Saturday 15 January 2011

செருப்பாய் இருப்போம்...

மன்மதன் அம்பு படத்தில் கமல்ஹாசன் எழுதிய வசனம் மற்றும் இன்னபிற சினிமாச் சர்ச்சைகளை முன்வைத்து.

'த்ரிஷாவின் செருப்பாக நடிக்கவும் தயார்’ என்கிறமாதிரி ஒரு எள்ளலை புலம்பெயர் தமிழர்களை நோக்கி அள்ளிவிட்டிருக்கிறார் அறிவுசீவி கமல்ஹாசன். Pre DVD Rip ல் ஒழுங்கான சத்தம், காட்சிகள் இல்லாமல் பார்த்த எனக்கே கோபம் பொத்துக்கொண்டுவந்தபோது, அறிவுசீவி கமலின் படங்களுக்கு முன்னோட்டம் பின்னோட்டம் எல்லாம் எழுதி முதல்நாள் முதல்காட்சி பார்த்தவர்கள் வயறெரிந்து சாபம் போடுவதில் பிழை ஒன்றும் இல்லைத்தான். ஆனால் இந்தக் கோபம் எதனடிப்படையில் வருகிறது என்று ஆராய்வோமானால் சில உண்மைகள் தெரியும். எந்தளவுக்கு தமிழக சினிமாவால், தமிழகத் தொலைக்காட்சிகளால் பீடிக்கப்பட்டிருக்கிறோம் என்பது தெரியவரும். இந்தக் கோபம் சிலவேளை நடிகை ஒருவருக்கு செருப்பாக நடிக்கிறேன் என்று சொல்லாமல் ‘விஜய்க்கு செருப்பாக நடிக்கத் தயார்’ ‘ரஜினிக்கு பின்பக்கம் கழுவ ரெடி’ ஏன் ‘அறிவுசீவிக்கு கொம்பு நீவிவிடுவது பாக்கியம்’ என்கிற ரீதியில் வசனம் எழுதப்பட்டிருந்தால் விசிலடித்துப் பாராட்டியும் இருப்போம்.

இந்தச் சர்ச்சையின்  அடிவேர் இரண்டு விடயங்களில் இருக்கிறது. ஒன்று கமல்ஹாசனின் அரசியல் தேர்வு. இரண்டாவது, இவ்வாறான எள்ளல்கள் மற்றும் ஈழத்தமிழர்களைத் தங்களின் ஒரு சந்தையாக மட்டும் பார்க்கக்கூடிய இந்தத் தமிழகச் சினிமாக்காரர்களின் மனநிலைக்கு எதிர் அரசியல் பேசக்கூடியளவுக்கு எமக்கான சினிமா எங்களிடம் இல்லாமை. இந்த இரண்டு விடயங்களின் அடிப்படையில் இந்தச் சர்ச்சையை அணுகலாம் என நினைக்கிறேன்.
Picture
கமல்ஹாசனிடம் இருந்துவந்த மேற்படி எள்ளல் கமலின் சமீபத்திய அரசியல் ஈடுபாடுகளைப் பார்த்து வருபவர்களுக்கு எக்காரணம் கொண்டும் பெரிய அதிர்ச்சியாக இருக்கப்போவதில்லை. அவரது ஒஹனேக்கல் பேச்சில் எனக்கு எல்லாரும் வேண்டும். ரஜனியும் வேண்டும், கும்ப்ளேவும் வேண்டும். சத்தியராஜும் வேண்டும். வைரமுத்துவும் வேண்டும் என்றும், இது நூறு கோடி மக்களின் பிரச்சினை என்றும் அவர் சொன்னதுதான் கிட்டத்தட்ட பொதுமேடை ஒன்றில் அவரது அரசியல் பூனை வெளிவந்த முதல் சந்தர்ப்பம் என்று நினைக்கிறேன். அதே போலவே, இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக நடிகர்கள் நடத்திய உண்ணாவிரதக் கண்காட்சியிலும் ‘ இது நான் தமிழன் என்பதால் பேசுவதாக என்னைக் குறுகியவட்டத்துக்குள் அடைத்துவிட வேண்டாம்’ என்ற கருத்தையும் உதிர்த்தார். இடையே ஹிட்லருக்கு எதிரான ஒரு கருத்தைச் சொல்லிவிட்டு அதன்பிறகு சிலவிடயங்களை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது மாதிரிச் சொன்னார். ‘அகதிகளாக அவர்களை ஏற்கிற பெருந்தன்மை எமக்கிருந்தாலும் அவர்களுக்கென்று ஒரு தன்மானம் இருக்கிறது’ போன்ற கருத்துகள் மூலம் அவர் சொல்லவந்தது,‘நீ வேறு நாங்கள் வேறு’ என்ற ஒன்றைத்தான். அவரது ‘தமிழன்-குறுகியவட்டம்’ என்கிற பார்வை அவருக்குள்ளே அவர் ஒளித்து வைத்திருக்கக்கூடிய இந்தியத் தேசியவாத அரசியலின் அபிமானம் அல்லது தமிழ்த்தேசியவாத அரசியலின்மீதான வெறுப்பின் குறியீடே. இதேதான் அவரது பெரும் செல்வாக்கில் உருவாகிய ‘உன்னைப் போல் ஒருவன்’ படம்கூட எடுத்துச்சொன்னது. ’உன்னைப் போல் ஒருவன்’ என்ற படத்தின் மூலக்கதை வேறொருவருடையது, அதை ‘சக்ரி டோலட்டி’ என்கிற இயக்குனர் இயக்கினார், இரா. முருகன் வசனங்களை எழுதினார். இவ்வாறிருக்கையில் அது எப்படிக் கமல்ஹாசனின் அரசியல் ஆகும்? என்று கேள்வி எழலாம். மேற்படி திரைப்படத்தை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கிற நோக்கத்தோடு விஜய் தொலைக்காட்சியில் இன்னொரு அறிவுசீவி கோபிநாத்துடன் சேர்ந்து அறிவுசீவி கமல்ஹாசன் செய்த சில நிகழ்ச்சிகள், அந்த நிகழ்ச்சிகள் படம் பேசுகிற அதே அரசியலைத்தான் கமல்ஹாசனும் மானசீகமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டியிருந்தன. இந்த அரசியல்தேர்வு கமல்ஹாசனின் பிறப்புரிமை. அந்தப் பிறப்புரிமையின் அடிப்படையில் தமிழ்த்தேசியவாதத்தின் மிகப் பெரிய குறியீடான ஈழத்தமிழர்கள் மீதான எள்ளல் அவருக்கு இயல்பாகவே வரும். அதில் பெரியளவு ஆச்சரியம் இருக்கப்போவதில்லை.

ஏற்கனவே கமல் தெனாலி என்றொரு படத்தில் நடித்திருந்தார். அதிலும் அவர் ஈழத்தமிழர்களை எள்ளல் செய்தார் என்று ஒருபுறமும், இல்லை ஈழத்தமிழர்களின் வலியைக் காட்டியிருந்தார் என்று மறுபுறமும் வாதிட்டுக்கொண்டிருந்தார்கள். அந்தத் ’தெனாலி சோமன்’ என்கிற பாத்திரப்படைப்பில் எனக்குப் பெரிய கோபமெல்லாம் இல்லை. இலங்கைத் தமிழர்கள் எப்போதும் இறுகிய முகத்தோடே அழுதபடிதான் இருப்பார்கள் என்பதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட நாடகத்தனம். இருந்தபோதும் அந்தப் பாத்திரம் பேசுகிற மொழி தொடர்பான விடயங்களில் நிச்சயம் கமல்ஹாசன் மெத்தனமாகவே இருந்திருக்கிறார். மிகமுக்கியமாக பி.எச்.அப்துல் ஹமீதுவின் உதவியோடு எழுதப்பட ’றேடியோ சிலோன்’ நாடகத்தமிழ் போன்ற விடயங்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். அவர் அப்படிச் செய்யாமல் விட்டதுகூட ஈழத்தமிழர்கள் மீதான அவரது பார்வையின் பிரதிபலிப்பாகக் கருதப்படலாம். ’போர் விளைவுகளால் மனநிலை தவறிய இளைஞன்’ கதாபாத்திரம் போரின் விளைவுகளைக் காட்டப் பயன்படுத்தப்பட்டதா அல்லது அப்போது தமிழகச் சினிமாவுக்குக் கிடைக்க ஆரம்பித்திருந்த புதிய சந்தையைத் தட்டித் திறக்கப் பயன்படுத்தப்பட்டதா என்பது படம் எடுத்தவர்களுக்கே வெளிச்சம். எனக்குத் தெரிந்தவரை இன்றைக்கு தமிழக சினிமாவில் பங்குபெறக்கூடிய நிறையப்பேரின் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவானது நேரடியாக அவர்களின் சினிமா வியாபாரத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்கப்படவேண்டியதாகவே இருக்கிறது.

தமிழக சினிமாக்களில் வெளிநாட்டு வர்த்தகத்தில் ஒரு குறிப்பிடக்கூடிய பங்கு புலம்பெயர் ஈழத்தமிழர்களிடம் இருந்தே கிடைக்கிறது என்பது உண்மை. இலங்கையில் இருந்தும் ஒரு பங்கு போகிற போதிலும் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கக்கூடிய வருமானத்தோடு ஒப்பிடும்போது கொஞ்சம் நலிவாகவே இருக்கும். இன்னும் கொஞ்சக்காலத்தில் நாங்கள் பதின்மங்களில் இருந்தபோது ஆரம்பமான ஒரு கெட்டபோக்குக் காரணமாக இந்த நிலமை மாறலாம். காரணம் ரஜனிகாந்தின் துதி பாட ஒரு மூவர் குழுமம் இயங்கிவருகிறது, நடிகர் விஜயை வைத்துச் சண்டை பிடிக்கிறார்கள். ஏன், ‘சச்சின்’ படமாக இருக்கவேண்டும், யாழ்ப்பாணம் மனோகரா திரையரங்கில் அபிஷேகம் செய்தார்கள். ‘ஜீ’ என்ற நடிகர் அஜீத்தின் படம் அதே திரையரங்கில் ஓடியபோது ஒரு சோகமான காட்சிக்கு விசிலடித்த நடிகர் விஜய் ரசிகர்கள் இருந்த பல்கணிக்கு குடித்துமுடித்த சோடாப்போத்தல்கள் பறந்ததும் நடந்தது. இப்போதுகூட போனவருடத்து கந்தசஷ்டிக் காலத்தில் வடமராட்சியில் ஒரு கோவிலில் சூரனும் முருகனும் ‘வாடா மாப்பிள்ளை’ பாடலுக்கு ஆடியிருக்கிறார்கள். புலம்பெயர் ஈழத்தமிழர்களின் ஒரே பொழுதுபோக்கு சினிமாவும், தமிழகத்துத் தொலைக்காட்சிகளாகவும் ஆகியிருக்கிறது. தமிழ் வன் மற்றும் தமிழ் விசன் ஆகிய இரண்டு தொலைக்காட்சிகளுமே முறையே கலைஞர் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சியிடம் இருந்தே நிகழ்ச்சிகளை வாங்கிப்போடுகின்றன. மொத்தத்தில் தமிழக சினிமா மற்றும் சினிமா சார்ந்தியங்கும் தொலைக்காட்சிகளே இன்றைக்கு ஈழத்தமிழர்களின் பொழுதுபோக்கு அம்சங்களாக மாறிவிட்டன என்கிற உண்மையை ஒப்புக்கொண்டேயாகவேண்டும். இந்தப் பெரிய சந்தையை இன்னும் இன்னும் ஊடுருவும் முயற்சியாகத்தான் நடிகர்களின் பிரபாகரனாக ஒருமுறையாவது நடிக்கவேண்டும் என்கிற ஆசைகளையும், இயக்குனர்களின் ஈழத்தை மையமாக வைத்து ஒருபடமாவது எடுக்கவேண்டும் என்கிற இலட்சியங்களையும், பிரேம்கோபால், பிரேமினி போன்றவர்கள் ஈழத்தின் துயரசாட்சியங்களாகக் காட்டப்படுவதையும் பார்க்கமுடியும்.

ஒரு சந்தை பெரும்பாலும் தேவை-வழங்கல் இரண்டின் அடிப்படையிலேயே இயங்குகிறது. தமிழக சினிமாவின் ஈழத்தமிழ் சந்தையானது முதலில் வழங்கலைவிடக் குறைந்த தேவையுடையதாகவே இருந்தது. அப்போதெல்லாம் பெரியளவில் தமிழகத்துச் சினிமாக்காரர்களுக்கு ஈழத்தமிழர்களைப் பற்றிய அக்கறை பெரிதாக இருந்திருக்கவில்லை. இங்கே எம்.ஜி.ராமச்சந்திரனின் ஈழ ஆதரவுக்கு அரசியல் காரணங்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது. எம். ஜி. ராமச்சந்திரனை சினிமாக்காரனாக அல்லாமல் அரசியல்வாதியாகப் பார்க்கவேண்டியிருக்கிறது. கொஞ்சக் காலத்தின் பிறகு ஈழத்தமிழர் சந்தையில் தமிழகச் சினிமாவுக்கான நுகர்வோர் அதிகரிக்க தேவை வழங்கலை விஞ்சியது. இப்போது ஈழத்தமிழர் சந்தையைத் தமிழக சினிமாக்காரர்கள் இன்னும் உற்றுக் கவனித்தார்கள். இந்தச் சந்தையைத் தம்மிடம் வைத்திருப்பது தொடர்பில் பல முயற்சிகளை மேற்கொண்டார்கள். அவர்களுக்கு ‘ஐங்கரன் International' பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. இந்தச் சந்தையின் மிகப்பெரிய ஆச்சரியமாகப் பார்க்கக்கூடியது சந்தையின் தேவை-வழங்கல் விதி வழங்கிகள் மற்றும் சந்தைப்படுத்துபவர்களால் உடைக்கப்பட்டதுதான். தனியே ஈழத்தமிழ்ச் சந்தையில் மட்டுமல்லாமல் இந்தியச் சந்தைகளிலும் வழங்கிகளும் சந்தைப்படுத்திகளும் இந்த விதியை உடைத்து தேவை இல்லாத இடத்தில்கூட நுகர்வோர் இவர்களின் சந்தைப் பொருளை கூடிய விலையில் வாங்குகிற நிலமையை ஏற்படுத்தியிருப்பதென்பது வியத்தகு விடயமே. விரும்பியோ விரும்பாமலோ ஒரு பொருளை நுகர்வோர் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும் என்கிற நிலமை இப்போது கருணாநிதி மற்றும் கலாநிதி மாறன் குடும்பங்களால் தொலைக்காட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது என்பதும் சுட்டிக்காட்டப்படவேண்டும். முக்கியமாக சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடர்பில் பொதுவெளியில் நடக்கிற உரையாடல்கள்கூட இந்தப்போக்கின் தொடர்ச்சியாகவே பார்க்கமுடியும். வலைத்தளங்களில் மட்டுமல்லாமல் சந்திப்புகளில்கூட எப்படியாவது நாங்கள் தமிழகச் சினிமாபற்றி உரையாடிக்கொண்டுதான் இருக்கிறோம். ஏன், இணையங்களில் கிறுக்குகிற என் போல எத்தனையோபேர் தமிழகச் சினிமாவை மட்டுமே கருப்பொருளாக வைத்து எவ்வளவுகாலம் எழுதிவந்தோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான மக்களால் படிக்கப்படுகிற ஆக்கங்களாக சினிமா விமர்சனங்களே இணைய எழுத்துலகில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றமையைக் கவனத்தில்கொள்ளவேண்டும். இதற்கான காரணங்களையும் தேடிப்பார்க்கவேண்டியிருக்கிறது.

ஈழத்தமிழர்களிடம் இருந்து இதுவரைக்கும் தமிழகச்சினிமாவை எதிர்த்து நிற்கக்கூடிய சினிமாக்கள் வரவில்லை என்பதுதான் பிரச்சினையே. சமீபத்தில் பெருமளவு கொண்டாடப்பட்ட ‘1999’ திரைப்படத்தில் எத்தனையோ நல்ல விடயங்கள் இருந்தபோதும் தமிழகச் சினிமாவின் தாக்கம் பெருமளவில் இருந்தது. ‘மரநாய்’ என்கிற ஒரு கதாபாத்திரத்தைக் கடைசிவரையில் திரையில் காட்டாமல், அந்தப் பாத்திரம் பற்றிய பயங்களை, தாக்கத்தை மனதில் விதைத்த இயக்குனர் லெனின்.எம். சிவம், கதாநாயகியைக்கூட சாதாரண  காட்சிகளில் காட்டாமல் இருந்துவிட்டு இரண்டு பாடல்களில் மட்டும் ஆடவைத்துக் காட்டியிருந்தார் என்பதை வருத்தத்தோடு குறிப்பிடவேண்டியிருக்கிறது. கனடாவில் நடந்த குறும்பட விழாவொன்று பற்றி டிசே தமிழன் எழுதிய ஒரு கட்டுரையில்கூட ஈழப்படைப்பாளிகளின் குறும்படங்களில் இருந்த கதைக்குறைபாடுகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். ஈழத்தமிழர்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பெரும்பாலும் கருத்தில் கொள்ளாமல் தமிழகச் சினிமாவின் பாதிப்பிலான படங்களை அல்லது தனியே அழுதுவடிகிற கதைகளை படமாக எடுப்பது எம்மவர் மத்தியில் இருக்கிற குறைபாடாக இருக்கிறது. யுத்தத்தின் மத்தியில் வாழ்ந்த மக்களின் மற்றைய பக்கங்கள் எழுத்தளவிலாவது இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. இப்படியான நிலையில் கிட்டத்தட்ட ஈழத்தவர் வாழ்க்கையில், முக்கியமாகப் புலம்பெயர்ந்த ஈழத்தவர் வாழ்க்கையில் ஒரு அங்கமாகக் கலந்துபோய்விட்ட தமிழக சினிமாவைப் பிரித்தெடுப்பது என்பது மற்று சினிமா மற்றும் கலைகளுக்கு முன்னால் இருக்கக்கூடிய மிகப்பெரிய சவாலாகும்.

தமிழக சினிமா தொடர்பில் ஈழத்தவரிடம் அல்லது சில விசிலடிச்சான் குஞ்சுகளிடம் இப்போது பெருகிவருகிற இன்னொரு நடைமுறை  சில நடிகர்களின் படங்கள் வருகிறபோது எழுப்புகிற புறக்கணிப்புக் கோசங்கள். நடிகர் விஜயின் வேட்டைக்காரன் என்ற படம் வந்தபோது அதற்கு சில நாட்களின் முன் விஜய் ராகுல் காந்தியைச் சந்தித்தார், காங்கிரசுக் கட்சியில் இணைகிறார், ஆகவே புறக்கணியுங்கள் என்கிற கோசம் முன்வைக்கப்பட்டது. அந்தப் படத்தின் இசையமைப்பாளர் பற்றியும் ஏதோ ஒரு சிக்கலை அப்போது முன்வைத்தார்கள். இப்போது விஜயின் காவலன் படத்துக்கான புறக்கணிப்புப் பிரச்சாரங்களில் நடிகை அசின் முன்னிறுத்தப்படுகிறார். காங்கிரசில் சேர்வதன் மூலம் ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகத்தை விஜய் ‘யாழ்நகர்’ என்ற ஊரின் மீட்பராக நடித்துக் களைந்துவிட்டாராம். இன்றைக்கு வரைக்கும் இந்தப் புறக்கணிப்புகளின் மூலகாரணம் ‘அஜீத்-விஜய்’ கதாநாயக வழிபாடுதவிர வேறொன்றுமில்லை என்பது திண்ணம். இல்லாவிட்டால் இந்த இருவரின் படங்களைப் புறக்கணியுங்கள் என்று ஈழத்தோடு தொடர்புபடுத்தி அடிக்கடி கத்திக்கொண்டிருக்கமாட்டார்கள். ஏன், ‘செருப்பாக இருப்பேன்’ என்ற வசனம் எழுதிய கமல்ஹாசனுக்கு எதிராக இதுவரை எந்தவிதமான புறக்கணிப்புக் கோசமும் வந்ததில்லை. இப்படியான கோசங்கள் தனியே விஜய் மற்றும் அஜீத் படங்கள் வரும்போதே எழுப்பப்படுகின்றன என்பதிலிருந்தே இவற்றின் உண்மை நோக்கம் தெரிந்துவிடும். இது நிச்சயமாக சில விசிலடிச்சான் குஞ்சுகளின் வேலையே. புறக்கணிப்பது என்று உணர்வு பூர்வமாக முடிவெடுத்துவிட்டால் முழுமையாகப் புறக்கணிக்கவேண்டும். அப்படி இல்லாமல் இந்த அரைகுறை விளையாட்டுகள் மூலம் வழங்கிகளால் ஆளப்படுகிற ஒரு சந்தையை உடைப்பது என்பது கடினமானதே. இந்தக் கோசங்களைத் தாண்டி மேற்படி படங்கள் இந்தச் சந்தையில் இலகுவில் நல்ல இலாபத்தோடு விலைபோகின்றமைக்கான காரணங்களை எடுத்தாயவேண்டியுள்ளது.

தமிழகச் சினிமா மற்றும் தொலைக்காட்சிகள் ஈழத்தமிழர் வாழ்வில் பாரிய செல்வாக்குச் செலுத்துவதற்கான பாரிய காரணம், ஏலவே சொன்னதுபோலவே எம்மிடம் மாற்று முயற்சிகள் இல்லாமல் போயிருக்கின்றமை அல்லது மாற்று முயற்சிகளுக்கான களம் இல்லாமல் போயிருக்கின்றமையே ஆகும். முக்கியமாகப் புலம்பெயர் சூழலில்கூட இந்தப் பிரச்சினை படைப்பாளிகளுக்கு இருப்பது வருந்தத்தக்கது. கனடாவில் இருக்கக்கூடிய மிகமுக்கியமான சில ஈழப்படைப்பாளிகள் தமிழகப்படைப்பாளிகளின் அங்கீகாரம் தொடர்பில் கொண்டிருக்கிற கருத்துக்கள் அதிர்ச்சியூட்டுபவையாகவே இருக்கின்றன. அவர்களின் அங்கீகாரம் மேலானதொன்றாகவே பார்க்கப்படுகிறது. இது தொடர்பில் கனடாவில் இருக்கிற முக்கியமான ஈழக்கவிஞர் ஒருவரோடு டிசே முரண்பட்டுமிருக்கிறார். முற்றுமுழுதாக தமிழகப்படைப்பாளிகளிடமிருந்து எம்மைத் துண்டித்துக்கொள்ளவேண்டும் என்கிற வாதம் இங்கே முன்வைக்கப்படவில்லை.தீர்ப்பெழுதும் நாட்டாமைகளாக அவர்களை அவர்களோ, அவர்களை நாங்களோ கருதவேண்டியதில்லை. எங்களுக்கான வழிகளை நாம் உருவாக்கிக்கொள்ளவேண்டும். எங்கள் வழியில் நாங்கள் அவர்களை எதிர்கொள்ளவேண்டும். இல்லையெனில் கமல்ஹாசன் போன்ற குழப்பநிலை அரசியல்வாதிகளிடமிருந்து இப்படியான இழிவுகள் வந்துகொண்டேதான் இருக்கும். மேலும், இளம்தலைமுறைக்கான ஒரு கடமையாக நான் பார்ப்பது, தந்திரமான வியாபாரிகளால் தமிழகச் சினிமாக்காரர்களிடம் நாங்கள் கட்டுண்டு போயிருக்கிறோம். எங்கள் எழுத்து மொழியில்கூட அவர்களின் மொழி ஆதிக்கம் செலுத்துமளவுக்கு நாம் மாசுபட்டிருக்கிறோம், எங்களின் சுயத்தை இழந்திருக்கிறோம். ரஜனிகாந்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்கிறோம். தவிக்கிற சகோதரனுக்கு உதவுவதற்கு வைக்கிற வேண்டுகோளில்கூட விஜய் படத்துக்கு விளம்பரம் செய்கிறோம், ‘நீங்களும் காவலனாகலாம்’ என்று. மாண்டவரை நினைக்கிற ஒன்றுகூடல்கள் கூட ‘சீமான் கலந்துகொள்ளும் கூட்டம்’ என்று சீமானை முன்னிறுத்தி விளம்பரம் செய்யப்படுகின்றன. இப்படியான விடயங்களை இயலுமானவரையில் எதிர்க்கவேண்டும். பொழுதுபோக்குக்காகக் கிடைக்கிற ஒரு சந்தைப்பொருள் எங்கள் வாழ்வியலாக மாறிவிடக்கூடாது என்பதில் கவனம் இருக்கவேண்டும்.

புறக்கணிப்புகளை ஆரம்பிக்கிற யாரும் நடக்கக்கூடிய விடயங்களைப் பேசுகிறார்களில்லை. என்னுடைய ஆசிரியர் ஒருவர் ‘இலங்கைப் பொருட்களைப் புறக்கணிப்போம்’ என்று தீவிர பிரச்சாரம் நடந்த காலத்தைப் பற்றி Face Book ல் சொல்லியிருந்தார். ’புறக்கணித்தால் வியாபாரம் என்னாவது?’ என்கிற மனநிலையில்தான் பலர் இருக்கிறார்கள். கனடாவில் இருக்கிற பெரிய கடைகளுக்கு ஆரம்பகாலத்து முதல் எங்கிருந்து வந்தது, அவை யாருடைய கடைகள் என்று பார்க்கவேண்டும். அவர்களே புறக்கணிப்புகளை இந்தமாதிரித்தான் எதிர்கொண்டார்கள். அதாவது, உணர்வு பூர்வமான, போராட்ட குணம் உள்ளவர்களாகக் காட்டிக்கொள்கிறவர்கள்கூட பெருவியாபாரிகளின் மனநிலையோடுதான் இருக்கிறார்கள். மூலதனத்தை மீட்பது, இலாபத்தைப் பெருக்குவது போன்றவைதான் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. இலாபப் பெருக்கமும், மூலதன மீட்பும் பிழையல்ல, மூலதனம் உங்கள் பணமாக இருக்கிறபோது. இன்னும் ஆழமாகச் சிந்தித்தால் மண்மீட்பு முதல், இனமானம் என்கிற சொல்லாடல் வரை எல்லாமே கிட்டத்தட்ட வியாபாரமயப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதே புறக்கணிப்பாளர்கள்தான் இலண்டனில் எடுக்கப்பட்ட ஒரு தமிழகச் சினிமாவில் தலைகாட்ட அலைந்து திரிந்து தலைகாட்டியும் இருக்கிறார்கள். இதே புறக்கணிப்பாளர்கள்தான் விஜயகாந்துக்கு காசில்லாமல் கனடாவில் தங்க ஏற்பாடும் செய்து கொடுத்திருக்கிறார்கள். ஈழத்துக் கலைஞர்களைக் கௌரவிக்கிற விழாவுக்கு பிரகஷ்ராஜ் வந்து போயிருக்கிறார். வடிவேலு முதற்கொண்டு கலக்கப்போவது யாரு படைவரை எல்லோரும் உழைத்துக்கொண்டு போவார்கள். சூப்பர் சிங்கர், மானாட மயிலாட போன்றவைதான் ‘கலை நிகழ்ச்சிகள்’ ஆகும். பிரேம்கோபாலும், பிரேமினியும் தமிழீழம் பெற்றுத் தருவார்கள். இப்படியாக எந்தவிதமான அடிப்படை அறமோ, ஓர்மமோ இல்லாமல் இருக்கிற எங்களை ‘செருப்பாய் இரு’ என்று ஒரு கழிசடை சொல்லும், இன்னொரு கழிசடை ‘யாழ்நகர்’ என்றெல்லாம் பொது அறிவெல்லாம் இல்லாமல் பெயரிட்டு விசரேற்றும், இன்னொரு கழிசடை உண்ணாவிரதப்பந்தலில் ‘பஞ்ச்’ பேசும். நாங்களும் ‘செருப்பாய் இருப்போம்’.

தமிழகச் சினிமா நல்ல பொழுதுபோக்காக இருக்கிறதா. பாருங்கள், மகிழுங்கள். தயவுசெய்து அந்த வியாபாரிகளை எங்கள் வாழ்வியலுக்குள் மூக்கை நுழைக்க விடாதீர்கள். கெட்ட அரசியல்வாதியைவிட மோசமானவர்கள் இந்தக் கெட்டிக்கார வியாபாரிகள்

 



8 comments:

maadhumai said...

Well Said.Congrats..

Anonymous said...

அட படுபாவி!
மனிதன் மாறிவிட்டான் !
வயோதிகம் வரும்போது உடல் தளரும்:ரத்தம் சுண்டிப் போக நேரிடும்: கை கால்கள் செயல் இழக்கும் :கண்,காது போன்ற அவையங்கள் முழுமையாக இயங்காது!
ஆனாலும் என்ன?
உள்ளமும், உணர்வும் ,எப்போதும் போல அதிக வெப்பத்துடன் இருக்கவேண்டும் :
திராவிட காவடியை ஏந்தி ,தியாக திருவிளக்கை போற்றி, புகழ்ந்து .......
தமிழன் ,இந்தியனாக மாறினால் இப்படித்தான் செய்வான்!
அட படுபாவி!
kamal! எதற்கு இந்த பிழைப்பு?
இதைவிட மயிர் பிடுங்கும் வேலைக்கு போகலாம்!
pathiplans@sify.com









New! Download Google Transliteration IME Type a word in English and press SPACE to transliterate. Press CTRL+G (⌘+G on Mac) to switch between English and the selected language. Dismiss
Transliteration is available in Blogger, Gmail, Knol, Orkut and as a bookmarklet. You can also enable it on your website using the transliteration API.

©2010 Google - Font Guide - Discuss - Help - Google Home

Anonymous said...

Kamal hassan thinking he is all rounder. some time yes. But, why he is commenting Oscar genious Rahman!!! Hamal Hassan is not in the place to reach Rahman's height.
Don't be selfish kamal...

maadhumai said...

We, Eelam tamils never going to get right judgement from any countries in this world. I dont know why we expect and rely on others to come and solve our problem specially India. Each country has its own political agenda or whatever they are talking. In Tamil Nadu there are a few people who supported, supporting or will be suppoting to us to get a solution, but frankly say, its only <1%. So, on what basis we rely on them, we expect there will be revelution from Tamil Nadu to solve our problem? Beleiving Seeman, or his few suppoters or the great Mr. Karunanithy is the utmost foolish thing. Just let them to be Indians. We are proudly Eelam Tamils. We have to think by our selves... for us.. and by us...

Think Why Not said...

என்ன சொல்வதெனறே தெரியவில்லை.. அந்தளவிற்கு நாம் சினிமா நம்மை ஆட்கொண்டிருக்கிறது...

/* பொழுதுபோக்குக்காகக் கிடைக்கிற ஒரு சந்தைப்பொருள் எங்கள் வாழ்வியலாக மாறிவிடக்கூடாது என்பதில் கவனம் இருக்கவேண்டும்.*/
வழி மொழிகிறேன்...

அருமையான பகுப்பாய்வும் எழுத்தும்.. தொடர்க.. :)

vasan said...

/ஈழத்தமிழர்களுக்கான ஆதரவானது நேரடியாக அவர்களின் சினிமா வியாபாரத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்கப்படவேண்டியதாகவே இருக்கிறது.

தமிழக சினிமாக்களில் வெளிநாட்டு வர்த்தகத்தில் ஒரு குறிப்பிடக்கூடிய பங்கு புலம்பெயர் ஈழத்தமிழர்களிடம் இருந்தே கிடைக்கிறது என்பது உண்மை./
The naked truth. hats off to you.

Mohan said...

//தமிழகச் சினிமா நல்ல பொழுதுபோக்காக இருக்கிறதா. பாருங்கள், மகிழுங்கள். தயவுசெய்து அந்த வியாபாரிகளை எங்கள் வாழ்வியலுக்குள் மூக்கை நுழைக்க விடாதீர்கள். கெட்ட அரசியல்வாதியைவிட மோசமானவர்கள் இந்தக் கெட்டிக்கார வியாபாரிகள்//
Keith,
I appreciate your posts. The above applies to everybody (not only Eelam Tamils). For the past 45 years all the Tamilnadu chief ministers (except O. Pannerselvam) are from cinema field. Do Honey and Milk flowing like river there? Let us take California example, Did Mr.Termninator change at least one city (or place) in California?.

Anonymous said...

KAMAL is not like that person lowering tamil peoples, but i am a black guy living in tamil nadu, kamalis not such a guy, sure all comments posted would feel very shame.
I am not kamal fan, but i know kamal in personally not like others describing tamilians in real life, becoz he's also like us as a tamilian, but someday u all know about it, why he used such words in movie