு போன்ற சொற்களாலும் குறிப்பிடப்படுகிறது. தமிழில் 12 உயிரெழுத்துக்களும், 18 மெய்யெழுத்துக்களும், உயிர்மெய் எழுத்துக்களும், ஆய்த எழுத்தும் உள்ளன. தற்காலத்தில் வழங்கும் கிரந்த எழுத்துக்கள் சில தமிழ்நெடுங்கணக்கைச் சேர்ந்ததல்ல.

மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றுடனும் உயிரெழுத்து சேரும்போது உருவாகும் எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்கள் ஆகும். உயிர் மெய்யெழுத்துக்கள் மொத்தம் 12x18 = 216 ஆகும். இவற்ருடன் 12 உயிர் எழுத்துக்களும், 18 மெய் எழுத்துக்களும் ஓர் ஆய்த எழுத்தும் சேர்ந்து மொத்தம் 247 தமிழ் எழுத்துக்கள். தமிழ் நெடுங்கணக்கில் சேரா கிரந்த எழுத்துக்கள் (ஜ, ஷ, ஸ, ஹ வரிசைகள்) 52ம் க்ஷ, ஸ்ரீ முதலான எழுத்துக்களும் இன்று பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனைப் பலரும் எதிர்த்தும் வருகின்றனர்.


உயிரெழுத்துக்கள்
ஒரு மொழிக்கு உயிராக அமையும் எழுத்துக்கள் உயிரெழுத்துக்கள் எனப்படுகிறது, ஆங்கிலத்தில் இதனை (VOWELS) என்று அழைக்கிறோம். அவற்றின் வரிசை கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

அ-அகரம்
ஆ-ஆகாரம்
இ-இகரம்
ஈ-ஈகாரம்
உ-உகரம்
ஊ-ஊகாரம்
எ-எகரம்
ஏ-ஏகாரம்
ஐ-ஐகாரம்
ஒ-ஒகரம்
ஓ-ஓகாரம்
ஒள-ஓலைகரம்
ஃ-அஃகேனம்


மெய்யெழுத்துக்கள்

கீழ்க்கண்ட எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் ஆகும், உயிரும், உடலும் இணைந்து வாழ்வை உருவாக்குவது போல், எழுத்துக்களில் உயிரெழுத்தும், மெய்யெழுத்தும் இணைந்து உயிர்மெய் எழுத்தையும் உருவாக்குகின்றன.

க் ங் ச ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் -


உயிர் மெய்யெழுத்துக்கள்

முதலாவது வரிசையில் மெய்யெழுத்துக்கள் காட்டப்பட்டுள்ளன. முதல் நிரலில் உயிரெழுத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு மெய்யெழுத்துக்குரிய நிரலும், உயிரெழுத்துக்குரிய வரிசையும் சந்திக்குமிடத்தில் அவற்றின் புணர்ச்சியினால் உருவான உயிர்மெய்யெழுத்துக் காட்டப்பட்டுள்ளது.


உயிர்மெய்யெழுத்துக்கள் அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ


க் க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ


ங் ங ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ


ச் ச சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ


ஞ் ஞ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ


ட் ட டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ


ண் ண ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ


த் த தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ


ந் ந நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ


ப் ப பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ


ம் ம மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ


ய் ய யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ


ர் ர ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ

ல் ல லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ


வ் வ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ


ழ் ழ ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ


ள் ள ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ


ற் ற றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ


ன் ன னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ


உயிர் மெய்யெழுத்துக்களில் ஓசை வடிவங்கள்


உயிர் மெய்யெழுத்துக்களில் மூன்று வகையான ஓசை வடிவங்கள் கிடைக்கப் பெறும், அவை முறையே வல்லினம், இடையினம் மற்றும் மெல்லினம் ஆகும்.


அதாவது வன்மையாக ஒலிக்கவும், மேல் தாடையின் முற்பகுதியில் ஒட்டி உறவாடி பிறக்கும் ஓசையாம் க, ச, ட, த, ப, ற என்பவை வல்லினமாகவும்.


வன்மையும் அன்றி, மென்மையும் அன்றி ஒலிக்கவும், மேல் தாடையின் நடுப்பகுதியில் இருந்து உறவாடி பிறக்கும் ஓசையாம் ய, ர, ல, வ, ழ, ள
என்பவை இடையினமாகவும்.


மிகவும் மென்மையான ஓசையுடன், மேல் தாடையின் அடிப்பகுதியில் இருந்து உறவாடிப் பிறக்கும் ஓசையாம் ஞ, ங, ந, ண, ம, ன என்பவை மெல்லினமாகவும் அழைக்கப்படுகின்றன.

நன்றி: ஜனார்த்தனன் கந்தையா
http://www.facebook.com/topic.php?topic=10630&
uid=20995841343

சுஜாதா ((மே 3, 1935 - பெப்ரவரி 27, 2008)


எழுத்தாளர் சுஜாதா எனக்கு அறிமுகமானது எனது நண்பன் தயாநிதி மூலமாக. அறிமுகம் என்றதும் நானும் சுஜாதாவும் ஏதோ நேரடியாகச் சந்தித்து உரையாடினோம் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். அவரது எழுத்துக்கள் அறிமுகமானது நண்பன் தயாநிதி மூலம். அந்த நாவலின் பெயர்கூட மறந்து விட்டது. கொஞ்சம் செக்ஸ் தூக்கலான நாவல். (அப்போ எனக்கு பதினாலு வயது). அதுக்காகவே வாசித்தேனா, தலைப்பு மறந்து விட்டது. கதை நாயகியின் பெயர் கல்பனா. அவள் சம்பந்தமாக ஒரு கொலை. (கணவனை என்று நினைக்கிறேன், ஆண்மையற்ற கணவன்). ட்ரைவரோடு கள்ள உறவு. அப்படி இப்படி என்று போகும். அதற்குப்பிறகு செக்ஸ் தூக்கலாக இருக்கும் என்ற நப்பாசையில் என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ எல்லாம் படித்தேன். ஆனால் அதற்குப்பிறகு சுஜாதா என்னை வேறு விடயங்களுக்கு ஈர்க்க ஆரம்பித்தார்.

சுஜாதாவின் மேல் ஒரு மரியாதை முதன்முதலில் உருவானது எங்களது பள்ளிநூலகத்தில் தற்செயலாக கண்ணில் பட்ட ஒரு புத்தகத்திலிருந்துதான். யாழ்ப்பாணம் வடமராட்சியில் புகழ் பெற்ற ஹாட்லிக்கல்லூரியில் படித்து வந்தேன். 6ம் வகுப்பு தொடக்கம் 11ம் வகுப்பு வரையில் வகுப்பில் முதல் மூன்று இடங்களுக்குள் எப்படியாவது வந்துவிடுவேன். (பகீதரனும் அரவிந்தனும் மற்ற இருவர். 11ம் வகுப்பு "டி" பிரிவில் இரண்டாம் தவணை மட்டுமே முதலாவதாய் வந்து ஒரே ஒரு முறை பகீரை முந்தினேன்). அப்போது ஏதோ ஒரு பொது அறிவுப்போட்டி, அதற்கு ஏதாவது தயார் செய்வோமே என்றுதான் நூலகம் சென்றேன். அங்கேதான் சுஜாதாவின் பிரமிக்கத்தக்க அடுத்த முகத்தை பார்த்தேன். அவரது "ஏன்?எதற்கு?எப்படி?" என்ற கேள்விபதில் தொகுப்புதான் என்னை ஈர்த்தது. அதன் பின் அவரைத் தேடித் தேடிப் படித்தேன். ஆனால் ஒரே மாற்றம், "இந்தாள் கதையில செக்ஸ் நல்லா இருக்கும்" என்ற எண்ணம் அடியோடு அழிந்து போயிற்று. சுஜாதா மூலம் தரமான இலக்கியங்கள், படைப்புகள், படைப்பாளிகள் பற்றி அறிந்து கொண்டேன்.

சுஜாதாவிடம் எனக்கு பிடித்தது அவரது நேர்மை. "நான் இப்படித்தான்" என ஆணித்தரமாகக் கூறினார். இந்திய சமூக அமைப்பில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை அவர் வரவேற்றது மட்டும் எனக்கு பிடிக்கவேயில்லை. ஆனால் அதை அவர் தனது எந்த வாசகனிடமும் திணிக்க முயலவில்லை. தீவிர வைணவரான அவர் தனது எழுத்துக்களில் ஆங்காங்கே தூவிச்சென்ற பகுத்தறிவு விதைகளை இன்றைக்கும் தந்தை பெரியாரின் வாரிசுகளாகக் வேடம் கட்டிக்கொண்டு சுஜாதாவைத் திட்டித்தீர்க்கும் பலர் கூடச் செய்யவில்லை. ஒரு நடுநிலமையான நல்ல விமர்சகராயும், இளைஞர்களை ஊக்குவிப்பவராயும், நல்ல திறமையாளர்களை வெளிக்கொணர்பவராயும் (நா. முத்துக்குமார்)இருந்தார். நாசூக்காகப் பாராட்டுவது போல விமர்சிக்கும் திறமை இருந்தது அவரிடம். தன்னை எப்போதும் புதுப்பித்துக்கொண்டே இருந்தார். அதனால்தானோ என்னவோ அவர் தனது எழுபதுகளில் எழுதிய கட்டுரைகள், கதைகள் கூட எங்கள் போன்ற இருபதுகளையும் ஈர்த்தன. நான் கனடா புறப்பட்டபோது எடுத்துவைத்துக்கொண்ட இரண்டே இரண்டு புத்தகங்கள் அவர்மீது எனக்கிருந்த மரியாதை, வெறி, ஆர்வம் ஏன் பாசம் எல்லாவற்றையும் சொல்லும். கற்றதும் பெற்றதும் பாகம் 1 மற்றும் 2 தான் அவை. (கனடாவில் வந்து அடுத்த இரண்டு பதிப்புகளைத் தேடாத நாளில்லை). எனக்கு ஒரு hotmail account உண்டு. அதை நான் பெரிதாகப் பாவிப்பதில்லை. இருந்தும் அதை கைவிடாமல் வைத்திருக்கிறேன். ஏன் தெரியுமா? அதில் சுஜாதா எனது மின்னஞ்சலுக்கு அனுப்பிய பதிலஞ்சல் இருக்கிறது. அது எனக்கு ஒரு பொக்கிஷம்.