Friday 30 October 2009

நான் பார்க்கும் உலகம்: ஒக்ரோபர் 25-ஒக்ரோபர் 31 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

அரசியல்-பிறந்தகம்
இலங்கை அரசு மீது சுமத்தப்பட்டிருக்கும் போர்க்குற்றங்களுக்கு உறுதிமொழிகளை விடுத்து செயல்வடிவிலான நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக்கொண்டிருக்கிறது. மனித உரிமை மற்றும் ஊடக அடக்குமுறை பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை காத்திரமான நடவடிக்கைகளை எடுத்தே பதிலளிக்க வேண்டுமென்றும் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் நிறைவேற்றிய தீர்மானங்கள் இலங்கையைக் கடுமையாகக் கண்டிக்கும் போக்கில் அமைந்திருப்பதாயும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிராந்தியத்துக்கான பிரதிநிதிகளின் தலைவர் ஜீன் லம்பேர்ட் தெரிவித்திருக்கிறார். அம்மணிக்கு இந்த அறிக்கையில் இருக்கக்கூடிய முரண்நகை தெரியவில்லைப் போலும். இப்படியாக அறிக்கைகளை மட்டும்விடாமல் நீங்களும் செயலில் இறங்கியிருந்தால் முக்கால்வாசிப் பிரச்சினைகளுக்கு எப்போதோ தீர்வுகாணப்பட்டிருக்கும். (காகம் அண்டங்காகத்தைப் பார்த்து சீ... நீ அட்டைக் கறுப்பு என்றதாம்)

இதேவேளை இலங்கை அழிவுப்பாதையில் போய்க்கொண்டிருப்பதாகவும் அதைத் தான் மற்றியமைக்கப் போவதாகவும் அறிக்கை வெளியிட்டு தன்னுடைய அரசியல்க் கனவை அம்பலமாக்கியிருக்கிறார் முன்னாள் முப்படைகளின் தளபதி சரத் பொன்சேக. ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிராக இவரைத் தேர்தல் களத்தில் முன்னிறுத்த எதிர்க்கட்சிகள் பலத்த முஸ்தீபுகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக வரும் செய்திகளை இவரது அறிக்கை இன்னும் பலமாக்கியிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் இவர் ரகசியமாகச் சந்தித்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. என்ன, இந்தத் துணிகரமான அறிக்கையை பொன்சேக எங்கு வைத்து வெளியிட்டிருக்கிறார் தெரியுமா? அமெரிக்கா வோஷிங்டன் நகரில் வைத்து. (என்னே ஜனநாயகத்தின் மகிமை!)

அரசியல்-புகுந்தகம்

ரொரொன்ரோ போக்குவரத்துச் சபை (Toronto Transit Commission) ஒரு மாதத்துக்கு முன் ஏகமனதாக அங்கீகரித்த $548 மில்லியன் மதிப்புள்ள, வருகின்ற ஐந்து தொடக்கம் பத்து ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுவதற்குத் திட்டமிட்டிருந்த பல வேலைத்திட்டங்கள் கிடப்பில் போடப்படப்போகின்றன. ரொரொன்ரோ மாநகரசபை கொடுத்த அழுத்தம் காரணமாகவே இந்த வேலைத்திட்டங்கள் கிடப்பில் போடப்படுகின்றன. நகரின் எல்லா துறைசார் அலுவலகங்கள் மற்றும் துணை நிறுவனங்களினதும் செய்பணிச் செலவுகளை 5% ஆல் குறைக்கும்படி நகரசபை அறிவுறுத்தியிருப்பதன் ஒரு அங்கமாகவே போக்குவரத்துச் சபை சம்பந்தமான இந்த நடவடிக்கையையும் பார்க்கக்கூடியதாய் இருக்கிறது. போக்குவரத்துச் சபையின் இந்தத் திட்டப்பணிகளில் சில நிலையங்களை மாற்றியமைத்தல், வங்கி, கடன் அட்டைகளைப் பிரயோகித்து பயணச்சிட்டை பெறும் வசதிகளை உருவாக்கல், கழிவறைகளைச் சீர்திருத்தல், உயர்த்திகளை நிறுவுதல், மேலதிக விரைவுப் போக்குவரத்துப் பாதைகளை உருவாக்கல் போன்ற சில விடயங்களும் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசியல்-உலகம்
பாகிஸ்தான் பெஷாவரில் நடந்த குண்டுவெடிப்பொன்றில் 90க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியிருக்கிறார்கள். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கிற இந்த நேரத்தில் மேற்படி குண்டுவெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. பீபால் மண்டி என்ற இடத்தில் நடந்த இந்தக் குண்டுவெடிப்பில் சாலையில் இருபுறமும் இருந்த கடைகள் நொறுங்கிவிழ, அவற்றிடையே அப்பாவி மக்களின் சடலங்களும் விழுந்தன. தலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு அமெரிக்க ஆதரவுடன் எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிரான தலிபான்களின் பதிலடியாகக் கருதக்கூடிய இதுமாதிரியான தாக்குதல்களில் 150க்கு மேற்பட்ட பொதுமக்கள் இறந்திருக்கிறார்கள். 'பிள்ளையைக் கிள்ளித் தொட்டிலை ஆட்டும்' அமெரிக்கா ஹிலாரி மூலமாக கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது. ‘முஸ்லிம்களை' அழிக்க அவர்களும், 'காஃபிர்களை' அழிக்க இவர்களும் என்று இரு பகுதியும் ஆடும் ஆட்டம்... ஒரேயடியாக உலகம் அழிந்துபோய்விட்டால் பரவாயில்லை.



இப்படியாக உள்நாட்டில் புற்றுநோய் இருக்க ‘கிரிக்கெட் வீரர்கள் லஞ்சம் வாங்கினார்களா இல்லையா?' என்று மும்முரமாக ஆராய்ந்து வருகிறார்கள் பாகிஸ்தான் அரசியல்வாதிகள். அதுவும் காம்ரன் அக்மால் விளையாடிய ஒரு shot தவறான உத்தியுடன் ஆடப்பட்டது என்று சொல்லி அதை விசாரிக்க ஒரு குழுவை அமைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு சிந்திக்கும் தன்மை என்று ஏதாவது இருக்கிறதா?

வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்

இந்தவாரம் பொருளாதார ரீதியில் ஒரு முக்கியமான வாரம். Wall Street Crash எனப்படும் வட அமெரிக்காவின் பாரிய பொருளாதாரச் சரிவு மற்றும் அதன் பின்னான பொருளாதார நெருக்கடி மற்றும் பொது மக்களின் மனச்சோர்வு நடந்த காலகட்டத்தின் மிக முக்கியமான வாரம் இது. அதுவும் ஒக்ரோபர்-24 (கறுத்த வியாழன்), ஒக்ரோபர்-25 (கறுத்த வெள்ளி), ஒக்ரோபர்-28 (கறுத்த திங்கள்), ஒக்ரோபர்-29 (கறுத்த செவ்வாய்) ஆகிய நாட்கள் வட அமெரிக்கப் பொருளாதாரத்தில் மறக்கமுடியாத நாட்கள். 1920 களில் கடனுக்கு பங்குகள் வாங்கிக் குவித்து, பங்குவர்த்தகம் கட்டுக்கடங்காமல் வளர்ந்து, பின்னர் மொத்தமாகச் சரிந்து பங்குகளை விற்கவும், அவற்றை வாங்கவெனப் பட்ட கடனை அடைக்கவும் முடியாமல் பல மக்கள் பெருத்த மனச்சோர்வுக்கு உள்ளாகிய காலகட்டம் இதுதான் (பங்குகளின் போக்கு பற்றி டோ-ஜோன்ஸின் வரைபடத்தைக் கீழே). இந்தக் காலகட்டத்தைக் கடந்துவந்த மக்கள் மற்றும் Baby Boomers எனப்படும் அவர்களின் பிள்ளைகள் இதன் பின்னர் சேமிப்புப் பழக்கம் மிக உள்ளவர்களாக வாழ்ந்தார்கள் என்பதும், அவர்களிடம் பணம் ‘காசாக' புரண்டது, புரள்கிறது என்பதும் வரலாறு. (தனியே ஒரு பதிவே எழுதலாம்).

விளையாட்டு
இந்திய-அவுஸ்திரேலியத் தொடர் ஆரம்பமாகி விறுவிறுப்பாகப் போய்க்கொண்டு இருக்கிறது. மூன்றாவது போட்டி 31/10/2009 டெல்லியில் நடக்கிறது. முதல் போட்டியில் ஹர்பஜன் மற்றும் பிரவீன்குமாரின் அதிரடியால் போராடி 4 ஓட்டங்களால் தோற்ற இந்தியா இரண்டாவதுபோட்டியில் 99 ஓட்டங்களால் பாரிய வெற்றி பெற்றது. அதுவும் தோனியின் அதிரடியில் 354 ஓட்டங்களைக் குவித்து அவுஸ்திரேலியர்களைத் துவைத்து எடுத்திருக்கிறார்கள். தோனி திரும்பவும் ஒரு நாள் போட்டிகளில் தான் ஒரு ‘கில்லி' என்பதை நிரூபித்திருக்கிறார். இன்னும் ஐந்து போட்டிகள் இருக்கிறது. இதே ஆட்டம் தோனி, கம்பீர் ரெய்னா போன்றவர்கள் ஆட, தடுமாறும் சச்சினும் அடித்தாட ஆரம்பித்தால் இந்தியாவுக்கு வெற்றி நிச்சயம். ஆனால், பொண்டிங் ஏதாவது பதிலடி வைத்திருப்பார் என்பதுமட்டும் நிச்சயம்.

அதேவேளை முன்னைநாள் நடுவர் டேவிட் ஷெப்பேர்ட் காலமாகியிருக்கிறார். Thankless Job என்று வர்ணிக்கப்படும் நடுவர்கள் வேலையை செம்மையாகவும் கலகலப்பாகவும் செய்த ஷெப்பேர்ட் பற்றிய எனது பதிவு இங்கே.

சினிமா-பொழுதுபோக்கு

சமீபத்தில் வெளிவந்த பாடல்கள் எல்லாமே கேட்கும் வாய்ப்பு கிடைப்பது அரிதாக இருக்கிறது. ஆதவன், வேட்டைக்காரன் போன்ற படப்பாடல்கள் பெருத்த ஆர்வாரத்துடன் வெளியிடப்பட்டதால் உடனுக்குடன் தரவிறக்கிக் கேட்டேன். மற்றபடி பேராண்மை பாடல்கள நேற்றுத்தான் கேட்டேன். ரேனிகுண்டாவிலும் ஒரு பாடல் பிடித்திருந்தது. சமீபத்தில் வந்த பாடல்கள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் கவர்ந்தாலும், மனதில் சட்டென்று ஒட்டவில்லை. (பழசி ராஜா இதில் சேர்த்தியில்லை). முக்கியமாக ‘கண்டேன் காதலை' படத்தில் திப்பு, பென்னி தயாளின் குரலைப் பின்னுக்குத் தள்ளி ‘ஒரு நாள் இரவில்' பாடலில் இரைச்சலை மட்டுமே தந்திருக்கிறார் வித்யாசாகர். வித்தியாசமான வரிகளைக் கொன்றுவிட்டார். 'ரேனிகுண்டா'வில் வரும் இந்தப் பாடல் காரணமில்லாமல் பிடித்திருக்கிறது. பிறந்து ஐந்து மாதங்களில் இருந்து கனடாவில் வளர்கிற அக்காவின் பையன் காருக்குள் இருக்கும் MP3 Playerல் repeat செய்து கேட்கும் பாடல் இங்கே.

திருந்தவே மாட்டார்களா?

திருவண்ணாமலை, ராமேசுவரம் உட்பட்ட கோவில்களில் விளக்குகள் அணைந்ததாகவும், கொடிமரம் சாய்ந்ததாகவும், கோபுரங்களில் சேதங்கள் ஏற்பட்டதாகவும், இதனால் பெண்களுக்கு ஆபத்து ஏற்படப்போவதாகவும் செய்திகள் பரவியிருக்கின்றன. இது என்ன வகையான ‘லொஜிக்' என்பது எனக்குப் புரியவில்லை. அவை வதந்திகள் என ஆலய அறங்காவலர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். எனக்கென்னவோ நீண்டகாலம் வருமானம் இல்லாமல் இருக்கக்கூடிய ஒரு ஜோதிடசிகாமணியின் சந்தைப்படுத்தல் தந்திரமாகவே இது தெரிகிறது. அவர்கள் வீட்டு வாசல்களில் மந்தைக் கூட்டம் நிச்சயம் பரிகாரங்களுக்காக ஓடோடிப் போய் நின்றுகொண்டிருக்கும். விளக்கு அணைவதிலும், சரியாகப் பராமரிக்கப்படாத கட்டிடங்கள் உடைவதிலும் அப்படி என்ன மாய மந்திரம் இருக்கப்போகிறது என்று யோசிக்கவே மாட்டார்களா?

3 comments:

thiyaa said...

ஒரு குடைக் கீழே பல தகவல் அருமை

vasu balaji said...

good compilation kiruthigan

Unknown said...

நன்றி தியா
நன்றி பாலா