Friday 31 July 2009

பெண்ணும் புலியும் (மிகக் கண்டிப்பாக 18+)

இது கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டுமான பதிவு. மீறி உள்ளே நுழைந்து வாசித்துவிட்டு என்னைத் திட்டி நல்லவன்/நல்லவள் வேஷம் போடக்கூடாது.

ஜூலை மாதக் கடைசி நாளில் இரண்டு அரசியல் பதிவுகள் போட்டு போரடித்து விட்டேன். வந்தியண்ணா கூட என்னாச்சு என்று கேட்டிருந்தார். அவருக்காகவும், அரசியல் பதிவு கண்டு கடுப்பான மற்றைய இனியவர்களுக்கும் கிளு கிளுப்பாக ஒரு பதிவு. இதுவும் சுஜாதா உபயத்தில் நெட்டில் சுட்ட ஒரு கதைதான்.

செப்டம்பர் 11 உலக வர்த்தக மையத்தை பின் லேடன் ஆட்கள் தகர்த்ததுதான் தகர்த்தார்கள், நம்ப ஜார்ஜுக்கு நிம்மதியே போச்சு. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டின்னு சந்தோசமா அமெரிக்க விமானப்படையில் விமானங்களை துடைச்சுக்கிட்டிருந்தவனுக்கு ஆஃப்கானிஸ்தான் போர் முனைக்குப் போகும்படி கட்டளை. இரண்டு பிள்ளை பெத்தபின்னும் உருக்குலையாம, ஒரு இரவுகூட ஜார்ஜை விட்டுவைக்காம விருந்து வைக்கும் அழகு மனைவி ஜில்லைப் பிரிஞ்சு போறதுதான் ஜார்ஜுக்கு கஷ்டமாக இருந்தது. இருந்தாலும், கடமையையும் விடமாட்டாமல் பிரிய மனமில்லாமல் பிரிந்து போர்க்களம் போனால் ஜார்ஜ். ஜில் அவனுக்கு ‘உங்க கைய நம்புங்க, கவலையே இருக்காது'ன்னெல்லாம் அட்வைஸ் பண்ணி அனுப்பினா.

ஓயாத சண்டை. ஒரு ஹெலிகாப்டரைத் தந்து ஓட்டச் சொல்லிவிட்டார்கள். ஓயாமல் பறந்ததால் தனிமையில் இனிமை காணவும் முடியாமல் வாடிப்போய்ட்டான் ஜார்ஜ். வெறுப்பான வெறுப்பில் அவன் ஹெலிகாப்டர் ஓட்டும் போது, தலிபான்காரன் சுட்ட குண்டை கவனிக்காம விட்டுட்டான். அது ஹெலிகாப்டரில் பட்டு, அது விழமுன்னமே பாரசூட்டில குதிச்சுட்டான் நம்மாள். ஆனா துரதிர்ஷ்டம் அவன் இறங்கின இடம் தலிபான்காரனோட ஏரியா. சுத்திவந்து நின்னுக்கிட்டாங்க. நோ எஸ்கேப். ஜார்ஜுக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப்போச்சு. அந்தத் தலிபான்களில் தலைவன் போல் இருந்தவன் ஏதோ சொல்ல ஜார்ஜோட பாக்கெட் எல்லாம் காலி பண்ணி அவனை நிராயுதபாணி ஆக்கினாங்க. என்னது, ட்ரெஸ் இல்லாம பண்ணாங்களா.. யோவ் அது நிர்வாணம். இது நிராயுதபாணி.. அப்டீன்னா எல்லா ஆயுதங்களையும் புடுங்கினாங்கோ. எல்லா ஆயுதமும்னா, எல்லா செயற்கை ஆயுதத்தையும் புடுங்கினாங்கோ.

ஜார்ஜ் கர்த்தரை வேண்டிக் கொண்டான். அப்போ தலிபான்காரன் தூக்கிப்போட்ட அவனோட பர்ஸுக்குள் அவனது மனைவி, குழந்தைகளின் படம் வெளியே எட்டிப்பார்க்க ஜார்ஜ் பிரகாசமானான். ‘ஐயா, எசமானரே! நான் வெறும் கூலி. இதப் பாருங்க. எனக்கு மனைவி, பிள்ளை குட்டிங்கன்னு குடும்பம் வேற இருக்கு. தயவு செய்து என்ன விட்டுடுங்க'ன்னு தலிபான் தலைவனின் காலைப் பிடிச்சுக் கெஞ்ச அவனும் ‘அட, அமெரிக்கனும் அழுவானா!' என்று இரக்கமானான். மெல்ல ஜார்ஜ் கிட்ட வந்து சொன்னான், ‘நண்பா, நான் உன்னை விட்டுடறேன். ஆனா, நான் சொல்ற மூணு விஷயத்தை நீ செய்யணும். அதுக்கு ரெடியா?'. ஜார்ஜ் உடனேயே ரெடின்னான். தலைவன் சொன்னான், 'அதோ பார் வரிசையா மூணு கூடாரங்கள் இருக்குல்ல, அதுக்குள்ள தான் உனக்கு வேலை.
  • முதல் கூடாரத்துக்குள்ள ஒரு டஜன் வோட்கா பாட்டில்கள் இருக்கு. அதை நீ ஒரு மணித்தியாலத்துல காலி பண்ணணும். இது முதல் நிபந்தனை.
  • இரண்டாவது கூடாரத்தில ஒரு புலி இருக்கு. அதுக்கு ஒரே பல்வலி. அதோட கடவாய்ப் பல்லுலதான் பிரச்சினை. அந்தப் பல்லைப் புடுங்கிடணும். இது இரண்டாவது நிபந்தனை.
  • மூணாவது கூடாரத்தில ஒரு பொண்ணு இருக்கா. அவளை நம்ப கூட்டத்தில யாராலையும் திருப்திப்படுத்த முடியல. அவளை நீ திருப்திப் படுத்தணும். இது மூணாவது நிபந்தனை.
இது மூணுக்கும் நீ தயாரா?'ன்னு கேட்டான் தலைவன். ஜார்ஜ் யோசித்தான். 'கடைசிக் கூடாரத்தில கரும்பிருக்கு. கரும்பு தின்னக் கைக்கூலியா வோட்கா வேற முதல் கூடாரத்தில இருக்கு. வோட்கா அடிச்ச புலி பத்திக் கிலி வருமா?' ஆக 'நான் ரெடி' என்றான் ஜார்ஜ்.

ஜார்ஜ் அமெரிக்கனல்லவா. எஸ். ஏ. சி பையனுக்கு மொக்கை போடச் சொல்லித் தரணுமா? அரை மணித்தியாலத்தில் வோட்காவைக் காலி செய்துவிட்டு ஒரு வெற்றிச் சிரிபோடு புலிக் கூடாரத்துக்குள் நுழைந்தான். கச முசா என்று சத்தங்கள் கேட்டன. 'உனக்கு நள்ளது தானே பண்ழேன்.. கொஞ்ழம் அஷங்காம இழேன் புழி' என்று புலிக்கு அட்வைஸ் வேறு. ஒரு முக்கால் மணிநேரத்தின் பின் உடம்பெல்லாம் புலியின் நகக் கீறல்களோடு, மறுபடியு ஒரு வெற்றிச் சிரிப்போடு வெளியே வந்த கொடும் பாவி கேட்டானே ஒரு கேள்வி, தலிபான்காரன் மொத்தமும் காலி. ‘ஆமா, அந்த பழ் வழிப் பொண்ணு எங்கேழா இழுக்கு?'

பி.கு: அனைவருக்கும் இனிய ஆக்ஸ்ட் மாதப்பிறப்பு வாழ்த்துக்கள். இப்ப சந்தோசம்தானே வந்தியத்தேவன்?

ஏனிந்த வேகம்?

தமிழக அரசியலில் கொஞ்சம் சூடான வாரம் இது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் செல்வி. ஜெயலலிதா தன் கட்சியிலிருந்து நடிகர் எஸ்.வி. சேகர், மற்றும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரைத் தூக்கியிருக்கிறார். எஸ்.வி. சேகர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைய எண்ணியிருக்கிறார். அனிதா ராதாகிருஷ்ணன் இணைந்தே விட்டார். இவர்கள் நீக்கப்பட்டதுக்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் செல்வி. ஜெயலலிதா கொஞ்சம் அவசரப்படுகிறாரோ என்று தோன்றுகிறது. தமிழ்நாட்டு அரசியல் உண்மையிலேயே ஒரு அற்புதமான Entertainment என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார்கள் இந்த கட்சி நீக்கம், கட்சித் தாவலில் சம்பந்தப்பட்ட இரு பகுதியினரும்.

ஜெயலலிதா தேர்தல் தவிர்ந்த மற்ற நேரங்களில் எங்கே இருக்கிறார், என்ன செய்கிறார் போன்ற தகவல்கள் கூட யாருக்கும் தெரிவதில்லை. தன் இருப்பை இப்படியான அதிரடி நடவடிக்கைகள் மூலமாகவோ, அல்லது கருணாநிதியைத் திட்டி அறிக்கைவிட்டோ காட்டிக்கொள்வது அவரது சமீபத்திய பாணி. அதிலும் அ.இ.அ.தி.மு.க. வில் இரண்டாம் நிலைத் தலைவர்களே இல்லை. தனித்த செல்வாக்குள்ள தலைவர்கள் கிட்டத்தட்ட இல்லை. அப்படி இரண்டாம் நிலைத் தலைவர்களாக அடையாளம் காணப்படுபவர்கள் கூட அம்மாவை மீறி ஏதும் செய்யமுடியாது என்ற நிலையில், அ.இ.அ.தி.மு.க. வின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. அதுவும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் சிம்ரன், செந்தில் போன்ற சில்லறைகளை பிரசாரக்களத்தில் அனுமதித்ததை விட ஜெயா ஒரு முட்டாள்தனம் செய்திருக்கமுடியாது. கிட்டத்தட்ட தமிழக வாக்காளப் பெருமக்களை மட்டம்தட்டும் செயல் அது.

ஜெயாவின் இந்த மேம்போக்கான, Publicity Stunt நிறைந்த அரசியல் முடிவுகள் தி.மு.க.வைப் பலப்படுத்துவதாயே அமைந்துள்ளது. ஒரேயொரு பலமான கட்சி இருந்தால் ஓரளவுக்காவது அரசாங்கத்தில் ஒரு நிலையான தன்மை இருக்கும். ஆனால், தி.மு.க. பலம் பெறுவது, யாருக்குமே நல்லதல்ல. ஒரேயொரு காரணம் அவர்களின் சமீபத்திய அரசியல் அணுகுமுறை. 2006தேர்தலுக்கு முன் சில நடிகர்களுக்கு கலைமாமணி கொடுத்து ஜெயலலிதா தன்பக்கம் இழுத்தது போல், கலைஞர் சிம்பு, ஜெயம் ரவி, ஜீவா என்று ஆரம்பித்து இன்றைக்கு நயன்தாராவுக்கு கலைமாமணி கொடுக்கும் அளவுக்கு வந்து நிற்கிறார். பிரியாணி கொடுத்து ஓட்டுப் போட வைக்கிறார். இலவச பண்டங்கள் கொடுத்து ஓட்டு வாங்குகிறார். பணம் கொடுத்து ஓட்டு வாங்குகிறார். இதெல்லாம் ஆரோக்கியமான அரசியல் அல்லவே.

தி.மு.க.வில் கூட கலைஞர் குடும்பத்தை மீறிய தலைவர்கள் இல்லை. அதுவும் ‘அஞ்சாநெஞ்சன்' நிஜமாயே ஒரு ரவுடிபோல் செயற்படுகிறார். கனிமொழி கொஞ்சக் கவிதாயினிகளை அமைச்சர்களாக்குவதையே சிரமேற் கொண்டுள்ளார். துணைமுதல்வர் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. இந்த வயதில் கலைஞரால் எப்படி நிர்வாகம் செய்ய முடியும்? எனபது புரியாத புதிர். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த பின் தன் கொள்கைகளை எல்லாம் துறந்துவிட்டார். ராமதாஸ் யார் என்ன செய்தாலும் அதை எதிர்ப்பது என்ற கொள்கையோடு மட்டும் இருக்கிறார். வைகோ ஈழ அரசியலில் காட்டிய நேர்மையால் தன் அரசியல் வாழ்வைத் தொலைத்துவிட்டார். மற்றவர்கள் அரசியலில் இருக்கிறார்கள், அவ்வளவுதான். தமிழக அரசியலில் Seriousness குறைந்து Comedy அதிகமாகிவிட்டது.

இவர்கள் எல்லோரையும் பார்க்கும்போது எனக்கு மனதில் படும் கேள்விகள் இவைதான்.
  • ஒரு கட்சியில் இருக்கும்போது மற்றக் கட்சியைத் தாறுமாறாகத் தாக்கிப் பேசிவிட்டு, பின்னர் கட்சிதாவும்போது கொஞ்சம்கூட நீங்களெல்லாம் வெட்கப்படுவதில்லையா?
  • ஜெயலலிதாவையோ, கருணாநிதி குடும்பத்தையோ எதிர்த்து, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி அரசியலே செய்ய முடியாதா? எல்லோரும் ஒன்று சேர்ந்து அணிதிரண்டால் அது முடியாதா?
  • தமிழ் அகராதிகளில் கொள்கை என்ற சொல் இன்னமும் இருக்கிறதா?
  • பத்திரிகைகளிலும் இணையங்களிலும் இவ்வளவு திட்டு வாங்கியும் சந்தோஷமாக சிரித்துக்கொண்டு பேட்டிதரவும், வாக்கு சேகரிக்கவும் எப்படி உங்களால் முடிகிறது? என்னுடன் யாராவது கடுமையாகப் பேசினால் அவர்களுடன் முகம் கொடுத்துப் பேசவே ரொம்பத் தயங்குகிறேன்.
  • ஒரு கட்சிக்கான, ஒரு வேட்பாளருக்கன தேர்தல் செலவீனங்களை கட்டுப்படுத்த சட்டங்கள் ஏதும் இல்லையா? வரவுகளும்-செலவுகளும் தேர்தல் ஆணையத்தால் Audit செய்யப்படுவதில்லையா?
அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஒரு கேள்வி: ஜெயா உங்களை நீக்கியது அவசர கதி முடிவென்றால், இவ்வளவு காலமும் யாரை எதிர்த்து அரசியல் செய்தீர்களோ அவர்களின் கூடாரத்தில் புகுந்துள்ள உங்கள் முடிவை என்னென்று சொல்வது?

நியாயமான தேர்தல் என்றால் என்ன?

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும், வவுனியா மாநகர சபைக்குமான தேர்தல் வருகிற மாதம் 8ம் திகதி நடைபெறப் போகிறது. கடைசியாக யாழ்ப்பணத்தில் 1998லும் வவுனியாவில் 1994லும் உள்ளூராட்சித் தேர்தலகள் நடைபெற்றன. மறுபடியும் இப்போது ஒரு ரத்த ஆறு தந்த குளிர்ச்சியில் நடக்கப்போகும் இந்தத் தேர்தல் நியாயமாக ஜனநாயக முறைப்படி நடக்குமா என்பது சந்தேகமே. இது பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கேள்வி எழுப்பியிருந்தார்கள். வேறு பிரதேச அரசாங்க அதிகாரிகளைத் தேர்தல் அதிகாரிகளாக நியமிப்பது பற்றியும் கண்டனம் எழுப்பியிருக்கிறார்கள். நான் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த போது, எனக்கும் உலகத்தைப் பற்றிய புரிந்துணர்வு வந்த காலத்தில், எம் மக்கள் சந்தித்த இரண்டு பாராளுமன்றத் தேர்தல்கள், ஒரு ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றில் வாக்களிப்பு நிகழ்த்தப்பட்ட விதத்துடன் ஒப்பிட்டு, இந்தக் குற்றச்சாட்டுக்களை ஆராயலாம்.

இந்த விஷயத்தைப் பற்றி நேர்மையாகச் சொல்வதானால், அந்தத் தேர்தல்களில் எள்ளளவும் நேர்மை இருக்கவில்லை என்பதே உண்மை. 'நான் 15 வோட் போட்டனான்', 'அட போடா, நான் 40க்கு மேல போட்டனான்' என்ற ரீதியிலான உரையாடல்கள் நண்பர்கள் வட்டத்தில் சகஜமாக நிகழ்ந்தது. ஒரு பாடசாலையில் வாக்களிப்பு நிலையம் இருந்தால் அதிலிருந்து கொஞ்ச தூரத்தில் தேசிப்புளியுடன் கையிலிடப்பட்ட அடையாள மையை அழிக்க நண்பர்கள் காத்திருப்பார்கள். ஒரு வாக்களிப்பு நிலையத்தில் இன்னொருவர் பேரில் ஒருவன் ஓட்டுப் போடப் போனபோது, அடையாளத்தை உறுதிப்படுத்தும் வேலையைச் செய்து கொண்டிருந்தது ஆசிரியையான அவனது தாய். மகனைக் காட்டிக் கொடுத்தால் போலீஸ்சிடம் சிக்கி நாராகிப் போய்விடுவான் என்பதால் அந்தத் தாய் அவனது திருட்டுத் தனத்தை அங்கீகரித்தார் என்பது உண்மை.

தேர்தல் நாளில் ஓடியோடி ஓட்டுப் போட்டவர்களில் பலர் நல்ல வேளை காசுக்காகச் செய்யவில்லை அந்த ஈனச் செயலை. செய்ததுக்குரிய காரணம் நியாயமாக இருந்தாலும் எனக்கு அதில் உடன்பாடில்லை. அப்பாவோடு போய் என் வாக்கை மட்டும் போடுவது மட்டுமே சரியென்று எனக்குப் பட்டது. ஆனால் எனக்கும், என்னொத்த வயதினருக்கும் வாக்களிக்கும் உரிமைக்கான சான்றிதழ் அப்போது கிடைத்திருக்கவில்லை. இருந்தும், என் தோழர்கள் பலர் வாக்களித்தார்கள். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதும் வாக்களிப்பு நிலையங்களிற்கு வரும் எல்லாப் பாதைகளிலும் அறிவுறுத்தப்பட்டது. அப்படி ஆதரவளிக்கப்பட்ட கட்சி பெரும் வெற்றி பெற்றது. ஜனாதிபதித் தேர்தல் ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டதால் மகிந்த ராஜபக்சே அதிபரானது அனைவரும் அறிந்ததே. (ஆனால், ரணில் செய்த துரோகத்துக்கு அந்தப் புறக்கணிப்பு தேவையான ஒன்றென்பது என் கருத்து).

ஆனால், இப்போது நடக்கவிருக்கிற மாநகராட்சித் தேர்தல் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கும் கருத்துகள் எந்த வகையில் நேர்மையானவை எனபது எனக்குத் தெரியவில்லை. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாராளுமன்றம் நுழைந்த பெருமக்கள் அனைவரும் ஒன்றை ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள். நேர்மையான ஒரு தேர்தல் மூலம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஆகும் யோக்கியதை உங்கள் யாருக்கும் கிடையாது. ஒரு மாணவனாக இருந்த போது, கசிப்புக்கடைகளை மூட முயன்று, 'முதலில் நீ பியர் அடிக்கிற கடையை மூடு அதுக்குப் பிறகு கசிப்புக் காய்ச்சிறதை நிப்பாட்டிறதப் பற்றி கதைப்பம்' என்று ஒரு கசிப்பு முதலாளி அடித்துக் கலைக்க, பியரை விட முடியாமல் கொள்கையை விட்ட அற்புதமான ஒருவர் எங்களின் பிரதிநிதி. இவரெல்லாம் நேர்மையான தேர்தலில் ஜெயிப்பாராம். என்ன ஒரு தன் நம்பிக்கை பாருங்கள் (முக்கால்வாசிப் பேருக்கு இவர் தேர்தலில் நின்ற போது இவரை யாரென்றே தெரியாது).

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் அல்ல. நீங்கள் எங்கள் பிரதிநிதிகளின் அரசியல் பிரதிநிதிகள் மட்டுமே. அதைத் தவிர, நேர்மையான தேர்தலில் ஜெயிக்குமளவுக்கு நீங்கள் யாழ்ப்பாணம், வவுனியா மக்களுக்கு எதுவும் செய்துவிடவில்லை என்பது உண்மை. அதைவிடப் பெரிய உண்மை, யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் உங்களுக்காக இந்த முறை வாக்களிப்பதிலுள்ள அபாயங்களிலிருந்து எங்களையும், உங்களையும் காப்பாற்ற எங்கள் பிரதிநிதிகள் இன்றைக்கு இல்லை. யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல, ஐக்கிய இலங்கைக் குடியரசில்கூட நேர்மையான ஒரு தேர்தலுக்கு இனிமேல் வாய்ப்பில்லை.

Tuesday 28 July 2009

உன் லாஜிக் நல்ல லாஜிக்!

வெடிவால் முளைத்து மூன்றரை அடிக்கு மேல் நீண்டிருந்த காலம். மாணவர் தலைவர்கள் என்ற பேரில் எங்கள் வகுப்பில் ஒரு 15 பேரின் சந்தோசமான பாடசாலை வாழ்க்கைக்கு ஆப்பு வைக்க பள்ளி நிர்வாகம் முயன்றாலும், நாங்களெல்லாம் சிங்கம்ல என்ற ரீதியில் அவர்களுக்கு கடுக்கா கொடுத்து நண்பர்களோடு கூத்தடித்த காலம் அது. நாங்கள் கொஞ்சமே பிஞ்சிலே பழுத்தவர்கள் என்று கூடச் சொல்லலாம். நாங்கள் 10ம் வகுப்புப் படிக்கும்போது அந்த ரீச்சர் வந்து சேர்ந்தா எங்களின் பள்ளிக்கூடத்தில். 80-90களில் கமல், ரஜினியின் ஆதர்ச தேவியாக விளங்கிய நாயகியின் பெயர் அவருக்கு. நம்ம பசங்களுக்கு ஏனோ ஒரு தனிப்பாசம் அவ மேல. அவவைப் பற்றி பள்ளிக்கூடம் பூரா கதைகள் உலாவின. அவ வந்த ஆரம்பகாலத்தில் எங்களின் பள்ளிக்கூட அதிபர், அந்த ரீச்சரின் ஆசிரியர் என்பதால் கொஞ்சம் ரீச்சருக்கு மரியாதை இருந்தது. அவர் போனதும் அதுவும் இல்லை. ஆனா ரீச்சருக்கும் இளம் வயது என்பதால் அவவும் பகிடியா கதைப்பா.

நாங்கள் 12ம் வகுப்புக்கு வந்திருந்த காலம் அது. ரீச்சர் 11ம் வகுப்புக்குக் கீழே உள்ள மாணவர்களுக்கு மட்டும்தான் வகுப்பெடுப்பா. எங்கடை வயதுப் பசங்களுக்கு ஒரே ஒரு பெம்பிளை மலர் ரீச்சர் மட்டும்தான். அவங்களைப் பற்றி நான் ஒண்டும் சொல்ல விரும்பேல்லை. சொன்னா, மகியும், நிதியும் டிக்கட் போட்டுவந்து எனக்கு அடிப்பாங்கள். இவங்கள் எப்பவும் மலர் ரீச்சரிண்ட வகுப்பில Out-Standing Students. இவங்களோட சோமு எண்டு ஒரு ரொம்ப நல்லவன் இருந்தான். இவங்கள் கொஞ்சப் பேர் சேர்ந்து வகுப்பை கண்டம் பண்ணிக் கொண்டே இருப்பாங்கள். இவங்கள் இல்லாமல் வகுப்பில ஒரு களையே இருக்காது. ஒரு நாள் அப்பிடித்தான், மலர் ரீச்சர் நாலு பீரியட் தொடர்ந்து அறுத்த அறுவையால உடம்பும், மனமும் சோர்ந்து போய் இவங்கள் கதைச்சுக் கொண்டிருக்கிற நேரம் பாத்து, வேற ஒரு வகுப்புக்கு பாடம் எடுக்க அந்த 'கதாநாயகி' ரீச்சர் போய்க்கொண்டிருந்தது இவங்களிண்ட கண்ணில பட்டுட்டுது.

சோமன் அன்றைக்கு ரொம்பவே கடுப்பில இருந்தான். ரீச்சரைக் கண்டதும் ‘குக்குகூய்' என்று வித்தியாசமாய் ஒரு குரலைக் கொடுத்துத் தொலைத்தான். அவ்வளவு காலமும் எங்களோட பகிடியாய் பேசிப்பழகின ரீச்சருக்கு, அப்பிடி பள்ளிக்கூட வளாகத்திலேயே வைச்சு குரலடிச்சது துண்டற பிடிக்கேல்லை. அந்த வயதில எங்களுக்கு அது பகிடியாய் தெரிஞ்சாலும், ரீச்சர் கடுப்பாகீட்டா. போய் எங்கட செக்‌ஷனுக்கு (12ம், 13ம் வகுப்புகளுக்கு) பொறுப்பாயிருக்கிற, அண்ணன் கரவைக்குரலான் ‘காந்தர்வ ராஜா' என்றும், பொதுவாக மாணவர்களால் 'முயலகன்', 'முயல்குட்டி' என்றும் அழைக்கப்படும் ஆசிரியரிடம் சொல்லிவிட்டார். அப்போதான் எங்களுக்குப் புரிந்தது விளையாட்டு வினையாகிப் போச்சு எண்டு. முயலகன் வந்து 'இண்டைக்கு உங்கட வகுப்புக்கு டிற்றென்சன்' என்று சொல்லீட்டுப் போய்விட்டார்.

பள்ளிக்கூடம் முடிய மணி அடித்து, பாடசாலைக் கீதம் எல்லாம் பாடி எல்லா வகுப்பும் போய் முடிஞ்ச பிறகுதான் முயல் வந்தது. நான் 12ம் வகுப்பு ‘ஏ' பிரிவு. இவங்கள் ‘பி' பிரிவு. ஆனால் இவங்களோடதான் ஒவ்வொரு நாளும் வீட்டை போறனான். முயலகனின் விசாரணை பாணியும் வித்தியாசமாக இருக்கும். ஆக வேடிக்கை பார்க்க ஆயத்தமானேன். முயலகன் முதலில் மிரட்டினார். ‘அடே, கூக்காட்டினது ஆரெண்டு சொல்லாட்டா, ஒருத்தரும் வீட்டை போகேலாது'. ம்ஹூம், ஒருத்தனும் அசையவேயில்லை. கொஞ்சம் பயந்த மாணவர்கள்கூட முயலின் மிரட்டலுக்குப் பணியவேயில்லை. பலவிதமாகச் சொல்லிப் பார்த்தார். 'ஒருத்தன் செய்த பிழைக்கு எல்லாரும் தண்டனை அனுபவிக்கிறியள்' எண்டும் சொல்லிப் பார்த்தார். எங்கட பொடியள் இந்த விஷயத்தில தங்கங்கள். ஒரு எட்டப்பன் கூட எழும்பேல்லை. அலுத்துப்போய் முயலகன் சமாதானம் பேச முயன்றார்.

‘எடே, தம்பியவை. இது வாலிப வயசு எண்டு எனக்குத் தெரியும். இந்த வயசில நாங்கள் மலையில் ஏறி அந்தர் அடித்து கடலிலும் குதிப்போம், கப்பலையும் கவிழ்ப்போம் எண்ட மாதிரி மனசு இருக்கும். இந்த வயசில ரீச்சருக்கு கூக்காட்டிறது, விசிலடிக்கிறது எல்லாம் சகஜமடா. என்ன செய்யிறது, நீங்கள் தனிய பொடியள் படிக்கிற பள்ளிக்கூடத்தில படிச்சு காய்ஞ்சு போயிருப்பியள். நீங்கள் செய்ததை பிழை எண்டு சொல்லேலாது. ஆனால், ஆர் செய்தது எண்டு மட்டும் சொல்லுங்கோடா. நான் ஒண்டுமே செய்யமாட்டன். ஆரெண்டு தெரிஞ்சவுடன இந்தப் பிரச்சினையை அப்பிடியே முடிக்கிறன். ஒரு பனிஷ்மெண்டும் கிடையாது' என்று உருக்கமாய் முயலகன் பேசிமுடிக்கவும், நிதி மெதுவாக எழும்பவும் சரியாயிருந்தது. முயல் முகத்தில் சந்தோஷம்; ‘ஒன்றில் தான் செய்ததாக இவன் ஒப்புக்கொள்வான், இல்லை செய்தவனைக் காட்டித்தரப் போகிறான். நம்ம திட்டம் பலித்தது' என்பதாய் பெருமிதம். மெதுவாய் எழுந்த நிதி சொன்னான், ‘சேர், குரலடிச்சவனுக்குத் தண்டனை குடுக்கப்போறதில்லை எண்டால், அவன் ஆர் எண்டு கண்டுபிடிக்கிறதில என்ன லாபம் சேர்?' என்றான். வகுப்பே சிரிக்க், முயல் முகத்தில் ஈயாடவில்லை. கொஞ்சநேரம் யோசித்தார். ‘மோனே, உண்ட லொஜிக் நல்ல லொஜிக், எல்லாரும் பிழைச்சுப் போங்கடா' என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்து போய்விட்டார் முயல்.

பி.கு: படத்தில் சம்பவத்தில் ஈடுபட்ட, சம்பவத்தை எழுத்துருவாக்குகின்ற அத்தனை ‘மங்கீஸும்' இருக்கின்றன. அரைவாசி மறைந்து தெரியும் ஒரேயொரு முகம் ‘லாஜிக்' பேசிய நிதியினுடையது. முன்வரிசையில் இருப்பவர்களில் வலதுபக்கம் இருப்பது சோமு.

Monday 27 July 2009

த டிபார்டட் (The Departed)

ஒரு மாநிலத்தின் கட்டுக்கோப்பான போலீஸ் படை. அதேபோல் கட்டுக்கோப்பான ஒரு மாஃபியா கூட்டம். போலீஸ் மாஃபியா கூட்டத்துக்குள் தங்கள் உளவாளி ஒருவனை அனுப்புகிறார்கள். அதேவேளை மாஃபியா கூட்டத்தலைவன் தான் சிறுவயதில் இருந்தே தயார் பண்ணிய ஒருவனை அந்த மாநிலப் போலீஸின் கூடாரத்துக்குள் அனுப்புகிறான். ஒரு கட்டத்தில் இரு பகுதி ஆட்களுக்கும் தங்களுள் ஒரு எட்டப்பன் ஊடுருவியிருப்பது தெரியவருகிறது. பிறகென்ன இருவரின் உண்மையான அடையாளங்களை வெளிக்கொண்டுவர இரு பகுதியும் நடத்தும் போராட்டம்தான் ‘த டிபார்டட்' படத்தின் கதை.

அமெரிக்காவின் Massachusetts மாநிலத்தில் உள்ள ஒரு Irish மாஃபியாக் கூட்டத்தின் தலைவன் ஃபிராங் காஸ்டல்லோ (Frank Costello), இளவயதிலேயே கொலில் சுல்லிவன் (Colin Sullivan) என்ற சிறுவனை மாஃபியாவுக்கு அறிமுகப்படுத்துகிறார். பெற்றோரை இழந்த அந்தச் சிறுவனைக் கல்விகற்கவைத்து அந்த மாநிலப் போலீஸ் படையில் சேர்த்துவிடுகிறார், தன்னுடைய உளவாளியாக இருக்கும்படி. அவன் ஒரு Detective ஆக பதவி உயர்த்தப்படும் அதேநாள் வில்லியம் காஸ்டிகன் (William Costigan) என்ற இளைஞன் போலீஸ் வேலை தேடி வருகிறான். போலீஸ் அகடமியைக் கூட சரியாக முடிக்காத, மாஃபியாவுடன் இரகசிய தொடர்புகளைக் கொண்ட ஒரு குடும்பத்து இளைஞனான இவனை போலீஸில் சேர்க்க முடியாது என சர்ஜன் டிக்னிம் (Sergeant Dignim) அவமானப்படுத்துவது போல் பேசினாலும், அவரும் கேப்டன் குயினினும்(Captain Queenan) இந்த இளைஞனை காஸ்டல்லோ குழுவுக்கு உளவாளியாக அனுப்புகின்றார்கள். இரு உளவாளிகளும் தங்கள் வேலையை ஒழுங்காகச் செய்கின்றனர்.

காஸ்டல்லோவின் ரகசிய மாஃபியா வேலைத்திட்டங்கள் பற்றி போலீஸ்சுக்கு தெரிய வருகிறது. போலீஸின் திட்டங்கள் காஸ்டல்லோவுக்கு தெரிய வருகிறது. ஆக, இரு முகாமகளிலும் எதிரி உளவாளி இருக்கிறான் என்பதை உணர்ந்து கொள்கிறார்கள். இதற்கிடையில் காஸ்டிகனும், சுல்லிவானும் ஒரே பெண்ணோடு கிட்டத்தட்ட பட்டும் படாம்லும் உறவில்வேறு இருக்கிறார்கள். இரு முகாம்களிலும் பதட்டம் அதிகரிக்கிறது. கேப்டன் குயினின்தான் காஸ்டல்லோவின் உளவாளி என்பதாக சுல்லிவான் போலீஸிடம் சொல்ல அதனால் ஏற்படும் குழப்பத்தில் காஸ்டல்லோ ஆட்களால் குயினின் கொல்லப்படுகிறார். சார்ஜன் டிக்னிம் போலீஸிலிருந்து கட்டாய லீவு கொடுத்து அனுப்பப்படுகிறார். காஸ்டிகன் போலீஸ் உளவாளி என்று தெரிந்த இருவரையுமே தன் வழியிலிருந்து நீக்கிவிடும் காஸ்டல்லோவின் உளவாளியான் சார்ஜன் சுல்லிவன், காஸ்டிகணை காஸ்டல்லோவுக்கு அடையாளம் காட்டினானா? இல்லை காஸ்டிகன் இவனை அடையாளம் காட்டினானா? என்பதையெல்லாம் படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

காஸ்டிகனாக லியனார்டோ டிகேப்ரியோ (Leonardo DiCaprio), கொலின் சுல்லிவானாக மேட் டேமன் (Matt Damon), ஃப்ராங் காஸ்டல்லோவாக ஜேக் நிக்கல்சன் (Jack Nicholson), கேப்டன் குயினினாக மார்டின் ஷீன் (Martin Sheen), சர்ஜன் டிக்னிம்மாக மார்க் வால்பர்க் (Mark Wahlberg) ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்த இப்படத்தை புகழ்பெற்ற ஹாலிவூட் இயக்குனர் மார்டின் ஸ்கொர்செசி (Martin Scorsese) இயக்கி 2006ம் ஆண்டு வெளியான இப்படம் பலத்த வரவேற்பைப் பெற்றது. சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த தழுவல் திரைக்கதை (Adopted) ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் வென்றது. சிறந்த துணைநடிகர் விருதுக்கு மார்க் வால்பர்க் பரிந்துரைக்கப்பட்டார். அதே வருடம் வெளியான Blood Diamond படத்திற்காக, இப்படத்தில் நடித்த டிகேப்ரியோ சிறந்த நடிகர் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டிருந்தார். இருந்தும் The Last King of Scotland என்ற படத்தில் இடி அமீனாக நடித்த Forest Whitaker இடம் தோற்றார்.

இப்படத்தின் இயக்குனர் ஹாலிவூட்டில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். Taxi Driver, Raging Bull, Good Fellas, Cape Fear, The Aviator போன்ற நல்ல படங்களைக் கொடுத்தவர். பல்முறை இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டும் வெல்ல முடியாமல் போனவர். கடைசியாக இந்தப் படம் மூலம் தன்னுடைய 65ம் வயதில், சினிமாவில் நுழைந்த 37வருடங்களின் பின் விருதை வென்றெடுத்தார். இந்தப் படம் உண்மையில் ஒரு ஹாங்காங் படத்தின் ரீ-மேக். 2002ல் Andrew Lau இயக்கிய Infernal Affairs என்ற படத்தின் ரீ-மேக் இது. விருது பெற்ற போது ‘அந்த அற்புதமான ஆசிய சினிமாவுக்கு' நன்றி என்று பெருந்தன்மையோடு கூறினார் ஸ்கொர்செசி. டி கெப்ரியோவின் வித்தியாசமான முகங்கள் வெளிவரத் தொடங்கிய காலத்தில் வந்த ஒரு அழகான த்ரில்லர் படம் ‘த டிபார்டட்'.

இதுபோன்ற படங்களை எந்த மொழியிலும் ரீ-மேக் செய்யலாம். மோசமான சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகள் இவற்றைத் தவிர்த்து சிறுசிறு மாற்றங்களோடு தமிழில் எடுத்தால்கூட அற்புதமாக ஓடும். என்ன, சில சில கேரக்டர்களை இயக்குனரின் விருப்பப்படி செய்யக்கூடிய, ஆனால் தனக்கென்று தனித்துவமான ஒரு நடிப்புத் திறண் கொண்ட இரு இளம் நடிகர்கள் தேவை. ஒரு குணசித்திர ஜாம்பவான் தேவை (இரு முறை ஆஸ்கர் வென்ற ஜேக் நிக்கல்சன் இப்படத்தில் வில்லன்) இப்போ இரண்டு ஹீரோ படங்களிலும் நடிக்கும் துணிவு சூர்யாவிடம் மட்டுமே இருக்கிறது. அதேவேளை இயக்குனர் சொல்வதைச் செய்யும் நல்ல பழக்கமும் அவரிடம் மட்டுமே இருக்கிறது. எனவே இந்தக் கதை இப்போதைக்கு தமிழ் சினிமாவில் வராது. மற்ற இந்திய மொழிகளில் இதே படத்தை நேர்த்தியாக எடுக்குமளவுக்கு டெக்னீஷியன்கள் இல்லை என்பது என் கருத்து.

Sunday 26 July 2009

வில்லுப்பாட்டு

எங்களது அடுத்த தலைமுறைக்குத் தெரியாமலே போய்விடக்கூடிய நாட்டுப்புறக் கலைகள் ஏராளம். அவற்றில் வில்லிசை அல்லது வில்லுப்பாட்டும் ஒன்றாகும். ஒரு காலகட்டத்தில் எங்களூர் திருவிழாக்களில் கட்டாய இடம் பிடித்த இந்த வில்லுப்பாட்டு பற்றி எங்களது சந்ததியர்க்கு ‘முன்னொரு காலத்திலே' என்று ஆரம்பித்து கதை சொல்வது போல் சொல்லவேண்டிய ஒரு காலம் வெகு தொலைவில் இல்லை. வில்லுப்பாட்டு பற்றிய Technical அம்சங்களையும் வரலாறையும் எனக்குத் தெரிந்தளவில் சுருக்கமாகச் சொல்ல விளைகிறேன். அதேபோல் என் சிறுவயதில் என்னில் தாக்கமேற்படுத்திய வில்லிசைக் கலைஞர்கள் பற்றியும் பகிர்ந்து கொள்கிறேன்.

எந்த இலக்கணத்துக்கும் உட்படாமல் போர்க்களத்திலே வீரர்களை உற்சாகமூட்ட பயன்பட்ட ஒரு கலையாகவே இது ஆரம்பகாலத்தில் அறியப்பட்டது. 15ம் நூற்றாண்டில் ஒரு அரசவைப்புலவர் இதற்குரிய இலக்கண வடிவத்தைக் கொடுத்ததாக சிலரும், 1550ல் இதற்குரிய இலக்கணத்தை அருதக்குட்டி என்ற புலவர் நெறிப்படுத்தினார் என்று சிலரும் சொல்வார்கள். ஏழடி நீள் வில்லில் மணிகள் இணைக்கப்பட்ட நாண் பூட்டி வீசுகோல் என்கிற கம்பால் அடித்து இசைவாணர் பாட, கடம், உடுக்கை, ஜால்ரா மற்றும் கட்டை எனப்படும் தேக்காலான இசைக்கருவி ஆகியவை பக்க வாத்தியங்களாகப் பயன்பட வில்லிசை ஜோராக அரங்கேறும். பிற்பாடு ஆர்மோனியம், தபேலா போன்ற கருவிகளும் வில்லிசைக்குள் நுழைந்தன. (வில்லிசை பற்றிய ஒரு நல்ல ஆய்வுக்கட்டுரையிலிருந்து மேற்படி விஷயங்களை எடுத்தேன். அக்கட்டுரையை முழுமையாக இங்கே படியுங்கள்)

வில்லிசை தொடங்க முன்னர் சில சம்பிரதாயங்கள் உண்டு. முதலில் இறைவணக்கம், காப்புப்பாடல், குரு வணக்கம், அவைவணக்கம் என்று போய் பின்னர்தான் வில்லுப்பாட்டின் முக்கிய பகுதிக்குள் போவார்கள். நான் பார்த்த பெரும்பாலான வில்லிசைக் கலைஞர்கள், இறைவணக்கத்தின் பின் நேரடியாக ‘தந்தனத்தோமென்று சொல்லியே... வில்லினில் பாட..' என்று ஆரம்பித்து 'சபையிலுள்ள பெரியோரே தாய்மாரே..' என்று அவை வணக்கம் வைப்பார்கள். எங்களூரில் ‘அப்புமாரே ஆச்சிமாரே' ‘குஞ்சுகளே குருமன்களே' என்று பல விஷயங்கள் சேர்த்து Improvise பண்ணுவார்கள். அதுவும் ‘ஆமாம்' போடுவதற்கென்று இருப்பவர் அநேகமாக கமெடியனாக இருப்பார். மற்றவர்களும் காமெடியில் சளைத்தவர்கள் இல்லை.

என்னுடைய இளம்வயதிலே இரண்டு குழுக்கள் எங்கள் ஊரில் புகழ் பெற்றிருந்தார்கள். ஒன்று 'சின்னமணி' குழு. மற்றையது 'வானம்பாடி' யோகராசா குழு. சின்னமணி தலைமையிலான குழுவினுடைய 'சத்தியவான் சாவித்திரி' வில்லுப்பாட்டு ஒருமுறை பார்த்தேன். சின்னமணி சிலேடையில் புகுந்து விளையாடுவாராம். அந்த வயதில் எனக்கு சிலேடை பிடிபடாமல் போனதால் எல்லோரும் சிரிக்கிறார்கள் என்பதற்காகச் சிரித்து வைத்தேன். சத்தியவான் சாவித்திரி கூத்தில் வரும் ‘சிங்கத்தால் நானடைந்த பங்கம் தீர்த்ததாலே' என்ற பாடலை எனக்கு அறிமுகம் செய்தது சின்னமணி குழுதான். ஆனால் ஏனோ சின்னமணியை எங்களூர் பெரிசுகள் கொட்டக் கொட்ட முழித்திருந்து பார்க்க அரைவாசியிலேயே அப்பா மடியில் தூங்கிவிட்டதால் அவர்பற்றிய நினைவலைகள் என்னிடம் பெரியளவில் இல்லை.

வானம்பாடி பற்றிய நினைவுகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றன. காரணம், வானம்பாடி யோகராசாவும், என்னுடைய தந்தையும் வகுப்புத் தோழர்கள். முதன்முதலாக வானம்பாடி குழு எங்கள் கோயிலுக்கு வந்தபோது யோகராசா அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்பா மடியில் இருந்த எனக்கு கச்சான் வாங்கித்தந்தார். அதற்காகவே விழித்திருந்து பார்த்தேன். 'பிள்ளையார் சுழிபோட்டு, நீ நல்லதை தொடங்கிவிடு' என்று கடவுள் வணக்கத்தோடு ஆரம்பிப்பார். 'அடுத்ததாக புரட்சிப்பாடல்கள்' என்று அறிவித்து மூன்று தமிழீழ எழுச்சிப் பாடல்களைப் பாடுவார். ‘எல்லொருக்கும் நல்ல காலமுண்டு' போன்ற இரண்டு சினிமாப் பாடல்களையும் பாடுவார். அதன் பின் ‘தந்தனத் தோமென்று சொல்லியே' என்று ஆரம்பித்து வில்லிசைப்பார். கச்சான் வாங்கித்தந்ததால் அவரது ‘வள்ளி திருமணம்' முழுமையாகப் பார்த்தேன்.

சின்னமணி குழுவுக்கும், வானம்பாடி குழுவுக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. சின்னமணி சிலேடை நயத்தால் சுவைகூட்டுவார். யோகராசாவின் குரல் வளம் ஈர்க்கும். சின்னமணியின் பின்புலம் எனக்குத் தெரியவில்லை, ஆனால் யோகராசா ஒரு ஆசிரியராக இருந்தவர் என்பது என் ஞாபகம். அதனால் கொஞ்சம் சைவமாக இருக்கும் அவரது வில்லுப்பாட்டுகள். கொஞ்ச காலத்தின் பின் கோவில்களில் கோஷ்டி கானம் என்று சினிமாப் பாடல்கள் இசைக்கப்பட ஆரம்பித்த பின் யோகராசா, சின்னமணி எல்லோரையும் மறந்துவிட்டேன். ஆனால் யோகராசா மறுபடி எங்கள் முன் வந்தார், அவரது மகன் ரூபத்தில். தாய் எட்டடி குட்டி பதினாறடி என்பது போலவே பதின்ம வயதுகளிலேயே பாடசாலை மேடைகளில் தன் நண்பர்களோடு சேர்ந்து வில்லிசைத்தபோது பலரும் சொன்னார்கள், ‘புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?' என்று. ஆனால் துரதிர்ஷ்டம் அவர்களின் திறமைகளுக்கு பாடசாலை மேடைகளைத்தவிர வேறு களங்கள் கிடைக்கவில்லை.

எங்கள் பாடசாலைக் காலத்திலேயே வானம்பாடி யோகராசா இயற்கையெய்தி விட்டார். சின்னமணி பற்றிய தகவல்கள் எனக்குப் பெரியளவில் தெரியாது. வில்லுப்பாட்டு சீண்டப்படாத கலையாகிவிட்டது என்பது மட்டும் உண்மை. இன்றைக்கு அமீரகத்திலே வசிக்கும் யோகராசாவின் புதல்வனுக்கு இனி அந்த உன்னதக் கலைக்குரிய மேடைகள் கிடைக்குமா என்பது சந்தேகமே. சமீபத்தில் கூட உங்கள் சிறுவயதுகளில் உங்களது பொழுதுபோக்கு என்ன என்று அக்கா மகன் கேட்க விளக்கிக் கொண்டிருந்தேன். அப்போ எதேச்சையாக வில்லுப்பாட்டு கேள்விப்பட்டிருக்கிறாயா என்று கேட்டபோது, கேள்விப்பட்டிருக்கிறேன் என்றான். 'அட, உனக்கு என்ன தெரியும் வில்லுப்பாட்டு பற்றி, சொல்லு பார்ப்போம்!' என்றேன், ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியுடன். ‘ராமா ராமா ராமா ராமா, ராமன்கிட்ட வில்லக் கேட்டேன்' என்று காதில் ஈயம் உருக்கி ஊற்றினான். உக்கிரமான ஒரு மகிழ்ச்சியில் இருந்து பிறந்த இந்தக் கலை, மக்கி மண்ணோடு மண்ணாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பது வருத்தத்துக்குரிய உண்மை.

Friday 24 July 2009

பீகார் கொடூரம்

பீகார் ஒரு கேடு கெட்ட மாநிலம் என்று பல செய்திகளில் படித்திருக்கிறேன். எந்தளவுக்குக் கேடுகெட்ட மாநிலம் என்பதை சமீபத்தில் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள் பீகாரிகள். ஒரு இளம் பெண்ணை, பட்டப் பகலில், நடு ரோட்டில், நூற்றுக்கணக்கன பீகாரிகளுக்கு மத்தியில், போலீஸாருக்கு முன்னால் வைத்து, ஆடைகளைக் கிழித்து நிர்வாணமக்கி அற்புதச் செயல் புரிந்திருக்கிறது ஒரு கும்பல். அது பற்றிய செய்தி வீடியோ YouTubeல் இருக்கிறது. அந்தக் காட்சியைப் படம்பிடித்த செய்தியாளரை விடுங்கள், ஒரு கேடு கெட்ட நாய் வீடியோ காமராவைத் தூக்கிக் கொண்டு அந்தப் பெண்ணின் முகத்தைப் படம்பிடிக்க ஓடுகிறது.

இந்தப் பெண்ணை வேலை வாங்கித் தருவதாகக் கூட்டிவந்த ராகேஷ்குமார் என்ற இளைஞன் தன் நண்பர்களுடன் சேர்ந்து இந்தப் பெண்ணைக் கற்பழிக்க முயன்றதாயும், அந்தப் பெண் அவர்களிடமிருந்து தப்பி வந்ததாயும், அவளைத் துரத்திப் பிடித்து, ஒரு ரிக்‌ஷாவில் ஏற்றி பட்னாவின் பரபரப்பான ஒரு வீதிக்குக் கொண்டுவந்து அவளை அடித்திருக்கிறார்கள். அந்த ரிக்‌ஷாவைப் பலர் துரத்தி வந்ததோடு சிலர் வீடியோ வேறு பிடித்தார்களாம். அரைமணி கழித்து வந்த போலீஸும் வேடிக்கை பார்த்தார்களாம். அப்ஸரா என்ற தியேட்டரைவிட்டு படம் முடிந்து வெளியே வந்த கூட்டத்துக்கு முன் வைத்து அவளை துகிலுரிந்திருக்கிறார்கள். அதை தியேட்டரிலிருந்து வந்த இளைஞர்கள் வேடிக்கை பார்த்ததோடு நிறுத்திக்கொள்ளாமல், அவர்களும் இணைந்து கொண்டார்களாம். ஒரு மணிநேரம் கழித்து போலீஸ் தலையிட்டு இந்தக் கேவலத்தை நிறுத்தினார்களாம்.

அதன் பின் போலீஸார் அந்தப் பெண்ணை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து இரண்டு மணிநேரம் விசாரணை நடத்தினார்களாம். மேற்படி நான்கு இளைஞர்களும் அந்தப் பெண் ஒரு விபசாரி என்றும் அவள் தங்களை ‘அது'க்கு அழைத்ததால் கோபமுற்றே இவ்வாறு நடந்துகொண்டதாயும் கூறினார்களாம். இந்த விஷயம் பற்றி விசாரணை நடத்த பிகார் முதல்வர் நித்தீஷ் குமார் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். பல மகளிர் அமைப்புகள் கோஷம் போட ஆரம்பித்திருக்கின்றன. எதிர்க்கட்சிகள் அரசியலாக்க முயல்கின்றன. மீடியாக்கள், என் போன்ற பதிவர்கள் என்று எல்லோரும் கூவிக் கூவி இந்த வீடியோவை விற்கிறோம். அவ்வளவுதான்.

ஐயா, அந்தப் பெண் விபசாரியாகவே இருக்கட்டும். அவள் இவர்களை விபசாரத்துக்கு அழைத்ததாகவே இருக்கட்டும். அந்த விஷயம் இந்த நாலு பேருக்கும்தானே தெரியும். ஒரு பொது ஆள் பார்வையில் ஒரு பெண்ணை நாலு பேர் துன்புறுத்துவதாகத் தானே தென்பட்டிருக்க வேண்டும். ஆனால் யாருமே, போலீஸ், மீடியா உட்பட யாருமே, அதைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லையே. அந்த நாலு இளைஞர்கள் மட்டுமா குற்றவாளிகள்? வேடிக்கை பார்த்த மற்றவர்கள்? இணைந்து கொண்ட மேலும் சிலர்? ஓடி ஓடி வீடியோ பிடிக்கும் அந்தக் கயவன்? பரபரப்புக்காக ‘லைவ்-கவெரேஜ்' செய்த மீடியா? போலீஸ்? எல்லாரும் குற்றவாளிகள் அல்லவா? ஒரு விபசாரியை இவ்வாறு மானபங்கப் படுத்தலாம் என்றால், நாளைக்கே ஒரு நல்ல பெண்ணையும் இதே போல் செய்து விபசாரிப்பட்டம் கட்ட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

இதெல்லாம் மீடியாவாலோ, அரசாலோ, அரச இயந்திரங்களாலோ, பொது நல அமைப்புக்களாலோ தீர்க்கப்படக்கூடிய விஷயமே அல்ல. மக்கள் விழிப்புணர்வு ரொம்பவே அவசியம். சாதாரண குடிமக்கள் போராடா வேண்டும். படங்களில் வருவது போல் மக்கள் போராட்டத்தை அவ்வளவு இலகுவில் அரச இயந்திரத்தால் அடக்கிவிட முடியாது. மலம் கலந்த தண்ணீர் பற்றி நம்முடைய பதிவர் ஒருவர் நிகழ்த்தும் தனிமனித போராட்டம் போல, மக்கள் இறங்கிப் போராட வேண்டும். மக்கள் போராட்டத்துக்கு அனேகமாக வெற்றி கிடைக்கும். சிலவேளை அது ‘தீவிரவாதம் என்று முத்திரை குத்தப்படலாம். ஜே.வி.பி செய்தது உரிமைப் போர், விடுதலைப் புலிகள் செய்தது பயங்கரவாதம் என்று, ஜே.வி.பி. கலகம் செய்த காலத்தில் ஒரு மனித உரிமை வழக்கறிஞராகப் போராடிய மகிந்த ராஜபக்ஸே சொன்னது போல், மக்கள் போராட்டம் சிலவேளை வடிவம் மாற்றப்பட்டு பிழையான முத்திரை குத்தப்படலாம். அதற்காக ஒதுங்கிப் போகக்கூடாது.

இந்த வீடியோவையும் பாருங்கள். Dining With Terrorists என்ற இலங்கை இனப்பிரச்சினை பற்றிய வித்தியாசமான ஒரு கோணம். இந்த வீடியோவுக்கு என்னை பதிவர் சக்திவேலின் இந்தியாவைப் பார்த்து மிரண்டுபோன ராஜபக்சே என்ற பதிவு இட்டுச்சென்றது. நன்றி சக்திவேல்.

Dining With Terrorists Divided Island
Part-1 Part-2

கிரிக்கெட் வசைபாடிகள்-2 (18+)

கிரிக்கெட்டில் இப்போதெல்லாம் வசைபாடுதல் (Sledging) கிட்டத்தட்ட ஒரு நாகரிகமான செயலாகவே மாறிவிட்டது. இப்படியான வசைபாடுதல்கள் சில வேளைகளில் வரம்பு மீறியதாகவும், சில வேளைகளில் மிகவும் நகைச்சுவையாகவும் அமைந்து விடுவதும் உண்டு. அப்படிப்பட்ட சில சம்பவங்களை இங்கே தொகுத்திருக்கிறேன்:

ரவி சாஸ்திரி- மைக் விட்னி (Ravi Shastri- Mike Whitney)

இந்தியர்கள் (இப்போதைய அணியை விடுங்கள்) பெரியளவில் வசைபாடுவது இல்லை. ஆஸ்திரேலியர்கள் அதை முகழுநேரத் தொழிலாகக் கொண்டவர்கள். 1991/92 ஆஸ்திரேலிய பயணத்தில் சிட்னியில் ஒரு டெஸ்ட் போட்டி. ஷேன் வார்னின் முதல் டெஸ்ட் போட்டி. ஏற்கனவே 5 டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்தியா தோற்றிருந்தது. காயமுற்ற ஒரு வீரருக்காக களத்தில் மிட்-ஆனில் களத்தடுப்பில் இருந்த விட்னியை நோக்கி பந்தை அடித்த சாஸ்திரி ரண் எடுப்பதுபோல் பாவ்லா காட்ட, பந்தை எடுத்த விட்னி சொன்னார், 'கிரீஸை விட்டு வெளிய வந்தே, மவனே உன் தலையை உடைச்சுடுவேன்' என்று. சாஸ்திரி அடுத்த நொடி அழகாகச் சொன்னார் ‘நீ பேசற அளவுக்கு விளையாடத் தெரிஞ்சிருந்தா இப்படி சப்ஸ்டிடியூடாகவா ஃபீல்ட் பண்ணுவே. போப்பா போ, முதலில் சரியா விளையாடக் கத்துக்கோ'. சாஸ்திரி அந்தப் போட்டியில் 206 ரன் அடித்தார். ஆஸியின் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கட் வேறு எடுத்து கிட்டத்தட்ட இந்தியாவை ஜெயிக்கவைத்தார். சச்சினுக்கும் சிட்னி கிரிக்கட் மைதானத்துக்குமான காதல் கதை அவர் அடித்த 148* உடன் ஆரம்பமானது.

இயன் ஹீலி- கட்டையான, குள்ளமான ஆட்டக்காரர் (Ian Healy and A Short Chubby Batsman)

ஆஸி அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, புகழ் பெற்ற ஹான்ஸி குரொஞ்சேயின் (Hansie Cronje) ஃப்ரீ ஸ்டேட் (Free State) மாநிலத்துக்கு எதிராக ஒரு பயிற்சி ஆட்டம் ஆடினார்கள். ஹான்ஸியின் அணியில் ஒரு கட்டையான குண்டான பேட்ஸ்மன் ஒருவருக்கு ஷேன் வார்ன் பந்து வீசிக்கொண்டிருந்தார். விக்கட்-கீப்பர் ஹீலி வார்னிடம் நகைச்சுவையாக ‘ ஷேன், பிட்சின் அரைவாசியில் ஒரு மார்ஸ் சாக்லெட் பாரைப் போடு. இந்தக் குண்டன் அதை எடுக்க வெளியே வருவான் அப்போ இவனை ஸ்டம்ப் பண்ணிடறேன்' என்றார். அந்த பேட்ஸ்மான் சிரித்து விட்டு, ஷார்ட் லெக்கில் களத்தடுப்பில் இடுபட்டிருந்த டேவிட் பூனைப் (David Boon) பார்த்துச் சொன்னார், ‘இல்லை இல்லை, நம்ப பூனி (டேவிட் எனக்கு முன்னமே அதை எடுத்துடுவான்'. டேவிட் பூனின் தோற்றம், அவரது நடை, உடை பாவனை தெரிந்தவரானால் இந்தக் கடியிலுள்ள ஆழம் புரியும் உங்களுக்கு.

மேர்வ் ஹ்யூஸ்- ஹான்ஸி குரோஞ்சே (Merv Hughes- Hansie Cronjea)

மேலே ஹீலி கடி வாங்கிய அதே மேட்ச். ஹான்ஸி அபாரமாக ஆடிக் கொண்டிருந்தார். அநேக பந்துகள் பவுண்டரி லைனுக்குப் பறந்து கொண்டிக்க, அப்போட்டியில் ஆலம் பார்டருக்கு (Alan Border) பதிலாக தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த மார்க் டெய்லர் (Mark Taylor) ஹ்யூஸை பந்து வீச அழைத்தார். அவரையும் ஹான்ஸி விட்டு வைக்கவில்லை. கிரிக்கட் காமெடிகளில் அல்டிமேட் ஸ்டாரான ஹ்யூஸ் சும்மா விடுவாரா. ஒரு பந்தை ஹான்ஸி அடித்ததும் விறு விறுவென நடந்து பேட்ஸ்மனிடம் போனார். 'நீ சரியான ஆளுன்னா இத பவுண்டரிக்கு அடியேன் பாக்கலாம்' என்று ஹான்ஸிக்கு தன் பின்புறத்தைக் காட்டியபடி ‘பர்ர்ர்ர்ர்ர்' என்று பெரிதாகக் காற்றை வெளியேற்றிவிட்டுத் திரும்பினாராம் ஹ்யூஸ். ஆஸிவீரர்கள், ஹான்ஸி, அம்பயர்கள் என்று எல்லோரும் சிரித்து முடிக்கவே ஐந்து நிமிடம் ஆயிற்றாம்.

ஃப்ரெட் ட்ரூமன் - கேரத் மக்கின்ஸி (Fred Trueman- Garath Mackenzie)

ஃப்ரெட் ட்ரூமன் இங்கிலாந்தின் கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பெயர். ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றிலேயே முதன் முதலாக முன்னூறு விக்கட்டுக்களைக் கைப்பற்றிய வீரர் இவர்தான் (எல்லா நாட்டு வீரர்கள் மத்தியிலும்). இப்படிப்பட்ட ட்ரூமன் ஆஸ்திரேலியாக்கு எதிரான ஒரு போட்டியில் பவுண்டரி லைனில் களத்தடுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவர் நின்ற இடத்தின் அருகே பெவலியனில் இருந்து களத்துள் நுழையும் வாசல் இருந்தது. அப்போது ஒரு ஆஸி விக்கட் வீழ்ந்தது, இங்கிலாந்து வீரர்கள் ஒருவரை ஒருவர் தட்டிக்கொடுத்துவிட்டு தத்தம் களநிலைகளுக்கு மீண்டனர், ட்ரூமன் உட்பட. அப்போது உள்ளே வந்து கொண்டிருந்த ஆஸி ஆட்டக்காரர் மக்கின்ஸி பெவலியன்-மைதானம் இடைப்பட்ட கதவை மூட முயன்று கொண்டிருந்தார். ட்ரூமன் அவரருகே போய் ‘அப்பனே, என்ன செய்கிறாய்?' என்றிருக்கிறார். மக்கின்ஸி 'கதவை மூட முயல்கிறேன்' என்று சொல்ல, ட்ரூமன் சொன்னாராம். ‘இப்போ போன வேகத்திலே திரும்பப் போகிறாய். உள்ளே போவதுக்கு வசதியாக கதவைத் திறந்துவிட்டுத்தான் போயேன்'. அடுத்த ஓவரை ட்ரூமனே வீசவேண்டியிருந்தது. ஏற்கனவே கடுப்பை எல்லாம் அடக்கி மூன்று பந்துகளைத் தடுத்த மக்கின்ஸிக்கு ட்ரூமனைக் கண்டதும் பொறுக்காமல் விசிறினார்... போல்ட் (Bowled) ஆகி திரும்பினார்.

மேலும் சில சுவையான வசைகளோடு இன்னொரு பதிவில் சந்திப்போமா?

Wednesday 22 July 2009

ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்

சில படங்களைப் பார்த்தால் உறசாகம் பொங்கும். சில படங்களைப் பார்த்தால் கண்ணீர் திரளும். சிலபடங்கள் கவிதையாய் கிறங்கடிக்கும். சில படங்கள் கவலை மறந்து சிரிக்கவைக்கும். மிகச்சில படங்கள் ஏன்தான் பார்த்தோமோ என்று நினைக்க வைக்கும். அப்படி ஏன் பார்த்தோம் என்று நினைக்க வைக்கும் படங்களை இருவகைப் படுத்தலாம். ஒன்று விஜய், விஷால், சிம்பு வகையறாக்களின் படங்கள். இதுக்கெல்லாம் டிக்கட் எடுத்து, இரண்டரை மணிநேரம் செலவழித்தோமா என்று கடுப்பேத்தக்கூடிய படங்கள். மற்ற வகை, உண்மையாயே உள்ளத்தைப் பாதித்து ஒரு இனம்புரியாத பய உணர்வையோ, அருவருப்பையோ ஏற்படுத்தக் கூடியவை. அப்படிப்பட்ட இரண்டாவது வகைக்குள் அடங்கும் படம்தான் 1993ஆம் வருடம் ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் (Steven Spielberg) இயக்கி வெளியான Schindler's List.

இரண்டாம் உலகப்போர் ஆரம்பமாகியிருந்த காலப்பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்' என்ற நாவலை மையமாக வைத்து ஸ்பீல்பெர்க் இயக்கிய படம்தான் இது. 7 ஆஸ்கர் விருதுகளை வென்ற இப்படமானது ஸ்பீல்பெர்க் இயக்கிய படங்களிலேயே அது உன்னதமானது என்று புகழப்படுவது. அடொல்ஃப் ஹிட்லரின் நாஸிகளின் ஆட்சிக்காலத்திலே ஹிட்லரின் ராணுவ அதிகாரிகள் போலந்து நாட்டிலிருந்த யூத இன மக்களுக்கு நிகழ்த்திய கொடுமைகளும், அந்தக் கொடுமைகளிலிருந்து கிட்டத்தட்ட 1200 யூதர்களை தன் தொழிலாளர்கள் என்று சொல்லிக் காப்பாற்றிய ஒஸ்கர் ஸிண்ட்லர் என்பவரது கதையும்தான் படத்தின் அடிநாதம். பலபேர் இப்படத்தைப் பார்த்திருப்பீர்கள், பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். கதையை மறுபடி சொல்லி போரடிக்காமல், படம் என்னை ஏன் பாதித்தது என்று சொல்வது பரவாயில்லை என்பது என் எண்ணம்.

ஸிண்ட்லர் கதாபாத்திரம் உண்மையிலேயே என்னைப் பாதித்தது. Liam Neeson அந்தப் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டிருந்தார். அவரது யூத இன கணக்காய்வார் Itzak Stern ஆக ‘காந்தி' புகழ் Ben Kingsly. ஆரம்பத்தில் வர்த்தகத்தில் பெரியளவில் வெற்றி பெறாதவரான ஸிண்ட்லர் யூதர்களின் கறுப்புச் சந்தை முதலீடுகளை ஸ்டேர்ன் மூலம் பெறுகிறார். ராணுவ முதலீடுகளும் கிடைக்கின்றன. ஏழை யூதர்களை தன்னுடைய கம்பனியில் சேர்த்துக்கொள்கிறார், குறைந்த செலவில் உற்பத்தியைக் கூட்டுவதற்காக. ஸ்டேர்ன் சில யூதர்களை இப்படியாக இவரது கம்பனிக்குள் சேர்த்துக் காப்பாற்ற முயல்கிறார். ஸிண்ட்லரிடம் பணம் சேர்கிறது. ஸிண்ட்லர் நேரடியாகப் பார்க்கும் சில நாஸி படைகளின் கொடுமைகள், ஸ்டேர்னின் மேல் அவர் வைத்திருக்கும் வித்தியாசமான அன்பு எல்லாம் சேர்ந்து கடைசியில் ராணுவத்துக்கு லஞ்சம் கொடுத்து உற்பத்தி இல்லாத தொழிற்சாலையில் யூதர்களைக் காப்பாற்றும் அளவுக்கு இவருள்ளே மனமாற்றம் ஏற்படுகிறது. கடைசிக்காட்சியில் ‘இந்தக் காரை வித்து இன்னும் 10 பேரைக் காப்பாற்றியிருக்கலாமே, இந்த பேட்ஜ் ஒருவரைக் காப்பாற்றியிருக்குமே' என்று உடைந்து அழும்போது நம் கண்கள் பனிப்பதை தவிர்க்க முடியாது.

முழுக்க முழுக்க கறுப்பு வெள்ளைப் படத்தில் இரண்டே இரண்டு சம்பவங்களில் மட்டுமே நிறம் தென்படும். ஒன்று நாஸிப்படைகள் அட்டகாசம் செய்வதைத் தூரத்திலிருந்து பார்க்கும் ஸிண்ட்லர் ஒரு சிவப்பு கோட் போட்ட சிறுமியைக் காண்பார். பிறிதொரு சந்தர்ப்பத்தில் சில பிணங்கள் எரிக்கப்படும்போது அதே சிறுமியின் பிணத்தை அதே சிவப்புக் கோட்டுடன் காண்பார். நாஸிகளின் அட்டகாசத்தைக் கண்டு ஸிண்ட்லருள் இருந்த வியாபாரியை மீறி மனிதம் வெளிப்பட ஆரம்பிப்பது இந்தக் காட்சிகளில்தான். அதே போல் யூதர்களை தன்னுடைய தொழிற்சாலையில் பிரார்த்தனை செய்ய அனுமதிப்பார் ஸிண்ட்லர். அவர்கள் பிரார்த்தனைக்காகக் கொளுத்தும் மெழுகுவர்த்தி மட்டும் நிறத்தில் இருக்கும். 'ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றைக் காட்டும் குறியீடு அது' என்கிறார் இயக்குனர். இந்த இரண்டு காட்சிகளும் கவிதையாகச் செதுக்கப்பட்ட காட்சிகள்.

என்னை மோசமாகப் பாதித்த காட்சிகள் நாஸிப்படையின் அட்டகாசம் சம்பந்தமான காட்சிகள். ஒரு ஒற்றைக்கைக் கிழவரை 'நீ பனி வாரக் கூட லாயக்கில்லை' என்று சுட்டுக்கொல்வார்கள். ஒரு பொறியியல் தெரிந்த பெண் கட்டாய வேலைத்தலம் ஒன்றில் நடக்கும் கட்டிடப் பணியில் அஸ்திவாரம் பற்றிக் கருத்துச் சொன்ன ஒரே காரணத்துக்காக சுடப்படுவாள். நாஸிப் படை அதிகாரியான ஏமொன் கோத் (Amon Goth), தன்னுடைய காதலியுடன் உறவு கொண்டுவிட்டு ரிலாக்ஸ் செய்வதற்காக வீட்டு மொட்டைமாடியில் நின்றபடி தூரத்தில் வதைமுகாம்களில் வேலைசெய்யும் அப்பாவி யூதர்களைக் குரூரமாகச் சுட்டுக் கொல்வான். இதை எல்லாம் பார்க்கும் போது, மீண்டும் இப்படி ஒரு இனவதைக் காலம் வந்தால் என்னாகும் என்று நினைத்து நெஞ்சு பதறுவது உண்மையான உண்மை.

இந்தப் படத்தின் ஒரு காட்சியில் ஒரு குளியலறையை, விஷ வாயு அறையாக அதனுள் நிர்வாணப்படுத்தப்பட்டு அடைக்கப்படும் பெண்கள் எண்ணிப் பயப்படுவார்கள். அந்தக் காட்சியை ஸ்பீல்பெர்க் தன்னுடைய படத்திலிருந்து அப்படியே உருவி விட்டதாக செக் நாட்டு இயக்குனர் Juraj Herz என்பவர் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், 1983லிருந்தே ஸ்பீல்பெர்க் இந்தப் படத்தை தயாரிக்க முயன்று, தன் முதிர்ச்சியின்மையக் காரணம் காட்டி, படத்தை இயக்க வேறு இயக்குனரைத் தேடி கடைசியாக 1993ல் (பத்து வருடம் கழித்து) இயக்கினார். அந்தவகையில் ஸ்பீல்பெர்க்குக்கு ஒரு ராயல் சல்யூட் போடலாம், காலம் கழித்தும் காவியமாய் ஒரு படம் தந்தற்கு.


பி.கு: படம் கொஞ்சம் நீளம். 3 மணித்தியாலம் 15 நிமிடம் ஓடும். படத்தை முழுமையாகப் பார்க்க கொஞ்சம் பொறுமை தேவை. என்னதான் இந்தப் படத்தின் Genre Dramaவாக இருந்தாலும், இனம்புரியாத படபடப்பு தோன்றுவதென்னவோ உண்மை.

Monday 20 July 2009

வாயகரா தாத்தா-3 (18+)


வாயகரா தாத்தா சொன்ன விபரீதக் கதைகள் என்ற தலைப்பில் விகடனில் சிறிது காலத்துக்கு முன் வந்த வயது வந்தவர்களுக்கான ஜோக்ஸ்.

தன்னோட தோழி ராஜியம்மாகிட்ட ஜாலியம்மா ஒருநாள் கவலையா சொன்னாளாம், 'என்னடி வாழ்க்கை இது! சொந்த வீட்டுக்குள்ள இருந்துகிட்டே அவரோட அரை மணிநேரம் கூட நிம்மதியா இருக்கமுடியலை!' ‘ஏன்? குழந்தை தொல்லை பண்ணுதா?'னு கேட்டா ராஜியம்மா. ‘இல்லையே... குழந்தைங்க பள்ளிக்கூடத்துக்குப் போன பிறகுகூட எங்க ரெண்டு பேராலயும் சந்தோஷமா இருக்க முடியலை'ன்னா ஜாலியம்மா.

ராஜிக்கு ஒரே குழப்பமாப் போச்சு. இருந்தாலும் ‘எனக்குத் தெரிஞ்ச சைக்காலஜியைச் சொல்றேன். அந்த மாதிரி சமயத்தில உன் கணவரோட முகத்தை நீ நேரா பாத்ததுண்டா?'ன்னு கேட்டா. ஜாலியும் அசராம ‘ ஒரே ஒரு தடவதான் பார்த்தேன். அதுவும் வீட்டு ஜன்னலுக்கு வெளியே நின்னு எங்களையே வெறிச்சு பார்த்துக்கிட்டிருந்தாரு. அப்போ அவர் முகம் எவ்ளோ ஆக்ரோஷமா இருந்துச்சு தெரியுமா? அப்புறம் நாங்க எப்படி சந்தோஷமாக இருக்கிறதாம்.
<---><---><---><--->

ஒரே சமயத்துல தன் பெரியவீடு சின்னவீடு மீது மண்ணைய்யாவுக்கு சந்தேகம் வந்துடுச்சு. அவங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் தெரியாது என்பதால் இருவரையும் ஒரே கப்பலில் ஏத்தி உல்லாசப்பயணம் அனுப்பிவெச்சான். பயணம் முடிஞ்சு வந்ததும் மனைவிகிட்ட பிரயாண அனுபவங்களைக் கேட்கிற மாதிரி, ஒவ்வொரு பயணி பத்தியும் விசாரிச்சான். கடைசியா தன் சின்னவீட்டை அடையாளம் சொல்லி அவன் கேட்க ‘பொம்பளையா அவ! ச்சீ.. கப்பல்ல வந்த உருப்படியான எந்த ஆம்பளையையும் அவ விட்டு வைக்கலை!' என்றாள் முகத்தைச் சுளித்தபடி. கெட்டவார்த்தை சொல்லி சின்னவீட்டை திட்டியபடியே அவளை நேரில் பார்க்கப் போனான் மண்ணைய்யா.

எதுவும் தெரியாத மாதிரி தன் மனைவியை அடையாளம் சொல்லி அவளிடம் விசாரித்தான். சின்ன வீடு முகம் மலர்ந்து, 'ஆஹா, அந்தக் கப்பலில் வந்ததிலேயே அவதான் பெரிய உத்தமி' என்று சொல்லவும், மனசுக்குள் ஆண்டவனுக்கு நன்றி சொன்னபடியே எழுந்தான் மண்ணைய்யா. சின்ன வீடு மீதியை முடித்தாள், ‘அந்தப் பெம்பளை கடைசி வரை தன் புருஷனை விட்டு ஒரு நிமிஷம்கூட நகரலை. எப்பவும் அவங்க ரெண்டு பேர் மட்டும் ரூமுக்குள்ளேயே இருந்தாங்க'.
<---><---><---><--->
நன்றி: ஆனந்த விகடன்

Sunday 19 July 2009

பெண்ணா? புலியா?

ரொம்ப நாளைக்கு முன் ஒரு ராஜா இருந்தான். அவனுடைய தலைநகரில் ஒரு பெரிய ஸ்டேடியத்தில்தான் பொதுஜன கேளிக்கைகளும் தண்டனைகளும் நடக்கும். எல்லோரும் பார்த்து மகிழ்வார்கள். ராஜாவின் கவனத்தைக் கவரும் வகையில் ஒரு குற்றம் நடந்துவிட்டால் குற்றவாளியை ஸ்டேடியம் நடுவே கொண்டுவந்து விட்டுவிடுவார்கள். எல்லோருக்கும் தகவல் சொல்லி ஜனங்கள் சூழ்ந்திருக்க, குற்றவாளிக்குத் தண்டனை அளிக்கப்படும். என்ன தண்டனை? ராஜா சைகை காட்ட, குற்றவாளிக்கு எதிரே அருகருகே இருக்கும் ஒரே மாதிரியான கதவுகளில் ஒன்றை குற்றவாளி இச்சைப்படி தேர்ந்தெடுத்துத் திறக்கவேண்டும். அவ்வளவுதானா? இல்லையே... இனிதான் மேட்டரே இருக்கு.

ஒரு கதவைத் திறந்தால் அதனுள்ளிருக்கும் பசித்த புலி வெளிவந்து அவன்மேல் பாய்ந்து குத்திக் குதறிக் கொன்று விடும். மற்றொரு கதவைத் திறந்தால் அவன் வயசுக்கும், தகுதிக்கும் ஏற்ப ஒரு பெண், ராஜாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட அழகான பெண், காத்திருப்பாள். அவளைக் குற்றவாளி உடனே கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். ஒரு கதவு கல்யாணம், ஒரு கதவு புலி. எந்தக் கதவைத் திறப்பது என்பது குற்றவாளியின் விதியைப் பொறுத்தது. வேறுயாரும் குறுக்கிடுவதில்லை. அதாவது குற்றவாளிக்கு தண்டனையோ, மன்னிப்போ அவன் விதிப்படிதான் வழங்கப்படும். அதில் தனிமனித விருப்பு வெறுப்புகளின் செல்வாக்கு இருக்கவே இருக்காது என்பதுதான் அந்த ராஜா இந்தத் தண்டனை முறைபற்றிச் சொல்லும் நியாயம்.

ராஜாவுக்கு ஒரு அழகான பெண் இருந்தாள். அவள் வழமைபோலவே ஒரு அழகான ஏழை இளைஞனைக் காதலித்தாள். இந்தக் காதல் ராஜாவுக்குத் தெரிய வந்தது. உடனுக்குடன் இளைஞன் கைது செய்யப்பட்டான். தண்டனை? வழக்கம்போலத்தான்! இரண்டு கதவு, புலி அல்லது பெண். இந்த ஸ்பெஷல் கேஸுக்காக ராஜா பிரத்யேகமாகத் தயார் செய்தார். கோபம் அதிகமான, பசி அதிகமான புலி, அதே போல ராஜ்ஜியத்திலேயே அழகான பெண். இந்த விஷயங்களில் எல்லாம் பாரபட்சமே இல்லாத நல்ல ராஜா அவன். தண்டனை நாளும் வந்தது. காதலன் கொண்டுவரப்பட்டு ஸ்டேடியம் நடுவே விடுவிக்கப்பட்டான். ராஜாவுக்கு வணக்கப் போட்டுவிட்டு காதலியான ராஜகுமாரியைப் பரிதாபமாகப் பார்த்தான்.

ராஜகுமாரிக்கு எந்தக் கதவின் பின்னால் புலி, எந்தக் கதவின் பின்னால் பெண் என்பது தெரிந்திருந்தது. அவளின் வைராக்கியமும் காவலர்களின் பொன் ஆசையும் அதைச் சாத்தியமாக்கியிருந்தன. ராஜகுமாரியைப் பரிதாபமாகப் பார்த்த காதலன் கண்ணாலேயே ‘எந்தக் கதவு?' என்று கேட்டான். அதற்கு அவள் வலதுகையை சற்றே உயர்த்தி வலது பக்கக் கதவைக் காட்டினாள். அது அவள் காதலனுக்கு மட்டும்தான் தெரிந்தது. காதலன் விறுவிறுவென்று உற்சாகமாக நடந்து போய் கதவைத் தயக்கமே இல்லாமல் திறந்தான்.

வெளிவந்தது புலியா? பெண்ணா? புலி என்றால், தான் உயிரையே வைத்திருக்கும் காதலன் துடிதுடித்துச் செத்துப்போவதை எப்படி ராஜகுமாரியால் தாங்கிக் கொள்ள முடியும்? பெண் என்றால், மற்றொரு பெண்ணுடன் தன் காதலன் சுகித்து வாழ்வதை எப்படி அவளால் சகித்துக் கொள்ள முடியும்?

புலியா? பெண்ணா? எது கதவுக்குப் பின்னாலிருந்தது? நீங்கள்தான் சொல்லுங்களேன் வாசகர்களே!

Frank Stockton (1834-1902) என்ற அமெரிக்க எழுத்தாளர் 1882ம் வருடம் எழுதிய 'The Lady or the tiger?' என்ற தலைப்பிடப்பட்ட மிகப்பிரபலமான கதை இது. மேலே நான் தந்த இந்தக் கதையின் தமிழ் மொழிபெயர்ப்பைச் செய்தவர் யார் என்று ஒரு போட்டி அறிவிக்கலாம்தான், ஆனால் வசனநடையிலேயே தெரிந்துவிடும் அது சுஜாதா என்று.

Saturday 18 July 2009

மேடைப் பேச்சு


மேடையில் அல்லது கூட்டத்தில் பேசுவது பற்றி நினைத்தால் இன்றைக்கும் எனக்குக் கரப்பான் பூச்சி ஊர்வது போல் ஒரு உணர்வு தோன்றும். கனடாவில் எனக்குக் கற்பித்த ஆசிரியர் Tom Kauffmann மேடை/கூட்டங்களில் பேசுவதில் கில்லாடி. நான் கல்லூரியில் வேலை செய்யும்போது இவரது கருத்தரங்குகள் இரண்டில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவ்வாறு பங்குபெற்ற கருத்தரங்குகள் தான் எனது கடைசி செமெஸ்டரில் Developing a Business Plan என்ற செயல்முறைப் பாடத்துக்கு அவரது வகுப்பைத் தேர்ந்தெடுக்கத் தூண்டியது. அவர் அடிக்கடி சொல்வார், ‘மனிதர்கள் இரண்டே இரண்டு விஷயங்களுக்குத் தான் மிகவும் பயப்படுகிறார்கள். ஒன்று மரணம். இன்னொன்று மேடை/கூட்டங்களில் பேசுவது (Death and Public Speaking). எல்லா மனிதர்களுக்கும் இந்த இரண்டும்தான் மிகப்பெரிய பயங்கள். நான் ஒன்றை வென்று விட்டேன். மற்றதை வெல்லவே முடியவில்லை'. உண்மையிலேயே பேச்சுத்திறண் Tom இடம் கொட்டிக் கிடக்கிறது. அதனால்தான் அவருடைய கருத்தரங்குகளுக்கு கூட்டம் ஜே ஜே என்று இருக்கிறது.

என்னைப் பொறுத்த வரை மேடைப்பேச்சு என்பது ரொம்பவே படுத்தி எடுப்பது. என்னை முதன் முதல் மேடையேற்றியவர் ஒரு விஞ்ஞான ஆசிரியர் என்றால் நம்புவீர்களா? அவர் எனது பள்ளிக்காலத்தில் விஞ்ஞானம் கற்பித்த திரு. ந. விஜயகுமார் அவர்கள். வீ. கே. என்று அழைக்கப்படும் இவர்பற்றி ‘அந்த்ராக்ஸ்' என்ற பதிவில் ஏற்கனெவே குறிப்பிட்டுள்ளேன். இவர் ஒரு முறை ஒரு சின்ன Assignmentக்காக ‘பச்சை வீட்டு விளைவு' பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொன்னார். ரொம்பவே போரடித்ததால் நான் ‘ஆக்ஸிஜன், காபண்டை ஆக்சைடு' என்றெல்லாம் எழுதாமல், அவற்றின் குறியீடுகளையும் பயன்படுத்தாமல், சுத்தத் தமிழில் 'உயிர் வாயு, கரியமில வாயு' என்றெல்லாம் எழுதிக்கொண்டு போய் கொடுத்தேன் (அப்பா ஒவ்வொருநாளும் 7:30க்கு வயலும் வாழ்வும் கேட்டதன் பக்க விளைவு). விஞ்ஞானம் சரியாகவும், தமிழ் அழகாகவும் இருந்த கட்டுரை வீ.கே. க்கு ரொம்பவே பிடித்துப் போக, ‘செவ்வாய்க்கிழமைப் பொதுக் கூட்டத்தில் இதை நீ பேசுகிறாய்' என்று விட்டார்.

என்னதான் முயற்சி பண்ணியும் எழுதியதைப் பேச முயல்வது முட்டாள்தனம் என்ற முடிவை என்னால் மாற்ற முடியவில்லை. வீ.கே. அதெல்லாம் முடியாது நீ மேடை ஏறத்தான் வேண்டும் என்று விட்டார். கடைசியில் ஒரு Fileக்குள் எழுதிய கட்டுரையை வைத்து, மேடையில் இருந்த Standல் Fileஐ வைத்து, பேசுவது போல் Modulation எல்லாம் மாற்றி வாசித்து முடித்தேன். கீழே இறங்கி வந்தபோது ‘நல்லா இருந்தது' என்றார் வீ.கே. இதில் துரதிர்ஷ்டம் என்னவென்றால் அந்த ‘வாசிப்பு' முடிந்த பின்னர் எங்களின் ஆங்கில ஆசிரியர் சத்தியசீலன் என்னை தனது நாடகங்களில் மேடையேற்ற ஆரம்பித்துவிட்டார். அதன் பின் பள்ளிக் காலத்தில் பொங்கு தமிழ் நிகழ்வில் மாணவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்கியது மட்டுமே என்னுடைய இன்னொரு மேடைப் பேச்சாக இருந்தது. கனடா வந்த பின் பல Projectகளின் கடைசி Presentation கிட்டத்தட்ட ஒரு மேடைபேச்சு போல் Seminar Hallகளில் நடந்த போதும் PowerPoint உபயத்தில் தப்பித்துக் கொள்கிறேன்.

நான் சிறுவயதில் எங்களூர் கோயிலில் பத்து நாள் திருவிழாவிலும் நிகழ்த்தப்படும் சமய சொற்பொழிவுகளை ரசித்துக் கேட்டத்துண்டு. பின்னர் ‘கோஷ்டி' என்ற பெயரில் சினிமா பாடல்கள் பாடப்பட்டன, அத்துடன் சொற்பொழிவுகள் வழக்கொழிந்து போய்விட்டன. அதன் பின் முக்கால்வாசி மேடைப் பேச்சுகள் பாடசாலைக் காலங்களில் கேட்டவைதான். எங்கள் சமய ஆசான்கள் மற்றும் சொற்பொழிவாளர்களான நவம் சேர், கண்ணன் சேர் போன்றோரது பேச்சுக்கள் நன்றாக இருக்கும். அதே போல் கணிதம் கற்பிக்கும் அம்பாள் பக்தரான மரியதாஸ் மாஸ்டரின் பேச்சுக்களும் ஈர்க்கும் (ஒரு முறை கணிதத்தில் இருக்கும் மூடிய உருவங்களைப் பற்றிப் பேசவைத்து மார்க் வேறு போட்டார் மரி). மற்ற ஆசான்களும் பரவாயில்லை. பள்ளிக் காலத்தில் என்னை மிகவும் கவர்ந்தது பலரது எதிர்ப்புக்களின் மத்தியில் அதிபராக இருந்து, சொந்தக் கருத்தை வெளியே சொன்னதற்காக அடிவாங்கிய அதிபர் ஸ்ரீபதி அவர்களின் மேடைப்பேச்சுக்கள். 'அன்பான மாணவர்களே, ஆசிரியர்களே' என்று ஆரம்பித்து இயல்பான நடையில் ‘நாய் தான் வாலை ஆட்டலாமே ஒழிய, வால் நாயை ஆட்டமுடியாது' போன்ற எள்ளலுடன் பேசுவார். அவரது கொள்கைகள் சில சிலருக்குப் பிடிக்காமல் போனாலும் நல்ல ஒரு நிர்வாகி அவர்.

மேடைப்பேச்சை எல்லோருமே Masterபண்ணி விடுவதில்லை. எழுத்தாளர் சுஜாதா கூட அடிக்கடி அதில் தான் கொஞ்சம் Weak என்பதை சொல்லியிருக்கிறார். அவரும் அடிக்கடி எழுதிவைத்துப் பேசுபவர்தான். ஒரு மூறை கிண்டி பெண்கள் பாலிடெக்னிக்கில் கம்ப்யூட்டர் பற்றிப் பேச அழைத்திருக்கிறார்கள். கம்ப்யூட்டரில் இரண்டு வகை மெமரிகள் உள்ளன, தற்காலிகம், நிரந்தரம். நமக்கு இன்று காலை என்ன சாப்பிட்டோம் என்பது நினைவிலிருக்கும் (தற்காலிக மெமரி). மார்ச் இருபதாம் தேதி காலை என்ன சாப்பிட்டோம் என்பது நினைவிலிருக்காது (நிரந்தர மெமரி). இப்படி இலகுவாக கம்ப்யூட்டர் பற்றி விளக்குவோம் என்று விட்டு சுஜாதா முன்வரிசையில் இருந்த பெண்ணிடம் கேட்டிருக்கிறார், ‘உன் பெயர் என்னமா?'. அவள் நாணம், தயக்கம், பக்கத்து இருக்கைப் பெண்ணின் ‘சொல்லுடி' ஆகியவற்றின் பின் 'கலைச் செல்வி' என்றாளாம். இவர் ‘இன்று காலை என்ன சாப்பிட்டாய்?'. அவள் ‘மோர் சாதம்'. இவர் ‘மார்ச் 20 காலை என்ன சாப்பிட்டாய்'. அவள் தயங்காமல் ‘அதே தான், எங்க வீட்டில எப்பவுமே காலையில மோர்சாதம்தான்'. சுஜாதாவின் சொற்பொழிவு அங்கேயே தடம்புரண்டது. இதை அவரே ஒரு கட்டுரையில் சொல்லியிருந்தார். அவரது பாணி பெரும்பாலும் எழுதிவைத்து வாசிப்பது. அவரது எழுத்து வாசிக்க சுவையாயிருக்கும், ஆனால் நாங்களெல்லாம் அதே முறையைப் பின்பற்ற முன் கல், கூழ்முட்டை, அழுகினதக்காளி ஏதாவது பேச்சைக் கேட்பவர்களுக்குக் கிடைக்குமா, கிடைக்காதா என்பதை உறுதிசெய்துகொள்வது உசிதம்.


தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மத்தியில் பல நல்ல பேச்சாளர்கள் இருந்தார்கள். அறிஞர் அண்ணா, கருணாநிதி போன்றோரின் பேச்சுக்களை விளங்கியதோ இல்லையோ மக்கள் ரசித்தார்கள். ஜனரஞ்சகமாகவும், உணர்வு பூர்வமாகவும் மக்களைக் கவரக்கூடிய இன்னொருவர் வைகோ. சமயப் பேச்சாளர்களில் வாரியார் அவர்கள் சொற்பொழிவுகளின் மத்தியில் நகைச்சுவையைத் தூவி புதிய பாதை ஏற்படுத்தினார் (பலர் வாரியார் பாணியை ஈயடிச்சான் காப்பி அடித்துத் தோற்றார்கள். வாரியாரின் இயல்பான நகைச்சுவை அவர்களிடம் வரவில்லை). சில சமயப் பேச்சாளர்கள் ‘பாலும் அதுவும் இதுவும் கலந்து' 'பாற்கடலை நக்க வந்த பூனை' என்றெல்லாம் கடுப்படிப்பார்கள். எங்கள் பாடசாலையிலும் வாசு போன்றவர்கள் இப்படித்தான் கொல்லுவார்கள். சாலமன் பாப்பையா பட்டிமன்றப் பாணியையே மாற்றினார். அவர் வழியில் லியோனியும். இப்படியாக மேடைகளில் பேசுவதை ஒரு கலையாக மாற்றி அதில் முக்குளித்தவர்களைப் பார்க்கும்போது இன்றைக்கும் எனக்கு ஒரு பிரமிப்பு ஏற்படும். ஆனால் அந்த ரிஸ்க்கையெல்லாம் எடுக்க நான் தயாராயில்லை. எழுதுவது ஓரளவுக்கு நல்லா வருகிறபடியால் அதையே தொடரலாம என்று நினைக்கிறேன். யாராவது என் எழுத்துக்களை திட்ட நினைத்தாலும் முகத்துக்கு நேரே திட்ட முடியாது. திட்டின் வீரியம் குறைந்து விடுவது எழுதுவதில் உள்ள சௌகரியம்

Friday 17 July 2009

தாலாட்டும் பூங்காற்று

ராஜாவின் இசையில் எஸ். ஜானகி பல பாடல்களைப் பாடியிருக்கிறார். பல பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது. அழகான வரிகளுக்கு ராஜா அமைத்திருக்கும் அற்புதமான இசை, பிரியதர்ஷன் அதற்கு கார்த்திக், பானுப்ரியா மூலம் வடிவம் கொடுக்க, கிட்டத்தட்ட முழுமையான ஒரு மெலடி இந்தப் பாடல். பாடல் வரிகளைக் கீழே தருகிறேன். காட்சியோடு கானமும் கேட்க இங்கே அழுத்துங்கள்.


தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

(தாலாட்டும் பூங்காற்று)

நள்ளிரவில் நான் கண்விழிக்க
உன் நினைவில் என் மெய்சிலிர்க்க
பஞ்சணையில் நீ முள் விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
காணும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர
ஆடுது பூந்தோரணம்

(தாலாட்டும் பூங்காற்று)

எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்
காலை நான் பாடும் காதல் பூபாளம்
காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும்
ஆசையில் நாள்தோறும் நான் தொழும்
ஆலயம் நீயல்லவா

(தாலாட்டும் பூங்காற்று)

ராஜா என்றைக்குமே ராஜாதான். இதே கோபுர வாசலிலே படத்தில் ‘காதல் கவிதைகள்' என்று இன்னொரு அற்புதமான பாட்டுப் போட்டிருப்பார். வரிகள் கிடைத்ததும் பதிவிடுகிறேன்.

Monday 13 July 2009

கிரிக்கெட் வசைபாடிகள்-1 (18+)

கிரிக்கெட்டில் இப்போதெல்லாம் வசைபாடுதல் (Sledging) கிட்டத்தட்ட ஒரு நாகரிகமான செயலாகவே மாறிவிட்டது. இப்படியான வசைபாடுதல்கள் சில வேளைகளில் வரம்பு மீறியதாகவும், சில வேளைகளில் மிகவும் நகைச்சுவையாகவும் அமைந்து விடுவதும் உண்டு. அப்படிப்பட்ட சில சம்பவங்களை இங்கே தொகுத்திருக்கிறேன்:

ஃப்ராங் டைசன் - ராமன் சுப்பா ராவ் (Frank Tyson- Raman Subba Rao)- 1954

இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி. ஓவல் மைதானத்தில் நடந்தது. பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ் 133, இங்கிலாந்து 130. இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் ஆடியபோது, டைசன் வீசிய ஒரு பந்து இம்தியாஸ் அகமதுவின் மட்டை விளிம்பில் பட்டு, ஸ்லிப்பில் நின்ற ராமன் சுப்பா ராவிடம் போனது. அல்வா மாதிரி வந்த கேட்சை விட்டதோடு மட்டுமல்லாமல் கால்களுக்கிடையே பந்தை நுழையவிட்டு 4 ஓட்டங்களையும் கொடுத்தார். ராமன் கொஞ்சம் ஜெண்டில்மேன் வேறு. ஓவர் முடிவில் டைசனிடம் சென்று, மன்னித்துவிடுங்கள் டைசன், நான் எனது கால்களை இறுக மூடியிருக்க வேண்டும்' என்றார். உச்சக்கட்ட கடுப்பிலிருந்த டைசன் சிம்பிளாகப் பதில் சொன்னார் ‘இல்லை அப்பனே, உன்னுடைய அம்மாதான் அவ்வாறு மூடியிருக்கவேண்டும்'.

கிளென் மெக்ராத்- எட்டோ ப்ராண்டெஸ் (Glen McGrath-Eddo Brandes)

ஸிம்பாப்வேயின் ப்ராண்டெஸ்சுக்கும் பேட்டிங்குக்கும் வெகு தூரம். ஆனால் நல்ல நகைச்சுவை உணர்வு மிக்கவர். இவரைவிட மோசமான பேட்டிங் மெக்ராத்தினுடையது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடியபோது மெக்ராத்தின் ஒரு பந்தையாவது தொடுகிற தூரத்துக்குக் கூட ப்ராண்டஸ்சால் நகர முடியவில்லை. ஆனால் அவுட்டாகிப் போகவும் இல்லை. கடுப்பான மெக்ராத் ‘ஏம்பா நீ இவ்ளோ குண்டா இருக்கே' அப்டீன்னு கேட்டார் ப்ராண்டஸ்சைப் பார்த்து. அவர் கூலாகப் பதில் சொன்னார் ‘அது வந்து எப்டீன்னா, உங்க வைஃப் கூட ஒவ்வொரு தடவையும் காதல் பண்ணும்போது, ரொம்பத் திருப்திப் பட்டு ஒரு பிஸ்கட் தருவாங்க. அதைத் தின்னு தின்னே கொழுத்துப் போயிட்டேன்'. மெக்ராத் முகத்தில் ஈயாடவில்லை.

ப்ரெட் லீ- இன்சமாம் உல் ஹக் (Brett Lee- Inzamam ul-haq)

பெண்களை மயக்கும் அழகான சிரிப்புக்கு சொந்தக்காரர் லீ. மைதானத்தில் கூட மற்ற ஆஸ்திரேலியர்களோடு ஒப்பிடும்போது சினேகபாவம் கொண்டவர் லீ. பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டி. பவுண்ஸர், ஜோக்கர் எல்லாம் போட்டுப் பார்த்தும் இன்சமாமை அசைக்க முடியவில்லை. கடுப்பான லீ, பந்துளை அதிவேகமாக வீச ஆரம்பித்தார். இன்சமாம் தொடவேயில்லை. இன்சமாமை வாய்ச்சண்டைக்கு இழுக்காமல் முறைத்துப் பார்த்தே கடுப்பேத்தியும் பிரயோசனமில்லை. 150 மைல் வேகமாக ஒரு பந்தை வீசிவிட்டு முறைத்த லீயைப் பார்த்து இன்சமாம் சொன்னார் ‘போப்பா போ... முதல்ல எனக்கு ஓஃப் ஸ்பின் போடுறத நிப்பாட்டு'. லீயின் ரியாக்‌ஷனை சொல்லியா தெரிய வேண்டும்.

சர். விவியன் ரிச்சார்ட்ஸ்- கிரெக் தாமஸ் (Sir Vivian Richards- Greg Thomas)

சர். விவ் உலக கிரிக்கெட் மட்டுமல்ல இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டிலும் கலக்கியவர். ஒருமுறை க்ளமோர்கன் (Glamorgan) மற்றும் சமர்செட் (Somerset) அணிகளுக்கிடையே போட்டி. விவ் சமர்செட் அணிக்காக ஆடிக்கொண்டிருந்தார். க்ளமோர்கன் வேகப் பந்து வீச்சாளர் தாமஸ் இரண்டு மூன்று முறை விவ்வின் அடிக்கும் முயற்சிகளைத் தோற்கடித்த மமதையில் விவ்விடம் சொன்னார் விவ், கிரிக்கெட் பந்து தெரியுமா கிரிக்கெட் பந்து... அது சிவப்பாக, உருண்டையாக, ஐந்து அவுண்ஸ் நிறையில் இருக்கும். உனக்கு அது தெரியாது போலிருக்கிறது' என்றார். சிங்கம் சிலிர்த்து அடுத்த பந்தை பவுண்டரிக்கு அடித்துவிட்டுச் சொன்னது, ‘அடாடா தாமஸ், உனக்குதான் கிரிக்கெட் பந்து எப்படியிருக்கும் என்று தெரியுமே. ஓடிப்போய் எடுத்துட்டு வா பார்க்கலாம்'.

Saturday 11 July 2009

பள்ளிக்கூட மேடை நாடகங்கள்

மேடை நாடகங்கள் சுவாரசியமானவை. பள்ளி நாட்களில் வாணிவிழா, பாடசாலை பரிசளிப்பு தினம் போன்ற நாட்களிலெல்லாம பல நாடகங்களைப் பார்த்திருக்கிறேன். நாட்டிய நாடகங்கள் கூட ஹாட்லி மேடையில் ஏறியிருக்கிறன. சத்தியசீலன் மாஸ்டரின் அசாத்திய துணிச்சல் காரணமாக இரண்டொரு ஆங்கில நாடகங்களில் நானும் நடித்திருக்கிறேன். அப்படி என் மனதில் இன்றைக்கும் பசுமையாக இருக்கும் சில நாடகங்கள் பற்றிப் பகிர்ந்து கொள்கிறேன்.

முதல் நாடகம் ஹாட்லியில் சேர்ந்த முதல் வருடத்தில் வந்த வாணிவிழாவில் (விஜயதசமி அன்று) அப்போதைய உயர்தர மாணவர்கள் போட்ட அம்பிகாபதி நாடகம். அந்தக் காலத்தில் புகழ்பெற்றிருந்த ‘ஆசை' படத்து ‘ஷாக்கடிக்குது சோனா' பாடலைக் கிண்டல் செய்யும் ஒரு ஊர்ப்பெரிசு கம்பர் மகன் அம்பிகாபதிக்கும் குலோத்துங்க சோழன் மகள் அமராவதிக்குமான காதல் கதையை சொல்வதாக ஆரம்பித்து, பின்னர் குலோத்துங்கன் காலத்தைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருந்தார்கள். கம்பராக நடித்த வாணிமுகுந்தன் அண்ணா பற்றி நாடக ஆர்வமுள்ள பையன்கள் உயர்வாகப் பேசினார்கள். அந்நாடகத்தில் எனக்குப் பிடித்தது, நாடகம் தொடங்க முன் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தமது வசனம் ஒன்றைப் பேசவைத்து, பின்னணியில் ‘கம்பராக வாணிமுகுந்தன்' போன்ற அறிமுகங்களை அலுப்படிக்காமல் செய்திருந்தார்கள். இன்றைக்கு அந்த நாடகம் பற்றிய நினைவுகளை மீட்டும் போதும் ஒருவிதமான பிரமிப்பு இருந்தது. அந்த நாடகத்தில். நெறியாண்டவர்கள் யாரென்பது எனக்குத் தெரியவில்லை.

இரண்டாவது நாடகம் ஒரு புதுமையான நாட்டிய நாடகம். பத்மாசுரன் என்றொரு அசுரன் யார் தலையிலும் கைவைத்தல் அவர்கள் எரிய வேண்டும் என்ற வரத்தை சிவனிடம் பெற்று, வரத்தை அவரிலேயே பரிசோதிக்க முயல, விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்துவந்து காப்பாற்றுவதாக ஒரு கதை உண்டு. அதிலே ஆல்பேர்ட் ஐன்ஸ்டீனின் E = mc2 என்ற Theory of Relativityஐ புகுத்தி அதகளம் பண்ணினார்கள் ஆசிரியர்கள் ராகவானந்தன் மற்றும் ரகுவரன் ஆகியோர். 'ஓம் நமசிவாய' என்ற பின்னணியோடு நாம் கண்ட சிவலோகத்தை ‘பஸ்மாசுரன்' என்ற அந்த நாடகத்தில் ‘ஈ சமன் எம். சீ. வர்க்கம்' என்ற சுலோகத்துடன் புதிதாகக் காட்டினார்கள். ‘என்னவரம் வேண்டும் கேள், பஸ்மாசுரா என்ன வரம் வேண்டும் கேள்' என்று சிவனாக வந்து ஆடிய விமலேஸ்வரா அண்ணா எங்களின் ஆதர்சம் ஆனார்.

அதன்பிறகு மனதில் நின்ற இன்னொரு நாடகம், 'சத்தியவான் சாவித்திரி'. இதில் அப்படியென்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் ‘சிங்கத்தால் நானடைந்த பங்கம் தீர்த்ததாலே' பாடல் புகழ்பெற்றது. ஆனால் ‘பூனையால் நானடைந்த பங்கம் தீர்த்ததாலே' என்றொரு பாட்டுக் கேட்டிருக்கிறீர்களா. சத்தியவான் சாவித்திரி காதலுக்கு சமாந்தரமாக சத்தியவானின் தோழன், சாவித்திரியின் தோழி ஆகியோரை வைத்து ஒரு காமெடி ட்ராக் ஓட்டியிருப்பார்கள். அதில் சத்தியவானின் தோழனாக வந்து பூனையிடம் சாவித்திரியின் தோழியைக் காப்பாற்றிய, நம்ம வகுப்புத் தோழன் செந்தூரனின் அண்ணா (பெயர் ராஜேந்திரபிரசாத்தோ என்னவோ, ஞாபகமில்லை, 'பனி' செந்தூரனின் அண்ணா என்றுதான் அறிமுகம்), சத்தியவானாக நடித்த வைகுந்தன் அண்ணாவைவிட புகழ் பெற்றார்.

அடுத்த நாடகம் எங்கள் வகுப்புத் தோழர்கள் போட்ட 'ஐயா எலெக்‌ஷன் கேட்கிறார்'. நவராத்திரியின் ஒன்பது நாட்களில் ஏழாம் நாள் பூசை எங்கள் வகுப்பினுடையது. பூசை முடிந்ததும் ஆகக் குறைந்தது கலை நிகழ்ச்சியாவது வேண்டும். ஜனார்த்தனன் பாட்டு, யாரோ பேச்சு என்று நான்கு தேற்றினாலும் ஐந்தாவது நிகழ்ச்சி மாட்டவே இல்லை. பூசையில் சகலகலாவல்லி மாலை பாடும் நேரத்தில் அரவிந்தன், வாசு, தர்ஷன் கூட்டணி வாய்க்கு வந்த வசனம் எல்லாம் பேசித் தேற்றிய நாடகம்தான் ‘ஐயா எலெக்‌ஷன் கேட்கிறார்'. வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை, கறுப்புக் கண்ணாடி என்று டிபிகல் எம். ஜி. ஆர் போல மேடை ஏறி, ‘பூமி உருண்டை அல்ல, தட்டைதான்' என்பதற்கு ஆதாரம் எல்லாம் கூறி அதகளம் பண்ணினான் அரவிந்தன் (ஹாட்லியில் அரவிந்தனின் கடைசி மேடை அது). கூடவே சிறு நீர்ப்பாசனத்தை சிறுநீர் பாசனம் என்று அருணுக்கு வசனம் வேறு. அப்போதுதான் யாழ்ப்பாணத்தில் கட்சி அரசியல் மீண்டும் தலைதூக்கியது என்பதால் காலத்துக்கேற்ற நாடகமாக எல்லோரையும் கவர்ந்தது ‘ஐயா எலெக்‌ஷன் கேட்கிறார்'.


கடைசி நாடகம், சத்தியசீலன் மாஸ்டரின் 'Cloning in 10 Minutes'. இரண்டு இரட்டையர்கள் சிக்கியதால் கங்கூலியின் பந்து பட்டு ஆண்மையிழந்த அமைச்சருக்கு இரண்டாவதாக ஒரு பிள்ளையை ஒரு Cloning Machine மூலமாக ஒரு பொறியியலாளரும், வைத்தியரும் உருவாக்கிக் கொடுப்பதாக அமைக்கப்பட்ட ஜாலியான நாடகம். தனஞ்சயன் டாக்டராகவும் நான் பொறியியலாளனாகவும் நடித்ததாக ஞாபகம். யார் எதுவாக நடித்தோம் என்பதை விட' அமைச்சருக்கு ஏன் இனிமேல் புத்திர பாக்கியம் கிட்டாது என்பதற்கான கதையை தனஞ்சயன் எனக்குச் சொல்வதாக அமைந்த காட்சியில், சத்தியன் மாஸ்டர் ஸ்கிரிப்டில் ‘No-Ball' என்ற வார்த்தையை வைத்துக் கதகளி ஆட, அதற்கு தனஞ்சயன் கொடுத்த காட்சி வடிவத்துக்கு முன் வரிசை ஆறாம் வகுப்புப் பையன்கள் தொடங்கி, பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர்கள், ஆசிரியர்கள், மற்றைய நலன் விரும்பிகள் என்று எல்லோருமே வெடித்துச் சிரித்தார்கள். இது எனக்கும் தனஞ்சயனுக்கும் ஹாட்லியில் கடைசிமேடை.

எந்தவிதமான அரங்க வடிவமைப்பு வசதிகளும் எங்களுக்கு இருக்கவில்லை. ஒப்பனை ஓரளவுக்கு நேர்த்தியாக வந்தாலே பெரிய விஷயம். இதையெல்லாம் தாண்டி, குறுகிய வசதிகளுடன்கூட நல்ல நாடகங்களைப் பள்ளிமேடைகளில் காணக்கூடியதாயிருந்தது. காரணம், என்னவித புதுமையையும் துணிந்து ஏற்றுக்கொண்ட மாணவர்களும், அப்படியான புதுமைளை ஊக்குவித்த நல்ல ஆசிரியர்களும் எங்கள் பள்ளிக்காலத்தில் எங்கள் கூடவே இருந்தார்கள். கூடவே ‘Oliver Twist' ஆகவும், ஆங்கிலத்தில் வசனம் பேசும் அரிச்சந்திரனாகவும் நடுவர்களையே கண்கலங்க வைக்கும் அபார திறமைசாலிகளும் இருந்தார்கள், அரை மணியில் நாடகம் தயார்செய்யும் அற்புதமான படைப்பாளிகளும் இருந்தார்கள். இன்றைக்கும் ஹாட்லி மேடையில் நாடகங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் ஒரு ஆங்கில நாடகத்தில் இரு பாத்திரங்களை ஏற்று நடித்ததாக என் தம்பி சொன்னபோது சந்தோசமாக இருந்தது.

எழுதாத விதிகள் (எழுதுபவர்களுக்கு மட்டும்)


சுஜாதாவின் 'ரத்தம் ஒரே நிறம்' நாவலின் நாலாவது பதிப்புக்கு எழுதியிருந்த முன்னுரை எனக்குப் பிடித்திருந்தது. 18.12.2005 ல் அவர் எழுதிய யதார்த்தம், அங்கதம் எல்லாம் கலந்த அந்த முன்னுரையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். நாவல் கூட நல்லாயிருக்கும். சிப்பாய்க் கலகத்தில் ஒரு தமிழன் கலந்து கொண்டால் எப்படியிருக்கும் என்ற கற்பனைக் கதை அது. சில பல நிஜத் தகவல்களையும் கலந்து உண்மைக்கதை போலச் சொல்லியிருப்பார். சமீபத்தில் இரண்டாம் முறையும் வாசித்தேன். அப்போது கண்ணில் பட்டதுதான் இந்த முன்னுரை.

நான் இதுவரை இரண்டு சரித்திர நாவல்களை எழுதியிருக்கிறேன். ‘ரத்தம் ஒரே நிறம்’, ‘கந்தளூர் வசந்தகுமாரன் கதை’. ‘ரத்தம் ஒரே நிறம்’ கதைக்கே ஒரு சிறிய சரித்திரம் உண்டு. முதலில் அது ‘கறுப்பு சிவப்பு வெளுப்பு’ என்ற தலைப்பில் குமுதத்தில் தொடர்கதையாக அட்டகாசமாகத் துவங்கியது, மணியம் செல்வனின் அழகான சித்திரங்களுடன். மூன்று வாரங்கள் சிறப்பாக வந்த பின் எதிர்பாராத ஓர் எதிர்ப்பு அதற்கு நாடார் இனத்தவரிடமிருந்து வந்தது. நான் அப்போது பெங்களூரில் இருந்தேன். எனக்கு ஏகப்பட்ட மிரட்டல் கடிதங்கள் வந்தன. தமிழில் புதுப்புது திட்டுவார்த்தைகள் எல்லாம் எனக்கு பாடமாயின. தொலைபேசியில் கொலை பேசினார்கள். குமுதம் இதழைக் கடையில் எரித்தார்கள். அதன் ஆசிரியருக்கு நாடார் சங்கத்தைச் சார்ந்தவர்கள் கதையை உடனே நிறுத்தும்படியும் மன்னிப்புக் கேட்கும்படியும் வற்புறுத்தினார்கள்.

ஆசிரியர் ஏ.எஸ்.பி. எனக்கு போன் போட்டு ‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார். நான் ‘ஓர் இனத்தின் மனத்தைப் புண்படுத்திவிட்டதாகத் தெரிகிறது. அவர்களின் தற்போதைய கோபத்தில் கதையின் நோக்கம் அதுவல்ல, அடுத்துவரும் அத்தியாயங்களைப் படித்தால் தெரியும் என்று என்னதான் விவாதித்தாலும் உணர்ச்சிபொங்கும் இந்தக் கணத்தில் யாரும் ஒத்துக்கொள்ளப் போவதில்லை. மேலும் தொடர்ந்து எழுதினால் என் வலது கையை வெட்டுவேன் என்று சொல்லியிருக்கிறார்கள். எனக்கு இடது கையால் எழுதவேறு பழகவேண்டும். நிறுத்திவிடுங்கள். அடம்பிடித்து மரணத்துடன் விளையாட இது ஒன்றும் பிரெஞ்சுப் புரட்சி அல்ல’ என்றேன். கதை நிறுத்தப்பட்டது.

ஆசிரியர் ஏ.எஸ்.பி ஆறுமாதம் கழித்து கோபம் அடங்கியதும் இதே கதையை தலைப்பை மாற்றி வெளியிடலாம் என்றார். ‘கருப்பு சிவப்பு வெளுப்பு’ அதேபோல் ஆற அமர ‘ரத்தம் ஒரே நிறமாக’ வெளிவந்தது. சிப்பாய்க்கலகத்தைப் பற்றிப்படித்தபின் அதில் ஒரு தமிழன் கலந்துகொண்டால் எப்படி இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்த்த கதை இது.

இப்போது இதைப்படிக்கும்போது எதற்காக இதை எதிர்த்தார்கள் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதை மறுபடி கிளற எனக்கு இஷ்டமில்லை. ஆனால் இந்த சம்பவத்தில் எனக்குப் பல விஷயங்கள் புலனாயின. தமிழ் சமூகத்தில் சில கதைகளை சிலர்தான் எழுதலாம் என்ற எழுதப்படாத ஓர் விதி இருக்கிறது. அதை மீறினதால் வந்த வினை என்பது இப்போது புரிகிறது. எழுத்தின் மேல் பிடிவாதம் இருப்பதோ, எழுதினது வேதவாக்கு, அதை யாராவது வழிமறித்தால் உயிருள்ளவரை போராடுவேன் என்பதெல்லாம் விஞ்ஞானச் சூழ்நிலையில் வளர்ந்த எனக்கு சிறுபிள்ளைத்தனம்.

எல்லாப் போராட்டங்களும் அலுத்துவிடுகின்றன. புதிய காரணங்கள் தேடப்படுகின்றன. ‘ரத்தம் ஒரே நிறம்’ மீண்டும் வந்தபோது முதலில் அதை எதிர்த்தவர்கள் யாருமே அதைக் கண்டுகொள்ளவில்லை. இந்தப் புதியபதிப்பை சிறப்பாக வெளியிடும் உயிர்மை பதிப்பகத்தார்க்கு என் நன்றிகள்.

-சுஜாதா (18.12.2005)

Friday 10 July 2009

வைகோ என்றொரு கடுப்பு

வைகோ அல்லது வை. கோபல்சாமி பற்றி நான் முதன் முதலாகக் கவனிக்க ஆரம்பித்தது 1993ல் அவர் தி.மு.க. விலிருந்து விலகி (விலக்கப்பட்டு) ம.தி.மு.க. ஆரம்பித்த போதுதான். ரொம்ப சின்னவயதுதான் எனக்கு, இருந்தும் கருணாநிதி, ஜெயலலிதா, கபில்தேவ், அஸாருதீன் போன்ற பெயர்களெல்லாம் அப்பா மூலமாகப் பரிச்சயமாகியிருந்தது. கருணாநிதியின் பேச்சுக்களை அப்போ ஆல் இந்தியா ரேடியோவில் ஒலிபரப்பும் போதெல்லாம் கேட்டிருக்கிறேன், அப்பா பரிந்துரைத்ததால். அவரது தமிழ் நிஜமாயே என்னை அப்போ கட்டிப்போட்டிருந்தது. அந்த சின்ன வயதிலேயே ஜெயலலிதா என்றால் ரொம்பக் கெட்டவர் என்ற ஒரு விம்பமும் என் மனதில் விழுந்தது. கருணாநிதியை விட்டுப் பிரிந்த, அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை அடுக்கிய வைகோவை எனக்கு அறவே பிடிக்கவில்லை. அந்த வெறுப்பே அவரைப்பற்றிய செய்திகளைக் கூர்ந்து கவனிக்க வைத்தது.

வைகோ மீதான அதீத வெறுப்பு அற்புதமான ஒரு விருப்பாக மாறக் காரணம், திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் ஒருமுறை ஒலிபரப்பிய வைகோவின் பேச்சு ஒன்று. அப்பா கேட்டுக்கொண்டிருந்தார். அந்தப் தலைப்புக் கூடத் தெரியாது எனக்கு, இருந்தும் ஏதோ ஒன்று ஈர்த்தது. அழகு தமிழா? கம்பீரக் குரலா? இல்லை இரண்டுமா? தெரியவில்லை. ‘ஆரப்பா பேசுறது?' என்றேன். ‘வைகோ' என்றார் அப்பா. சண்டைக்காரனாக மட்டும் அதுவரை மனதில் நின்ற வைகோவின் புதுமுகம் ஏனோ எனக்கு ரொம்பவே பிடித்துப்போனது. ஈழ விடுதலை பற்றிய அவரது கருத்துக்கள், மற்றும் அவரது போராட்ட உணர்வு அவரை மேலும் உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கச் சொன்னது. வெள்ளை வேட்டி சட்டை, கறுப்புத் துண்டு என்று கம்பீரமாக வைகோ நிற்கும் போஸ்களை விகடன், குமுதத்திலிருந்து வெட்டிச் சேர்க்குமளவுக்கு ஆதர்சமானார்.

வைகோவின் தூய்மையான விம்பத்தில் விழுந்த முதல் கறை அவர் முதன் முதலாக ஜெயலலிதாவுடன் சேர்ந்தபோது. ஊழலைக் கண்டித்து, வாரிசு அரசியலுக்கு எதிரானவராகத் தன்னைக் காட்டிக்கொண்டு வெளியேறிய போராளி வைகோ அரசியல் காரணங்கள் என்ற சப்பைக்கட்டு கட்டி ஊழல் ராணியின் தர்பார் புகுந்தது மிகவும் வருத்தம் தந்தது. பின் தன்மீது தானே சேறு பூசுவது போல் மீண்டும் கருணாநிதியோடு சேர்ந்தார். அப்படி சேர்ந்தது அவரை பொடா சட்டத்தில் ஜெயலலிதா அரசு 18 மாதம் (விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார் என்பதெல்லாம் ஒரு கண் துடைப்புக் காரணம்) சிறைக்குள் தள்ளக் காரணமாயிருந்தது. கருணாநிதியும் வைகோவும் நெடுந்தொடர் இயக்குனர்களால்கூட சிந்திக்கமுடியாத செண்டிமெண்ட் காட்சிகளை அரசியல் மேடையில் அரங்கேற்றினார்கள். சரி, இப்போதாவது ஜெயலலிதாவைப் பற்றிப் புரிந்து கொண்டாரே என்று நிம்மதி கொண்டாலும், இந்த மீள் இணைப்பு ஏனோ சந்தோஷம் தரவில்லை எனக்கு.

சில காலத்துக்குப் பின் நான் ஒரு கொள்கை ரீதியான அரசியல்வாதியே அல்ல. நானும் கருணாநிதி, ஜெயலலிதா வரிசையில் வரும் அடுத்த மட்டமான தமிழ்நாட்டு அரசியல்வாதிதான் என்று வைகோ தெள்ளத் தெளிவாக அறிவித்தார், மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்ததன் மூலம். தேர்தல் ராஜதந்திரம் அது இது என்று சப்பைக்கட்டு கட்டினாலும், வைகோவின் செல்வாக்கு அடியோடு பறிபோனது. மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகவும் விழுந்தது. அரசியல் ரீதியாக எந்தக் கொள்கையும், தன்னை நம்பி ஓட்டுப்போடும் மக்களுக்கு எந்த விதமான நல்ல திட்டங்களும் இல்லாத வைகோ, ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் நேர்மையாக இருந்தார், அல்லது நேர்மையானவர் போல் காட்டிக்கொண்டார். அது ஈழ விடுதலை பற்றிய அவரது கருத்து. எப்போதும், எந்த அரசாங்கம் ஆண்டாலும், எந்த சட்டம் பாய்ந்தாலும் ஈழப்பிரச்சினை பற்றி உறுதியாகக் குரல்கொடுத்து வந்தார் வைகோ. அது உண்மையிலேயே உணர்வு காரணமாக, ஈழத்தமிழன் மீதான அன்பு காரணமான குரலாக தென்பட்டது. ஆனால் சமீபத்திய பாராளுமன்றத் தேர்தலில் அந்த எண்ணத்த்திலும் நாற்பது லோட் மண்ணை அள்ளிப்போட்டார் வைகோ.

தேர்தல் காலத்தில் ஈழப்போரும் ஒரு முக்கியமான கட்டத்தில் இருந்தது. அதை வைகோ தனது அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்த ஆரம்பித்தார். ஈழத்தமிழர் பற்றிய கூட்டங்களில்கூட கருணாநிதியை வசைபாடுவதையும், ஜெயலலிதா புகழ் பாடுவதையும் தலையாய பணியாய்க் கொண்டார். ஈழப்பிரச்சினை பற்றி தமிழ்நாட்டு மக்களிடமிருந்த நேர்மையானதும், அடிமனதிலிருந்து எழுந்ததுமான பாச உணர்வை தம் வாக்குகளாக மாற்ற கொஞ்சம் கூட ரோஷமே இல்லாமல் கருணாநிதி கூட்டணி, ஜெயலலிதா கூட்டணி, ராமதாசு என்று எல்லோருமே செய்த கேவலமான வேலையை வைகோவும் செய்தார். ஆனால் பாவம் இவரது சந்தர்ப்பவாதம் விலைபோகவில்லை. எங்களுக்கு எத்தனையோ விதத்தில் ஆதரவாக இருந்த வைகோ சமீபகாலங்களில் தான் கொள்கையில்லாத அரசியல்வாதி மட்டுமல்ல, மண்டைக்குள் மூளையே இல்லாத, பகுத்தறியும் தன்மை இல்லாத, உணர்ச்சி இல்லாத ஆறறிவில் ஓரறிவு கூட இல்லாத மனிதனாகத் தன்னைக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

ஒற்றை நூலில் உயிரைக்கட்டி ஈழ மக்கள் முகாம்களில் அடைபட்டிருக்க இங்கே இருந்து கொண்டு இவர் விடும் அறிக்கைகள், இவர் கொடுக்கும் பேட்டிகள், இவரது பேச்சுக்கள் எல்லாமே இலங்கை அரசாங்கத்தைக் கடுப்பேத்துவதாகவே அமைந்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. சில விஷயங்களை சொல்லி நம்மை உணர்வாளனாகக் காட்டிக்கொள்வதை விட, சொல்லாமல் இருப்பது எவ்வளவோ நல்லது என்பதை யாராவது இவருக்குச் சொல்லவேண்டும். அது சரி, தமிழ் நாட்டில், தன் தொகுதியில் இருக்கும் தமிழனுக்கு என்ன பிரச்சினை என்று தெரியாத இவரெல்லாம் கடல் கடந்து இருக்கும் ஈழத்தமிழருக்கு ஆதரவாகப் பேசியபோதே இவர் ஈழப்பிரச்சினையை தனது அரசியல் இருப்பைக் காட்டுவதற்காகவே பயன்படுத்துகிறார் என்பது, போராட்டம் தோற்க முன்னும் தெரியவில்லை, தோற்ற பின்னும் புரியவில்லை எம்மவர்க்கு. பாவம், வைகோவின் உணர்ச்சிப் பேட்டிகளை வலைத்தளங்களில் பரப்பி பெருமைப்படுகிறார்கள், தங்கள் ரத்த சொந்தங்களுக்கு தாங்களே ஆப்பு வைக்கிறோம் என்பது புரியாமல்.

Wednesday 8 July 2009

'A' ஜோக் சொன்னால் குற்றமா?

வயது வந்தவர்களுக்கான ஜோக் சொன்னால் அது ஏதோ செய்யக்கூடாத செயல் என்பது போல் குதிக்கிறார்கள் பலர். அண்மையில் நான் 'வயாகரா தாத்தா சொன்ன விபரீதக் கதைகள்' என்ற தலைப்பில் விகடனில் சிறிது காலத்துக்கு முன்னர் வந்த ஜோக் ஒன்றைப் பதிவிட்டேன். அப்போது ஒரு பின்னூட்டம் ஒன்றில் ஒரு நண்பர் ‘விகடன் வியாபாரத்துக்காக அதைச் செய்தது. அதையே செய்து நீங்களும் அதே குப்பைதான் என்று காட்டிவிட்டீர்கள்' என்று பின்னூட்டம் இட்டிருந்தார். இதேபோல் கேபிளாரின் ‘கொத்து பரோட்டா'வுக்கும் கண்டனப் பின்னூட்டங்கள் வருவதைக் கவனித்திருக்கிறேன். எனக்கு ஒன்று மட்டும் புரியவேயில்லை, இப்படியான ஜோக்குகள் சொல்வது தப்பா?

என்னைக் குப்பை என்று சொன்ன பதிவரைப்பற்றி எனது மனதில் சில கேள்விகள் எழுந்தன. என்னுடைய பதிவின் தலைப்பு ‘வயாகரா தாத்தா (18+)' என்பதாகவே இருந்தது. அத்துடன் அந்த பதிவுக்கான படத்தில் கூட கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று தெளிவாகப் போட்டிருந்தேன். இப்படி ஒரு உங்கள் வார்த்தையில் ‘குப்பை மேட்டர்' என்பதற்கான அத்தனை அறிகுறிகள் இருந்தும் ஏன் அந்தப் பதிவுக்குள் நுழையவேண்டும்? நான் பதிவைப் படிக்கவில்லை, கண்டன பின்னூட்டம் மட்டும் போடவே வந்தேன் என்று சப்பைக்கட்டு கட்டாதீர்கள். உங்களுக்கெல்லாம் உள்ளூர இப்படியான மேட்டர் எல்லாம் வாசிக்கும், எழுதும், பேசும், செய்யும் ஆசை இருக்கவே இருக்கிறது. ஆனால், மற்றவன் வாசித்தாலோ, எழுதினாலோ, பேசினாலோ, செய்தாலோ குய்யோ முறையோ என்று குதிப்பீர்கள். எந்த ஊர் நியாயம் ஐயா இது? இதில் பெரிய காமெடி என்னவென்றால், பின்னூட்டம் போட்ட வெண்மையான காட்டிலிருந்து வந்தவர் இதுவரைக்கும் நான் எழுதிய வேறெந்தப் பதிவுகளின் பக்கமும் தலைவைத்தே படுக்கவில்லை. வயது வந்தவர்களுக்கான ஜோக் என்றதும் எலும்பு கண்ட நாய் மாதிரி ஓடிவந்து விட்டு, 'நான் உத்தமனுங்கோ.. எல்லாரும் நம்புங்கோ' என்கிறார்.

கேபிளாருக்கு நடக்கும் கொடுமை இதைவிட மோசம். கேபிளாரின் வலைப்பூவுக்கு வரும் புதிய வாசகர்கள் திட்டினாற்கூட பரவாயில்லை. அவரது பதிவுகளைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்களே திட்டித் தீர்க்கிறார்கள். அதிலும் புதிது புதிதாக User Id எல்லாம் உருவாக்கி வந்து மொத்துகிறார்கள். மயாதி, மயில் போன்ற சிலர் மட்டுமே தாங்கள் இப்படியான ஜோக்குகளைப் பிரசுரிப்பதைக் கண்டிக்கவில்லை என்றும், இப்படியான பதிவுகளைப் வாசிக்கும்போது கொஞ்சம் எச்சரிக்கையாக வாசகர்கள் இருப்பதற்கு ஏதுவாக ஏதாவது அறிவிப்புகளை (18+, வயது வந்தவர்களுக்கு மட்டும்) தருமாறும் உருப்படியாகப் பின்னூட்டம் போட்டிருக்கிறார்கள். அவர்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது. ஆனால், ‘இது ஒரு மாதிரி பதிவு' என்று கூவிக் கூவி பதிவிட்டாலும், உள்ளே வந்து வாசித்துவிட்டு தங்களை உத்தமராகக் காட்டிக்கொள்ள பின்னூட்டம் போட்டுக் கொல்லும் சிலரை என்ன செய்யமுடியும்?

வயது வந்தவர்களுக்கான உரையாடல்களும் கதையாடல்களும் சமூகத்தில் மலிந்திருக்கின்றன. இலைமறைகாயாக சொல்லப்படும் பல பச்சைப் பேச்சுக்களை நான் பல பெரிசுகள் பேசக் கேட்டிருக்கிறேன். ‘கோழி' என்ற சொல்லுக்குரிய கொச்சை அர்த்தம் மிகச் சாதாரணமாக பல இடங்களில் பயன்படக் கண்டிருக்கிறேன். இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று இருந்த பலரின் மறுபக்கங்களையும் கண்டிருக்கிறேன். நிர்வாணக் காட்சிகள் வரும் படங்கள் என்றாலே ஏதோ அருவருக்கத்தக்க கேவலங்கள் என்ற மாதிரிப் பேசுபவர்களும் உண்டு (நான்கூடப் பேசியிருக்கிறேன்). ஆனால் இயல்பாய் இருப்பது எப்படி என்று அனுபவம் சொல்லிய பாடங்களின் பின்பு, அப்படி அதைப் பார்க்கமாட்டேன் இதைக் கேட்கமாட்டேன் என்று சொல்வதெல்லாம் வெளியுலகுக்கு எங்களை உத்தமனாகக் காட்ட முயலும் ஒரு கேவலமான வித்தை என்பதைப் புரிந்துகொண்டேன். எல்லோருக்கும் உள்ளூர ஆசை இருக்கும், ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளமாட்டார்கள்.

காமம் என்பது தீண்டாப் பொருளா? மனிதகுலத்தின் உயிர்நாடியே அதுதானே? பின் ஏன் அதுபற்றிப் பேசினால் மட்டும் முகம் சுழிக்கிறார்கள்? வள்ளுவரை எல்லோரும் ஏற்றுக்கொண்டு விட்டோம், அவரைப்பற்றி எல்லோருமே சிறப்பாகச் சொல்கிறார்கள். ஆனால் கூட, அவர்கூட உலகப் பொதுமறை என்றழைக்கும் திருக்குறளில் காமம் பேசியிருக்கிறாரே? ஏன் காமத்தைப் பற்றிச் சொன்னால் துள்ளிக்குதிக்கிறீர்கள்? சமீபத்தில் ‘ஈழத்து நாட்டார் பாடல்கள்' என்று ஒரு புத்தகம் படித்தேன். அதில் காதல் பாடல்களில் சொல்லப்பட்டிருக்கும் சில ‘மேட்டர்'களோடு ஒப்பிடும்போது நான் சொன்ன ஜோக் என்ன, கேபிளார் சொன்ன பச்சை ஜோக்குகள் கூட ஜுஜுபி. என்னைத் திட்டிய நண்பர் போனற மற்றவர்களையெல்லாம் நான் கேட்பது இதுதான், 'இயல்பாக இருங்கள், உத்தமர் போல் நடிக்காதீர்கள்'. உங்களை எல்லாம் பார்க்கும்போது தான் கண்ணை மூடிக்கொண்டு பால் குடித்தால் யாருக்குமே தான் பால்குடித்தது தெரியவே தெரியாது என்று நினைக்கும் பூனைக்கதை ஞாபகம் வருகிறது.