Saturday 29 August 2009

ஒரு நூல் வெளியீட்டு விழா.. சில பாதிப்புகள்-2

முதல் பாகத்தை இங்கே பாருங்கள்

நூல் வெளியீடு முடிந்ததும் கலந்துரையாடலை ஆரம்பிக்கலாம் என்று அறிவித்தார்கள். வெளியீடு நடந்த இடம் 9:00 மணிவரை ஒதுக்கப்பட்டிருந்ததால் ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் வரவேற்கப்படுகின்றன என்றார்கள். அங்கே ஆரம்பித்தார்கள் பிரச்சினையை.

தில்லைநாதன் ஐயா கருணாகரன் மற்றும் அகிலனின் முழுமையான பக்கங்கள் இதுவரை வெளிவந்திருக்க சந்தர்ப்பம் இல்லை என்பதாக ஆரம்பித்து, நடந்து முடிந்த கொடூர யுத்தம் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலானது அல்ல என்கிற மாதிரியான ஒரு கருத்தாடலுக்குள் நுழைந்தார். நண்பன் ரபிக்காந்தின் பார்வையில் அது விடுதலைப் போராட்டத்தைச் சாடுவதாக அமைய ஆரம்பித்தது விவாதம். வன்முறைக் காலங்களில் சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் என்று தில்லைநாதன் சொல்ல, வன்முறை செய்ததே சிங்கள மக்கள்தான் என்று ரபிக்காந்த வாதாட ஒன்றுகூடலின் ஆதார நோக்கத்தை விட்டு (புத்தக வெளியீடும் விமர்சனமும்) விடுதலைப் போராட்டத்தில் என்ன தவறுகள் நிகழ்ந்திருக்கலாம் என்கிற பக்கமாக கலந்துரையாடல் திசைதிரும்பியது. இடையில் திரும்பவும் புத்தக வெளியீடு பற்றிய கருத்துக்களைச் சொல்ல மூத்த படைப்பாளி ஒருவரை அழைத்தார்கள். (அவர் பெயர் சரியாக ஞாபகமில்லை. யாரிடமாவது கேட்டுச் சொல்கிறேன்).

அவர் கௌசலா அக்காவின் மதிப்புரையில் நம்பிக்கையின்மையின் சுவடுகள் இருந்ததாகச் சுட்டிக்காட்டினார். நம்பிக்கையோடு சில விஷயங்களை அணுகும் வண்ணம் சுட்டிக்காட்டினார். கடவுள் நம்பிக்கை, பாவ புண்ணியம், வன்முறை இவற்றில் நம்பிக்கை இல்லை, ஆனால் ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்கிறது என்றார். மிகவும் உணர்ச்சிபூர்வமாக முஸ்லீம் மக்கள் பல இடங்களில் விரட்டி அடிக்கப்பட்டதைச் சொல்லிக்காட்டினார். அதன்பிறகு ஏனோ தெரியவில்லை கதவை அறைந்து சாத்திவிட்டு வெளியேறிப் போய்விட்டார். சொன்ன கருத்துகளில் வலிமை இருந்தாலும் அவரது அந்த நடவடிக்கை எனக்கு அணுவளவும் பிடிக்கவில்லை. உணர்வுபூர்வமான சிந்தனைகளைத் துறந்து அறிவுபூர்வமாகச் சிந்திக்க எங்களைத் (புதியவர்களை) தூண்டியிருக்க வேண்டிய அந்த மூத்தவர் அப்படி நடந்து கொண்டிருக்கக்கூடாது.

அவர் வெளியேறியதும் திரும்பவும் ஈழப் போராட்டம் பற்றிய நியாய, அநியாயங்களுக்குள் நுழைந்தார்கள். நான் பொதுவாகவே ஈழப் போராட்டம் பற்றிய கருத்தாடல்களில் ஒதுங்கியிருப்பவன். காரணம், இலகுவில் முத்திரை குத்திவிடுவார்கள். குத்துவதோடு நின்றுவிடாமல் அடிக்கடி மாற்றி மாற்றி முத்திரை குத்துவார்கள். அந்த முத்திரைகள் எனக்குப் பிடிப்பதில்லை. ஆனால் விவாதம் சூடேற ஆரம்பித்தது. இன்றைக்கு மூன்று லட்சம் மக்கள் முள்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டு இருப்பதற்கு யார் காரணம் என்கிற திசையில் விவாதம் திரும்பியது. திரும்பவும் தில்லைநாதனும், ரபிக்காந்தும் மோதிக் கொண்டார்கள். மூத்தவர் சிவப்பு சிந்தனையாளர் என்பது அவரது உரையிலும், பின்னர் அருண்மொழிவர்மனுடனான அலைபேசி+தொலைபேசி உரையாடலிலும் தெரியவந்தது. என்ன இது ஒரு புரிந்துணர்வு இல்லாத விவாதமாக, என் கருத்துத்தான் சரி என்கிற திசையில் போனபோது, செல்வம் அவர்கள் குறிப்பிட்டார்.

செல்வம் தன்னுடைய சிற்றுரையில், இவ்வாறாக ‘இவர்கள் சரி, அவர்கள் பிழை' என்று விரல் சுட்டுவது தவறென்றும், இன்றைக்கு மூன்று லட்சம் பேர் மந்தைகள் போல் முட்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டிருப்பதற்கு, நாங்கள் எல்லோருமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் சொன்னார். அதற்கு கறுப்பி அவர்கள், அப்படிப் பொறுப்பேற்க முடியாது என்றும், ஆகக்குறைந்தது ஒரு சதவீதம் ஈழத் தமிழ் மக்களாவது போர் வேண்டாம் என்று ஒதுங்கியிருந்தார்கள் என்றும், அப்படியான மக்கள் இந்தத் துயரத்துக்கு பொறுப்பேற்க முடியாதென்றும் வாதிட்டார். அப்படியான குடும்பங்களில் ஒன்று தனது குடும்பமும் என்பதாகச் சொன்னார். அதற்குப் பதிலிறுத்தவர், ஜெயகரன் அண்ணா. அவரது பதிலின் சாராம்சம் இதுதான். (அவர் ஆரம்பகட்டங்களில் போராளிக் குழுக்களில் ஒன்றில் இருந்தவர் என்று யூகிக்கிறேன்)

‘இப்போது புலிச் சார்பு, புலி எதிர்ப்பு என்ற நிலைகளில் மட்டும் இருந்து வாதாடக் கூடாது. நான் கூட அவர்கள் தவறு செய்கிறார்கள் என்று தெரிந்த நேரத்தில் அங்கிருந்து போராடி இருக்கவேண்டும். அதுதான் என் களமாக இருந்திருக்க வேண்டும். அதைவிடுத்து நான் புலம் பெயர்ந்து வந்ததையிட்டு வருந்துகிறேன். நீங்கள் போராட்டத்தை விட்டு முற்றுமுழுதாக ஒதுங்கி இருந்திருந்தாலும் ஏதோ ஒரு வகையில் அந்தப் போராட்டம் வளர ஆதரவளித்திருக்கிறீர்கள். அதாவது, அந்தப் போராட்டத்தில் தப்பிருந்திருந்தால் அதைச் சுட்டிக்காட்டிப் போராடி இருக்க வேண்டும். அதைவிடுத்து பேசாமல் இருந்துவிட்டு இப்போது மக்களின் அவலநிலைக்குப் பொறுப்பேற்காமல் ஒதுங்குவது என்பது சரியல்ல' என்பதாக ஜெயகரனின் பார்வை இருந்தது. சுய விமர்சனத்தின் அவசியத்தையும் ஜெயகரன் அண்ணா, சேனா அண்ணா, சேனா அண்ணாவுக்கு அருகில் இருந்த அந்தத் தாடிக்கார அண்ணா ஆகியோர் வலியுறுத்தினார்கள்.

உரையாடலின் நடுவே வந்திருந்த நண்பர்களின் பெயர்களையும் மின்மடல் முகவரிகளையும் சேகரித்தார்கள். இந்த விவாதம் கிட்டத்தட்ட இதே பாதையில் தொடர்ந்து கிட்டத்தட்ட 8:40 அளவில் முடிவுக்கு வந்தது. சேனா அண்ணா மற்றும் ஜெயக்குமாரி அக்கா ஆகியோருடன் சற்று நேரம் அளவளாவினோம். சேனா அண்ணா எங்கள் பாடசாலை மாணவர் என்று தெரியவந்தது. 84ம் வருடம் ஏ/எல் முடித்தவராம். ஆள் மொட்டை அடித்து வயதைக் குறைத்து நல்ல இளம் ஆள் மாதிரி இருந்தார். 9:00 மணியளவில் விடைபெற்றுக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். 10:30 தொடக்கம், 11:30 வரை அருண்மொழிவர்மன் அண்ணாவுடன் தொலைபேசியில் உரையாடிவிட்டு, நூல் வெளியீட்டு விழா பற்றிய முதல் பதிவை எழுதிவிட்டுப் படுத்துறங்கிப் போனேன்.

சில எண்ணங்கள்
  • அகிலன் இந்தியாவுக்கு கள்ளமாகப் படகில் வந்தார் என்று சொல்லவந்து ‘கள்ளத் தோணி' என்ற சொல்லைப் பாவித்துவிட்டார்கள் நிகழ்ச்சி இணைப்பாளர்கள். அவர்கள் கொச்சையான அர்த்தத்தில் அதைப் பயன்படுத்தவில்லை என்றாலும், அந்தச் சொல்லின் வலி பற்றி பெரியவர்கள் எடுத்துச் சொன்னவிதம் பிடித்திருந்தது.
  • ‘மூன்று பெண்கள் முன்னின்று நடத்திய விழா' என்று குறிப்பிட்டது கொச்சையாக இருந்தது. ஏன் அவர்கள் முன்னின்று நடத்தியதில் என்ன அதிசயம் கண்டுவிட்டார்கள் இவர்கள்? அவ்வாறு குத்திக் குத்திப் பேசியதிலேயே தெரியவில்லையா எங்கள் சமூகத்தில் ‘பெண் விடுதலை' எந்தளவுக்கு இருக்கிறது என்று. 'விழா ஒருங்கமைப்பாளர்கள் நன்றாகத் செயற்பட்டார்கள்' என்ற கருத்தை ‘மூன்று பெண்கள் அழகாக விழாவை ஒழுங்கமைத்தார்கள்' என்ற வடிவில் சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை. பிரித்துக் காட்டியிருக்க வேண்டாம்.
  • வாதம் அடிக்கடி வேறுதிசைகளில் பயணித்த போது, யாராவது கொஞ்சம் கடுமையாக நெறிப்படுத்தி இருக்கலாம். ஆனால், வயதில் இளையவனான ரபிக்காந்தின் கருத்துக்களைப் பெரியவர்கள் எடுத்துக்கொண்ட விதத்துக்குத் தலை வணங்குகிறேன்.
  • சுயவிமர்சனம் இன்றைக்கு அவசியம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அது பற்றிப் பேசவேண்டிய களம் இதுவா என்பதில் என்னிடம் தெளிவான கருத்து இல்லை. நடந்த கலந்துரையாடலை அதற்கெனவே தனியாகக் களம் அமைத்து நடத்தலாம் என்பது என் பணிவான வேண்டுகோள். நூல் வெளியீட்டு விழாவில் என்ன அவசியம் என்று தெரியவில்லை. ஒருவேளை கூடுவதற்கும் அது பற்றிப் பேசவும் வேறு சந்தர்ப்பம் கிட்டுமா என்ற சந்தேகத்தில் அவ்வாறு விவாதித்தார்களோ தெரியவில்லை.

12 comments:

King... said...

என்ன புத்தக வெளியீடு எங்க நடந்தது எத்தனை மணிக்கு நடந்தது எண்டு ஒன்றும் இல்லாமல் பதிவெழுதி இருக்கிறத பாத்தால் அங்க கதைக்காமல் விட்டதை இங்க சொல்ல வெளிக்கிட்ட மாதிரி இருக்கு... அந்த விபரங்களையும் சொன்னால் நல்லது...

:)

King... said...

சரி சரி, முதல் பதிவு இப்பத்தான் வாசிக்கிறன்...

Unknown said...

King... முதல் பதிவுக்கு இணைப்பைக் கொடுத்திருக்க வேண்டும்... தவறிவிட்டேன் இப்போது கொடுத்திருக்கிறேன்

அருண்மொழிவர்மன் said...

இது போன்ற நிகழ்வுகளுக்கு வருபவர்கள் தொகை மிகக் குறைவு என்ற வருத்தம் எனக்கு உண்டு. பதிவுகளில் இவை பதிவு செய்யப்படும்போது இவை பலரைச் சென்றடையும், அதுவே பலரை கலந்துகொள்ளவும் வைக்கும். நன்று உங்கள் பணி கீத்.

உண்மையில் நேற்று நடந்த விவாதம் சில தடவைகள் வரம்பு மீறிச் சென்றாலும், ஓரளவு ஆரோக்கியமானதாகவே சென்றது. இது போன்றா கருத்து சுதந்திரம் தரப்படும் வெளியைத்தான் நானும் விரும்புகிறேன்.

அது போல, பேசிவிட்டு உடனே வெளியேறியதும் பிழை என்றே நினைக்கின்றேன். அவர் பேச்சு சரியான திசையிலேயே நகர்ந்தது எனவே, அவர் தொடர்ந்து இருந்திருக்கலாம்...

deep said...

நன்றி கீத்..

புத்தக வெளியீட்டில் மட்டுநிறுத்துதலை(!) விட்டுவிட்டு சுதந்திரமாக உரையாட 'விட்டதற்கான'காரணங்கள் சில:
1. சேனா கூறியதுபோல நடந்து முடிந்து போனவை தொடர்பில் அனேகமானவர்களுக்கு கதைப்பதற்கான வாய்ப்புகள் இருந்ததில்லை என்பது
2. இலக்கியத்தில் மட்டும் அரசியல் இல்லையா என்ன... சொல்லப் போனால் அரசியல்தான் ஈழத் தமிழ் வாழ்வில் கலந்தோ கலக்காமலோ ஆனால் பேசப்பட்டுக் கொண்டேயிருப்பதும்...

இருந்தும், உரையாடும்போத
'வடலி போன்ற பதிப்பகங்களது பதிப்பாக்கல் முயற்சிகளில் முதன்மைப்படுத்த வேண்டியது (எதுவாக இருக்கலாம்)' என்பது தொடர்பில் இந்த உரையாடல்கள் எதுவும் தொடர்புபடுத்தப்பட்டிருந்தால் பதிப்பகக்காரர்களுக்கு பிரயோசனமா இருந்திருக்கும்.. அது தொடர்பில் உரையாடலை வளர்த்துச்செல்லாமைக்கு எமது மட்டுநிறுத்துதலில் தான் தவறே தவிர வந்திருந்தவர்களில் அல்ல.

மற்றது, வந்தவர்கள் பற்றி:
கலந்துரையாடலில், அங்கு வந்திருந்து உரையாடியவர்களில் (தில்லைநாதன் தொடங்கி ஜெயகரன் வரைக்கும்)பலரும் -சிகப்பு கறுப்பு சிந்தனைகளுக்கு அப்பால் - ஆயுதப் போராட்டத்தில் இளமையில் இணைந்திருந்தவர்கள்தான். மற்றவர்களுடைய பெயர்களை எழுதுவதை அவர்கள் விரும்புவார்களோ தெரியாது என்பதால் தவிர்க்கிறேன். இந்த நிகழ்ச்சியில் தமது மனதிலிருப்பவற்றை பேசுவதற்கான தளங்கள் அவர்களுக்கு இல்லை என்பதை உணரக் கூடியதாய் இருந்தது. பக்கசார்பற்று - எதிராளியை அடிக்கும் வெறியின்றி - உரையாடும் வகையில் எமது அரசியல் இருந்த சந்தர்ப்பங்கள் இல்லை என்றே கூறலாம் இல்லையா?

மூத்தஎழுத்தாளர் என்று நீங்கள் கூறியது கனடாவிலிருந்து வரும் 'காலம்' சஞ்சிகையின் ஆசிரியர் செல்வம் என நினைக்கிறேன்.. தவிர நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தது சத்யா. நூல்க்ள குறித்து பேசிய கெளசலா, ஜெயகுமாரி தவிர 'வடலி நண்பர்கள்' சார்பாக இருந்தவர் தான்யா.


நிகழ்ச்சியை ஒரு பார்வையாளராக பார்க்கையில்,
(எங்களுக்கு எல்லாம் தெரியும் எண்டு) தமது அனுபவங்களால் எம்மை அழுத்தாமல் சுயவிமர்சனங்களுடன் பேசியது எனக்கும் பிடித்திருந்தது..

நீங்கள் கூறியது போல பெண்கள் முன்னின்று நடத்தியது குறித்து அந்த அங்கிள் பாராட்டிச் சொன்ன போது, 'முன் நின்று எண்டு, நாங்க முன்னுக்கு வரிசையா நாலு பெண்கள் நிக்கிறத சொல்றாரோ?' எண்டு பக்கத்தில நின்றவாட்டக் கேட்டுக் கொண்டன். பெண்கள் நிகழச்சிகளை ஒருங்கிணைப்பது என்பது 'பெரிய' புதினமல்ல. எனினும் நம்மிடையே அது நெடுக நடக்காததால பெரிய புதினமாப் பாக்கப்படுது.. அவ்வளவுதான்!

மற்றது, உங்கட நண்பர் ரபிக்காந்த் வலைப்பதிபவரா :0
சரி
இனிப் புத்தகங்கள் குறித்த விமர்சனங்களை எதிர்பார்ப்போம் :-)

Unknown said...

பாராட்டுகளுக்கு நன்றி அருண்மொழிவர்மன், என்ன என்னாலான சின்ன பங்களிப்பு இது.. அவ்வளவுதான்.

உண்மை.. விவாதம் ஆரோக்கியமானதே

Unknown said...

தீபா அக்கா..
நடந்து முடிந்தவை பற்றிப் பேசும் வெளி இல்லாமல் இருந்தது என்பது ஒப்புக்கொள்ளப்பட வேண்டியதே.. மட்டுநிறுத்துதல் கொஞ்சம் கண்டிப்பானதாக இருந்திருக்கலாம் என்று நினைத்தேன்...

பக்கச்சார்பற்ற விமர்சனங்களை வெளியிடும் வெளி எமக்கு இருந்ததில்லை... இன்றைக்கும் இல்லை.. இது பற்றித் தனியாக மடலிடுகிறேன்.

தான்யா, சத்யா ஆகிய இருவருக்கும் என்னுடைய மன்னிப்பைச் சொல்லி விடுங்கள், பெயர்களையும் முகங்களையும் இணைக்கத் தவறிய குற்றத்துக்காக.

நான் சொன்ன மூத்த எழுத்தாளர் செல்வம் அண்ணாவை அல்ல. சரியான முறையில் தன் வாதத்தை முன்வைத்தாலும் உணர்ச்சியின் பால் அடிமைப்பட்டு திடும்மென வெளியேறிய மூத்தவரின் பெயர் ஈஸ்வரமூர்த்தி என்று அறிந்தேன். தாடிகார அண்ணா என்று சொன்னது கோணேஸ் அவர்களை. புதியவன் என்பதால் பெயர்கள் தெரியவில்லை.. மன்னிப்பார்களாக

///எனினும் நம்மிடையே அது நெடுக நடக்காததால பெரிய புதினமாப் பாக்கப்படுது.///
ஒப்புக்கொள்கிறேன்

ரபிக்காந்த பதிவிடுவதில்லை. இழுத்து வர முயல்கிறேன்.

புத்தகங்கள் பற்றிய கருத்துரைகளுக்கு (விமர்சனம் அல்ல) கொஞ்சம் காத்திருக்க வேண்டும்... மீண்டுன் திங்களில் இருந்து வேலை தேடும் வேலை இருக்கிறது. (வார நாட்களில் முழுநேரம், வார இறுதிகளில் பகுதி நேரம், இடைவேளைகளில் பதிவுலகம் என்று வாழ்க்கை போகிறது)

vasu balaji said...

நல்லா எழுதுறீங்க கிருத்திகன். எப்பவும் சொல்றதுதான்னாலும், நல்ல மெருகு எழுத்தில்.

Unknown said...

நன்றி பாலா.... உங்கள் எழுத்துகளில் இருக்கக்கூடிய கோபம் என்னுடைய எழுத்துக்களில் வரவே மாட்டேன் என்கிறது... அதுக்கு என்ன செய்யலாம்?

۞உழவன்۞ said...

வந்தவர் சுவிஸ் தமிழன் எனி தான் வாசிக்க போகிறான்

புல்லட் said...

ம்ம்! அந்த மூன்று பெண்களின் போட்டைவை போட்டிருந்தால் ஒரு கள்ள ஓட்டு குத்தியிருப்போன்.

அழகிய விழா விமர்சனம்.நீஙகள்ளாம் சரியான சீரியஸ் பதிவர்குளோ?

Unknown said...

புல்லட்டு... கள்ள ஓட்டு வேறயா lol