Monday 22 June 2009

நடுநிலை மேதாவிகள்

சமீபத்தில் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்காக வைரமுத்து எழுதிய இரண்டு பாடல்கள் பிடித்திருந்ததால் ஒரு பதிவு போட்டேன். உடனே நான் ஈழப்பிரச்சனைக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான தீர்வைச் சொல்லிவிட்டேன் என்று சொல்லி ஒரு அதி மேதாவி ஒரு பின்னூட்டம் போட்டார். அந்த அனானி நண்பருக்காக இந்தப் பதிவு. வைரமுத்து பற்றிய பதிவை இங்கே வாசியுங்கள்.

அனானி நடுநிலை மேதாவியின் பின்னூட்டம் இது:
///இதே வைரமுத்து சிங்களவராக பிறந்திருந்தால், புத்தரும் பூமியும் என்று எழுதி பணமும், பெயரும், புகழும் சம்பாதித்து இருப்பார்....
கவிஞர்கள் மற்றும் கலைஞர்கள் (cinema) எல்லோரும் உணர்ச்சி மிகுந்தவர்கள்.. உணர்ச்சி இல்லையேல் அவர்கள் நல்ல படைப்பாளியாகாவே இருக்க முடியாது.. இது மாதிரியான கலை கூத்தாடிகளின் உணர்ச்சி மிகுந்த பேச்சு, பாட்டு, கவிதை என்பதெல்லாம் ஈழதமிழ் பிரச்சனைகளுக்கு முடிவே வராது...
சர்வேதச அரசியல் மற்றும் ராஜாங்க பரிபாலனங்கள் மூலமாகவே ஒரு தீர்வை எட்ட முடியும்... ஓரளவு படித்த மனிதர்களுக்கே புரியும் விஷயமிது... ஆனால் தாங்களை போல படித்தவர்களுக்கு புரியாததேன்...
காரணம்: உணர்ச்சி பூர்வமகாவே பிரச்சனையை அணுகுவதுதான்... அதுதான் தமிழினத்தின் குறைபாடு...
குறிப்பு: இதையும் தாங்கள் ஒத்துகொள்ள மாட்டீர்கள்.///

போயும் போயும் ஒரு கவிதை நன்றாக இருக்கிறது என்று பதிவு போட்டால் தன் பெயரைக்கூட வெளியே சொல்லப் பயந்து நடுங்கும் அந்த நடுநிலை மேதாவி ஏதோ நான் சினிமாக் கவிஞர்களும் கலைஞர்களும், அவர்கள் காட்டும் உணர்ச்சியும் அவர்களின் உணர்வு பூர்வமான பேச்சுகளும்தான் ஈழப்பிரச்சினைக்குத் தீர்வென்று சொன்னது போல் துள்ளிக் குதித்திருந்தார். மேற்படி பதிவில் இப்படி பாட்டு, கூத்து, கவிதை என்பனதான் ஈழப்பிரச்சினைக்கு தீர்வு என்று எங்காவது சொல்லியிருக்கிறேனா. விமர்சனத்துக்கும் நிந்தனைக்கும் வித்தியாசம் தெரியாமல், நிந்தனையே தொழிலாக இருப்பவர்கள்தான் இப்படிப்பட்ட நடுநிலை மேதாவிகள். தங்கள் அவரது மனதில் வேணுமானால் அப்படி ஒரு கருத்து இருந்திருக்கலாம். அதனால்தான் ஒரு கவிதையய் ரசித்துப் போட்ட பதிவு கூட அவருக்குள்ளே வேறு அர்த்தங்களை எல்லாம் கொண்டு வந்திருக்கிறது. இதைத்தான் எங்கள் ஊரில் ‘கருத்துக்குள் குருத்தெடுப்பது' என்று கூறுவார்கள்.

இவரின் கருத்துக்குள் குருத்தை படித்தவுடனே எனக்கு நண்பன் ஆதிரை 'அப்போது நீங்கள் வெட்கித் தலைகுனிந்து நிற்பீர்கள்' என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த,‘சர்வதேச அரசியல் மற்றும் ராஜாங்க பரிபாலனம்' பற்றிப் பேசும் மேதாவிகள் பற்றிய கௌதமாலா போராளி ஒருவனின் கவிதையின் தமிழாக்கம்தான் நினைவுக்கு வந்தது. மேற்படி அனானி மேதாவி இதையும் படிக்கட்டும்.. அதேசமயம் என் முன்னைய பதிவுகளையும் படிக்கட்டும். உணர்ச்சிக்கு அறிவை அடகு வைக்கக்கூடாது என்று எனக்கு உணர்த்திய ஒரு சம்பவம் பற்றி நான் இடப்போகும் எதிர்காலப் பதிவையும் படிக்கட்டும். (ஆதிரை பதித்த இந்தக் கவி எனக்கும் என்போன்ற பலருக்கும் கூட ஒரு சாட்டையடி. அதை நான் வேண்டி விரும்பி ஏற்றுக்கொள்வேன்)

உணர்ச்சிக்கு அறிவை அடகுவைப்பது பற்றி நான் எனது முன்னைய சில பதிவுகளில் கூடக் குறிப்பிட்டு வருந்தியிருந்தேன். அனானி நடுநிலை மேதாவி அவற்றையும் வாசிக்கலாம்.
முதல் பதிவு: ஒரு பேப்பர். முட்டாள்தனத்தின் மறுபெயர்.
இரண்டாம் பதிவு: மனதில் பட்டவை- 1



ஒரு நாள்
என் தேசத்தின்
நடுநிலை மேதாவிகள்
சாதரண மனிதர்களால்
விசாரிக்கப்படுவார்கள்.

"உங்கள் தேசம்
மெதுவாக
மரணமடைந்து கொண்டிருந்த போது
தனியே ஒதுங்கி நிற்கும்
ஒரு அழகிய தீயைப் போல . ..
நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ?"
என்று கேள்வி கேட்கப்படுவார்கள்.

நடுநிலை மேதாவிகளே ...

உங்கள் உடைகளைப் பற்றி ....
மதிய உணவிற்கு பின்
உங்கள் குட்டி தூக்கத்தைப் பற்றி....
அவர்கள் கேட்கப் போவது இல்லை

"ஒன்றுமில்லாததின் உள்ளடக்கம்" பற்றிய
உங்கள் உப்பு சப்பற்ற விவாதங்களை...
அவர்கள் தெரிந்துகொள்ளப் போவதில்லை

உங்கள் வருமானம் குறித்து...
மிகுந்த பட்டறிவு குறித்து.....
அவர்களுக்கு கவலை இல்லை

கேள்விகள்
கிரேக்க மெய்ஞானத்திலிருந்தோ
அல்லது
உங்களில் ஒருவன்
மரணமடைந்து கொண்டிருந்த போது
'உங்கள் கேவலமான சொந்த நலனுக்காக'
மௌனம் காத்தது பற்றியோ....
இருக்கப் போவதில்லை

பொய்களின் நிழலில் பிறந்த
உங்கள் வியாக்கியானங்கள் தொடர்பாக
அவர்கள் ஒன்றுமே கேட்கப் போவதில்லை

ஒரு நாளில்
அந்த சாதாரண மனிதன் வருவான்...!

மேதாவிகளின்
புத்தகங்களிலும் கவிதைகளிலும் காணப்படாத
ஆனால்
தினமும் அவர்களுக்கு
அரிசியும் பாலும்
ரொட்டியும் முட்டையும்
கொடுத்த
அவர்களின் ரதங்களை ஓட்டிய
அவர்களின் நாய்களையும் தோட்டங்களையும் கவனித்த
அவர்களுக்காய் உழைத்த
அந்த சாதரண மனிதன் கேட்பான்

"என் போன்ற ஏழைகள்
தன் வாழ்க்கையையும் காதலையும் தொலைத்து
துன்பத்தில் உழன்று கொண்டிருந்த போது ...
நடுநிலை மேதாவிகளே !!!
நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?"

என் இனிய தேசத்தின்
நடுநிலை மேதாவிகளே
உங்களால் பதில் சொல்ல முடியாது!

அப்போது
மௌனம் எனும் கழுகுகள் வந்து
உங்கள் குரல்வளையை கவ்வும்!

உங்கள் பாவங்கள்
உங்கள் ஆன்மாவையே தூக்கிச்செல்லும்!

"அந்தக் கேள்வியின் முன்
நீங்கள் ஒரு நிமிடம் வெட்கித் தலைகுனிந்து
கூனிக் குறுகி நிற்பீர்கள் "

-ஓட்டோ ரேனே காஸ்டில்லோ (கௌதமாலா கொரில்லா போராளி)

நன்றி: ஆதிரை

No comments: