Sunday 13 September 2009

தமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-3

தொடரின் முன்னைய பாகங்களை வாசிக்க இங்கே அழுத்தவும்.

சிவா பிள்ளை அவர்கள் கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் என்ற ரீதியில் செயல்முறை மூலமாகத் தமிழைக் கற்றுக் கொடுப்பது சரியானதாக இருக்கும் என்று கூற அலெக்ஸாண்டர் மறுத்தார். பல்லாயிரம் ஆண்டுகளாக நாங்கள் பேணி வரும் எழுத்துருக்கள் பிள்ளைகளுக்குச் சேராமல் போய்விடும் என்ற பயத்தினை வெளிக்காட்டினார். அத்தோடு சிவா பிள்ளை அவர்களின் PowerPoint Presentationல் ஒரு இடத்தில் சிவப்பு என்பது சிகப்பு என்று எழுதப்பட்டது தவறு என்றும் சுட்டிக்காட்டினார். இந்த இரண்டாவது சுட்டிக்காட்டல் பட்டறைக்கு அவசியமற்றது என்பது என்னுடைய கருத்து. தன்னுடைய வித்தகத் தன்மையை நிரூபிப்பதற்கான ஒரு முயற்சி என்பேன் அது. எனக்கு சிவா பிள்ளை சொன்ன கருத்தில் பிழை இருப்பதாகத் தெரியவில்லை.

புலம் பெயர் நாட்டில் நாங்கள் தமிழை எங்களது குழந்தைகளுக்கு இரண்டாவது மொழியாகக் கற்பிக்கப் போகிறோம். அவர்களின் தாய்மொழி அந்த நாட்டில் அவர்கள் சாதாரணமாகப் பேசிப் பழகும் மொழியே அன்றி, தமிழ் அல்ல என்பது என் கருத்து. வீட்டில் பேசும் மொழிதான் தாய்மொழி என்ற காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. சமூகத்தில் என்ன மொழியை அவர்கள் பேசுகிறார்களோ அதுதான் தாய்மொழி. அந்தத் தாய்மொழியை எவ்வாறு குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்களோ அந்த வரிசையிலேயே இரண்டாவது அல்லது மூன்றாவது மொழியையும் கற்றுக் கொடுப்பதே சிறந்தது என்ற கருத்தை யாராலும் மறுதலிக்க முடியாது.

ஏன் நாங்கள் கூட ‘அ' ‘ம்' 'மா' என்று எழுத்துருத் தெரிய முன்னமே 'அம்மா' என்ற சொல்லை அறிந்திருந்தோம் அல்லவா? பேசியிருந்தோம் அல்லவா? கேட்டுப், பேசிப் பழகிய பின்தானே வாசிக்க, எழுத எல்லாம் பழகிக் கொண்டோம். இயல்பாகவே அமைந்துவிட்ட அந்த வரிசையை ஒரு பாடத்திட்டத்தில் எழுத்துருவில் பார்க்கும்போது ஏன் பலரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடிவதில்லை.

சிவா பிள்ளை கற்பித்தலில் அடுத்து நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது, தெரிந்ததில் இருந்து தெரியாததைக் கற்பிப்பது என்கிற கருத்தாக்கத்தை ஆகும் என்றார். ‘ஒரு வட இந்திய நண்பர் தென்னிந்தியா வந்து உப்புமா சாப்பிடுகிறார். அவருக்கு அதன் சுவை மிகவும் பிடித்துப் போகிறது. அதை எப்படிச் செய்வது என்று தன்னுடைய மனைவிக்குக் கற்றுக் கொடுக்கும்படி உங்களைக் கேட்கிறார். எப்படிச் சொல்லிக் கொடுப்பீர்கள்' என்று பயன் பெறுனர்களைக் கேட்டார். வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிரியைகள். சமையல் குறிப்புகளைச் சொல்ல ஆரம்பித்தார்கள். எல்லாவற்றையும் புன்னைகையோடு கேட்டுக்கொண்டிருந்தார் சிவா பிள்ளை. பின்னர் அவர் தன்னுடைய பாணியில் அந்த வட இந்தியருக்கு எப்படி உப்புமா செய்யச் சொல்லிக் கொடுப்பது என்று சொன்னார்.


‘எல்லாருக்கும் கேசரி தெரியும்தானே' என்று கேட்டார். தெரியும் என்றோம். ‘அதே போல் அந்த வட இந்திய நண்பருக்குக் கட்டாயம் கேசரி பற்றித் தெரிந்திருக்கும். அவர்களில் அநேகமானவர்களுக்குக் கேசரி செய்யத் தெரிந்தும் இருக்கும் ஆகவே உப்புமா செய்வதை இப்படி விளக்குங்கள். கேசரி-இனிப்பு+தாளித்த வெங்காயம்= உப்புமா' அவ்வளவுதான் என்றார். இங்கே அவரது சமையல் கலை அனுபவமோ, இந்திய உணவு வகைகள் பற்றிய அனுபவமோ விமர்சனத்துக்கு உட்படுத்தப்படக் கூடாது. அவர் சொல்ல வந்த கருத்து, மாணவனுக்குத் தெரிந்ததில் இருந்து, தெரியாததைச் சொல்லிக் கொடுங்கள் என்பதே ஆகும்.


சிவா பிள்ளை இந்தத் தெரிந்ததில் இருந்து தெரியாததைச் சொல்லிக் கொடுப்பதில் கணனி மற்றும் பல்லூடனப் பயன்பாட்டை விளக்கினார். எங்கள் ஊரில் படித்தது போலவே அப்பாவின் படம், அம்மாவின் படம் எல்லாம் காட்டிப் படிப்பிப்பதை விட, குழந்தைகள் தொலைக்கட்சியில் விரும்பிப் பார்க்கக்கூடிய கேலிச் சித்திரத் தொடர்களில் வரும் பாத்திரங்களை வைத்துக் கற்றுக் கொடுக்கலாம் என்றார். குடும்ப உறவுமுறைகளைப் பற்றிக் கற்பிப்பதற்கு அவர் உதாரணம் காட்டிய Simpsons கனடாவில் 14 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமானது என்றாலும் பல குழந்தைகளுக்கு Simpsons பற்றித் தெரியும். அதைப் பயன்படுத்த விரும்பாவிட்டால் கனடாவில் இன்னொரு பிரபலக் கேலிச் சித்திரத் தொடரான Arthur ஐப் பயன்படுத்தலாம். இந்தக் கேலிச் சித்திரங்களில் அம்மா, அப்பா, அண்ணா, தம்பி, தங்கை, தாத்தா, பாட்டி, மாமா என்று எல்ல உறவு முறைகளும் வருகின்றன. பிள்ளைகளின் மனதில் நிச்சயம் ஒரு ஆர்வம் தூண்டப்படும் அல்லவா?

பிள்ளைகளுக்கு அவர்களுக்குப் பிடித்த விஷயங்களூடாகத் தெரியாத விஷயங்களை கற்பிக்கும் போது அவர்களுக்குத் தானாகவே ஒரு ஈடுபாடு வரும் என்பது சிவா பிள்ளையின் ஏற்றுக் கொள்ளத்தக்க வாதம். ஒரு மாணவனின் நிலையில் இருந்து பார்க்கும் போது எனக்குப் பிடித்த விஷயங்களைப் பற்றி என்னுடைய ஆசிரியர்கள் வகுப்பில் கதைக்கும்போது மனதில் சந்தோசத்தை உணர்ந்திருக்கிறேன். அதே போல் என்னுடைய அடுத்த தலைமுறையை வழிநடத்துவது தவறாக இருக்காது என்பதுதான் என்னுடைய கருத்து.

இலக்கணத்தைக் கூட இந்தப் பல்லூடனச் சாதனங்களையும், கணனியையும் வைத்தே கற்பிக்கலாம் என்கிறார். ஒரு சிறிய உதாரணமாக ஒரு பழம் சாப்பிடும் சிறுவனின் படத்தைக் காட்டி ‘நான் சாப்பிடுகிறேன்' என்று சொல்லிக் கொடுக்கலாம். பழங்களின் படங்களைக் காட்டி ஒவ்வொரு பழங்களின் பெயர்களைச் சொல்லிக் கொடுக்கலாம். சற்றே பேச ஆரம்பித்த பிள்ளையிடம் ஒரு படத்தைக் காட்டி உனக்குத் தோன்றுவதைச் சொல் என்று கேட்கலாம். இப்படியாகப் பிள்ளையை முதலில் செயல்முறை மூலம் கேட்க, கிரகிக்க, சிந்திக்க, பேச வைப்பது மிகவும் அவசியம் என்பதாக சிவா பிள்ளையின் பார்வை இருக்கிறது.

தமிழை வாசிக்கும் நிலைக்கு வந்த, கொஞ்சம் பெரிய பிள்ளைகளுக்கு பிள்ளைகளுக்கு படம் பார்த்துக் கதையை வாசிக்க வைக்கலாம். ஒரு பாடலை ஒலிக்க விட்டு அந்தப் பாடலின் வரிகளைச் சரியான முறையில் ஒழுங்குபடுத்தச் சொல்லிக் கேட்கலாம். உதாரணமாக ‘மலர்ந்தும் மலராத பாதி மலர்போல...' பாடலின் முதல் ஐந்து வரிகளை ஒலிக்கவிட்டு பிறகு அந்தப் பாடல்களின் வரிகளை பல்லூடன மென்பொருள் ஒன்றில் PowerPoint ஓடவிட்டு, அவற்றை வரிசைப்படுத்தச் சொல்லலாம். ஒரு பெரிய பந்தியைக் கொடுத்து வரிசைப்படுத்தச் சொல்வதைவிட ஒரு பாடலை வரிசைப்படுத்தச் சொல்வது அவர்களை ஈர்க்கும் என்பது சிவா பிள்ளையின் கருத்தாகும்.


மேலும் இந்தப் பல்லூடன மென்பொருள்கள் சந்தை எங்கும் பரவிக் கிடக்கின்றன. உங்களது கணனி அறிவுக்கு ஏற்ற வகை மென்பொருளைத் தேர்வு செய்து நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மிகவும் இலகுவான மென்பொருளான PowerPoint ஆவது பயன்படுத்துவதற்குத் தயாராக இருக்கவேண்டும். என்ன கொஞ்சம் நேரம் ஒதுக்கி இந்த அளிக்கைகளை (Presentation) தயார் செய்யும் பொறுமை ஆசிரியர்களுக்கு இருக்கவேண்டும் என்கிறார் சிவா பிள்ளை. உதாரணத்துக்கு தமிழைக் கற்பிப்பதில் PowerPoint ஐ எவ்வாறு பயன்படுத்தலாம் என்று சிவா பிள்ளை தான் தந்த கையேடு ஒன்றில் சொல்கிறார். அது பற்றி அடுத்த பாகத்தில் சொல்கிறேன். அதற்கு கொஞ்சம் பொறுத்திருப்பீர்கள்தானே?

5 comments:

vasu balaji said...

புதுமையான யதார்த்தமான அணுகுமுறை. பாராட்டுகள் பகிர்ந்தமைக்கு

நையாண்டி நைனா said...

உங்களுக்கு ஒரு அழைப்பு இங்கே இருக்கு...

Unknown said...

நன்றி பாலா

Unknown said...

வர்றேன் நைனா... விரைவில எழுதிறேன்

முனைவர் மு.இளங்கோவன் said...

திரு.சிவாப் பிள்ளை முயற்சிக்குப் பாராட்டுகள்
மு.இளங்கோவன்
புதுசேரி