Sunday 10 January 2010

சானல்-4 காணொளி: ஐ.நா.வின் அறிவிப்பும் சில சாத்தியங்களும்

விடுதலைப் புலிப் போராளிகளை சர்வதேசப் போரியல் விதிகளுக்கு முரணாக இலங்கை அரச படைகள் கொலை செய்வது போன்ற காட்சிகளுடன் வெளியான காணொளி ஆதாரபூர்வமானது என சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பிலிப் ஓல்ற்சன் தன்னுடைய அறிக்கையில் உறுதிசெய்திருக்கிறார். சென்ற ஓகஸ்ட் மாதம் வெளியான இந்தக் காணொளியின் நம்பகத்தன்மை தொடர்பில் இலங்கை அரசு பெரும் மறுப்புத் தெரிவித்து வந்திருப்பதும், அரசு சார் நிபுணர் குழுக்கள் மேற்படி காணொளி போலியானது என்று அறிவித்திருந்ததும் முந்தைய செய்திகளாக இருக்கும் வேளையில், பிலிப் ஓல்ற்சனின் இந்த அறிக்கை மீண்டும் இலங்கை அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

காணொளி வெளியான உடனேயே இலங்கை அரசாங்க அமைச்சர்கள், பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஆகியோர் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார்கள். அதுவும் நிஹால் ஜயசிங்க (பிரித்தானியாவுக்கான தூதுவர்) பி.பி.சி. க்கு அவசர அவசரமாக ஒரு பேட்டி கொடுத்திருந்தார் (பேட்டி அப்பா குதிருக்குள்ள இல்லை என்கிற மாதிரி இருந்தது வேறு விடயம்). இப்போது மூன்று நிபுணர்கள் அந்தக் காணொளியைப் ஆராய்ந்து கொடுத்த முடிவுகளின் அடிப்படையில் ‘அந்தக் காணொளி ஆதாரபூர்வமானது என்றும், மேற்படி படுகொலைகள் தொடர்பில் இலங்கை அரசு விசாரணைகளை நடத்த வேண்டும்' என்றும் பிலிப் ஓல்ற்சன் ஐ.நா.வுக்கு சிபாரிசு செய்திருக்கிறார். ஓல்ற்சனின் முழுமையான அறிக்கைக் காணொளியைக் கீழே காணலாம்.



அவரது இந்த அறிக்கை தொடர்பான கண்டனங்களை இலங்கை அரசு பதிவு செய்திருக்கிறது. தம்மிடம் எந்த விளக்கமும் கேட்காமல் இந்த அறிக்கையை பொதுவெளியில் வெளியிட்டது ராஜதந்திர விதிகளை மீறும் செயலாகும் என்று ரோஹித போகல்லாகமவும், நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கக்கூடிய செயலை பிலிப் ஓல்ற்சன் செய்திருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், ஓல்ற்சனின் அறிக்கை முழுமையாக மேலே இருக்கிறபடியால் அவரது அறிக்கையைப் பற்றி இங்கே நான் பேசப்போவதில்லை. ஆனாலும், ஓல்ற்சன் சொல்கிற சிபாரிசுகள் பற்றிய ஒரு கண்ணோட்டம் இங்கே அவசியமாகிறது. அதாவது, இந்தக் காணொளி பற்றி இலங்கை அரசாங்கம் சார்புகளற்ற ஒரு விசாரணைக் குழுவை இலங்கை அரசு அமைத்து இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான முடிவான முடிவொன்றுக்கு வழிகோல வேண்டும் என்பதாக அமைந்திருக்கிற அவரது சிபாரிசு/வேண்டுகோள் இலங்கை அரசால் இரண்டுவிதமாக நிறைவேற்றப்படலாம் (இலங்கை அரசு மட்டுமல்ல. எந்த நாட்டு அரசாங்கமும் மேற்படி சிபாரிசுகளை இந்த இரண்டு வழிமுறைகள் மூலம் நிறைவேற்றலாம்).
  1. இலங்கை அரசு தானாவ்கவே ஒரு விசாரணைக் குழுவை அமைத்து இந்தக் காணொளி தொடர்பில் விசாரித்தல்.
  2. தம்மால் ஒரு குழுவை அமைக்க முடியாது என்பதை ஐ.நா.வுக்குத் தெரிவித்து ஐ.நா. வே ஒரு சர்வதேசக் குழுவை அமைத்து விசாரிக்க வைத்தல்
இலங்கை அரசு அமைக்கக்கூடிய குழு
ஏலவே இலங்கையில் பல பிரச்சினைகளுக்காக ஜனாதிபதி ஆணைக்குழு என்கிற பெயரில் பல குழுக்கள் அமைக்கப்பட்டன என்பதும், அந்தக் குழுக்கள் பெரும்பாலும் எல்லாவற்றுக்குமான கண்துடைப்புக்கு மட்டுமே பயன்பட்டன என்பதும் யாவரும் அறிந்ததே. கண்துடைப்பு இல்லாமல், கொஞ்சமாவது செயல்ரீதியாக இயங்கிய குழுக்களின் கடைசி அறிக்கைகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டன. மேற்படி காணொளி தொடர்பிலான விசாரணைகளுக்கு பிலிப் ஓல்ற்சன் முன்னரே கோரிக்கை வைத்தபோது இலங்கை அரசு ஒரு குழுவை அமைத்தது. அதில் இருந்த நான்கு இலங்கையைச் சேர்ந்த நிபுணர்களில் இருவர் இராணுவத்தினரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் விசாரித்து மேற்படி காணொளி பொய்யானது, முழுக்க முழுக்க விடுதலைப் புலிகளின் பரப்புரை என்றுதான் சொன்னார்கள். அவர்களின் அறிக்கையின் பல முக்கியமான ஆவணங்கள் வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் தன்னார்வக் குழுக்களிடம் காட்டப்படவில்லை. இதனால்தான் ஓல்ற்சனே ஒரு குழுவை அமைத்து இந்தக் காணொளி பற்றி ஆராய நேர்ந்தது. இதை ஓல்ஸ்ரனே தன்னுடைய அறிக்கையில் சொல்லியிருக்கிறார். இப்படிச் சொல்கிற ஓல்ஸ்ரன் மீண்டும் இலங்கை ஒரு சார்பற்ற விசாரணைக் குழுவை அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

மீண்டும் ஒரு குழு அமைக்கப்படுமானால் மீண்டும் உண்மைகள் இருட்டடிப்புச் செய்யப்படவே அதிக சாத்தியம் இருக்கிறது. இல்லாவிட்டால் வருகிற தேர்தலில் ராஜபக்ச ஆட்சியைப் பிடித்தால் அவரது அரசியல் எதிரி/துரோகி சரத் பொன்சேகாவுக்கு ஆப்படிக்கக்கூடிய வகையில் ஒரு விசாரணைக்குழுவை அமைக்கலாம். அல்லது சரத் ஆட்சியைப் பிடித்து கோத்தபாயவுக்கு ஆப்படிக்கக் குழுவை அமைக்கலாம். மகிந்த இந்தக் குற்றங்கள் நடந்த போது ஜனாதிபதி என்பதால் இலங்கையில் வைத்து அவரை யாரும் ஆட்ட முடியாது. ஆகவே இலங்கை அரசால் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டால், இரண்டு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
  1. உண்மைகள் இருட்டடிக்கப்படலாம்
  2. அரசியல் பழிவாங்கல்களுக்காக மட்டும் விசாரணைக்குழு அமைக்கப்படலாம்
ஐ.நா. குழு அமைத்தல்
இந்தக் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. முழுமையான விசாரணை ஒன்றை எடுத்துச் செல்ல ஒரு குழுவை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் ஐ.நா.வுக்கு மிகப் பெரிய உதவி ஒன்றைச் செய்தாகவேண்டும். அதாவது, ‘இந்த விசாரணைக்காக சார்பற்ற ஒரு குழுவை எங்களால் அமைக்க முடியாது. ஆகவே நீங்களே ஒரு சர்வதேசக் குழுவை அமைத்து விசாரித்துக்கொள்ளுங்கள்' என்று ஒரு வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் விடுத்தாகவேண்டும். யாராவது ஆப்பென்று தெரிந்து போய் உட்காருவார்களா? ஆகவே இந்த இரண்டாவது வழிமுறை சாத்தியமில்லை.

மொத்தத்தில் காணொளி உண்மையானது என்பது தீர்மானமாகிவிட்டது. இலங்கையில் அந்தப் போரின் இறுதி நாட்களில் கொடூரமான மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் நிகழ்ந்திருக்கின்றன என்பதும் வெளிப்படை உண்மையாகிவிட்டது. ஆனபோதும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகிவிட்டது. (இங்கே குற்றவாளிகள் என்ற சொல்லைத் தனியே இராணுவம் என்றுமட்டும் அர்த்தப்படுத்திக்கொண்டால் நான் பொறுப்பல்ல). ஆக மொத்தத்தில் ஓல்ஸ்ரனின் சிபாரிசு மனதில் விதைக்கும் கேள்வி, ஐக்கிய நாடுகள் சபையிடம் என்ன அதிகாரம் இருக்கிறது என்று ஐ.நா.வை நோக்கி நாமெல்லாம் கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதுவே.

No comments: