Sunday 6 December 2009

இன்றைய யாழ்ப்பாணம்

இன்றைக்கு இருக்கிற யாழ்ப்பாணம் பற்றிய யாழ்ப்பாணத்துக் கலாச்சாரக் காவலர்களின் புலம்பல்கள் சிலவற்றை வாசிக்க நேர்ந்தது. யாழ்ப்பாணம் கலாசாரம் மிகுந்த ஒரு இடமாகவே இதுவரை பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் பெரும்பாலான யாழ் மைந்தர்களுக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருவதில்லை. எழுத்தாளர் சுஜாதா சொன்ன ‘தப்புக்கள் வெளியே தெரியாதவரை யாவரும் புனிதர்களே' என்கிற வாக்கியம் இன்றைக்கு யாழ்ப்பாணம் சீரழிந்துவிட்டதாகப் புலம்புகிறவர்களுக்கும் பொருந்தும். இதுவரை பெரியளவில் வெளியில் பேசப்படாமல், வெளியில் தெரியாமல் இருந்த சில விஷயங்கள் இப்போது வெட்டவெளியில் நடக்கின்றன. அவ்வளவுதான் வித்தியாசமே.

இவர்கள் வைக்கிற குற்றச்சாட்டுகளில் சிலவற்றைப் பார்ப்போமே. இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாமே facebookல் தம்பி ஒருவர் திரட்டிய பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டவை. இதற்கு நானும் கொஞ்சக்காலம் ‘கலாசார பூமி'யாகக் கட்டமைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் குப்பை கொட்டியவன் என்கிற காரணத்தால் எதிர்வினையாற்றவேண்டி வருகிறது. யாழ்ப்பாணத்தில் திறந்த வெளி விபசாரம் நடக்கிறதாம். நான் இருந்த காலத்திலும் நடந்தது. செல்வநாயகம் அண்ணா ஒரு பெண்ணுக்குப் பச்சை மட்டையால் அடியும் போட்டார். ஆனாலும், அந்தப் பெண்ணுடன் போன ஆண்கள் பற்றி யாருமே கவலைகொண்டாரில்லை. இங்கே பல்லிளிக்க ஆரம்பிக்கிறது பொதுப்புத்தி. எத்தனை பேருக்குத் தெரியுமோ தெரியாது. எங்கள் பகுதியில் பணக்காரன் வீடு என்று ஒரு சமூகம் இருக்கிறது. இவர்கள் பெரிய வளவுகளில் வீடு கட்டி வாழ்ந்தவர்கள். வீடு கட்டி வாழ்வதைவிட, அவர்களின் வளவுக்குள் சில ‘சின்ன வீடுகள்' இருப்பது கௌரவம் என்று வாழ்ந்தவர்கள். இதைச் சொன்னது எனக்குக் கணிதம் படிப்பித்த ஆசான் ஒருவர். அதாகப்பட்டது, ஒருவனுக்குப் பல பேர். ஆனால் ஒருத்திக்கு ஒருவன் என்கிற ஆணாதிக்கக் கட்டுமானம்தான் இவர்கள் இன்றைக்குப் புலம்பும் சீரழிந்துபோன ‘யாழ்ப்பாணக் கலாசாரம்'.

சிறுமிகள் அணியும் உடைகளை யுவதிகள் அணிகிறார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்கள். முக்கால் காற்சட்டையோடு, மேலே ஒன்றும் இல்லாமல் பருத்த வண்டிகள் குலுங்க இந்த ஆண் சிங்கங்கள் நடைபோடலாமாம், ஆனால் பெண்கள் இழுத்துப் போர்த்தி கலாசாரம் பேணவேண்டுமாம். இதை இளைய சமுதாயம் ஒரு குற்றச்சாட்டாய் வைக்க இனிமேலும் இடம் கொடுக்கக்கூடாது. நீ பாரம்பரிய உடைகளை அணிகிறாயா? நீ கலாசாரத்துக்கு ஏற்ப வாழ்கிறாயா? இல்லையே. பிறகு எப்படி நீ ஒரு பெண் போடுகிற உடைகளை மட்டுப்படுத்துகிற ஆளாக முடியும்? (இதைவிட ஆண்கள் முக்கால் கால்சட்டை போடக்கூடாது என்று உடை விஷயத்தைக்கூட தாங்கள் தீர்மானித்த ஒரு கூட்டமும் இருந்தது). இங்கே மாறவேண்டியது உடைகள் அல்ல. நாங்கள் பார்க்கிற பார்வை. ஒரு வட்டத்துக்குள் இருந்துகொண்டு இவ்வளவுதான் உலகம் என்று இருந்தோம் என்றால், சந்ததி சந்ததியாக முன்னேறாமல் பின்தங்கிப்போய்விட வேண்டியதுதான்.

சந்து பொந்துகளில் காதலன் மடியில் காதலி உட்கார்ந்திருக்கிறாளாம். அடச் சீ... அவர்கள் என்ன... வேண்டாம். என் வாயைக் கிளறவேண்டாம். தெருவில் கூடும் நாய்களைக் கல்லால் அடித்துப் பிரிக்கிற கூட்டம், ஒரு ஆணும் பெண்ணும் அந்நியோன்னியமாக இருந்து உரையாடுவதை விமர்சிக்கிறது. நான் இருந்த போது நான்கு சுவர்களுக்குள் நடக்கவேண்டியதை எல்லாம் சில பேர் யாழ்ப்பாணத்துப் பற்றைகளில் செய்தார்கள். கலாசாரம் காக்கிறோம் என்கிற பெயரில் அவர்களைப் பிடித்த ‘கலாசாரக் காவலர்கள்' ஆணை மிரட்டிக் கலைத்துவிட்டு, பெண்ணைத் தொட்டுப்பார்த்துவிட்டு அதைப் பெரிதாகப் பீற்றியுமிருக்கிறார்கள். அதாகப்பட்டது கலாசாரம் காக்கிறோம் என்கிற பெயரில் ஆணாகப்பட்டவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஒரு பெண் காதலன் மடியில் சாய்ந்து பேசிக்கொண்டிருந்தால் ‘கலாசாரம் சீரழிகிறது. கலாசாரம் சீரழிகிறது' என்கிற கூச்சல். இதில் ஆண்களின் செல்லிடப்பேசிகளில் பெண்களும், பெண்களின் செல்லிடப் பேசிகளில் ஆண்களும் மட்டுமே பேசுகிறார்கள் என்கிற புலம்பல்வேறு. இப்படிப் பேசுவதாலும் கலாசாரம் கெடுகிறது என்றால், ஒரு பொதுவிழாவில் ஒரு ஆணும் பெண்ணும் பேசினால்கூட கலாசாரம் கெட்டுவிடுமல்லவா???? என்ன அபத்தமான வாதம் இது?

அதே போல நீலப்படங்களை சீ.டி.க்களாகவோ அல்லது இணையத்திலோ தேடும் இளைஞர்களையும் குற்றம் சொல்ல முடியாது. அவர்களை அப்படி அலைய வைத்ததில் எங்களுக்கும் பங்கிருக்கிறது என்பதை இந்தக் கலாசாரக் காவலர்கள் உணரவேண்டும். அவர்களுக்கு நீலப்படம் போட்டுக்காட்டுங்கள் என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் ஆண் பெண் உடலமைப்பு முதல் இன்ன பிற விஷயங்களை உள்ளடக்கிய பாலியல் கல்வி என்பது நிச்சயமாக எங்களின் சமூகத்துக்குத் தேவை. எங்களின் சமூகம் மட்டுமல்ல. உலகில் பல சமூகங்களின் நிலையும் இதுதான். இது ஒன்றும் கேவலமானதும், விகாரமானதும் அல்ல. பொது வெளியில் பேசப்படவேண்டியது என்பதை முதலில் புரிந்துகொள்வது அவசியம். என் பதினமங்களில் எனக்கும் இது தொடர்பான தேடல், தவிப்பு இருந்தது. இங்கே தான் நான் எங்கள் பிதாமகன் சுஜாதாவுக்கும், ஆசான் ஜெவட்டி என்கிற ஜெபரட்ணத்துக்கும் நன்றி சொல்லவேண்டும். ஜெபரட்ணம்தான் பாலியல் பற்றிய கற்கை முக்கியமானது என்ற கருத்தின் விதையை எனக்குள்ளே விதைத்தவர், ஒரு நாற்பது நிமிட வகுப்பில் சர்வசாதாரணமாக அவர் சொன்ன 5 நிமிடக் கருத்தொன்றின் மூலமாக. தமிழ் சினிமாப் பாடல்களைத் தணிக்கை செய்கிற சமூகத்தில் பாலியல் பற்றிய பொதுவெளி உரையாடல்கள் சாத்தியமா என்பது சந்தேகமே.

இந்தக் குற்றச்சாட்டுகளைத் தவிர, அந்த நண்பர் கூறியிருக்கிற வேறு சில குற்றச்சாட்டுகளை நான் தலைகுனிந்து ஏற்றுக்கொள்கிறேன். ராணுவக் கோப்ரல் ஒருவரின் பெயரைச் சொல்லிச் சில இளைஞர்கள் அட்டகாசம் செய்கிறார்களாம். யாரையாவது அடிப்பதையே ஒரு நாள் இலட்சியமாகக் கொண்டு குழுமங்கள் பல அலைகின்றனவாம். இவைகளை நான் 'கலாசாரச் சீரழிவு' என்ற பதத்துக்குள் உட்படுத்தாமல் ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட சீரழிவாகப் பார்க்க விரும்புகிறேன். சினிமாக்களின் தாக்கம், இது வரையில் இருந்த, இப்போது இருக்கிற அடக்கு முறையால் ஏற்பட்ட மனச் சிதைவுகள் இவற்றுக்குரிய காரணங்களாக இருக்கலாம்.

இப்படியான செயற்பாடுகள் அந்த நண்பருக்கு வருத்தம் அளித்திருப்பதில் எனக்கு ஆச்சரியமில்லை. ‘கலாசாரத்துக்குப் பேர்போன யாழ்ப்பாணம்' என்கிற பொதுப்புத்திக்கு இந்தச் செய்திகள் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். யாழ்ப்பாணத்தில் இவற்றுடன் சாதீயமும் கோரமுகம் கொண்டு இருந்து வருவது உண்மை. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல் இருந்தாலும் இதையும் இங்கே சொல்லித்தானாகவேண்டும். யாழ்ப்பாணத்தில் sexual orientation என்கிற பதத்தில் அடங்குகிற அத்தனை வகைகளும் இருக்கிறது. அதே போல் incest கூட. நான் சொல்வது அதிர்ச்சியாகவும், யாழ்ப்பாணத்தை வசைபாடுவது போலவும் இருக்கலாம். என்றைக்காவது ஒரு நாள் என்னைப் போல இன்னொருவனும் இவற்றைக் கண்டுணர்வான். அல்லது கண்டுணர்ந்த ஒருவன் துணிந்து சொல்லுவான். இந்தப் பதிவுக்கு வரும் வசைகளுக்கு நான் சொல்கிற பதில்களுக்கு அப்படி ஒருவன் பலம் சேர்ப்பான்.

70 comments:

தமிழன்-கறுப்பி... said...

பின்னூட்டங்கழுக்காக...

Unknown said...

நன்றி தமிழன் கறுப்பி. திட்டு வரமுன்னமே ஆதரவுக்குரலா... நல்லது

வந்தியத்தேவன் said...

கீத் உண்மையை எழுதியிருக்கின்றீர்கள். ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்க்கும் போது நடக்கும் சில விடயங்கள் உட்பட பல விடயங்களை இன்னொரு இணையத்தில் பார்த்தேன். சில விடயங்களை இனிமேலும் மறைக்கமுடியாது.

உங்கள் பேஸ்புக் லிங்க் வேலை செய்யவில்லை.

vasu balaji said...

இது யாழ்ப்பாணத்துக்கு மட்டுமல்ல கிருத்திகன். அனேகமாக எல்லா ஊர்களுக்குமே பொருந்தும். மிக அருமையான கருத்துக்கள்.

கலகலப்ரியா said...

//எழுத்தாளர் சுஜாதா சொன்ன ‘தப்புக்கள் வெளியே தெரியாதவரை யாவரும் புனிதர்களே'//

அதே..!

//இங்கே மாறவேண்டியது உடைகள் அல்ல. நாங்கள் பார்க்கிற பார்வை.//

நம்மவர்களில் பக்குவப்பட்ட ஒரு சிலரில்... உன் பெயரும்..

//யாழ்ப்பாணத்தில் இவற்றுடன் சாதீயமும் கோரமுகம் கொண்டு இருந்து வருவது உண்மை//

நிஜம்..!

//ஆசான் ஜெவட்டி என்கிற ஜெபரட்ணத்துக்கும் நன்றி சொல்லவேண்டும். ஜெபரட்ணம்தான்//

இவங்க என்னுடைய ஆசானும் கூட..! இவங்க பத்தி நானும் ஒரு இடுகை எழுதணும்.. =))

Anonymous said...

யாழ்ப்பாணத்து கலாசாரம் என்றது பெரிய போர்வை.. அதை வெளியில போர்த்து விட்டுட்டு.. உள்ள சகலதும் நடக்கும்..

வேந்தன் said...

வணக்கம் கீர்த்தி,
நான் முறன்படும் இடங்கள் சில...
//வெளியில் தெரியாமல் இருந்த சில விஷயங்கள் இப்போது வெட்டவெளியில் நடக்கின்றன. அவ்வளவுதான் வித்தியாசமே.//
நீங்கள் கனடா, நான் இங்கிலாந்து எம்மிருவருக்கும் இது "அவ்வளவுதான்" சொல் பெரிதில்லை, யாழ்ப்பாணத்தில் "அப்படியா!" ஒரு ஆச்சரிய குறி அல்லது வியப்பு.
//யாழ்ப்பாணத்தில் திறந்த வெளி விபசாரம் நடக்கிறதாம்.//
எவ்வளவு சாதரணமாக சொல்லிறீங்க! சரி விபச்சாரம் என்பது அங்கிகரிக்கப்பட்ட தொழிலாக இருக்கட்டும். அதை வீட்டில் ரூம் போட்டுச் செய்ய வேண்டியதுதானே. அப்படி செய்தா புருஷனுக்கு தெரிந்து விடுமா? அல்லது பெற்றோருக்கு தெரிந்து விடும் என்ற பயமா? அதை ஏன் பத்தைக்க செய்வான். எத்தனை பாம்புகளும், பாம்புச் செட்டைகளும் பத்தைக்குள் இருக்கும்?
//அவர்களின் வளவுக்குள் சில ‘சின்ன வீடுகள்' இருப்பது கௌரவம் என்று வாழ்ந்தவர்கள்//
என்ன கீர்த்து நீங்களும் யாழ்ப்பாண பெண்களைப் பற்றி புரியாமல் பேசிறீங்க. திருமணமான பின் கணவனின் சகோதரிகளையே வில்லிகளை பார்க்கிற மாதிரி பார்ப்பினம் சின்ன வீட்டுடன் எப்படி ஒரே வளவுக்குள்ளே..?

வேந்தன் said...

//ஒருவனுக்குப் பல பேர். ஆனால் ஒருத்திக்கு ஒருவன்//
சொல்லவே இல்ல... :) நான் அப்படி யாரையும் அறியவில்லை, முதல் துணை இறந்த பின் மறுமணம் முடித்த ஆணையும் பெண்னையும் பார்த்திருக்கின்றேன். உங்க கணக்கு வாத்தியார் கணக்கை கூட்டி காட்டிவிட்டார் போல.
// மேலே ஒன்றும் இல்லாமல் பருத்த வண்டிகள் குலுங்க இந்த ஆண் சிங்கங்கள் நடைபோடலாமாம், ஆனால் பெண்கள் இழுத்துப் போர்த்தி கலாசாரம் பேணவேண்டுமாம்.//
ம்ம்ம்... பெண்கள் மேலாடை போடமல் வீதியில் போக முடியுமா? ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் இருக்கு போஸ்!
(உங்களுக்கு தெரியுமா ஒல்லாந்தர் யாழ்ப்பாண இராச்சியத்தை கைப்பற்றும் காலம் ஏன் 150 ? வருடங்களுக்கு முன் கூட யாழ் பெண்கள் மேலாடை அணிவதில்லை! திறந்த மார்பகங்கள் தான்!)
//சந்து பொந்துகளில் காதலன் மடியில் காதலி உட்கார்ந்திருக்கிறாளாம்.......ஒரு ஆணும் பெண்ணும் அந்நியோன்னியமாக இருந்து உரையாடுவதை விமர்சிக்கிறது.//
உண்மையாக காதலிப்பவனாக இருந்தால் ஏன் அப்பன் சந்து பொந்துகளுக்குள் கூட்டிக் கொண்டு போவான். அந்நியோன்னியம், காமத்தை யெல்லாம் திருமணத்தின் பின் வீட்டில் வைக்க வேண்டியதுதானே.

வேந்தன் said...

//தமிழ் சினிமாப் பாடல்களைத் தணிக்கை செய்கிற சமூகத்தில் பாலியல் பற்றிய பொதுவெளி உரையாடல்கள் சாத்தியமா என்பது சந்தேகமே... ....ராணுவக் கோப்ரல் ஒருவரின் பெயரைச் சொல்லிச் சில இளைஞர்கள் அட்டகாசம் செய்கிறார்களாம்//
இதுதான் நான் தேடிய காரணம். நாங்கள் வாழும் காலம் ஒரு விடுதலை அல்லது உரிமையை வேண்டி நிற்கும் காலம். இந்த போராட்டத்திற்கு இளைஞர்களின் வெட்கை தேவை. இதை சினிமா பாடல்களும் நீலப்படங்களும் தடுத்து விடக்கூடாது என இயக்கங்கள் இருந்தன. வரலாற்று பக்கத்தை திருப்பி பார்த்தை சில உண்மைகள் தெரியும்.
ஆங்கில ஆட்சியை எதிர்த்த மக்களுக்கு அவர்கள் மது பழக்கத்தை பழக்கப்படுத்தி விட்டார்கள். அதனுள் அடிமை ஆனவர்கள் ஆங்கிலேயரை எதிர்க்க வேண்டும் என்ற சிந்தனை இழந்தார்கள். ஓய்வு நேரங்களை எல்லாம் போதையில் கழித்தார்கள். எதிர்ப்பை கைவிட்டார்கள்! இதுதான் சூழ்ச்சி! இப்பவும் இதுதான் நடக்குது. உடைந்த பாடசாலைகள் பல இருக்க, அரசு புதிதாக திரையாரங்குகளையும், மதுசாலைகளையும் திறக்குது. கேலிக்கை நிகழ்ச்சிகளை நடத்துகின்றது. ஆடை குறைப்பும் அவிழ்ப்பும்தான் முன்னேறம் என்றால் இதை 150 வருடத்திற்கு முன்னமே பெற்று விட்டோம்!
மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. அது கால ஓட்டத்துக்கு ஏற்ப நடக்கவேண்டும். இந்த யாழ்ப்பாணத்துக் கலாச்சாரத்திலும் (கந்தபுராணக் கலாச்சாரம்) மாற்றம் ஏற்ப்படும் மாறும்! அது கலாச்சார வளர்ச்சியாக இருக்க வேண்டுமே ஒழிய கலாச்சார சிதைவாக இருக்க கூடாது.

வேந்தன் said...

//அதே போல நீலப்படங்களை சீ.டி.க்களாகவோ அல்லது இணையத்திலோ தேடும் இளைஞர்களையும் குற்றம் சொல்ல முடியா//
நீலப்படம் பார்பதை தவறு என்று நான் சொல்ல மாட்டேன். (ஹிஹிஹி...) இது ஒரு வடிகால். இல்லா விட்டால் நம்ம பசங்க வெறியுடன் திரிவார்கள். பார்த்தமா முடிச்சமா(!) எண்டு போய்க்கொண்டிருக்க வேண்டியதுதான்.

வேந்தன் said...

அவ்வ்வ்வ்வ்.... பின்னூட்டம் நீண்டு போச்சு போஸ்!
அதுதான் துண்டு துண்டாக போட்டேன். முதலும் இப்படி நீண்ட பின்னூட்டம் போட்ட நினைவு.
---
மனதில் பட்டதை அப்படியே எழுதிருங்க. இப்படி எழுத உங்களுக்கு எப்படித்தான் நேரம் இருக்குமோ தெரியல! இன்று முதல் நான் உங்களை பின் தொடர்கின்றேன்... மேல போட்ட பின்னூட்டம் எனது பார்வை அவ்வளவுதான். சங்கடப்படுத்தினால் மன்னிக்கவும்...:)

Unknown said...

///ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்க்கும் போது நடக்கும் சில விடயங்கள் உட்பட பல விடயங்களை இன்னொரு இணையத்தில் பார்த்தேன். சில விடயங்களை இனிமேலும் மறைக்கமுடியாது///
உண்மைதான் வந்தியண்ணா.. சுயவிமர்சனங்களுக்கும் தோலுரிப்புகளுக்குமான காலம் கனிந்து வருகிறது.... செய்வோம்

Unknown said...

///இது யாழ்ப்பாணத்துக்கு மட்டுமல்ல கிருத்திகன். அனேகமாக எல்லா ஊர்களுக்குமே பொருந்தும்///
உண்மை பாலா.... மாற்றம் தேவை. என்னால் ஒன்று மட்டும் கூறமுடியும். எனக்கு முதல் சந்ததியை நான் என்னவும் செய்ய முடியாது, ஆனால் எனது வாரிசுகள் மூலம் மாற்றம் கொண்டுவரலாம்

Unknown said...

///நம்மவர்களில் பக்குவப்பட்ட ஒரு சிலரில்... உன் பெயரும்..///
நன்றி கலகலப்ரியா

///இவங்க என்னுடைய ஆசானும் கூட..! இவங்க பத்தி நானும் ஒரு இடுகை எழுதணும்.. =))///
அட, நீங்களும் எங்கள் தேசம்தானா???

Unknown said...

உண்மை அனானி

Unknown said...

///நீங்கள் கனடா, நான் இங்கிலாந்து எம்மிருவருக்கும் இது "அவ்வளவுதான்" சொல் பெரிதில்லை, யாழ்ப்பாணத்தில் "அப்படியா!" ஒரு ஆச்சரிய குறி அல்லது வியப்பு.///
நிச்சயமாக சிந்திக்க வேண்டிய கருத்து வேந்தன்.

///என்ன கீர்த்து நீங்களும் யாழ்ப்பாண பெண்களைப் பற்றி புரியாமல் பேசிறீங்க. திருமணமான பின் கணவனின் சகோதரிகளையே வில்லிகளை பார்க்கிற மாதிரி பார்ப்பினம் சின்ன வீட்டுடன் எப்படி ஒரே வளவுக்குள்ளே///
அங்கேதான் ஓங்கி நின்றது யாழ்ப்பாணத்தின் ஆணாதிக்கக் கட்டமைப்பு வேந்தன். வருத்தமான உண்மை அது. இதெல்லாம் கிட்டத்தட்ட எங்கள் பாட்டன் காலத்துச் சமாச்சாரம்.

///உங்களுக்கு தெரியுமா ஒல்லாந்தர் யாழ்ப்பாண இராச்சியத்தை கைப்பற்றும் காலம் ஏன் 150 ? வருடங்களுக்கு முன் கூட யாழ் பெண்கள் மேலாடை அணிவதில்லை! திறந்த மார்பகங்கள் தான்///
நம் பெண்கள் மட்டுமல்ல. பல நாகரிகங்களில் பெண்கள் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். மார்பகங்கள் கவர்ச்சிப் பொருட்களாய் ஆங்கிலேயர்களால்தான் சித்தரிக்கப்பட்டனவாம். எங்கோ படித்த ஞாபகம். பார்ப்போம் சரியான ஆதாரம் கிடைக்கிறதா என்று.

Unknown said...

///மனதில் பட்டதை அப்படியே எழுதிருங்க. இப்படி எழுத உங்களுக்கு எப்படித்தான் நேரம் இருக்குமோ தெரியல! இன்று முதல் நான் உங்களை பின் தொடர்கின்றேன்... ///
நேரம் எனக்குப் பிரச்சினையில்லை வேந்தன். எழுத மனமும் விஷயமும் வேண்டும். நானும் தொடர்கிறேன் உங்களை.

///மேல போட்ட பின்னூட்டம் எனது பார்வை அவ்வளவுதான். சங்கடப்படுத்தினால் மன்னிக்கவும்...:)///
இதுதான் சங்கடப்படுத்தியது. நீங்கள் என்னைத் திட்டினீர்களா இல்லை சபித்தீர்களா??? உங்கள் கருத்தைச் சொன்னதுக்காக நான் மனம் சங்கடப்பட்டு உங்களோடு சண்டை போட்டால் என்னைப்போல் ஒரு முட்டாள் இல்லை. இப்படியே ஆரோக்கியமான சண்டைகளுடன் நட்புடனிருப்போம், என்றென்றும்

அருண்மொழிவர்மன் said...

"என்றைக்காவது ஒரு நாள் என்னைப் போல இன்னொருவனும் இவற்றைக் கண்டுணர்வான். அல்லது கண்டுணர்ந்த ஒருவன் துணிந்து சொல்லுவான். இந்தப் பதிவுக்கு வரும் வசைகளுக்கு நான் சொல்கிற பதில்களுக்கு அப்படி ஒருவன் பலம் சேர்ப்பான்."

இவற்றை எல்லாம் நான் ஏற்கனவே கண்டுணர்ந்துள்ளேன். மேலும், நாம் கலாசாரம் கலாசாரம் என்றெல்லாம் அதிகம் பேசியே காட்டுமிராண்டிக்காலத்துக்குப் போகின்ரோமோ என்ற எண்ணமும் எனக்குண்டு.....

இதில் கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால் பத்திரிகைகள் இப்படியான செய்திகளை வெளியிடும்போது, அதைப் பார்த்து அய்யோ, என்ர கடவுளே இப்படியும் நடக்குதாமே என்று பதறுவது (அவர்களும் இவற்றையெல்லாம் செய்திருப்பார்கள் / செய்ய ஆசைப்பட்டிருப்பார்கள்) தம்மைப் புனிதர்களாக்கும் ஒரு முயற்சியே....

நல்ல பதிவு கீத்....

என்ன கொடும சார் said...

ஒன்று முடிந்தால் இன்னொன்றை ஆரம்பிப்பது மனித இயல்பு.. பிரச்சினைகள் இல்லாவிட்டால் உருவாக்குவதுதான் இது..

Subankan said...

யாழ்ப்பாணம் இதுவரை கலாசாரம் மிகுந்த இடமாக இருந்தது என்பதை விட இருக்க வைக்கப்பட்டது என்பதே பொருத்தமாக இருக்கும். இதுவரை மறைவாக நடைபெற்றுவந்த விடயங்கள் எல்லாம் இன்று வெட்டவெளியில் நடக்கின்றன என்பதைத்தவிர்த்து புதிதாக எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை.

அப்பாவி தமிழன் said...

இலங்கையில் பிறந்திருதாலும் யாழ்பாணம் எனக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லை 2005 யாழ்பாணம் சென்ற பொது நீங்கள் கூறிய பலவற்றை நானும் நேரில் அறிந்தேன் .அதிலும் என்னை மிகவும் பாதித்த விடயம் சில இடங்களில் குறிப்பிட்ட ஆக்கள் (ஜாதி )மட்டுமே கோவில் கிணற்றில் தண்ணீர் அள்ள முடியும் , எவ்வளவு தாகமாக இருந்தாலும் குறிப்பிட்ட ஆக்கள் வந்து தண்ணி அள்ளித் தந்தாத் தான் குடிக்க முடியும் (இது எப்பேர்ப் பட்ட கலாச்சாரமோ ?........)

Anonymous said...

அட, நீங்களும் எங்கள் தேசம்தானா???//

இதில உள் குத்தொன்றும் இல்லைத்தானே.. :):)

Anonymous said...

ஏங்க.. இந்த கலகலப்பிரியா நம்ம தேசமா? என்னமா தமிழ் கதைக்கிறாங்க... அதில ட்ரான்சுலேட்டர் வேறயாமில்ல... என்னங்கம்மணி... நீங்க யாழ்ப்பாணமா? கீத்தின் இடம் தானா?

எங்க இந்த தமிழ் கத்துக்கிட்டீங்க... நம்மளுக்கும் சொல்லித் தாறது... இந்தத் தமிழில தான் ட்ராண்சுலேட்டு பண்ணுறீங்களா?

http://kiruthikan.blogspot.com/2009/08/1_08.html
இங்கினக்க போய் பின்னூட்டங்களை கொஞ்சம் பாருங்க...

நீங்க எல்லாம் இருக்க இந்தத் தம்பியை போட்டு வாங்கு வாங்கு என்று வாங்கிட்டாங்க... பாவங்க இந்தத் தம்பி...

எப்பிடிங்க பெரியண்ணங்களோட இப்பிடி ஒண்டுக்க ஒண்டு ஆகினீங்க..

அண்ணே.. பெயரிலி.. எங்க இருக்கீங்க... கொஞ்சம் இந்தக் கலகலப்பிரியா வீட்ட எட்டிப் பாருங்கண்ணை...

--
எட தம்பி... இந்தப் பதிவுக்கு இது சம்பந்தம் இல்லையெண்டாலும் ஒருக்கா இதையும் publish பண்ணிவிடு.. புண்ணியமாப் போகும்...

காவலன் said...

பிழையான கருத்தொன்றை விதைக்க முயலுகிறீர்கள். இந்த நிலையை மாற்ற உங்கள் ஒருவருக்கும் விருப்பமில்லையா. எங்கள் யாழ்ப்பாணம் இப்படி அழிக்கப்படுகிறதே என்ற ஒரு கவலையும் இல்லையா.. எல்லாம் நடக்குது நடக்குது என்று சொல்லுறீங்கள் இதை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் எழவில்லையா. ஒருத்தரது மனமும் வேதனைப்படவில்லையா. ஏன் இப்படி உள்ளீர்கள். எமது சமூகம் இப்படிக் கெடுகிறதே என்ற அக்கறை ஒருவருக்கும் இல்லையா. விரைவில் இந்த நிலை மாறும் . எம்மோடு இணைபவர்கள் தொடர்புகொள்ளவும். yazhkaavalan@gmail.com .

Unknown said...

///இவற்றை எல்லாம் நான் ஏற்கனவே கண்டுணர்ந்துள்ளேன். மேலும், நாம் கலாசாரம் கலாசாரம் என்றெல்லாம் அதிகம் பேசியே காட்டுமிராண்டிக்காலத்துக்குப் போகின்ரோமோ என்ற எண்ணமும் எனக்குண்டு.....///
காட்டுமிராண்டிக்காலத்திலிருந்து என்றைக்கு மீண்டிருக்கிறோம் அண்ணா. என்ன கொஞ்சக்காலம் புலிகளுக்குப் பயந்து ஒளித்திருந்தோம் இப்போது வெளிப்பட்டிருக்கிறோம். அந்தக் காட்டுமிராண்டித்தனம் தந்த வடுக்களை நான் பலரது பதிவுகளில் இன்றைக்கும் காண்கிறேன். (உ-ம்: 96 இடப் பெயர்வு பற்றிய பதிவுகளில் சாதீயத்தின் கோரமுகம் காண்கிறேன்)

///இதில் கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால் பத்திரிகைகள் இப்படியான செய்திகளை வெளியிடும்போது, அதைப் பார்த்து அய்யோ, என்ர கடவுளே இப்படியும் நடக்குதாமே என்று பதறுவது (அவர்களும் இவற்றையெல்லாம் செய்திருப்பார்கள் / செய்ய ஆசைப்பட்டிருப்பார்கள்) தம்மைப் புனிதர்களாக்கும் ஒரு முயற்சியே....///
கொஞ்சம் சுழன்று பார்த்தால் என்னையே இது ‘பூமராங்' மாதிரித் தாக்கலாம் இல்லையா அருண்மொழிவர்மரே???

Unknown said...

கருத்துக்கு நன்றி எ.கொ.சா

Unknown said...

///யாழ்ப்பாணம் இதுவரை கலாசாரம் மிகுந்த இடமாக இருந்தது என்பதை விட இருக்க வைக்கப்பட்டது என்பதே பொருத்தமாக இருக்கும். இதுவரை மறைவாக நடைபெற்றுவந்த விடயங்கள் எல்லாம் இன்று வெட்டவெளியில் நடக்கின்றன என்பதைத்தவிர்த்து புதிதாக எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை///

அதுதான் உண்மை சுபாங்கன். அதைச் சொன்னால் யாழ்ப்பாணத்தை அழிக்க வந்த எதிரியாக என்னைப் பார்க்கிறார்கள்.

Unknown said...

///இலங்கையில் பிறந்திருதாலும் யாழ்பாணம் எனக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லை 2005 யாழ்பாணம் சென்ற பொது நீங்கள் கூறிய பலவற்றை நானும் நேரில் அறிந்தேன் .அதிலும் என்னை மிகவும் பாதித்த விடயம் சில இடங்களில் குறிப்பிட்ட ஆக்கள் (ஜாதி )மட்டுமே கோவில் கிணற்றில் தண்ணீர் அள்ள முடியும் , எவ்வளவு தாகமாக இருந்தாலும் குறிப்பிட்ட ஆக்கள் வந்து தண்ணி அள்ளித் தந்தாத் தான் குடிக்க முடியும் (இது எப்பேர்ப் பட்ட கலாச்சாரமோ ?........)///

கொடுமைதான் அப்பாவி. இதைத்தான் முதலில் உடைக்கவேண்டும். அதற்குப்பிறகு விபசாரம், பெண்களின் ஆடை, அவர்கள் ஆண்களின் மடியில் அமர்வது பற்றியெல்லாம் பேசலாம்.

Unknown said...

அனானி...
உள்குத்து ஒன்றுமில்லை. கலகலப்ரியாவுக்கு ஜெபரட்ணத்தைத் தெரியும் என்பதால் எழுந்த கேள்வி அது. (பழசையெல்லாம் கிண்டிக் கிளறாதீங்கோ அண்ணை. பேந்து மற்றண்ணை வந்து என்னோடை சண்டை போடுவார்). பெயரிலி தந்த தண்டனை போதாதென்று இன்னும் பல பொது வெளிகளில் முகம் தெரியாத பலர் தாக்கியிருக்கிறார்கள், என் முகவரியோடு அந்த இடங்களில் உலவியதால். பரவாயில்லை. இதுவும் கடந்து போகும் அனானி நண்பரே.

Unknown said...

///பிழையான கருத்தொன்றை விதைக்க முயலுகிறீர்கள். இந்த நிலையை மாற்ற உங்கள் ஒருவருக்கும் விருப்பமில்லையா. எங்கள் யாழ்ப்பாணம் இப்படி அழிக்கப்படுகிறதே என்ற ஒரு கவலையும் இல்லையா.. எல்லாம் நடக்குது நடக்குது என்று சொல்லுறீங்கள் இதை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் எழவில்லையா. ஒருத்தரது மனமும் வேதனைப்படவில்லையா. ஏன் இப்படி உள்ளீர்கள். எமது சமூகம் இப்படிக் கெடுகிறதே என்ற அக்கறை ஒருவருக்கும் இல்லையா. விரைவில் இந்த நிலை மாறும் .///

காவலரே. நீங்கள் நான் சொல்ல வந்ததை விளங்கிக்கொள்ளவில்லை. இணைய ஆபாசம் தவிர மிகுதி எல்லாமுமே யாழ்ப்பாணத்தில் பல காலமாக இருப்பவை. இதுகாரும் யாரும் குரல் கொடுத்ததில்லை. கொடுத்தவர்களின் குரலையும் ‘கலாசாரத்துக்குப் பேர்போன யாழ்ப்பாணம்' என்ற போர்வை மூடிவிட்டது. அந்தப் போர்வையைவிட்டு யாரும் வெளிவராதவரை (நீங்களும்தான்) தீர்வுகள் சொல்லிப் பிரயோசனமில்லை.

Anonymous said...

When you are writing about all these do not forget the role played by the Military Intelligence.
http://giapraj.blogspot.com/

நிலாமதி said...

கருத்தான பதிவு. அவசியம் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.
முடியும் ....உங்களை போன்ற இளையவர்களால் மட்டும்.
விழித்தெழுந்துஇன்றே புறப்படுங்கள். புது யுகம்படைக்க,ஆவனசெய்யுங்கள்.
உங்கள் பதிவு யாழ்இணையத்திலும் உள்ளது.சமுதாய நோக்கு கொண்ட பதிவு. பாராடுக்கள்.

Anonymous said...

கலாச்சாரம் என்ற போர்வையில் இருந்த அனைத்தும் அடக்குமுறைகள். தற்போது ஏற்படுவது கலாச்சார அழிவு இல்லை மாறாக மாற்றம். இந்த மாற்றம் அவசியமானது. மக்களுக்கு எயிட்ஸ் மற்றும் பாலியல் நோய்கள் குறித்த விழிப்புணர்வை மட்டும் ஏற்படுத்துவோம். என்னுமொரு சமூகத்தின் நீலப்படங்களை நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு தேடுவதை தவிர்த்து எமது சமூகம் தனக்கான நீலப்படங்களை தாங்களே உருவாக்கும் துணிவைப்பெறட்டும். சுதந்திரமானதும் பாதுகாப்பானதுமான பாலியல் கலாச்சாரம் எமது ஏற்றதாழ்வுகளை நிச்சயம் களையும். சிலர் கலாச்சாரம் அழிகிறது என்று குத்தி முறிவதற்குப்பின்னால் ஏற்றதாழ்வை விரும்புகின்றார்கள். நடப்பவைகள் நல்லவைகளே அல்லது மாற்றங்களை நல்லவிதமாக மாற்றுவோம்.

உங்கள் நண்பர்களில் ஒருத்தன் பெயர் சொல்ல விரும்பாமல் said...

கிருத்திகன் எனக்கு ஒரே ஒரு சின்ன சந்தேகம், நீங்கள் உங்கள் கருத்துப்படி உங்கள் வாழ்க்கையை வாழ்கிறீர்களா.....

உங்களால் இலங்கையில்( யாழ்ப்பாணத்தில்) வந்து வாழ முடியுமா??


ஆணாதிக்கம் பற்றியும் சாதியம் பற்றியும் கருத்துக்களை
சொல்லும்

உங்களால் உங்கள் உறவினர்களையோ நண்பர்களையோ மாற்ற முயர்சி செய்ய முடியுமா?

உங்கள் சமூகம் சம்பந்தமான பெரும்பாலான் கருத்துக்கள் என்னால் ஏற்றுக்கொள்ள கூடியதாக உள்ளது.

ஆனால் இவை எவ்வளவு சாத்தியப்படும்??

இவற்றை கனடாவிலாவது சாத்தியப்பட வைக்க முடியுமா??

நீங்கள் எப்படி உங்கள் வாழ்க்கையில் இவற்றுக்கெதிராக போராட போகிறீர்கள்?

உங்கள் பாடசாலை (நண்பர்கள்) பலர் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு துணைபோவது பற்றி??


ஆணாதிக்கமும் சாதியமும் மட்டுமே தற்போதைய நிலமைக்கு காரணம் இல்லை.
மனித மனங்கள் மரணித்து விட்டன.

நாங்கள் எத்தனை பேர் (உங்கள் நண்பர்கள்) ஒன்றும் செய்யாத பெண்கள் பற்றி வதந்திகளை பரப்பியுள்ளோம்????

எங்கள் குடும்பங்களில் எத்தனி பேர் காதலை ஏற்றுக்கொண்டுள்ளோம்,;
காதலை ஏற்றுக்கொண்டால் தானே ஐயா சாதி மாறிய காதலை ஏற்றுக்கொள்வது???

படித்த நாங்களே இப்படி என்றால்?????

உங்கள் நண்பர்களில் ஒருத்தன் பெயர் சொல்ல விரும்பாமல் said...

இந்த கலாச்சாரம் சீர்கேடு எண்டது இவளவு கதைக்கப்பட காரணம்,
இவளவுகாலமும் பிரச்ச்னைப்பட்ட பெண்ணின் குடும்பம் சொல்லக்கூடிய குடும்பபின்ன்ணியை கொண்டு இருக்காது, ஆனால் இப்போ நடப்பது பெரிய பின்னணி உள்ள பிரபலமான தந்தை/தாய் இனுடைய மகளாய் இருத்தல்....

மட்டமா சொல்லுறது எண்ண்டால் இந்த பிரச்சனை இப்ப படிச்ச,குடும்பத்திலையும் வந்திட்டுது.........

இவளவுகாலமும் அறிவு காமத்தை தடுத்தது..
இப்போ காமம் அறிவை விஞ்சிவிட்டது

ஆனா ஒண்டு பாருங்கோ

“உழுகிற மாடுதான் எங்கே போனாலும் எப்ப எண்டாலும் உழும் “

sellamma said...

நண்பரே,
உமது எழுத்தாற்றல் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது ஆனால்,, உமது கருத்து என்னை கவலை கொள்ள செய்கிறது,, அவை நடைமுறைக்கு ஒத்துவருமா என்ற கேள்விக்கு உமது பதில் என்ன?
உங்களின் கருத்துக்களில் சமுதாய அக்கறையை விட பிரபலமாகுவதட்கான உந்துகையே அதிகமாக உள்ளது,
எமது சமுதாய கட்டுப்பாடுகளை நாமே தாழ்த்திக்கொண்டால் அதை விட கேவலமான செயல் வேறொன்றும் இல்லை,,
ஆண்கள் அணியும் ஆடையைப்பற்றி கவலை கொள்ளாத சமுதாயம் பெண்களின் ஆடைகளை பற்றி கவலைப்படுவதாக கூறி இருந்தீர்கள்,, எம் சமுதாயத்தில் பெண்கள் வெறும் மனிதர்கள் அல்ல அவர்களே கலாசாரத்தின் அடையாளம்,,,, அவர்களுக்கென வரையறைகளை வகுப்பதென்பது நியாயமான விடயமே,, அதை குறைசொல்வதேன்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம், குறை சொல்லும் நீங்கள் உங்கள் சகோதரிகளையோ உங்கள் மனைவிமார்களையோ அவ்வாறு ஆடை அணிய விடுவீர்களா?
கருத்துக்கள் சொல்வது இலகு, நடைமுறை என்பது வேறு,,
எமது கலாச்சாரமே எம்மை மற்றவர்களிடம் இருந்து வேறு படுத்தி காட்டுகிறது,, அந்த ஏகாந்தத்தன்மையை விட்டுக்கொடுப்பதேன்பது மடத்தனம்,,
நீங்களும் இந்த கலாச்சாரத்தில் இருந்துதான் வந்தவர்கள் என்பதை மறக்கக்கூடாது,, உங்கள் தாய் தந்தையரும் நீங்கள் ஆசைப்படுவது போல் கலாசாரத்தை தூக்கி எறிந்துவிட்டு தறிகெட்டு வாழ்ந்திருந்தால் உங்களின் நிலைமை என்ன??
சமுதாய கலாச்சாரங்களை குறை சொல்வதற்கு உங்களுக்கு தகுதி இருக்குமானால் நீங்கள் ஒரு தூய ஆன்மாவாக இருக்க வேண்டும் ,,
நீங்கள் எப்படி?
சமுதாய புரட்சி வரவேற்க பட வேண்டியதுதான்,, அது சமுதாய கழிவுகளை அகற்றி புத்துயிர் கொடுக்க வேண்டுமேதவிர,, சமுதாய கோட்பாடுகளை உடைக்க கூடாது,,

Unknown said...

பெயர் சொல்லா நண்பனுக்கு
///கிருத்திகன் எனக்கு ஒரே ஒரு சின்ன சந்தேகம், நீங்கள் உங்கள் கருத்துப்படி உங்கள் வாழ்க்கையை வாழ்கிறீர்களா.///
நிச்சயமாக....

///உங்களால் உங்கள் உறவினர்களையோ நண்பர்களையோ மாற்ற முயர்சி செய்ய முடியுமா///
அதற்கான முயற்சிகளைத்தான் மேற்கொள்கிறேன். என்னுடைய குடும்பத்தில் இப்படியான கேவலமான கொள்கைகள் என்னுடைய சந்ததிக்குப் பரவவிடமாட்டேன். அப்படிப் பரவும் சாத்தியக்கூறுகள் இருந்தால பரப்பும் விஷமிகளிடமிருந்து தனிமைப்பட்டுப் போகவும் நான் தயார். நண்பர்களோடு எப்போதும் இது பற்றி விவாதிக்கத் தயாராகவே இருக்கிறேன். முன்னைய காலத்தில் புரிந்துணர்வு இல்லாமல் நான் காயப்படுத்திய நண்பர்களிடம் நேரிடையாக மன்னிப்பும் கேட்டிருக்கிறேன்.

///ஆனால் இவை எவ்வளவு சாத்தியப்படும்///
///இவற்றை கனடாவிலாவது சாத்தியப்பட வைக்க முடியுமா///
இறங்கிப் போராடாமல், உங்கள் கருத்துக்களைச் சொல்லாமல் எப்படிச் சாத்தியப்படும் என்று சந்தேக மனத்தோடு இருந்தீர்களானால் சாத்தியப்படாதுதான் நண்பரே. என்ன தவறுகளை உணர்ந்து, அந்தத் தவறைத் திரும்பச் செய்யாமல், அதற்குரிய பிராயச்சித்தங்களை எந்தவித மனத்தடங்கலும் இல்லாமல் செய்யவேண்டும். அதற்கு நான் தயார். நீங்கள் தயாரா????

///நாங்கள் எத்தனை பேர் (உங்கள் நண்பர்கள்) ஒன்றும் செய்யாத பெண்கள் பற்றி வதந்திகளை பரப்பியுள்ளோம்????///
இது தவறென்று தெரிகிறதல்லவா. இந்தத் தவறை இனிமேலும் செய்யக்கூடாது என்ற மனநிலை வந்துவிட்டால் போதும். எல்லாம் மாறிவிடும்.

Unknown said...

செல்லம்மா...
///எம் சமுதாயத்தில் பெண்கள் வெறும் மனிதர்கள் அல்ல அவர்களே கலாசாரத்தின் அடையாளம்///
///அவர்களுக்கென வரையறைகளை வகுப்பதென்பது நியாயமான விடயமே///
இங்கே வருகிறது பொதுப்புத்தி சொல்லித்தந்த ஆணாதிக்க புத்தி. பெண்கள் கலாசாரத்தின் அடையாளம் என்றால் ஆண்களெல்லாம் என்ன கூத்தும் அடிக்கலாம் என்று மறைமுகமாகப் பொருள்படும் நண்பரே. யாழ்ப்பாணத்துப் பெண்கள் என்ன உள்ளாடைகளோடா அலைகிறார்கள்???? பெண்கள் கலாசாரத்தில் இருந்து வழுவக்கூடாது என்றால் ஆண்களும் வழுவக்கூடாது. வேட்டி சட்டையோடுதான் அலையவேண்டும். நாங்களே வரையறையை உடைத்து வாழ்ந்துகொண்டு, எப்படி அவர்களுக்கு வரையறை வகுக்க முடியும்???

///உங்கள் சகோதரிகளையோ உங்கள் மனைவிமார்களையோ அவ்வாறு ஆடை அணிய விடுவீர்களா///
இங்குகூட மனைவிமார்கள் என்று கொச்சையாக எழுதிவிட்டுப் போய்விட்டீர்கள். இருந்தாலும் பதிலிறுக்கிறேன். எனக்கு மனைவியோ, காதலியோ இல்லை. இருந்தும் என்னுடைய சகோதரிகளைக் கேட்டுப்பார்க்கலாம். அவர்களின் ஆடைகள் பற்றிய விஷயங்களில் நான் சொல்வது ‘உங்களுக்கு எது சௌகரியமாக இருக்கிறதோ, அதைப் போடுங்கள்' என்று.

///சமுதாய கலாச்சாரங்களை குறை சொல்வதற்கு உங்களுக்கு தகுதி இருக்குமானால் நீங்கள் ஒரு தூய ஆன்மாவாக இருக்க வேண்டும் ,,
நீங்கள் எப்படி?///
நான் தூய ஆன்மா இல்லை நண்பரே. உலகில் தூய ஆன்மா என்றொரு விஷயமே இல்லை. பெண்களைக் கண்ணைப் பார்த்துத்தான் பேசுவேன் என்றெல்லாம் பீலா விடும் ஜென்மம் நானில்லை.

///உங்களின் கருத்துக்களில் சமுதாய அக்கறையை விட பிரபலமாகுவதட்கான உந்துகையே அதிகமாக உள்ளது///
இந்த உந்துகை மட்டும் இருந்திருந்தால் அதுவரை முகம் தெரியாத சயந்தனும், மு.மயூரனும், இன்றுவரை முகம் தெரியாத பெயரிலியும் சொன்னதுக்காக நான் எழுதுகிற விடயங்களைக் குறுக்கிக்கொண்டிருக்க மாட்டேன். எல்லோருக்கும் பிடித்த சினிமா, கிரிக்கெட், நகைச்சுவை என்றுமட்டுமே போய்க்கொண்டிருந்திருப்பேன். என்னுடைய கருத்துக்கு எதிர்வாதம் செய்ய உங்களிடம் அளவான கருத்துக்களே இல்லை என்பது என்னை நீங்கள் ‘புகழுக்காக எழுதுகிறாய்' என்று மட்டம்தட்டுவதிலேயே தெரிந்துவிட்டது. இருந்தும் பொறுமையாகப் பதில் சொல்லியிருக்கிறேன். இன்னும் திட்டுங்கள். சளைக்காமல் பதிலிறுப்பேன். இதுதான் ‘புகழுக்காக எழுதும் இந்த குரங்கிற்கும்' புண்ணிய ஆத்மாவான உங்களுக்குமான பெரியவித்தியாசம். இந்தக் குரங்குக்கு விமர்சிக்கவும், விமர்சனங்களை ஏற்கவும் தெரிந்திருக்கிறது. உங்களுக்கு ‘புகழுக்காக எழுதுகிறாய்' என்று மட்டம்தட்டி மனதைக் காயப்படுத்திவிட தெரிந்திருக்கிறது. கலாசாரத்தைக் காத்து, பெண்களுக்கு வரையறையெல்லாம் போட்டு வாழுங்கள், வாழுங்கள், வாழ்ந்துகொண்டேயிருங்கள். நன்றி

Anonymous said...

யாழ்ப்பானதில் இருந்து கண்டாவுக்கு வந்தபின்பு யாழ்பானத்தை திரும்பிபார்த்தால் காடுமிராண்டித்தனமாகத்தான் இருக்கும்,
ஏனென்றால் நீங்கள் இப்ப கனடியன்.



\\///உங்கள் சகோதரிகளையோ உங்கள் மனைவிமார்களையோ அவ்வாறு ஆடை அணிய விடுவீர்களா///
இங்குகூட மனைவிமார்கள் என்று கொச்சையாக எழுதிவிட்டுப் போய்விட்டீர்கள். இருந்தாலும் பதிலிறுக்கிறேன். எனக்கு மனைவியோ, காதலியோ இல்லை.\\

முத்லில் மனைவியும், குழந்தையும் வரட்டும் அதன்பின் யாழ்பானத்தின் அருமை தெரியும். எல்லாம் வலைப்பூவில் எழுத நன்றாக இருக்கும்
ஆனால் நடைமுறைக்கு சரிவராது. உங்க்ளின் சகோதரி dating போக அணுமதிப்பீர்களா (கோவம் வேண்டாம்).

ஊருக்கடி உபதேசம் உனக்கல்லடி பென்னே.

Anonymous said...

பாபா

//இங்கே சத்யசாய் பாடசாலை என்கிற பெயரில் ஆறாம் வகுப்புவரை ஒரு தனியார் பள்ளிக்கூடம் நடத்துகிறார்கள். மற்றைய பொதுப் பாடசாலைகளோடு ஒப்பிடும்போது கல்வி, ஒழுக்கம் என்று எல்லாவற்றிலும் தரமான பாடசாலை. ஆறாம் வகுப்புவரை மருமகனும் அங்கே தான் படித்தான்.//

ஒழுக்கம் என்றால் என்ன?

ஒரே குழப்பமாக இருக்குதே

உங்கள் நண்பர்களில் ஒருவன் பெயர் சொல்ல விரும்பாமல் said...

பல வினாக்கள் பதிலளிக்கப்படாமல் உள்ளன பரவாயில்லை,

உங்கள் சமூக சம்பந்தமான கட்டுரை மட்டுமே வசிக்கும் நான் பல உங்கள் கருத்துடன் உடன்பட்டாலும் சில ஒத்துப்போக மறுக்கின்றன; வெறுமனே உங்கள் பதிவை எல்லோரும் போல பாராட்டுவது மட்டும் நன்றாக படவில்லை.
அதுதான் என் மனதில் பட்டதை சொன்னேன்.....


உங்களால் இலங்கையில்( யாழ்ப்பாணத்தில்) வந்து வாழ முடியுமா??

நான் தனிப்பட்ட் முறையில் என்னால் இயன்றவரையில் மனசாட்சிக்கு விரோதமாக நடப்பதை தவிர்த்து வருகிறேன், ஆணாதிக்க, சாதிய விடயங்களில்....


நீங்கள் மட்டுமல்ல, உங்கள் நண்பர்களையும் உங்களுடன் சேர்த்து கொண்டாள் இந்த போராட்டம் வெற்றி பெறும்,


ஆனால் எவளவு சாத்தியப்படும் எண்டு பார்ப்பமே,,,

பார்த்தால் எல்லாரும் நல்லவங்கள்(உத்தமன், சமூக கண்ணோட்டம் உடையவன்) மாதிரித்தான் இருப்பாங்கள்.

பார்ப்பம்

பார்ப்பம்

sellamma said...

நண்பரே,
நான் சொன்னது "///உங்களின் கருத்துக்களில் சமுதாய அக்கறையை விட பிரபலமாகுவதட்கான உந்துகையே அதிகமாக உள்ளது///" என்றுதானே தவிர,, நீங்கள் புகழுக்காக எழுதுகிறீர்கள் என்று பொருள் பட சொல்லவில்லை,, நீங்கள் அதை திரிபுபடுத்தி உங்கள் கருத்தை சாதிக்க நிற்கிறீர்கள்,
என் வார்த்தை பிரயோகம் உங்களை காயப்படுத்துகிறது என நினைக்கும் நீங்கள் உங்களின் கருத்துக்கள் எம் சமுதாயத்தை காயப்படுத்துகின்றது என்பதை ஏற்கமாட்டேன் என்கிறீர்களே,,

""என்னுடைய கருத்துக்கு எதிர்வாதம் செய்ய உங்களிடம் அளவான கருத்துக்களே இல்லை என்பது""
நான் உங்களைப்போல் பெரிய எழுத்தாளன் அல்ல,, ஓர் சராசரி மனிதன்,,
என்னால் உங்கள் கருத்தை எதிர்வாதம் செய்ய என்னிடம் கருத்துக்கள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் என் கருத்துக்கள் நடைமுறைக்கு ஒத்து வரும்,, உங்கள் கருத்துக்களோ?????

பெயர் சொல்ல விரும்பாத நண்பன் சொன்னது போல், உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொண்டாலும்,, அதை நடைமுறைப்படுத்துவதென்பது சாத்தியப்படாத விடயம்,,

///உங்கள் சகோதரிகளையோ உங்கள் மனைவிமார்களையோ அவ்வாறு ஆடை அணிய விடுவீர்களா///
இங்குகூட மனைவிமார்கள் என்று கொச்சையாக எழுதிவிட்டுப் போய்விட்டீர்கள்.

நான் இங்கே உங்களை என்று குறிப்பிட்டது உங்களைப்போன்ற அனைவரையும் தான்,, அதனால் தான் மனைவிமார்கள் என்ற பதத்தை உபயோகித்தேன்,,
நானும் உங்களில் பிழை கண்டு பிடிக்க வேண்டும் என்று நினைத்தால்,, என்னாலும்
இவ்வாறு பல கண்டுபிடிக்க முடியும், ஆனால் அது என் நோக்கம் அல்ல,,

//இருந்தும் என்னுடைய சகோதரிகளைக் கேட்டுப்பார்க்கலாம். அவர்களின் ஆடைகள் பற்றிய விஷயங்களில் நான் சொல்வது ‘உங்களுக்கு எது சௌகரியமாக இருக்கிறதோ, அதைப் போடுங்கள்' என்று.//////

இந்த பதிலுக்கு உங்களின் சகோதரிகள் தான் விளக்கம் கொடுக்க வேண்டும் நண்பா,,
என் சகோதரிகளாக இருந்தால் நான் அனுமதிக்கமாட்டேன் என்பது திடம்,, நான் மட்டுமல்ல எந்த சகோதரனும் அனுமதிக்க மாட்டான்,,


நான் ஆண்கள் கலாச்சாரத்தை மீறலாம் என்று பொருள் கொள்ளவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்,, ஆணுக்கு கூட கற்பு உண்டு என்பதில் நம்பிக்கை உடையவன் நான்,,
ஆனாலும் ஓர் பெண் பாதை மாறிச்செல்லும் போது அதன் தாக்கம் வேறு,, ஆணுக்கான தாக்கம் வேறு,,

நீங்கள் கனடாவில் இருக்கும் போதுதான் இந்த சமுதாய அக்கறை தோன்றியதா?
யாழ்ப்பாணத்தில் இருக்கும் போது வராத இந்த சமுதாய அக்கறை திடீரென முளைத்ததட்கான காரணம்??
எல்லாம் இடம், பொருள், ஏவல் தான் நண்பா,,
உங்களின் கருத்து தற்போது நீங்கள் இருக்கும் நாட்டில் பொருத்தமாக இருக்கலாம்,, ஆனால் எமது மண்ணில் அது செல்லுபடியாகாது,,,

Unknown said...

//யாழ்ப்பானதில் இருந்து கண்டாவுக்கு வந்தபின்பு யாழ்பானத்தை திரும்பிபார்த்தால் காடுமிராண்டித்தனமாகத்தான் இருக்கும்,
ஏனென்றால் நீங்கள் இப்ப கனடியன்.//

அனானி நண்பருக்கு.... நான் இப்போ கனடியன் அல்ல. பிழைப்புக்காக இந்த நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கிறேனே ஒழிய என்னுடைய அந்தஸ்து இன்றைக்கும் இலங்கைத் தமிழன் என்பதாகவே இருக்கிறது. இங்கே நான் யாழ்ப்பாணத்தைக் காட்டுமிராண்டித்தனமாக எல்லாம் சித்தரிக்கவில்லை. அப்படித் தோன்றினால் அந்த எண்ணம் உங்கள் அடிமனதிலும் இருப்பதாயே பொருள்.

///முத்லில் மனைவியும், குழந்தையும் வரட்டும் அதன்பின் யாழ்பானத்தின் அருமை தெரியும். எல்லாம் வலைப்பூவில் எழுத நன்றாக இருக்கும்
ஆனால் நடைமுறைக்கு சரிவராது. உங்க்ளின் சகோதரி dating போக அணுமதிப்பீர்களா (கோவம் வேண்டாம்).
ஊருக்கடி உபதேசம் உனக்கல்லடி பென்னே.///
என்னுடைய சகோதரி dating போவதற்கு அனுமதி கொடுக்க நான் யார். உங்கள் கேள்வியில் தொனிக்கும் ஆணாதிக்கப் பக்கச் சார்பைத்தான் பிழை என்கிறேன் நான். உங்கள் சகோதரனோ சகோதரியோ dating போனால் அனுமதிப்பீர்களா என்று கேட்டிருக்கவேண்டும். சகோதரன் போனால் சரி, சகோதரி போனால் தவறு என்கிறமாதிரியான தொனி இருக்கிறதல்லவா கேள்வியில்? அதைத்தான் பிழை என்கிறேன்

Unknown said...

அனானிக்கு...
///ஒழுக்கம் என்றால் என்ன?///
அது அவரவர் பார்வையில். இதற்கெல்லாம் வரையறை சொல்ல முடியாது

Unknown said...

///உங்களால் இலங்கையில்( யாழ்ப்பாணத்தில்) வந்து வாழ முடியுமா??///
என் நண்பர் என்கிறீர்கள். நான் கனடாவுக்கு வந்ததன் பின்னணி தெரியும் உங்களுக்கு. கனடாவுக்கு வராமல் இருந்திருந்தால் என்னால் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்திட முடியும், இதே கோட்பாடுகளுடன். ஆனால் திரும்பவும் வந்து வாழ்வதென்பது சந்தேகமே. ஒரு வேளை திருப்பி அனுப்பப்பட்டால் வந்து வாழத்தான் வேண்டும். வேறு வழியில்லை. ஆனால் என் வாழ்வியல் ஆதாரங்களை இங்கே தேடிவிட்டு, எப்படி என்னால் மீண்டும் அங்கே வந்து வாழமுடியும். (அதற்காக யாழ்ப்பாண சமூகம் பிடிக்காமல் இங்கே வந்தேன் என்றெல்லாம் பீலா விடமாட்டேன்).

///உங்கள் சமூக சம்பந்தமான கட்டுரை மட்டுமே வசிக்கும் நான் பல உங்கள் கருத்துடன் உடன்பட்டாலும் சில ஒத்துப்போக மறுக்கின்றன; வெறுமனே உங்கள் பதிவை எல்லோரும் போல பாராட்டுவது மட்டும் நன்றாக படவில்லை.
அதுதான் என் மனதில் பட்டதை சொன்னேன்.....///
அதைப் பெயருடனேயே சொல்லியிருக்கலாமே நண்பா. என்றும் நான் முகத்தில் குத்துபவர்களை வெறுத்ததில்லையே.

///பார்த்தால் எல்லாரும் நல்லவங்கள்(உத்தமன், சமூக கண்ணோட்டம் உடையவன்) மாதிரித்தான் இருப்பாங்கள்.

பார்ப்பம்

பார்ப்பம்///
இது உங்களுக்கும் பொருந்தும்தானே

Unknown said...

செல்லம்மா...
பிரபலமாவதற்கான உந்துகை என்பதை புகழைடைவதற்கான வேட்கை என்பதாகத்தான் புரிந்துகொள்ள முடியும். நான் அறிந்தவரை ‘பிரபலமாதல்' புகழடைதல் இரண்டும் ஒரு பொருள் கொண்ட சொற்கள் என்றே நினைக்கிறேன். என்னுடைய தமிழறிவு அவ்வளவுதான் என்று எண்ணிக்கொள்கிறேன். மற்றபடி இங்கு எந்தத் திரிபு படுத்தலும் இல்லை. விரும்பினால் யாராவது தமிழாசிரியர்களிடம் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். ///உங்களின் கருத்துக்களில் சமுதாய அக்கறையை விட பிரபலமாகுவதட்கான உந்துகையே அதிகமாக உள்ளது/// என்ற வார்த்தைகளை வேறு எப்படி விளங்கிக்கொள்வது என்று என் சிற்றறிவுக்குப் புலப்படவில்லை.

///நான் உங்களைப்போல் பெரிய எழுத்தாளன் அல்ல,, ஓர் சராசரி மனிதன்,,
என்னால் உங்கள் கருத்தை எதிர்வாதம் செய்ய என்னிடம் கருத்துக்கள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் என் கருத்துக்கள் நடைமுறைக்கு ஒத்து வரும்,, உங்கள் கருத்துக்களோ?????///
இங்குதான் நண்பரே பூனைக்குட்டிகள் எட்டிப்பார்க்கின்றன. நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் என்னை ஒரு பெரிய எழுத்தாளன் என்பதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்டதில்லை. வலைப்பூவில் எழுதுகிறேன் என்கிற ஒரே காரணத்துக்காக நீங்களாகவே என்னை அப்படி நினைத்தால் அதற்கு நான் பொறுப்பாகமுடியாது. என்னுடைய கருத்துக்கள் நடைமுறைக்கு ஒத்துவராதனவாகவே இருக்கட்டும். அதிலுள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டுங்கள். அதற்காக ‘பெரிய எழுத்தாளன்', ‘புகழடைவதற்கான உந்துகை' போன்ற மட்டம்தட்டுதல் வேண்டாமே???

///நீங்கள் கனடாவில் இருக்கும் போதுதான் இந்த சமுதாய அக்கறை தோன்றியதா?
யாழ்ப்பாணத்தில் இருக்கும் போது வராத இந்த சமுதாய அக்கறை திடீரென முளைத்ததட்கான காரணம்??///
நானும் உங்களை ஒரு கேள்வி கேட்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் பிறக்கும்போது உங்களுக்கு ‘அ' தெரியாது. இணையம் தெரியாது. தானாக ஒன்று, இரண்டு போகத்தெரியாது. கணனி தெரியாது. இப்போது மட்டும் ஏன் இவற்றைத் தெரிந்து கொண்டீர்கள். வாழ்க்கை என்பது தொடர் கற்கை. இருபத்து இரண்டு வயது வரை பெண்களை மதிக்காத என்னைப் போன்ற மிருகம் ஒன்று, அதன் பின்னரும் மிருகமாகவே இருக்க வேண்டும், மாறவே கூடாது என்பது உங்கள் வாதம். சில படிப்பினைகள் கிடைக்கப்பெற்றதால் மாறித் திருந்தி வாழலாம் என்பது என்பக்க நியாயம். திருந்தக்கூடாது நீ கெட்டவனாகத்தான் வாழவேண்டும் என்று வாதிட்டால், நான் ஒன்றும் செய்யக்கூடாது.

Unknown said...

பின்னூட்டங் விவாதம் நீண்டுகொண்டே போகிறது. விவாதம் தொடர விரும்புவர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுடைய விவாதங்களுக்கு நான் பதிலளிக்க வேண்டுமெனில் shokkuddy@gmail.com, keithkumm@gmail.com ஆகிய முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்த வலைப்பூவில் இடும் பின்னூட்டங்களை நிராகரிக்கமாட்டேன். எல்லோருக்கும் பதிலளிப்பேனா என்பது சந்தேகமே.

விவாதத்தில் சூடு இருந்திருக்கலாம். பங்கிகொண்ட எந்த நண்பர்கள் மீதும் எனக்குத் தனிப்பட்ட விருப்பமில்லை. ‘குறைகளோடும் நேசிக்கும் மாறாப் பேரன்பு' என்னுடையது. சரிதானே அனானி, செல்லம்மா (பேரைச் சொல்லவா) மற்றும் பெயர் சொல்லாத நண்பர்.

நண்பர்களில் ஒருத்தன் பெயர் சொல்ல விரும்பாமல் said...

நன்றி!!

ஒரு சின்ன விடயம்,
நீங்கள் எதிர்பார்க்கும் சமுதாயத்தை மெது மெதுவாகவே கட்டி எழுப்ப வேண்டும்!!!

முன்னேற்றம் மெது மெதுவாக நிகழ்ந்தாலே சிறந்தது

பெண் அடிமைத்தனத்திலுருந்து முற்றாக விடுபடாத சமுதாயத்தில் ஆணாதிக்கத்தை ஒழிக்க புறப்படுவது அவளவு இலகுவான விடயம் அல்ல,

மகளை அல்லது சகோதரியை மேற்ப்படிப்புக்கு அனுமதியாத சமூகத்தில் தான் இன்னமும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்,

என்னைப்பொறுத்தவரை நீங்கள் எதிர்பார்க்கும் சமூக கட்டமைப்பு எங்கள் எதிர்கால கனவாக இருக்கலாம், ஆனால் சிறுக சிறுக வே மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்...

மாற்றத்திலும் ஏற்றத்தாழ்வு இருக்க கூடாது!!!!

முற்ப்போக்கான சிந்தனைகளை சரியாக புரியாமல் பல இன்றைய இளையவர்கள் கேவலமாக மாறி வருகிறார்கள்;

நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை அடைய மனப்பக்குவம் நிறையவே அவசியம்;

எப்படியும் நீங்கள் 50 வயதை அடையவும் இந்த சமுதாயம் பெரிதாக மாறிவிடாது;

உங்களால் இயன்றால் அப்போது வந்து இந்த சமுதாயத்தை மாற்ற முயற்சிக்கவும்.


நாம் எல்லொரும் சேர்ந்து முயன்றால், எதிர்காலத்தில் சாத்தியப்படவைக்கலாம்

Anonymous said...

எல்லா பின்னூட்டங்களையும் பொறுமையுடன் வாசித்தேன்.. நல்ல விவாதம்.. ஒன்று மட்டும்தான் அதில் விளங்கவில்லை..

//யாழ்பானத்தின் அருமை தெரியும்//

அப்படியென்றால் என்ன.....

தயவு செய்து அருமைகளைப் பட்டியலிடுங்கள்.. பார்ப்போமே..

அதிகாரம் எதுவாயிருந்தாலும் - அது புலியோ - ஆமியோ - மகேஸ்வரனோ - டக்ளசோ - எந்த அதிகாரம் அதிகாரத்தில் இருக்கிறதோ அந்த அதிகாரத்தை எஜமானாக்கி விசுவாசித்து தன் தனிப்பட்ட காரியத்தை சாதித்துக் கொள்ளும் ஒரு இனத்திற்கு அருமைகள் வேறு இருக்கிறதா..?

sellamma said...

என் வாதம் உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னியுங்கள் நண்பரே,,
எனது நோக்கம் அதுவல்ல,, என் சமுதாயத்தை என்றும் எவரும் பழிக்கும் போது என்னால் அதை அனுமதிக்க முடியாது,,
எம் சமுதாயத்தை நாமே தாழ்த்தினால் யார் வந்து அதை உயர்த்துவார்,,??

என்பெயரை சொல்வதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை நண்பா,,
உங்களின் சில ஆக்கங்களை நான் facebookஇல் பார்த்து அதை புகழ்ந்தும் இருக்கிறேன்,,
ஆனால் இந்த ஆக்கத்தை என்னால் ஜீரணிக்க முடியாததென்னவோ உண்மைதான்,,
அனைவரையும் போல் எல்லாத்துக்கும் ஆமாம் போட நான் விரும்பவில்லை,,
அதனால் தான் உங்களிடம் எதிவாதம் செய்யும் நிலை ஏற்பட்டது,,
மீண்டும் சொல்கிறேன்,, எனது நோக்கம் உங்களை புண்படுத்துவது அல்ல,,
என் சமுதாயத்தை எதற்காகவும் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்,,
நன்றி,,

Anonymous said...

புலிகளின் ஆட்சியில் ஒடுக்கி அடக்கப்பட்ட கலாசார சீரழிவுகள் , இப்போது coca cola போல சீறிப்பாய்கின்றது அவ்வளவுதான்

Unknown said...

செல்லம்மா...
பிரச்சினை இதுதான். இங்கே நான் எங்கள் சமுதாயத்தை புண்படுத்த முயலவில்லை. ஏற்கனவே புண்பட்டிருக்கிற சமுதாயம் சீழ் பிடித்துப் போகிறது. அந்த சீழ்பிடித்தலுக்கான காரணங்களை இடித்துரைத்திருக்கிறேனே ஒழிய, எல்லாரும் விபசாரத்தை ஆதரியுங்கள் என்றோ, அவிழ்த்துப்போட்டுவிட்டுத் திரியுங்கள் என்றோ சொல்ல நான் விளையவில்லை. சமூகத்துப் புண்ணை கலாசாரம் என்கிற அடிக்கடி மாறும் ஒரு துணியால் இறுக்கிக் கட்டி மறைக்கிறோம் என்ற பெயரில் இன்னும் இன்னும் சீழ்ப்பிடிக்க அனுமதிப்பது எந்த வகையில் நியாயம்??? ஆண், பெண் இருவரையும் சமமான தட்டில் வைத்து கலாசாரம் பற்றிய கண்டிப்புகளும், பார்வைகளும் இருந்தாக வேண்டுமே ஒழிய, பெண்ணாகப்பட்டவள் இப்படி இருக்க வேண்டும் என்கிற வரையறைகள் இருத்தல் கூடாது.

எங்கள் இளைஞர்கள் நீலப்படங்களைத் தேடி வீணி ஒழுக ஏன் அலைகிறார்கள் செல்லம்மா???? கட்டுப்பாடு, கலாசாரம் என்று அவர்களுக்கு இது தொடர்பான சில அடிப்படை விஷயங்களை நாம் புகட்டாமல் விட்டுவிட்டோம். அந்தப் புகட்டல்கள் இருந்திருந்தால் சிங்களவன் இவ்வளவு எளிதாக நீலப்பட சி.டி.க்கள் மூலம் எம் தோழர்களைத் திசைதிருப்பியிருக்க முடியாதல்லவா.

ஒரு காதலனும் காதலியும் சுதந்திரமாக சந்தித்துப் பேசுவதற்கான வழிவகைகள் இல்லாதிருப்பதால் பற்றைகளிலும் சந்து பொந்துகளிலும் சந்தித்துப் பேசுகிறார்கள். அப்படியான இடங்கள் அவர்களின் அடிப்படை உணர்ச்சிகளைத் தட்டியெழுப்ப அத்துமீறல் இயல்பாகிவிடுகிறது. (இதற்கு நீயோ நானோ காரணமில்லை நண்பா. எங்கள் முந்தைய சந்ததிகளே காரணம்).

கலாசாரம் எப்படி மாறுகிறது என்பதற்கு உதாரணம்:
எங்கள் ஊரில் பாறி என்றொரு பெண் நான் யாழில் இருந்த காலம் வரை குறுக்குக் கட்டுடன்தான் ஊரெல்லாம் திரிவார். ஏன் தெரியுமா? அவர் பள்ளர் குலப் பெண்ணாம். அந்தக் குலப் பெண்கள் மார்பின் மேல் ஆடைகள் அணியக்கூடாதாம். இந்தப் பெண் அப்படி அணிந்த காரணத்துக்காக நடுத்தெருவில் வைத்து ஆதிக்க சாதி வெள்ளாள இழிபிறப்புகளால் மேலாடை கிழிக்கப்பட்டு இடுப்புக்கு மேலே துணி இல்லாமல் தெருக்களில் கலைக்கப்பட்டாராம். இது 1960 இறுதியோ, 70 ஆரம்பத்திலோ நடந்த சம்பவம். அப்படிச் செய்த வெள்ளாளர்கள் அன்றைக்கு கலாசாரக் காவலர்களாகப் பார்க்கப்பட்டார்கள். அது அன்றைய கலாசாரத்தின் ஒரு அங்கம்தானே.இந்த நிலமை மாறியிருப்பது இந்தப் புண்ணை யாரோ வெளிக்கொணர்ந்து போராடிய காரணத்தால்தானே. அதுதான் வேண்டுமே ஒழிய, ‘தமிழர்கள் கற்பை மதிப்பவர்கள். அப்படிச் செய்திருக்க மாட்டார்கள்' என்று மறைக்கக்கூடாதல்லவா. இருக்கிற நோய் வெளியே தெரியாமல் எப்படி மருத்துவம் பார்ப்பது???

பால்குடி said...

கீத், உமது சமுதாயம் மீதான பார்வையை புரிந்து கொள்கிறேன். யாழ்ப்பாணக் கலாச்சாரம் என்ற போர்வையில் பல விடயங்கள் ஒழிக்கப் படுவதையும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் முன்னரும் நடந்தது. இப்போதுதான் வெளிவருகிறது என்று இலகுவகச் சொல்வதை முழுமையாக ஏற்கமுடியவில்லை. பள்ளிக்கூடங்களிலும் பல்கலைக் கழகங்களிலும் கறபவரும் கற்பிப்பவர்களும் கலாசார சீரழிவுக்கு முன்னுதாரணமாக இருப்பதை நான் இதற்கு முன்னர் அறியவில்லை. கற்ற சமுதாயத்திலுள்ள, ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்புள்ள அவர்களே இப்படியென்றால்....

Unknown said...

///ஆனால் முன்னரும் நடந்தது. இப்போதுதான் வெளிவருகிறது என்று இலகுவகச் சொல்வதை முழுமையாக ஏற்கமுடியவில்லை///
ஏற்பது கடினம்தான் பால்குடி. எல்லோருக்கும் எல்லா அனுபவமும் கிட்டுவதில்லைத்தானே. இது என்னுடைய பார்வை. உங்களது பார்வை வேறுபட்டிருக்கலாம். இந்தக் கட்டுரையின் முழு நோக்கமே ‘கலாசாரத்துக்குப் பேர்போன யாழ்ப்பாணம்' என்கிற சொற்பாவனைமீதான கண்டனமே

பாரதி.சு said...

வணக்கம் கிருத்திகன்,
கட்டுரை பலவிடயங்களை சரியாக தொட்டு நின்றாலும்...."எதிர்வினை மட்டுமே" பேசுபொருளாக உள்ளது போல் என்பார்வையில் தெரிகிறது.


//எழுத்தாளர் சுஜாதா சொன்ன ‘தப்புக்கள் வெளியே தெரியாதவரை யாவரும் புனிதர்களே'//
சரியான கருத்து...

இந்த ஒழுங்கமைக்கப்பட்ட, சரி தப்பு நிர்ணயிக்கப்பட்ட வாழ்க்கை முறையில்..
"என்னைப் பொறுத்தவரை" ஆணோ/ பெண்ணோ (வயதை பொறுத்து) கிளர்ச்சியூட்டும் விதத்தில் ஆடை அணிவது தப்பு.
மற்றபடி ஆடைகளில் கலாச்சாரம் என்பதெல்லாம் புருடா.

ஆண், பெண் நட்பு "நம்பி இருப்பவர்களுக்கு" (கண்டிப்பாக பெற்றோரல்ல...) துரோகம் செய்யாதவரை ஒரு போர்வைக்குள் இருப்பதும் தப்பில்லை...

மற்றபடி இது/ இவை தான் புனிதம் என சுட்டி காட்ட ஏதாவது இருக்கும் வரையில் அசிங்கமும் பல்லிளித்தபடி தான் இருக்கும்.

அடுத்தவரை காயப்படுத்தாத எந்த நம்பிக்கையும் கலாச்சாரமாக இருந்துவிட்டுப் போகட்டும்....

எது எப்படி இருந்தாலும் யாழ்ப்பாணத்தில் கட்டமைக்கப்பட்டிருந்த தனிமனித ஒழுக்கம்
(?) முன்பிருந்ததை விட சீரழிவாக உள்ளதாத் தான் அறிகிறேன்.

பல விடயங்கள் எழுத ஆரம்பித்து...
நேரில் கதைப்போம்

சுபானு said...

நீண்ட நாட்களின் பின்னர் இங்கு வந்தேன்.. காத்திரமான பதிவு.. உண்மையை எழுதியிருக்கின்றீர்கள்.. ஏன் இங்கே யாழ்ப்பாணத்திற்கு வெளியே இதுவெல்லாம் நடக்கும் பொது அவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தவர்களா.. வேண்டும் என்றால் இவர்களை நிறுத்தச் சொல்லுங்கள் அவங்கே யாழ்ப்பாணத்தில் தானக நின்றுவிடும்.. ;)

Unknown said...

///நீண்ட நாட்களின் பின்னர் இங்கு வந்தேன்.. காத்திரமான பதிவு.. உண்மையை எழுதியிருக்கின்றீர்கள்.. ஏன் இங்கே யாழ்ப்பாணத்திற்கு வெளியே இதுவெல்லாம் நடக்கும் பொது அவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தவர்களா.. வேண்டும் என்றால் இவர்களை நிறுத்தச் சொல்லுங்கள் அவங்கே யாழ்ப்பாணத்தில் தானக நின்றுவிடும்.. ;)///
நின்றுவிடலாம் சுபானு. ஆனால் இவர்கள் கூப்பாடு போடுமளவுக்கு ஒன்றும் நடக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

Unknown said...

///"எதிர்வினை மட்டுமே" பேசுபொருளாக உள்ளது போல் என்பார்வையில் தெரிகிறது.
///
நிச்சயமாக இது எதிர்வினை மட்டுமே பாரதி.நேரில் நிறையப் பேசுவோம்.

Anonymous said...

உங்களின் கருத்துக்கள் எம் சமுதாயத்தை காயப்படுத்துகின்றது

வடலியூரான் said...

நண்பா நீர் பிடித்த கருத்தை இடித்து,உரத்து கூறுவதில் உமக்கு நிகர் வேறு யாரப்பா//////.நல்ல பதிவு மற்றும் நல்ல பின்னுட்டங்கள் அதற்கான் பதிலகள்

Anonymous said...

//நாம் கலாசாரம் கலாசாரம் என்றெல்லாம் அதிகம் பேசியே காட்டுமிராண்டிக்காலத்துக்குப் போகின்ரோமோ என்ற எண்ணமும் எனக்குண்டு....//
இதில் என்ன வேடிக்கை என்றால் வெள்ளைக்காரன் எங்கள் குடும்ப அமைப்பைப் பார்த்து வியக்கிறான். நான் அதை காட்டுமிராண்டி என்று சொல்கிறோம்.

கலாசாரம் என்பதற்கு எக்சக்ட் டெஃபினிஷன் இல்லை. சாரி கட்டுவது தான் கலாசாரம் என்று யாரும் இப்போதெல்லாம் சொல்வதில்லை. சாரியிலேயே கண்ணறையான சாரி எல்லாம் வந்திட்டு. சுடிதார் போடுறது தான் கலாசாரம் என்று யாரும் சொல்வதில்லை. போடுற டி சேர்ட்டை உள்ளாடை மாதிரி போட்டாதீர்கள் என்று சொல்வது பிழையாகத் தெரியவில்லை.

ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதால் திருத்த முடியாத கணவனைக் கட்டிக்கொண்டு அழுந்து என்று யாரும் சொல்வதில்லை. தேவையான போது விவாகரத்து வரவேற்க வேண்டியதே.

ஓரளவு ஆக எங்கள் வழக்கத்தையும் சரியாக பலன்ஸ் பண்ணத் தெரியாதவர்களே பலர். ஏனோ எங்கள் ஆட்களுக்கு கறுப்பில்லாட்டால் வெள்ளையாகத் தான் இருக்க வேண்டும் என்ற மனப்பான்மை போகவே இல்ல.

//காட்டுமிராண்டிக்காலத்திலிருந்து என்றைக்கு மீண்டிருக்கிறோம் அண்ணா. என்ன கொஞ்சக்காலம் புலிகளுக்குப் பயந்து ஒளித்திருந்தோம் இப்போது வெளிப்பட்டிருக்கிறோம். அந்தக் காட்டுமிராண்டித்தனம் தந்த வடுக்களை நான் பலரது பதிவுகளில் இன்றைக்கும் காண்கிறேன்//
நீங்கள் ஏன் புலிகளை இப்படிச் சாடுகிறீர்கள் என்று விளங்கவில்லை. புலிகளால் மட்டுமே பெண்கள் வீட்டை விட்டு வெளியே கால் அடி வைத்தார்கள். ஆண்களுக்குச் சமமாக நடக்கிறேன் என்று சிகரெட் குடி என்று போகும் முட்டாள்த் தனமான பெண்விடுதலை அல்ல அது. ஆண்களுக்கு நிகராக சாதித்தவர்கள்.

மிகவும் அநியாயமான குற்றச்சாட்டு இது.

பல இலங்கைப்பதிவர்களின் பெண்கள் தொடர்பான கருத்துக்களைப் பார்த்த பின்னர் நான் எனது உடன்பிறவா சகோதரிகளுக்குச் சொன்னது எங்கட பெடியலை மட்டும் மறந்தும் கட்டிப் போடாதீர்கள். ஏன் என்றால் ஒன்று பெண் கறுப்பாக இருக்க வேண்டும் இல்லை வெள்ளையாக இருக்கவேண்டும் என்று தான் பலரும் பினாத்துகிறார்கள்.

பெண் விடுதலையைப் பற்றி நாங்கள் பேசினால் படிச்ச உடனேயே கொஞ்சம் திமிர் வருகிறது உங்களுக்கு என்று சொல்லுவார்கள்.

வலைப்பதிவுலகம் ஒழிக.

Anonymous said...

//தமிழ் சினிமாப் பாடல்களைத் தணிக்கை செய்கிற சமூகத்தில் பாலியல் பற்றிய பொதுவெளி உரையாடல்கள் சாத்தியமா என்பது சந்தேகமே.//

இல்லை. சினிமாவில் சிலவற்றை தடை செய்யவே வேண்டும் என்கிறேன். அதுவிற்கு பாலியல் கல்விக்கும் முடிச்சுப் போடக்கூடாது.

20 வருடத்திற்கு முதல் குட் டச் பாட் டச் எது என்று அம்மா சொல்லித் தந்தவா. அதுவும் ஒரு வகையில் பாலியல் அறிவே. பாலியல் அறிவைத் தவறாக விளங்கிக்கொண்டிருக்கிறீர்கள்.

அது முக்கியமாக ஒரு காரணம் சிறு வயது பிரக்னென்சி. அதைத் தடுக்க சொல்லிக்கொடுப்பது, கொன்டம் போடு என்பது வேறு. அதற்காக எப்படி உடல்உறவு கொள்வது என்று சொல்வது வேறு. சினிமா பாடல்களும் வேறு சிலவும் உங்களில் கிளர்ச்சியை ஏற்படுத்துபவை. அதைத் தடை செய்வது நல்லது தான். கிளர்ச்சிக்கு மனக்கட்டுப்பாடு என்று சொன்ன பல விடயங்கள் கொஞ்சம் அதிகம் தான் என்றாலும். ஓரளவு கட்டுப்பாடுத்தும் வித்தை தெரிந்திருக்க வேண்டும் தான். இல்லை என்றால் நாயிற்கும் மனிசனுக்கும் வித்தியாசமில்லை.

வெளி நாட்டில் இதெல்லாம் ஓக்கே. அதனால் தான் அங்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்று ஒரு பதிவில் என்னுடன் சிலர் மல்லுக்கட்டினார்கள். வெளி நாட்டிற்கு வந்து பார்க்கிறவனுக்குத் தான் தெரியும் அவர்களில் எவ்வளவு பிரச்சினை இருக்கிறது என்று.

இக்கரைக்கு அக்கரை பச்சை போல நடப்பது தமிழனுக்கு ஒன்றும் புதிதில்லையே.

////அவர்களின் வளவுக்குள் சில ‘சின்ன வீடுகள்' இருப்பது கௌரவம் என்று வாழ்ந்தவர்கள்////

இல்லை. யார் மேலோ இருந்த கடுப்பில் உங்கள் வாத்தியார் கக்கிய விஷம் இது. கிராமங்களில் அக்கா கென்சீவ் ஆகி இருக்கும் போது அவரின் கணவனுடன் தங்கை உடலுறவு கொள்கிற சில அறியாமை நடந்திருக்கிறது. ஆனால், இந்த சின்ன வீடு எல்லாம் யாழில் இருக்கவில்லை.

/// மேலே ஒன்றும் இல்லாமல் பருத்த வண்டிகள் குலுங்க இந்த ஆண் சிங்கங்கள் நடைபோடலாமாம், ஆனால் பெண்கள் இழுத்துப் போர்த்தி கலாசாரம் பேணவேண்டுமாம்.////
உடலைப்பில் வித்தியாசம் இருக்கிறது. நீச்சலின் போது பெண்கள் இரண்டு துண்டு ஆடை அணிகிறார்கள். ஆண்கள் ஒரு துண்டு அணிகிறார்கள். ஒன்று நிர்வாணம் இல்லாவிட்டால் இழுத்துப் போர்த்து என்று அர்த்தம் என்றல்ல. கறுப்பு இல்லாவிட்டால் வெள்ளை என்று அர்த்தமில்லையே. அதைப் போலவே இதுவும்.

////சந்து பொந்துகளில் காதலன் மடியில் காதலி உட்கார்ந்திருக்கிறாளாம்.......ஒரு ஆணும் பெண்ணும் அந்நியோன்னியமாக இருந்து உரையாடுவதை விமர்சிக்கிறது.//
அந்நியோன்னியமாக கதைப்பது என்றால் பற்றைக்குள் ஒழிந்து கொண்டு கதைப்பதா? இல்லையே. பி.டி.ஏ இலும் இரண்டு வகை இருக்கிறது. சிலரைப் பாத்தால் க்யூட்டாக இருக்கும். சிலரைப் பார்த்தால் நாய்களின் வேட்கை தெரியும். இரண்டாவது சொன்னவர்களால் தான் பிரச்சினையே.

Unknown said...

///அது முக்கியமாக ஒரு காரணம் சிறு வயது பிரக்னென்சி. அதைத் தடுக்க சொல்லிக்கொடுப்பது, கொன்டம் போடு என்பது வேறு. அதற்காக எப்படி உடல்உறவு கொள்வது என்று சொல்வது வேறு.///

இங்கு யாரும் ‘எப்படி உடலுறவு கொள்வது’ என்று சொல்லித்தரச்சொல்லி வாதிடவில்லையே அனாமிகா..

///இல்லை. யார் மேலோ இருந்த கடுப்பில் உங்கள் வாத்தியார் கக்கிய விஷம் இது. கிராமங்களில் அக்கா கென்சீவ் ஆகி இருக்கும் போது அவரின் கணவனுடன் தங்கை உடலுறவு கொள்கிற சில அறியாமை நடந்திருக்கிறது. ஆனால், இந்த சின்ன வீடு எல்லாம் யாழில் இருக்கவில்லை.///

இவ்வளவு அப்பாவியாக இருக்கிறீர்களே அனாமிகா. யாழெங்கும் பரவிவாழும் ஆதிக்க சாதி வெள்ளாளர்கள் முதற்கொண்டு ஒவ்வொரு ஊர் ஆதிக்க சாதி ஆண்களும் அதைக் கௌரவமாகக் கருதிய காலம் ஒன்றும் இருந்தது. அதை ‘யாழ்ப்பாணம் கலாசாரம் மிகுந்த பூமி’ என்கிற பெயரில் சப்பைக்கட்டு கட்டி ஒழித்து வைத்திருக்கிறார்கள். ஒரு வேளை சின்ன வயதிலேயே குட் டச் பேட் டச் சொல்லித் தரப்பட்டு நீங்கள் வளர்ந்த வாழ்க்கையில் அவற்றைக் காணாமல் இருந்திருக்கலாம் தங்கையே. யாழ்ப்பாணத்து நிலப்பிரபுக்களின் வாழ்க்கை முறை பற்றித் தேடிப் பாருங்கள். இன்னும் பல வெளிவரலாம்.

///சந்து பொந்துகளில் காதலன் மடியில் காதலி உட்கார்ந்திருக்கிறாளாம்///

இது பற்றி இன்னொரு இடத்திலும் காட்டமாக விமர்சனம் வைத்தேன். ஏன் அந்தப் பெண் தான் காதலன் மடியில் ஏறி இருந்தாள் என்று எழுதவேண்டும்? ஏன் அரிப்பெடுத்துபோன காதலன் அவளை இழுத்து மடியில் போட்டிருக்கக்கூடாதா. எப்படி பெண்ணை மையப்புள்ளியாக வைத்துக் கலாச்சாரம் பற்றிய கருதுகோள்கள் தீர்மானிக்கப்படலாம்? (இது பற்றி பின்னூட்டத்திலேயே கேள்வி எழுப்பியிருக்கிறேன்). இல்லைக் கேட்கிறேன், யாழ்ப்பாணத்தில் என்ன பெண்கள் உள்ளாடைகளோடா அலைகிறார்கள். எந்தப் பெண்ணிடம் என்ன தெரியும் என்று நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அலைகிற பெண்களை sex toys ஆக மட்டும் பார்க்கிற ஒரு ஆணாதிக்க பிற்போக்கு சமுதாயத்தை சாடவே சாடாமல், ‘என் சமூகம் நல்லது.. எல்லாத்திலும் சிறந்தது’ என்று பழைய பல்லவியே பாடியாகவேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால்.. பாடுங்கள் அனாமிகா.

பெண்விடுதலை பற்றிய உங்கள் புரிதலை நினைத்து சிரிப்புத்தான் வருகிறது அனாமிகா. ‘சிகரெட் குடி என்று போவது மட்டும்தான்’ பெண்விடுதலை என்று யாரும் இங்கே சொல்லவில்லை. ஆனால் விடுதலைப் புலிகளின் காலத்தில் எங்கள் சமூகத்துப் பெண்கள் ‘உன்னதமான பெண்விடுதலை’ அடைந்தார்கள் என்று சொல்கிறீர்களே. மன்னியுங்கள்... உங்களுக்குப் பெண்விடுதலை பற்றிய அடிப்படைப் புரிதலே இல்லை. நீங்கள் வளரவேண்டும்

Anonymous said...

//யாழ்ப்பாணத்தில் என்ன பெண்கள் உள்ளாடைகளோடா அலைகிறார்கள்.///
அப்படிச் சொல்லவில்லை.

// எந்தப் பெண்ணிடம் என்ன தெரியும் என்று நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அலைகிற பெண்களை sex toys ஆக மட்டும் பார்க்கிற ஒரு ஆணாதிக்க பிற்போக்கு சமுதாயத்தை சாடவே சாடாமல், ‘என் சமூகம் நல்லது.. எல்லாத்திலும் சிறந்தது’ என்று பழைய பல்லவியே பாடியாகவேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால்.. பாடுங்கள் அனாமிகா.
//

இல்லை என் சமூகம் சிறந்தது என்று சொல்லவே இல்லை. அதற்காக என் சமூகம் குறைந்தது ஒன்றுமல்ல. நீங்கள் சொன்ன ஆணாதிக்கம் எல்லா நாட்டிலும் இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறது. எங்கள் ஊரிலும் மாறுகிறது. அந்தோ பரிதாபம். அதையும் மாறவிடாமல் பண்ணுகிறீர்கள். குற்றச்சாட்டுக்களை அடுக்கி பிரச்சினைகளை திசை திருப்புகிறீர்கள். குற்றச்சாட்டு வைப்பவன் அதற்கு தீர்வையும் சொல்லவேண்டும். சும்மா சும்மா அறிவுபூர்வமாக சிந்திக்கவேண்டும் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று சொல்லிவிட்டு போவது ஆரோக்கியமானதல்ல.

ஆண் பெண் என்று ஒரு தனிமனிதனுக்கு சாயம் பூசுவதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படிப் பார்த்து பார்த்து தான் சேற்றை வாரி இறைக்கிறோம்.

பெண்ணிற்கு சப்போட் செய்கிறேன் பேர்வழி என்று எங்களை இன்னும் கோழைகளாக்குவது நீங்கள் தான். விழுந்து விட்டேனா? பெண் என்று கை கொடுக்க வேண்டாம். மனிதன் என்று கை கொடுத்து எழுப்புங்கள்.

ஆண்களைக்காட்டுமிராண்டிகள் என்று பொதுப்படுத்துவதற்கும் நான் எதிரி. அப்பா, என் இரு அண்ணங்கள், தம்பி, என்னுடன் வீட்டைப் பகிர்ந்து கொள்ளும் மற்றய மூன்று ஆண்கள் எல்லோரும் தங்கமானவர்கள். இதற்குக் காரணம் அவர்கள் வளர்ப்பும் பெற்றோர்கள் அவர்களிடம் புகுத்திய சில வல்யூஸ்சுமே.

சாடுவதானால் பெற்றோர்களைச் சாடுங்கள். ஆண் பெண் என்றோ, சாதிய என்றோ மதம் என்றோ சாடாதீர்கள்

Anonymous said...

//இங்கு யாரும் ‘எப்படி உடலுறவு கொள்வது’ என்று சொல்லித்தரச்சொல்லி வாதிடவில்லையே அனாமிகா..//

நான் பாலியல் கல்வி என்பதன் அர்த்தத்தைச் சொன்னேன். தவறான விளக்கத்தால் எது பாலியல் அறிவு என்று பலர் விளக்கிக்கொள்வதில்லை என்று உணர்த்த ஒரு உதாரணமாகவே அதைச் சொன்னேன்.

/யாழெங்கும் பரவிவாழும் ஆதிக்க சாதி வெள்ளாளர்கள் முதற்கொண்டு ஒவ்வொரு ஊர் ஆதிக்க சாதி ஆண்களும் அதைக் கௌரவமாகக் கருதிய காலம் ஒன்றும் இருந்தது. அதை ‘யாழ்ப்பாணம் கலாசாரம் மிகுந்த பூமி’ என்கிற பெயரில் சப்பைக்கட்டு கட்டி ஒழித்து வைத்திருக்கிறார்கள்.//

எனக்குத் தெரிந்து எங்கள் 6வது தலைமுறை வரை அப்படி யாரும் இருந்ததில்லை. சாதீய திமிர் என்று இரண்டு மனைவி வைத்திருப்பவர்கள் மீது குற்றம் சாட்டுவது தவறு கிருத்திகன். ஏதோ ஒரு சாதியில் தான் இதெல்லாம் நடந்தது மாதிரி தவறான புரிதலைக் காட்டுகிறீர்கள்.

கலாசாரம் என்பதற்கு நான் சொன்னமாதிரி வரைவிலக்கணம் இல்லை. கலாசாரம் என்பதை தவறாக விளங்கிக்கொண்டு கண்மூடித்தனமாக எதிர்க்கிறோம். எங்களுக்கென்று சில வல்யூஸ் இருக்கிறது. ஒழுக்கம், பெரியவர்களை மதிப்பது, குடும்பத்துடன் ஒட்டிய உறவு, விருந்தோம்பல், வேர்களை மறக்காமை இப்படி நிறைய இருக்கிறது.

பக்கத்து வீட்டு மனிதனையும் தன் உறவினர் போல நேசிப்பது. அது எங்களுக்கு மட்டும் இருக்கிறது என்று சொல்லவில்லை. எல்லா இனத்திலும் இருக்கிறது. அவற்றை முட்டாள் தனம் என்று கண்மூடித்தனமாக எதிர்க்கும் ஒரே இனம் தமிழினம் தான் போல.

பிற்போக்கு சனம் என்றும் நாங்கள் முற்போக்குவாதிகள் என்றும் காட்டிக்கொள்கிறோம். முற்போக்குவாதி என்றாலே பலருக்கு மனதில் தோன்றுவது அரைகுறை ஆடைகள், மதுப்புட்டி, என்று சில. நீங்கள் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் நான் படித்த இலங்கைப் பதிவர்களின் ஆக்கங்களில் அதைத் தான் பார்த்தேன்.

காதலன் மடியில் இருக்கும் காதலில், நான் எங்கே அந்த பெண்ணில் தவறு என்று சொன்னேன். குதர்க்கமாக எதிர்க்கிறீர்களே கிருத்திகன். ஆணின் மடியில் ஆண் வலுக்கட்டாயமாக இழுத்து வைத்திருந்தால் அந்த பெண் உதவிக்கு கத்தி இருப்பார். நான் சொல்லவந்தது இருவரும் சம்மந்தப்பட்ட பி.டி.ஏ. நாய் மாதிரி நடப்பவர்களும் இருக்கிறார்கள் க்யூட்டாக நடப்பவர்களும் இருக்கிறார்கள். க்யூட்டாக நடப்பவர்களுக்கு நான் எதிர்ப்பில்லை. நாய் மாதிரி நடப்பவர்களுக்கு கண்டிப்பாக கல்லெடுத்து அடிப்பேன்.

நான் சொன்னது போல தவறுகளுக்கு ஆண் பெண் என்று வகைப்படுத்துவதற்கு நான் எதிரி.

Anonymous said...

நான் பிறந்த தமிழினம், சைவ சமயம், யாழ்ப்பாணம் என்பதினால் நான் பெருமை அடைய வேண்டும். அதற்காக நானே சிறந்தவர் என்று மற்றவர்களை டொமினேட் செய்யும் முட்டாள்த்தனத்தைச் செய்யப்போவதில்லை. என் பிறப்பைப் பற்றி நான் இழிவாக நினைக்கவில்லை. அதையே சொல்லவருகிறேன்.

தான் பிறந்த சமூகத்தை அநியாயமாக‌ பழிப்பது தாயைப்பழிப்பதற்கு நிகரானது. நீங்கள் கோவத்தில் கொட்டிய பதிவு இது.

நீங்கள் ஆண் பெண் என்று பாகுபடுத்தி பேசுவதால் ஒன்று சொல்கிறேன். பெண்களுக்குத் தேவையானதை நாங்களாகவே எடுத்துக்கொள்கிறோம். முற்போக்குவாதியான ஆண் என்று எவரும் பிச்சை போடுவதை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லை.

//ஆனால் விடுதலைப் புலிகளின் காலத்தில் எங்கள் சமூகத்துப் பெண்கள் ‘உன்னதமான பெண்விடுதலை’ அடைந்தார்கள் என்று சொல்கிறீர்களே. மன்னியுங்கள்... உங்களுக்குப் பெண்விடுதலை பற்றிய அடிப்படைப் புரிதலே இல்லை. நீங்கள் வளரவேண்டும்//

இயக்கத்தைப் பிடிக்காது என்பதால் எல்லாவற்றையுமே எதிர்க்க வேண்டுமா கிருத்திகன்? நீங்கள் விதண்டாவாதத்திற்கு எதிர்க்கிறீர்கள். பெண்களுக்கு (டு எ சேர்டின் எக்டென்ட்) சுதந்திரம் இருந்ததது என்று சொல்வது எங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் மனவலிமையையே. ஆண்களுக்கு நிகராக எல்லா வேலைகளையும் பெண் போராளிகளும் செய்தார்கள். பெண்களும் செய்தார்கள். அதற்காக முன்பு பெண்கள் வேலை செய்யவில்லை என்று சொல்லவில்லை. வேலை செய்யும் பெண்களை பாவப்பட்டவர்களாகப் பார்த்த பார்வை மாறியது. பெண்கள் வேலை செய்வது இழுக்கு என்ற பார்வை மாறியது. பெண்களும் சளைக்காதவர்கள் என்ற மதிப்பு கூடியது. இதெல்லாம் பெண்ணாகிய எனக்கு பெண் சுதந்திரம் / விடுதலை.

என் விடுதலையைப் பற்றி எனக்குத் தானே அதிக அக்கறை இருக்கவேண்டும். எதற்கு ஆண்கள் தலை இடுகிறார்கள். இதுவே பயங்கரமான ஆணாதிக்கம். வன்மையாக எதிர்க்கிறேன். அக்கறைப்படுவது போல எங்களை மறைமுகமாக கோழைகளாக்கும் இந்தப்பதிவை வன்மையாக எதிர்க்கிறேன்.

Anonymous said...

I didnt mean to be rude with those last lines. I just feel most bloggers are happy to bitch about things and not providing any suggestions. I am not happy with that. =(

Unknown said...

///என் விடுதலையைப் பற்றி எனக்குத் தானே அதிக அக்கறை இருக்கவேண்டும். எதற்கு ஆண்கள் தலை இடுகிறார்கள். இதுவே பயங்கரமான ஆணாதிக்கம். வன்மையாக எதிர்க்கிறேன். அக்கறைப்படுவது போல எங்களை மறைமுகமாக கோழைகளாக்கும் இந்தப்பதிவை வன்மையாக எதிர்க்கிறேன். ///



ஒன்றும் பேசிப் பயனில்லை அனாமிகா... உங்களுக்குக் கிடைத்த புரிந்துணர்வு கொண்ட பெற்றோர் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அதனால் தன் விடுதலை பற்றிப் பிரக்ஞையற்ற பெண்கள் என் குடும்பத்திலும் இருக்கிறார்கள். எதிர்க்க வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக எதிர்க்கிற உங்களோடு வாதம் செய்து பிரயோசனமில்லை. இங்கு யாரும் பிச்சை போடவில்லை. யாரும் பெண்களே வாருங்கள் முன்னே என்று அறைகூவல் விடுக்கவுமில்லை. யாரும் தலையிடவும் இல்லை. கலாசாரம் என்பது ஒரு பெண்ணை மட்டும் சார்ந்தது என்று சொல்லப்படுகிறதை வன்மையாகக் கண்டிக்ககிறேன் ஒரு ஆணாக என்னில் இருக்கிற குறைகளைக் களைந்து நிர்வாணப்படுகிறேன். அது ஆணாதிக்கம் என்றால்... அப்படியே இருந்துவிட்டுப் போகிறேன்.

பெண் போராளிகள் செய்ததையே சாதாரணப் பெண்களும் செய்தார்கள் என்று சொல்கிற உங்கள் அறிவை மெச்சி என் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.

உங்கள் பிரச்சினை என்ன? நான் என்ன சொன்னாலும் குறை கண்டுபிடித்து உங்கள் மேதாவித்தனத்தை நிரூபிக்கவேண்டும். அவ்வளவுதானே?
பருத்தித்துறை வீதியில் கொடிகாமம் சந்தியைக் கடந்ததும் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் வருகிறது என்கிற அளவுக்கு உங்கள் சமூகத்தைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு முன்னால் நாங்களெல்லாம் எம்மாத்திரம்

Anonymous said...

20 நூற்றாண்டுகளாக இருந்த பழக்கவழக்கங்களை ஒரே இரவில் மாற்ற நினைக்கிறீர்கள். கடந்த 20 வருடங்களில் ஏற்பட்ட மாற்றத்தை விளங்கிக்கொள்ள மறுக்குறீர்கள்.

பெண்கள் வேலை செய்வதைப் பார்க்கும் கண்ணோட்ட உதாரணத்தைப் பார்க்கவில்லைப் போல. சமூகத்தில் கண்ணோட்டம் மாறி இருக்கிறது.

ஆணாதிக்கம், பெண்விடுதலை என்று நிறைய குறைகளைப் பேசுகிறோம். தீர்வுகளை யாரும் முன்வைப்பதில்லை. தீர்வு உங்களில் ஆரம்பிக்க வேண்டியது. இப்படியான ஆண்களால் நான் வெட்கப்படுகிறேன் என்று நீங்கள் சொல்வதால் எதுவும் கிடைக்கப் போவதில்லை. சமூக விடயங்களைப் பற்றி எழுதும் போது எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதுவது நல்லதல்ல. நீங்கள் வளர்ந்த சமூகமும் நான் வளர்ந்த சமூகமும் ஒன்றே. நாங்கள் பார்க்கும் கண்ணோட்டம் மாறி இருக்கிறது.

எதையும் கறுப்புக்கண்ணாடி போட்டு பார்க்கக் கூடாது என்று சொல்லித் தந்துவிட்டு இங்கே எல்லாவற்றையும் நீங்கள் கறுப்புக்கண்ணாடி போட்டே பார்க்கிறீர்களே.

// பெண் போராளிகள் செய்ததையே சாதாரணப் பெண்களும் செய்தார்கள் என்று சொல்கிற உங்கள் அறிவை மெச்சி என் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.//
பெண் போராளிகள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல. அவர்களும் எங்கள் சமூகத்தில் இருந்து உருவானவர்கள். பெண் பிள்ளைகளையும் நன்கு படிப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கிறது. இல்லாவிட்டால் பெண்கள் பல துறைகளில் காலடி எடுத்து வைத்திருக்க மாட்டார்கள். மாற்றம் இருக்கிறது. காதல் என்பது ஏதோ கொலைக்குற்றம் போல பார்த்த காலத்திலேயும் காதலித்தவர்கள் இருக்கிறார்கள். இப்போது ஓரளவேனும் குறைந்திருக்கிறது. நாங்கள் தான் எது காதல் எது இன்வக்சுவேஷன் என்று புரியாமல் குழம்பி நிற்கிறோம்.

பெண்ணை அடிமையாக எல்லா சமூகமும் வைத்திருந்தது. தமிழர்கள் மட்டும் என்று சொல்ல முடியாது. ஏனோ எங்களவர்களுக்கு எங்கள் ஆட்களைப் பற்றி நல்லதாகவே நினைக்க முடியாது.

எப்போதுமே நொட்டை சொல்வதே தொழில். தங்களை மேதாவிகளாக காட்ட இப்படியா எழுதவேண்டும்.

நான் ஒன்றும் முற்று முழுதாக புரிந்துணர்வு உள்ள சமூகம் என்று சொல்லவில்லையே. நீங்களே பல பிழைகளைச் செய்திருக்கிறேன், வருந்துகிறேன் என்று சொல்கிறீர்கள். நீங்கள் நான், எல்லோரும் சேர்ந்தது தானே சமூகம். ஏன் அதை மட்டும் வேற்றுக்கிரக சமூகம் போல விமர்சிக்கிறீர்கள். ஏன் மாற்றங்களை அப்ரிசியேட் பண்ணுகிறீர்கள் இல்லை. ஏன் மாற்றத்திற்கான தீர்வைச் சொல்கிறீர்கள் இல்லை.

சும்மா மாறவேணும், அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும் ,சுயவிமர்சனம் வேணும் என்டு சொல்லிப்போட்டு சீழ் வழிய புண்ணை நோட்டுறது தானே நடக்கிறது.

//உங்கள் பிரச்சினை என்ன? நான் என்ன சொன்னாலும் குறை கண்டுபிடித்து உங்கள் மேதாவித்தனத்தை நிரூபிக்கவேண்டும். அவ்வளவுதானே?//

மேதாவித்தனத்தைக் காட்டுகிறேன் என்று தான் சில‌ பேர் எழுதி தவறான கருத்தை வலை உலகில் உலவ விடுகிறார்கள். அதைத் தவறு என்று சொன்னால் மேதாவித்தனம் என்று அர்த்தமா? நாளைய தலைமுறைக்கு நாங்கள் இதையா காட்டப்போகிறோம்.

//பருத்தித்துறை வீதியில் கொடிகாமம் சந்தியைக் கடந்ததும் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் வருகிறது என்கிற அளவுக்கு உங்கள் சமூகத்தைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு முன்னால் நாங்களெல்லாம் எம்மாத்திரம்//
மாவீரர் துயிலும் இல்லத்தை நீங்கள் ஏன் இங்கு இழுக்கிறீர்கள். ஓரளவுக்கு அதிகமாகவே பயணம் செய்திருக்கிறேன். யாழ்ப்பாணத்தினுள். பார்த்த மக்களில் நீங்கள் குற்றஞ்சாட்டுவது போல நான் காணவில்லை என்று சொன்னால் அது பிழையா?

ஒவ்வொருவரும் தங்கள் வெறுப்பைக் காட்ட ஒட்டுமொத்தமாக ஒரு சமூகம் மேல் குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதையே புரிந்து கொள்ளமுடியாதவர்கள் சமூகத்தைக் குறை சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

Anonymous said...

// ஒன்றும் பேசிப் பயனில்லை அனாமிகா... உங்களுக்குக் கிடைத்த புரிந்துணர்வு கொண்ட பெற்றோர் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.//

வாவ். கடைசியாக புரிந்துணர்வு என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறீர்கள். மேல்தட்டு வர்க்கம் என்று கேலி செய்யாமைக்கு நன்றி.

//அதனால் தன் விடுதலை பற்றிப் பிரக்ஞையற்ற பெண்கள் என் குடும்பத்திலும் இருக்கிறார்கள்.//

வருந்துகிறேன். ஆனால், உங்கள் வீட்டில் எப்படி அப்படி இருக்கிறார்கள் என்று வியக்கிறேன்.

//எதிர்க்க வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக எதிர்க்கிற உங்களோடு வாதம் செய்து பிரயோசனமில்லை.//

இல்லை. எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கவில்லை. சில விடயங்களில் சமூகத்தை கண்மூடித்தனமாக விமர்சிக்கிறார்கள். இதில் எனக்கு உடன்பாடில்லை.