Showing posts with label எழுத்தாளர்கள். Show all posts
Showing posts with label எழுத்தாளர்கள். Show all posts

Wednesday, 30 December 2009

வெடியரசன்-திருட்டுத்தனம்-தரமான இலக்கியம்

1.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற கலாசாரச் சீரழிவுகளைத் தட்டிக் கேட்கப் புறப்பட்டிருக்கும் மாணவர் படையின் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள், வெடியரசன் என்னும் அவர்களது இணையத்தளத்தில். உங்கள் சமூகத்தில் நடக்கும் கலாசாரச் சீரழிவுகளைத் தட்டிக் கேளுங்கள், இல்லையென்றால் எங்களிடம் சொல்லுங்கள் என்ற கோஷமும் இருக்கிறது. (இவர்களைவிடப் பலம்வாய்ந்த அமைப்பு ஒன்று எனது பாடசாலைக் காலத்தில் போட்ட கோஷமிது). இந்த அமைப்பினரின் முதல் நடவடிக்கையாக முறைகேடாக நடந்துகொள்ளும் ஆசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு எதிரான கண்டனங்கள் அமைந்திருக்கின்றன. அப்படியாக முதலாவதாக முகமூடி கிழிக்கப்படுபவர் கொக்குவில் இந்துக் கல்லூரி உப அதிபர் திரு.மு.வேலாயுதபிள்ளை என்பவர். அவர் பற்றிய அறிக்கை ஒன்றை மாணவர் படை வெளியிட்டிருக்கிறது.

வேலாயுதபிள்ளை மீதான குற்றச்சாட்டுகள் எவ்வளவு உண்மையானவை என்பது உறுதிப்படுத்தப்பட முடியவில்லை. அதேவேளை ‘அங்க இப்பிடியாம், அவர் அப்பிடியாம்' என்கிற கதையோடு மட்டும் நின்றுவிடாமல் ‘இன்னார் இன்ன தவறு செய்கிறார்' என்று நேரடியாக வெளிக்கொணர்வது நல்ல முயற்சியே. ஆனாலும், அதே நபரை உடல் ரீதியாகத் துன்பம் செய்யாமல் வேறு வழிகளில் திருத்த முயல்வது நலம் என்பது என்னுடைய அபிப்பிராயம். இந்த எச்சரிக்கைக் கடிதம் அந்த நம்பிக்கையைத் தரவில்லை என்பதையும் இங்கு குறித்துச் சொல்லியாகவேண்டும் (சிறு தண்டனைக்குள்ளாகிறார்?????).

இப்படியான போராட்டங்களில் மாணவர்கள் இறங்குவது வரவேற்கத்தக்கதே. இவர்களின் கலாசாரம் மீதான அக்கறை நவம்பர் 16 2005 தினேஷ் என்ற இளைஞனுக்கு நடந்த கொடூரம் போன்ற மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கு வழிகோலக்கூடாது. ‘பெண்களைத் தெய்வங்களாக மதிக்கும் யாழ்ப்பாணக் கலாசாரம்' என்கிற போலிப் போர்வையிலிருந்து இவர்கள் வெளிவந்து, பெண்களுக்கான சம உரிமை தொடர்பான போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும். பெண்களை பாலியல் குறியீடுகளுடன் கிண்டலடிக்கும் நண்பனைத் தட்டிக் கேட்க வேண்டும். சாதீயத்துக்கு எதிரான முழுமூச்சிலான முன்னெடுப்புகள் வேண்டும். இந்தக் குழுமங்களில் பெண்களுக்கும் முடிவெடுக்கும் உரிமை வழங்கப்பட்டு அவர்களும் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும். தனிப்பட்ட பகைமைகளைத் தீர்க்கும் வழியாக இந்த மாணவர்படை பயன்படுத்தப்படக் கூடாது. தண்டனை என்பது ‘உடல்ரீதியான தாக்குதல்' என்ற வடிவத்தை ஒருபோதும் எடுக்கக்கூடாது. இவர்களுக்கான மக்கள் ஆதரவு என்பது இனிமேல் இவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே இருக்கும். பல்கலைக் கழகத்தைச் சுற்றியிருக்கும் ‘பியர்' கடைகளை மூட முடியாமல் கள்ளச் சாராய ஒழிப்பைக் கைவிட்ட எம்.பி. போல் இவர்களும் ஆகாமலிருக்க வேண்டும் என்பது இவர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள்.

2.
சென்ற வார இறுதியில் விஜய் ரி.வி.யில் அனுஹாசனோடு ஆண்ட்ரியா மற்றும் ஜி.வி. பிரகாஷ்குமார் கோப்பி குடித்தார்கள். மாலை நேரம் வந்தால் பாடலில் ‘காதல் இங்கே ஓய்ந்தது?' என்கிற வரியை ‘காடல் என்கே வாய்ந்தது' என்பது மாதிரி பிழை பிழையாகப் பாடி ஒரு நாள் முழுக்க ஒலிப்பதிவு செய்தோம் என்று பெருமையாகச் சொன்னார் ஆண்ட்ரியா, அதற்கு ஒத்து ஊதினார் ஜி.வி. கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம் இருவரிடமும் இருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஓரளவுக்காவது செயற்கைத்தனம் இல்லாமல் பேசியது Season-1 ல் வந்த மணிவண்ணனும், இரண்டொருமுறை வந்த ஜெயராமும் மட்டுமே. மற்றபடி மேல்தட்டு மக்களுக்கான நுனி நாக்கு ஆங்கில நிகழ்ச்சியாகவே இது தெரிகிறது. ஜி.வி., ஆண்ட்ரியா பங்குகொண்ட நிகழ்ச்சியை முழுமையாகப் பார்த்தது 'ஆயிரத்தில் ஒருவன்' இருவருக்கும் தொடர்புடைய படம் என்பதால். அங்கேதான் ஜி.வி. ஒரு பெரிய குண்டைத் தூக்கிப்போட்டார்.

‘உன்மேல ஆசதான்' பாடல் ஏலவே யுவன் சங்கர் ராஜா போட்டுக் கொடுத்த மெட்டு என்பது கிட்டத்தட்ட குழந்தைக்கும் தெரியும். செல்வராகவனோடு சண்டை போட்ட பின் யுவன் சங்கர் ராஜா அந்த மெட்டை சர்வம் படத்தில் ‘அடடா வா அசத்தலாம்' என்று பாவித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். ஜி.வி. சொல்கிறார் ‘உன்மேல ஆசதான்' பாடலுக்கான காட்சிகளை ஏலவே செல்வராகவன் படமாக்கியிருந்தாராம். அந்தக் காட்சிகளுக்கு தான் மூன்று மணிநேரத்தில் இசையமைத்தாராம். யுவன் சங்கர் ராஜா சுட்டுத்தான் பாட்டுப் போடுகிறார், ஜி.வி. சுட்டால் என்ன?, அல்லது இருவரும் ஒரே loops பயன்படுத்தியிருக்கலாம் போன்ற சப்பைக் கட்டுகள் இங்கே எடுபடாது. ஒரே Loops பயன்பட்டிருந்தால் ஒலிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்திருக்கும், மெட்டுமா? ‘ஏற்கனவே யுவன் போட்ட மெட்டுக்கு செல்வா காட்சிகளை எடுத்து வைத்திருந்தார். பின்னர் அதே மெட்டை வைத்து முழுமையாக வேறொரு பாடலை உருவாக்கினேன்' என்று சொல்லக்கூடிய குறைந்தபட்ச நேர்மைகூட தமிழ் சினிமாக் கலைஞர்களிடம் இல்லை.

3.
சமீபத்தில் அரைவாசி வாசித்து முடித்த ஒரு புத்தகம் ஜே.ஜே. சில குறிப்புகள். பலரால் கொண்டாடப்படும் இந்தப் புத்தகம் சராசரி வாசகனான எனக்கு புரிவது மிகவும் கடினமாக இருக்கிறது. இதை மூடிவைத்துவிட்டு கொற்றவையைத் திறந்தாலும்கூட, பயங்கரமான வாசிப்பனுபவமும் இலக்கிய ரசனையும் உள்ளவர்களால் மட்டுமே இலகுவாக கிரகிக்ககூடிய ஒரு படைப்பாகவே இருக்கிறது (ஜே.ஜே. வை விட இலகுவான நடை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்). அதாவது முற்போக்கு, பிற்போக்கு இலக்கியங்கள் குறித்த குழுமத்தைச் சேர்ந்தவர்களால் மட்டுமே கிரகிக்ககூடியதாக இருப்பதுதான் கொடுமை. அதைப் பிழையென்று சொல்லமுடியாது. எல்லோருக்கும் விளங்கத்தக்கதாக படைப்புகள் வந்தாகவேண்டும் என்று யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. சிலவேளை இன்னுமொரு நான்கு ஐந்து வருடங்களின் பின் இந்தப் புத்தகங்கள் மீதான என்னுடைய கண்ணோட்டம் வேறாக இருக்கலாம். அதற்காக என்னால் புரிந்து கொள்ளமுடியாத புத்தகம் ஒன்றை சிலாகிக்க நான் தயாராயில்லை. பேசாமல் குருநாதரின் புத்தகங்களை வாசித்துச் சிரித்துவிட்டுப் போகலாம்.

இப்போதைக்குத் தரமான இலக்கியவாதிகளாக கணிக்கப்படுபவர்களுக்கு இரு குணவியல்புகள் இருக்கின்றன. ஒன்று, பெரும்பாலானவர்களுக்குப் புரிபடாமல் எழுதுவது. மற்றது தன்னைத் தவிர எழுதுபவன் எல்லோரையும் மட்டமான மொழியில் திட்டுவது.

நன்றி: நண்பன் செல்லம்மா. வெடியரசன் பற்றிய தகவல்களைப் பரிமாறிக்கொண்ட காரணத்துக்காக.

Saturday, 29 August 2009

ஒரு நூல் வெளியீட்டு விழா.. சில பாதிப்புகள்-2

முதல் பாகத்தை இங்கே பாருங்கள்

நூல் வெளியீடு முடிந்ததும் கலந்துரையாடலை ஆரம்பிக்கலாம் என்று அறிவித்தார்கள். வெளியீடு நடந்த இடம் 9:00 மணிவரை ஒதுக்கப்பட்டிருந்ததால் ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் வரவேற்கப்படுகின்றன என்றார்கள். அங்கே ஆரம்பித்தார்கள் பிரச்சினையை.

தில்லைநாதன் ஐயா கருணாகரன் மற்றும் அகிலனின் முழுமையான பக்கங்கள் இதுவரை வெளிவந்திருக்க சந்தர்ப்பம் இல்லை என்பதாக ஆரம்பித்து, நடந்து முடிந்த கொடூர யுத்தம் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலானது அல்ல என்கிற மாதிரியான ஒரு கருத்தாடலுக்குள் நுழைந்தார். நண்பன் ரபிக்காந்தின் பார்வையில் அது விடுதலைப் போராட்டத்தைச் சாடுவதாக அமைய ஆரம்பித்தது விவாதம். வன்முறைக் காலங்களில் சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் என்று தில்லைநாதன் சொல்ல, வன்முறை செய்ததே சிங்கள மக்கள்தான் என்று ரபிக்காந்த வாதாட ஒன்றுகூடலின் ஆதார நோக்கத்தை விட்டு (புத்தக வெளியீடும் விமர்சனமும்) விடுதலைப் போராட்டத்தில் என்ன தவறுகள் நிகழ்ந்திருக்கலாம் என்கிற பக்கமாக கலந்துரையாடல் திசைதிரும்பியது. இடையில் திரும்பவும் புத்தக வெளியீடு பற்றிய கருத்துக்களைச் சொல்ல மூத்த படைப்பாளி ஒருவரை அழைத்தார்கள். (அவர் பெயர் சரியாக ஞாபகமில்லை. யாரிடமாவது கேட்டுச் சொல்கிறேன்).

அவர் கௌசலா அக்காவின் மதிப்புரையில் நம்பிக்கையின்மையின் சுவடுகள் இருந்ததாகச் சுட்டிக்காட்டினார். நம்பிக்கையோடு சில விஷயங்களை அணுகும் வண்ணம் சுட்டிக்காட்டினார். கடவுள் நம்பிக்கை, பாவ புண்ணியம், வன்முறை இவற்றில் நம்பிக்கை இல்லை, ஆனால் ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்கிறது என்றார். மிகவும் உணர்ச்சிபூர்வமாக முஸ்லீம் மக்கள் பல இடங்களில் விரட்டி அடிக்கப்பட்டதைச் சொல்லிக்காட்டினார். அதன்பிறகு ஏனோ தெரியவில்லை கதவை அறைந்து சாத்திவிட்டு வெளியேறிப் போய்விட்டார். சொன்ன கருத்துகளில் வலிமை இருந்தாலும் அவரது அந்த நடவடிக்கை எனக்கு அணுவளவும் பிடிக்கவில்லை. உணர்வுபூர்வமான சிந்தனைகளைத் துறந்து அறிவுபூர்வமாகச் சிந்திக்க எங்களைத் (புதியவர்களை) தூண்டியிருக்க வேண்டிய அந்த மூத்தவர் அப்படி நடந்து கொண்டிருக்கக்கூடாது.

அவர் வெளியேறியதும் திரும்பவும் ஈழப் போராட்டம் பற்றிய நியாய, அநியாயங்களுக்குள் நுழைந்தார்கள். நான் பொதுவாகவே ஈழப் போராட்டம் பற்றிய கருத்தாடல்களில் ஒதுங்கியிருப்பவன். காரணம், இலகுவில் முத்திரை குத்திவிடுவார்கள். குத்துவதோடு நின்றுவிடாமல் அடிக்கடி மாற்றி மாற்றி முத்திரை குத்துவார்கள். அந்த முத்திரைகள் எனக்குப் பிடிப்பதில்லை. ஆனால் விவாதம் சூடேற ஆரம்பித்தது. இன்றைக்கு மூன்று லட்சம் மக்கள் முள்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டு இருப்பதற்கு யார் காரணம் என்கிற திசையில் விவாதம் திரும்பியது. திரும்பவும் தில்லைநாதனும், ரபிக்காந்தும் மோதிக் கொண்டார்கள். மூத்தவர் சிவப்பு சிந்தனையாளர் என்பது அவரது உரையிலும், பின்னர் அருண்மொழிவர்மனுடனான அலைபேசி+தொலைபேசி உரையாடலிலும் தெரியவந்தது. என்ன இது ஒரு புரிந்துணர்வு இல்லாத விவாதமாக, என் கருத்துத்தான் சரி என்கிற திசையில் போனபோது, செல்வம் அவர்கள் குறிப்பிட்டார்.

செல்வம் தன்னுடைய சிற்றுரையில், இவ்வாறாக ‘இவர்கள் சரி, அவர்கள் பிழை' என்று விரல் சுட்டுவது தவறென்றும், இன்றைக்கு மூன்று லட்சம் பேர் மந்தைகள் போல் முட்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டிருப்பதற்கு, நாங்கள் எல்லோருமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் சொன்னார். அதற்கு கறுப்பி அவர்கள், அப்படிப் பொறுப்பேற்க முடியாது என்றும், ஆகக்குறைந்தது ஒரு சதவீதம் ஈழத் தமிழ் மக்களாவது போர் வேண்டாம் என்று ஒதுங்கியிருந்தார்கள் என்றும், அப்படியான மக்கள் இந்தத் துயரத்துக்கு பொறுப்பேற்க முடியாதென்றும் வாதிட்டார். அப்படியான குடும்பங்களில் ஒன்று தனது குடும்பமும் என்பதாகச் சொன்னார். அதற்குப் பதிலிறுத்தவர், ஜெயகரன் அண்ணா. அவரது பதிலின் சாராம்சம் இதுதான். (அவர் ஆரம்பகட்டங்களில் போராளிக் குழுக்களில் ஒன்றில் இருந்தவர் என்று யூகிக்கிறேன்)

‘இப்போது புலிச் சார்பு, புலி எதிர்ப்பு என்ற நிலைகளில் மட்டும் இருந்து வாதாடக் கூடாது. நான் கூட அவர்கள் தவறு செய்கிறார்கள் என்று தெரிந்த நேரத்தில் அங்கிருந்து போராடி இருக்கவேண்டும். அதுதான் என் களமாக இருந்திருக்க வேண்டும். அதைவிடுத்து நான் புலம் பெயர்ந்து வந்ததையிட்டு வருந்துகிறேன். நீங்கள் போராட்டத்தை விட்டு முற்றுமுழுதாக ஒதுங்கி இருந்திருந்தாலும் ஏதோ ஒரு வகையில் அந்தப் போராட்டம் வளர ஆதரவளித்திருக்கிறீர்கள். அதாவது, அந்தப் போராட்டத்தில் தப்பிருந்திருந்தால் அதைச் சுட்டிக்காட்டிப் போராடி இருக்க வேண்டும். அதைவிடுத்து பேசாமல் இருந்துவிட்டு இப்போது மக்களின் அவலநிலைக்குப் பொறுப்பேற்காமல் ஒதுங்குவது என்பது சரியல்ல' என்பதாக ஜெயகரனின் பார்வை இருந்தது. சுய விமர்சனத்தின் அவசியத்தையும் ஜெயகரன் அண்ணா, சேனா அண்ணா, சேனா அண்ணாவுக்கு அருகில் இருந்த அந்தத் தாடிக்கார அண்ணா ஆகியோர் வலியுறுத்தினார்கள்.

உரையாடலின் நடுவே வந்திருந்த நண்பர்களின் பெயர்களையும் மின்மடல் முகவரிகளையும் சேகரித்தார்கள். இந்த விவாதம் கிட்டத்தட்ட இதே பாதையில் தொடர்ந்து கிட்டத்தட்ட 8:40 அளவில் முடிவுக்கு வந்தது. சேனா அண்ணா மற்றும் ஜெயக்குமாரி அக்கா ஆகியோருடன் சற்று நேரம் அளவளாவினோம். சேனா அண்ணா எங்கள் பாடசாலை மாணவர் என்று தெரியவந்தது. 84ம் வருடம் ஏ/எல் முடித்தவராம். ஆள் மொட்டை அடித்து வயதைக் குறைத்து நல்ல இளம் ஆள் மாதிரி இருந்தார். 9:00 மணியளவில் விடைபெற்றுக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். 10:30 தொடக்கம், 11:30 வரை அருண்மொழிவர்மன் அண்ணாவுடன் தொலைபேசியில் உரையாடிவிட்டு, நூல் வெளியீட்டு விழா பற்றிய முதல் பதிவை எழுதிவிட்டுப் படுத்துறங்கிப் போனேன்.

சில எண்ணங்கள்
  • அகிலன் இந்தியாவுக்கு கள்ளமாகப் படகில் வந்தார் என்று சொல்லவந்து ‘கள்ளத் தோணி' என்ற சொல்லைப் பாவித்துவிட்டார்கள் நிகழ்ச்சி இணைப்பாளர்கள். அவர்கள் கொச்சையான அர்த்தத்தில் அதைப் பயன்படுத்தவில்லை என்றாலும், அந்தச் சொல்லின் வலி பற்றி பெரியவர்கள் எடுத்துச் சொன்னவிதம் பிடித்திருந்தது.
  • ‘மூன்று பெண்கள் முன்னின்று நடத்திய விழா' என்று குறிப்பிட்டது கொச்சையாக இருந்தது. ஏன் அவர்கள் முன்னின்று நடத்தியதில் என்ன அதிசயம் கண்டுவிட்டார்கள் இவர்கள்? அவ்வாறு குத்திக் குத்திப் பேசியதிலேயே தெரியவில்லையா எங்கள் சமூகத்தில் ‘பெண் விடுதலை' எந்தளவுக்கு இருக்கிறது என்று. 'விழா ஒருங்கமைப்பாளர்கள் நன்றாகத் செயற்பட்டார்கள்' என்ற கருத்தை ‘மூன்று பெண்கள் அழகாக விழாவை ஒழுங்கமைத்தார்கள்' என்ற வடிவில் சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை. பிரித்துக் காட்டியிருக்க வேண்டாம்.
  • வாதம் அடிக்கடி வேறுதிசைகளில் பயணித்த போது, யாராவது கொஞ்சம் கடுமையாக நெறிப்படுத்தி இருக்கலாம். ஆனால், வயதில் இளையவனான ரபிக்காந்தின் கருத்துக்களைப் பெரியவர்கள் எடுத்துக்கொண்ட விதத்துக்குத் தலை வணங்குகிறேன்.
  • சுயவிமர்சனம் இன்றைக்கு அவசியம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அது பற்றிப் பேசவேண்டிய களம் இதுவா என்பதில் என்னிடம் தெளிவான கருத்து இல்லை. நடந்த கலந்துரையாடலை அதற்கெனவே தனியாகக் களம் அமைத்து நடத்தலாம் என்பது என் பணிவான வேண்டுகோள். நூல் வெளியீட்டு விழாவில் என்ன அவசியம் என்று தெரியவில்லை. ஒருவேளை கூடுவதற்கும் அது பற்றிப் பேசவும் வேறு சந்தர்ப்பம் கிட்டுமா என்ற சந்தேகத்தில் அவ்வாறு விவாதித்தார்களோ தெரியவில்லை.

Friday, 28 August 2009

ஒரு நூல் வெளியீட்டு விழா.. சில பாதிப்புகள்-1

வடலி வெளியீடுகளான கருணாகரனின் 'பலி ஆடு' கவிதைத் தொகுப்பும், த. அகிலனின் 'மரணத்தின் வாசனை' சிறுகதைத் தொகுப்பும் இன்றைக்கு (28/08/09, வெள்ளிக்கிழமை) ஸ்காபுறோ சிவிக் சென்ரரில் வெளியிடப்பட்டன. தமிழில் எழுதுவதில் என்னில் இருக்கக் கூடிய குறைகளை நிவர்த்தி செய்வதற்கு வழிகாட்டிகளைத் தேடிக் கொண்டிருந்த சமயத்தில், சயந்தன் இந்த விழா பற்றி தனது வலைமனையில் எழுதியிருக்க, ‘அட, இங்கே போவதில் நான் ஒன்றையும் இழந்துவிடப் போவதில்லை' என்ற எண்ணம் மனதில் ஓட, மின்மடல் மூலம் நான் தொடர்பு கொண்டது சேனா அண்ணாவை. அவர் அந்த மின்மடலை தீபா அக்காவுக்கு அனுப்பி வைக்க, விழா பற்றிய சில சந்தேகங்கள் தீர்ந்ததோடு நிச்சயம் இந்த விழாவுக்குப் போகவேண்டும் என்ற உந்துதல் எழுந்தது.

தீபா அக்கா மின் மடலில் 'ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களை அழைத்து வாருங்கள்' என்று கூறியிருந்தார். நானாகத் தேடிப் போகாமல், ‘நாளைக்குப் பின்னேரம் என்ன மச்சான் செய்யப் போகிறாய்' என்று தானாக வந்து மாட்டிய நண்பன் ரபிக்காந்தையும் இழுத்துக் கொண்டு போய்ச் சேர்ந்தேன். வீட்டிலிருந்து 5:10க்கே வெளிக்கிட்டுப் போய்விட்டதால் ரபிக்காந்தையும் இழுத்துக்கொண்டு 5:55க்கு நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம், நானும் என் மருமகனும். உள்ளே நுழையும்போது கொஞ்சம் தயக்கம். ‘வடலி....' என்று இழுக்க 'ஓமோம்' என்று ஆமோதித்து வரவேற்றார்கள். நாங்கள் மூவரும் சற்றுத் தள்ளியிருந்த பிளாஸ்ரிக் கதிரைகளை நாட, பெரிதாக இருந்த குஷன் கதிரைகளில் வந்து இருக்குமாறு அழைத்தார்கள். (குஷன் கதிரைகள் பெரியவர்களுக்கு என்று ஒதுங்கி இருக்க முயன்றேன்).

தீபா அக்கா, சேனா அண்ணா, மெலிஞ்சிமுத்தன் அண்ணா, தில்லைநாதன் ஐயா ஆகியோர் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். பெயர்களுக்குரிய முகங்களைக் பொருத்தும் போது ஏற்படும் ஒரு சந்தோஷத் தருணம் அது. சில சம்பிரதாய பூர்வமான உரையாடல்களில் இருந்து பெண்ணியப் பக்கம் திசை திரும்பியபோது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. ரபிக்காந்த் பெண்களுக்கு சம உரிமை கிடைத்து விட்டது என்று சொல்ல, கடுமையாக மறுத்தார்கள் சகோதரிகள். ரபிக்காந்த அடிக்கடி கனவுலகில் சஞ்சரிப்பவன் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. மெலிஞ்சிமுத்தன் 'ஆண்கள், பெண்கள், அரவாணிகள் ஆகிய மூன்று வகையிலானவர்களும் தங்களுக்கான அடையாளங்களை உதறிப் போட்டுவிட்டு மற்றவர்களைப் பார்க்க வேண்டும்' என்கிற ஒரு கோணத்தில் பேசினார். அது சுலபத்தில் சாத்தியமன்று, ஆனால் சாத்தியமே இல்லாத ஒன்று அல்ல. (பெண்ணுரிமை விசயத்தில் நான் சகோதரிகள் கட்சி. இன்றுவரை அவர்களைப் எங்கள் தேவைகளுக்கேற்ப பாவிக்கிறோம் என்பதை நான் மனதார ஒப்புக்கொள்கிறேன்)

இனி முக்கிய பகுதிக்கு வருவோம். இங்கே நான் பெரிய மன்னிப்புக் கோரவேண்டி உள்ளது. அதாவது, அங்கே சந்தித்தவர்களில் தன்யா மற்றும் சத்யா ஆகியோரின் முகங்களைப் பெயர்களுடன் சரியாகப் பொருத்தத் தவறிவிட்டேன். மன்னிக்கவும். நிகழ்ச்சி ஆரம்பமாக முன்னரே புத்தகங்களை வாங்குவதற்கு அழைப்பு விடுத்தார்கள். வாங்கிக் கொண்டு திரும்ப இருக்கைக்கு வந்தபோது அங்கே நின்றுகொண்டிருந்தார் வலையுலகு எனக்குத் தந்த இன்னொரு நண்பர் அருண்மொழிவர்மன் (முதல் சந்திப்பு). இருவரும் கைலாகு கொடுத்து பேசிக் கொள்ள ஆரம்பிக்கவும், புத்தகங்களை வெளியிடும் விழாவை ஒருங்கிணைப்பாளர்கள் ஆரம்பித்து வைக்கவும் சரியாக இருந்தது. சிறிதாக அறிமுகவுரை வழங்கினார் ஒரு சகோதரி (சத்யாவா?, தன்யாவா?... முதலில் சொன்னது போல முகங்களை மறந்த எனக்கு மீண்டும் ஒரு குட்டு). அதன் பின் புத்தகங்கள் பற்றிய மதிப்புரைகள் இடம்பெற்றன.

முதலில் த. அகிலனின் மரணத்தின் வாசனை பற்றி ஜெயக்குமாரி அக்கா மதிப்புரை வழங்கினார்கள். இந்தப் புத்தகம் ஒரு சிறுகதைத் தொகுப்பு. கதைகளை நான் இதுவரை வாசிக்காதபடியால், ஜெயா அக்காவின் மதிப்புரையை மதிப்பிட முடியாமல் போனது துரதிர்ஷடமே. அதே போல் கௌசலா அக்கா வழங்கிய கருணாகரனின் பலி ஆடு பற்றிய மதிப்புரைக்கும் அதே கதிதான். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் இருவருமே தவறாமல் செய்தார்கள். அது என்னவென்றால், இந்த நூல்களை கட்டாயம் வாசிக்கவேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டிவிட்டார்கள். ஜெயக்குமாரி அக்கா சாதாரணமான உரையாடல் தமிழிலும், கௌசலா அக்கா கொஞ்சம் மேம்படுத்தப்பட்ட தமிழிலும் செய்த மதிப்புரைகளை, என் போன்ற வியாபார எழுத்துக்களை வாசித்துப் பழகிய வாசகனாலும் கிரகிக்க முடிந்தது சிறப்பு.

இரு நூல்களையும் மேலோட்டமாக மேய்ந்தேன். அச்சுக்கோப்பு, பாவிக்கப்பட்ட தாள்கள், அட்டை என்பன சிறப்பாக இருந்தன. பலி ஆடு கவிதைத் தொகுப்பு அட்டையை சயந்தன் வடிவமைத்திருக்கிறார். ஒரு சிறிய சர்ச்சை மூலம் அறிமுகமான இந்த அண்ணன் என்னை மேலும் மேலும் ஆச்சரியப்படுத்துகிறார். நூல்களின் உள்ளடக்கம் பற்றி வாசித்து முடிந்ததும் கட்டாயம் பதிவிடுகிறேன். நூல்கள் பற்றிய மதிப்புரை முடிந்ததும் ஒரு விவாத மேடையாக நாங்கள் கூடிய இடம் உருமாறியது. சர்ச்சைக்குரிய, இதுவரை நான் போயிருக்கக் கூடிய இடங்களில் பேசப்படாத ஒரு களத்தில் விவாதித்தார்கள். அதுபற்றி, அடுத்த பாகத்தில் எழுதுகிறேன்.