Thursday 18 June 2009

பெல்ஃபாஸ்ட் சொல்லும் சேதி


வட அயர்லாந்து தலைநகரான பெல்ஃபாஸ்ட் நகரில் ஒரு சிறிய சுற்றுவட்டாரத்தில் வாழ்கின்ற இருபது குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட ரோமேனியர்கள் இனம்தெரியாத சில குழுக்களால் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றார்கள். இவர்களை ரோமேனியார்கள் என்று பொதுப்படையாகக் குறிப்பிடுவது எந்தளவுக்குப் பொருந்தும் என்று எனக்குத் தெரியவில்லை. காரணம் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர்களில் பலர் வட அயர்லாந்தில் குடியுரிமை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வட அயர்லாந்தில் 2003 மற்றும் 2004 ஆகிய இரு வருடங்களிலும் சேர்த்து 453 இனவெறிக் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டனவாம். அந்த எண்ணிக்கைதான் அயர்லாந்து நாட்டில் இதுகாரும் அதிகபட்சமாக இருந்ததாம். ஆனால் கடந்த 12 மாதங்களில் மட்டும் இவ்வாறான 1000 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்னர்கூட 46 போலந்துக் குடும்பங்கள் அயர்லாந்தை விட்டுத் தப்பியோடியது குறிப்பிடத்தக்கது.

பெல்ஃபாஸ்ட்டில் நடக்கும் இந்த வன்செயல்களை எதோ இரு இனங்களுக்கான மோதல் என்று விட்டுவிட முடியாது. இது தவறான முன்னுதாரணமாக அமைவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன. அதுவும் ஒரு புலம் பெயர்ந்த தமிழனுக்கு இது ஒரு நல்ல செய்தி அல்ல. என்னதான் உலகமயமாதல், இன ஏற்புணர்வு என்று அறிவுஜீவிகள் புதுப்புதுச் சொற்களை எல்லாம் பாவித்தாலும், சாதாரண மேலைத்தேய பிரஜைகளிடம் இந்த இன உணர்வு ஒழிந்துகொண்டிருக்கிறது. அதை இல்லை என்று மறுக்க முடியாது. நாளைக்கே உலகின் எங்காவது ஒரு மூலையில் நாங்களும் இவ்வாறு தாக்கப்படலாம். அவ்வாறு தாக்கப்பட்டால் எங்கே போவது நாங்கள்? போலந்து மக்களை போலந்து அரசாங்கம் வாரியணைத்துக் கொண்டது. ரோமானியர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறது அவர்களின் அரசாங்கம். ஆனால் எங்கள் நிலை நிச்சயம் அதோ கதிதான்.

வட அய்ர்லாந்து சம்பவத்தில் இரண்டு விடயங்கள் என்னைப் பாதித்தன. முதலாவது, அந்தப் பிரதேசப் போலீசாரின் மெத்தனம். இந்த ரோமேனிய மக்களின் வீடுகள் தாக்கப்பட்ட போது அவர்கள் போலீசாரின் உதவியை நாடியிருக்கிறார்கள். அப்படி உதவியை நாடிய தருணங்களில் சம்பவ இடத்துக்கு போலீசார் வர எடுத்துக் கொண்ட ஆகக் குறைந்த நேரம் 30 நிமிடங்கள். சில சம்பவ ஸ்தலங்களுக்கு நான்கு ஐந்து மணித்தியாலங்கள் கழித்துத் தான் வந்து சேர்ந்திருக்கிறார்கள் போலீசார். அந்தப் பிரதேசப் போலீஸ் உயரதிகாரியை சேனல்-4 செய்தியாளர் ஒருவர் கிழி கிழியெனக் கிழித்து, தொலைக்காட்சியில் பகிரங்க மன்னிப்புக் கேட்க வைத்தார். (நம்மூரில் என்றால் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று நாடு கடத்தியிருப்பார்கள்). என்னதான் மன்னிப்புக் கேட்டாலும் கிட்டத்தட்ட ஒருவாரமாக மக்கள் தாக்கப்பட்ட போது முறைப்பாட்டைக் கேட்க மட்டுமே வந்த வட அயர்லாந்து போலீசார், இவ்வாறான தாக்குதல்களைத் தடுக்க குறிப்பிட்ட சுற்றுவட்டாரத்தில் எந்த பந்தோபஸ்துக்கும் ஏற்பாடு செய்யாமல் மெத்தனமாகச் செயற்பட்ட விதம் சிறுபான்மையினரின் நலத்தில் பெரும்பான்மை அதிகாரவர்க்கங்கள் எல்லா நாடுகளிலும் ஒரே மனப்பான்மையுடன்தான் செயற்படுகின்றன என்ற கசப்பான உண்மையை மறுபடியும் சொல்லியிருக்கிறார்கள் வட அயர்லாந்து போலீசார்.

அதேவேளை அந்தச் சுற்று வட்டாரத்தில் வாழும் மற்ற சாதாரண பெரும்பான்மை இன மக்கள், இந்தப் பிரச்சினையைக் கையாண்ட விதம் நெகிழ்ச்சியானது. போலீசாருக்குத் தகவல் சொல்வதில் மும்முரமாக ஈடுபட்டது இப்படிப்பட்ட பக்கத்து வீட்டு மக்கள்தான். அதே போல் போலீசாரின் மெத்தனம் கண்டு அருகிலிருந்த ஒரு டென்னிஸ் மைதானத்துக்கும், ஒரு பல்கலைக் கழக தங்குமிடத்துக்கும் இந்த மக்களை இரவோடிரவாக அப்புறப்படுத்தி, உணவளித்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான மாற்றுடைகள், மற்றைய பொருட்கள், ரோமேனிய அகதிகளின் வீடுகளில் இருந்த விலைமதிப்பான பொருட்கள் எல்லாவற்றையும் அந்த டென்னிஸ் மைதானத்துக்கும், பல்கலைக்கழகத்துக்கும் கொண்டுபோய் கொடுப்பதில் முன்னின்றிருக்கிறார்கள். அரச அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து இந்த மக்களுக்குரிய பாதுகாப்பை ஓரளவு அதிகரித்ததோடு மட்டுமல்லாமல், மேற்சொன்ன இனவெறித் தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் காட்டவும் பலர் முன்வந்திருக்கிறார்கள். ஆகவே என்னதான் நிறம், மதம், இனம் என்று வேறுபாடுகள் இருந்தாலும், கூடிவாழ்ந்த மனிதர்கள் துன்புறும் போது உள்ளம் கனியும் ‘மனிதம்' இன்னும் கொஞ்சமாவது வாழ்கிறது என்ற நம்பிக்கையைத் தந்திருக்கிறார்கள் இந்தச் சுற்றுவட்டார மக்கள். (இது எல்லா இடத்திலும் சகஜமல்ல. சில இடங்களில் சேர்ந்து துவைப்பார்கள், கவனம்!)

4 comments:

யாத்ரீகன் said...

சென்ற கட்டுரையைத்தொடர்ந்து இந்த கட்டுரைக்கும் உங்கள் தளத்திற்கு வந்திருக்கிேன்.. சிறப்பாக எழுதுவோடு, மிகவும் முக்கிய கருத்துக்களை பொறுப்பாகவும் எழுதியிருக்கிறீர்கள்.. தொடரவும்..

Unknown said...

நன்றி யாத்ரீகன்

கலையரசன் said...

(இது எல்லா இடத்திலும் சகஜமல்ல. சில இடங்களில் சேர்ந்து துவைப்பார்கள், கவனம்!)

கடைசியா ஒரு உண்மையும் போட்டு உடைத்துவிட்டீர்கள், உண்மைதான்!!
ரசித்தேன்.. தொடர்கிறேன்!!

Unknown said...

வருகைதந்து பின்னுரையிட்டதோடு மட்டுமின்றி என்னையும் தொடரும் நண்பர் கலைக்கு நன்றி