Thursday 20 August 2009

பேசிய படங்கள்

நிறைய காலத்துக்குப் பிறகு ஒரு சினிமாப் பதிவு. அதாவது இரண்டு வாரத்துக்குப் பிறகு. நான் என்னுடைய முன்னைய பதிவு ஒன்றில் சொன்னது மாதிரியே பேசாப் பொருளைப் பேசத்துணிந்த இரு படங்களான அச்சமுண்டு அச்சமுண்டு மற்றும் வேலு பிரபாகரனின் அரிப்புக் கதை, மன்னிக்கவும், காதல் கதை இரண்டையும் சென்ற வார இறுதியில் பார்த்தேன். இரண்டைப் பற்றியும் என்ன நினைக்கிறேன் என்பதுதான் இந்தப் பதிவின் ஆதார நோக்கம்.

வேலு பிரபாகரனின் காதல் கதை

என்னதான் திட்டித் தீர்த்தாலும், வேலு பிரபாகரனைச் சில விஷயங்களுக்காகப் பாராட்டியாக வேண்டும். அவர் பேச வந்த விஷயம் கத்தி மேல் நடப்பது போன்றது. என்னதான் வாய்கிழியக் கத்தினாலும், காமம் கலக்காத காதல் இல்லை என்பது உண்மை. எனக்குத் தெரிந்து காதலியைத் தனிமையான இடத்தில் வைத்துச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது தொட்டுப் பார்க்காத காதலனும், அவ்வாறு தொட அனுமதிக்காத காதலியும் இருக்கவே முடியாது. இல்லை, நாங்கள் பெற்றோர் சம்மதம் கிடைத்து கல்யாணம் கட்டும் வரை தொட்டுக் கொள்ளவே மாட்டோம் என்று சபதம் எடுத்திருக்கிறோம் என்றெல்லாம் யாராவது சொன்னால், அது பச்சைப் பொய். ஒரு துளியாவது காமம் கலக்காமல் காதல் இல்லை என்பது நிதர்சன உண்மை.ஆனால் வேலு பிரபாகரன் எல்லாமே காமம்தான் என்று சொல்லத் தலைப்பட்டிருக்கிறார். அதுதான் உதைக்கிறது. கிட்டத்தட்ட காதல் என்ற ஒரு உணர்வே இல்லை, எல்லாமே காமம்தான் என்ற மாதிரி இருக்கிறது அவரது பார்வை.

எனக்குத் தெரிந்து மோசமான சிலரைத் தவிர வேறு எந்தக் காதலனோ காதலியோ குளத்தாங்கரையிலோ, பனந்தோப்புகளிலேயோ ‘கூடும்' அளவுக்குப் போவதில்லை. அங்கே இங்கே ஏடாகூடமாகத் தொட்டுக் கொள்வார்கள், முத்தமிட்டுக் கொள்வார்கள். சந்திக்கிற போதெல்லாம் கூடுவதை மட்டுமே ஆதார நோக்கம் கொண்டவர்களாக ஒரு காதல் ஜோடியைப் படைத்திருப்பது எனக்கு ஏனோ ஒப்பவில்லை. படம் முழுவதும் இப்படியான அழுத்தமில்லாத பாத்திரப் படைப்புகள். இதிலும் பெரிய irony என்னவென்றால் ஒரு கடற்கரையில் குறைந்த பட்ச ஆடைகளோடு ஆடும் பெண்கள் பற்றியும், அப்படி எல்லாவற்றையும் ‘திறந்து' வைத்தால் கற்பழிப்பு போன்ற பாலியல் சம்பந்தமான குற்றங்கள் குறையும் என்பது பற்றியும் முழுமையாக உடை அணிந்த வண்ணம் பாடம் நடத்துகிறார்.

நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான். ஏன் பெண்கள் மட்டும் திறந்து வைக்கவேண்டும்? நீங்களும் உங்களுடையவற்றை ‘ஆடவிட்டு' திரியலாமே. இவர் மட்டும் முழுக்க மூடியிருப்பாராம், இவரது இச்சை தணிக்க பெண்கள் மட்டும் 'திறந்து' பிடிக்க வேண்டுமாம். படம் முழுக்கவும் இவரது ஒரே ஒரு பார்வை மட்டுமே தென்படுகிறது, அதாவது காலம் காலமாக நிலவி வருகிற ‘பெண் ஒரு போகப் பொருள், அவள் திறந்து காட்டிக் கொண்டு திரிந்தால் எல்லாம் சரியாகிவிடும்' என்கிற கேவலமான ஆணாதிக்க சிந்தனை. இதில் பெரியார் வேஷத்தைத் தானும் போட்டு..அட கருமமே.. அம்மா, தாய்மாரே, நம்ம வேலு பிரபாகரன் என்ன சொல்ல வர்றார் தெரியுமோ? உங்கள் பிள்ளைகள் காமம் பற்றிய நல்ல அறிவோடு தெளிவாக வளர, நீங்கள் திற................. அடச்சீ.. பொத்திக் கொள்கிறேன். ஆக, சொல்லவேண்டிய ஒரு விஷயத்தை கேவலமான ஒரு கோணத்தில் சொல்லியிருக்கிறார் வேலு பிரபாகரன்.

அச்சமுண்டு அச்சமுண்டு

சின்னப் பிள்ளைகளைப் பயன்படுத்தித் தாகம் தணிக்கும் மனிதன் ஒருவனைப் பற்றிய கதை. இந்தப் படத்தில் வியாபார ரீதியாக சில விஷயங்கள் விட்டுப் போயிருக்கிறன. படம் மிக ஆறுதலாக நகர்கிறது. இன்னும் கொஞ்சம் படபடப்பை ஏற்றியிருக்கலாம். இப்போ இயக்குனர் அருண் வைத்தியநாதன் சொல்ல வந்திருக்கும் விஷயம் எந்த அளவுக்கு எங்கள் சமூகத்துக்கு பொருத்தமானது என்பதுதான் கேள்வியே.

இயக்குனர் சொல்லியிருப்பது போல் கடத்திப் போய் அனுபவிக்கும் அளவுக்கு இல்லையென்றாலும், அவர் சொல்லியிருக்கும் விஷயம் இருக்கிறது. இது பற்றிப் பேசுவதற்கு எனக்கு 'எல்லாத்' தகுதியும் இருக்கிறது என்பதை மட்டும் சொல்லிக் கொள்வேன். மூன்று வெவ்வேறான இடங்களில், சந்தர்ப்பங்களில் மூன்று வெவ்வேறு குணாதிசயம் கொண்டவர்களால் அந்தத் தகுதி எனக்கு 8 வயதுக்கு உள்ளாகவே வழங்கப்பட்டு விட்டது. இது பற்றி மேலும் சொல்லப் போனால் சில குடும்பங்கள் உடைந்து சின்னாபின்னப் படலாம என்பதால் இங்கேயே நிறுத்துவது உசிதம் என்று நினைக்கிறேன்.

நேரடியாகக் கிடைக்காத ஒரு தகுதி என் பதின்ம வயதுகளின் பிற்பகுதியில் கிடைத்தது. எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊரில் இருந்த அந்த மனிதர் பற்றி நண்பர்கள் சொன்ன செய்தி அது. அந்த மனிதர் பராயமெய்திய ஆண் பிள்ளைகளைக் குறி வைப்பவர். ஒரு வாசிக சாலையில் அடிக்கடி கை போட முயல்வாராம். கோவில் திருவிழா காலங்களில் இவரது அட்டகாசம் அதிகமாக இருக்குமாம். ஒருமுறை இவரது ஆசைக்கு இணங்குவது போல் நடித்து இவரது மர்மப் பிரதேசத்தில் ‘காஞ்சிரோண்டி' என எங்கள் பக்கத்தில் அழைக்கப்படும் பட்டால் பயங்கரமாக அரிக்கும் செடியின் இலையைப் பூசிவிட்டார்கள் அந்த ஊர் இளைஞர்கள். கொஞ்சக் காலம் அடங்கியிருந்தவர் ஒரு முறை நண்பனுக்காக நான் வாசிகசாலையில் காத்திருந்த போது தேவையில்லாமல் மிக நெருக்கமாய் உட்கார, இவரது வரலாறு தெரிந்த நான் நண்பன் வீட்டு மதிலில் போய் உட்கார்ந்து விட்டேன்.

ஆக, அருண் வைத்தியநாதன் சொல்ல வந்த அந்த child abuse விஷயம், ஒரு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பது உண்மை. அதுவும் எட்டு வயதுக்குள் மூன்று தகுதியளிப்புகள் அங்கொன்றும் இங்கொன்றும் என்பது சரியான சொல்லாடலா என்று சந்தேகம் வர வைப்பது உண்மை. என்ன நான் கொஞ்சம் வெளிப்படையாகப் பேசுகிறேன், பலர் பேசுவதில்லை. அருண் வைத்தியநாதனும் கொஞ்சம் வெளிப்படையகப் பேசியிருக்கிறார். இனி வீட்டுக்கு வரும் யாரையும் எப்படி நம்புவது என்கிற ஒரு மனநிலையைத் தோற்றுவித்திருக்கக்கூடிய கரு, அழுத்தம் போதாமை காரணமாக கொஞ்சமே போரடிக்கிறது. ஆனால் ஒரு துளி ஆபாசம் இல்லாமல் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.

அருண் சொல்லாத ஒரு விஷயம், இப்படியான அக்கிரமங்களை நிகழ்த்த உங்கள் வீட்டுக்குள் வெளியிலிருந்து ஒரு ஆள் வரவேண்டும் என்பதில்லை. இப்படியான வன் கொடுமைகள் உங்களால் அதிகம் நம்பி வீட்டுக்குள் அனுமதிக்கப்படும் உறவுக்காரர்கள், தெரிந்தவர்கள், நண்பர்களால்தான் அதிகளவில் நிகழ்த்தப் படுகின்றன என்பது உண்மை. இது பற்றிய மேலதிக தகவல்கள் வேண்டும் என்றால் ஞாநி (வேறு விடயங்களில் அவரது கருத்துக்களில் நான் உடன் படாவிட்டாலும்) எழுதிய அறிந்தும் அறியாமலும் (விகடனில் தொடராக வந்தது) கிடைத்தால் படிக்கலாம். சிக்கலான விஷயங்கள் பலவற்றை எளிய தமிழில் சொல்லியிருப்பார். (என்ன வல்லுனர்களை மேற்கோள் காட்டாமல் எல்லாம் தன் சொந்தச் சரக்கு என்ற பாணியில் எழுதியிருப்பார்).

ஒரு கேள்வி, அச்சமுண்டு அச்சமுண்டு பார்த்த போது எழுந்தது. அதாவது படங்களில் நடிக்கும் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளிகளாகக் கருதப்படுவது இல்லையா? 'குழந்தைத் தொழிலாளர்கள்' என்ற பதத்தை யாராவது சரியாக வரையறுத்துச் சொல்ல முடியுமா?

8 comments:

Anonymous said...

குழந்தைகளுக்கு குட் டச்-பேட் டச் சொல்லிக்கொடுப்பது முக்கியம். ஆனால் குழந்தைகளிடம் தவறாக நடப்பவர்கள் உறவினர்களாக இருந்தால் எப்படி தப்பிப்பது அல்லது மற்றவர்களிடம் சொல்வது போன்றவைகளையும் சொல்லிக்கொடுக்கவேண்டும். பதிவின் இரண்டாம் பகுதி எனக்கு மிகவும் பிடித்தது.

vasu balaji said...

சொல்லும் விடயம் எதுவாயினும் மிக நேர்த்தியாக சொல்கிறீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள் கீத்.

நையாண்டி நைனா said...

நல்ல அலசல் நண்பா...

காமத்தின் ஆரம்பம் காதல்,
காதலின் ஆரம்பம் காமம்.

இரண்டும் பொருந்தும் தானே...?

Nila said...

Your comments about the child abuse is 100% correct, it happened to me when i was below 10 years old (by my mom's younger brother still i hate the scoundral because of that but i can't do anything because he married to my elder sister)

Unmai nijathil mikavum sudum...

Nila..

Unknown said...

சின்ன அம்மிணி..
///குழந்தைகளுக்கு குட் டச்-பேட் டச் சொல்லிக்கொடுப்பது முக்கியம்///
குட் டச் - பேட் டச் பற்றிக் குழந்தைகளோடு பேசவே தயங்கும் பல பேர் இன்றைக்கும் இருக்கிறார்கள்.

///ஆனால் குழந்தைகளிடம் தவறாக நடப்பவர்கள் உறவினர்களாக இருந்தால் எப்படி தப்பிப்பது அல்லது மற்றவர்களிடம் சொல்வது போன்றவைகளையும் சொல்லிக்கொடுக்கவேண்டும்///
நூறு சதவீத உண்மை.. ஆனால் இன்றைக்கும் உறவுகள் இப்படி நடந்து கொள்வார்கள் என்று பலர் நம்புவது இல்லை...அப்படிப் பாதிக்கப்பட்ட பெற்றோர் வேண்டுமானால் தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகள் பற்றிக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பார்கள். மற்றவர் நிலை கேள்விக்குறி..

///பதிவின் இரண்டாம் பகுதி எனக்கு மிகவும் பிடித்தது.///
முதல் பகுதி செம கடுப்பில் எழுதியது

Unknown said...

வானம்பாடிகள்
///சொல்லும் விடயம் எதுவாயினும் மிக நேர்த்தியாக சொல்கிறீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள் கீத்.///
நன்றி தலை.. எனக்கு அந்த நறுக்ஸ் டெக்னிக் மட்டும் வரமாட்டேங்குது.. எப்பிடி உங்களால மட்டும் அதெல்லாம் முடியுது??

Unknown said...

நையாண்டி நைனா
///நல்ல அலசல் நண்பா...

காமத்தின் ஆரம்பம் காதல்,
காதலின் ஆரம்பம் காமம். ///

உண்மைதான் நைனா... எல்லாம் ஒரு வட்டம்தான்..

Unknown said...

நிலா...
எனக்கு இந்த ஒரு விஷயம் மட்டும்தான் புரியவில்லை. உங்கள் அம்மாவின் சகோதரன் எப்படி உங்கள் அக்காவைத் திருமணம் செய்ய முடியும். எனக்கு இந்த உறவுமுறை புரியவேயில்லை... தாய் மாமன்களை மணம் செய்யும் இந்த முறைகூட இவர்கள் தப்பாய் நடக்கத் தூண்டுகிறது என்பேன்... என் அக்கா மகள்தானே என்ன செய்ய முடியும் என்கிற எண்ணம்...அக்காவைத் திருமணம் செய்துவிட்டான் என்பதால் பொறுத்துப் போகாதீர்கள்.. இப்போது வாலாட்ட முயன்றால் வாலை ஒட்ட நறுக்கிவிடுங்கள்... இதில் வலி என்ன தெரியுமா... அவனைப் பற்றி சின்ன வயதில் நீங்கள் போட்டுக் கொடுத்திருந்தால்கூட எதுவும் நடந்திருக்காது. அநேகமாக உங்கள் வாதம் எடுபட்டிருக்காது.. அவன் பக்கமே பேசியிருப்பார்கள்