Saturday 26 December 2009

நான் பார்க்கும் உலகம்: டிசம்பர் 20-டிசம்பர் 26, 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

செய்திகள்-பிறந்தகம்
பிரதான எதிர்க்கட்சிகளின் தலைமை வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றன. ஜனாதிபதி ராஜபக்சவுக்கா அல்லது சரத் பொன்சேகாவுக்கா ஆதரவு வழங்குவது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் ஆலோசனை செய்துகொண்டே இருக்கிறது. இரு பகுதியினருடனும் பேரம் பேசிக்கொண்டு இருப்பதாகத் தெரிகிறது. தேர்தலைப் புறக்கணிக்கப் போவதில்லை, சிவாஜிலிங்கத்துக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என்கிற இரண்டு முடிவான முடிவுகளை மட்டும் எடுத்திருக்கிறார்கள் இதுவரைக்கும். யாருக்கு ஆதரவளிப்பார்கள் என்று தேர்தலுக்கு முன்னரே முடிவெடுப்பார்கள் என்பது மக்களின் நம்பிக்கை.

இதேவேளை, புலிகளின் முக்கிய தலைவர்களையும் குடும்பங்களையும் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின் பேரிலேயே சுட்டுக் கொன்றதாக சரத் பொன்சேகா கூறிய குற்றச்சாட்டு அபாண்டமானது என்றும் அது தொடர்பாக அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் இலங்கை அரசு அறிவித்திருக்கிறது. அதற்குப் பதிலளித்து சேறு பூசப்பட்டாலும் நாட்டைத் தூய்மைப்படுத்த நான் தயார் என்று சொல்லியிருக்கிறார் சரத். பிரச்சாரக் களத்தில் இரு முன்னாள் நாயகர்கள் ஒருவரை ஒருவர் வில்லன்களாக்கி ஆடும் இந்த ஆட்டத்தில் பகடைக்காய்கள் இந்தமுறையும் மக்களே.

செய்திகள்-புகுந்தகம்
உயர்ந்த மாடிக் குடியிருப்பு ஒன்றில் திருத்த வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நான்கு திருத்தப் பணியாளர்கள், அவர்களைத் தாங்கியிருந்த தளம் உடைந்து விழுந்ததில் பரிதாபகரமாக உயிரிழந்திருக்கிறார்கள். நத்தாருக்கு முதல் நாள் மாலை 2757 கிப்ளிங் வீதியில் அமைந்திருந்த மேற்படி கட்டிடத்தின் உப்பரிகைகளில் இருந்த சிறிய பாதிப்புக்களைச் சரிசெய்யும் வேலையில் ஈடுபட்டிருந்த ஐந்து பேர் கொண்ட குழுமம் 13 வது மாடியில் வேலை செய்துகொண்டிருக்கும்போது அவர்களைத் தாங்கியிருந்த தளம் உடைந்துபோக ஐந்து பேரும் கீழே விழுந்திருக்கிறார்கள். நால்வர் உடனேயே உயிரிழந்துபோக மற்றவர் நிலமை இன்னும் கவலைக்கிடமாகவே இருக்கிறதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெயர்கள் வெளிவிடப்படாவிட்டாலும், அவர்கள் அனைவரும் சமீபத்தில் கனடாவுக்குக் குடிவந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி நபர்கள் கனடாவுக்கு சமீபத்தில் குடிவந்தவர்கள் என்றதும் கனடாவிற்கு குடிவரும் பலர் எழுப்பும் குற்றச்சாட்டு ஒன்று நினைவுக்கு வருகிறது. வெளிநாடுகளில் அவர்கள் பெற்ற கல்வி இங்கு பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை. அவர்களின் படிப்புகளுக்கு இலகுவில் இங்கே வேலை கிடைப்பதில்லை. இங்கே அவர்களை மேம்படுத்திக் கொண்டாலும் மிகவும் கடின முயற்சியின் பின்னரே வேலை கிடைக்கிறது. இங்கே பிறந்து வளர்ந்தவர்களைவிட, ஒரே தரத்தில் வேலை செய்தாலும், சராசரியாக குறைவான சம்பளமே பெறுகிறார்கள். இப்படிக் குடிபெயர்ந்து வந்தவர்கள் யாரும் நன்றாக வாழ்ந்தால் அதற்கு ஒரே காரணம், இரத்தம் சுண்டும் உழைப்பு. மற்றபடி இப்படிக் குடிவந்து யாரும் சொகுசாக வாழ்ந்ததில்லை.

செய்திகள்-உலகம்
தொடர்ந்து மூன்றாவது வாரமாகவும் தெலுங்கானா பற்றிய செய்திகளைப் பகிரவேண்டி இருக்கிறது. தனித் தெலுங்கானாக் கோரிக்கை தொடர்பான வன்முறைகள் ஆந்திர மாநிலத்தில் அதிகரித்திருக்கின்றன. திங்கட்கிழமைக்கு முன்னர் தனித் தெலுங்கானா தொடர்பான தீர்வு ஒன்றை இந்திய நடுவண் அரசு அறிவிக்காவிட்டால் ஆந்திராவே ஸ்தம்பிக்கும் வண்ணம் (புதிதாக என்ன ஸ்தம்பிப்பு??) கடையடைப்பு நடைபெறும் என்று தெலுங்கானா போராட்ட கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்திருக்கிறது. ஏற்கனவே தெலுங்கானாவைச் சேர்ந்த அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் விலகி, ஆந்திராவில் மிகப் பாரிய அரசியல் நெருக்கடியையும், வன்முறைகளையும் தோற்றுவித்திருக்கும் நிலையில், இது தொடர்பாக விரைவில் ஒரு முடிவை முன்வைப்போம் என்று மன்மோகன் சிங் அறிவித்திருக்கிறார். தெலுங்கானா கொடுக்காவிட்டால் இவர்கள், கொடுத்தால் ராயல சீமா மற்றும் கடலோர ஆந்திரா மக்கள் என்று யாராவது வன்முறையில் ஈடுபடத்தான் போகிறார்கள். நடுவண் அரசின் நிலமை கவலைக்கிடமே.

இந்தியப் பெருங்கடல் நாடுகளில் பல சுனாமிப் பேரனர்த்தத்தின் ஐந்தாவது ஆண்டு நினைவுதினத்தை சனிக்கிழமை (டிசம்பர் 26) அனுஷ்டிக்கின்றன. கிட்டத்தட்ட 250,000 பேரைப் பலிகொண்ட இந்த இயற்கைப் பேரனர்த்தத்தில் பல உறவுகள் அழிந்து போயின. இருந்தும் சில உறவுகள் மலர்ந்தன. அப்படி ஒரு மலர்வு பற்றிய அல்-ஜசீராவின் காணொளி கீழே. என்ன செய்வது, மனித மனங்களின் அடியாழத்தில் புதைக்கப்பட்ட மனிதத்தைத் தோண்டி எடுக்கவாவது சில அனர்த்தங்கள் தேவையாய் இருக்கிறது.



வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்
சென்ற வாரம்தான் Blackberry தயாரிப்பாளர்கள் RIM பற்றிய நேர்மறைச் செய்தி ஒன்றைப் பகிர்ந்திருந்தேன். ஆனால் இந்த வாரம் அவர்களுக்கு நல்ல வாரமாக அமையவில்லை. இந்த வாரத்தில் மட்டும் இரண்டுதடவை இவர்களின் சேவைகளில் தடங்கல் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாகச் சமூகக் குழுமங்கள் அனைத்திலும் இவர்களுக்கு எதிரான அதிருப்தி அலை தோன்றியிருக்கிறது. இந்த வாரம் இவர்களின் பங்குகளின் விலைகள்கூட சிறிது சரிவுக்குள்ளானது. மென்பொருள் மேம்படுத்தலே இந்த சேவைத் தடங்கலுக்குக் காரணம் என RIM அறிவித்திருக்கிறது. எந்தத் தொழில்நுட்பம் RIM ஐ உயரத்துக்கு இழுத்துச் சென்றதோ, அதே தொழில்நுட்பம் இந்தவாரம் காலை வாரியிருக்கிறது. Appl i-Phone களத்தில் இருப்பதால் RIM உயர்மட்ட நிர்வாகத்துக்கு இது சோதனை காலம் என்றே சொல்லலாம்.

ரொரன்ரோ பங்குச்சந்தை நத்தார் வாரத்தில் நல்ல போக்கைக் காட்டியிருக்கிறது. சக்தி வழங்கல் துறைப் பங்குகளும், நிதித்துறைப் பங்குகளும் நல்ல விலைகளை எட்டியதும் இதற்குரிய காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. மேலும் நத்தார் காலப் பகுதியில் வழமை போல கொஞ்சமாவது அதிகரித்திருக்கும் நுகர்வோர் கொள்வனவும் இதற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

விளையாட்டு
இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா கைப்பற்றி இருக்கிறது, இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கத் தக்கதாக. மூன்றாவது போட்டி 21ம் திகதி கட்டக்கில் நடந்த போது ஒரு கட்டத்தில் 22 ஓவர்களில் 165-2 என்ற வலுவான நிலையில் இருந்த ஜடேஜாவின் பந்துவீச்சில் இலங்கை பரிதாபமாக 239க்கு சுருள, பொறுப்பாக 96 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் சச்சின் பெற்று இந்தியாவை 2-1 என்று முன்னணிப்படுத்தினார். 24ம் திகதி கொல்கத்தாவில் நடந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று சங்கா துடுப்பெடுத்தாடிய போதே சேவாக் சொன்னபடி தரங்கா (118), சங்கா (60) மற்றும் பின்வரிசை வீரர்களின் அதிரடி மூலம் இலங்கை பெற்ற 315 ஓட்டங்களை, சச்சின் (8), சேவாக் (10) என்று ஆட்டமிழந்த போதும் காம்பிர் (150*), கோலி (107) அபார ஆட்டத்தால் இலகுவாகக் கடந்து இந்தியா தொடரை வென்றது. இலங்கை ரசிகர்கள் சிலரால் crapinfo என்றழைக்கப்படும் cricinfo இந்தப் போட்டிக்காக எழுதிய match previewஐ சங்கா வாசித்திருக்கலாம். இலங்கையுடன் 2005 ம் ஆண்டுக்குப் பின்னர் விளையாடிய ஐந்து பரஸ்பர போட்டித் தொடர்களும் இந்தியா வசம்.

இலங்கையின் நட்சத்திர அதிரடி வீரர் சனத் ஜயசூரிய டிசம்பர் 26, 2009 சனிக்கிழமையுடன் சர்வதேசக் கிரிக்கெட் வாழ்வில் 20 வருடங்களைப் பூர்த்தி செய்திருக்கிறார். 1992 உலகக் கோப்பையில் நியூசிலாந்தின் மார்க் கிரேட்பட்ச் ஆரம்பித்து வைத்த முதல் 15 ஓவர்களில் பேயாட்டம் என்கிற சித்தாந்தத்துக்கு முறையான வடிவத்தைக் கொடுத்தவர் என்கிற ரீதியில் சனத்தின் இடம் கிரிக்கெட் வரலாற்றுப் பக்கங்களில் என்றும் பொறிக்கப்பட்டு இருக்கும்.

சினிமா-பொழுதுபோக்கு-பிற..
நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்கள் வழமை போலவே நடக்கின்றன. புலம் பெயர் தமிழர்கள் ‘போராட்டம்' நிகழ்த்திய களைப்பில் புட்டிகளைத் திறந்து களைப்பாறுகிறார்கள். ரொரன்ரோவுக்கு இந்த முறை 'வெள்ளை நத்தார்' இல்லை. அதாவது, பனிப்பொழிவு இல்லை. அத்திலாந்திக் கனடாவும், அமெரிக்காவின் சில பகுதிகளும் வெள்ளைக் நத்தார் கொண்டாடுகிறார்கள். பின்னே, 25-60 செ.மீ வரையிலான பனிப்பொழிவு இருந்தால் வெள்ளை நத்தார்தானே. இந்தக் குளிரிலும் எப்படித்தான் கொண்டாடுகிறார்களோ!!!

இதே வேளை வத்திக்கான் சிறப்புப் பிரார்த்தனையில் போப்பாண்டவரை ஒரு மன நலம் குன்றிய பெண் தள்ளி விழுத்தியது பரபரப்பாகிவிட்டது. 82 வயதான புனித 16ம் பெனடிக்ட் ஏற்கனவே ஒரு முறை கீழே விழுந்து கால் முறிவுக்குள்ளாகி இருந்தவர். இந்த முறை விழுந்த போதும் அவருக்கு முறிவு ஏதும் ஏற்படவில்லையாம். ஆனால் அவருக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 87 வயதான ரோஜர் கிட்கரே என்கிற பாதிரி விழுந்து காலை முறித்துக்கொண்டாராம்.



எப்புடீ??........
கிளென் மெக்ராத் மீது கிரிக்கெட் உலகம் ஏன் மரியாதை வைத்திருக்கிறது என்று தெரிய வேண்டுமா? இங்கே 'க்ளிக்'கி வரும் காணொளியின் முதல் மூன்று நிமிடங்களை வர்ணனையாளர்கள் மற்றும் ஷேன் வோர்ன், மெக்ராத் போன்றவர்களின் சம்பாஷணையோடு கேட்டுப்பாருங்கள். (காணொளி நன்றி: www.desipad.com)

7 comments:

தர்ஷன் said...

ம்ம் அருமையானப் பதிவு
மெக்ராத் காணொளி அருமை சொல்லி அடிப்பதென்பது இதுதான் போலும்

hayyram said...

gud

regards,
ram

www.hayyram.blogspot.com

வடுவூர் குமார் said...

Don't they use safety belt while working on this platform?Is it not mandatory or not provided or did not hooked by the workers?It looks from the small photo that the joining of the platform bolts gave way.
Loss of humans is a daily affair in construction industry. :-(

Unknown said...

தர்ஷன்...
///சொல்லி அடிப்பதென்பது இதுதான் போலும்///
அதேதான்

Unknown said...

hayyram
thanks

Unknown said...

வடுவூர் குமார்..
சற்றுப் பிந்திக் கிடைத்த தகவல்களின் படி மேற்படி நபர்களை வேலைக்கமர்த்திய நிறுவனம் சிக்கலில் இருக்கிறது... இரண்டு காரணங்கள் ஒன்று தொழிலாளர்களுக்குரிய முறையான பாதுகாப்பு வசதிகளைச் செய்து கொடுக்காமை. இரண்டு சட்டத்துக்குப் புறம்பாக அவர்களை வேலைக்கமர்த்தியமை

ஜோதிஜி said...

இந்த ஆட்டத்தில் பகடைக்காய்கள் இந்தமுறையும் மக்களே.


உண்மையும் கூட?