Saturday 24 October 2009

நான் பார்க்கும் உலகம்: ஒக்ரோபர் 18-ஒக்ரோபர் 24 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

அரசியல்-பிறந்தகம்
வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து 12 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 41,685 அகதிகளை விடுவித்திருப்பதாக இலங்கை அரசு அறிவித்திருக்கிறது. வவுனியாவுக்கு 2,583 குடும்பங்களைச் சேர்ந்த 8,643 தமிழர்களும், மன்னாருக்கு 2,644 குடும்பங்களைச் சேர்ந்த 6,631 தமிழர்களும், முல்லைத்தீவுக்கு 4,415 குடும்பங்களைச் சேர்ந்த 16,394 பேரும், கிளிநொச்சிக்கு 2,453 குடும்பங்களைச் சேர்ந்த 10,17 பேரும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இலங்கைப் பணமதிப்பில் ரூபாய் 5,000 பணமும், ரூபாய் 20,000 மதிப்புள்ள பணவைப்புப் புத்தகமும் 6 மாதத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களும் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் அனைவரையும் மீளக்குடியமர்த்தி அவர்களுக்குரிய இயல்பு வாழ்க்கையை விரைவில் ஏற்படுத்தித்தர ஏற்பாடுகள் செய்யப்படுவதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் சரத் அமுனுகம் கூறியிருக்கிறார். சம உரிமை, சமத்துவம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை உயிர்வாழ விட்டால் போதும் என்கிற நிலையில் அடைபட்டிருக்கும் அந்த மக்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியே.

முன்னாள் முப்படைகளின் தளபதியான சரத் பொன்சேகாவை வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பாக பிரதம வேட்பாளராக நிறுத்த எதிர்கட்சிகள் முயல்வதைத் தாங்கள் ஆதரிக்க மாட்டோம் என தமிழ்க் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. சரத் பொன்சேகவுக்கும் ராஜபக்ச சகோதரர்களுக்கும் சமீபகாலமாக ஒரு ஊடல் நிலவுவதும், அதையே சாக்காக வைத்து சரத் பொன்சேகவை ஜனாதிபதி வேட்பாளராக்க எதிர்க்கட்சிகள் முயல்வதும் குறிப்பிடத்தக்கது. இராணுவரீதியான வெற்றி ஒன்றைப் பெற்றுத் தந்த காரணத்துக்காகவே அவரை முன்னிறுத்துவது ஆபத்தானது என்பதாக அரசியல் விமர்சகர்களும் கருத்து வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அரசியல்-புகுந்தகம்

ஆஃப்கானிஸ்தானில் 2011க்குப் பிறகும் கனேடிய இராணுவ வீரர்களை வைத்திருப்பதற்கு கிட்டத்தட்ட அரைவாசிக் கனேடியர்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின் முடிவே இதுவாகும். ஆனாலும், அப்படி இருக்கும் கனேடிய வீரர்கள் போரியல் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடாமல், இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலே போதுமானது என்பதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆஃப்கானிஸ்தானில் இறந்த வீரர்களின் உடலங்கள் Highway of Heros என அழைக்கப்படும் 401 நெடுஞ்சாலையில் போகும்போது பாலங்களின் மேல் திரண்டு நின்று உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தும் மக்களில் பலர் ஆஃப்கானிஸ்தானுக்கு உறவுகளை அனுப்பியவர்களே. அவர்களிடம் ஆஃப்கானிஸ்தானுக்கு துருப்புக்களை அனுப்புவது பற்றிய எதிர்ப்புணர்வு இருந்தது. மற்றவர்களுக்கு ஆஃப்கானிஸ்தானில் வீரர்கள் இருப்பதில் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லாமல் இருப்பது ஆச்சரியமளிக்கவில்லை.

அரசியல்-உலகம்
ஈரானில் கிடைக்கும் யுரேனியம் தாதுப் பொருளை வெளிநாடுகளுக்கு அனுப்பி அதை மேம்படுத்தித் தருகிறோம் என்கிற பெயரில் ஈரான் ஆபத்தான அணு ஆயுதங்கள் செய்வதைத் தடுக்கலாம் என்று அமெரிக்காவும் ஒபாமாவும் சேர்ந்து செய்த முயற்சிக்கு பெரும் அடி விழுந்திருக்கிறது. இந்த வாரத் தொடக்கத்தில் இந்த முயற்சிக்கான திட்ட வரைவு ஒன்றை அமெரிக்காவும் ஏனைய உலக நாடுகளும் சேர்ந்து, ஈரானியத் தலைவர்களிடம் முன்வைத்திருந்தார்கள். இந்தத் திட்டவரைவு ஈரானின் அணு ஆயுத உற்பத்தியைத் தடுப்பது போலான தோற்றத்தில் இருப்பதால் அதை ஈரான் தலைவர்கள் எதிர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது போலவே அவர்களும் எதிர்த்திருக்கிறார்கள். இன்னும் உத்தியோகபூர்வமான அறிவிப்பு வரவில்லை என்றாலும் அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் ரஷ்யா ஆகியோரின் தலைமையில் வரையப்பட்ட அந்தத் திட்ட வரைபுக்கு நிகராக, தங்களுக்கு ஆதரவான ஒரு திட்டவரைபை ஈரான் முன்வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்

மைக்ரோசொஃப்ற் நிறுவனத்தின் பங்குகளின் விலை கடந்த ஒரு வருடத்தின் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. பங்கொன்றின் விலை $29.23 (அமெரிக்க டொலர்) என்கிற விலையைத் தொட்டது ஆச்சரியமூட்டுவதாகவே இருந்தது. ஏனென்றால் கடந்த காலாண்டில் மைக்ரோசொஃப்ற் நிறுவனத்தின் இலாபம் 18% ஆல் வீழ்ச்சியடைந்ததாக நிறுவனம் அறிவித்திருக்கிற நிலையில் பங்குகளின் விலையில் ஏற்பட்ட ஏற்றம் ஆச்சரியகரமானதே. புதிதாக இவர்கள் வெளியிட்டிருக்கும் விண்டோஸ்-7 இயங்குதளம் நல்ல விமர்சனங்களைப் பெற்றிருக்கின்ற காரணத்தால் அடுத்த காலாண்டில் நிச்சயமாக இன்னும் நல்ல இலாபம் கிட்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். மைக்ரோசொஃப்ற்றின் சமீபத்திய பிரச்சினைகளுக்கு மிக முக்கிய காரணம் அவர்களின் இயங்குதள வெளியீடுகளில் மிகவும் கேவலமானதாகக் கருதப்படும் விஸ்டா பாவனையாளர்களுக்குச் செய்த அநியாயம் என்பது குறிப்பிடத்தக்கது. (நானும் விஸ்டா பாவனையாளன்தான். ஆனால் விண்டோஸ்-7 க்கு மாறப்போவதில்லை. சில தொழிநுட்ப சிக்கல்களை நிவர்த்தி செய்து திறந்த மூல இயங்குதளம் ஒன்றுக்கு மாறுவதாக உத்தேசம்)

விளையாட்டு
சாம்பியன் கோப்பை 20-20 போட்டிகள் முடிவுக்கு வந்திருக்கின்றன. அனைவரும் எதிர்பார்த்த அவுஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் அணியும், யாருமே எதிர்பார்க்காத ஆனால் போட்டிகள் நடந்துகொண்டிருந்த காலத்தில் எல்லோரும் விரும்பிய ட்ரினிடாட் & ரொபாகோ அணியும் இறுதிப்போட்டியில் மோதிக்கொண்டன. இரு அணிகளும் முன்னைய சுற்றொன்றில் சந்தித்தபோது 18 பந்துகளில் 54 ஓட்டங்களைக் கைரோன் போலார்ட் அடிக்க கிட்டத்தட்ட நியூசவூத்வேல்ஸ் அணியின் கையிலிருந்த வெற்றியை பிடுங்கியது ட்ரினிடாட் & ரொபாகோ. ஆனால் இறுதியாட்டத்தில் நியூசவுத்வேல்ஸ் அணியின் பலம்வாய்ந்த பந்து வீச்சு மற்றும் அவுஸ்திரேலியர்களுக்கேயுரிய போராட்ட குணத்தை அவர்களால் மீறமுடியவில்லை.

83 ஓட்டங்களுக்கு 6 விக்கெற்றுகளை இழந்து தடுமாறிய நியூசவுத்வேல்ஸ் அணியை தனது 48 ஓட்டங்களால் 159 ஓட்டங்களுக்கு உயர்த்திய ப்ரெட் லீ, அருமையாகப் பந்தும் வீச, 41 ஓட்டங்களால் வென்று முதலாவது சாம்பியன் லீக் 20-20 கிண்ணத்தை நியூசவுத்வேல்ஸ் அணி வென்றிருக்கிறது. உண்மையில் கடினமான ஆடுகளங்களில் எல்லாம் ஆடி, அற்புதமாக இந்தத் தொடரில் தம்முடைய பலத்தை நியூசவுத்வேல்ஸ் காட்டியபோதும், கரீபியன் தீவு மக்களுக்கேயுரிய கொண்டாட்டமான கிரிக்கெட் ஆடிய ட்ரினிடாட் & ரொபாகோ அணியே ரசிகர்கள் மனதை வென்ற அணியாகும்.

சினிமா

இளையராஜாவின் பழசிராஜா பாடல்கள் தமிழிலும் வெளிவந்திருக்கிறன. இதுவரை கேட்காத இசை என்று சொல்லாவிட்டாலும் பெரும்பாலான படங்களில் குத்துப்பாடல்களும், R&B ஐ மையமாக வைத்து உருவாக்கப்படும் பாடல்களுமாகப் போய்க்கொண்டிருக்கும் நிலையில் இளையராஜாவின் ஆண்டாண்டு காலமாகக் கேட்டுவரும் இசை இன்னும் அலுத்துப்போகாமல் இருப்பது அதிசயமே. அதிலும் ‘ஆதிமுதல் காலம்' என்கிற பாடல் ஜேசுதாஸ் குரலில் மயக்குகிறது. 'அம்பும் கொம்பும்' என்ற ஒரு பாடல் (மலை ஜாதிப்பாடல் என்று நினைக்கிறேன்) வித்தியாசமாக இருக்கிறது. இதுவரை காணாத இசை என்றெல்லாம் புகழமுடியாது, ஆனால் ராஜா இன்னும் சோடை போகவில்லை என்றுமட்டும் சொல்லலாம்.

என்னாது???
சமீபத்தில் நான் படித்த கல்லூரியின் இணையத்தளத்தில் பகுதிநேரப் படிப்பு பற்றிய பகுதியை மேய்ந்துகொண்டிருந்தபோது கண்ணில் தட்டுப்பட்ட ஒரு பாடத்தின் பெயர் என்ன தெரியுமா? Bollywood Dance. இந்த நடனம் இந்திய நாட்டுப்புற மற்றும் இன்னபிற நடனங்களின் கலவையாம். இந்தியாவில் வெளியாகும் புதிய படங்களின் பாடல்களுக்கான நடனங்களை உடலுக்கும் உறுதி சேர்க்கும் வண்ணம் சொல்லித்தருகிறார்களாம். வெறும் $85 கட்டி ஒன்றரை மாதம் சந்தோசமாகப் ஆடிப்பழகுங்கள், புதிய தொடர்புகளை ஏற்படுத்துங்கள் என்று அழைக்கிறார்கள். ஆதாரம் இங்கே.

5 comments:

benza said...

[[[நானும் விஸ்டா பாவனையாளன்தான். ஆனால் விண்டோஸ்-7 க்கு மாறப்போவதில்லை. சில தொழிநுட்ப சிக்கல்களை நிவர்த்தி செய்து திறந்த மூல இயங்குதளம் ஒன்றுக்கு மாறுவதாக உத்தேசம்)]]]
=================================
Try Fire Fox browser of Mozilla.
ரசித்தேன் --- தொடருங்கள். நெருங்கிப் பழக விருப்பம். 72 வயதினனானவன் ஈமெயில் விரும்புவேன்.
நன்றி.

புலவன் புலிகேசி said...

நல்லா இருக்குதுங்கோ.....

Unknown said...

நன்றி benza... விரைவில் மெயிலுகிறேன்..

நன்றி புலிகேசி

Rajan said...

That palasiraja song is sung by Mathubalakrishnan.... not KJJ...

Unknown said...

ராஜன்...
ஜேசுதாஸ் போல் குரல் இருப்பதால் ஜேசுதாஸ் பாடிய பாடலை சிம்பிளாக மதுபாலகிருஷ்ணனுக்கு கொடுத்துவிட முடியாது...அந்தப் பாடல் ஜேசுதாசும் ஸ்ரீகுமாரும் பாடிய பாடல்...கொஞ்சம் உற்றுக்கேட்டால் ஜேசுதாசின் மேதமை பாடல் முழுக்க விரவியிருக்கும்