Showing posts with label சுஜாதா. Show all posts
Showing posts with label சுஜாதா. Show all posts

Friday, 16 October 2009

கந்தசாமி-அருண்மொழிவர்மன்-சுஜாதா

கந்தசாமியில் இன்னொரு அபத்தம்
சென்ற ஞாயிற்றுக்கிழமை ‘ஏதிலிகள்' ஏற்பாடு செய்திருந்த 'சுடருள் இருள்' நிகழ்வு-2க்குப் போயிருந்தேன். ஆரம்பத்தில் ஸ்கார்பரோ சிவிக் சென்ரரில் எந்த அறையில் அவர்கள் இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து, அருண்மொழிவர்மன் மூலம் டி.சே. தமிழன் என்கிற இளங்கோவின் அலைபேசி இலக்கத்தை எடுத்து அறைக்குள் செல்வதற்கு முன்னரே அன்று போடுவதாகச் சொல்லப்பட்ட The Boy in the Striped Pyjamas என்ற படத்தின் 15 நிமிடம் ஓடியே போய்விட்டது. இருட்டுக்குள் தடவித்தடவி ஒரு நிகழ்ச்சிக்கு (அதுவும் எம்மவர் நிகழ்ச்சிக்கு) பிந்திப் போய் அமர்ந்த அனுபவம் புதுமையாக இருந்தது. வழமையாக ஆகக் குறைந்தது அரை மணித்தியாலம் காக்க வைப்பார்கள்.

நிகழ்வுகள் முடிந்ததும் மேற்படி படத்தைப் பற்றி ஒரு சின்ன விவாதம் நடைபெற்றது. அந்தப் படத்தில் இருந்த குறியீடுகள், பாதிப்பு அடைந்தவர்களின் பக்கத்தில் இருந்து இல்லாமல் (யூதர்கள்) பாதிப்பைக் கொடுத்தவர்களின் கோணத்தில் இருந்து (ஜேர்மானியர்கள்) பக்கமிருந்து கதை சொன்ன விதம், யூதர்களின் பிரச்சார யுக்தி என்றெல்லாம் நிறையப் பேசிக்கொண்டிருந்தபோது, (அல்லது அவ்வாறான உரையாடல்களை நான் பார்த்துக்கொண்டிருந்தபோது) தமிழ்சினிமாப் பக்கம் உரையாடல் திரும்பியது. அப்போது தர்ஷன் கந்தசாமி பற்றி ஒரு விஷயம் சொன்னார். அந்தப் படத்தில் ‘காதல் ஒன்றும் யூதன் இல்லைக் கொல்லாதே' என்றொரு வரி வருகிறதல்லவா? அது, 'யூதன் என்றால் கொல்லலாம்' என்கிற ஒரு அபத்தமான அர்த்தத்தை ஏற்படுத்தவில்லையா? அதாவது யூதன் என்றால் கொல்லலாம் என்பது பொதுப்புத்தியில் உறைந்து போய்விட்டது. நாளைக்கே ஈழம் பற்றியும் சர்வசாதாரணமாக இப்படி ஒரு வரி வந்துவிடலாம். சிறுபான்மையினருக்காகக் குரல் கொடுக்கும் அறிவுஜீவிகளுக்கு இதெல்லாம் கேட்காது.

அருண்மொழிவர்மன் மீதான பொறாமை
நிகழ்வு முடிந்ததும் அருண்மொழிவர்மன் தான் புதிதாகக் குடியேறிய மனைக்கு வாருங்கள் சற்றுநேரம் பேசலாம் என்றார். சில பல பெரியவர்களும் சென்றதாலும், அருண்மொழியாரின் சினேகபூர்வமான அழைப்பை உதாசீனம் செய்ய முடியாமலும் அங்கே சென்றேன். அன்றைக்கு ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கான அழைப்பும் இருந்தது. எவ்வளவு நேரம் தாழ்த்தி பிறந்த நாளுக்குப் போக முடியுமோ அவ்வளவு நேரம் தாழ்த்த விரும்பிய எனக்கு இது நல்ல வாய்ப்பாகிப் போய்விட்டது. சிலருக்குத் தேநீரும் சிலருக்கு மற்ற நீரும் கொடுத்துவிட்டு, அருண்மொழிவர்மன் சமைக்கலானார். சமைக்கும்போது மனிதருக்கு அருகில் நின்று பேசிப்பேசித் தொல்லை கொடுத்ததால் கடுப்பானாரோ என்னவோ, ஒரு காரியம் செய்தார். அவருடைய புத்தகங்களைப் பார்வையிட அழைத்தார்.

அடப்பாவி... நாங்களெல்லாம் வீடு மாறிப்போகும்போது துணிகளையும், தட்டுமுட்டு சாமான்களையும் கட்டிக்கொண்டு வருவோம். இந்த மனிதர் புத்தகங்களைக் கட்டி எடுத்து வந்திருந்தார். என்னுடைய நண்பர்கள் வட்டாரத்தில் இவ்வளவு புத்தகங்களைச் சொந்தமாக வைத்திருப்பவர் இவர் மட்டுமே. அவரது வாசிப்புத்தான் அவரது எழுத்துக்களை மெருகூட்டி, வாசிப்பவருக்கு நல்ல வாசிப்பனுபவமாகத் தருகிறது. அத்தனை புத்தகங்களை ஒரு சேரப் பார்த்தபோது ஒரு தோழமை கலந்த பொறாமை ஏற்பட்டது. நானெல்லாம் கையில் காசிருந்தால் எப்படிச் செலவாகிறது என்று தெரியாமல் செலவளித்திருப்பேன். இனிமேல் தேடித் தேடிப் புத்தகங்கள் வாங்கப்போகிறேன். இணையம் செய்த அருஞ்செயல், இவர் போன்ற பல நண்பர்களை எனக்குப் புதிதாகப் பெற்றுத் தந்திருப்பதே. ஈங்கிவனை யான் பெறவே........

சுஜாதா ஒரு நிர்வாண வியாபாரி
அண்மையில் கானா பிரபாவின் றேடியோஸ்தபதியை மேய்ந்த ஒரு நாளில் அமரர் சுஜாதா ஒலிப்பேட்டி மீள் நினைவில் என்றொரு பதிவு கண்ணில் தட்டுப்பட்டது. சுஜாதா மீதான மரியாதை இன்னொரு படி கூடிப்போய்விட்டது. காரணம் அந்தப் பேட்டியின் இறுதியாக கானா பிரபாவின் கேள்வி ஒன்றுக்கு சுஜாதா சொன்ன பதில். 17.42 நிமிடங்கள் ஓடும் அந்த ஒலிப்பேட்டியில் சுஜாதாவின் இலக்கியம், தொழில் நுட்பம், கவிதை, எழுத்துலகு எல்லாவற்றையும் விட ஒரு விஷயத்தை அப்பட்டமாகப் போட்டுடைத்தார். அதுதான் என்னைக் கவர்ந்தது.

கானா பிரபா: நீங்கள் ஈழத்தமிழர்களின் குறைகளையும் அங்கு நடக்கும் போர்ச்சூழலையும் கூர்ந்து கவனிக்கும் ஒரு மனிதராக, அதாவது எழுத்தாளர் என்ற பாவனையைக் கடந்து, ஒரு சாதாரண மனிதராக உங்களுடைய பார்வையை, கருத்துக்களைப் பல விடயங்களில் தெரியப்படுத்தி இருக்கிறீர்கள். இன்று(2002ல்) இந்த ஈழத்தமிழர்களுடைய நிலையைப் பற்றிய உங்கள் பார்வையைச் சொல்லுங்களேன்?

சுஜாதா: ஈழத்தமிழர்களுக்கு நான் சொல்லவேண்டிய மிகமுக்கியமான, மிகமுக்கியமான அறிவுரை என்று சொல்லவேண்டாம், மிக முக்கியமான விருப்பம் என்னவென்றால், நீங்கள் எப்பொழுதும் நம்பிக்கையை இழக்காதீர்கள், தாய்நாட்டை மறக்காதீர்கள். அந்த விதத்தில் உங்களுடைய திறமையும் உங்களுடைய அந்த நாள் நிச்சயம் வரும் என்றுதான் எனக்கு நிச்சயம் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் எங்களை நம்பாதீர்கள். எங்களை நம்பினால் நாங்கள் கைவிட்டுவிடுவோம் என்றுதான் தோன்றுகிறது. நாங்கள் நிறையப் பேசுவோம். உங்களுக்கு எங்களுடைய ஆதரவு ஒரு மனோதத்துவ ரீதியில் இருக்குமே ஒழிய செயற்பாட்டில் இருக்காது. அதை நாங்கள் பார்க்கிறோம். எங்களுக்கு ஒரு குற்ற உணர்ச்சி இருக்கிறது உங்களுக்கு சரியாக உதவவில்லை என்று.

சுஜாதாவை நே(வா)சித்தவர்களுக்கு இன்னும் ஒரு காரணம், அவரை இன்னும் அதிகமாக நேசிக்க. தூஷித்தவர்களுக்கும் இன்னுமொரு காரணம், ‘எப்படி ஒரு பார்ப்பான் எங்களை நிர்வாணமாக்கலாம்' என்று திட்ட. அவர் திறமைகளை மட்டுமல்ல, சில துரோகங்களையும் முன்கூட்டியே கண்டுணர்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். கானா பிரபா அண்ணனுடனான அந்தப் பேட்டியை கீழே முழுமையாக இணைக்கிறேன். அந்தப் பேட்டியில் சுஜாதா சொன்னதைவிட இன்னொரு பாடமும் இருக்கிறது. தரமான ஒரு வானொலிப் பேட்டி எப்படி இருக்கும் என்பதற்கு நல்ல உதாரணம் இந்தப் பேட்டி.


Sujatha Interview - Kana Praba

Sunday, 19 July 2009

பெண்ணா? புலியா?

ரொம்ப நாளைக்கு முன் ஒரு ராஜா இருந்தான். அவனுடைய தலைநகரில் ஒரு பெரிய ஸ்டேடியத்தில்தான் பொதுஜன கேளிக்கைகளும் தண்டனைகளும் நடக்கும். எல்லோரும் பார்த்து மகிழ்வார்கள். ராஜாவின் கவனத்தைக் கவரும் வகையில் ஒரு குற்றம் நடந்துவிட்டால் குற்றவாளியை ஸ்டேடியம் நடுவே கொண்டுவந்து விட்டுவிடுவார்கள். எல்லோருக்கும் தகவல் சொல்லி ஜனங்கள் சூழ்ந்திருக்க, குற்றவாளிக்குத் தண்டனை அளிக்கப்படும். என்ன தண்டனை? ராஜா சைகை காட்ட, குற்றவாளிக்கு எதிரே அருகருகே இருக்கும் ஒரே மாதிரியான கதவுகளில் ஒன்றை குற்றவாளி இச்சைப்படி தேர்ந்தெடுத்துத் திறக்கவேண்டும். அவ்வளவுதானா? இல்லையே... இனிதான் மேட்டரே இருக்கு.

ஒரு கதவைத் திறந்தால் அதனுள்ளிருக்கும் பசித்த புலி வெளிவந்து அவன்மேல் பாய்ந்து குத்திக் குதறிக் கொன்று விடும். மற்றொரு கதவைத் திறந்தால் அவன் வயசுக்கும், தகுதிக்கும் ஏற்ப ஒரு பெண், ராஜாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட அழகான பெண், காத்திருப்பாள். அவளைக் குற்றவாளி உடனே கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். ஒரு கதவு கல்யாணம், ஒரு கதவு புலி. எந்தக் கதவைத் திறப்பது என்பது குற்றவாளியின் விதியைப் பொறுத்தது. வேறுயாரும் குறுக்கிடுவதில்லை. அதாவது குற்றவாளிக்கு தண்டனையோ, மன்னிப்போ அவன் விதிப்படிதான் வழங்கப்படும். அதில் தனிமனித விருப்பு வெறுப்புகளின் செல்வாக்கு இருக்கவே இருக்காது என்பதுதான் அந்த ராஜா இந்தத் தண்டனை முறைபற்றிச் சொல்லும் நியாயம்.

ராஜாவுக்கு ஒரு அழகான பெண் இருந்தாள். அவள் வழமைபோலவே ஒரு அழகான ஏழை இளைஞனைக் காதலித்தாள். இந்தக் காதல் ராஜாவுக்குத் தெரிய வந்தது. உடனுக்குடன் இளைஞன் கைது செய்யப்பட்டான். தண்டனை? வழக்கம்போலத்தான்! இரண்டு கதவு, புலி அல்லது பெண். இந்த ஸ்பெஷல் கேஸுக்காக ராஜா பிரத்யேகமாகத் தயார் செய்தார். கோபம் அதிகமான, பசி அதிகமான புலி, அதே போல ராஜ்ஜியத்திலேயே அழகான பெண். இந்த விஷயங்களில் எல்லாம் பாரபட்சமே இல்லாத நல்ல ராஜா அவன். தண்டனை நாளும் வந்தது. காதலன் கொண்டுவரப்பட்டு ஸ்டேடியம் நடுவே விடுவிக்கப்பட்டான். ராஜாவுக்கு வணக்கப் போட்டுவிட்டு காதலியான ராஜகுமாரியைப் பரிதாபமாகப் பார்த்தான்.

ராஜகுமாரிக்கு எந்தக் கதவின் பின்னால் புலி, எந்தக் கதவின் பின்னால் பெண் என்பது தெரிந்திருந்தது. அவளின் வைராக்கியமும் காவலர்களின் பொன் ஆசையும் அதைச் சாத்தியமாக்கியிருந்தன. ராஜகுமாரியைப் பரிதாபமாகப் பார்த்த காதலன் கண்ணாலேயே ‘எந்தக் கதவு?' என்று கேட்டான். அதற்கு அவள் வலதுகையை சற்றே உயர்த்தி வலது பக்கக் கதவைக் காட்டினாள். அது அவள் காதலனுக்கு மட்டும்தான் தெரிந்தது. காதலன் விறுவிறுவென்று உற்சாகமாக நடந்து போய் கதவைத் தயக்கமே இல்லாமல் திறந்தான்.

வெளிவந்தது புலியா? பெண்ணா? புலி என்றால், தான் உயிரையே வைத்திருக்கும் காதலன் துடிதுடித்துச் செத்துப்போவதை எப்படி ராஜகுமாரியால் தாங்கிக் கொள்ள முடியும்? பெண் என்றால், மற்றொரு பெண்ணுடன் தன் காதலன் சுகித்து வாழ்வதை எப்படி அவளால் சகித்துக் கொள்ள முடியும்?

புலியா? பெண்ணா? எது கதவுக்குப் பின்னாலிருந்தது? நீங்கள்தான் சொல்லுங்களேன் வாசகர்களே!

Frank Stockton (1834-1902) என்ற அமெரிக்க எழுத்தாளர் 1882ம் வருடம் எழுதிய 'The Lady or the tiger?' என்ற தலைப்பிடப்பட்ட மிகப்பிரபலமான கதை இது. மேலே நான் தந்த இந்தக் கதையின் தமிழ் மொழிபெயர்ப்பைச் செய்தவர் யார் என்று ஒரு போட்டி அறிவிக்கலாம்தான், ஆனால் வசனநடையிலேயே தெரிந்துவிடும் அது சுஜாதா என்று.

Saturday, 11 July 2009

எழுதாத விதிகள் (எழுதுபவர்களுக்கு மட்டும்)


சுஜாதாவின் 'ரத்தம் ஒரே நிறம்' நாவலின் நாலாவது பதிப்புக்கு எழுதியிருந்த முன்னுரை எனக்குப் பிடித்திருந்தது. 18.12.2005 ல் அவர் எழுதிய யதார்த்தம், அங்கதம் எல்லாம் கலந்த அந்த முன்னுரையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். நாவல் கூட நல்லாயிருக்கும். சிப்பாய்க் கலகத்தில் ஒரு தமிழன் கலந்து கொண்டால் எப்படியிருக்கும் என்ற கற்பனைக் கதை அது. சில பல நிஜத் தகவல்களையும் கலந்து உண்மைக்கதை போலச் சொல்லியிருப்பார். சமீபத்தில் இரண்டாம் முறையும் வாசித்தேன். அப்போது கண்ணில் பட்டதுதான் இந்த முன்னுரை.

நான் இதுவரை இரண்டு சரித்திர நாவல்களை எழுதியிருக்கிறேன். ‘ரத்தம் ஒரே நிறம்’, ‘கந்தளூர் வசந்தகுமாரன் கதை’. ‘ரத்தம் ஒரே நிறம்’ கதைக்கே ஒரு சிறிய சரித்திரம் உண்டு. முதலில் அது ‘கறுப்பு சிவப்பு வெளுப்பு’ என்ற தலைப்பில் குமுதத்தில் தொடர்கதையாக அட்டகாசமாகத் துவங்கியது, மணியம் செல்வனின் அழகான சித்திரங்களுடன். மூன்று வாரங்கள் சிறப்பாக வந்த பின் எதிர்பாராத ஓர் எதிர்ப்பு அதற்கு நாடார் இனத்தவரிடமிருந்து வந்தது. நான் அப்போது பெங்களூரில் இருந்தேன். எனக்கு ஏகப்பட்ட மிரட்டல் கடிதங்கள் வந்தன. தமிழில் புதுப்புது திட்டுவார்த்தைகள் எல்லாம் எனக்கு பாடமாயின. தொலைபேசியில் கொலை பேசினார்கள். குமுதம் இதழைக் கடையில் எரித்தார்கள். அதன் ஆசிரியருக்கு நாடார் சங்கத்தைச் சார்ந்தவர்கள் கதையை உடனே நிறுத்தும்படியும் மன்னிப்புக் கேட்கும்படியும் வற்புறுத்தினார்கள்.

ஆசிரியர் ஏ.எஸ்.பி. எனக்கு போன் போட்டு ‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார். நான் ‘ஓர் இனத்தின் மனத்தைப் புண்படுத்திவிட்டதாகத் தெரிகிறது. அவர்களின் தற்போதைய கோபத்தில் கதையின் நோக்கம் அதுவல்ல, அடுத்துவரும் அத்தியாயங்களைப் படித்தால் தெரியும் என்று என்னதான் விவாதித்தாலும் உணர்ச்சிபொங்கும் இந்தக் கணத்தில் யாரும் ஒத்துக்கொள்ளப் போவதில்லை. மேலும் தொடர்ந்து எழுதினால் என் வலது கையை வெட்டுவேன் என்று சொல்லியிருக்கிறார்கள். எனக்கு இடது கையால் எழுதவேறு பழகவேண்டும். நிறுத்திவிடுங்கள். அடம்பிடித்து மரணத்துடன் விளையாட இது ஒன்றும் பிரெஞ்சுப் புரட்சி அல்ல’ என்றேன். கதை நிறுத்தப்பட்டது.

ஆசிரியர் ஏ.எஸ்.பி ஆறுமாதம் கழித்து கோபம் அடங்கியதும் இதே கதையை தலைப்பை மாற்றி வெளியிடலாம் என்றார். ‘கருப்பு சிவப்பு வெளுப்பு’ அதேபோல் ஆற அமர ‘ரத்தம் ஒரே நிறமாக’ வெளிவந்தது. சிப்பாய்க்கலகத்தைப் பற்றிப்படித்தபின் அதில் ஒரு தமிழன் கலந்துகொண்டால் எப்படி இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்த்த கதை இது.

இப்போது இதைப்படிக்கும்போது எதற்காக இதை எதிர்த்தார்கள் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதை மறுபடி கிளற எனக்கு இஷ்டமில்லை. ஆனால் இந்த சம்பவத்தில் எனக்குப் பல விஷயங்கள் புலனாயின. தமிழ் சமூகத்தில் சில கதைகளை சிலர்தான் எழுதலாம் என்ற எழுதப்படாத ஓர் விதி இருக்கிறது. அதை மீறினதால் வந்த வினை என்பது இப்போது புரிகிறது. எழுத்தின் மேல் பிடிவாதம் இருப்பதோ, எழுதினது வேதவாக்கு, அதை யாராவது வழிமறித்தால் உயிருள்ளவரை போராடுவேன் என்பதெல்லாம் விஞ்ஞானச் சூழ்நிலையில் வளர்ந்த எனக்கு சிறுபிள்ளைத்தனம்.

எல்லாப் போராட்டங்களும் அலுத்துவிடுகின்றன. புதிய காரணங்கள் தேடப்படுகின்றன. ‘ரத்தம் ஒரே நிறம்’ மீண்டும் வந்தபோது முதலில் அதை எதிர்த்தவர்கள் யாருமே அதைக் கண்டுகொள்ளவில்லை. இந்தப் புதியபதிப்பை சிறப்பாக வெளியிடும் உயிர்மை பதிப்பகத்தார்க்கு என் நன்றிகள்.

-சுஜாதா (18.12.2005)

Tuesday, 9 June 2009

சென்சார் போர்டு


இந்திய சென்சார் போர்டில் சில காட்சிகளை நீக்குவதற்குச் சொல்லும் காரணங்கள் நியாயமாக இருப்பதில்லை என்பது பல இயக்குனர்களின் வாதம். சில காட்சிகளை நீக்கிவிட்டுக் காரணம் கேட்டால் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள், ரசனை இல்லாதவர்கள் எல்லம் சென்சார் போர்டில் இருக்கிறார்கள் என்பதெல்லாம் பொதுவாக சென்சார் போர்டில் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள். இந்த சென்சார் போர்ட் மற்றும் சென்சார் நடைமுறை ஆகியவை ஒரு எழுத்தாளர், ஒரு இயக்குனர், ஒரு நடிகை ஆகியோரின் பார்வையில் எப்படி இருந்தது என்பதற்கு கீழே உள்ள உரையாடல் நல்ல ஒரு சான்று.

எழுத்தாளர்: சுஜாதா,
இயக்குனர்: 'உதிரிப் பூக்கள்' மகேந்திரன்,
நடிகை: லட்சுமி.
உரையாடலின் பின்னணி: சுஜாதாவின் ‘கனவுத் தொழிற்சாலை' முழுக்க முழுக்க சினிமா உலகைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட ஒரு கதை. அதன் முதல் அத்தியாயத்தை நடிகை லட்சுமியிடமும், இயக்குனர் மகேந்திரனிடமும் கொடுத்து படிக்க வைத்தார்கள் விகடன் ஸ்தாபனத்தார். படித்த பிறகு மகேந்திரன், லட்சுமி மற்றும் சுஜாதா விகடன் ஆசிரியர் முன்னிலையில் அந்த முதல் அத்தியாயம் பற்றியும், இந்திய சினிமாவின் பல்வேறு விடயங்கள் பற்றியும் நிகழ்த்திய நீண்ட உரையாடலின் சில பகுதிகளைத்தான் உங்களுக்காகக் கீழே தொகுத்திருக்கிறேன். அந்த முழு உரையாடல் ‘விசா' பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘கனவுத் தொழிற்சாலை' நாவலில் முன் இணைப்பாகக் காணப்படுகிறது.

லட்சுமி: சென்சார் இருக்கணும்கிறீங்களா வேண்டாங்கிறீங்களா?

மகேந்திரன்: இருக்கணும்... ஆனா அதில யார் இருக்காங்கறதுதான் முக்கியம். இப்ப சமீபத்தில என்னோட 'உதிரிப்பூக்கள்' படத்தை சென்சார்ல பார்த்தாங்க. அது ஒரு நீட் பிக்சர். இருந்தும் அதுக்கு ‘ஏ' சர்டிபிகேட்தான் கொடுத்தாங்க. 'என்ன காரணம்'னு கேட்டேன். இதில வர்ற விஜயன் கேரக்டர் ரொம்ப சாடிஸ்டா இருக்கான். குழந்தைகள் பார்த்தா கெட்டு போயிடுவாங்கன்னு சொன்னாங்க. ‘அந்தக் கெட்டவன்தான் கடைசியிலே ஃபினிஷ் ஆயிடறானே..இப்படிப்பட்டவனா இருக்கக்கூடாதுன்னு இந்தக் கேரக்டர் மூலமா ஒரு பாடம் குழந்தைகளுக்கு கிடைக்குமே'ன்னு நான் சொன்னேன். 'இல்லே இல்லே'ங்கிறாங்க. 'நாளைக்கு நான் ராமாயணம் எடுப்பேன். ராவணன் மத்தவன் பெண்டாட்டியை கடத்திக்கிட்டு போறானே.. அதுக்கு ‘ஏ' சர்டிபிகேட் கொடுப்பீங்களா?'ன்னு கேட்டேன். ‘அது வந்து ... சென்சார்...சாடிஸ்ட்...' அப்படின்னு மழுப்பறாங்க. இவங்களோட என்ன பண்ணமுடியும்?

சுஜாதா: இப்ப நான் வெளிநாடு போயிருந்த போது Blue Film பார்த்தேன். அங்க இவ்வளவு சென்சார் கிடையாது. ஆனா அது மாதிரி படத்துக்கு கூட்டம் என்னன்னு கேட்கறீங்களா? பத்து பேர். சிகரெட் பிடிச்சுக்கிட்டு படத்தைக் கூட சரியா பார்க்கிறதில்லை. கூட்டமெல்லாம் வால்ட் டிஸ்னி படத்துக்குதான். இங்கே சென்சார்கிட்ட தப்பிச்சுட்டு வர்றதுதான் ரொம்ப வல்கரா இருக்கு . சில வசனங்களும்...சில பாடல்களும்.

லட்சுமி: அப்ப இந்தியாவிலே சென்சார் வேண்டாம்னு நினைக்கிறீங்களா?

சுஜாதா: இந்த மாதிரியான சென்சார்ஷிப் வேண்டாம்னுதான் நினைக்கிறேன்..

லட்சுமி: மேல்நாட்டு ரசிகத்தன்மைக்கும் நமக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இங்கே சென்சார்ஷிப் கட்டாயம் வேணும்னுதான் நான் நினைக்கிறேன்.

மகேந்திரன்: நான் சுஜாதா சொல்றதுதான் கரெக்டுன்னு நினைக்கிறேன்.

லட்சுமி: நீங்க சென்சார்ல கஷ்டப்பட்டதால அப்படி சொல்றீங்க.

மகேந்திரன்: நான் மட்டுமில்லை. இனிமே எல்லோரும் கஷ்டப்படப் போறோம்...

சுஜாதா: என் கதையிலே ஒருத்தன் நிச்சயம் கஷ்டப்படப் போறான் சென்சார்கிட்டே! அவன் தலைமயிரைப் பிடிச்சுக்கிட்டு ஓடப் போறான்.

மகேந்திரன்: அது மாதிரி நல்லா எழுதுங்க சார்..

சுஜாதா: சட்டத்தினாலே ஒழுக்க நெறிமுறையெல்லாம் கொண்டுவர முடியாது. மது விலக்கையே பாருங்களேன். இப்ப தமிழ் படங்கள்லே வர்ற சில காதல் காட்சிகள் Nude Filmகளை விட அதிக excitement கொடுக்கிறது....

லட்சுமி: நீங்க சொல்றது சரிதான். போன வருஷம் நடந்த Film Appreciation Courseலே ஒருத்தர் எழுந்து சென்சார் அதிகாரியைக் கேட்டார், ‘முத்தக் காட்சிகளை ஏன் அனுமதிக்கக் கூடாது'ன்னு. அதிகாரி அதற்குப் பதில் சொன்னார் 'பொண்டாட்டி ஊருக்குப் போறான்னா வெளிநாட்டுலே ரயில்வே ஸ்டேஷ்ன்லேயே அவன் அவளை கிஸ் பண்ணுறான். இங்கே அதுமாதிரி உண்டா? அதனால இங்கே அதைக் காட்ட முடியாது' ன்னு. அதுக்கு கேள்வி கேட்டவர் உடனே மடக்கினார். ‘பப்ளிக் பார்க்கிலே ஓடி ஆடி டூயட் பாடறது மட்டும் இந்தியாவில நடக்கிறதா? அதைக் காட்டலியா?'ன்னு. இப்படிப்பட்ட விவாதத்திற்கு முடிவே கிடையாது. சென்சார் அதிகாரி சொன்னதும் நியாயமாப் படறது. மகேந்திரன் சொன்னதும் நியாயமாப் படறது.

சுஜாதா: சென்சாரே வேண்டாம்னு சொல்லலே. ஓரளவுக்கு நியாயமா இருக்கணும்னு சொல்றேன். எழுத்திலேயே பாருங்க. ‘பாலம்'னு ஒரு கதை எழுதினேன். ஓரளவுக்கு அதிலே ஒரு கொலையையே நியாயப்படுத்தினேன். அதைப் படிச்சுட்டு ஒருத்தர் 14 பக்கத்துக்கு மேலே ஒரு கடுதாசி எழுதிட்டு ‘ இப்ப உன்னையே எனக்கு கொல்லணும் போல இருக்கு..வரட்டுமா'ன்னு கேட்டிருந்தார். அதைப் பார்த்திட்டு நாம எழுதியதை எவ்வளவு பேர் படிக்கிறாங்க. அது எவ்வளவு பேரைப் பாதிக்கிறதுன்னு புரிஞ்சுக்கிட்டேன். நாமே நமக்கு ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்திக்க வேண்டியிருக்கு. அதே மாதிரி சினிமா எடுக்கிறவங்களும் கட்டுப்பாட்டோட எடுக்கணும்.

லட்சுமி: நான் அதைத்தான் சொல்ல வரேன். நமக்கு அந்தக் கட்டுப்பாடு கிடையாது. நமக்கு யாராவது ஒருத்தர் ‘ செய்யாதே..... செய்யாதே'ன்னு சொல்லிண்டே இருக்கணும்.

மகேந்திரன்: நானும் இப்ப சென்சாரே வேண்டாம்னு சொல்லலே. விஷயம் தெரிஞ்சவங்க, இந்த மீடியத்தைப் புரிஞ்சவங்க பார்க்கணும். சினிமாவைப் பற்றி ஒண்ணுமே தெரியாத யாரோ வந்து கலெக்டர் ஆபீஸ் ஜாப் மாதிரி வந்து உட்கார்ந்துட்டுப்போனா எப்படி சார்?

லட்சுமி: சினிமாவை கம்ப்ளீட்டா தெரிஞ்சவங்க உட்கார்ந்தா எல்லாத்தையும் அனுமதிச்சுடுவாங்களே. வெளி ஆள் இருந்தாத்தான் எது வேணும் எது வேண்டாம் எந்தக்காட்சி தங்களைப் பாதிக்கிறதுன்னு சொல்ல முடியும்....

சுஜாதா: அவங்க அனுமதிக்கிற சீனும் நல்லா இல்லேன்னுதான் நான் சொல்ல வரேன். இரண்டுபேர் மூக்கை மூக்கை முகர்ந்து பார்க்கிறாங்க. அதுக்கப்புறம் காமிரா நேரே இரண்டு பூ கிட்டே போயிடுது. இப்ப இங்கதான் இமாஜினேஷன் அதிகமா போயிடுது. இது முத்தக் காட்சியைவிட மோசமா இருக்கு. நமக்கு சென்சார்ஷிப் வயலன்ஸுக்காகத்தான் வேணும். இப்ப சார்ள்ஸ் பிராஸ்னன் படத்தில் மிதி மிதினு மிதிப்பான். எலும்பு நெருங்கற சத்தம் கேட்கும். இதெல்லாம் நம்மாலே தாங்கிக்க முடியாது.

[உரையாடல் வேறு விடயங்களுக்கு மாறுகிறது]

இன்றைக்கும் கூட இந்திய சினிமா சென்சார் மாறவேயில்லை. இவர்கள் அனுமதிக்கும் காட்சிகள் மற்றும் வசனங்கள், இவர்கள் அனுமதிக்காத காட்சிகள் மற்றும் வசனங்கள் பெரியளவில் வேறுபடுவதில்லை என்பது இன்றைக்கும் படைப்பாளிகளின் முறையீடாக இருப்பது வருத்ததுக்குரியது.

Monday, 4 May 2009

சுஜாதா ((மே 3, 1935 - பெப்ரவரி 27, 2008)


எழுத்தாளர் சுஜாதா எனக்கு அறிமுகமானது எனது நண்பன் தயாநிதி மூலமாக. அறிமுகம் என்றதும் நானும் சுஜாதாவும் ஏதோ நேரடியாகச் சந்தித்து உரையாடினோம் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். அவரது எழுத்துக்கள் அறிமுகமானது நண்பன் தயாநிதி மூலம். அந்த நாவலின் பெயர்கூட மறந்து விட்டது. கொஞ்சம் செக்ஸ் தூக்கலான நாவல். (அப்போ எனக்கு பதினாலு வயது). அதுக்காகவே வாசித்தேனா, தலைப்பு மறந்து விட்டது. கதை நாயகியின் பெயர் கல்பனா. அவள் சம்பந்தமாக ஒரு கொலை. (கணவனை என்று நினைக்கிறேன், ஆண்மையற்ற கணவன்). ட்ரைவரோடு கள்ள உறவு. அப்படி இப்படி என்று போகும். அதற்குப்பிறகு செக்ஸ் தூக்கலாக இருக்கும் என்ற நப்பாசையில் என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ எல்லாம் படித்தேன். ஆனால் அதற்குப்பிறகு சுஜாதா என்னை வேறு விடயங்களுக்கு ஈர்க்க ஆரம்பித்தார்.

சுஜாதாவின் மேல் ஒரு மரியாதை முதன்முதலில் உருவானது எங்களது பள்ளிநூலகத்தில் தற்செயலாக கண்ணில் பட்ட ஒரு புத்தகத்திலிருந்துதான். யாழ்ப்பாணம் வடமராட்சியில் புகழ் பெற்ற ஹாட்லிக்கல்லூரியில் படித்து வந்தேன். 6ம் வகுப்பு தொடக்கம் 11ம் வகுப்பு வரையில் வகுப்பில் முதல் மூன்று இடங்களுக்குள் எப்படியாவது வந்துவிடுவேன். (பகீதரனும் அரவிந்தனும் மற்ற இருவர். 11ம் வகுப்பு "டி" பிரிவில் இரண்டாம் தவணை மட்டுமே முதலாவதாய் வந்து ஒரே ஒரு முறை பகீரை முந்தினேன்). அப்போது ஏதோ ஒரு பொது அறிவுப்போட்டி, அதற்கு ஏதாவது தயார் செய்வோமே என்றுதான் நூலகம் சென்றேன். அங்கேதான் சுஜாதாவின் பிரமிக்கத்தக்க அடுத்த முகத்தை பார்த்தேன். அவரது "ஏன்?எதற்கு?எப்படி?" என்ற கேள்விபதில் தொகுப்புதான் என்னை ஈர்த்தது. அதன் பின் அவரைத் தேடித் தேடிப் படித்தேன். ஆனால் ஒரே மாற்றம், "இந்தாள் கதையில செக்ஸ் நல்லா இருக்கும்" என்ற எண்ணம் அடியோடு அழிந்து போயிற்று. சுஜாதா மூலம் தரமான இலக்கியங்கள், படைப்புகள், படைப்பாளிகள் பற்றி அறிந்து கொண்டேன்.

சுஜாதாவிடம் எனக்கு பிடித்தது அவரது நேர்மை. "நான் இப்படித்தான்" என ஆணித்தரமாகக் கூறினார். இந்திய சமூக அமைப்பில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை அவர் வரவேற்றது மட்டும் எனக்கு பிடிக்கவேயில்லை. ஆனால் அதை அவர் தனது எந்த வாசகனிடமும் திணிக்க முயலவில்லை. தீவிர வைணவரான அவர் தனது எழுத்துக்களில் ஆங்காங்கே தூவிச்சென்ற பகுத்தறிவு விதைகளை இன்றைக்கும் தந்தை பெரியாரின் வாரிசுகளாகக் வேடம் கட்டிக்கொண்டு சுஜாதாவைத் திட்டித்தீர்க்கும் பலர் கூடச் செய்யவில்லை. ஒரு நடுநிலமையான நல்ல விமர்சகராயும், இளைஞர்களை ஊக்குவிப்பவராயும், நல்ல திறமையாளர்களை வெளிக்கொணர்பவராயும் (நா. முத்துக்குமார்)இருந்தார். நாசூக்காகப் பாராட்டுவது போல விமர்சிக்கும் திறமை இருந்தது அவரிடம். தன்னை எப்போதும் புதுப்பித்துக்கொண்டே இருந்தார். அதனால்தானோ என்னவோ அவர் தனது எழுபதுகளில் எழுதிய கட்டுரைகள், கதைகள் கூட எங்கள் போன்ற இருபதுகளையும் ஈர்த்தன. நான் கனடா புறப்பட்டபோது எடுத்துவைத்துக்கொண்ட இரண்டே இரண்டு புத்தகங்கள் அவர்மீது எனக்கிருந்த மரியாதை, வெறி, ஆர்வம் ஏன் பாசம் எல்லாவற்றையும் சொல்லும். கற்றதும் பெற்றதும் பாகம் 1 மற்றும் 2 தான் அவை. (கனடாவில் வந்து அடுத்த இரண்டு பதிப்புகளைத் தேடாத நாளில்லை). எனக்கு ஒரு hotmail account உண்டு. அதை நான் பெரிதாகப் பாவிப்பதில்லை. இருந்தும் அதை கைவிடாமல் வைத்திருக்கிறேன். ஏன் தெரியுமா? அதில் சுஜாதா எனது மின்னஞ்சலுக்கு அனுப்பிய பதிலஞ்சல் இருக்கிறது. அது எனக்கு ஒரு பொக்கிஷம்.