Showing posts with label கடுப்பு. Show all posts
Showing posts with label கடுப்பு. Show all posts

Thursday, 26 November 2009

மாவீரர் வாரம்- பாபா- விபரீத ஆசை

மாவீரர் நாள்
மாவீரர் வாரம் என்றுமில்லாதவாறு இந்த வருடம் விமரிசையாகக் 'கொண்டாடப்படுகிறது'. கனடாவில் சிறப்பு விருந்தினராக சீமான் கலந்துகொண்ட விழா ஒன்று ‘கொண்டாடப்பட்டது'. இது எல்லாம் எங்கே போய் முடியுமோ தெரியவில்லை. தமிழ் மக்களை ‘மச்சான்' என்று அழைத்த தமிழ் உணர்வாளர் நமீதா இன்னொரு மாவீரர் நாளில் கலந்துகொண்டு சிறப்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. வேலையிடத்திலும் பொது இடங்களில் நேரடியாகவும், சிலர் தொலைபேசி வழியாகவும் கேட்ட கேள்வி ‘தம்பி இந்த முறை மாவீரர் நாளுக்கு சீமான் வாறாராம். நீங்கள் போகேல்லையோ?' என்பதாக இருந்தது எரிச்சலூட்டியது.

சீமானின் தமிழுணர்வை நான் மறுக்கவோ, குறுக்கவோ இல்லை. எங்களுக்காக செத்தவர்கள், எங்களை விட எத்தனையோ மடங்கு நெஞ்சுரமும், தியாகக் குணமும் கொண்டவர்களுக்காக அனுட்டிக்கப்படும் நினைவுநாட்களில் கலந்து கொள்ளப் பின்நிற்கக்கூடாதுதான். ஆனால், ‘மாவீரர்களை நினைவுகூரும் பொருட்டு சேர்வோம்' என்கிற ஒரு எண்ண ஓட்டத்தைவிட, ‘சீமான் வாறாராம்' என்கிற வேடிக்கை உணர்வே இங்கே விஞ்சி நிற்கிறது. அதாவது, விழா ஏற்பாட்டாளர்கள் ‘சீமான்' என்கிற எலும்புத்துண்டை வீசினால் இந்த ‘விலங்குகள்' ஓடி வரும் என்று நினைத்திருக்கிறார்கள், அல்லது அப்படி நினைக்கும்படி நாங்கள் நடந்துகொண்டிருக்கிறோம். இப்படியே போனால் ஒரு நாள் நான் மேலே சொன்னபடி ‘தனத் தலைவி'... சீச்சீ... ‘தானைத் தலைவி நமீதா கலந்து சிறப்பிக்கும் மாவீரர் நாள் கொண்டாட்டங்கள் என்பதாக ஒரு விளம்பரம் வரும் நாள் தூரத்தில் இல்லை.

இதே வேளை இயக்குனர் சீமானை கனேடிய சட்டத்துக்குப் புறம்பாக உரையாற்றியமைக்காக கனேடியப் போலீசார் கைது செய்து நாட்டைவிட்டு வெளியேற்றியிருக்கிறார்கள்.

பாபா
சென்ற வார இறுதி முழுதும் இதே பேச்சாகத்தான் இருந்தது. 'பாபாவுக்குப் பிறந்த நாள் கொண்டாடினமாம், போகேல்லையோ?' என்று பலபேர் கேட்டார்கள். வருடாவருடம் கேட்டுக்கேட்டு அலுத்த கேள்விதான் என்றாலும் சலிக்காமல் ‘எனக்கு உதிலையெல்லாம் நம்பிக்கை இல்லை' என்பதைப் பதிலாகச் சொல்லிவருகிறேன். அம்மா பகவான் கல்யாண சீசனில் பாபா கிடப்பில் போடப்படுவார். பாபா பிறந்த நாள் சீசனில் அம்மா பகவானை மறந்துவிடுவார்கள். எப்படிப்பட்ட சனங்கள் இவர்கள்?

இங்கே சத்யசாய் பாடசாலை என்கிற பெயரில் ஆறாம் வகுப்புவரை ஒரு தனியார் பள்ளிக்கூடம் நடத்துகிறார்கள். மற்றைய பொதுப் பாடசாலைகளோடு ஒப்பிடும்போது கல்வி, ஒழுக்கம் என்று எல்லாவற்றிலும் தரமான பாடசாலை. பெற்றோரின் நன்கொடையில் நடப்பது. ஆறாம் வகுப்புவரை மருமகனும் அங்கே தான் படித்தான். கிரீன்வூட் என்று ஒரு அருமையான ஆசிரியர் இருந்தார். ஆறாம் வகுப்புக்கு மேல் வகுப்புக்களை ஆரம்பிக்க நிதி இல்லாமல் திணறுகிறார்கள். தனியான கட்டடம் இல்லாமல் வர்த்தகக் கட்டடம் ஒன்றில் பள்ளிக்கூடம் நடக்கிறது. சாய் பாபா தியான மண்டபம் கட்ட நிலம் வாங்கிப்போட்டு ஒரு குழு சாய் பாபாவைக் குளிர்ச்சிப்படுத்துகிறது. இன்னொரு குழு பள்ளிக்கூட அபிவிருத்திக்கு நிதி இல்லாமல் தவிக்கிறது. இரண்டு குழுக்களும் கூடிப்பேசி அந்தப் பாடசாலையை அபிவிருத்தி செய்யலாம். அதைவிடுத்து ஒரே நெறியைப் பின்பற்றுகிறோம் என்கிற பேரில் இவர்கள் செய்யும் அட்டூழியங்கள் எரிச்சலாக இருக்கிறது.

இதைவிடக் கொடுமை, அந்தப் பாடசாலை மாணவர்கள் அடிக்கடி சாயைப் போய்ப் பார்த்து வருபவர்கள் (மருமகனுக்கு அந்தச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை). சாய்க்கு கடிதம் எல்லாம் விழுந்து விழுந்து எழுதுவார்கள். சாய் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவார்கள். ஆனால் எனக்கென்னவோ சாய்க்கு இப்படியான பிஞ்சுகளைப் பற்றிச் சிந்திக்க நேரம் இருக்குமா தெரியவில்லை. அவரும் என்னதான் செய்யமுடியும்? அவருக்குத்தான் எத்தனை வேலைகள். சாய்க்கு ஆலயம் கட்டுவதைவிட கல்விச் சாலைகள் கட்டுவது எவ்வளவோ மேல் என்று இந்த முட்டாள்ச் சனங்கள் என்றைக்குப் புரிந்துகொள்ளுமோ தெரியவில்லை.

விபரீத ஆசை
எனக்கு சமீபத்தில் வந்திருக்கும் விபரீத ஆசை இது. வேட்டைக்காரன் படத்தில் ஒரேயொரு பாடலைக் கடன்வாங்கியாவது நான் தயாரிக்க வேண்டும். எந்தப் பாடலைத் தெரியுமா? ‘புலி உறுமுது' பாட்டைத்தான். அதிலும் முக்கியாமாக ஒரு வரியை மிகவும் தத்ரூபமாக, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, படம்பிடிக்க வேண்டும். வரி இதுதான்
‘அடங்க மறுத்தவனை அழிச்சுடுவான், இவன்
அமிலத்தை மொண்டு தினம் குளிச்சிடுவான்'.
ஆஹா... என்ன அருமையான வரிகள். மொண்டு குளிக்கிற அளவுக்கெல்லாம் வைக்க மாட்டேன். ஒரு பெரிய நீச்சல் குளம் முழுக்க அமிலம் நிரப்பிவிடுகிறேன். ஹீரோ, பாட்டெழுதின கவிஞர், பாட்டை ஓ.கே. சொன்ன இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் இன்னபிற வகையறாக்கள் ஒரே ஒரு முறை ஆசைதீர அதில் நீச்சலடிக்க இந்த வரியைப் படமாக்கிப்பாக்கவேண்டும். அடப் போங்கடா.....


Saturday, 31 October 2009

மனித உருவில் மிருகங்களாய் நாம்

பம்பலப்பிட்டிக் கடற்கரையில் மனநலம் பாதிக்கப்பட்ட பாலவண்ணன் சிவகுமார் என்கிற இளைஞன் பலவந்தமாகக் கடலுக்குள் தள்ளப்பட்டு, கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு சாகடிக்கப்பட்டிருக்கிறார். இன்னும் சரியான மொழியில் சொல்வதென்றால் கொல்லப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவத்தில் ஒரு காவல்துறை அதிகாரியும் சம்பந்தப்பட்டிருக்கிறார். (இது முழுமையாக காவல்துறை மட்டுமே செய்த சம்பவம் என்பதாக மிக வேகமாகத் திரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது).



நடந்தது என்ன?
நடந்தது என்ன என்பதைப் பற்றி வருகின்ற செய்திகள் வழமைபோலவே முன்னுக்குப் பின் முரணாக வருகின்றன. மேற்படி இளைஞர் பம்பலப்பிட்டிப் புகையிரத நிலையத்துக்கு அண்மித்த கடற்கரைப் பகுதியில், கடற்கரை வீதியால் போகின்ற வருகின்ற வாகனங்களின் மீது கற்களை வீசி எறிந்திருக்கிறார். அப்படி அவர் எறிந்த கல் பட்ட வாகனங்களில் ஒன்று இராணுவ/காவல்துறை வாகனம் எனவும், அதிலிருந்து இறங்கிய அதிகாரிகளைக் கண்டதும் அவர் புகையிரதப் பாதையைத் தாண்டி கடலை நோக்கி ஓடினார் என்றும் சொல்லப்படுகிறது. ஓடியவர் அப்போது அங்கே வந்த புகையிரதத்தையும் பதம் பார்க்க, புகையிரதம் நிறுத்தப்பட்டிருக்கிறது.

அதிலிருந்து இறங்கிய அல்லது அந்த இடத்தில் நின்ற இரு சாதாரணக் குடிமகன்களும், ஒரு காவல்துறை அதிகாரியும் இந்த இளைஞனைப் பிடிக்க முயல, இளைஞன் கடலுக்குள் செல்ல, ஆத்திரமுற்ற மற்றவர்கள் இளைஞனை மேலும் மேலும் கடலுக்குள் பலவந்தமாகத் தள்ள, கடல் அலைகள் இளைஞனைக் காவுகொண்டுவிட்டன. இப்போது சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுவிட்டார். ‘இலங்கைக் காவல்துறையின் அராஜகம்' என்பதாக செய்தி ஊடகங்கள் அலறவும் ஆரம்பித்தாயிற்று.

என்ன பிரச்சினை?
இங்கு நடந்த சம்பவம், சட்டரீதியாகக் கொலை. அதை யாரும் மறுக்கவியலாது. ஆனால் அதற்கு சிங்கள-தமிழ் இனத் துவேசம் 'மட்டும்' காரணம் என்று மேம்போக்காக வைக்கிற குற்றச்சாட்டுகளை மனித இனத்துக்கே செய்யப்படும் துரோகமாக நான் முன்வைப்பேன். கொஞ்சக் காலத்துக்கு முன் ரோசா வசந்த் எங்கள் எல்லார் மீதும் வைத்த ‘கொலைகாரக் கும்பல்' குற்றச்சாட்டின் இன்னொரு வடிவம்தான் இது. ‘மாட்டினான் ஒருத்தன்' என்பதாகத் தங்களை பொதுநலன் காப்பவர்களாகக் காட்டிக்கொள்ள ஒரு சிலர் முயன்றதன் விளைவு, மனநிலை பிறழ்ந்த ஒரு இளைஞனின் (அப்படிக் குறிப்பிடுவது அபத்தமாக இருக்கிறது) மரணம். இந்தச் சம்பவத்தில் மனநிலை பிறழ்ந்த ஒரு ஜீவன்தான் இருந்ததா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

அடித்துக் கொன்ற மூவரையும் (சிலர் ஐவரென்கிறார்கள்) மனநிலை பிறழ்ந்தவர்களாக என்னால் பார்க்கமுடிகிறது. அந்த இடத்தில் 6 காவல்துறை அதிகாரிகள் இருந்திருக்கிறார்கள். மேலும் நான்குபேர் சாட்சி சொல்லியிருக்கிறார்கள். ஒரு சில திறமைசாலிகள் இந்தச் சம்பவத்தை அற்புதமாக வீடியோ பிடித்திருக்கிறார்கள். சாட்சி சொல்லாமல் இன்னும் எத்தனையோ பேர் ஒளித்துமிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் மனநோயாளிகள். மன நிலை பிறழ்ந்த ஒருவனை அடையாளம் காணத்தெரியாமல், அவனுக்குரிய தகுந்த வாழ்வியல் நிலமைகளை ஏற்படுத்திக் கொடுக்காமல் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் காவல்துறை அதிகாரிகள் முன்னால், அநியாயங்களைத் தட்டிக்கேட்கவேண்டிய ஊடகக் கண்களின் பார்வையில் அந்த இளைஞன் சாகடிக்கப்பட்டதனால், நீங்கள், நான் உட்பட எல்லோரும் எங்களை மனநோயாளிகள் என்று மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறோம்.

இந்தப் பாதகத்தை தமிழ்-சிங்களத் துவேசமாக மட்டும் சிந்திப்பதை நிறுத்த வேண்டும். அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ‘மாட்டினாண்டா ஒரு தமிழ் நாய்' என்கிற மாதிரியான ஒரு சிந்தனை ஓட்டம் ஓடியிருக்கலாம். ஒரு சிங்களன் எம்மவர் பகுதியில் இதேபோல் மாட்டியிருந்தாலும் இதுதான் நடந்திருக்கும். ஆனால் அப்படியான ஒரு சித்தரிப்புமூலம் இதன் அடியாழத்தில் ஒளிந்திருக்கக்கூடிய ஒரு கேவலமான மனித மன இயல்பை நாங்கள் மழுப்ப முயல்கிறோம். இதை வைத்து அரசியல் பண்ணுபவர்கள் பண்ணிவிட்டுப்போங்கள்... எனக்கு ஒன்றுமில்லை. அதற்குமுன் நவம்பர் 16, 2005 என்ற நாளை நான் திரும்ப நினைவூட்டவேண்டி இருக்கிறது.

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில், யாழ் மாவட்டத்தில் நடந்த சில திருட்டுக்குற்றங்களுடன் சம்பந்தப்பட்ட சமூக விரோதி என 'காலாச்சாரம் பேணும் இளைஞர் குழுவால்' சந்தேகத்தின் பேரில் முத்திரை குத்தப்பட்ட 20 வயதான தினேஷ் என்ற இளைஞனை, சுற்ற நின்று கதறிய அவனது தாய்க்கும் சகோதரிக்கும் முன்னால் மூன்று மணித்தியாலங்களாக விக்கெட் கொட்டன்களாலும், பொல்லுகளாலும் அடித்துக் கொன்ற மிலேச்சத் தனத்துக்கு இது இணையே அல்ல. இதுபற்றி ஈழநாதன் வலு காட்டமாக ஒரு பதிவு போட்டார் என்றும் நண்பர்களின் வேண்டுதலுக்கு இணங்க காட்டம் குறைத்து மீள்பதிவிட்டார் என்றும் கேள்விப்பட்டேன். மற்றும்படி இந்தச் சம்பவம் பற்றி யாருமே கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இன்றைக்கு செத்தவன் தமிழன், கொன்றவன் சிங்களன் என்றதும் உணர்வு பொத்துக்கொண்டு வந்துவிட்டது இவர்களுக்கெல்லாம்.

இப்படியான மிலேச்சத்தனங்கள் அரசியல் அல்ல நண்பர்களே. அதையும் தாண்டி மனிதகுலத்தை வேரோடறுக்கக்கூடிய கேவலமான மனச்சிதைவுகளின் வெளிப்பாடு. என்னைக் கேட்டல், சிவகுமாரைக் கொன்ற சிங்களனும், தினேஷைக் கொன்ற தமிழனும், பெஸ்ட் பேக்கரியில் வைத்து தாண்டவம் ஆடிய காவிகளும், முஸ்லிம் நாடொன்றில் கடையில் பாண் திருடிய ஐந்து வயதுச் சிறுவனின் கைகளை வாகனத்தால் நசுக்கி முடமாக்கிய மதபிதாவும் ஒரே ஜாதி என்றே சொல்வேன். அத்தனை பேரும் மனம் பிறழ்ந்தவர்கள், செத்துப்போன சிவகுமாரைப் போலவே.

யோசித்துப் பாருங்கள் நண்பர்களே. நான் இப்போது இருக்கிற இந்த நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். 9-1-1 என்று உங்கள் கையில் இருக்கும் தொலைபேசியில் அழுத்தி சத்தமில்லாமல் விஷயம் சொன்னால் நீங்கள் தொலைபேசி முடிக்கமுன் வந்து நிற்கும் காவல்துறை உள்ள இந்த நாட்டிலேயே, பலர் அடித்தும், வாகனங்களால் ஏற்றியும், சுட்டும், குத்தியும் கொல்லப்படுகிறார்கள், வெட்ட வெளிகளில். மிக இலகுவாக இந்தக் காட்சிகளை செல்ஃபோன் கமராவில் படம் பிடிக்கும் ஒருவருக்குக்கூட 9-1-1 ஐ அழுத்தித் தகவல் சொல்லும் நோக்கம் வருவதில்லை. இங்கேயே இப்படி என்றால், காவல்துறையே சேர்ந்து சாகடிக்கும் ஊரில் இருப்பவர்களின் மனநிலையைச் சொல்லவா வேண்டும்?

எங்கள் ஊரில் திருமணத்துக்கு வெளியேயான தொடர்பொன்றினைச் சாக்காக வைத்து ‘இருட்டடி' கொடுக்கப்பட்ட ஒருவர் இறந்து போனதும், அதில் சம்பந்தப்பட்டவர்களை சிலர் நியாயப்படுத்த முயன்றதும் என் மனதில் இப்படிப்பட்ட ‘குழுமப் புத்தி' அல்லது ‘பொதுப் புத்தி' பற்றிய வெறுப்பை விதைத்திருக்கிறது. தண்டனை கொடுக்க நாங்கள் யார் என்கிற ஒரு எண்ணம் வந்தாலே போதும். இப்படியான மிலேச்சத்தனங்கள் நடக்காது. அடுத்தவனை நேசிக்கப்பழகு, உலகம் பூங்காவனமாகும். ஆனால் இது இப்போதைக்குச் சாத்தியமில்லை. இன்றைய சமூகங்கள் எல்லாமே ‘காசுக்கு உழைக்கும்' இயந்திரங்களை மட்டுமே உற்பத்தி செய்துகொண்டிருக்கின்றன.

சுலபமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டீர்கள் சிங்களக் காவல்துறையின் அராஜகம் என்று. இந்த சிவகுமார் விஷயத்தில் நேரடியான குற்றவாளிகளை விட மறைமுகமான குற்றவாளிகள்தான் அதிகம். அந்த மன நலம் பிறழ்ந்த இளைஞனை இப்படிக் கண்காணிப்பு இல்லாமல் அலையவிட்ட அவன் குடும்பத்தில் இருந்து குற்றம்சாட்டிக்கொண்டு போகலாம். ஆனாலும் இதெல்லாம் அந்த இளைஞனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பரிகாரம் தரப்போவதில்லை. தினேஷுக்கும் அவன் குடும்பத்துக்கும் நிகழ்ந்த அநீதியும் அங்ஙணமே. இன்னும் கொஞ்ச நாளில் நீங்களோ, நானோகூட இப்படிக் கொல்லப்படலாம். அந்த மரணத்தில் ஏதாவது அரசியல் இருந்தால் கண்டுகொள்ளப்படுவோம். இல்லாவிட்டால் உலகில் நாள்தோறும் நிகழும் மரணக்கணக்கில் ஒன்றாக எழுதிவைக்கப்படுவோம்.

இதை சிங்கள-தமிழ் துவேசப் பிரச்சினையாக நோக்கும் நண்பர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான். இந்தச் சம்பவத்தைக் கண்டிப்பதை வெகுநிச்சயம் வரவேற்கிறேன். ஆனால், பூதாகரமான பிரச்சினை ஒன்றை ஒரு சிறிய வட்டத்துக்குள் அடைத்து உங்களுக்கும், உங்களைச் சுற்றியிருக்கும் சமூகத்துக்கும் மாபெரும் துரோகம் ஒன்றை அறிந்தே செய்கிறீர்கள் தோழர்காள். புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.

Thursday, 29 October 2009

பசுக் கொட்டாய்


பத்தாயிரம் பொன்னுக்கு
கொட்டாய் வாங்கி
இருபது பசு அடுக்கி
இருபதடி நிலம் ஒதுக்கி
அழகாகக் கொண்டாட

பண்ணையார் பரமசிவம் வந்து
பரிசாகக் கிடைத்த ஒரு பசுவை
இழுத்து நீ கொட்டாயில் விடு
அதுவாகும் இருபதென்று
உவப்புடனே சொல்லிச் சென்றான்

கொட்டாயும் வாங்கி,
கெஞ்சிக் கெஞ்சிப் பரிசாகப்
பசுவும் வாங்கி,
வாகாக இழுத்து வந்து
கொட்டாயில் விட்டேன்

ஐயகோ என் சொல்வேன்
ஐடியா சொன்னவன்
'நாமக்கல்' சிபி அல்ல,
'மாநக்கல்' சிபி என்று, அக்கணமே
உறைக்கலையே ஏன் எனக்கு?

Friday, 21 August 2009

தமிழ்த் தொலைக்காட்சிகளின் வண்ணம்

கனடாவில் தமிழ் தொலைக் காட்சிகளின் பெயர்களே ‘தமிழ் வன்' ‘ரி.வி.ஐ' இப்படித்தான் இருக்கின்றன. இதில் பெரிய தொல்லை என்னவென்றால் ‘ரி.வி.ஐ' சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், ‘தமிழ் வன்' கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் அப்படியே ஒளிபரப்புவதுதான். இதற்கு மாதாமாதம் $15 தண்டம் செலுத்த வேண்டியிருப்பது கொடுமையிலும் கொடுமை. வீட்டில் High Speed Extreme இணைய வசதி இருப்பதால் விரும்பிய நிகழ்ச்சிகளை இணையத் தளங்களில் இருந்து தரவிறக்கிப் பார்ப்போம் என்கிற என்னுடைய ஆலோசனை வீட்டில் எடுபடவில்லை. குடும்பத் தலைவர் சொன்ன காரணம் 'ஊர் நிலவரங்களைப் பார்க்க வீட்டில ஒரு தமிழ்ச் சனல் இல்லாட்டி சனம் மதிக்காது'. ஆனால் அவரது மகன் ஏதாவது ஆங்கில ஒளிபரப்புகளைப் பார்த்தால் துள்ளி விழுவார் என்பது வேறு விஷயம்.

சாப்பிடுவதற்காக கீழே போகின்ற தருணங்களையோ, அல்லது விருந்தினர்கள் வீட்டுக்கு வருகின்ற தருணங்களையோ தவிர்த்து நான் தொலைக்காட்சி முன்னால் அமர்வது செய்தி பார்க்க மட்டுமே. கொடுமை என்னவென்றால் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளும் சரி, நாங்கள் விருந்தாளிகளாகப் போகும் வீட்டுக்காரர்களும் சரி, போய் உள்ளே நுழைந்ததும் ‘எங்கட வீட்டு ரீ.வீ.ல இதெல்லாம் வரும்' என்று தம்பட்டம் அடித்துச் செய்கிற தொல்லை தாங்க முடிவதில்லை. அதிலும் ‘ரி.வி.ஐ பெஸ்டா, தமிழ் வன் பெஸ்டா' என்பது போன்ற இலக்கியச் சர்ச்சைகளைத் தாங்க முடிவதில்லை. இத்தனைக்கும் இரண்டு தொலைக்காட்சிகளும் முக்கால்வாசி நேரமும் அவைகளின் இந்தியத் தாய் நிறுவன (!!!???) நிகழ்ச்சிகளையே ஒளிபரப்புகின்றன.

‘அரட்டை அரங்கம்' பாணியில் ரோகிணி நடத்தும் நிகழ்ச்சி மிகவும் பொறுமையை சோதிக்கிறது. விஜய் ரி.வி. ‘நீயா நானா' போல் (ஆங்கிலத்தின் மிகையான பாவனையைக் குறைத்து) நல்ல நிகழ்ச்சிகளை நடத்தலாமே. ‘கலக்கப் போவது யாரு', ‘ஜோடி நம்பர் வன்' போன்ற விஜய் நிகழ்ச்சிகளை பிரதி பண்ணிய சன்னும் கலைஞரும் இப்படியான நிகழ்ச்சிகளைப் பிரதி பண்ணப் போவதில்லை. அப்படியிருக்கையில் அவர்கள் ஒளிபரப்பும் ரசனைக் குறைவான, அறிவுச் செறிவற்ற நிகழ்ச்சிகளை தமிழ் வன்னும், ரீ.வி.ஐ. யும் ஒளிபரப்புவதை என்னால் ஏனோ ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எம்மவர்களின் நிகழ்ச்சிகள் மிகக் குறைவானளவே ஒளிபரப்பாகின்றன. முழுமையாக சன் மற்றும் கலைஞர் போன்ற தொலைக்காட்சிகளின் படைப்புகள் உலகம் முழுக்க உள்ள தமிழர்களின் வரவேற்பறையை ஆக்கிரமித்துள்ளன.

எல்லா நாட்டுத் தொலைக்காட்சி ரசிகர்களுக்கும் ஒரு கேள்வி. சுப்பர் சிங்கர், சுப்பர் டான்ஸர் போல ஏன் அறிவு சம்பந்தமான நிகழ்ச்சிகளை இவர்கள் தயாரிப்பதில்லை? இந்த சுப்பர் சிங்கர், சுப்பர் டான்சர் போன்ற நிகழ்ச்சிகளில் பிள்ளைகளை பாடவிட்டும், ஆட விட்டும் ரசிக்கும் பெற்றோர் ஏன் அந்தக் குழந்தைகளைக் கல்வி சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு அனுப்புவதில்லை. எனக்கு காலாகாலத்துக்கும் மறக்கமுடியாத ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி முன்பொருகாலத்தில் பி.பி.சி. யில் ஒளிபரப்பான பொது அறிவு சம்பந்தமான நிகழ்ச்சி. அறிவிப்பாளரின் பெயர் நிகழ்ச்சியின் பெயர்கூட ஞாபகமில்லை, ஆனால் இன்றைக்கும் ஏதாவது பொது அறிவு நிகழ்ச்சிகளில் ஏதாவது கேள்விக்கு நான் சரியாகப் பதில் சொல்கிறேன் (அட, வீட்டில் பக்கத்தில் இருப்பவரிடம்தான்) என்றால் அதற்கு மூல காரணம், பி.பி.சி.யில் வந்த அந்த நிகழ்ச்சிதான்.

எனக்குப் புரியாதது இதுதான். கிட்டத்தட்ட அரைமணிக்கு ஒரு முறை ஒளிபரப்பாகும் எல்லாத் தொடருமே ஒரே மாதிரிதான் இருக்கிறது. இரண்டு மணிக்குப் போகும் தொடரின் கதைக்கும், நான்கு மணிக்கு போகும் தொடரின் கதைக்கும் எந்த வித்தியாசத்தையும் காணமுடியவில்லை. எல்லாத் தொடர்களும் ஒரு இடிதாங்கி, ஒழுக்கம் கெட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பலர், நல்லவராக யாரையாவது காட்ட வேண்டுமே என்பதற்காக ஒரு சிலர் இப்படித்தான் இருக்கிறது. இப்படியான தொடர்களில் வாரி இறைக்கும் காசை, ஒரு நல்ல பொது அறிவுப் போட்டி, உச்சரிப்புப் போட்டி, தமிழறிவுப் போட்டி, குறள் மனனப் போட்டி போன்ற போட்டிகளை இதே ஆரவாரத்தோடு பிரம்மாண்டமாக தயாரிக்கலாம் அல்லவா?

டென்மார்க்கில் வசிக்கும் என்னுடைய அக்கா ஒருவரின் மகள் இந்த சுப்பர் சிங்கர் யூனியர் போன்றதொரு நிகழ்ச்சியில் டென்மார்க்கில் தெரியப்பட்ட 10, இருவர் கொண்ட குழுக்களில் இடம்பெற்றிருக்கிறாள். இந்த நிகழ்ச்சிக்கும் சுப்பர் சிங்கருக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் அனைவரும் தாமே எழுதி, தாமே இசையமைத்துப் பாடவேண்டும். அவர்களின் வயதுகளுக்கேற்றபடி தரம் நிர்ணயம் செய்து தேர்ந்தெடுக்கிறார்கள். அக்காவின் மகளும் அவளோடு சேர்ந்து சங்கீதம் கற்கும் இன்னொரு பெண் பிள்ளையும் (15 வயதுதான்) சேர்ந்து ஒரு பாடலை உருவாக்கி, போட்டியிடுகிறார்கள். இப்படியான நிகழ்ச்சி அழகானது.
அதை விடுத்து ‘த வே ஒஃப் யுவர் சிங்கிங் இஸ் நொட் அப் டு த மார்க்' ‘வாவ்.. அம்ம்ம்மேஸிங்..எக்ஸலண்ட்... சான்சே இல்ல' இப்படியான இரண்டு விமர்சனங்களை மட்டும் வைத்து காலத்தை ஓட்டும் நடுவர்களை வைத்து நடத்தப்படும், பெற்றோர்களையும் குழந்தைகளையும் நன்றாக நடிப்புச் சொல்லிக் கொடுத்து நடிக்க வைக்கப்படும் நிகழ்ச்சிகள், ம்ஹூம்.. அதிலும் ஒரு கொஞ்சக்காலம் கிரிஷ் (சங்கீதா புருஷன்)செய்த அட்டகாசம் தாங்காமல் கிரிஷ் பாடும் சினிமாப் பாடல்கள்கூட வெறுத்துப் போனது. இவர்கள் எஸ்.பி.பியிடம் பாடுவதில் மட்டுமல்ல, ஒரு நிகழ்ச்சியை விமர்சனம் செய்வதில் கூட டியூஷன் எடுக்கலாம்.

முற்றுமுழுதாக கல்வி, அரசியல், சமூகம் என்று போய்விடுங்கள் என்பது என்னுடைய வாதம் இல்லை. நிச்சயமாக சில entertaining நிகழ்ச்சிகள் அவசியம்தான். அதற்காக முழுக்க முழுக்க entertainment என்று போய்விடக் கூடாது. இப்போதெல்லாம் தியேட்டரில் போய் படம் பார்ப்பதைவிட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது என்பது பிரதானமான பொழுதுபோக்காக மாறிவிட்ட நிலையில், திரைப்படங்களை நம்பி தொலைக்காட்சிகள் என்ற நிலை தலைகீழாகிவிட்ட நிலையில் தொலைக்காட்சிகளுக்கு அதிகப் பொறுப்பிருக்கிறது என்பது என்னுடைய அபிப்பிராயம்.

இதை யாரிடம் சொல்லி அழ?

எங்களுக்கு தொலைக்காட்சி கேபிள் தருபவர்கள் ‘ரோஜேர்ஸ்' என்னும் நிறுவனத்தினர். அவர்கள் இரண்டு வாரத்துக்கு முன்னர் ஒரு கடிதம் அனுப்பினார்கள். ஓகஸ்ட் 20ம் திகதியிலிருந்து குறிப்பிட்ட அலைவரிசைகளில் இயங்கும் சில தொலைக்காட்சிச் சானல்களை வேறு அலைவரிசைக்கு மாற்றப் போவதாக அறிவித்திருந்தார்கள். முக்கால்வாசிப் பேர் அந்தக் கடிதத்தை வாசிக்காமல் எறிந்து விட்டார்கள். நான் recycle binக்குளிருந்து கவனமாக எடுத்து வைத்திருந்தேன். ஓகஸ்ட் 2ஒம் திகதி 622ம் இலக்கத்தில் அதுவரை ஒளிபரப்பான தமிழ் வன்னைக் காணவில்லை. நான் என்னிடம் இருந்த கடிதம் மூலமாக அது 868ல் வருகிறது என அறிந்து வீட்டாருக்கும் சொன்னேன். 868 ல் ஒளிபரப்பான தமிழ் வன்னில் அடிக்கடி ஒரு அறிவிப்புப் போட்டுக் கொண்டிருந்தார்கள். ‘தமிழ் வன் இன்றுமுதல் 622இலிருந்து 868 க்கு மாற்றப்பட்டிருக்கிறது'. ‘இந்தக் கடிதம் கிடைக்கவில்லை என்றால் உடனே எனக்குத் தெரியப்படுத்தவும்' என்பதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம். 622லிருந்து 868க்கு மாற்றப்பட முன்னரே இந்த அறிவிப்பு வந்திருக்க வேண்டாமா?

Thursday, 20 August 2009

பேசிய படங்கள்

நிறைய காலத்துக்குப் பிறகு ஒரு சினிமாப் பதிவு. அதாவது இரண்டு வாரத்துக்குப் பிறகு. நான் என்னுடைய முன்னைய பதிவு ஒன்றில் சொன்னது மாதிரியே பேசாப் பொருளைப் பேசத்துணிந்த இரு படங்களான அச்சமுண்டு அச்சமுண்டு மற்றும் வேலு பிரபாகரனின் அரிப்புக் கதை, மன்னிக்கவும், காதல் கதை இரண்டையும் சென்ற வார இறுதியில் பார்த்தேன். இரண்டைப் பற்றியும் என்ன நினைக்கிறேன் என்பதுதான் இந்தப் பதிவின் ஆதார நோக்கம்.

வேலு பிரபாகரனின் காதல் கதை

என்னதான் திட்டித் தீர்த்தாலும், வேலு பிரபாகரனைச் சில விஷயங்களுக்காகப் பாராட்டியாக வேண்டும். அவர் பேச வந்த விஷயம் கத்தி மேல் நடப்பது போன்றது. என்னதான் வாய்கிழியக் கத்தினாலும், காமம் கலக்காத காதல் இல்லை என்பது உண்மை. எனக்குத் தெரிந்து காதலியைத் தனிமையான இடத்தில் வைத்துச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது தொட்டுப் பார்க்காத காதலனும், அவ்வாறு தொட அனுமதிக்காத காதலியும் இருக்கவே முடியாது. இல்லை, நாங்கள் பெற்றோர் சம்மதம் கிடைத்து கல்யாணம் கட்டும் வரை தொட்டுக் கொள்ளவே மாட்டோம் என்று சபதம் எடுத்திருக்கிறோம் என்றெல்லாம் யாராவது சொன்னால், அது பச்சைப் பொய். ஒரு துளியாவது காமம் கலக்காமல் காதல் இல்லை என்பது நிதர்சன உண்மை.ஆனால் வேலு பிரபாகரன் எல்லாமே காமம்தான் என்று சொல்லத் தலைப்பட்டிருக்கிறார். அதுதான் உதைக்கிறது. கிட்டத்தட்ட காதல் என்ற ஒரு உணர்வே இல்லை, எல்லாமே காமம்தான் என்ற மாதிரி இருக்கிறது அவரது பார்வை.

எனக்குத் தெரிந்து மோசமான சிலரைத் தவிர வேறு எந்தக் காதலனோ காதலியோ குளத்தாங்கரையிலோ, பனந்தோப்புகளிலேயோ ‘கூடும்' அளவுக்குப் போவதில்லை. அங்கே இங்கே ஏடாகூடமாகத் தொட்டுக் கொள்வார்கள், முத்தமிட்டுக் கொள்வார்கள். சந்திக்கிற போதெல்லாம் கூடுவதை மட்டுமே ஆதார நோக்கம் கொண்டவர்களாக ஒரு காதல் ஜோடியைப் படைத்திருப்பது எனக்கு ஏனோ ஒப்பவில்லை. படம் முழுவதும் இப்படியான அழுத்தமில்லாத பாத்திரப் படைப்புகள். இதிலும் பெரிய irony என்னவென்றால் ஒரு கடற்கரையில் குறைந்த பட்ச ஆடைகளோடு ஆடும் பெண்கள் பற்றியும், அப்படி எல்லாவற்றையும் ‘திறந்து' வைத்தால் கற்பழிப்பு போன்ற பாலியல் சம்பந்தமான குற்றங்கள் குறையும் என்பது பற்றியும் முழுமையாக உடை அணிந்த வண்ணம் பாடம் நடத்துகிறார்.

நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான். ஏன் பெண்கள் மட்டும் திறந்து வைக்கவேண்டும்? நீங்களும் உங்களுடையவற்றை ‘ஆடவிட்டு' திரியலாமே. இவர் மட்டும் முழுக்க மூடியிருப்பாராம், இவரது இச்சை தணிக்க பெண்கள் மட்டும் 'திறந்து' பிடிக்க வேண்டுமாம். படம் முழுக்கவும் இவரது ஒரே ஒரு பார்வை மட்டுமே தென்படுகிறது, அதாவது காலம் காலமாக நிலவி வருகிற ‘பெண் ஒரு போகப் பொருள், அவள் திறந்து காட்டிக் கொண்டு திரிந்தால் எல்லாம் சரியாகிவிடும்' என்கிற கேவலமான ஆணாதிக்க சிந்தனை. இதில் பெரியார் வேஷத்தைத் தானும் போட்டு..அட கருமமே.. அம்மா, தாய்மாரே, நம்ம வேலு பிரபாகரன் என்ன சொல்ல வர்றார் தெரியுமோ? உங்கள் பிள்ளைகள் காமம் பற்றிய நல்ல அறிவோடு தெளிவாக வளர, நீங்கள் திற................. அடச்சீ.. பொத்திக் கொள்கிறேன். ஆக, சொல்லவேண்டிய ஒரு விஷயத்தை கேவலமான ஒரு கோணத்தில் சொல்லியிருக்கிறார் வேலு பிரபாகரன்.

அச்சமுண்டு அச்சமுண்டு

சின்னப் பிள்ளைகளைப் பயன்படுத்தித் தாகம் தணிக்கும் மனிதன் ஒருவனைப் பற்றிய கதை. இந்தப் படத்தில் வியாபார ரீதியாக சில விஷயங்கள் விட்டுப் போயிருக்கிறன. படம் மிக ஆறுதலாக நகர்கிறது. இன்னும் கொஞ்சம் படபடப்பை ஏற்றியிருக்கலாம். இப்போ இயக்குனர் அருண் வைத்தியநாதன் சொல்ல வந்திருக்கும் விஷயம் எந்த அளவுக்கு எங்கள் சமூகத்துக்கு பொருத்தமானது என்பதுதான் கேள்வியே.

இயக்குனர் சொல்லியிருப்பது போல் கடத்திப் போய் அனுபவிக்கும் அளவுக்கு இல்லையென்றாலும், அவர் சொல்லியிருக்கும் விஷயம் இருக்கிறது. இது பற்றிப் பேசுவதற்கு எனக்கு 'எல்லாத்' தகுதியும் இருக்கிறது என்பதை மட்டும் சொல்லிக் கொள்வேன். மூன்று வெவ்வேறான இடங்களில், சந்தர்ப்பங்களில் மூன்று வெவ்வேறு குணாதிசயம் கொண்டவர்களால் அந்தத் தகுதி எனக்கு 8 வயதுக்கு உள்ளாகவே வழங்கப்பட்டு விட்டது. இது பற்றி மேலும் சொல்லப் போனால் சில குடும்பங்கள் உடைந்து சின்னாபின்னப் படலாம என்பதால் இங்கேயே நிறுத்துவது உசிதம் என்று நினைக்கிறேன்.

நேரடியாகக் கிடைக்காத ஒரு தகுதி என் பதின்ம வயதுகளின் பிற்பகுதியில் கிடைத்தது. எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊரில் இருந்த அந்த மனிதர் பற்றி நண்பர்கள் சொன்ன செய்தி அது. அந்த மனிதர் பராயமெய்திய ஆண் பிள்ளைகளைக் குறி வைப்பவர். ஒரு வாசிக சாலையில் அடிக்கடி கை போட முயல்வாராம். கோவில் திருவிழா காலங்களில் இவரது அட்டகாசம் அதிகமாக இருக்குமாம். ஒருமுறை இவரது ஆசைக்கு இணங்குவது போல் நடித்து இவரது மர்மப் பிரதேசத்தில் ‘காஞ்சிரோண்டி' என எங்கள் பக்கத்தில் அழைக்கப்படும் பட்டால் பயங்கரமாக அரிக்கும் செடியின் இலையைப் பூசிவிட்டார்கள் அந்த ஊர் இளைஞர்கள். கொஞ்சக் காலம் அடங்கியிருந்தவர் ஒரு முறை நண்பனுக்காக நான் வாசிகசாலையில் காத்திருந்த போது தேவையில்லாமல் மிக நெருக்கமாய் உட்கார, இவரது வரலாறு தெரிந்த நான் நண்பன் வீட்டு மதிலில் போய் உட்கார்ந்து விட்டேன்.

ஆக, அருண் வைத்தியநாதன் சொல்ல வந்த அந்த child abuse விஷயம், ஒரு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பது உண்மை. அதுவும் எட்டு வயதுக்குள் மூன்று தகுதியளிப்புகள் அங்கொன்றும் இங்கொன்றும் என்பது சரியான சொல்லாடலா என்று சந்தேகம் வர வைப்பது உண்மை. என்ன நான் கொஞ்சம் வெளிப்படையாகப் பேசுகிறேன், பலர் பேசுவதில்லை. அருண் வைத்தியநாதனும் கொஞ்சம் வெளிப்படையகப் பேசியிருக்கிறார். இனி வீட்டுக்கு வரும் யாரையும் எப்படி நம்புவது என்கிற ஒரு மனநிலையைத் தோற்றுவித்திருக்கக்கூடிய கரு, அழுத்தம் போதாமை காரணமாக கொஞ்சமே போரடிக்கிறது. ஆனால் ஒரு துளி ஆபாசம் இல்லாமல் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.

அருண் சொல்லாத ஒரு விஷயம், இப்படியான அக்கிரமங்களை நிகழ்த்த உங்கள் வீட்டுக்குள் வெளியிலிருந்து ஒரு ஆள் வரவேண்டும் என்பதில்லை. இப்படியான வன் கொடுமைகள் உங்களால் அதிகம் நம்பி வீட்டுக்குள் அனுமதிக்கப்படும் உறவுக்காரர்கள், தெரிந்தவர்கள், நண்பர்களால்தான் அதிகளவில் நிகழ்த்தப் படுகின்றன என்பது உண்மை. இது பற்றிய மேலதிக தகவல்கள் வேண்டும் என்றால் ஞாநி (வேறு விடயங்களில் அவரது கருத்துக்களில் நான் உடன் படாவிட்டாலும்) எழுதிய அறிந்தும் அறியாமலும் (விகடனில் தொடராக வந்தது) கிடைத்தால் படிக்கலாம். சிக்கலான விஷயங்கள் பலவற்றை எளிய தமிழில் சொல்லியிருப்பார். (என்ன வல்லுனர்களை மேற்கோள் காட்டாமல் எல்லாம் தன் சொந்தச் சரக்கு என்ற பாணியில் எழுதியிருப்பார்).

ஒரு கேள்வி, அச்சமுண்டு அச்சமுண்டு பார்த்த போது எழுந்தது. அதாவது படங்களில் நடிக்கும் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளிகளாகக் கருதப்படுவது இல்லையா? 'குழந்தைத் தொழிலாளர்கள்' என்ற பதத்தை யாராவது சரியாக வரையறுத்துச் சொல்ல முடியுமா?

Thursday, 13 August 2009

ஜனநாயகம் மீது மக்கள் நம்பிக்கை இழக்கிறார்களா?


யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் நடந்த தேர்தல்கள், அவற்றின் முடிவுகளில் யாருக்கு சந்தோஷம், யாருக்கு சந்தோஷமில்லை என்பது பற்றியெல்லாம் பலரும் எழுதித் தீர்த்துவிட்டார்கள். ஆனால் நான் இங்கே ஆராயப் போவது, அந்தத் தேர்தலில் என்னைப் பாதித்த இன்னொரு புள்ளி விபரத்தைப் பற்றி. இந்தப் பிரச்சினை இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கிற ஒரு பொதுப் பிரச்சினை.

அந்தப் புள்ளி விபரம் இதுதான்:
முறையே, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில்
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்: 100, 417; 24,626
செலுத்தப்பட்ட வாக்குகள்: 22,280: 12,850
அங்கீகரிக்கப்பட்ட வாக்குகள்: 20, 922: 12,292
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: 1,358; 558

இந்தப் புள்ளிவிபரங்களில் ஒரே ஒரு விஷயம்தான் சந்தோசமளிக்கிறது. அதாவது வவுனியாவில் செலுத்தப்பட்ட வாக்குகளில் 95.66% மும், யாழ்ப்பாணத்தில் செலுத்தப்பட்ட வாக்குகளில் 93.9% மும் செல்லுபடியான வாக்குகள். அதாவது, வாக்குப் போட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எப்படி சரியாக வாக்களிக்கவேண்டும் என்பது தெரிந்திருக்கிறது. ஆனால் பிரச்சினை அதுவல்ல. வவுனியாவில் தகுதிபடைத்த வாக்காளர்களில் வெறும் 52.2% மட்டுமே வாக்குச் செலுத்தியிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் நிலமை இதவிட மோசம்; வெறும் 22.2% தான் வாக்குச் செலுத்தியிருக்கிறார்கள். (ஆதாரம்: இலங்கைத் தேர்தல் ஆணையம்)

அளிக்கப்பட்ட வாக்குகளில் எத்தனை கள்ள வாக்குகள், எத்தனை நல்ல வாக்குகள் என்ற சர்ச்சைகளை விடுத்து, எல்லாமே நல்ல வாக்குக்கள் என்ற அனுமானத்தின் அடிப்படையில் பார்த்தால் கூட, இந்த எண்ணிக்கைகள் ஜனநாயகத்திலிருந்து மக்கள் தம்மை விலக்கிக் கொள்கிறார்களோ என்ற ஒரு சந்தேகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இதே நாள் ஊவா மாகாணத்தில் நடந்த தேர்தலில் 70% பேர் வாக்களித்திருப்பது இந்தக் குழப்பத்தை மேலும் பெரிதாக்குகிறது. எதனால் இப்படிப்பட்ட வித்தியாசம் நிகழ்ந்திருக்கிறது என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால், அதையும் தாண்டிய ஒரு பிரச்சினை இருக்கிறது.

இங்கே கனடாவில் சென்ற ஒக்டோபரில் நடந்த பொதுத் தேர்தலில் வெறும் 58.8% வாக்காளர்களே வாக்களித்திருந்தார்கள் (ஆதாரம்: Elections Canada). உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகக் கருதப்படும் இந்தியாவின் பதினான்காவது பொதுத் தேர்தலில் வாக்களித்தவர்கள் வெறும் 48.74 பேர் மட்டுமே (ஆதாரம்: இந்தியத் தேர்தல் ஆணையம்). அதாவது ஒரு நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட வாக்காளர்களில் ஐம்பது சதவீதத்துக்கு கொஞ்சம் கூடியவர்களோ அல்லது கொஞ்சம் குறைந்த வாக்காளர்களோதான் வாக்களிக்கிறார்கள். இப்படியான தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்படும் அரசாங்கங்கள் எப்படி ஒரு நாட்டின் மக்களை முழுமையாகப் பிரதிநிதித்துவப் படுத்தும்?

இப்படி ஒரு சாரார் மட்டும் அளிக்கும் வாக்குகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதமே அரசாங்கம் அமைக்கும் கட்சிக்குப் போய்ச்சேரும். உதாரணத்துக்கு, கடந்த கனேடியப் பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 37.65% வாக்குகளை மட்டுமே பெற்றது. அதாவது, தகுதியான வாக்காளர்களின் 58.8% வாக்குகளில், 37.65%. ஆக, தகுதியான வாக்காளர்களில் 22.1%ஐ மட்டும் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சி, கனடாவை இப்போது ஆண்டு கொண்டிருக்கிறது. கருத்துச் சுதந்திரம், இயலுமானளவுக்கு அடக்கு முறையின்மை, கள்ள வாக்குகள் இன்மை போன்ற நல்ல சூழ்நிலை நிலவும் இந்த நாட்டிலேயே, ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறக்கூடிய இந்த நாட்டிலேயே, வாக்களிப்பு என்கிற கடமை இந்தளவுக்குப் புறக்கணிக்கப்படுவது, உண்மையாகவே ஜனநாயகம் நிலைத்து நிற்குமா என்பது பற்றிய பாரிய சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

ஏன் இந்த நிலமை? மக்கள் ஜனநாயக முறைப்படி வாக்களிக்க அனுமதிக்கப் படுவதில்லை. மிரட்டப் படுகிறார்கள் என்கிற சாட்டை ஆசிய நாடுகள், ஆபிரிக்க நாடுகளில் சொல்லலாம். ஏதோ திருமண வீட்டுக்கு வருபவரை வரவேற்பது போல் வரவேற்று வாக்களிக்க வைக்கும் வாக்குச் சாவடி அதிகாரிகள் இருக்கும் இந்த நாட்டில் என்னால் அப்படி ஒரு காரணத்தைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஆக, எனக்கு மனதில் படுகிற காரணங்களாக இவற்றைத்தான் சொல்லுவேன்
  • மக்கள் ஜனநாயகத்தின் மீதும், அரசியல்வாதிகள் மீதும் நம்பிக்கை இழந்து விட்டார்கள். எல்லா நாடுகளிலும் ஊழலும், ஏமாற்றிச் சொத்துச் சேர்ப்பதும், ஒழுக்கக் குறைவும் பரவிவிட்டன. அதனால் எல்லா நாட்டிலும் மக்கள் மனதில் அரசியல் ஒரு சாக்கடை என்ற எண்ணம் ஆழமாகப் படிந்துவிட்டது. அந்த எண்ணம் அவர்களை அரசியல்வாதிகளைப் புறக்கணிக்கச் சொல்கிறது. அதனால் தேர்தலையும், ஜனநாயகத்தையும் மொத்தமாகப் புறக்கணிக்கிறார்கள். சில இடங்களில் தேர்தல் மூலம் தெரிவு செய்யும் அரசாங்கத்தைவிட ஒரு சர்வாதிகார ஆட்சியே மேல் என்கிற நிலமைக்கு மக்கள் தள்ளப் பட்டிருக்கிறார்கள்.
  • எந்த ஒரு நாட்டிலும் உள்ள கல்வித்திட்டங்கள் என்ன வேலை செய்தால் எவ்வளவு உழைக்கலாம் என்று சொல்லித் தருமளவுக்கு, நீ பிறந்த நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், அதனால் கிடைக்கக்கூடிய உரிமைகளையும் சொல்லிக் கொடுப்பதில்லை.
  • படித்தவர்களின் மெத்தனப் போக்கு. ஏழைகள், பெரியளவு படிக்காதவர்கள் வாக்குப் போடாவிட்டால் பரவாயில்லை, மன்னிக்கலாம். படித்தவர்கள் வாக்குப் போடாமல் விட்டுவிட்டு, அதைப் பற்றிப் பெருமைவேறு பேசுகிறார்கள். அப்படிப் பேசிவிட்டு பொருளாதாரத் தேக்கநிலை, வேலையின்மை என்று எல்லாப் பிரச்சினைக்கும் அரசாங்கத்தைக் கைகாட்டுகிறார்கள். இவர்களை எல்லாம் மன்னிக்கவே கூடாது.
  • இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் அதிகரித்து வரும் தேர்தல் முறைகேடுகள். வறுமைப்பட்டவர்களின் இயலாமையைப் பயன்படுத்தி சோறு போட்டு வாக்குப் போடவைப்பதை விட ஒரு சமூக அநீதி இல்லை. அது தப்பென்று உணரும் நிலையில் இப்படிப் பயன்படுத்தப்படும் மக்களும் இல்லை. உணரும் நிலையில் இருப்பவர்கள் அதைத் தடுக்க முயல்வதும் இல்லை.
மேலே சொன்னதைவிட உங்கள் மனதில் படும் காரணங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். எது எப்படியோ, ஜனநாயகத்தை அழியவிடாமல் பார்ப்பது, ஒவ்வொரு குடிமகனதும்/மகளதும் கடமை, அவன்/அவள் எந்த நாட்டவனாக/நாட்டவளாக இருந்தாலும். இல்லாவிட்டால், விரைவில் மனிதகுலம் அழிவைத் தேடிக் கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம்.

டிஸ்கி: இது சம்பந்தமாக என் வலைப்பூவின் வலப் பக்க மூலையில் இருக்கும் கருத்துக் கணிப்புக்காவது வாக்களியுங்கள். (அதே போல் திரட்டிகளிலும்தான், ஹி ஹி...)

Saturday, 8 August 2009

கே.பி.- சில கேள்விகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராகத் தன்னை அறிவித்துக் கொண்ட கே.பி என்கிற செல்வராசா பத்மநாதனை ஆசிய நாடு ஒன்றில் வைத்துக் கைது செய்யப்பட்டு விட்டதாக இலங்கை அரசும், அவரை இலங்கை அரசு கடத்தி விட்டதாக தமிழ் உணர்வாளர்களும் செய்தி வெளியிட்டிருக்கின்றன. தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடங்கப்பட்டு வளர்ந்த வரலாற்றை நான் படித்தே அறிந்திருக்கிறேன். ரத்தத்தல் எழுதப்பட்ட அந்த சரித்திரத்தின் வயதைவிட என் வயது குறைவு. இந்தப் பிரச்சினை பற்றி என்னுடைய வலைப்பதிவில் எழுதுவது தமிழ் உணர்வாளர்களின் உணர்வுகளைக் கொச்சைப் படுத்திவிடும் என்று என்னுள்ளே ஒரு குற்ற உணர்வு தடுத்ததால், இத்தனை காலமும் என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். ஆனால் இந்தத் தமிழ் உணர்வாளர்கள் என்று சொல்லிக் கொள்வோரின் கூத்தை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதன் விளைவு இந்தப் பதிவு.

ஏலவே ஒரு பதிவில் சொன்னது போல, எனக்குத் தெரிந்த புலிகள் இயக்கத்தினர் கட்டுக்கோப்பானவர்கள். கடுமையான பயிற்சிகள் வழங்கப்பட்டு நெறிப்படுத்தப் பட்டவர்கள். 1996ம் ஆண்டுக்கு முன் கல்லுக்குள் ஈரமாக அவர்களது பயிற்சி முகாம்களைச் சுற்றியிருந்த குடி மனைகளில் இருந்த பெரியவர்கள் அவர்களின் அம்மா, அப்பா, பாட்டன், பாட்டி, மாமன், மாமி. சின்னப் பிள்ளைகள் தம்பிகளும் தங்கைகளும். நான் இங்கே சொல்லிக் கொண்டிருப்பது அடிமட்ட சிப்பாய்கள் பற்றி. போரில் இத்தனை புலிகள் மாண்டார்கள் என்ற செய்திகள் பல தமிழ் மக்களின் உணர்வுகளைக் கீறிக் காயப்படுத்த 1996க்கு முன் அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் நிலவிய அந்த இனம் புரியாத பாசம் காரணமாக இருந்திருக்கலாம். அதனால் விடுதலைப் புலிகளின் தோல்வியை எம்மால் சகித்துக் கொள்ள முடியாமல் போயிருக்கலாம். அதற்காக தமிழினம் சிந்திக்கும் திறணை இழந்து விடுவதா?


ஐயா, செல்வராசா பத்மநாதன், அல்லது குமரன் பத்மநாதன் என்கிற பெயரை சத்தியமாக சென்ற ஆண்டுதான் கேள்விப்பட்டேன். என் வயதொத்த அத்தனை பேரும் அப்போதுதான் கேள்விப்பட்டிருப்பார்கள். வரலாற்றில் ஊறியவர்களுக்குக் கூட அவரது பெயர் ஓரளவே பரிச்சயமாக இருந்தது. திடீரென தமிழீழ போராட்டக் களத்தில் கே.பி முன்னிலைப் படுத்தப்பட்டது போலவே ஒரு தோற்றம். களத்தில் அவர்கள் போராட, களமுனைக்கும் வெளியுலகத்துக்கும் இடையிலான செய்திப் பரிமாற்றத்தில் கே.பி. தான் முக்கிய பங்காற்றினார். புலிகளின் முக்கியஸ்தர்கள் பற்றிய செய்திகளை உலகிற்கு அறிவித்தார். ஆனால், சாட்சியில்லாத ஒரு ராத்திரியின்பின் கே.பி. யின் நடவடிக்கைகளில் இருந்த மர்மத்தை, தமிழ் உணர்வாளர்களின் நடவடிக்கைகளில் இருந்த மர்மம் மழுங்கடித்து விட்டது.
காட்சி-1
'பிரபாகரனைக் கொன்று விட்டோம். இதோ அவரது உடல்' என்று இலங்கை அரசாங்கம் அறிவித்த போது, இங்கே சாப்பிட மறந்து இருந்தவர்களை நான் கண்டிருக்கிறேன். தமிழ் இனமே சோகத்தில் இருக்க, ‘தலைவர் நலமாக இருக்கிறார்' என்றார் கே.பி. 'கே.பி.யே சொல்லிட்டார். இலங்கை அரசின் பொய் முகம் கிழிந்தது' என்று பத்திரிகை, வானொலி, தொலைக் காட்சி, பதிவுலகம், ஏன் ஃபேஸ் புக்கில் கூட தமிழ் உணர்வாளர்கள் மக்களுக்கு ஆறுதல் சொல்லும் தொனியில் அறிக்கைகளை விட்டார்கள். அப்போ கே.பி. தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புக்குப் பொறுப்பானவர் எனப்பட்டார்.

காட்சி-2
சில நாட்களின் பின் ‘பிரபாகரன் மே-18 நடந்த போரில் வீரச்சாவு எய்திவிட்டார்' என்ற வசனம் அடங்கலாக கே.பி. யின் அடுத்த அறிக்கை வெளியானது. 'ஐயகோ, கே.பி. என்ற கடத்தல்காரன் இலங்கை அரசிடமும், இந்திய உளவு அமைப்பான ‘ரா' விடமும் விலை போய்விட்டான். மக்களே, அவனது அறிக்கையை நம்பாதீர்கள்' என்று கே.பி. யின் முதல் அறிக்கையின்போது அவரைப் புகழ்ந்த, அதை ஆதாரமாக வைத்து மக்களுக்கு ஆறுதல் சொல்கிறேன் பேர்வழி என்கிற பெயரில் அறிக்கை விட்ட அத்தனை தமிழின உணர்வாளர்களும் கரணம் அடித்தார்கள். இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து அவதானிப்பவராய் நீங்கள் இருந்தால் இந்த so called தமிழ் உணர்வாளர்களை உங்களால் அடையாளம் காணமுடியும். இந்த இரண்டாவது காட்சி முடிந்தபோது கே.பி. ஒரு துரோகி.

காட்சி-3
புலிகளின் முத்திரை பொறித்த ஒரு அறிக்கை வெளிவருகிறது. இனிமேல் கே.பி. தான் எம் தலைவர் என்று சொல்கிறது அந்த அறிக்கை. கே.பி. யும் அதை உறுதி செய்கிறார் ஒரு பேட்டியில். சென்ற காட்சியில் அவரைத் துரோகி என்றவர்களுக்கு மூஞ்சியில் கரிதானே? இல்லவே இல்லை. விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற மாதிரி கே.பி.யை கொண்டாடினார்கள். இப்போது அவர் கைது செய்யப்பட்ட போது இந்தத் தமிழ் உணர்வாளர்கள் ஊடகத்தில் அதைக் கைது என்று சொல்லாமல் கடத்தல் என்று சொல்கிறார்கள் (இத்தனைக்கும் கே.பி. மீது இண்டர்போலின் பிடியாணை இருக்கிறது).

இப்போ இந்த அற்புதமான தமிழ் உணர்வாளர்களிடம் என்னுடைய கேள்வி இதுதான். இன்றைய நிலைப்பாட்டின் படி, கிட்டத்தட்ட தேசியத் தலைவருக்கு நிகராக கே.பி.யைப் புகழ்கிறீர்கள். அதனால் அந்தத் தலைவன் கொச்சைப்படுத்தப் படுகிறான் என்ற உணர்வே இல்லாமல். நாளைக்கே உங்களுடைய நம்பிக்கைகள், புரிதல்களுக்கு ஒவ்வாமல் கே.பி. யிடமிருந்து ஒரு அறிக்கை வந்தால் மறுபடியும் கே.பி. உங்கள் பார்வையில் ஒரு துரோகி. சரிதானே? அப்படி என்றால் உங்களின் உண்மையான நிலைப்பாடு என்ன? கட்டியெழுப்பப்பட்ட இந்தக் கனவின் நிலைப்பாடு என்ன. தேசியத் தலைவர் தனக்குப் பிறகான தலைமையை வளர்த்தெடுக்கவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு அவர்மீது இருந்தது. அப்போது அதை முட்டாள்தனம் என்று ஒதுக்கினோம். இப்போது நொடிக்கொருமுறை 'தமிழ் உணர்வு' மாறும் கேவலத்தைப் பார்க்கும்போது, அது உண்மைதான் என்று நெஞ்சில் ஒரு வலி காட்டிக் கொடுக்கிறது.

என்னுடைய நிலைப்பாடு இதுதான். என்னுடன் இந்த விஷயம் பற்றி வாய்வழியாக உரையாடியவர்களுக்கு இதை நான் எப்போதோ சொல்லியிருக்கிறேன். அதையே இங்கேயும் சொல்கிறேன். கே.பி. தான் எங்கள் அடுத்த தலைவர் என்று கை காட்ட ஒரே ஒருவருக்குத் தான் உரிமை உண்டு. அவரைப் பற்றிய பல விஷயங்களே புரியாத புதிராகிவிட்டன. அப்படி புதிராக முன் அவர் யாரையும் எங்கள் அடுத்த தலைவராகக் கை காட்டவில்லை. ஆகவே, கே.பி என்கிற, குமரன் பத்மநாதன் என்கிற செல்வராசா பத்மநாதனைப் பற்றி எனக்கு எந்தவிதமான அபிப்பிராயமும் இல்லை. பச்சோந்திகள் போல் நிறம் மாறும் ‘தமிழ் உணர்வாளர்கள்' சொல்வதால் மட்டும் அவர் தலைவனாக ஆகிவிட முடியாது.

டிஸ்கி: இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே. நிச்சயமாகப் பலரைக் காயப்படுத்தும். நான் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை. இந்தப் பதிவால் காயப்படுபவர்களில் ஒருவராவது சிந்தித்தால் போதும்.

பி.கு: நான் ஒன்றும் பெரிய அரசியல் விமர்சகன் அல்ல. மிகச் சாதாரணமான ஒரு பதிவன், ஒரு குடிமகன். இந்தச் சாதாரணமானவனின் குமுறல்தான் இது. So called தமிழ் உணர்வாளர்கள் இப்போது என்மீது பாய்வார்கள். அது பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. ஒரு நிலைப்பாட்டில் நிலையாக இருக்கமுடியாத இவர்களைப் பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை.

Friday, 24 July 2009

பீகார் கொடூரம்

பீகார் ஒரு கேடு கெட்ட மாநிலம் என்று பல செய்திகளில் படித்திருக்கிறேன். எந்தளவுக்குக் கேடுகெட்ட மாநிலம் என்பதை சமீபத்தில் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள் பீகாரிகள். ஒரு இளம் பெண்ணை, பட்டப் பகலில், நடு ரோட்டில், நூற்றுக்கணக்கன பீகாரிகளுக்கு மத்தியில், போலீஸாருக்கு முன்னால் வைத்து, ஆடைகளைக் கிழித்து நிர்வாணமக்கி அற்புதச் செயல் புரிந்திருக்கிறது ஒரு கும்பல். அது பற்றிய செய்தி வீடியோ YouTubeல் இருக்கிறது. அந்தக் காட்சியைப் படம்பிடித்த செய்தியாளரை விடுங்கள், ஒரு கேடு கெட்ட நாய் வீடியோ காமராவைத் தூக்கிக் கொண்டு அந்தப் பெண்ணின் முகத்தைப் படம்பிடிக்க ஓடுகிறது.

இந்தப் பெண்ணை வேலை வாங்கித் தருவதாகக் கூட்டிவந்த ராகேஷ்குமார் என்ற இளைஞன் தன் நண்பர்களுடன் சேர்ந்து இந்தப் பெண்ணைக் கற்பழிக்க முயன்றதாயும், அந்தப் பெண் அவர்களிடமிருந்து தப்பி வந்ததாயும், அவளைத் துரத்திப் பிடித்து, ஒரு ரிக்‌ஷாவில் ஏற்றி பட்னாவின் பரபரப்பான ஒரு வீதிக்குக் கொண்டுவந்து அவளை அடித்திருக்கிறார்கள். அந்த ரிக்‌ஷாவைப் பலர் துரத்தி வந்ததோடு சிலர் வீடியோ வேறு பிடித்தார்களாம். அரைமணி கழித்து வந்த போலீஸும் வேடிக்கை பார்த்தார்களாம். அப்ஸரா என்ற தியேட்டரைவிட்டு படம் முடிந்து வெளியே வந்த கூட்டத்துக்கு முன் வைத்து அவளை துகிலுரிந்திருக்கிறார்கள். அதை தியேட்டரிலிருந்து வந்த இளைஞர்கள் வேடிக்கை பார்த்ததோடு நிறுத்திக்கொள்ளாமல், அவர்களும் இணைந்து கொண்டார்களாம். ஒரு மணிநேரம் கழித்து போலீஸ் தலையிட்டு இந்தக் கேவலத்தை நிறுத்தினார்களாம்.

அதன் பின் போலீஸார் அந்தப் பெண்ணை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து இரண்டு மணிநேரம் விசாரணை நடத்தினார்களாம். மேற்படி நான்கு இளைஞர்களும் அந்தப் பெண் ஒரு விபசாரி என்றும் அவள் தங்களை ‘அது'க்கு அழைத்ததால் கோபமுற்றே இவ்வாறு நடந்துகொண்டதாயும் கூறினார்களாம். இந்த விஷயம் பற்றி விசாரணை நடத்த பிகார் முதல்வர் நித்தீஷ் குமார் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். பல மகளிர் அமைப்புகள் கோஷம் போட ஆரம்பித்திருக்கின்றன. எதிர்க்கட்சிகள் அரசியலாக்க முயல்கின்றன. மீடியாக்கள், என் போன்ற பதிவர்கள் என்று எல்லோரும் கூவிக் கூவி இந்த வீடியோவை விற்கிறோம். அவ்வளவுதான்.

ஐயா, அந்தப் பெண் விபசாரியாகவே இருக்கட்டும். அவள் இவர்களை விபசாரத்துக்கு அழைத்ததாகவே இருக்கட்டும். அந்த விஷயம் இந்த நாலு பேருக்கும்தானே தெரியும். ஒரு பொது ஆள் பார்வையில் ஒரு பெண்ணை நாலு பேர் துன்புறுத்துவதாகத் தானே தென்பட்டிருக்க வேண்டும். ஆனால் யாருமே, போலீஸ், மீடியா உட்பட யாருமே, அதைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லையே. அந்த நாலு இளைஞர்கள் மட்டுமா குற்றவாளிகள்? வேடிக்கை பார்த்த மற்றவர்கள்? இணைந்து கொண்ட மேலும் சிலர்? ஓடி ஓடி வீடியோ பிடிக்கும் அந்தக் கயவன்? பரபரப்புக்காக ‘லைவ்-கவெரேஜ்' செய்த மீடியா? போலீஸ்? எல்லாரும் குற்றவாளிகள் அல்லவா? ஒரு விபசாரியை இவ்வாறு மானபங்கப் படுத்தலாம் என்றால், நாளைக்கே ஒரு நல்ல பெண்ணையும் இதே போல் செய்து விபசாரிப்பட்டம் கட்ட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

இதெல்லாம் மீடியாவாலோ, அரசாலோ, அரச இயந்திரங்களாலோ, பொது நல அமைப்புக்களாலோ தீர்க்கப்படக்கூடிய விஷயமே அல்ல. மக்கள் விழிப்புணர்வு ரொம்பவே அவசியம். சாதாரண குடிமக்கள் போராடா வேண்டும். படங்களில் வருவது போல் மக்கள் போராட்டத்தை அவ்வளவு இலகுவில் அரச இயந்திரத்தால் அடக்கிவிட முடியாது. மலம் கலந்த தண்ணீர் பற்றி நம்முடைய பதிவர் ஒருவர் நிகழ்த்தும் தனிமனித போராட்டம் போல, மக்கள் இறங்கிப் போராட வேண்டும். மக்கள் போராட்டத்துக்கு அனேகமாக வெற்றி கிடைக்கும். சிலவேளை அது ‘தீவிரவாதம் என்று முத்திரை குத்தப்படலாம். ஜே.வி.பி செய்தது உரிமைப் போர், விடுதலைப் புலிகள் செய்தது பயங்கரவாதம் என்று, ஜே.வி.பி. கலகம் செய்த காலத்தில் ஒரு மனித உரிமை வழக்கறிஞராகப் போராடிய மகிந்த ராஜபக்ஸே சொன்னது போல், மக்கள் போராட்டம் சிலவேளை வடிவம் மாற்றப்பட்டு பிழையான முத்திரை குத்தப்படலாம். அதற்காக ஒதுங்கிப் போகக்கூடாது.

இந்த வீடியோவையும் பாருங்கள். Dining With Terrorists என்ற இலங்கை இனப்பிரச்சினை பற்றிய வித்தியாசமான ஒரு கோணம். இந்த வீடியோவுக்கு என்னை பதிவர் சக்திவேலின் இந்தியாவைப் பார்த்து மிரண்டுபோன ராஜபக்சே என்ற பதிவு இட்டுச்சென்றது. நன்றி சக்திவேல்.

Dining With Terrorists Divided Island
Part-1 Part-2

Friday, 10 July 2009

வைகோ என்றொரு கடுப்பு

வைகோ அல்லது வை. கோபல்சாமி பற்றி நான் முதன் முதலாகக் கவனிக்க ஆரம்பித்தது 1993ல் அவர் தி.மு.க. விலிருந்து விலகி (விலக்கப்பட்டு) ம.தி.மு.க. ஆரம்பித்த போதுதான். ரொம்ப சின்னவயதுதான் எனக்கு, இருந்தும் கருணாநிதி, ஜெயலலிதா, கபில்தேவ், அஸாருதீன் போன்ற பெயர்களெல்லாம் அப்பா மூலமாகப் பரிச்சயமாகியிருந்தது. கருணாநிதியின் பேச்சுக்களை அப்போ ஆல் இந்தியா ரேடியோவில் ஒலிபரப்பும் போதெல்லாம் கேட்டிருக்கிறேன், அப்பா பரிந்துரைத்ததால். அவரது தமிழ் நிஜமாயே என்னை அப்போ கட்டிப்போட்டிருந்தது. அந்த சின்ன வயதிலேயே ஜெயலலிதா என்றால் ரொம்பக் கெட்டவர் என்ற ஒரு விம்பமும் என் மனதில் விழுந்தது. கருணாநிதியை விட்டுப் பிரிந்த, அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை அடுக்கிய வைகோவை எனக்கு அறவே பிடிக்கவில்லை. அந்த வெறுப்பே அவரைப்பற்றிய செய்திகளைக் கூர்ந்து கவனிக்க வைத்தது.

வைகோ மீதான அதீத வெறுப்பு அற்புதமான ஒரு விருப்பாக மாறக் காரணம், திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் ஒருமுறை ஒலிபரப்பிய வைகோவின் பேச்சு ஒன்று. அப்பா கேட்டுக்கொண்டிருந்தார். அந்தப் தலைப்புக் கூடத் தெரியாது எனக்கு, இருந்தும் ஏதோ ஒன்று ஈர்த்தது. அழகு தமிழா? கம்பீரக் குரலா? இல்லை இரண்டுமா? தெரியவில்லை. ‘ஆரப்பா பேசுறது?' என்றேன். ‘வைகோ' என்றார் அப்பா. சண்டைக்காரனாக மட்டும் அதுவரை மனதில் நின்ற வைகோவின் புதுமுகம் ஏனோ எனக்கு ரொம்பவே பிடித்துப்போனது. ஈழ விடுதலை பற்றிய அவரது கருத்துக்கள், மற்றும் அவரது போராட்ட உணர்வு அவரை மேலும் உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கச் சொன்னது. வெள்ளை வேட்டி சட்டை, கறுப்புத் துண்டு என்று கம்பீரமாக வைகோ நிற்கும் போஸ்களை விகடன், குமுதத்திலிருந்து வெட்டிச் சேர்க்குமளவுக்கு ஆதர்சமானார்.

வைகோவின் தூய்மையான விம்பத்தில் விழுந்த முதல் கறை அவர் முதன் முதலாக ஜெயலலிதாவுடன் சேர்ந்தபோது. ஊழலைக் கண்டித்து, வாரிசு அரசியலுக்கு எதிரானவராகத் தன்னைக் காட்டிக்கொண்டு வெளியேறிய போராளி வைகோ அரசியல் காரணங்கள் என்ற சப்பைக்கட்டு கட்டி ஊழல் ராணியின் தர்பார் புகுந்தது மிகவும் வருத்தம் தந்தது. பின் தன்மீது தானே சேறு பூசுவது போல் மீண்டும் கருணாநிதியோடு சேர்ந்தார். அப்படி சேர்ந்தது அவரை பொடா சட்டத்தில் ஜெயலலிதா அரசு 18 மாதம் (விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார் என்பதெல்லாம் ஒரு கண் துடைப்புக் காரணம்) சிறைக்குள் தள்ளக் காரணமாயிருந்தது. கருணாநிதியும் வைகோவும் நெடுந்தொடர் இயக்குனர்களால்கூட சிந்திக்கமுடியாத செண்டிமெண்ட் காட்சிகளை அரசியல் மேடையில் அரங்கேற்றினார்கள். சரி, இப்போதாவது ஜெயலலிதாவைப் பற்றிப் புரிந்து கொண்டாரே என்று நிம்மதி கொண்டாலும், இந்த மீள் இணைப்பு ஏனோ சந்தோஷம் தரவில்லை எனக்கு.

சில காலத்துக்குப் பின் நான் ஒரு கொள்கை ரீதியான அரசியல்வாதியே அல்ல. நானும் கருணாநிதி, ஜெயலலிதா வரிசையில் வரும் அடுத்த மட்டமான தமிழ்நாட்டு அரசியல்வாதிதான் என்று வைகோ தெள்ளத் தெளிவாக அறிவித்தார், மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்ததன் மூலம். தேர்தல் ராஜதந்திரம் அது இது என்று சப்பைக்கட்டு கட்டினாலும், வைகோவின் செல்வாக்கு அடியோடு பறிபோனது. மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகவும் விழுந்தது. அரசியல் ரீதியாக எந்தக் கொள்கையும், தன்னை நம்பி ஓட்டுப்போடும் மக்களுக்கு எந்த விதமான நல்ல திட்டங்களும் இல்லாத வைகோ, ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் நேர்மையாக இருந்தார், அல்லது நேர்மையானவர் போல் காட்டிக்கொண்டார். அது ஈழ விடுதலை பற்றிய அவரது கருத்து. எப்போதும், எந்த அரசாங்கம் ஆண்டாலும், எந்த சட்டம் பாய்ந்தாலும் ஈழப்பிரச்சினை பற்றி உறுதியாகக் குரல்கொடுத்து வந்தார் வைகோ. அது உண்மையிலேயே உணர்வு காரணமாக, ஈழத்தமிழன் மீதான அன்பு காரணமான குரலாக தென்பட்டது. ஆனால் சமீபத்திய பாராளுமன்றத் தேர்தலில் அந்த எண்ணத்த்திலும் நாற்பது லோட் மண்ணை அள்ளிப்போட்டார் வைகோ.

தேர்தல் காலத்தில் ஈழப்போரும் ஒரு முக்கியமான கட்டத்தில் இருந்தது. அதை வைகோ தனது அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்த ஆரம்பித்தார். ஈழத்தமிழர் பற்றிய கூட்டங்களில்கூட கருணாநிதியை வசைபாடுவதையும், ஜெயலலிதா புகழ் பாடுவதையும் தலையாய பணியாய்க் கொண்டார். ஈழப்பிரச்சினை பற்றி தமிழ்நாட்டு மக்களிடமிருந்த நேர்மையானதும், அடிமனதிலிருந்து எழுந்ததுமான பாச உணர்வை தம் வாக்குகளாக மாற்ற கொஞ்சம் கூட ரோஷமே இல்லாமல் கருணாநிதி கூட்டணி, ஜெயலலிதா கூட்டணி, ராமதாசு என்று எல்லோருமே செய்த கேவலமான வேலையை வைகோவும் செய்தார். ஆனால் பாவம் இவரது சந்தர்ப்பவாதம் விலைபோகவில்லை. எங்களுக்கு எத்தனையோ விதத்தில் ஆதரவாக இருந்த வைகோ சமீபகாலங்களில் தான் கொள்கையில்லாத அரசியல்வாதி மட்டுமல்ல, மண்டைக்குள் மூளையே இல்லாத, பகுத்தறியும் தன்மை இல்லாத, உணர்ச்சி இல்லாத ஆறறிவில் ஓரறிவு கூட இல்லாத மனிதனாகத் தன்னைக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

ஒற்றை நூலில் உயிரைக்கட்டி ஈழ மக்கள் முகாம்களில் அடைபட்டிருக்க இங்கே இருந்து கொண்டு இவர் விடும் அறிக்கைகள், இவர் கொடுக்கும் பேட்டிகள், இவரது பேச்சுக்கள் எல்லாமே இலங்கை அரசாங்கத்தைக் கடுப்பேத்துவதாகவே அமைந்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. சில விஷயங்களை சொல்லி நம்மை உணர்வாளனாகக் காட்டிக்கொள்வதை விட, சொல்லாமல் இருப்பது எவ்வளவோ நல்லது என்பதை யாராவது இவருக்குச் சொல்லவேண்டும். அது சரி, தமிழ் நாட்டில், தன் தொகுதியில் இருக்கும் தமிழனுக்கு என்ன பிரச்சினை என்று தெரியாத இவரெல்லாம் கடல் கடந்து இருக்கும் ஈழத்தமிழருக்கு ஆதரவாகப் பேசியபோதே இவர் ஈழப்பிரச்சினையை தனது அரசியல் இருப்பைக் காட்டுவதற்காகவே பயன்படுத்துகிறார் என்பது, போராட்டம் தோற்க முன்னும் தெரியவில்லை, தோற்ற பின்னும் புரியவில்லை எம்மவர்க்கு. பாவம், வைகோவின் உணர்ச்சிப் பேட்டிகளை வலைத்தளங்களில் பரப்பி பெருமைப்படுகிறார்கள், தங்கள் ரத்த சொந்தங்களுக்கு தாங்களே ஆப்பு வைக்கிறோம் என்பது புரியாமல்.

Wednesday, 8 July 2009

'A' ஜோக் சொன்னால் குற்றமா?

வயது வந்தவர்களுக்கான ஜோக் சொன்னால் அது ஏதோ செய்யக்கூடாத செயல் என்பது போல் குதிக்கிறார்கள் பலர். அண்மையில் நான் 'வயாகரா தாத்தா சொன்ன விபரீதக் கதைகள்' என்ற தலைப்பில் விகடனில் சிறிது காலத்துக்கு முன்னர் வந்த ஜோக் ஒன்றைப் பதிவிட்டேன். அப்போது ஒரு பின்னூட்டம் ஒன்றில் ஒரு நண்பர் ‘விகடன் வியாபாரத்துக்காக அதைச் செய்தது. அதையே செய்து நீங்களும் அதே குப்பைதான் என்று காட்டிவிட்டீர்கள்' என்று பின்னூட்டம் இட்டிருந்தார். இதேபோல் கேபிளாரின் ‘கொத்து பரோட்டா'வுக்கும் கண்டனப் பின்னூட்டங்கள் வருவதைக் கவனித்திருக்கிறேன். எனக்கு ஒன்று மட்டும் புரியவேயில்லை, இப்படியான ஜோக்குகள் சொல்வது தப்பா?

என்னைக் குப்பை என்று சொன்ன பதிவரைப்பற்றி எனது மனதில் சில கேள்விகள் எழுந்தன. என்னுடைய பதிவின் தலைப்பு ‘வயாகரா தாத்தா (18+)' என்பதாகவே இருந்தது. அத்துடன் அந்த பதிவுக்கான படத்தில் கூட கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று தெளிவாகப் போட்டிருந்தேன். இப்படி ஒரு உங்கள் வார்த்தையில் ‘குப்பை மேட்டர்' என்பதற்கான அத்தனை அறிகுறிகள் இருந்தும் ஏன் அந்தப் பதிவுக்குள் நுழையவேண்டும்? நான் பதிவைப் படிக்கவில்லை, கண்டன பின்னூட்டம் மட்டும் போடவே வந்தேன் என்று சப்பைக்கட்டு கட்டாதீர்கள். உங்களுக்கெல்லாம் உள்ளூர இப்படியான மேட்டர் எல்லாம் வாசிக்கும், எழுதும், பேசும், செய்யும் ஆசை இருக்கவே இருக்கிறது. ஆனால், மற்றவன் வாசித்தாலோ, எழுதினாலோ, பேசினாலோ, செய்தாலோ குய்யோ முறையோ என்று குதிப்பீர்கள். எந்த ஊர் நியாயம் ஐயா இது? இதில் பெரிய காமெடி என்னவென்றால், பின்னூட்டம் போட்ட வெண்மையான காட்டிலிருந்து வந்தவர் இதுவரைக்கும் நான் எழுதிய வேறெந்தப் பதிவுகளின் பக்கமும் தலைவைத்தே படுக்கவில்லை. வயது வந்தவர்களுக்கான ஜோக் என்றதும் எலும்பு கண்ட நாய் மாதிரி ஓடிவந்து விட்டு, 'நான் உத்தமனுங்கோ.. எல்லாரும் நம்புங்கோ' என்கிறார்.

கேபிளாருக்கு நடக்கும் கொடுமை இதைவிட மோசம். கேபிளாரின் வலைப்பூவுக்கு வரும் புதிய வாசகர்கள் திட்டினாற்கூட பரவாயில்லை. அவரது பதிவுகளைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்களே திட்டித் தீர்க்கிறார்கள். அதிலும் புதிது புதிதாக User Id எல்லாம் உருவாக்கி வந்து மொத்துகிறார்கள். மயாதி, மயில் போன்ற சிலர் மட்டுமே தாங்கள் இப்படியான ஜோக்குகளைப் பிரசுரிப்பதைக் கண்டிக்கவில்லை என்றும், இப்படியான பதிவுகளைப் வாசிக்கும்போது கொஞ்சம் எச்சரிக்கையாக வாசகர்கள் இருப்பதற்கு ஏதுவாக ஏதாவது அறிவிப்புகளை (18+, வயது வந்தவர்களுக்கு மட்டும்) தருமாறும் உருப்படியாகப் பின்னூட்டம் போட்டிருக்கிறார்கள். அவர்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது. ஆனால், ‘இது ஒரு மாதிரி பதிவு' என்று கூவிக் கூவி பதிவிட்டாலும், உள்ளே வந்து வாசித்துவிட்டு தங்களை உத்தமராகக் காட்டிக்கொள்ள பின்னூட்டம் போட்டுக் கொல்லும் சிலரை என்ன செய்யமுடியும்?

வயது வந்தவர்களுக்கான உரையாடல்களும் கதையாடல்களும் சமூகத்தில் மலிந்திருக்கின்றன. இலைமறைகாயாக சொல்லப்படும் பல பச்சைப் பேச்சுக்களை நான் பல பெரிசுகள் பேசக் கேட்டிருக்கிறேன். ‘கோழி' என்ற சொல்லுக்குரிய கொச்சை அர்த்தம் மிகச் சாதாரணமாக பல இடங்களில் பயன்படக் கண்டிருக்கிறேன். இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று இருந்த பலரின் மறுபக்கங்களையும் கண்டிருக்கிறேன். நிர்வாணக் காட்சிகள் வரும் படங்கள் என்றாலே ஏதோ அருவருக்கத்தக்க கேவலங்கள் என்ற மாதிரிப் பேசுபவர்களும் உண்டு (நான்கூடப் பேசியிருக்கிறேன்). ஆனால் இயல்பாய் இருப்பது எப்படி என்று அனுபவம் சொல்லிய பாடங்களின் பின்பு, அப்படி அதைப் பார்க்கமாட்டேன் இதைக் கேட்கமாட்டேன் என்று சொல்வதெல்லாம் வெளியுலகுக்கு எங்களை உத்தமனாகக் காட்ட முயலும் ஒரு கேவலமான வித்தை என்பதைப் புரிந்துகொண்டேன். எல்லோருக்கும் உள்ளூர ஆசை இருக்கும், ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளமாட்டார்கள்.

காமம் என்பது தீண்டாப் பொருளா? மனிதகுலத்தின் உயிர்நாடியே அதுதானே? பின் ஏன் அதுபற்றிப் பேசினால் மட்டும் முகம் சுழிக்கிறார்கள்? வள்ளுவரை எல்லோரும் ஏற்றுக்கொண்டு விட்டோம், அவரைப்பற்றி எல்லோருமே சிறப்பாகச் சொல்கிறார்கள். ஆனால் கூட, அவர்கூட உலகப் பொதுமறை என்றழைக்கும் திருக்குறளில் காமம் பேசியிருக்கிறாரே? ஏன் காமத்தைப் பற்றிச் சொன்னால் துள்ளிக்குதிக்கிறீர்கள்? சமீபத்தில் ‘ஈழத்து நாட்டார் பாடல்கள்' என்று ஒரு புத்தகம் படித்தேன். அதில் காதல் பாடல்களில் சொல்லப்பட்டிருக்கும் சில ‘மேட்டர்'களோடு ஒப்பிடும்போது நான் சொன்ன ஜோக் என்ன, கேபிளார் சொன்ன பச்சை ஜோக்குகள் கூட ஜுஜுபி. என்னைத் திட்டிய நண்பர் போனற மற்றவர்களையெல்லாம் நான் கேட்பது இதுதான், 'இயல்பாக இருங்கள், உத்தமர் போல் நடிக்காதீர்கள்'. உங்களை எல்லாம் பார்க்கும்போது தான் கண்ணை மூடிக்கொண்டு பால் குடித்தால் யாருக்குமே தான் பால்குடித்தது தெரியவே தெரியாது என்று நினைக்கும் பூனைக்கதை ஞாபகம் வருகிறது.

Tuesday, 23 June 2009

புலிக்குட்டியின் குட்டி

எங்களது பாடசாலையில் 90களிலும் 2000ங்களின் சில பகுதிகளிலும் படித்த மாணவர்களுக்கு புலிக்குட்டியின் குட்டியைத் தெரியாமல் இருக்காது. வேதியியல் பயிற்றுவித்த குட்டி அது. அந்தக் குட்டியின் கோபத்துக்கு பள்ளிக்கூடமே நடுங்கும். நீதி, நேர்மை, நியாயம், ஒழுக்கம், கட்டுப்பாடு இவையெல்லாவற்றிலும் குட்டிக்கு நிகர் குட்டியேதான். 'பரவாயில்லை' என்ற சொல்லை குட்டி ‘பரவேல்லை' என்று உச்சரிக்கும். குட்டியின் தகப்பனும் ஒரு வாத்தியார்தான். அவரது உள்ளங்கை கூடக் கறுப்பாய் இருக்கும் என்பதால் அவரைப் புலிக்குட்டி என்று அழைத்ததாக அவரிடம் படித்த எனது அப்பா அடிக்கடி கூறுவார். புலிக்குட்டியின் குட்டியிடம்தான் நாங்கள் பயின்றோம். குட்டியின் மேற்கூறிய குணங்களைவிட குட்டியின் இன்னொருமுகம் மாணவர்மத்தியில் மிகவும் பிரபலம்.

குட்டி தனது சேவைக்காலத்தில் உப-அதிபராகப் பலகாலம் பணியாற்றியவர். குட்டியிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் இருந்தது. அவர் 'இயக்கம்' பற்றிப் பேச ஆரம்பித்தால் எல்லாவற்றையும் மறந்து விடுவார். அப்படிப் பட்ட ஆதரவாளர் அவர். தன் வீர சாகசங்கள் பற்றியெல்லாம் சொல்வார். தன்னை இந்திய ராணுவம் பின்னால் 30 வண்டிகள் முன்னால் 30 வண்டிகள் பாதுகாப்புக்கு வர கைது செய்து அழைத்துச் சென்றதாக ஒரு கதையை அடிக்கடி மாணவர் தலைவர்களுக்கான கூட்டத்தில் சொல்வார். வேதியியல் படிப்பித்ததை விட குட்டி தனது சுய புராணம் பாடியதே அதிகம். அவரது சுயபுராணம் எல்லாம் நம்பும்படி இருக்கும். ஒரு முறை அவரைச் சிங்கள ராணுவம் கைது செய்து மிக மோசமாகத் தாக்கி விசாரித்துக்கூட இருக்கிறது. அதனால் அவர் சொல்லும் சில கதைகள் உண்மையாய் இருக்கலாம் (அவர் பாணியில், இருக்கல்லாம்) என்று கூட நம்பினோம். தலைவரைக்கூட சைக்கிளில் போய் சந்தித்து வரும் அளவிற்கு தனக்கு செல்வாக்கு இருப்பதாகப் புலிக்குட்டி பெற்ற குட்டியின் கதைகள் இருக்கும். இந்நிலையில் தான் புலிக்குட்டி பெற்ற குட்டி தான் ஒரு பூனைக்குட்டி என்ற சுயரூபத்தை எங்களுக்குக் காட்டியது.

2003ன் பிற்பகுதி. மாணவர் அமைப்பின் பாடசாலைச் செயலாளராக நான் பணியாற்றிய காலம். புலிக்குட்டியின் குட்டிதான் எமக்குப் பொறுப்பான ஆசிரியர். தர்சனிடம் செய்தி அனுப்பினார். தமிழ்ச்செல்வன் அண்ணாவைச் சந்திக்க மாணவர் அமைப்புக்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. வழமையாக இப்படியான நிகழ்ச்சிகளுக்கு எங்களைப் போகவிடாமல் தடுக்கும் தர்சன் தான் வராமல் எங்களில் நால்வரைத் தேர்ந்தெடுத்துப் போகச்சொன்னான். வதிரியில் சிறப்பு பஸ் எடுத்துப் போக வேண்டும், பாடசாலைச் சீருடையில். இவ்வளவு தான் சொன்னான். தமிழ்ச்செல்வன் அண்ணாவை எங்கே சந்திப்போம் என்று எமக்குத் தெரியாது. யாழ்ப்பாணம் நகரில் என்றுதான் நினைத்துப் புறப்பட்டோம். எங்களோடு குட்டியும் வந்தது. பஸ் வதிரியிலிருந்து நெல்லியடிச் சந்திவந்து யாழ்ப்பாணம் போகும் திசையில் போகாமல் கொடிகாமம் நோக்கித் திரும்பிய போதுதான் உண்மை உறைத்தது. நாங்கள் வன்னிக்குப் போகிறோம் என்று.

வன்னிக்குப் போவது ஒரு பெரிய பிரச்சனையே அல்ல. ஆனால், பாடசாலைச் சீருடையில் இராணுவக் காவலரண்களை முகமாலையில் கடந்து செல்வதுதான் பிரச்சினை. அதுவும் நாங்கள் 4 பேர் மட்டும்தான் மாணவர்கள். குட்டியிடம் ஆலோசனை கேட்டோம். வழியில் இறக்கிவிடுங்கள் நாங்கள் திரும்பிப் போய் உடை மாற்றிக்கொண்டு அடுத்த பஸ்ஸில் வந்து விடுகிறோம் என்றோம். ‘அதெல்லாம் பரவேல்லை. ஒருத்தரும் ஒண்டும் பிடுங்க மாட்டினம்' என்றது குட்டி. குட்டியிருக்கப் பயமேன் என்று சொல்லி பயணம் தொடர்ந்தோம். முகமாலையிலும் சிக்கல் இல்லாமல் எம்மைப் பரிசோதித்து பஸ்ஸில் ஏறச் சொன்னான் ஒரு ராணுவ வீரன். பஸ் புறப்பட்டு நான்கு ஐந்து மீட்டர் உருண்டிருக்காது, ‘அடோ...அடோ' என்று கத்தியபடி துப்பாக்கிகளுடன் மூன்று ராணுவத்தினர் ஓடிவந்து பஸ்ஸை நிறுத்தினார்கள். 'அடோ... நாலு பேரும் இறங்கு' என்றார்கள் எம்மைப்பார்த்து. நாம் போய் விடுதலைப்புலிகளுடன் இணந்து விடுவோம் என்ற சந்தேகம் அவர்களுக்கு. அதுவும் பாடசாலைச் சீருடையில் புலிகள் ஆட்சேர்ப்புச் செய்கிறார்களோ என்ற வலுவான சந்தேகம் அவர்களுக்கு. வயிற்றில் பயப்பந்து உருள குட்டியை நோக்கினேன். குட்டி இதற்கும் தனக்கும் சம்பந்தமில்லாதது போல் பாவனை செய்தபடி ஜன்னல் வழியே பாவனை செய்தது. கூடவே பயணித்த மற்றவர்கள், ‘இறங்குங்கோ தம்பிமார், கெதியா' என்று அவசரப்படுத்தினார்கள். எங்களை இறக்கி விட்டு போகுமாறு ராணுவமும் சொல்ல, கூடவந்தவர்களும் அதையே சொன்னார்கள். புலிக்குட்டி பெற்ற குட்டி ஒரு வார்த்தை பேசாமல் பதுங்கியது.

எங்களுக்கு உயிர்ப்பயம் பிடித்துக் கொண்டது. எம் இன மக்கள், எமக்குப் படிப்பித்த வாத்தி எல்லோரும் எங்களைக் கைவிட்டுவிட்டனர். 'இறங்குங்கோடா கெதியா' குரல்களில் உஷ்ணம் கூடியது. அப்போதான் அந்த பஸ் ட்ரைவர் இராணுவத்திடம் பேசினார். ‘மாத்தையா (சிங்களத்தில் சகோதரன் என்று நினைக்கிறேன்), மீட்டிங் போறம். இப்ப இவையளிண்ட ஐ. சி. (அடையாள அட்டை) வாங்கிக்கொண்டு விடுங்க. திரும்பி வரேக்க நாலுபேரையும் கூட்டிக் கொண்டு வாரது எண்ட பொறுப்பு' என்று துணிந்து பேசினார். அவர் அடிக்கடி அந்த வழியால் பேரூந்து ஓட்டுபவர் என்பதால் அவரது உத்தரவாதம் செல்லுபடியானது. எங்கள் நால்வரது அடையாள அட்டையுடன் தன்னுடைய அடையாள அட்டை, சாரதி அனுமதிப் பத்திரம் ஆகியவற்றைப் பிணையாக வைத்து, உயரதிகாரிகளுடன் தனக்குத்தெரிந்த சிங்களத்தில் எங்களுக்காக வக்காலத்து வாங்கி எங்களைப் பளை சென்று சேர்த்தார். ராணுவத்துக்குச் சொன்னது போலவே மீண்டும் யாழ்ப்பாணம் கூட்டியும் வந்தார். எங்கள் அடையாள அட்டைகளையும் மீட்டுத் தந்தார்.

தமிழ்ச்செல்வன் அண்ணாவுடனான கூட்டத்தில் புலிக்குட்டி பெற்ற குட்டியின் சுயரூபம் தெரிந்தது. அவரை யாருமே கண்டு கொள்ளவில்லை. இவரிடம் படித்த சிலபேர் மேலிடத்துக்கு நெருக்கமாய் இருந்தார்கள். ஆனால் அவர்கள் இவருக்கு ஒரு ஆசிரியர் என்ற மரியாதை மட்டுமே கொடுத்தார்கள். இவருக்கு பெரிய தலைகளை நிஜமாயே தெரியாதாம். சும்மா ரீல் ஓட்டியிருக்கிறார் எங்களிடம். இவரது ரீலைக் கேட்டு பலபேர் இயக்கத்தில் சேர, தன்னைத் தானே ஒரு பிரசார்ப் பீரங்கி என நினைத்துக் கொண்டார் இவர். மற்றபடி இவருக்கு எந்த செல்வாக்குமே இருக்கவில்லை. மொத்தத்தில் புலிக்குட்டி பெற்ற குட்டி ஒரு ‘புலித்தோல் போர்த்திய பசு'.

வெறுத்துப் போய் பளையிலிருந்து திரும்பி புறப்பட்ட வதிரிச் சந்தியில் இறங்கும்போது ட்ரைவர் எங்கள் நால்வரையும் கூப்பிட்டு உரக்கச் சொன்னார்.. ‘இனிமே எந்தப் பு....மகனையும் நம்பி இப்பிடி அலைஞ்சீங்கள், பஸ் ஏத்திக் கொல்லுவண்டா உங்களை. நாலு குலக்கொழுந்துகளை ஆமி கண்ணுக்கு முன்னால கூட்டீற்றுப் போக வெளிக்கிட நீங்கள் செத்தாலும் பரவாயில்லை தங்களுக்குத் தொல்லை இருக்கக் கூடாது எண்டு நினைச்ச இந்த நாயளை நம்பி இனி ஒரு இடமும் நீங்கள் போகக்கூடாது' என்று ஆவேசமாகத்திட்டி விட்டு எங்களோடு வந்த அனைவரையும் சுட்டெரிப்பது போல் ஒரு பார்வை பார்த்தார். அந்தப் பார்வை புலிக்குட்டி பெற்ற குட்டியைச் சுட்டிருக்கவேண்டும். ஏற்கனவே கர்ண கடூரமான அந்த முகம் இன்னும் சிறுத்துக் கறுத்திருந்தது.

அதற்குப் பிறகு மாணவர் அமைப்பிலிருந்து நாங்கள் நால்வரும் விலகிக் கொண்டோம். உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாங்கள் இணைந்த அந்த அமைப்பில் மேற்படி சம்பவத்துக்குப் பிறகும் தொடர்ந்து நீடிக்க என் பகுத்தறிவு இடம் கொடுக்கவில்லை. எங்களைத் தெரியாத பலர் எம்மை அன்று தடைகளாகப் பார்த்தனர், தம் இனத்தைச் சேர்ந்த வாழ்வேண்டிய இளைஞர்கள் என்பதையும் மறந்து. எம்மை ஊக்குவித்து, உணர்வூட்டிய புலிக்குட்டியின் குட்டி கூட எங்களை நிராதரவாய் விட்டது. எங்களை அன்றுதான் முதல் முதலில் பார்த்த ட்ரைவர் சம்யோசிதமாகச் செயற்பட்டு எம்மைக் காப்பாற்றினார். அன்றுதான் தீர்மானித்தேன், மனசு சொல்வதைவிட அறிவு சொல்லும் வழியில் போவது எவ்வளவோ மேல் என்று.

Monday, 22 June 2009

நடுநிலை மேதாவிகள்

சமீபத்தில் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்காக வைரமுத்து எழுதிய இரண்டு பாடல்கள் பிடித்திருந்ததால் ஒரு பதிவு போட்டேன். உடனே நான் ஈழப்பிரச்சனைக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான தீர்வைச் சொல்லிவிட்டேன் என்று சொல்லி ஒரு அதி மேதாவி ஒரு பின்னூட்டம் போட்டார். அந்த அனானி நண்பருக்காக இந்தப் பதிவு. வைரமுத்து பற்றிய பதிவை இங்கே வாசியுங்கள்.

அனானி நடுநிலை மேதாவியின் பின்னூட்டம் இது:
///இதே வைரமுத்து சிங்களவராக பிறந்திருந்தால், புத்தரும் பூமியும் என்று எழுதி பணமும், பெயரும், புகழும் சம்பாதித்து இருப்பார்....
கவிஞர்கள் மற்றும் கலைஞர்கள் (cinema) எல்லோரும் உணர்ச்சி மிகுந்தவர்கள்.. உணர்ச்சி இல்லையேல் அவர்கள் நல்ல படைப்பாளியாகாவே இருக்க முடியாது.. இது மாதிரியான கலை கூத்தாடிகளின் உணர்ச்சி மிகுந்த பேச்சு, பாட்டு, கவிதை என்பதெல்லாம் ஈழதமிழ் பிரச்சனைகளுக்கு முடிவே வராது...
சர்வேதச அரசியல் மற்றும் ராஜாங்க பரிபாலனங்கள் மூலமாகவே ஒரு தீர்வை எட்ட முடியும்... ஓரளவு படித்த மனிதர்களுக்கே புரியும் விஷயமிது... ஆனால் தாங்களை போல படித்தவர்களுக்கு புரியாததேன்...
காரணம்: உணர்ச்சி பூர்வமகாவே பிரச்சனையை அணுகுவதுதான்... அதுதான் தமிழினத்தின் குறைபாடு...
குறிப்பு: இதையும் தாங்கள் ஒத்துகொள்ள மாட்டீர்கள்.///

போயும் போயும் ஒரு கவிதை நன்றாக இருக்கிறது என்று பதிவு போட்டால் தன் பெயரைக்கூட வெளியே சொல்லப் பயந்து நடுங்கும் அந்த நடுநிலை மேதாவி ஏதோ நான் சினிமாக் கவிஞர்களும் கலைஞர்களும், அவர்கள் காட்டும் உணர்ச்சியும் அவர்களின் உணர்வு பூர்வமான பேச்சுகளும்தான் ஈழப்பிரச்சினைக்குத் தீர்வென்று சொன்னது போல் துள்ளிக் குதித்திருந்தார். மேற்படி பதிவில் இப்படி பாட்டு, கூத்து, கவிதை என்பனதான் ஈழப்பிரச்சினைக்கு தீர்வு என்று எங்காவது சொல்லியிருக்கிறேனா. விமர்சனத்துக்கும் நிந்தனைக்கும் வித்தியாசம் தெரியாமல், நிந்தனையே தொழிலாக இருப்பவர்கள்தான் இப்படிப்பட்ட நடுநிலை மேதாவிகள். தங்கள் அவரது மனதில் வேணுமானால் அப்படி ஒரு கருத்து இருந்திருக்கலாம். அதனால்தான் ஒரு கவிதையய் ரசித்துப் போட்ட பதிவு கூட அவருக்குள்ளே வேறு அர்த்தங்களை எல்லாம் கொண்டு வந்திருக்கிறது. இதைத்தான் எங்கள் ஊரில் ‘கருத்துக்குள் குருத்தெடுப்பது' என்று கூறுவார்கள்.

இவரின் கருத்துக்குள் குருத்தை படித்தவுடனே எனக்கு நண்பன் ஆதிரை 'அப்போது நீங்கள் வெட்கித் தலைகுனிந்து நிற்பீர்கள்' என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த,‘சர்வதேச அரசியல் மற்றும் ராஜாங்க பரிபாலனம்' பற்றிப் பேசும் மேதாவிகள் பற்றிய கௌதமாலா போராளி ஒருவனின் கவிதையின் தமிழாக்கம்தான் நினைவுக்கு வந்தது. மேற்படி அனானி மேதாவி இதையும் படிக்கட்டும்.. அதேசமயம் என் முன்னைய பதிவுகளையும் படிக்கட்டும். உணர்ச்சிக்கு அறிவை அடகு வைக்கக்கூடாது என்று எனக்கு உணர்த்திய ஒரு சம்பவம் பற்றி நான் இடப்போகும் எதிர்காலப் பதிவையும் படிக்கட்டும். (ஆதிரை பதித்த இந்தக் கவி எனக்கும் என்போன்ற பலருக்கும் கூட ஒரு சாட்டையடி. அதை நான் வேண்டி விரும்பி ஏற்றுக்கொள்வேன்)

உணர்ச்சிக்கு அறிவை அடகுவைப்பது பற்றி நான் எனது முன்னைய சில பதிவுகளில் கூடக் குறிப்பிட்டு வருந்தியிருந்தேன். அனானி நடுநிலை மேதாவி அவற்றையும் வாசிக்கலாம்.
முதல் பதிவு: ஒரு பேப்பர். முட்டாள்தனத்தின் மறுபெயர்.
இரண்டாம் பதிவு: மனதில் பட்டவை- 1



ஒரு நாள்
என் தேசத்தின்
நடுநிலை மேதாவிகள்
சாதரண மனிதர்களால்
விசாரிக்கப்படுவார்கள்.

"உங்கள் தேசம்
மெதுவாக
மரணமடைந்து கொண்டிருந்த போது
தனியே ஒதுங்கி நிற்கும்
ஒரு அழகிய தீயைப் போல . ..
நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ?"
என்று கேள்வி கேட்கப்படுவார்கள்.

நடுநிலை மேதாவிகளே ...

உங்கள் உடைகளைப் பற்றி ....
மதிய உணவிற்கு பின்
உங்கள் குட்டி தூக்கத்தைப் பற்றி....
அவர்கள் கேட்கப் போவது இல்லை

"ஒன்றுமில்லாததின் உள்ளடக்கம்" பற்றிய
உங்கள் உப்பு சப்பற்ற விவாதங்களை...
அவர்கள் தெரிந்துகொள்ளப் போவதில்லை

உங்கள் வருமானம் குறித்து...
மிகுந்த பட்டறிவு குறித்து.....
அவர்களுக்கு கவலை இல்லை

கேள்விகள்
கிரேக்க மெய்ஞானத்திலிருந்தோ
அல்லது
உங்களில் ஒருவன்
மரணமடைந்து கொண்டிருந்த போது
'உங்கள் கேவலமான சொந்த நலனுக்காக'
மௌனம் காத்தது பற்றியோ....
இருக்கப் போவதில்லை

பொய்களின் நிழலில் பிறந்த
உங்கள் வியாக்கியானங்கள் தொடர்பாக
அவர்கள் ஒன்றுமே கேட்கப் போவதில்லை

ஒரு நாளில்
அந்த சாதாரண மனிதன் வருவான்...!

மேதாவிகளின்
புத்தகங்களிலும் கவிதைகளிலும் காணப்படாத
ஆனால்
தினமும் அவர்களுக்கு
அரிசியும் பாலும்
ரொட்டியும் முட்டையும்
கொடுத்த
அவர்களின் ரதங்களை ஓட்டிய
அவர்களின் நாய்களையும் தோட்டங்களையும் கவனித்த
அவர்களுக்காய் உழைத்த
அந்த சாதரண மனிதன் கேட்பான்

"என் போன்ற ஏழைகள்
தன் வாழ்க்கையையும் காதலையும் தொலைத்து
துன்பத்தில் உழன்று கொண்டிருந்த போது ...
நடுநிலை மேதாவிகளே !!!
நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?"

என் இனிய தேசத்தின்
நடுநிலை மேதாவிகளே
உங்களால் பதில் சொல்ல முடியாது!

அப்போது
மௌனம் எனும் கழுகுகள் வந்து
உங்கள் குரல்வளையை கவ்வும்!

உங்கள் பாவங்கள்
உங்கள் ஆன்மாவையே தூக்கிச்செல்லும்!

"அந்தக் கேள்வியின் முன்
நீங்கள் ஒரு நிமிடம் வெட்கித் தலைகுனிந்து
கூனிக் குறுகி நிற்பீர்கள் "

-ஓட்டோ ரேனே காஸ்டில்லோ (கௌதமாலா கொரில்லா போராளி)

நன்றி: ஆதிரை