Showing posts with label மனதில் பட்டவை. Show all posts
Showing posts with label மனதில் பட்டவை. Show all posts

Monday, 10 August 2009

மனதில் பட்டவை- வாரம்: ஓகஸ்ட் 9-15, 2009

அரசியல்-இலங்கை

யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்திருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியும் வவுனியாவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் வெற்றி பெற்றிருக்கின்றன. முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கைக் கட்சி ஒன்று ஜெயித்திருக்கிறது, டக்ளஸ் தேவானந்தாவின் பெருமுயற்சியால். ஆனால் சோகம் என்ன வென்றால், 100,417 வாக்காளர்கள் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு வாக்காளர்களே வாக்களித்திருக்கிறார்கள். வவுனியாவில் கொஞ்சம் பரவாயில்லை, 50% பேர் வாக்களித்திருக்கிறார்கள். அந்த வாக்குகளின் அடிப்படையில் எப்படிப் பிரதிநிதித்துவத்தைத் தீர்மானிக்கலாம்? யாருடைய தவறு? ஜனநாயகத்தில் நம்பிக்கை இழந்த மக்களது தவறா? நம்பிக்கை இழக்க வைத்த தலைவர்களின் தவறா? இல்லை நாடுவிட்டு ஓடிவிட்ட என் மாதிரிப் பேடிகளின் தவறா?

ஒவ்வொரு தலைவரும் தேர்தல் முடிவுகள் பற்றி ஒவ்வொரு விதமான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார்கள். யார் நேர்மையாகக் கருத்துச் சொல்லி இருக்கிறார், யார் புலம்புகிறார் என்றெல்லாம் என்னால் முடிவுசெய்ய முடியாது. எனக்கென்னவோ எல்லோருமே நன்றாகப் புளுகுகிறார்கள் என்றுதான் படுகிறது. ஒரு தேர்தலில் வெறும் 20% வாக்காளர்கள்தான் (அதில் பல முறைகேடான வாக்குகளும் உள்ளடக்கம்) வாக்களித்திருக்கிறார்கள் என்பது ஐக்கிய இலங்கை ஜனநாயாகத்தை நோக்கிப் போகவில்லை என்றுதான் காட்டுகிறது. அதற்காக முன்னைய தேர்தல்களில் அமோகமாக வாக்குப் பதிவு நிகழ்ந்தபோது மட்டும் ஜனநாயகம் உயர்ந்து நின்றது என்றும் மனச்சாட்சிக்கு விரோதமாகப் புளுகவும் மனம் ஒப்பவில்லை. கருத்துச் சுதந்திரமும் தனிமனித பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்ட ஒரு தேசத்திலிருந்து நான் புலம்புவது எந்த வகையில் நியாயம் என்று எனக்குத் தெரியாவிட்டாலும், என் மனதில் பட்டதைச் சொல்லியிருக்கிறேன். தயவுசெய்து சண்டைக்கு வராதீர்கள்.

அரசியல்- உலகம்

வட அமெரிக்கக் கண்ட நாடுகளின் தலைவர்களின் ஐந்தாவது உச்சி மாநாடு தனது ஒன்பதாவது நாளில் முக்கிய கட்டத்தை அடைந்திருக்கிறது. கனேடியப் பிரதம மந்திரி ஸ்டீஃபன் ஹார்பர், அமெரிக்க ஜனாதிபதி பாராக் ஒபாமா, மெக்சிக்க ஜனாதிபதி ஃபெலிப்பே கால்டரோன் ஆகியோர் முத்தரப்புக் கலந்துரையாடல்கள் நிகழ்த்தி வருகிறார்கள். இவர்களது கலந்துரையாடல்களில் பொருளாதாரம், H1N1 வைரஸ், சுற்றுச்சூழல், தேசிய பாதுகாப்பு, போதைப் பொருள் எதிர்ப்பு ஆகியவை முக்கிய இடம் பெறும். தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் ஏதாவது ஒரு நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுக்காமலும், அதற்கு வட அமெரிக்காவின் மற்ற இரு தலைவர்களும் தலையசைக்காமலும் எதை வேண்டுமானாலும் கலந்துரையாடட்டும்.

ஆப்கானிஸ்தானிலிருந்து சீனா நோக்கிப் பயணித்த விமானம் ஒன்று வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக கந்தகாருக்குத் திருப்பி அனுப்பபாட்டது. சீனாவின் ஸின்ஜியாங் என்ற மாநிலத்திலுள்ள உரும்கி என்ற நகரிலுள்ள விமானத் தளத்தில் இறங்க வேண்டிய விமானத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக அச்சுறுத்தல் வந்த காரணத்தால் விமானம் கந்தகாருக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதே சமயம் இந்த விமானம் அல்-கெய்தா தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சில செய்தி ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. எது எப்படியோ இன்னுமொரு 9/11 வேண்டாம் என்பது என்னுடைய அபிப்பிராயம். (உயரமான கட்டடங்களில் வேலை கேட்டுப் போகும்போது வயிற்றைக் கலக்குகிறது. நல்ல வேளை, யாரும் உயரமான கட்டடங்களிலோ, உயரமில்லாத கட்டடங்களிலோ எனக்கு வேலை தரவில்லை, இன்றுவரை)

பொருளாதாரம்

கனடாவில் கேபிள் தொலைக்காட்சி சேவைகளை வழங்கும் பிரபலமான இரு நிறுவனங்கள் கேபிள் தொலைக்காட்சிக் கட்டனங்கள் வருகிற நாட்களில் உயரலாம் என்று எச்சரித்திருக்கின்றன. பெல் கனடா மற்றும் ரோஜேர்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் கனேடிய தொலைகாட்சி, வானொலி மற்றும் தொலைத் தொடர்பாளர்கள் ஆணையம் அறிவித்துள்ள புதிய சட்டதிட்டங்களுக்கமைய சேவைகளை வழங்குவதற்கு தம் வாடிக்கையாளர்களிடமிருந்து இன்னும் 1.5% கட்டணம் கூடுதலாக அறவிடவேண்டியதாக இருக்கும் என்று எதிர்வு கூறியிருக்கிறார்கள். ஏற்கனவே இந்தத் துறைகளில் நன்றாகக் கால்பதித்த நிறுவனங்கள் இவை என்பதால் புதியவர்கல் சந்தைக்குள் வருவது மிகவும் கடினமாகிப் போய்விட்டது. அதனால் கிட்டத்தட்ட எல்லாப் பாவனையாளர்களும் இவர்களின் கட்டண அதிகரிப்பை ஏற்றுக் கொண்டாக வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். சமீபகாலமாக ஒருவரை ஒருவர் தாக்கி விளம்பரம் செய்து வந்த இரு நிறுவனங்களும் ஒரே மாதிரி அறிக்கை விட்டது காலத்தின் கட்டாயம் இல்லையில்லை பொருளாதாரத்தின் கட்டாயம்.


விளையாட்டு

ஆஷஸ் தொடர் உச்சக் கட்டத்தை எட்டியிருக்கிறது. லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது போட்டியில் மிகவும் அற்புதமாக ஆடிய அவுஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று போட்டித் தொடரை 1-1 என்று சமன் செய்திருக்கிறது. ஓவலில் நடைபெறும் இறுதிப் போட்டியை சம்நிலையில் முடித்தாலே அவர்கள் ஆஷஸ் தொடரைத் தக்க வைத்துக் கொள்ளலாம். இதற்கிடையில் ஃபிளிண்டோஃப் நான்காவது போட்டியில் காயம் காரணமாக ஒதுக்கப் பட்டது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. விளையாட ஃபிளிண்டோஃப் தயாராக இருந்த போதும், அணித்தலைவர் ஸ்ரோஸ் மற்றும் அணி நிர்வாகம் அவரது உடல் நிலை முழுமையாகத் தேறவில்லை என்று சொல்லி நிறுத்தி வைத்ததாக ஃபிளிண்டோஃபின் முகவர் கூறியிருக்கிறார். இந்த விஷயத்தில் நான் ஸ்ரோஸின் பக்கமே. என்னைப் பொறுத்தவரை ஃபிளிண்டோஃப் இந்த ஆஷஸ் தொடருக்கே தெரிவு செய்யப்பட்டிருக்கக் கூடாது. ஏனென்பதை ஆஷஸ் முடிந்ததும் நான் எழுதவிருக்கும் ‘ஆஷஸ் 2009-ஒரு பார்வை' தொடரில் சொல்கிறேன்.

ஒரு வருத்தம்

பதிவுலக சர்ச்சை ஒன்றில் நானும் அகப்பட்டுப் போனேன். என்னுடைய மொழிநடையால் வந்த சிக்கல் அது. என் பக்கமும் தப்பு இருப்பதால், என் மொழிநடை யாரையாவது பாதித்திருந்தால் மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன். அதே போல் ஒரு வேண்டுகோளையும் இங்கே வைக்க வேண்டியுள்ளது. சொந்த இடங்களைவிட்டுப் பிரிந்து வாழும் பதிவர்களோ, படைப்பாளிகளோ ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இருந்த காலத்தில் இருந்த மாதிரி சூழ்நிலை இப்போதும் இருக்கவேண்டும் என்று நினைப்பது தவறு. சூழ்நிலைகளும் பழக்க வழக்கங்களும் இப்போது வெகு விரைவாக மாறுகின்றன. யாழ்ப்பாணத்தில் ராஜா டாக்கீஸ் என்ற பெயரும் வழங்கி வருகிறது, சைக்கிள்களின் கைப்பிடிக்குள் ‘பிரிதிப்பை' என்று அழைக்கப்படும் ஆணுறைகளும் தாராளமாக வாழ்ந்து வருகின்றன. அந்த சமூகத்தின் சமீபத்திய எச்சங்களான என்போன்றோரிடம் ‘சுயம்' இல்லாமலிருக்க நாங்கள் மட்டுமே காரணமல்ல. அதை மூத்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு சந்தோஷம்

இதேவேளை வருகின்ற இருபத்து மூன்றாம் திகதி கொழும்பில் நடக்கவுள்ள பதிவர்கள் சந்திப்பு சந்தோஷமாகவும், ஆரோக்கியமான விவாதங்களை உள்ளடக்கியதாகவும் நடந்து முடியவேண்டும் என்பது என்னுடைய பேராசை. பதிவுலகம் மூலம் அறிமுகமான இனிய நண்பர்களும், பதிவுலகில் நான் புக முன்னமே எனக்கு அறிமுகமான நண்பர்களும், அண்ணன்களும் அந்தச் சந்திப்பை இனிதே நடத்திவைப்பார்கள் என்பது என் நம்பிக்கை. இது பற்றிய மேலதிக தகவல்களை வந்தியண்ணா, ஆதிரை மற்றும் சுபானு ஆகியோரின் வலைப் பூக்களில் அறிந்து கொள்ளலாம்.

இதையும் வாசியுங்கள்

ஃபேஸ் புக்கில் அதிக நேரம் செலவிடுபவரா நீங்கள்? (நான் அப்படித்தான் என்பது வேறு கதை) அதுவும் திருமணமானவராயோ, அல்லது காதலன்/காதலி உள்ளவராயோ இருந்தால் இதை வாசியுங்கள். உங்கள் உறவில் (கணவன்- மனைவி, காதலன-காதலி) விரிசல் விழுவதற்கு ஃபேஸ் புக்கும் ஒரு காரணமாகலாமாம். குவெல்ப் பல்கலைக்கழக (University of Guelph) மாணவர்கள் நிகழ்த்திய ஆய்வறிக்கையின் படி எவ்வளவு அதிகநேரம் ஃபேஸ் புக்கில் இருக்கும் இப்படியான ஜோடிகளுக்கிடையே பொறாமையும் சந்தேகமும் அதிகரித்திருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. உதாரணமாக ஒருவரது ஃபேஸ் புக் Wallல் 'நேற்றிரவு உன்னுடனான சந்திப்பு இனிமையாக இருந்தது' என்பது போன்ற ஒரு சின்ன தகவல் பரிமாற்றமே பூதாகரமான பிரச்சினையாக வடிவெடுக்கும் வாய்ப்பு இருப்பதாக அந்த ஆய்வு மேலும் தெரிவித்திருக்கிறது. அந்தப் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்கும் 308 மாணவ, மாணவிகளிடம் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவே இது. எல்லாவற்றிலும் நல்லது கெட்டது இருக்கிறது. பார்க்கும் கண்களிலும், பகுத்தறியும் அறிவிலும் இருக்கிறது சூட்சுமம் என்பது என் கருத்து.

Wednesday, 5 August 2009

மனதில் பட்டவை- வாரம்: ஓகஸ்ட் 2-8, 2009

மனதில் பட்டவை என்கிற தலைப்பில் அரசியல், பொருளாதாரம், விளையாட்டு, தொழில் நுட்பம், சினிமா என்பன பற்றிக் கலந்து கட்டி ஒரு தொடர் பதிவு எழுதி வந்தேன். சென்ற ஜூலை 2ம் திகதிக்குப் பின்னர் அந்த வகையறாப் பதிவுகளை நான் இடவில்லை. இப்போது மீண்டும் ஆரம்பிக்கலாம் என்று எண்ணுகிறேன். ஆக, மறுபடியும் மனதில் பட்டவை.

அரசியல்- இலங்கை
ஜனாதிபதி மகிந்தவுக்கும், இராணுவத் தளப்தி சரத் ஃபொன்சேகவுக்கும் ஏதோ கருத்து வேறுபாடாம். அதனால் தான் பிரஜாவுரிமை பெற்றுள்ள அமெரிக்காவுக்கு ஃபொன்சேகா போகப் போகிறாராம். சரத் ஃபொன்சேகாவுக்குக் கிடைத்த புகழ் காரணமாக ராஜபக்ச சகோதரர்களிடையே அதிருப்தி நிலவி வருவதாக சில நாட்களுக்கு முன் வெளிவந்த செய்திகளைத் தொடர்ந்து வந்த செய்திகளில் உள்ள உண்மை பொய்களைப் பற்றிக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். என்னதான் அறிவு பூர்வமான சிந்தனை, அங்குள்ள மக்களின் நிலவரம், திடீர் அக்கறை போன்ற தலைப்புகளில் எனக்கு அறிவுரை சொல்லவும், திட்டவும் பலபேர் வருவார்கள் என்றாலும் மனதில் அதிஷா சமீபத்தில் எழுதிய 'அடிச்சுக்கிட்டு' என்று தொடங்கி ‘சாவுங்கடா' என்று முடியும் தலைப்பு வருவதைத் தடுக்க முடியவில்லை.

இதே வேளை இலங்கையின் தென் மாகாணத்துக்குத் திடீரெனத் தேர்தல் அறிவிக்கப் பட்டிருக்கிறது. தென் மாகானத் தேர்தலில் தன்னுடைய செல்வாக்கைப் பொறுத்து உடனடியாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு ராஜபக்சே உத்தரவிடலாம என்பது அவதானிகளின் கருத்தாக இருக்கிறது. சமீபகாலமாக 'அரசரே, மன்னரே, ராசராசரே' என்றெல்லாம் புகழ்ந்த மக்கள் தங்களைக் கைவிட்டு விடுவார்களோ என்ற பயம் ராஜபக்ச சகோதரர்களுக்கு வந்திருக்கிறதோ என்னவோ தெரியவில்லை. அதுவும் தெற்கிலிருக்கும் சிங்கள் மக்கள் அவ்வாறு பகுத்தாராய்ந்து இவர்களைக் கைவிடும் அளவுக்கு சிந்தனா சக்தி உள்ளவர்களா என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இல்லையென்றால் பிரேமதாஸா காலத்தில் தங்களுக்கு நடந்த அநியாயங்களை மறந்து உள்நாட்டு யுத்தத்தை ஆதரிக்கும் அரசாங்கங்களைத் தொடர்ந்தும் பதவியில் ஏற்றியிருப்பார்களா?

இதற்கிடையில் கிழக்கு மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்த இடைத் தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 4000 பேர் மீளக் குடியமர்த்தப் பட்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 3112 பேரும், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 964 பேரும் இன்று (ஆகஸ்ட் 5) இவ்வாறு இடைத்தங்கல் முகாம்களிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். டக்ளஸ் தேவானந்தா, பசில் ராஜபக்சே உட்பட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ள இதை ஒரு விழாவாகவே நடத்தியிருக்கிறார்கள். இதற்கு எந்த அரசியல் சாயமும் பூச நான் விரும்பவில்லை. அப்படியான அரசியல் பின்னணி ஏது இருக்கவும் கூடாது என்பது என்னைப்போன்ற கையாலாகாத பிரஜைகளின் விருப்பமும் கூட.

அரசியல்- உலகம்
ஐந்து வருடங்கள் எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் இருந்தால் தானாகவே பிரஜாவுரிமை வழங்கும் சட்ட மூலத்தை பிரித்தானிய அரசு கைவிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் பிரித்தானியாவில் தற்காலிக குடியேற்றவாசிகள் பிரித்தானியப் பிரஜைகளாவதற்கு அவர்களின் தொழில், திறமை மற்றும் தகுதி அடிப்படையிலான ஒரு புள்ளி வழங்கும் முறையில் தேவையான புள்ளிகளைப் பெற்றாக வேண்டும்.

ஐக்கிய அமெரிக்காவுக்கு அகதியாகச் சென்று குடியேறிய முதல் இலங்கையரான ராஜா ரட்ணம் என்பவர் தமது 75வது வயதில் காலமாகியிருக்கிறார். இவர் தனது 19வது வயதில் (1953ம் வருடம்) அமெரிக்காவில் குடியேறி, 10 வருடம் அமெரிக்க ராணுவத்திலும் பணியாற்றி, இலங்கையர்களுக்கான முதல் உணவு விடுதியையும் ஸ்தாபித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டொரண்டோ நகரின் மாநகர சபை ஊழியர்கள், 5 வார வேலை நிறுத்தத்தின் பின் சென்ற வாரம் மறுபடியும் வேலைக்குத் திரும்பியிருக்கிறார்கள். 5 வாரம் செய்யாமல் விட்டுத் தேங்கியிருந்த வேலைகளின் 80%ஐ ஐந்தே நாட்களில் செய்து முடித்திருக்கிறார்கள். இந்த ஊழியர்களின் திறமையைப் பாராட்டுவதா, வேல நிறுத்தம் செய்ததுக்ககத் திட்டுவதா என்று குழம்பிப் போயிருக்கிறார்கள் டொரண்டோ நகரவாசிகள். இதனிடையே இது சம்பந்தமாக நடந்த வாக்கெடுப்பில் 6 கவுன்சிலர்கள் பங்கு பெறாமல் போனதும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

பொருளாதாரம்
கனடாவின் நோர்டெல் (Nortel Inc) நிறுவனம் எரிக்சன் (Ericsson) நிறுவனத்திடம் விற்கப்பட்டு உள்ளது. சென்ற மாதம் 1.13 பில்லியன் டாலர்களுக்கு நோர்டெல்லின் வயர்லெஸ் டெக்னாலஜி பிரிவை எரிக்சன் வாங்கியது. இதற்கு முன்னரே ஜனவரி மாதம் நோர்டெல் அமெரிக்கா மற்றும் கனடாவில் வங்குரோத்துப் பாதுகாப்புக்கு விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில் இவர்கள் இவ்வாறு ஒரு பிரிவை விற்றது கனடாவுக்கு எவ்வகையில் இலாபம் என்று ஆராய்வதற்காக நோர்டெல் மற்றும் எரிக்சன் பிரதிநிதிகளை கனேடிய பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு குழு அவசர விசாரணைக்கு அழைத்திருக்கிறது. ஏற்கனவே கனடாவின் ஸ்டெல்கோவை (Stelco), அமெரிக்க ஸ்டீல் கார்ப்பரேஷன் வாங்கியபோதும் கனடாவுக்கு அதனால் நட்டமே ஏற்பட்டது என்பதால் இந்த விற்பனை பற்றி மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

விளையாட்டு
ஆஷஸ் தொடர் முடிவை நெருங்குகிறது. மூன்று போட்டிகளின் முடிவில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னணி வகிக்கிறது. வருகின்ற போட்டியில் ப்ரெட் லீ ஆஸ்திரேலியாவுக்கு மீண்டு வருகின்ற சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆஷஸ் தொடர் பற்றி தொடர் முடிந்ததும் ஒரு விமர்சனத் தொடர் எழுதலாம் என்றிருக்கிறேன். விரைவில் எதிர்பாருங்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் செமத்தியாக நாறுகிறது. 68 வயதான கோச், மைதானத்தில் அணி விளையாடும்போது தூங்கும் மேனேஜர், கோச்சோடு ஒத்துப்போகாத கேப்டன், கேப்டனுக்கு எதிராகக் கோஷ்டி நடத்தும் முன்னாள் கேப்டன் என்று அருமையான டீம். இவர்களா இருபது-இருபது உலகக் கோப்பையை வென்றார்கள்? நம்பவே முடியவில்லை.

போதை மருந்து சட்ட திட்டம் பற்றிய இந்திய அணிக்கும், ஐ.சி.சி.க்குமான பனிப்போர் கவலையளிப்பதாக உள்ளது. கிரிக்கெட் ஆட்டக்கரர்களை வித்தியாசமாக நடத்துங்கள் என்று யுவராஜ் கேட்டிருக்கிறார். மேலோட்டமாகப் பார்த்தால் மற்ற விளையாட்டுக்களையும், வீரர்களையும் கொச்சைப்படுத்துவது போல் தோன்றினாலும், இந்தியக் கிரிக்கெட்டர்கள் விஷயத்தில் இது யதார்த்தமான உண்மை. இது பற்றிய எனது பதிவு இங்கே. இதற்கிடையில் வளர்ந்து வரும் வீரர்களுக்கிடையே நடைபெற்ற கிரிக்கெட் தொடரை இந்தியா ஜெயித்திருக்கிறது. அது பற்றிய விபரம் இங்கே.

ஒரு வருத்தம்
அடிக்கடி இதைப் பற்றி எழுதவேண்டும் என நினைப்பேன். குடிவருபவர்களுக்கு இயலுமானளவு நல்ல வசதி செய்து கொடுக்கக்கூடிய கனடாவின் தெருக்களிலும் பிச்சைக்காரர்களைக் காண்கிறேன். 11ம் வகுப்பில் படித்த வளர்ந்த நாடுகளின் பட்டியலில் கனடாவும் இருந்தது. அப்படியானால் நான் படித்தது பொய்யா? எல்லா நாடுகளிலும் வறுமை இன்றைக்கும் இருக்கிறது என்பது வருத்தமான உண்மை.

ஒரு அடப்பாவிகளா!!! தருணம்
மொண்ட்ரியால் நகரத்திலே தன்னுடைய ஏழு வயது மகனை, பாதுகாப்புக்கான சீட்-பெல்ட் அணியாமல், பின்னே மனைவியையும், மகளையும் ஏற்றியபடி வாகனம் ஓட்ட விட்டுப் படம் பிடித்து, பெருமையாக You Tubeல் விட்டிருக்கிறார் ஒரு தகப்பன். இப்போ போலீசார் பிடித்துக்கொண்டு விட்டார்கள். அந்தத் தகப்பனை கிரிமினல் சட்டக் கோவையில் தண்டிக்க வேண்டும் என்று சிலரும், இல்லை சாலை விதிகளுக்கான சட்டக்கோவையின் கீழ் தண்டித்தால் போதும் என்று சிலரும் வாதாடுகிறார்கள். கடந்த சில நாட்களாக மீடியாவுக்கு நல்ல தீனி போட்ட சம்பவமாக இது அமைந்தது. வீடியோவைக் கீழே காண்க. இதைத் தான் நம்ம பதிவர்கள் சொந்த செலவுல சூனியம் வைக்கிறது என்பார்கள்..

Thursday, 2 July 2009

மனதில் பட்டவை- வாரம்: ஜூன் 28- ஜூலை 4, 2009

கொஞ்சம் அரசியல்
தமிழர் பிரச்சினையில் அரசியல் இணக்கப்பாடு எட்டியதும் அது சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படும் என அதிபர் ராஜபக்சே அறிவித்திருக்கிறார். ஜே.வி.பி., பிக்குக்கள் முன்னணி ஆகியவற்றின் இடைவிடாத எதிர்ப்புக்கு மத்தியிலும் அரசியல் தீர்வுபற்றி இவர் பேசியிருப்பது ஆறுதல் அளித்தாலும், சர்வசன வாக்கெடுப்பு என்பது எந்தளவுக்கு சமதர்மத்துக்கான ஒரு தீர்வைத் தரும் என்பது சந்தேகமே. முக்கால்வாசிக்கு மேல் சிங்கள மக்கள் நிறைந்து வாழும் ஒரு நாட்டில் ஒரு சிறுபான்மை இனம் முழுக்கச் சேர்ந்து அரசியல்தீர்வுக்கு ஆதரவாக வாக்களித்தால்கூட, அரைவாசி பெரும்பான்மை இனம் எதிராக வாக்களித்தாலே ஜெயிக்கும் வாய்ப்புக்கள் உள்ள நாட்டில் சர்வசன வாக்கெடுப்பு எவ்வளவு உகந்தது என்பது சந்தேகமே. இதிலும் முக்கால்வாசி சிங்கள மக்கள் சிங்கள அரசியல்வாதிகள் சொல்லும் செய்திகளை மிகவும் நம்புவதோடு, பிக்குகள் மீது மிகவும் மரியாதை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட மக்கள் தமிழ்மக்களுக்கு ஆதரவாக வாக்களித்து எங்களையும் அந்த நாட்டின் பிரஜைகளாக ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே. அதிகாரப் பகிர்வில் அக்கறைசெலுத்த விரும்பினால் அரசாங்கம் வரலாறு காணாத போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என தேசிய பிக்கு முன்னணி அறிவித்திருப்பதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

முகாம்களில் தங்கியுள்ளவர்கள் பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் படுவதாக ஆஸ்திரேலிய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. புல்மோட்டைப் பகுதியில் உள்ள முகாமகளிலேயே இந்த ஈனச்செயல் நடைபெறுவதாக அங்கே பணியாற்றும் சில தொண்டுப் பணியாளர்கள் தங்களுக்கு தகவல் தந்திருப்பதாக அந்த நாளிதழ் சொல்லியிருக்கிறது. மேலும், இலங்கையில் தமிழர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலமை காணப்படுவதாயும், கிட்டத்தட்ட 10,000 புகலிடக் கோரிக்கைகளை எதிர்பார்ப்பதாகவும் ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இவ்வாறான கோரிக்கைகளை ஏற்கவேண்டாம் என்று ரோகித போகல்லகம சென்ற வாரம் அறிவித்ததும் நினைவிருக்கலாம். இலங்கை அகதிகள் பற்றி ஓரளவாது அக்கறை செலுத்துவதில் இன வெறிக்குப் பெயர்போன ஆஸ்திரேலியா முன்னணியில் இருப்பது ஓரளவு மனித நேயம் பற்றிய நம்பிக்கைகளைத் தூவுகிறது. இதேவேளை டோகாவிலிருந்து நாடுதிரும்பியபோது கட்டுநாயக்க விமானநிலையத்தில் காணாமல் போன யுவதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களைக் கடத்தியவர்கள் துணை ராணுவக் குழுக்களைச் சேர்ந்தவர்களாக இருக்கும் என்று அவர்கள் பற்றி விடுவிக்கப்பட்ட யுவதிகள் சொன்ன அடையாளங்களில் இருந்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன.
வடகொரியா மேலும் நான்கு ஏவுகணைகளை பரிசோதித்துப் பார்த்திருக்கிறது. என்னதான் இவர்கள் அமெரிக்காவுக்குக் கடுப்பைக் கிளப்பினாலும், இது ஒரு சாதாரண மனிதனுக்கு நல்ல செய்தி அல்ல. இன்னொரு கொடும் அழிவை உண்டாக்கும் போரை உண்டாக்கியே தீருவோம் என்று வடகொரியா கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுவதுபோல் தெரிகிறது. இவர்களுக்குப் பின்னால் சீனா போன்ற தென்கிழக்காசிய நாடுகளும் இருக்கும் எனில், வடகொரியாவின் செயற்பாடுகள் மூன்றாவது உலகப்போருக்கான தீவிர முஸ்தீபுகளாகவே கணிக்கப்படும். இவர்கள் கடுப்பேத்த கடுப்பேத்த அமெரிகா என்ன செய்யப்போகிறது என்ற பயமும் சாதாரண மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. ஒபாமா முன்னைய அமெரிக்க அதிபர்கள் போலவே முட்டாள்தனமாகச் செயற்படுவாரா அல்லது கொஞ்சமாவது உலக நலம் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுப்பாரா என்பதில்தான் இன்னொரு பாரிய அழிவுபற்றிய பயம் தங்கியிருக்கிறது. அடுத்தவேளைப் பசிக்குச் சாப்பாடே இல்லாமல் எத்தனையோ மக்கள் வாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள், உலகமயமாக்கலால் கிராமாமகிவிட்ட உலகத்தில். ஆனால், இன்னமும் இப்படியான முட்டாள்தனமான Power Struggles இன்றைக்கும் நீண்டுகொண்டிருப்பது மிகவும் வருந்தத் தக்க ஒரு விஷயம்.
பரஸ்பர சம்மதத்துடனான ஒரினச்சேர்க்கை குற்றமல்ல என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஓரினச்சேர்க்கையை குற்றமாக வர்ணித்த இந்திய சட்டக்கோவையின் 377வது பிரிவை மாற்றியமைக்க வேண்டும் என்று எட்டு வருடங்களுக்கு முன்னர் தொடரப்பட்ட ஒரு பொதுநல மனுவிற்கே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு மாறானது என்றும், அதில் ஈடுபடுவோருக்கு 10 வருடம் அல்லது ஆயுள் தண்டனை விதிக்கலாம் என்றும் 1860ல் லார்டு மெக்கலே அவர்கள் பிறப்பித்த சட்டத்தின் அடிப்படையிலேயே இன்றுவரை ஓரினச்சேர்க்கை பற்றிய சட்டங்கள் இந்தியாவில் இருந்து வந்திருக்கின்றன. வழமைபோலவே கலாசாரக்காவலர்கள் சத்தம் போடத் தொடங்கியிருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, ஓரினச்சேர்க்கை கீழைத்தேய சமூகங்களில் பலகாலமாக இருந்து வருவது கசப்பான உண்மை. அப்படி இல்லை என்று சொல்லி சப்பைக்கட்டு கட்டுபவர்கள் ஏராளம். இப்படியான கலாசாரக் காவலர்களுக்கெல்லாம் சாணிபூசிய பிய்ந்த செருப்பால் முகத்தில் அடித்திருக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம். இந்தத் தீர்ப்பு இவ்வாறான ஓரினச்சேர்க்கையாளர்கள் அனுபவிக்கும் போலீஸ் தொல்லைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றினால் அதுவே பெரிய விஷயம். மேலும் திருநங்கைகளுக்குக் கொடுக்கப்படவேண்டிய அங்கீகாரங்களும் கிடைக்கப் பெற்றால் நன்றாக இருக்கும். (இதுபற்றி ஒரு பதிவே இடவேண்டும். நேரம் கிடைக்கும்போது செய்கிறேன்)

கொஞ்சம் பொருளாதாரம்

கனடாவின் டொரண்டோ மாநகராட்சி ஊழியர் சங்கம் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளது. வேலைக்கான பாதுகாப்பு உத்தரவாதம், ஓய்வு பெறுபவர்கள், பெற்றவர்களுக்கான நலன்புரிச் சேவைகள், உடல்நலக்குறைவு காரணமாக வேலை செய்யமுடியாத ஊழியர்களுக்கான நலன்புரிச்சேவைகள் ஆகியவற்றில் மாற்றம் கோரி சென்ற வாரம் முதல் இவர்கள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள். இதனால் பல இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் நகரம் நாறிப்போய் இருக்கிறது. நூலகங்கள், குழந்தை பராமரிப்பு இடங்கள், கோடைகால பயிற்சி வகுப்புகள் எனப் பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடி நிலவும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இவர்களது வேலைநிறுத்தம் முட்டாள்தனமானது என நகரபிதா டேவிட் மில்லர் குற்றம்சாட்ட, அதற்கு அப்படியானால் நகரசபை ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு மட்டும் எப்படி செய்தீர்கள் என ஊழியர் சங்கம் கேட்க, குப்பைகளை நகர வீதிகளில் மக்கள் எறிய என ஒரே களேபரம். ஜூலை முதலாம திகதி வழமையாக பூங்காக்களில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் கனடா தினக் கொண்டாட்டங்கள் இந்தமுறை டொரண்டோவில் பெருமளவு பாதிக்கப்பட்டதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

கொஞ்சம் கெட்ட செய்தி

King of Pop என்று அழைக்கப்பட்ட 50 வயதான மைக்கேல் ஜாக்ஸன் சென்ற வாரம் மரணமடைந்தார். மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் கொண்ட ஜாக்ஸனின் மரணம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஜாக்ஸனைக் கொண்டாடும் பலரும், தூற்றும் பலரும் இருக்கிறார்கள். அவரைப்பற்றி பல பாரிய குற்றச்சாட்டுகள் கூட எழுந்தன. அவை எல்லாவற்றையும் தாண்டி கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைப் பாப் பாடகர்கள் மற்றும் நடனக் கலைஞர்களுக்கு ஒரு உன்னதமான முன்னுதாரணமாக அவர் இருந்தார் என்பதை யாருமே மறுக்கமுடியாது.
அத்திலாந்திக் கடலில் விழுந்த பிரானஸ் நாட்டு விமானத்தைத் தொடர்ந்து யேமன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றும் இந்துமா சமுத்திரத்தில் ஜலசமாதியாகி விட்டது. 153 பயணிகளோடு கடலில் பாய்ந்த இந்த விமானத்தில் 13 வயதான ஒரு பெண் மட்டும் தப்பித்திருக்கிறார். விமானப் பயணங்கள் குறித்த பயங்கள் மேலும் அதிகரிக்கின்றன.

ஆடுகளம்
Confederation கோப்பையை பிரேசில் தக்கவைத்துக் கொண்டது. இறுதி ஆட்டம் அமெரிக்கா மற்றும் பிரேசிலிடையே நடைபெற்றது. 35 தோல்வியற்ற போட்டிகள், 15 தொடர் வெற்றிகளுடன் வீறுநடைபோட்ட ஸ்பயினை அரையிறுதி ஆட்டத்தில் 2-0 என்று வீழ்த்திய அமெரிக்கர்கள் 27 நிமிடத்திலேயே 2 கோல்கள் போட்டு பிரேசிலை திணறடித்தாலும், பிரேசிலுக்கேயுரிய அபார ஆட்டத்தை சமாளிக்கமுடியாமல் இரண்டாவது பாதியில் 3 கோல்களை விட்டு தோற்றது அமெரிக்கா. காகா அடித்த ஒரு கோல் நடுவரின் தவறால் கோல் இல்லை என்று அறிவிக்கப்படாவிட்டால் 4-2 என்று பிரேசில் ஜெயித்திருக்கும். தென் ஆபிரிக்க அணியை 3-2 வீதத்தில் வீழ்த்தி ஸ்பெயின் 3ம் இடம் பெற்றது.
விம்பிள்டன் போட்டிகள் அரையிறுதியைத் தொட்டிருக்கின்றன. ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் ஃபெடரர்-ஹாஸ், மர்ரே-ராடிக் சந்திக்கிறார்கள். மகளிர் ஒற்றையர் இறுதியில் வில்லியம்ஸ் சகோதரிகள் ஆட இருக்கிறார்கள். இந்தத் விம்பிள்டன் தொடரை ஜெயித்தால் ஆடவர் மத்தியில் அதிக கிரண்ட் ஸ்லாம் வென்றவர் என்ற புகழை ஃபெடரர் பெறுவார். இதுவரை 14 ஸ்லாம் வென்று அமெரிக்கரான பீட் சம்ப்ரஸ்சுடன் சமநிலையில் இருக்கிறார் ஃபெடரர்.

மேற்கிந்தியத்தீவுச் சுற்றுப்பயணத்தில் யுவராஜின் சதம் மூலம் முதல் போட்டியை ஜெயித்த இந்தியா கேவலமான துடுப்பாட்டம் காரணமாக இரண்டாவது போட்டியைக் கோட்டை விட்டது. ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தமது துடுப்பாட்ட நுணுக்கங்களில் பல ஓட்டைகள் இருப்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இந்திய அணி சமீபகாலத்தில் காட்டிய அதீத முன்னேற்றத்துக்கு ஆப்பு வெகுவிரைவில்.

Wednesday, 24 June 2009

மனதில் பட்டவை- வாரம்: ஜூன் 21-27, 2009

அரசியல்
ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா அருமையான சித்தாந்தம் ஒன்றை உதிர்த்திருக்கிறார். 'தமிழ் மக்களுக்கென்று தனியான அரசியல் தீர்வு ஒன்று தேவையில்லை. சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அவர்களுக்கும் வழங்கினால் போதுமானது. தமிழரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, பொருளாதார வளம், இயல்பு வாழ்க்கை போன்றவற்றை மறுபடியும் கொண்டுவந்தால் பிரச்சினை தீர்ந்து விடும்' என்பதே சரத் ஃபொன்சேகா கூறிய கருத்து. நான் இலங்கைப்பிரச்சினை பற்றிக் கண்டு கேட்டு படித்துப் பெற்ற சொற்ப அறிவுப்படி அரசியல் ரீதியாகப் போராடிய தந்தை செல்வா முதலான அரசியல்வாதிகள் தொடங்கி, ஆயுதம் தாங்கிப் போராடிய பிரபாகரன் வரை எல்லோருமே பன்னெடுங்காலமாக இதைத்தான் சொல்லி வந்தார்கள். இப்போதும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இதைத்தான் சொல்லி வருகிறார்கள். கடைசியாக ஒரு சிங்கள அதிகாரிக்காவது இது தோன்றியிருக்கிறது. ஆனால் அதற்காக விலைமதிப்பற்ற பல்லாயிரம் உயிர்கள் இழக்கப்பட்டு விட்டன.

இதுவும் சரத் பற்றிய ஒரு செய்தி. ஆனால் இது ‘இந்த ரணகளத்திலும் ஒரு கிளு கிளுப்பு' என்றமாதிரியான ஒரு ஜோக். செய்தியாளர் சந்திப்பொன்றில் மே 19 வெள்ளைமுள்ளிவாய்க்காலில் காயப்பட்ட புலிகள் யாரையும் தாங்கள் கைது செய்யவோ, சுட்டுக்கொல்லவோ இல்லையாம். அவர்களைப் புலிகளே சுட்டுக் கொண்டு விட்டார்களாம். இப்படி கொஞ்சம் கூட ‘லாஜிக்'கே இல்லாமல் அவர் சொன்ன அந்த ஜோக்கை நேற்று கனேடிய தொலைக்காட்சி (Tamil One) தனது செய்தியறிக்கையில் சொன்னபோது நிஜமாகவே சிரித்து விட்டேன்.

உலகவங்கியும் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கைக்குக் கடனுதவி செய்யத் தீர்மானித்திருக்கின்றன. உலகவங்கி 24 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஏற்கனவே ஒதுக்கிய 60 மில்லியன் டாலர்களுக்கு மேலதிகமாக ஒதுக்கியுள்ளது. இதில் 12 மில்லியன் டாலர்கள் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் சுகாதார மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதே சுகாதார மேம்பாட்டுக் காரணங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான அபிவிருத்திக்கான குழு 7 மில்லியன் டாலர்களை ஒதுக்கிக் கொடுத்துள்ளது. ஒதுக்கப்பட்ட காரணங்களுக்காகவே இந்த நிதி பயன்பட்டால் அதைப் போல சந்தோஷம் ஏதுமில்லை.
வணங்காமண் கப்பல் பற்றிய சிறப்புக் கவனயீர்ப்புத் தீர்மானத்தைப் பற்றி தமிழ்நாடு சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர். இந்தச் சிறப்புக் கவனயீர்ப்புத்தீர்மானம் தமிழ்நாடு சட்டசபையில் கொண்டுவரப்பட்டு ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் இன்னும் அது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதால் கோபமுற்றே தாம் வெளியேறுவதாய் பா.ம. க. சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி குறிப்பிட்டார். 844 டன் உணவுப் பொருட்களுடன் ஐரோப்பிய நாடுகளிலிருந்து புறப்பட்ட வணங்கா மண் கப்பலில் உள்ள பொருட்களை இலங்கை அரசு ஏற்க மறுத்ததும், கப்பல் சென்னைக் கடல் எல்லையில் சிலகாலம் தரித்து நின்றதும், கப்பல் காப்டன் முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியதும் (இன்னுமா அந்தாளை நம்புறாங்க?) அனைவரும் அறிந்ததே. இப்போது சென்னைக் கடல்பரப்பிலிருந்தும் கப்பல் விரட்டப்பட்டு சர்வதேசக் கடல் பரப்பில் தரித்து நிற்கிறது.

பொருளாதாரம்
கனடாவின் பங்குச்சந்தையில் சமீப காலமாக வளர்ச்சிப்போக்கு காணப்படுகிறது. அதிலும் கனடாவின் Addax Petroleum சீனாவின் Sinopec Groupக்கு 8.27 மில்லியன் கனேடிய டாலர்களுக்கு விலைபோயிருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கைக் கீற்றைத் தோற்றுவித்திருக்கிறது. உலோகங்களின் விலை உயர்ந்திருப்பதும், நிதிநிறுவனங்களின் பங்குகள் பெறுமதி கூடியிருப்பதும் பொருளாதார ரீதியில் சந்தோஷமான செய்திகள். அதே வேளை அமெரிக்க வீடு விற்பனைத் துறை இன்னமும் மந்தமாகவே இருக்கிறது. புதிய வீடுகளின் விற்பனை வீதம் எதிர்பாராத வகையில் மேலும் 0.6 சதவீதம் வீழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதே வேளை Organization for Economic Co-operation and Developement என்ற அமைப்பு 60 வருடங்களில் மிக மோசமான இந்தப் பொருளாதார நெருக்கடிக்காலம் கிட்டத்தட்ட அதன் முடிவை நெருங்கிவிட்டதாகக் கூறியிருக்கிறது. இருப்பினும் உலக நாடுகள் இதிலிருந்து எவ்வளவு வேகமாக மீண்டு வரும் எனபது, அரசாங்கங்கள் வங்கிகள் சம்பந்தமான குழப்பநிலைகளை எவ்வளவு விரைவில் தீர்த்து வைக்கப்போகின்றன என்பதிலேயே தங்கியுள்ளதாகவும் மேற்படி அமைப்பு கூறியிருக்கிறது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகப் போலி முத்திரை தாங்கிய, சீனாவில் தயாரான ஸ்பார்க் பிளக்குகள் 2 லட்சம் சென்னைத் துறைமுகத்தில் பிடிபட்டன. இருசக்கர வாகன உதிரிப்பாகமான இது போல பல பொருட்களை சீனாவில் உற்பத்தி செய்து, இந்தியா போன்றா வேறு நாடுகளில் விற்று வருகிறார்கள். சீனா இப்படிப்பட்ட தகிடுதத்தங்கள் செய்து மிக வேகமாக ஒரு பொருளாதார அரக்கனாக உருப்பெற்று வருகிறது. குறைந்த செலவில் உற்பத்தி செய்து தருகிறோம் என்று அடிமாட்டு விலையில் வேலை செய்யும் தொழிலாளர்களை உள்ளடக்கிய Sweat Shops என்று மேலைத்தேயத்தவர்கள் அழைக்கும் உற்பத்தி ஸ்தலங்கள் சீனாவில் அதிகம். ஒருமுறை Nike கூட இப்படி ஒரு ஸ்தலத்தை சீனாவில் பயன்படுத்தியதற்காக பிரச்சனைகளில் மாட்டியது. இருந்தும் சீனாவை நாடும் நாடுகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. குழந்தைத் தொழிலாளர்களும் சீனாவில் அதிகம் என்று என்னோடு படித்த நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

விளையாட்டு


Fifa Confederations Cup அரையிறுதிக்கான அணிகள் தெரிவுசெய்யப்பட்டு விட்டன. ஸ்பெயின் ஐக்கிய அமெரிக்கக் குடியரசு அணியுடனும், பிரேசில் தென்னாபிரிக்க அணியுடனும் மோதவிருக்கின்றன. எதிர்பாராத வகையில் 3-0 என்ற கணக்கில் பிரேசிலிடம் தோற்று நடப்பு உலக சாம்பியன் இத்தாலி வெளியேறியது. மொத்த அணியாக அற்புதமாக இணைந்து விளையாடும் ஸ்பெயின் அணி கோப்பையை வெல்லும் என்பது வல்லுனர்களின் கணிப்பு.


விம்பிள்டன் போட்டிகள் ஆரம்பமாகி விட்டன. நடப்பு சாம்பியன் நடால் கலந்து கொள்ளவில்லை. மரியா ஷரப்போவா இரண்டாவது சுற்றிலேயே காலி. ஃபெடரர் கடந்த வருடம் இழந்த பட்டத்தை இந்த வருடம் பெறுவதற்குரிய சாத்தியக்கூறுகள் அதிகம் தென்படுகின்றன.

இருபது இருபது உலகக் கோப்பையை அனைவரது எதிர்பார்ப்புகளுக்கும் மாற்றாக பாகிஸ்தான் அணி ஜெயித்திருக்கிறது. ஷாஹிட் அஃப்ரிடி யாருமே எதிர்பார்க்காத முதிர்ந்த ஆட்டத்தை அரையிறுதி ஆட்டத்திலும், இறுதி ஆட்டத்திலும் வெளிக்காட்டி பாகிஸ்தானை ஜெயிக்க வைத்தார். கோப்பையை ஜெயித்த மகிழ்ச்சியோடு இருபது இருபது போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார் அணித்தலைவர் யூனுஸ் கான். பயிற்றுவிப்பாளர் இண்டிகாப் அலாம் பெற்ற இரண்டாவது உலகக் கோப்பை இது. 1992 ஒரு நாள் உலகக் கோப்பையை பாகிஸ்தான் இம்ரான் கான் தலைமையில் ஜெயித்த போதும் இவர்தான் பயிற்றுவிப்பாளர்.

வருத்தம்
வெள்ளவத்தையில் குடிபோதை காரணமாக நடைபெற்ற கோஷ்டி பூசலில் இருவர் குத்திக் கொலை செய்யப்பட்டு விட்டார்கள். நிரோஜன் மற்றும் சசிதரன் என்ற இரண்டு இளைஞர்கள் இறந்து விட்டார்கள். ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். எல்லா சோகத்துக்கும் மேல இப்பிடியும் சோகங்கள்.

Tuesday, 16 June 2009

மனதில் பட்டவை- வாரம்: ஜூன் 14-20, 2009

***தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையங்களில் பார்த்த செய்திகளில் என் மனதை நெருங்கியவை பற்றிய தொகுப்பு***

அரசியல்

வடகொரியா சென்ற மாதம் நடாத்தியதாகக் கூறப்படும் அணுகுண்டு சோதனையை ஐக்கிய அமெரிக்க குடியரசு உறுதிப்படுத்தியிருக்கிறது. (ஆமா, அதுக்கு இவங்க யாரு?) 2006ம் வருடம் முதன் முதலாக வட கொரியா இதே போன்ற சோதனையை நிகழ்த்தியது. இது இரண்டாம் தடவை. முதல் சோதனையை விட இம்முறை பலமடங்கு சக்தி வாய்ந்ததாக அமைந்திருந்ததாகவும் ஐக்கிய அமெரிக்கக் குடியரசு இந்தப் பிரச்சினை தொடர்பான தனது முதலாவது உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. வட கொரியா மேற்கொண்ட மேற்படி நிலக்கீழ் பரிசோதனை பற்றி உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறாத சூழ்நிலையில் கூட உலகநாடுகள் வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வந்திருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபைகூட சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இந்நிலையில் இந்தத் தடைகளை நீக்கக் கோரி வட கொரிய மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் அதே வேளை, தடைகளை நீக்காமல் விட்டால் தாங்கள் மேலும் வலுவான யுரேனியம் மற்றும் ப்ளூட்டோனியம் என்பவற்றைப் பாவித்து மேலும் சக்திவாய்ந்த அணுகுண்டுகளைத் தயாரிப்போம் என வட கொரியா ஒரு எச்சரிக்கையை விடுத்திருக்கிறது (ப்ளூட்டோனியம் இதுவரை எங்குமே ஆயுதமாக்கப்படவில்லை என்று கேள்வி). மேலோட்டமாகப் பார்த்தால் இது அமெரிக்காவைக் கடுப்படிக்கும் ஒரு செய்தி என்று சந்தோசப் படக்கூட முடியும். ஆனால் இதன் அடியாழத்தில் ஒழிந்திருக்கும் எச்சரிக்கை ஒட்டுமொத்த மனித குலத்துக்குமானது. இப்படியே போனால் ஒருவனை ஒருவன் அடக்குகிறேன் பேர்வழி என்று அடித்துக்கொண்டு சாகப் போகிறார்கள் போலிருக்கிறது. (அது சரி அணுகுண்டு சோதனை உலக மகா குற்றம். தன் நாட்டு மக்களை தானே கொல்வது இறையாண்மை. நல்லா சொல்லுறீங்கய்யா டீட்டெய்லு)

இலங்கையில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 80,000 இலங்கையர்கள் வேலை இழந்திருப்பதாகவும், கிட்டத்தட்ட 300,000 பேர் சொந்த வருமானத்தை இழந்திருப்பதாகவும் வேலை இழந்தவர்களுக்கான தேசிய மையம் (National Centre for Job Loosers) ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாக போரிலீடுபட்டிருந்த இலங்கை அரசுக்கு இந்தச் செய்தி ஒரு அதிர்ச்சி. ஆனால் அதை அவர்கள் எப்படித் தீர்க்கப் போகிறார்கள் என்பதை உற்று நோக்கினால் இலங்கை அரசாங்கத்தின் அற்புத நிர்வாகத் திறமையைப் புரிந்து கொள்ளமுடியும். அதுமட்டுமா உலக நாடுகள் அனைத்துக்கும் நல்ல தீர்வும் அதுதான். இலகுவான தீர்வு. பின்பற்றவேண்டிய நடைமுறைகள் இதோ:
  • போர் அழிவைக் காரணம் காட்டி உலக வங்கியிடம் கடன் வாங்குங்கள்
  • 50,000 பேரை ராணுவத்தில் சேருங்கள். 80,000 பேர் வேலை இழந்த மறு நொடியே 50,000 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு.
முடியுமா யாராலும்? 50,000 பேரை மேலதிகமாக ராணுவத்துக்குச் சேர்க்கும் வேலை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டதாயும், அவ்வீரர்கள் புதிதாக சுதந்திரப் படுத்தப்பட்ட (என்னாது??????) பகுதிகளில் பாதுக்காப்பைப் பலப்படுத்த பயன்படுவார்கள் என்றும் சொல்லியிருக்கிறார் பாதுகாப்பு (!!!!???) அமைச்சின் பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. (பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பல நாடுகள் இலங்கை அரசாங்கத்திடம் ஆலோசகர்களைக் கோரலாம்)

பொருளாதாரம்

கனேடிய நிறுவனங்கள் மிக வேகமாகப் பொருளாதார நெருக்கடிக்குத் தம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டிருப்பதாக கனடாவின் புள்ளிவிபரவியல் அமைப்பு (Statistics Canada) அறிவித்திருக்கிறது. சரியான முறையில் திட்டமிடப்பட்ட ஆட்குறைப்பு மூலம் இந்த நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டதைச் சுட்டிக்காட்டியுள்ள இவ் அமைப்பு சொல்லும் இன்னொரு தகவல்தான் கொஞ்சம் கவலைப் படுத்துகிறது. என்னதான் ஆட்குறைப்பு மூலம் தங்களது Pay Rollல் பெருமளவு சேமித்தாலும், கனேடிய நிறுவனங்களின் விற்பனைத்திறன் வெகு வேகமாக வீழ்வடைவதால் மூலப்பொருட்கள் நிறுவனங்களுக்கே தேங்க ஆரம்பித்திருப்பதன் காரணமாக, செலவைக் குறைக்கும் பொருட்டு மேலும் ஆட்குறைப்புகள் இந்த நிறுவனங்களுக்கு அவசியமாகின்றது. இது ஒரு சாதாரண நபருக்கு நல்ல செய்தியல்ல. மேலும் கனேடிய நிறுவனங்களின் Labour Productivity அதிகரித்திருக்கிறது. இருந்த போதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் (GDP), மனிதர்களின் வேலை செய்த நேரமும் (Hours Worked) கவலைக்கிடமான எதிர்மறை வளர்ச்சியையே காட்டுகின்றன. அது சம்பந்தமாக Stats Canada வெளியிட்ட ஒரு சிறிய வரைபடம் கீழே:
இதே வேளை அத்தியாவசியப் பொருட்களுக்கான பங்குச்சந்தை விலைகள் Toronto Stock Exchange குறியீட்டு எண்ணை தூக்கி நிறுத்தியிருப்பது கொஞ்சம் நிம்மதி அளிக்கும் செய்தி.

தொழில் நுட்பம்

Research In Motion (RIM) நிறுவனம் தனது Black Berry குடும்பத்தில் மேலும் ஒரு அங்கத்தவரை இணைக்கப் போகிறது. இந்தப் புதிய Smart Phone, Blackberry Tour என்று அழைக்கப்பட இருக்கிறது. சாதாரண பாவனையாளர்கள் Black Berry Curve பயன்படுத்தும் க்கும் பெரிய Corporate முதலாளிகள் பயன்படுத்தும் Black Berry Bold க்கும் இடைப்பட்ட ஒரு வர்க்கமாக இது இருக்குமாம். இதன்மூலம் இரு சாராரிடமும் இந்த புதிய Smart Phone ஐக் கொண்டு சேர்த்து RIMன் வருமானத்தை மேலும் கூட்டுவதற்குரிய ஒரு முயற்சிதான் இது என RIMஇன் Co-Chief Excecutive Jim Balsillie தெரிவித்திருக்கிறார். RIM தனது வலைத்தளத்தில் போட்டிருக்கும் Black Berry Tourன் படம் கீழே: (பாத்து ரசிக்கதாங்க முடியும் என்னால). இன்றைக்கு (ஜூன் 16 2009) இது வட அமெரிக்காவில் அறிமுகமாகிறது.


விளையாட்டு

ICC T20 ன் அரையிறுதிக்கு அணிகள் தெரிவு செய்யப்பட்டு விட்டன. முதல் உலகக் கோப்பையை வென்ற இந்தியா மேற்கிந்தியத்தீவுகள், இங்கிலாந்து ஆகிய ஒரு சுலபமான அணிகளிடமும் பரிதாபமாகத் தோற்று இரண்டாவது சுற்றிலேயே வெளியேறியிருக்கிறது. தோனியின் தலைக்கு குறிவைக்க ஆரம்பித்து விட்டார்கள் இந்திய ரசிகர்கள். கொடும்பாவிகள் எரிப்பது மீண்டும் ஆரம்பமாகிவிட்டது. Cricket is a great leveller. தென்னாபிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதியில் மோத உள்ளன. ஏலவே சொன்னது போல ஸ்மித்தின் தென்னாபிரிக்கா தொடரை வெல்லும் என்று நினைக்கிறேன். இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற உள்ள ஒரு நாள் போட்டிகளில் ஓய்வெடுக்க அனுமதி தருமாறு தோனியும், சச்சினும் இந்திய கிரிக்கெட் வாரியத்தை கேட்டிருக்கிறார்களாம். IPL போட்டிகளில் விளையாடியதால் அடைந்த உடல் ரீதியான களைப்பே தோல்விக்குக் காரணம் என்று இந்தியப் பயிற்றுவிப்பாளர் Gary Kirsten தெரிவித்த கருத்துக்கு இந்திய வாரியம் தாங்கள் எந்த வீரரையும் IPL ல் விளையாடுமாறு நிர்ப்பந்திக்கவில்லை என்று பதிலளித்திருக்கிறது. (மறுபடி ஆரம்பிச்சுட்டங்க).
Confederation Cup Soccer தென்னாபிரிக்காவில் ஆரம்பமாகியிருக்கிறது. 8 அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடாத்தப்படுகின்றன. ‘A' குழுவில் ஸ்பெயின், ஈராக், தென்னாபிரிக்கா, நியூசீலாந்து அணிகளும், ‘B' பிரிவில் பிரேஸில், இத்தாலி, ஐக்கிய அமெரிக்க குடியரசு, எகிப்து அணிகளும் ஆடுகின்றன. முதல் இரு நாட்களில் ஸ்பெயின் நியூசிலாந்தை 5-0 என்றும் பிரேசில் எகிப்தை 4-3 என்றும், இத்தாலி ஐக்கிய அமெரிக்கக் குடியரசை 3-1 என்றும் தோற்கடித்தன. ஈராக் தென்னாபிரிக்கா ஆட்டம் 0-0 சமநிலையில் முடிந்தது.

வட அமெரிக்காவின் புகழ் பெற்ற Stanly Cup Ice Hockey போட்டித் தொடரை Pittsburg Penguins அணி வென்றது. 7 போட்டிகள் கொண்ட இறுதியாட்டத் தொடரின் இறுதிப்போட்டியில் 2-1 என்ற கணக்கில் Detroit Red Wings அணியை வெற்றிகொண்டு ஸ்டேன்லி கோப்பை இறுதியாட்டத் தொடரை 4 போட்டிகளுக்கு 3 போட்டிகள் என்ற கணக்கில் கைப்பற்றியது. அதே போல் National Basketball Association போட்டித் தொடரின் இறுதியாட்டத் தொடரை Los Angeles Lakers அணி 99-86 என்ற கணக்கில் Orlando Magics அணியை தோற்கடித்து 4 போட்டிகளுக்கு 1 போட்டி என்ற கணக்கில் கைப்பற்றியது.

பொழுதுபோக்கு

செல்வராகவனின் இயக்கத்தில், G.V. பிரகாஷ்குமார் இசையில், கார்த்தி சிவகுமார், ரீமா சென், ஆண்ட்ரியா ஜெர்மையா, ரா. பார்த்திபன் நடிப்பில் உருவாகும் 'ஆயிரத்தில் ஒருவன்' படப்பாடல்கள் ஜூன் 14 வெளியிடப்பட்டன. இரண்டு Background Scoreகள் உட்பட 10 Track கள். பெரும்பாலானவை பழைய செல்வராகவன் படப் பாடல்களை நினைவுபடுத்துகிறன. ஒரு பாடல் யுவனின் ‘அடடா வா அசத்தலாம்' பாடலை நினைவுபடுத்துகிறது. ஆனால் 3 இலக்கியத் தரம் வாய்ந்த பாடல்களை வைரமுத்து எழுதி விஜய் ஜேசுதாஸ், P. B. ஸ்ரீநிவாஸ், நித்யஸ்ரீ மகாதேவன், பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோர் பாடிய பாடல்கள் படம் பற்றிய எதிர்பார்ப்புக்களை கிளப்பியுள்ளன. இசைவெளியீட்டு விழாவுக்கு செல்வாவோடு ‘டூ' விட்ட யுவனும் வந்திருந்தார். பாடல்கள் பற்றிய எனது பார்வ இங்கே.

நயன்தாரா பிரபுதேவா காதல் மேட்டர் ஊரெல்லாம் சந்தி சிரிக்கிறது. அவர்களின் திருமணப் படம் என்று ஒன்றை ஒரு பத்திரிகை வெளியிட அவர்கள் மீது வழக்குப் போடுவேன் என நயன்தாரா மிரட்டியிருக்கிறார்.


Univercell Vijay Awards வெற்றி பெற்றோர் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த நடிகர் சூர்யா, நடிகை சிம்ரன். ரசிகர்களுக்கு மிகப் பிடித்த நடிகை நயன்தாரா. மக்களுக்கு மிகவும் பிடித்த நடிகர், சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த வில்லன், சிறந்த திரைக்கதையாளர் ஆகிய நான்கு விருதுகளை நடிகர் கமல்ஹாசன் பெற்றார். சூர்யாவுக்கு விருது வழங்கும் போது 'சிவகுமார் எனது அண்ணன் என்றும், சூர்யா தான் பெறாத மகன்' என்றும் கமல் கூற, சிவகுமார் கண்கலங்க ஒரு Emotional Sequence அங்கே அரங்கேறியது. மற்ற வெற்றியாளர்கள் பற்றிய விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்.

மற்றவை

புதிதாக Blog ஆரம்பித்திருக்கும், ஆரம்பிக்க நினைக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு Show Dial Jaya TV என்ற பெயரில் ஜெயாவில் ஒளிபரப்பாகியது. மூத்த பதிவர் Cableசங்கர் பங்கு கொண்ட இந்த நிகழ்ச்சியைப் பார்க்க இங்கே அழுத்தவும்.

Friday, 12 June 2009

மனதில் பட்டவை- வாரம்: ஜூன் 7-13, 2009

***இந்த வாரம் தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையங்களில் பார்த்த செய்திகளில் என் மனதில் பட்டவற்றை பகிர்ந்து கொள்கிறேன். இது ஒரு தொடராக வரும் இனி, எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம்***

கொஞ்சம் அரசியல்


Liberal கட்சியின் Toronto Centre MP Bob Rae இலங்கை விமான நிலையத்தில் வைத்து அவமானப்பட்டது, சிறிலங்கா மீதான கனடாவின் பார்வையில் என்ன மற்றத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. கனேடிய அரசியல்வாதிகள் ஒன்றும் புனிதர்கள் அல்ல. நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கான அபாயம் இருந்தபோது தனது கட்சியின் பலத்தை நிரூபிக்கும் ஒரே நோக்கில் அரசாங்கத்தைக் கலைத்து மீண்டும் தேர்தல் அறிவித்தவர்தான் பிரதமர் Stephen Harper. (மேற்படி Progressive Conservative கட்சியை சார்ந்தவர்). Liberal கட்சியோ National Democratic Party (NDP) மற்றும், Bloc Quebec என்ற Quebec மாநிலத்தின் பிரிவினையைக் கோரும் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து Harper அரசைக் கலைத்து கூட்டரசு அமைக்க இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஒரு தடவை முயன்றது. இந்நிலையில் Liberal கட்சியைச் சேர்ந்த Bob Rae பட்ட அவமானத்துக்கு சிறு சிறு கண்டனங்கள் மட்டுமே எழுந்துள்ளன. (முக்கால்வாசி அவரது கட்சியிலிருந்து). இங்கே புலம் பெயர்ந்த தமிழர்கள் போராட்டங்களை செய்த போது ஆளும் கட்சியைவிட எதிர்க்கட்சியான Liberal கட்சிதான் அதிகம் கண்டுகொண்டது. அப்படிக் கண்டுகொண்டதுக்கும், Bob Rae சிறிலங்கா போனதற்கும் வோட்டு வங்கியைப் பலப்படுத்துவதும் ஒரு காரணமாய் இருக்கலாம். ஆனால் இந்த சம்பவம் ஒரு சிறு சலசலப்பை கனேடிய அரசியல்வாதிகளிடமும், மக்களிடமும் ஏற்படுத்தியிருக்கிறது. புலம் பெயர் தமிழர்களின் இடைவிடாத போராட்டத்திற்கு இப்போது கொஞ்சம் கொஞ்சம் அவர்களுக்கு அர்த்தம் புலப்படத் தொடங்கியிருக்கிறது.
அவுஸ்திரேலியா புலிகள் மீதான தடைகொண்டு வரும் தீர்மானத்தைக் கைவிடப் போவதாகச் செய்திகள் வந்தவுடன், அந்நாட்டுக்கான சிறிலங்கா தூதுவர் ‘குய்யோ முறையோ' என்று அலறுகிறார். அப்படித் தடை செய்யாமல் விட்டால் வெளிநாடுகளில் வாழும் புலி ஆதரவாளர்கள் நிதி சேர்த்து புலிகள் இயக்கத்தை மீண்டும் தலைதூக்க வைத்து விடுவார்களாம். புலிகள் வெளிநாடு முழுவதும் பரவிவிடுவார்களாம். அப்போ சில நாடகளுக்கு முன் சிறிலங்கா அதிபர் ‘வீர' மகிந்த, விடுதலைப் புலிகளை முற்று முழுதாக அழித்துவிட்டோம் என்றும், தமிழ் மக்களை அவர்களின் பிடியிலிருந்து விடுவித்துவிட்டோம் என்றும், இனிமேல் இலங்கையில் புலிகள் தலைதூக்க முடியாதென்றும் முழக்கமிட்டதெல்லாம் வெறும் வாய் ஜாலம். அப்படித்தானே உயர்திரு. சேனக வலகம்பாய?. நீங்கள் சொன்னதுபோல் முற்றுமுழுதான சுதந்திரம் தந்து, எங்களை சம உரிமையுள்ள பிரஜைகளாக நடாத்தினால், இன்னொரு ஆயுதப் போராட்டம் எங்களுக்குத் தேவையே இல்லை. புலிகள் இயக்கத்தை அவுஸ்திரேலியா தடைசெய்ய மாட்டாது என்ற செய்தி கேட்டதும் நீங்கள் பதறிய பதற்றம் சொல்வது ஒன்றே ஒன்றைத்தான்... நீங்கள் திருந்தவே போவதில்லை.
தமிழர்கள் உணர்ச்சிகளுக்கு மூளையை அடகு வைப்பவர்கள் என்பது எனது கருத்து. அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்கள் 'புரட்சிப் பீரங்கிகள்' சீமானும், வை. கோபால்சாமியும். ‘இனி சிங்கள நாட்டைக் கைப்பற்றும் போராட்டத்தை ஆரம்பிப்போம்' என்று முன்னவரும், ‘வவுனியாவில் ஆயுதக்கிடங்கை எரித்தது எம்மவர்கள் தான்' என்று பின்னவரும் பேசிய பேச்சுக்கள் ‘புனர்வாழ்வு' முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ள தமிழர்களை எந்தளவுக்கு காயப்படுத்தும் என்பது பற்றி ஒரு நிமிடம் கூட சிந்திக்காமல் பேசியிருக்கிறார்கள். இவர்களுக்கென்ன, மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு வாரமோ, ஒரு மாதமோ சிறைவாசம். கொஞ்சம் காசு கொடுத்தால் சிறையிலும் நன்றாக இருந்துவிட்டு வரலாம். (சிறைசென்று வரும்போது எவ்வளவு ஃப்ரெஷ்சாக வெளிய வாறாங்கப்பா???). அங்கே அந்த மக்கள் பணயக் கைதிகளாக அடைபட்டிருக்கிறார்கள். இவர்களின் பேச்சுக்கள் எல்லாம் தெளிவாக மொழி பெயர்க்கப்பட்டு கோத்த பாயவின் பார்வைக்குப் போகும். எங்கள் சனம் சாகும். இனியாவது வாய்க்கும் மூளைக்கும் தொடர்பு வைத்துப் பேசுங்கய்யா. (06/06/2009 அன்று யாழ்ப்பாணத்திலும் ஒரு ஆயுதக்கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாம். இப்ப யாழ்ப்பாணத்தில் ஒரே வெயில், அந்த சூட்டில தீ பிடிக்குதய்யா)

வவுனியா மற்றும் கொடிகாமம் முகாம்களில் பிரிந்து வாழும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தங்களைச் சேர்த்து வைக்குமாறு ஒரு சட்டத்தரணி மூலம் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். வவுனியா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொன்னுசாமி சுரேந்திரநாதன், ஜெயராணி சுரேந்திரநாதன், நேசனா சுரேந்திரநாதன் மற்றும் கொடிகாமம் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சோபிதா சுரேந்திரநாதன், சிவபாக்கியம் மாணிக்கராஜா ஆகியோர் சார்பில் இந்த மனுவை சட்டத்தரணி கௌரிசங்கரி தவராஜா அவர்கள் தாக்கல் செய்திருக்கிறார். இந்தக் குடும்பம் வவுனியா செல்லவென இரண்டு பதுங்குகுழிகளில் தங்கியிருந்தது. சுரேந்திரநாதன், மனைவி ஜெயராணி, மகள் நேசனா (வயது 10க்கு கீழ்) ஆகியோர் ஒன்றிலும், ஜெயராணியின் தாயார் சிவபாக்கியம், மூத்த மகள் சோபிதா (13வயது), மகன் கிஷோர் (12வயது) ஆகியோர் இன்னொன்றிலும் இருந்த போது, எதிர்பாராத விதமாகப் பிரிய நேரிட்டது. சுரேந்திரநாதன், மனைவி மற்றும் நேசனா வவுனியாவுக்குத் தப்பிவந்தனர். எறிகணைக்குப் பலியான பேரன் கிஷோரை அவசர அவசரமாகப் புதைத்துவிட்டு சிவபாக்கியம் சோபிதாவோடு கொடிகாமத்துக்குத் தப்பியோடினார். தங்களை ஒரே முகாமில் விடுமாறு பலமுறை கேட்டும் பலனில்லாததால் சுரேந்திரநாதன் குடும்பம் நீதிமன்றை நாடியிருக்கிறது என்றே நினைக்கிறேன். ( பி.கு: சுரேந்திரநாதனின் தாயார் இராசம்மா பொன்னுச்சாமி, என் தகப்பனாரின் மூத்த சகோதரி. சுரேந்திரநாதன் என் மச்சான். செத்துப் போன கிஷோரும், அவலப்படும் சோபிதா, நேசனா ஆகியோர் என் பெறாமக்கள். Tamil One தொலைக்காட்சியில் மேற்படி செய்தியைக் கேட்டபோது வலித்தது)


கொஞ்சம் பொருளாதாரம்

திடீரென்று கச்சா எண்ணை விலை அதிகரித்திருக்கிறது. நேற்று எரிபொருள் (Car Gas) லிட்டர் 1 டாலர் 3 சதமாக உயர்ந்திருந்தது. சென்ற வருடம் இதே நேரம் லிட்டர் 1 டாலர் 52 சதமாகக் கூட இருந்தது. சென்ற டிசம்பரில் வெறும் 70 சதமாக விழுந்தது. கனேடியா டாலரின் மதிப்பும் சற்றே உயர்ந்திருக்கிறது. Bank of Canada வின் கூற்றுப்படி 1 கனேடிய டாலர், 0.9106 ஐக்கிய அமெரிக்க டாலராக மதிப்புயர்ந்திருக்கிறது. சென்ற வருடம் கிட்டத்தட்ட அமெரிக்க டாலரை எட்டிப்பிடித்து, பின் அதலபாதாளத்தில் விழுந்து இப்போது ஓரளவுக்கு மீண்டுவருகிறது. கச்சா எண்ணை விலை கேலனுக்கு 70 டாலரைக் கடந்திருக்கிறது. (மார்ச்சில் வெறும் 35 டாலர்கள்). விரைவில் 80 டாலரை எட்டும் என்கிறார்கள். இவற்றின் விலை அதிகரிப்பால சாதாரண மக்களுக்கு நட்டம் போல் தோன்றினாலும், கனடாவைப் பொறுத்த மட்டில் சாதாரண குடிமகனுக்கு இது ஒரு நல்ல செய்தி. கனேடியப் பொருளாதாரமும் கச்சா எண்ணை மற்றும் எரிபொருள் விலைகளும் அன்றில் பறவைகள் மாதிரி. ஒன்றில்லாமல் இன்னொன்று வாழாது. அதனால் பொருளாதார நெருக்கடியிலிருந்த கனடா மீளுவதற்குரிய சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

ஆனால் சில பொருளாதார வல்லுனர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. FACTS' அமைப்பின் Fereidun Fesharaki இது ஒரு தற்காலிகமான நிலை என்றும் மிக விரைவிலேயே கச்சா எண்ணை விலைகள் 40 டாலர் அல்லது அதற்குக் கீழே போவதற்கு வாய்ப்புகள் உள்ளதாயும் கூறி வயற்றில் புளியைக் கரைத்திருக்கிறார். இவர் மற்றும் இவர் போன்ற வல்லுனர்களின் கூற்றை முதலீட்டாளர்கள் கேட்பதாய் தெரியவில்லை. கச்சா எண்ணை பங்குகளில் நன்றாக முதலீடுகள் நடப்பதாக Toronto Stock Exchange சொல்கிறது.

கொஞ்சம் விளையாட்டு

ICC T20 உலகக் கோப்பை இப்போதான் சூடு பிடித்திருக்கிறது. ஆஸ்திரேலியா முதல் சுற்றிலேயே வெளியேறியது, இங்கிலாந்துடனான நெதர்லாந்தின் வெற்றி, அயர்லாந்து பங்களாதேஷை வெளியேற்றியது ஆகிய மூன்றும்தான் Upsets. அவுஸ்திரேலியாவின் தோல்வி பற்றி கிரிக்கெட் அவுஸ்திரேலியாவிடம் விளக்கம் கேட்டிருக்கின்றனராம் அணி ஸ்பான்சர்களான Victoria Better, Johnnie Runner மற்றும் Wolf Bass. (மூன்றுமே Alcohol Brands). குடித்தார் என்று காரணம் காட்டி Andrew Symonds வெளியேற்றப்பட்டது பற்றி அணிவீரர்கள் மற்றும் ஸ்பான்சர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாகக் கேள்வி. சேவாக் காயம் காரணமாக நாடு திரும்பியது இந்திய அணிக்குப் பேரிழப்பு. தோனிக்கும் சேவாக்குக்கும் பனிப்போர் என்றுவேறு கிளப்பி விட்டிருக்கிறார்கள். Warm Up போட்டிகளிலிருந்தே மாறாத பதினொருவருடன் கலக்கிவரும் தென்னாபிரிக்காவுக்கு இந்த முறை கோப்பை கிடைக்கலாம்.

இத்தாலியின் AC Milan அணியில் ஆடிவந்த Kaka' ஸ்பெயினின் Real Madrid அணிக்கு 56 மில்லியன் யூரோவுக்கும், இங்கிலாந்தில் Manchester United அணியில் ஆடிவந்த Christiano Ronaldo அதே Real Madrid அணிக்கு சாதனைத் தொகையான 80 மில்லியன் யூரோவுக்கும் விற்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு வீரர்களின் விற்பனை கால்பந்தாட்ட உலகின் தற்போதைய பரபரப்பு.

கொஞ்சம் பொழுதுபோக்கு
ஒருவழியாக ‘பசங்க' DVD Rip (Superb Quality) கிடைத்தது. பார்த்தேன். விமர்சனங்களில் சொன்னது போல் ஜாலியான படம். வாண்டுங்களாகட்டும், விமல்-வேகா ஜோடியாகட்டும், மற்ற எல்லப் பாத்திரங்களாகட்டும் நன்றாக காட்டப்பட்டிருந்தன. ‘ஒரு வெட்கம் வருதே' மற்றும் பாலமுரளி கிருஷ்ணாவின் ‘அன்பாலே அழகாகும் வீடு' பாடல்கள் கவர்ந்தன. ‘எப்புடி?' 'கொன்னு கொன்னு கொன்னுடுவேன்?' போன்ற வசனங்களால் வசீகரிக்கும் அந்தக் குட்டிப் பயலை எனக்கு ரொம்பவே பிடித்தது. இயக்குனரிடம் ஒரு கேள்வி: தமிழ் சினிமா இயக்குனர்கள் மற்றும் கதாநாயகர்கள் மேல் என்ன கோபம் சார். இப்படிக் கடிச்சிருக்கீங்களே. ஆனா அவங்களுக்கு இப்பிடி யாராவது கடிக்கணும். இல்லாட்டா எங்களுக்கு ஒரே ‘பொல்லாத' 'ரோதனை'!!! தமிழ் சினிமாவின் எதிர்காலம் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் கொடுக்கும் மரியாதையில்தான் இருக்கிறது.