Monday 24 October 2011

அடேலின் கைக்குட்டை-விமர்சனம் மற்றும் விசனம்

தமிழர் வகைதுறைவள நிலையத்தின் (தேடகம்) 20 ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தேடகம் மற்றும் தவநி கலையாற்றுக் குழு வழங்கிய அரங்கின் குரல் நிகழ்வு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் (22-23/10/2011) அன்று Toronto Yorkwoods Library Theater அரங்கில் நடைபெற்றது. சனிக்கிழமை அமர்வுக்குச் சென்று வசந்தா டானியலின் நெறியாள்கையில் உருவான “உயிர்ப்பு” என்கிற நாட்டிய நாடகத்தையும், பா.அ.ஜயகரனின் நெறியாள்கையில் உருவான “அடேலின் கைக்குட்டை” என்கிற நாடகத்தையும் பார்க்கிற வாய்ப்புக் கிட்டியது.

“அடேலின் கைக்குட்டை”-விமர்சனம்

“அடேலின் கைக்குட்டை” என்கிற பெயரில் ஜூன் - ஓகஸ்ற் 2009 காலம் இதழிம் பா.அ.ஜயகரன் எழுதிய சிறுகதையின் நாடகவடிவத்தை பா.அ.ஜயகரன் மேடையேற்றியிருக்கிறார். மிகவும் முக்கியமான ஒரு காலகட்டத்தில் வந்த அந்தக் கதை போரின்போது பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறை பற்றியதாக அமைந்திருந்ததும், இலங்கையில் நடந்த கொடூரமான யுத்தத்தைத் தொடர்ந்த காலங்களில் எழுதப்பட்டதும் இக்கதையின் முக்கியத்துவத்தை அதிகரித்திருந்தன என்றே கூறலாம். விமர்சகர்/நண்பர் அருண்மொழிவர்மன் மூலம் கிடைத்த அறிமுகத்தூடாக காலம் இதழில் இக்கதையை ஏலவே வாசிக்கிற வாய்ப்பும் கிட்டியிருந்தது. கதையைக் கிட்டத்தட்ட அப்படியே அரங்கேற்றியிருந்தார்கள், (மூலச் சிறுகதையில் அடேலோடு சேர்ந்து ஆறு பெண்கள் ஆறு கைக்குட்டைகள், நாடகவடிவத்தில் அடேலதும், எலனோரதும் பெயர் பொறித்த ஒரே கைக்குட்டை) . நாடக அரங்கில் தரப்பட்ட கையேடு ஒன்றில் “அடேலின் கைக்குட்டை”க்கான அறிமுகம் பின்வருமாறு அமைந்திருந்தது:

போர்களின் போது பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறையை இவ் நாடகம் வெளிக்கொணர்கிறது. இதன் கதை மையம் 1940 களின் ஜாவா, இந்தோனீசியா. 1941-42 காலப்பகுதியில் ஜப்பான் டச்சுக்காரர்களிடமிருந்து ஜாவாவைக் கைப்பற்றுகிறது. இதன் பிற்பாடு ஜப்பானியர்களால் டச்சு, ஜாவா பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறையை இவ் நாடகம் பேசுகிறது.

தற்போது கனடாவில் வசிக்கும் வயோதிபப் பெண் அடேலின் நினைவின் கோர்வையாக கதை சொல்லப்படுகின்றது. அடேலும் ஏனைய பெண்களும் பாலியல் தேவைகளுக்காய் பலாத்காரமாக ஜப்பானிய முகாம்களுக்கு கொண்டு வரப்படுகிறார்கள். இவர்களைப் பராமரிக்க டச்சு-ஜாவா கலப்புப் பெண்ணான எலனோர் கொண்டுவரப்படுகிறாள். டச்சுக்காரரின் பாலியல் பலாத்காரத்தால் பரம்பரை பரம்பரையாக பாலியல் தொழில் செய்யும் பின்னணி கொண்டவள் எலனோர். ஆண்களின் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இவ்விரு பெண்களின் மனப்போராட்டமாக இவ் நாடகம் நகர்கிறது.

பாதிக்கப்பட்ட இப்பெண்கள் நீதி கேட்டு இன்றும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஜப்பானிய அரசோ இக்கொடுமைகளை மறைத்தும், மறுத்தும் வருகிறது. போர்களின் போது பெண்களின்மீது இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி வேண்டி ஒலிக்கும் குரல்களில் ஒன்றாய் இவ் நாடகமும் ஓங்கி நிற்கும்

பா.அ.ஜயகரனின் முத்திரை நன்றாகவே பதிந்திருந்த இந்த நாடகத்தில் பங்குகொண்ட நடிகர்கள் சிறப்பாகத் தங்கள் பங்களிப்புகளை ஆற்றியிருந்தனர். ரொறன்ரோ நகரின் நவீன நாடகங்களின் அறிந்த முகங்களான சத்யா தில்லைநாதன், தர்ஷன் சிவகுருநாதன் போன்றவர்களின் பங்களிப்பு இருந்த நாடகத்தில் நடிகர்களின் பக்கம் பலமாகவே இருக்கும் என்பது ஐயமில்லை. அடேலாக நடித்த சத்யா தில்லைநாதனும் எலனோராக நடித்த அதீதாவும்தான் நாடகத்தின் தூண்கள். நாடகத்தில் அதிக காட்சிகளில் தோன்றிய ஆண் நடிகர்களின் முக்கிய வேலை வன்புணர்வதாகவே இருந்தபோதிலும் கிடைத்த சந்தர்ப்பங்களில் தேவையானளவு நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள். டச்சுப் பாதிரியாக நடித்த முத்துகிருஷ்ணனின் பங்கும் நிறைவாகவே இருந்தது. இருந்தபோதும் சத்யா தில்லைநாதன் மற்றும் அதீதா ஆகியவர்களின் முன்னால் மற்றவர்களின் நடிப்பு ‘சூரியனை விளக்கடித்துத் தேடுவது’ போன்றிருந்தது. நாடகத்தின் மிகப்பெரிய பலம் “போர்ச்சூழல்களிலெல்லாம் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையைக் கேள்வியெழுப்பல்” என்கிற மைய நோக்கமே.

நாடகத்தின் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இரண்டு காட்சிகள் இருக்கின்றன. ஒன்று, ‘புதிய பெண்கள்’ வேண்டுமென்பதால் மீண்டும் முகாமுக்கே திருப்பி அனுப்பப்படும் அடேல் (Use and Throw policy) அவர்களின் தேவாலயப் பாதிரியைச் சந்தித்து பாவமன்னிப்புக் கேட்கிறார். பாதிரியும் பாவமன்னிப்பு வழங்குகிறார். பின்னர் அடேல் தான் கன்னியாஸ்திரி ஆவதற்கு பாதிரியிடன் அனுமதி கேட்க, பாதிரி சொல்வார் “நீ கன்னியாஸ்திரி ஆவதில் ஆண்டவருக்கு விருப்பம் இல்லை போலிருக்கிறது” என்று. நிறுவனமயப்படுத்தப்பட்டுவிட்ட மதங்கள் மீதான அருமையான நக்கல் இந்தக் காட்சி. இன்னொரு காட்சியில் எலனோர் நிலத்தைச் சுத்தம் செய்வாள். அவள் சுத்தம் செய்கிற இடங்கள் கொஞ்ச நேரத்துக்கு கறுப்பாக மாறும். இது தற்செயலாக அரங்கின் ஒளி அமைப்பின் காரணமாக ஏற்பட்டதா, அல்லது நெறியாள்கையாளரான பா.அ.ஜயகரன் தெரிந்தே செய்த காட்சியமைப்பா தெரியவில்லை. சுத்தம்-கறுப்பு என்கிற இணை அமைந்த அந்தக் காட்சி நெறியாள்கையாளரால் தெரிந்தே அமைக்கப்பட்டிருக்குமாயின், நெறியாள்கை செய்த ப.அ.ஜயகரன் பாராட்டுக்குரியவரே.

நாடகத்தில் முரண்பாடான சில விடயங்களும் இருந்தன. நாடகத்தில் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களும், வன்முறைக் காட்சிகளும்’ இருப்பதால் சிறுபிள்ளைகளை அரங்கின் கீழேயுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் விடுமாறு கேட்டுக்கொண்டார்கள். அதே போலவே வன்முறைக்காட்சிகள் நிறைய இருந்தன. ‘வேசி’ எனும் சொல் அடிக்கடி கையாளப்பட்டது. ஒரு தம்பதி நாடகத்தின் நடுவே வெளியேறினார்கள். வேறு சிலபேர் முகம் சுழித்தார்கள். பொதுமேடைகளில் இதை சிலர் ஏற்றுக்கொள்வது அவர்களைப் பொறுத்தவரை கடினமே. ஆனால் முக்கிய பிரச்சினை இதுவல்ல. கடுமையான வார்த்தைகள் மற்றும் வன்முறைக்காட்சிகள் நிறைந்த ஒரு நாடகத்தில், குழந்தைகளை அரங்கை விட்டு அப்புறப்படுத்துமாறு வேண்டுகோளோடு ஆரம்பித்த நாடகத்தில், நான்கு குழந்தைகள் நடித்திருந்தார்கள் என்பதுதான் பிரச்சினை. மேலும், அடேலை ஜப்பானிய கேணல் ஒருவர், சிப்பாய் ஒருவர், வைத்தியர் ஒருவர் வன்புணர்வதான காட்சிகள் இருந்தன. திரைமறைவுக்கு அடேலை அவர்கள் இழுத்துச் செல்வதும், அங்கிருந்தான குரல்களின் மூலமாக பார்வையாளருக்கு என்ன நடக்கிறது என்பது சுட்டிக்காட்டப்பட்டிருந்தபோதும் மேற்படி காட்சிகளில் ஒன்றிரண்டைக் குறைத்திருக்கலாம் என்பது நாடகத்தின் பின்னர் தனியாகப் பேசிய நண்பர்கள் சிலரின் அபிப்பிராயமாக இருந்தது.

பா.அ.ஜயகரனின் “அடேலின் கைக்குட்டை”  நாடகத்தின் கருப்பொருள் மிகவும் முக்கியமானது, அதுவும் இன்றைய காலகட்டத்தில். அவ்வகையில் கனேடிய தமிழ் மேடைநாடகச் சூழலில் இந்த நாடகத்துக்கும் ஒரு முக்கிய இடம் இருக்கிறது.

“அடேலின் கைக்குட்டை”-விசனம்

நாடகம் மற்றும் சிறுகதையின் கருப்பொருளில் ஒத்துப்போனாலும், கதைக் களனான ஜாவாத் தீவு மற்றும் ஜப்பானிய-டச்சு யுத்தகாலத்துடன் ஒன்றிப்போக முடியவில்லை. காரணம், நான் பிறந்த நாட்டில் என்னுடைய இனத்தைச் சேர்ந்த பெண்கள் மீது இந்த வன்முறை இன்றைக்கும் பாவிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. முன்பு வன்புணர்வு செய்தார்கள், இன்றைக்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்துமாறு வற்புறுத்துகை செய்கிறார்கள். இப்படியிருக்கையில், ஓரளவாவது கருத்துச் சுதந்திரம் இருக்கிற கனேடியமண்ணில் தனது படைப்புக்களை வெளியில் கொண்டுவரும் ஒவ்வொரு படைப்பாளியும் அங்கீகரிக்கப்பட்ட அடக்குமுறையான அரச வன்முறைக்கு எதிராக உரத்துக் குரலெழுப்பவேண்டும். அதுவும் தனது கொள்கைகள் தொடர்பில் நேர்மையாகச் செயற்படுபவர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாலும், விமர்சகர்களாலும் ஒருங்கே நோக்கப்படுக் ப.அ.ஜயகரன் தான் எழுதிய சிறுகதையை நாடகமாக்கும்போதாவது கதைக் களனை மாற்றியிருக்கலாம் என்பது என்னுடைய அபிப்பிராயம். அல்லது ஆகக்குறைந்தது மண்டபத்தில் தந்த துண்டுபிரசுரத்தில் இற்றைவரை ஜாவாப் பெண்கள் மீதான வன்முறைகளை ஜப்பான் அரசு மறைத்தும் மறுத்தும் வருவதாகச் சொன்ன பா.அ.ஜயகரன், தேடகம், தவநி கலையாற்றுக் குழு இவர்கள் யாருக்கும் அந்தத் துண்டுப்பிரசுரத்திலாவது இலங்கை அரசைக் கண்டிக்கிற எண்ணம் இல்லாமலிருந்தது வருத்தத்துக்குரியது. பக்கத்து வீட்டு நிலவரம் தெரிகிறது, பக்கத்து ஊர் நிலவரம் தெரிகிறது, பக்கத்து நாட்டு நிலவரம் தெரிகிறது, ஏன் பக்கத்துக் கிரகத்து நிலவரம்கூடத் தெரிகிறது. ஆனால், வீட்டு முற்றம் எங்கள் கண்களுக்குத் தெரிவதேயில்லை. சிலவேளை சி.கா. செந்தில்வேல் போன்ற பொய்யுரைஞர்கள் யாராவது ‘புலிகளும் இப்படிப் பாலியல் வதை முகாம்கள் வைத்திருந்தார்கள்’ என்று புழுகியிருந்தால் இந்த நாடகத்தின் களம் இலங்கைத் தீவாக இருந்திருக்குமோ? வேறுபாடுகளை மறவுங்கள் என்று நான் கேட்கவில்லை. பழைய தவறுகளைத் திருத்தவேண்டாம் என்று தடுக்கவில்லை. ஆனால், மாற்றரசியல் என்றால் தனியே புலித்தூற்றல் மட்டுமல்ல, அங்கீகரிக்கப்பட்ட வன்முறையான அரசாங்க வன்முறைகளுக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்டிருக்கிற மக்களின் சார்பாகவும் குரலை உயர்த்தவேண்டிய கடமை எமக்கிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடலாகாது. இது வெறுமே ஒரு நாடக உத்தி, நாம் எம் பெண்களின் துயரையும் சேர்த்தே சொன்னோம் என்கிற கண் துடைப்பெல்லாம் வேண்டாம். இலங்கைத் தீவில் பிறந்த ஒடுக்கப்பட்ட ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு கலைஞனுக்கான அடிப்படை நேர்மையிலிருந்து பா.அ.ஜயகரன் கொஞ்சம் வழுவிவிட்டார் என்றே சொல்லவேண்டும்.

பிற்சேர்க்கை: சி.க.செந்தில்வேலை ‘பொய்யுரைஞர்’ என்று விளித்தது மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் பாவித்த பிழையான சொல்லாடல் என்பதாக நண்பர் ஒருவரின் சுட்டிக்காட்டலின் உணர்கிறேன். அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இணையத்தில் விடுத்த கருத்தைத் திரும்ப வாங்குவதும் மறைப்பதும் இலகு, ஆனால் நேர்மையில்லை என்பதை உணர்ந்திருப்பதால் பதிவில் மாற்றம் செய்யவில்லை

நவம்பர் 30, 2011

Saturday 15 October 2011

எனக்குச் சிவப்பு நிறம் பிடித்திருக்கிறது

உந்தையும் எந்தையும் ஒரு வயிற்றுச் சோதரர்
உன் தாயும் என் தாயும் தோழியர்
நீயும் நானும் விளையாடித்திரிந்த செம்பாட்டுப் புழுதி
என்றைக்கும் புட்டத்தில் ஒட்டியிருக்கிறது
ஐந்து ரூபாய் ‘ஐஸ் பழம்’ ஒன்று இருவர் நாவிலுங்கரைந்திருக்கிறது
முழங்கால் தழும்பினுள்ளே உன் எச்சில் ஒளிந்திருக்கிறது
உனக்குச் சின்னதாய்ப்போன கால்சட்டை ‘சிப்’
தந்த வடு என் சர்க்கரையில் உறுத்திக்கொண்டே இருக்கிறது

தள்ளுவண்டியில் என்னைத் தள்ளிக்கொண்டும்
எனக்குப் போட்டியாக வீரிட்டு அழுதுகொண்டும்
எனக்கு முதலே உனக்கு வந்துவிட்ட பல்லைக் காட்டிக்கொண்டும்
என் கையிலிருந்த பொம்மையைப் பிடுங்கியபடியும்
உன்வீட்டு பொம்மையை எனக்குத் தந்தபடியும்
என் தாயின் மார்பில் முகம் புதைத்துக்கொண்டும்
என்னை முத்தமிட்டுக்கொண்டும்
ஒரு யோகியின் முனைப்புடன் ’படலத்துக்கு’ ‘டிசைன்’ வெட்டிக்கொண்டும்
வெள்ளைச் சட்டையில் பள்ளிக்கூடத்துக்கு வழிநடத்திக்கொண்டும்
சைக்கிள் ‘கரியலில்’ என்னைச் சுமந்துகொண்டும்
என் சைக்கிள் பாரில் இருந்து டபிள்ஸ் போட்டுக்கொண்டும்
உன் பதின்மத்து துணையருகில் வெட்கச் சிரிப்போடும்

என் ஞாபக அடுக்குகளில்

அம்மையாய்
அப்பனாய்
பிள்ளையாய்
சகோதரமாய்
தோழமையாய்
இனிய எதிரியாய்
காதலாய்
குருவாய்
எல்லாமுமாய்
நீ இருக்கிறாய்.

ஆனால் நாயே... உன்னை நான் கொல்லவேண்டும்

ஏனென்றால்,

உனக்கு இளஞ்சிவப்பு நிறம் பிடித்திருக்கிறது