Friday 12 June 2009

மனதில் பட்டவை- வாரம்: ஜூன் 7-13, 2009

***இந்த வாரம் தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையங்களில் பார்த்த செய்திகளில் என் மனதில் பட்டவற்றை பகிர்ந்து கொள்கிறேன். இது ஒரு தொடராக வரும் இனி, எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம்***

கொஞ்சம் அரசியல்


Liberal கட்சியின் Toronto Centre MP Bob Rae இலங்கை விமான நிலையத்தில் வைத்து அவமானப்பட்டது, சிறிலங்கா மீதான கனடாவின் பார்வையில் என்ன மற்றத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. கனேடிய அரசியல்வாதிகள் ஒன்றும் புனிதர்கள் அல்ல. நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கான அபாயம் இருந்தபோது தனது கட்சியின் பலத்தை நிரூபிக்கும் ஒரே நோக்கில் அரசாங்கத்தைக் கலைத்து மீண்டும் தேர்தல் அறிவித்தவர்தான் பிரதமர் Stephen Harper. (மேற்படி Progressive Conservative கட்சியை சார்ந்தவர்). Liberal கட்சியோ National Democratic Party (NDP) மற்றும், Bloc Quebec என்ற Quebec மாநிலத்தின் பிரிவினையைக் கோரும் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து Harper அரசைக் கலைத்து கூட்டரசு அமைக்க இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஒரு தடவை முயன்றது. இந்நிலையில் Liberal கட்சியைச் சேர்ந்த Bob Rae பட்ட அவமானத்துக்கு சிறு சிறு கண்டனங்கள் மட்டுமே எழுந்துள்ளன. (முக்கால்வாசி அவரது கட்சியிலிருந்து). இங்கே புலம் பெயர்ந்த தமிழர்கள் போராட்டங்களை செய்த போது ஆளும் கட்சியைவிட எதிர்க்கட்சியான Liberal கட்சிதான் அதிகம் கண்டுகொண்டது. அப்படிக் கண்டுகொண்டதுக்கும், Bob Rae சிறிலங்கா போனதற்கும் வோட்டு வங்கியைப் பலப்படுத்துவதும் ஒரு காரணமாய் இருக்கலாம். ஆனால் இந்த சம்பவம் ஒரு சிறு சலசலப்பை கனேடிய அரசியல்வாதிகளிடமும், மக்களிடமும் ஏற்படுத்தியிருக்கிறது. புலம் பெயர் தமிழர்களின் இடைவிடாத போராட்டத்திற்கு இப்போது கொஞ்சம் கொஞ்சம் அவர்களுக்கு அர்த்தம் புலப்படத் தொடங்கியிருக்கிறது.
அவுஸ்திரேலியா புலிகள் மீதான தடைகொண்டு வரும் தீர்மானத்தைக் கைவிடப் போவதாகச் செய்திகள் வந்தவுடன், அந்நாட்டுக்கான சிறிலங்கா தூதுவர் ‘குய்யோ முறையோ' என்று அலறுகிறார். அப்படித் தடை செய்யாமல் விட்டால் வெளிநாடுகளில் வாழும் புலி ஆதரவாளர்கள் நிதி சேர்த்து புலிகள் இயக்கத்தை மீண்டும் தலைதூக்க வைத்து விடுவார்களாம். புலிகள் வெளிநாடு முழுவதும் பரவிவிடுவார்களாம். அப்போ சில நாடகளுக்கு முன் சிறிலங்கா அதிபர் ‘வீர' மகிந்த, விடுதலைப் புலிகளை முற்று முழுதாக அழித்துவிட்டோம் என்றும், தமிழ் மக்களை அவர்களின் பிடியிலிருந்து விடுவித்துவிட்டோம் என்றும், இனிமேல் இலங்கையில் புலிகள் தலைதூக்க முடியாதென்றும் முழக்கமிட்டதெல்லாம் வெறும் வாய் ஜாலம். அப்படித்தானே உயர்திரு. சேனக வலகம்பாய?. நீங்கள் சொன்னதுபோல் முற்றுமுழுதான சுதந்திரம் தந்து, எங்களை சம உரிமையுள்ள பிரஜைகளாக நடாத்தினால், இன்னொரு ஆயுதப் போராட்டம் எங்களுக்குத் தேவையே இல்லை. புலிகள் இயக்கத்தை அவுஸ்திரேலியா தடைசெய்ய மாட்டாது என்ற செய்தி கேட்டதும் நீங்கள் பதறிய பதற்றம் சொல்வது ஒன்றே ஒன்றைத்தான்... நீங்கள் திருந்தவே போவதில்லை.
தமிழர்கள் உணர்ச்சிகளுக்கு மூளையை அடகு வைப்பவர்கள் என்பது எனது கருத்து. அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்கள் 'புரட்சிப் பீரங்கிகள்' சீமானும், வை. கோபால்சாமியும். ‘இனி சிங்கள நாட்டைக் கைப்பற்றும் போராட்டத்தை ஆரம்பிப்போம்' என்று முன்னவரும், ‘வவுனியாவில் ஆயுதக்கிடங்கை எரித்தது எம்மவர்கள் தான்' என்று பின்னவரும் பேசிய பேச்சுக்கள் ‘புனர்வாழ்வு' முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ள தமிழர்களை எந்தளவுக்கு காயப்படுத்தும் என்பது பற்றி ஒரு நிமிடம் கூட சிந்திக்காமல் பேசியிருக்கிறார்கள். இவர்களுக்கென்ன, மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு வாரமோ, ஒரு மாதமோ சிறைவாசம். கொஞ்சம் காசு கொடுத்தால் சிறையிலும் நன்றாக இருந்துவிட்டு வரலாம். (சிறைசென்று வரும்போது எவ்வளவு ஃப்ரெஷ்சாக வெளிய வாறாங்கப்பா???). அங்கே அந்த மக்கள் பணயக் கைதிகளாக அடைபட்டிருக்கிறார்கள். இவர்களின் பேச்சுக்கள் எல்லாம் தெளிவாக மொழி பெயர்க்கப்பட்டு கோத்த பாயவின் பார்வைக்குப் போகும். எங்கள் சனம் சாகும். இனியாவது வாய்க்கும் மூளைக்கும் தொடர்பு வைத்துப் பேசுங்கய்யா. (06/06/2009 அன்று யாழ்ப்பாணத்திலும் ஒரு ஆயுதக்கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாம். இப்ப யாழ்ப்பாணத்தில் ஒரே வெயில், அந்த சூட்டில தீ பிடிக்குதய்யா)

வவுனியா மற்றும் கொடிகாமம் முகாம்களில் பிரிந்து வாழும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தங்களைச் சேர்த்து வைக்குமாறு ஒரு சட்டத்தரணி மூலம் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். வவுனியா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொன்னுசாமி சுரேந்திரநாதன், ஜெயராணி சுரேந்திரநாதன், நேசனா சுரேந்திரநாதன் மற்றும் கொடிகாமம் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சோபிதா சுரேந்திரநாதன், சிவபாக்கியம் மாணிக்கராஜா ஆகியோர் சார்பில் இந்த மனுவை சட்டத்தரணி கௌரிசங்கரி தவராஜா அவர்கள் தாக்கல் செய்திருக்கிறார். இந்தக் குடும்பம் வவுனியா செல்லவென இரண்டு பதுங்குகுழிகளில் தங்கியிருந்தது. சுரேந்திரநாதன், மனைவி ஜெயராணி, மகள் நேசனா (வயது 10க்கு கீழ்) ஆகியோர் ஒன்றிலும், ஜெயராணியின் தாயார் சிவபாக்கியம், மூத்த மகள் சோபிதா (13வயது), மகன் கிஷோர் (12வயது) ஆகியோர் இன்னொன்றிலும் இருந்த போது, எதிர்பாராத விதமாகப் பிரிய நேரிட்டது. சுரேந்திரநாதன், மனைவி மற்றும் நேசனா வவுனியாவுக்குத் தப்பிவந்தனர். எறிகணைக்குப் பலியான பேரன் கிஷோரை அவசர அவசரமாகப் புதைத்துவிட்டு சிவபாக்கியம் சோபிதாவோடு கொடிகாமத்துக்குத் தப்பியோடினார். தங்களை ஒரே முகாமில் விடுமாறு பலமுறை கேட்டும் பலனில்லாததால் சுரேந்திரநாதன் குடும்பம் நீதிமன்றை நாடியிருக்கிறது என்றே நினைக்கிறேன். ( பி.கு: சுரேந்திரநாதனின் தாயார் இராசம்மா பொன்னுச்சாமி, என் தகப்பனாரின் மூத்த சகோதரி. சுரேந்திரநாதன் என் மச்சான். செத்துப் போன கிஷோரும், அவலப்படும் சோபிதா, நேசனா ஆகியோர் என் பெறாமக்கள். Tamil One தொலைக்காட்சியில் மேற்படி செய்தியைக் கேட்டபோது வலித்தது)


கொஞ்சம் பொருளாதாரம்

திடீரென்று கச்சா எண்ணை விலை அதிகரித்திருக்கிறது. நேற்று எரிபொருள் (Car Gas) லிட்டர் 1 டாலர் 3 சதமாக உயர்ந்திருந்தது. சென்ற வருடம் இதே நேரம் லிட்டர் 1 டாலர் 52 சதமாகக் கூட இருந்தது. சென்ற டிசம்பரில் வெறும் 70 சதமாக விழுந்தது. கனேடியா டாலரின் மதிப்பும் சற்றே உயர்ந்திருக்கிறது. Bank of Canada வின் கூற்றுப்படி 1 கனேடிய டாலர், 0.9106 ஐக்கிய அமெரிக்க டாலராக மதிப்புயர்ந்திருக்கிறது. சென்ற வருடம் கிட்டத்தட்ட அமெரிக்க டாலரை எட்டிப்பிடித்து, பின் அதலபாதாளத்தில் விழுந்து இப்போது ஓரளவுக்கு மீண்டுவருகிறது. கச்சா எண்ணை விலை கேலனுக்கு 70 டாலரைக் கடந்திருக்கிறது. (மார்ச்சில் வெறும் 35 டாலர்கள்). விரைவில் 80 டாலரை எட்டும் என்கிறார்கள். இவற்றின் விலை அதிகரிப்பால சாதாரண மக்களுக்கு நட்டம் போல் தோன்றினாலும், கனடாவைப் பொறுத்த மட்டில் சாதாரண குடிமகனுக்கு இது ஒரு நல்ல செய்தி. கனேடியப் பொருளாதாரமும் கச்சா எண்ணை மற்றும் எரிபொருள் விலைகளும் அன்றில் பறவைகள் மாதிரி. ஒன்றில்லாமல் இன்னொன்று வாழாது. அதனால் பொருளாதார நெருக்கடியிலிருந்த கனடா மீளுவதற்குரிய சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

ஆனால் சில பொருளாதார வல்லுனர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. FACTS' அமைப்பின் Fereidun Fesharaki இது ஒரு தற்காலிகமான நிலை என்றும் மிக விரைவிலேயே கச்சா எண்ணை விலைகள் 40 டாலர் அல்லது அதற்குக் கீழே போவதற்கு வாய்ப்புகள் உள்ளதாயும் கூறி வயற்றில் புளியைக் கரைத்திருக்கிறார். இவர் மற்றும் இவர் போன்ற வல்லுனர்களின் கூற்றை முதலீட்டாளர்கள் கேட்பதாய் தெரியவில்லை. கச்சா எண்ணை பங்குகளில் நன்றாக முதலீடுகள் நடப்பதாக Toronto Stock Exchange சொல்கிறது.

கொஞ்சம் விளையாட்டு

ICC T20 உலகக் கோப்பை இப்போதான் சூடு பிடித்திருக்கிறது. ஆஸ்திரேலியா முதல் சுற்றிலேயே வெளியேறியது, இங்கிலாந்துடனான நெதர்லாந்தின் வெற்றி, அயர்லாந்து பங்களாதேஷை வெளியேற்றியது ஆகிய மூன்றும்தான் Upsets. அவுஸ்திரேலியாவின் தோல்வி பற்றி கிரிக்கெட் அவுஸ்திரேலியாவிடம் விளக்கம் கேட்டிருக்கின்றனராம் அணி ஸ்பான்சர்களான Victoria Better, Johnnie Runner மற்றும் Wolf Bass. (மூன்றுமே Alcohol Brands). குடித்தார் என்று காரணம் காட்டி Andrew Symonds வெளியேற்றப்பட்டது பற்றி அணிவீரர்கள் மற்றும் ஸ்பான்சர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாகக் கேள்வி. சேவாக் காயம் காரணமாக நாடு திரும்பியது இந்திய அணிக்குப் பேரிழப்பு. தோனிக்கும் சேவாக்குக்கும் பனிப்போர் என்றுவேறு கிளப்பி விட்டிருக்கிறார்கள். Warm Up போட்டிகளிலிருந்தே மாறாத பதினொருவருடன் கலக்கிவரும் தென்னாபிரிக்காவுக்கு இந்த முறை கோப்பை கிடைக்கலாம்.

இத்தாலியின் AC Milan அணியில் ஆடிவந்த Kaka' ஸ்பெயினின் Real Madrid அணிக்கு 56 மில்லியன் யூரோவுக்கும், இங்கிலாந்தில் Manchester United அணியில் ஆடிவந்த Christiano Ronaldo அதே Real Madrid அணிக்கு சாதனைத் தொகையான 80 மில்லியன் யூரோவுக்கும் விற்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு வீரர்களின் விற்பனை கால்பந்தாட்ட உலகின் தற்போதைய பரபரப்பு.

கொஞ்சம் பொழுதுபோக்கு
ஒருவழியாக ‘பசங்க' DVD Rip (Superb Quality) கிடைத்தது. பார்த்தேன். விமர்சனங்களில் சொன்னது போல் ஜாலியான படம். வாண்டுங்களாகட்டும், விமல்-வேகா ஜோடியாகட்டும், மற்ற எல்லப் பாத்திரங்களாகட்டும் நன்றாக காட்டப்பட்டிருந்தன. ‘ஒரு வெட்கம் வருதே' மற்றும் பாலமுரளி கிருஷ்ணாவின் ‘அன்பாலே அழகாகும் வீடு' பாடல்கள் கவர்ந்தன. ‘எப்புடி?' 'கொன்னு கொன்னு கொன்னுடுவேன்?' போன்ற வசனங்களால் வசீகரிக்கும் அந்தக் குட்டிப் பயலை எனக்கு ரொம்பவே பிடித்தது. இயக்குனரிடம் ஒரு கேள்வி: தமிழ் சினிமா இயக்குனர்கள் மற்றும் கதாநாயகர்கள் மேல் என்ன கோபம் சார். இப்படிக் கடிச்சிருக்கீங்களே. ஆனா அவங்களுக்கு இப்பிடி யாராவது கடிக்கணும். இல்லாட்டா எங்களுக்கு ஒரே ‘பொல்லாத' 'ரோதனை'!!! தமிழ் சினிமாவின் எதிர்காலம் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் கொடுக்கும் மரியாதையில்தான் இருக்கிறது.

2 comments:

கலையரசன் said...

அருமையா எழுதுறீங்களே...
நல்லாயிருக்கு... நிறைய எழுதுங்கள்!!

Unknown said...

நன்றி கலையரசன்