Saturday 29 August 2009

ஒரு நூல் வெளியீட்டு விழா.. சில பாதிப்புகள்-2

முதல் பாகத்தை இங்கே பாருங்கள்

நூல் வெளியீடு முடிந்ததும் கலந்துரையாடலை ஆரம்பிக்கலாம் என்று அறிவித்தார்கள். வெளியீடு நடந்த இடம் 9:00 மணிவரை ஒதுக்கப்பட்டிருந்ததால் ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் வரவேற்கப்படுகின்றன என்றார்கள். அங்கே ஆரம்பித்தார்கள் பிரச்சினையை.

தில்லைநாதன் ஐயா கருணாகரன் மற்றும் அகிலனின் முழுமையான பக்கங்கள் இதுவரை வெளிவந்திருக்க சந்தர்ப்பம் இல்லை என்பதாக ஆரம்பித்து, நடந்து முடிந்த கொடூர யுத்தம் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலானது அல்ல என்கிற மாதிரியான ஒரு கருத்தாடலுக்குள் நுழைந்தார். நண்பன் ரபிக்காந்தின் பார்வையில் அது விடுதலைப் போராட்டத்தைச் சாடுவதாக அமைய ஆரம்பித்தது விவாதம். வன்முறைக் காலங்களில் சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் என்று தில்லைநாதன் சொல்ல, வன்முறை செய்ததே சிங்கள மக்கள்தான் என்று ரபிக்காந்த வாதாட ஒன்றுகூடலின் ஆதார நோக்கத்தை விட்டு (புத்தக வெளியீடும் விமர்சனமும்) விடுதலைப் போராட்டத்தில் என்ன தவறுகள் நிகழ்ந்திருக்கலாம் என்கிற பக்கமாக கலந்துரையாடல் திசைதிரும்பியது. இடையில் திரும்பவும் புத்தக வெளியீடு பற்றிய கருத்துக்களைச் சொல்ல மூத்த படைப்பாளி ஒருவரை அழைத்தார்கள். (அவர் பெயர் சரியாக ஞாபகமில்லை. யாரிடமாவது கேட்டுச் சொல்கிறேன்).

அவர் கௌசலா அக்காவின் மதிப்புரையில் நம்பிக்கையின்மையின் சுவடுகள் இருந்ததாகச் சுட்டிக்காட்டினார். நம்பிக்கையோடு சில விஷயங்களை அணுகும் வண்ணம் சுட்டிக்காட்டினார். கடவுள் நம்பிக்கை, பாவ புண்ணியம், வன்முறை இவற்றில் நம்பிக்கை இல்லை, ஆனால் ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்கிறது என்றார். மிகவும் உணர்ச்சிபூர்வமாக முஸ்லீம் மக்கள் பல இடங்களில் விரட்டி அடிக்கப்பட்டதைச் சொல்லிக்காட்டினார். அதன்பிறகு ஏனோ தெரியவில்லை கதவை அறைந்து சாத்திவிட்டு வெளியேறிப் போய்விட்டார். சொன்ன கருத்துகளில் வலிமை இருந்தாலும் அவரது அந்த நடவடிக்கை எனக்கு அணுவளவும் பிடிக்கவில்லை. உணர்வுபூர்வமான சிந்தனைகளைத் துறந்து அறிவுபூர்வமாகச் சிந்திக்க எங்களைத் (புதியவர்களை) தூண்டியிருக்க வேண்டிய அந்த மூத்தவர் அப்படி நடந்து கொண்டிருக்கக்கூடாது.

அவர் வெளியேறியதும் திரும்பவும் ஈழப் போராட்டம் பற்றிய நியாய, அநியாயங்களுக்குள் நுழைந்தார்கள். நான் பொதுவாகவே ஈழப் போராட்டம் பற்றிய கருத்தாடல்களில் ஒதுங்கியிருப்பவன். காரணம், இலகுவில் முத்திரை குத்திவிடுவார்கள். குத்துவதோடு நின்றுவிடாமல் அடிக்கடி மாற்றி மாற்றி முத்திரை குத்துவார்கள். அந்த முத்திரைகள் எனக்குப் பிடிப்பதில்லை. ஆனால் விவாதம் சூடேற ஆரம்பித்தது. இன்றைக்கு மூன்று லட்சம் மக்கள் முள்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டு இருப்பதற்கு யார் காரணம் என்கிற திசையில் விவாதம் திரும்பியது. திரும்பவும் தில்லைநாதனும், ரபிக்காந்தும் மோதிக் கொண்டார்கள். மூத்தவர் சிவப்பு சிந்தனையாளர் என்பது அவரது உரையிலும், பின்னர் அருண்மொழிவர்மனுடனான அலைபேசி+தொலைபேசி உரையாடலிலும் தெரியவந்தது. என்ன இது ஒரு புரிந்துணர்வு இல்லாத விவாதமாக, என் கருத்துத்தான் சரி என்கிற திசையில் போனபோது, செல்வம் அவர்கள் குறிப்பிட்டார்.

செல்வம் தன்னுடைய சிற்றுரையில், இவ்வாறாக ‘இவர்கள் சரி, அவர்கள் பிழை' என்று விரல் சுட்டுவது தவறென்றும், இன்றைக்கு மூன்று லட்சம் பேர் மந்தைகள் போல் முட்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டிருப்பதற்கு, நாங்கள் எல்லோருமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் சொன்னார். அதற்கு கறுப்பி அவர்கள், அப்படிப் பொறுப்பேற்க முடியாது என்றும், ஆகக்குறைந்தது ஒரு சதவீதம் ஈழத் தமிழ் மக்களாவது போர் வேண்டாம் என்று ஒதுங்கியிருந்தார்கள் என்றும், அப்படியான மக்கள் இந்தத் துயரத்துக்கு பொறுப்பேற்க முடியாதென்றும் வாதிட்டார். அப்படியான குடும்பங்களில் ஒன்று தனது குடும்பமும் என்பதாகச் சொன்னார். அதற்குப் பதிலிறுத்தவர், ஜெயகரன் அண்ணா. அவரது பதிலின் சாராம்சம் இதுதான். (அவர் ஆரம்பகட்டங்களில் போராளிக் குழுக்களில் ஒன்றில் இருந்தவர் என்று யூகிக்கிறேன்)

‘இப்போது புலிச் சார்பு, புலி எதிர்ப்பு என்ற நிலைகளில் மட்டும் இருந்து வாதாடக் கூடாது. நான் கூட அவர்கள் தவறு செய்கிறார்கள் என்று தெரிந்த நேரத்தில் அங்கிருந்து போராடி இருக்கவேண்டும். அதுதான் என் களமாக இருந்திருக்க வேண்டும். அதைவிடுத்து நான் புலம் பெயர்ந்து வந்ததையிட்டு வருந்துகிறேன். நீங்கள் போராட்டத்தை விட்டு முற்றுமுழுதாக ஒதுங்கி இருந்திருந்தாலும் ஏதோ ஒரு வகையில் அந்தப் போராட்டம் வளர ஆதரவளித்திருக்கிறீர்கள். அதாவது, அந்தப் போராட்டத்தில் தப்பிருந்திருந்தால் அதைச் சுட்டிக்காட்டிப் போராடி இருக்க வேண்டும். அதைவிடுத்து பேசாமல் இருந்துவிட்டு இப்போது மக்களின் அவலநிலைக்குப் பொறுப்பேற்காமல் ஒதுங்குவது என்பது சரியல்ல' என்பதாக ஜெயகரனின் பார்வை இருந்தது. சுய விமர்சனத்தின் அவசியத்தையும் ஜெயகரன் அண்ணா, சேனா அண்ணா, சேனா அண்ணாவுக்கு அருகில் இருந்த அந்தத் தாடிக்கார அண்ணா ஆகியோர் வலியுறுத்தினார்கள்.

உரையாடலின் நடுவே வந்திருந்த நண்பர்களின் பெயர்களையும் மின்மடல் முகவரிகளையும் சேகரித்தார்கள். இந்த விவாதம் கிட்டத்தட்ட இதே பாதையில் தொடர்ந்து கிட்டத்தட்ட 8:40 அளவில் முடிவுக்கு வந்தது. சேனா அண்ணா மற்றும் ஜெயக்குமாரி அக்கா ஆகியோருடன் சற்று நேரம் அளவளாவினோம். சேனா அண்ணா எங்கள் பாடசாலை மாணவர் என்று தெரியவந்தது. 84ம் வருடம் ஏ/எல் முடித்தவராம். ஆள் மொட்டை அடித்து வயதைக் குறைத்து நல்ல இளம் ஆள் மாதிரி இருந்தார். 9:00 மணியளவில் விடைபெற்றுக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். 10:30 தொடக்கம், 11:30 வரை அருண்மொழிவர்மன் அண்ணாவுடன் தொலைபேசியில் உரையாடிவிட்டு, நூல் வெளியீட்டு விழா பற்றிய முதல் பதிவை எழுதிவிட்டுப் படுத்துறங்கிப் போனேன்.

சில எண்ணங்கள்
  • அகிலன் இந்தியாவுக்கு கள்ளமாகப் படகில் வந்தார் என்று சொல்லவந்து ‘கள்ளத் தோணி' என்ற சொல்லைப் பாவித்துவிட்டார்கள் நிகழ்ச்சி இணைப்பாளர்கள். அவர்கள் கொச்சையான அர்த்தத்தில் அதைப் பயன்படுத்தவில்லை என்றாலும், அந்தச் சொல்லின் வலி பற்றி பெரியவர்கள் எடுத்துச் சொன்னவிதம் பிடித்திருந்தது.
  • ‘மூன்று பெண்கள் முன்னின்று நடத்திய விழா' என்று குறிப்பிட்டது கொச்சையாக இருந்தது. ஏன் அவர்கள் முன்னின்று நடத்தியதில் என்ன அதிசயம் கண்டுவிட்டார்கள் இவர்கள்? அவ்வாறு குத்திக் குத்திப் பேசியதிலேயே தெரியவில்லையா எங்கள் சமூகத்தில் ‘பெண் விடுதலை' எந்தளவுக்கு இருக்கிறது என்று. 'விழா ஒருங்கமைப்பாளர்கள் நன்றாகத் செயற்பட்டார்கள்' என்ற கருத்தை ‘மூன்று பெண்கள் அழகாக விழாவை ஒழுங்கமைத்தார்கள்' என்ற வடிவில் சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை. பிரித்துக் காட்டியிருக்க வேண்டாம்.
  • வாதம் அடிக்கடி வேறுதிசைகளில் பயணித்த போது, யாராவது கொஞ்சம் கடுமையாக நெறிப்படுத்தி இருக்கலாம். ஆனால், வயதில் இளையவனான ரபிக்காந்தின் கருத்துக்களைப் பெரியவர்கள் எடுத்துக்கொண்ட விதத்துக்குத் தலை வணங்குகிறேன்.
  • சுயவிமர்சனம் இன்றைக்கு அவசியம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அது பற்றிப் பேசவேண்டிய களம் இதுவா என்பதில் என்னிடம் தெளிவான கருத்து இல்லை. நடந்த கலந்துரையாடலை அதற்கெனவே தனியாகக் களம் அமைத்து நடத்தலாம் என்பது என் பணிவான வேண்டுகோள். நூல் வெளியீட்டு விழாவில் என்ன அவசியம் என்று தெரியவில்லை. ஒருவேளை கூடுவதற்கும் அது பற்றிப் பேசவும் வேறு சந்தர்ப்பம் கிட்டுமா என்ற சந்தேகத்தில் அவ்வாறு விவாதித்தார்களோ தெரியவில்லை.

பதிவு எழுத வந்த கதை- தொடர் விளையாட்டு

முன்கதை
‘இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள்' கூகிள் குழுமத்தில் உதித்த இந்தத் தொடர் விளையாட்டுக்கான கருவை, மு. மயூரன் ஆரம்பித்து வைத்தார். மு. மயூரன் வந்தி அண்ணாவை அழைக்கும்போதே நினைத்தேன், அடுத்தது என்னிடம் இது வரும் என்று. பாடசாலைக் காலங்களில் அஞ்சல் ஓட்டத்தில் இயலுமான பங்களிப்பு (தனிய ஓட ஏலாது) செய்த காரணத்தால், இதையும் ஒரு அஞ்சல் ஓட்டமாக நினைத்து மேலே கொண்டு செல்வதில் எனக்குத் தயக்கமும் இல்லை. வலையில் நான் பதிய வந்தது ஒன்றும் பெரிய கதையும் அல்ல, அது பற்றிச் சொல்லப்போகும் நான் நல்ல கதை சொல்லியும் அல்ல. ஆனால் முடிந்தவரை சுவையாகச் சொல்கிறேன். (இதற்குத்தானே ஆசைப்பட்டாய் வந்தியத்தேவா)

விதிமுறைகள்
1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.

2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைக்கப்படும் நால்வருக்கும் அழைப்பினைத் தெரியப்படுத்தவும் வேண்டும். (தடித்த எழுத்தில் இருப்பதை மயூரன் அண்ணா, வந்தி அண்ணா இருவரும் கவனிக்கவும், உங்கள் பதிவுகளில் மூவருக்கும் என்று இருக்கிறது)

3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.

மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.

என் கதை
நான் கல்வி மற்றும் தொழில் ஆகிய இரு துறைகளைத் தவிர வேறு ஏதாவது ஒரு துறையில் கட்டாயம் கவனம் செலுத்தியே ஆகவேண்டும் என்கிற ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டேன். கனடாவிற்கு கல்வி அனுமதிப் பத்திரம் மட்டும் பெற்று வேறொருவர் காசில் படிக்கும்போது என்னுடைய பெறுபேறுகளை உச்சத்தில் வைத்திருக்கவும், பொருளாதார ரீதியில் கொஞ்சமாவது மேம்படவும் போராடவேண்டிய கட்டாயம். நாடுவிட்டு வந்தவர்களுக்கு ஆரம்பத்தில் ஏற்படும் கலாச்சார அதிர்ச்சி எல்லாம் சேர்ந்து கொஞ்சம் வதைத்த காலம். எடுத்ததுக்கெல்லாம் கோபம் வரும். சில சமயங்களில் என்ன செய்கிறேன் என்று தெரியாதளவுக்கு ஒரு கோபம் வரும். தலையை உடைத்து எறிந்துவிடு என்கிற அளவுக்கு தலை வலிக்கும். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் போராடிப் பார்த்து கடைசியாக நான் நாடியது, மருத்துவர் லம்போதரனை.

சில விசயங்களை மனம் விட்டுப் பேசியபோது, மனச் சோர்வு அல்லது மனப் பிறழ்வுக்குரிய அறிகுறிகள் இருப்பதாகக் கூறினார். அது பேரதிர்ச்சி. அவர் சொன்னபடி வேறு விடயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அடிக்கடி நூலகங்களில் போய் கண்ணில் கண்ட புத்தகங்களை வாசித்தேன். முகம் தெரியாதவர்கள் நடத்தும் நடன, இசைக் கச்சேரிகளில் ஒரு ஓரத்தில் போய் குந்தி இருப்பேன். இந்த இயல், இசை எதிலுமே நான் தேர்ந்தவனல்லன். ஆக, என் அடிமன அழுக்குகளை அவைமூலம் வெளியேற்ற முடியாது. பாடசாலைக் காலங்களில் ஆங்கில தினப் போட்டிகளில் creative writing ல் 4முறை இரண்டாவதாகவும் 2 முறை மூன்றாவதாகவும் வந்திருக்கிறேன். ஆக, நான் ஏன் எழுதக்கூடாது என்ற எண்ணம் இருந்தது. 3 வருடமாக விட்டுப் போயிருந்த டயரி எழுதும் பழக்கத்தைத் திரும்ப ஆரம்பித்தேன்.

என்னை வலையுலகுக்கு இழுத்து வந்த பிதாமகர், அண்ணா ஆதிரை அவர்கள். அடிக்கடி Face Bookல் தன்னுடைய பதிவுகளுக்கு இணைப்புக் கொடுப்பார். அவரது 'அழாதே நண்பா' 'அப்போது வெட்கித் தலைகுனிந்து நிற்பீர்கள்' ஆகிய பதிவுகள் தான் என்னை வலைப்பூவில் கொஞ்சம் உன்மத்தம் கொண்டு எழுத வைத்தது. அதுவரை ‘கிருத்திகனின் கிறுக்கல்கள்' என்றிருந்த என் வலைப்பூ ‘மெய் சொல்லப் போறேன்' என்று மாறியது. ஆரம்பகாலப் பதிவுகள் பல எனக்கே பிடிப்பதில்லை. வாசகர்களை என் வலைக்கு அழைக்கும் சூட்சுமமும் தெரியவில்லை. என்னுடைய நண்பர்கள் மட்டுமே பின்னூட்டம் இட்டார்கள். சூட்சுமம் புரிய வைத்தது என்னுடைய ‘அவள்+அவன்= அது' என்கிற ஒரு பதிவில் ‘தமிழர்ஸ்' நிர்வாகிகள் போட்ட ஒரு பின்னூட்டம் மூலமாக.

முதன் முதலில் என்னுடைய நூல் என்ற சிறுகதை (???!!!) முயற்சியைத்தான் அதிக திரட்டிகளில் இணைத்தேன். என்னை யார் வாசித்தார்களோ, யார் பின்னூட்டம் போட்டார்களோ அவர்களிற்குத் தீனிபோடும் விதத்தில் எழுதிய நான் இந்த மாதம் எழுதிய ‘நான் பார்த்த இலங்கை' தொடரின் முதல் பகுதியில் இரு வேறு வாசகர்களுக்கு இரு வேறு வடிவங்கள் என்று ஒரு ஆபாசத்தைச் (அப்போது ஆபாசமாகத் தெரியவில்லை) செய்ததன் காரணமாக, சில படிப்பினைகளைப் பெற்றுக் கொண்டு, இப்போது கொஞ்சம் திருத்தமாக எழுதி வருகிறேன். வலையுலகுக்கு வந்து இன்னும் முழுமையாக 6 மாதங்கள் முடியாத நிலையில் 141 பதிவுகள் (இதோடு சேர்த்து) போட்டுவிட்டாலும், இன்னும் நான் பதிவுலகில் ‘பாலர் வகுப்பு' தான். ஆக, பெரியவர்கள் என்னையும் கைபிடித்து அழைத்துச் செல்ல வேண்டும்.

அனுபவங்கள்-தட்டச்சு
நான் தமிழை தட்டச்சத் தொடங்கியதே Unicode முறையில்தான். இலங்கையில் அப்பாவின் ‘தட்டச்சுக் கருவியில்' பார்த்துப் பார்த்துக் குத்தியபின் இப்போதுதான் தமிழ் தட்டச்சினேன். முதலில் higopi என்ற தளத்தில் தட்டச்சி, படியெடுத்து ஒட்டிய எனக்கு, ஞானியின் திண்ணை வலையில் NHM Writer அறிமுகமாகி, Phonetic முறையில்தான் தட்டச்சி வருகிறேன்.

இந்த முறைக்கு எதிரான பலமான கருத்துக்கள் இருந்து வருகின்றன. என்னைப் பொறுத்தவரை தமிழ் எழுத்துருக்கள் முழுமையாகத் தெரிந்தவர்கள் இவற்றைப் பயன்படுத்துவதால் எந்தத் தீங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. 'ammaa' எனபது 'அம்மா' என்று வராமல் ‘சும்மா' என்று வருமாறு யாராவது அமைத்தால் நாங்கள் அப்படியே தட்டச்சிக் கொண்டு போவோமா? இல்லைத்தானே? ‘அ' எங்கே இருக்கிறது என்று தேடி அடிப்போம். கிட்டத்தட்ட எல்லாவிதமான தட்டச்சு முறைகள் (தமிழ் 99, பாமினி) பயன்படுத்துவோரும் இந்த விசையை அழுத்தினால் இந்தத் தமிழ் எழுத்து வரும் என்றுதான் மூளையில் பதித்திருப்பார்கள். இந்த முறையில் வேகம் கூட, இந்த முறையில் வேகம் குறைய என்று வாதாடலாமே ஒழிய, இந்த முறை தமிழை அழிக்கும், இது வளர்க்கும் என்று வாதாடுவது எல்லாம் ‘என் முறை சரி, உன் முறை பிழை' என்று நிரூபிக்க முயலும் சராசரி மனித இயல்பாகவே எனக்குப் படுகிறது.

வசந்தன் தன்னுடைய பதிவில் சொன்னது போல், எதிர்காலச் சந்ததி தட்டச்சித் தமிழ் படிக்கும்போது, இதில் எந்த முறையையும் நான் சிபாரிசு செய்ய மாட்டேன். அதுவும் அவர்களுக்கு தமிழ் எழுத்துருக்கள் முழுமையாகத் தெரியாமல், phonetic என்றொரு முறை இருப்பதையே சொல்லிக் கொடுக்க மாட்டேன். என்னைப் பொறுத்தவரை அவர்களுக்குத் தமிழை எழுத்துருக்களை முழுமையாகச் சொல்லிக் கொடுத்து அதன் பின் எப்படி வேண்டுமானாலும் தட்டச்ச விடலாம். அல்லது தமிழ் எழுத்துருக்களை சரியாக அறிமுகம் செய்து அவை பொறிக்கப்பட்ட விசைப்பலகைகளைப் பயன்படுத்தலாம். மற்றபடி Phonetic முறைப்படி ‘அம்மா' ‘ammaa' என்று பதிவது போலவே பாமினியில் 'அம்மா' ‘mk:kh' என்றும் தமிழ் 99ல் ‘அம்மா' ‘akfkq' என்றும்தான் பதியும். எதிர்காலச் சந்ததிக்குத் தமிழ் கற்பிப்பதில் இவை எதுவுமே உதவி செய்யப்போவதில்லை. (இது ஒரு சிறுவனின் கருத்து. குத்திக் கிழிக்காதீர்கள். நித்திரைவிட்டு எழும்பி மனம் சஞ்சலம் இல்லாத நிலையில் கண்ணை மூடி யோசித்துப் பாருங்கள். நான் சொல்வதிலும் நியாயம் இருப்பது புரியும்)

அனுபவங்கள்- மற்றவை
  • சுயம் இல்லாமல் எழுதுகிறேன் என்ற குற்றச்சாட்டு கற்றுத்தந்த பாடங்கள் அதிகம். அந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்கிறேன். சில சொற்களைத் தேவையில்லாமல் பயன்படுத்தியிருக்கிறேன். என்ன அந்தச் சர்ச்சை மூலம் ஏற்கனவே அறிமுகமாகி இருந்த நண்பர்களின் (யாரைச் சொல்கிறேன் என்று தெரியும்) நட்பு வலுப் பெற்றது. புது வழிகாட்டிகள் கிடைத்தார்கள். சர்ச்சையை ஆரம்பித்து வைத்த மூத்தவருக்கு நன்றி.
  • சமீபத்தில் இன்னொரு பதிவில் நான் விட்ட பிழைகள் பற்றி 'பெட்டை' சில படிப்பினைகளைத் தந்திருக்கிறார். அந்தப் பிழைகளையும் எதிர்காலத்தில் தவிர்த்து எழுதுவேன் என இந்தப் பதிவுமூலம் உறுதியளிக்கிறேன். ஆக, 'பெட்டை'க்கும் நன்றி.
  • முகம் தெரியாத நட்புகள், வயதெல்லையின்றிய நட்புகள் என்று பலநட்புகளை இந்த தந்திருக்கும், என் மன ஓட்டங்களுக்கு வடிகாலாக இருக்கும் வலையுலகுக்கும் நன்றி.
என்னுடைய அழைப்புகள்
  1. ஆதிரை- பதிவுலகத்தில் என்னுடைய பிதாமகர். மூத்த அண்ணன். ஆளை அடிக்கடி மாட்டி விடலாம், எதையும் சமாளிப்பார். அதனால் இதையும் சமாளிப்பார் என்றே நம்புகிறேன்
  2. பால்குடி- நெருக்கமான தோழன். இன்னொரு இடிதாங்கி. கூடுதல் தகவல்கள்- பள்ளிநாட்களில் பல மேடைகள் கண்டவர். பலரை விழுந்து விழுந்து சிரிக்கவும், சில சமயம் கண்களைத் துடைக்கவும் வைத்தவர். ஆள் மிருதங்கம் நல்லா வாசிப்பார் என்று தெரியும். பாடசாலைக் காலத்தில் சித்திரம் படித்ததாக ஞாபகம். இவர்கள் ஊருடனான கிரிக்கெட் போட்டிகளில் குத்துக்கட்டை போட்டு எங்களை வீழ்த்தி சாபத்தைச் சம்பாதித்தவர்.
  3. அருண்மொழிவர்மன்- வலையுலகு தந்த இன்னொரு இனிய நட்பு. 12 மணிக்குக்கூட தொ(ல்)லை பேசினாலும் சிரித்தபடி கதைப்பவர். நேற்றுத்தான் இவரை நேரில் சந்தித்த
  4. சாயினி- கனகாலம் இவா எழுதேல்லை. ஆளை மாட்டி விடவேணும் என்ற நல்ல எண்ணம்தான். ஐந்தாம் வகுப்பு வரை ஆரம்பப் பாடசாலையிலும், 8ம் வகுப்பு வரை ரியூசனிலும், ஒன்றாகப் படித்தா. இலங்கையில் இருந்து எழுதிய முதல் தமிழ்ப் பெண் பதிவர் என்று சயந்தன் சொல்லுவார். (எல்லாப் புகழும் சயந்தனுக்கே).

Friday 28 August 2009

ஒரு நூல் வெளியீட்டு விழா.. சில பாதிப்புகள்-1

வடலி வெளியீடுகளான கருணாகரனின் 'பலி ஆடு' கவிதைத் தொகுப்பும், த. அகிலனின் 'மரணத்தின் வாசனை' சிறுகதைத் தொகுப்பும் இன்றைக்கு (28/08/09, வெள்ளிக்கிழமை) ஸ்காபுறோ சிவிக் சென்ரரில் வெளியிடப்பட்டன. தமிழில் எழுதுவதில் என்னில் இருக்கக் கூடிய குறைகளை நிவர்த்தி செய்வதற்கு வழிகாட்டிகளைத் தேடிக் கொண்டிருந்த சமயத்தில், சயந்தன் இந்த விழா பற்றி தனது வலைமனையில் எழுதியிருக்க, ‘அட, இங்கே போவதில் நான் ஒன்றையும் இழந்துவிடப் போவதில்லை' என்ற எண்ணம் மனதில் ஓட, மின்மடல் மூலம் நான் தொடர்பு கொண்டது சேனா அண்ணாவை. அவர் அந்த மின்மடலை தீபா அக்காவுக்கு அனுப்பி வைக்க, விழா பற்றிய சில சந்தேகங்கள் தீர்ந்ததோடு நிச்சயம் இந்த விழாவுக்குப் போகவேண்டும் என்ற உந்துதல் எழுந்தது.

தீபா அக்கா மின் மடலில் 'ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களை அழைத்து வாருங்கள்' என்று கூறியிருந்தார். நானாகத் தேடிப் போகாமல், ‘நாளைக்குப் பின்னேரம் என்ன மச்சான் செய்யப் போகிறாய்' என்று தானாக வந்து மாட்டிய நண்பன் ரபிக்காந்தையும் இழுத்துக் கொண்டு போய்ச் சேர்ந்தேன். வீட்டிலிருந்து 5:10க்கே வெளிக்கிட்டுப் போய்விட்டதால் ரபிக்காந்தையும் இழுத்துக்கொண்டு 5:55க்கு நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம், நானும் என் மருமகனும். உள்ளே நுழையும்போது கொஞ்சம் தயக்கம். ‘வடலி....' என்று இழுக்க 'ஓமோம்' என்று ஆமோதித்து வரவேற்றார்கள். நாங்கள் மூவரும் சற்றுத் தள்ளியிருந்த பிளாஸ்ரிக் கதிரைகளை நாட, பெரிதாக இருந்த குஷன் கதிரைகளில் வந்து இருக்குமாறு அழைத்தார்கள். (குஷன் கதிரைகள் பெரியவர்களுக்கு என்று ஒதுங்கி இருக்க முயன்றேன்).

தீபா அக்கா, சேனா அண்ணா, மெலிஞ்சிமுத்தன் அண்ணா, தில்லைநாதன் ஐயா ஆகியோர் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். பெயர்களுக்குரிய முகங்களைக் பொருத்தும் போது ஏற்படும் ஒரு சந்தோஷத் தருணம் அது. சில சம்பிரதாய பூர்வமான உரையாடல்களில் இருந்து பெண்ணியப் பக்கம் திசை திரும்பியபோது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. ரபிக்காந்த் பெண்களுக்கு சம உரிமை கிடைத்து விட்டது என்று சொல்ல, கடுமையாக மறுத்தார்கள் சகோதரிகள். ரபிக்காந்த அடிக்கடி கனவுலகில் சஞ்சரிப்பவன் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. மெலிஞ்சிமுத்தன் 'ஆண்கள், பெண்கள், அரவாணிகள் ஆகிய மூன்று வகையிலானவர்களும் தங்களுக்கான அடையாளங்களை உதறிப் போட்டுவிட்டு மற்றவர்களைப் பார்க்க வேண்டும்' என்கிற ஒரு கோணத்தில் பேசினார். அது சுலபத்தில் சாத்தியமன்று, ஆனால் சாத்தியமே இல்லாத ஒன்று அல்ல. (பெண்ணுரிமை விசயத்தில் நான் சகோதரிகள் கட்சி. இன்றுவரை அவர்களைப் எங்கள் தேவைகளுக்கேற்ப பாவிக்கிறோம் என்பதை நான் மனதார ஒப்புக்கொள்கிறேன்)

இனி முக்கிய பகுதிக்கு வருவோம். இங்கே நான் பெரிய மன்னிப்புக் கோரவேண்டி உள்ளது. அதாவது, அங்கே சந்தித்தவர்களில் தன்யா மற்றும் சத்யா ஆகியோரின் முகங்களைப் பெயர்களுடன் சரியாகப் பொருத்தத் தவறிவிட்டேன். மன்னிக்கவும். நிகழ்ச்சி ஆரம்பமாக முன்னரே புத்தகங்களை வாங்குவதற்கு அழைப்பு விடுத்தார்கள். வாங்கிக் கொண்டு திரும்ப இருக்கைக்கு வந்தபோது அங்கே நின்றுகொண்டிருந்தார் வலையுலகு எனக்குத் தந்த இன்னொரு நண்பர் அருண்மொழிவர்மன் (முதல் சந்திப்பு). இருவரும் கைலாகு கொடுத்து பேசிக் கொள்ள ஆரம்பிக்கவும், புத்தகங்களை வெளியிடும் விழாவை ஒருங்கிணைப்பாளர்கள் ஆரம்பித்து வைக்கவும் சரியாக இருந்தது. சிறிதாக அறிமுகவுரை வழங்கினார் ஒரு சகோதரி (சத்யாவா?, தன்யாவா?... முதலில் சொன்னது போல முகங்களை மறந்த எனக்கு மீண்டும் ஒரு குட்டு). அதன் பின் புத்தகங்கள் பற்றிய மதிப்புரைகள் இடம்பெற்றன.

முதலில் த. அகிலனின் மரணத்தின் வாசனை பற்றி ஜெயக்குமாரி அக்கா மதிப்புரை வழங்கினார்கள். இந்தப் புத்தகம் ஒரு சிறுகதைத் தொகுப்பு. கதைகளை நான் இதுவரை வாசிக்காதபடியால், ஜெயா அக்காவின் மதிப்புரையை மதிப்பிட முடியாமல் போனது துரதிர்ஷடமே. அதே போல் கௌசலா அக்கா வழங்கிய கருணாகரனின் பலி ஆடு பற்றிய மதிப்புரைக்கும் அதே கதிதான். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் இருவருமே தவறாமல் செய்தார்கள். அது என்னவென்றால், இந்த நூல்களை கட்டாயம் வாசிக்கவேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டிவிட்டார்கள். ஜெயக்குமாரி அக்கா சாதாரணமான உரையாடல் தமிழிலும், கௌசலா அக்கா கொஞ்சம் மேம்படுத்தப்பட்ட தமிழிலும் செய்த மதிப்புரைகளை, என் போன்ற வியாபார எழுத்துக்களை வாசித்துப் பழகிய வாசகனாலும் கிரகிக்க முடிந்தது சிறப்பு.

இரு நூல்களையும் மேலோட்டமாக மேய்ந்தேன். அச்சுக்கோப்பு, பாவிக்கப்பட்ட தாள்கள், அட்டை என்பன சிறப்பாக இருந்தன. பலி ஆடு கவிதைத் தொகுப்பு அட்டையை சயந்தன் வடிவமைத்திருக்கிறார். ஒரு சிறிய சர்ச்சை மூலம் அறிமுகமான இந்த அண்ணன் என்னை மேலும் மேலும் ஆச்சரியப்படுத்துகிறார். நூல்களின் உள்ளடக்கம் பற்றி வாசித்து முடிந்ததும் கட்டாயம் பதிவிடுகிறேன். நூல்கள் பற்றிய மதிப்புரை முடிந்ததும் ஒரு விவாத மேடையாக நாங்கள் கூடிய இடம் உருமாறியது. சர்ச்சைக்குரிய, இதுவரை நான் போயிருக்கக் கூடிய இடங்களில் பேசப்படாத ஒரு களத்தில் விவாதித்தார்கள். அதுபற்றி, அடுத்த பாகத்தில் எழுதுகிறேன்.

Tuesday 25 August 2009

நான் பார்க்கும் உலகம்: ஓகஸ்ட் 23-29 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.
அரசியல்- இலங்கை

இலங்கை இராணுவத்தின் வீர சாகசம் குறித்தான சில காணொளிகளை பிரித்தானிய தொலைக்காட்சி ஒன்று அம்பலப்படுத்தியிருக்கிறது. அதாவது தமிழ் இளைஞர்கள் சில பேரை கைகளையும், கால்களையும், வாயையும் கட்டி, பெரும்பாலானவர்களை நிர்வாணமாக்கி சுட்டுக் கொலை செய்கிறார்கள். அது சம்பந்தமான காணொளி பிரித்தானியாவின் சானல்-4 தொலைக்காட்சியில் காட்டப்பட்டிருக்கிறது. அந்தக் காணொளியில் காட்டப்பட்ட 9 உடலங்களில் 8 உடல்களில் துணி என்ற பெயருக்கே இடமில்லை. அவசர அவசரமாக இலங்கை இந்தக் காணொளியின் நம்பகத்தன்மை பற்றிக் கேள்வி எழுப்பியிருக்கிறது. சானல்-4 இக்காணொளி தமிழர்கள் அல்லாத இலங்கை ஊடகவியலாளர்களிடம் இந்தக் காணொளியைப் பெற்றுக்கொண்டதாகச் சொல்லியிருக்கிறது. காணொளியை இணைத்திருக்கிறேன். (கொடூரமான காட்சிகள் நிறைந்த காணொளி. மென்மையான இதயம் கொண்டவர்களோ, குழந்தைகளோ இக்காணொளியைப் பார்க்க அனுமதிக்கவேண்டாம்)



விடுதலைப் புலிகளிடம் மீட்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் புதிதாக நீதிமன்றங்களைத் திறக்க இருப்பதாக நீதியமைச்சு அறிவித்திருக்கிறது. பலவருடங்களாக இந்த மாவட்டங்களில் அரசாங்க நீதிமன்றுகள் தொழிற்படவில்லை. புலிகளின் நீதிமன்றுகள் செயற்பட்டு வந்தன. (இலங்கைச் சோசலிசக் குடியரசின் சட்டக் கோவையின் மேம்பட்ட வடிவம் என்று புலிகளின் சட்டக் கோவைபற்றி எனது தந்தை குறிப்பிடக் கேள்விப்பட்டிருக்கிறேன்). இப்போது அங்கேயும் நீதிமன்றங்கள் திறக்கப் படப் போவது குறித்து மகிழ்ச்சியடைய முடியவில்லை. அதற்குக் காரணம் கீழே உள்ள செய்தி
பொலிஸ் நிலையத்தில் மறியலில் வைக்கப்பட்டிருந்த ஒரு கைதியை ஆடைக் கைத்தொழில்துறை அமைச்சர் மஹிந்த ரட்னதிலக தனது அடியாட்களோடு சென்று பலாத்காரமாக விடுவித்து அழைத்துச் சென்ற செய்திதான் அது. இரத்தினபுரியில் நடந்த இந்தச் சம்பவத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை மோட்டார் சைக்கிளால் மோதிய குற்றத்துக்காக மறியலில் வைக்கப் பட்டிருந்த ஒருவரையே இவ்வாறு அமைச்சர் மீட்டுச் சென்றிருக்கிறார். இப்படி மிக 'உன்னதமான' அரசியல் நிலவும் ஐக்கிய இலங்கையில் நீதியமைச்சு, நீதிமன்றம், நீதிதேவதை, சட்டக்கோவை போன்ற சொற்கள் மிக விரைவில் வழக்கொழிந்து போய்விடலாம். (நல்ல வேளை, சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சை முடிவுகள் வரமுன் கனடா விசா கிடைத்து இங்கே வந்துவிட்டேன்)

அரசியல்-உலகம்

இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை 76ஆக உயர்ந்திருக்கிறது. பன்றிக்காய்ச்சல் பரவுவதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதனால் பதற்றம் வேண்டாம் என்றும் அறிவித்திருக்கிறார்கள். மருந்துப் பொருட்களும் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இதேவேளை எல்லா நோயாளிகளையும் அரசு மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிக்க முடியாததால் சிற்சில தனியார் மருத்துவமனைகளுக்கும் பன்றிக் காய்ச்சல் சிகிச்சையளிக்கும் அனுமதி வழங்கப் பட்டிருக்கும் செய்தி நம்பிக்கையளிப்பதாக உள்ளது என்று ஒரு ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. பொது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிறதா அல்லது பணம் பிடுங்கிகளுக்கு நம்பிக்கை அளிக்கிறதா அச்செய்தி என்றுமட்டும் கூற மறந்துவிட்டார்கள்.

கனடாவில் மிக விரைவில் இன்னொரு தேர்தல் வரும் சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளதாக புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜாக் லேய்டன் கூறியிருக்கிறார். பலவிடயங்களில் பிரதமஎ ஸ்டீஃபன் ஹார்ப்பரின் அரசு தவறிழைப்பதாகவும், அதனால் அவர்கள் மீதான ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணை தவறில்லை என்றும் அவர் சொல்லியிருக்கிறார். ஹார்ப்பருடன் இன்று நடத்திய ஒரு மணித்தியால தனியான சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார். ஒரு முழுமையான ஆட்சிக்காலத்துக்குள் மூன்று தேர்தல்களைச் சந்திக்க கனேடிய மக்கள் எந்தளவு தயாராயிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

இதேவேளை கனேடியப் பிரஜையான சுவாட் ஹாஜி மொகமட் என்கிற பெண்மணியை கென்யாவிலிருந்து கனடாவுக்கு வரவிடாமல் ‘நீங்கள் கனேடியப் பிரஜை என்று நம்பமுடியவில்லை' என்ற காரணத்தைக் காட்டி ஆறுநாட்கள் தடுத்து வைத்திருந்த பிரச்சினையும் ஹார்ப்பர் அரசாங்கத்துக்கு சிக்கலாகிவிட்டது. கடைசியாக மரபணுப் பரிசோதனை மூலமே அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டு கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்டார். தன்னுடைய சோமாலிய வம்சாவளியைக் காரணமாக வைத்துத் தனக்குக் கொடுமை இழைத்து விட்டதாக மத்திய அரசாங்க அதிகாரிகள் மீது $2.5 மில்லியன் நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடர இருக்கிறார் அந்தப் பெண்மணி. காணொளி இங்கே.

ஆஃப்கானிஸ்தான் ஜனாதிபதித் தேர்தலின் முதற்கட்ட முடிவுகள் குண்டு வெடிப்புகளோடு சேர்ந்து வந்திருக்கின்றன. தற்போது ஜனாதிபதியாக இருக்கின்ற ஹமீத் கர்ஸாய் அவரது பிரதான போட்டியாளர் அப்துல்லா அப்துல்லாவைவிட சற்றே முன்னிலையில் இருக்கிறார் என்கிற செய்தியும் சில குண்டுவெடிப்புகளுமாக ஆஃப்கானிஸ்தான் அரசியல் நாறிப்போய்க் கிடக்கிறது. தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்கிற பெயரில் உலகப் பொலிஸ்காரன் அமெரிக்காவின் முட்டாள்தனமும், தலிபான்களின் பிடிவாதமும் சேர்ந்து அந்த மக்களைக் கிட்டத்தட்ட நிரந்தர அடிமைகளாக மாற்றிவிட்டன. உலகப் பொலிஸ்காரனின் கூத்தால் பல நாடுகளிலிருந்துமான துருப்புக்கள் ஆஃப்கானிஸ்தான் போய் அடிக்கடி செத்துக்கொண்டே இருக்கிறார்கள். புலிவாலைப் பிடித்த கதையாக அமெரிக்கா முழிக்கிறது.

பொருளாதாரம்

ஒன்ராறியோ மாநிலத்தில் Employment Insurance பெறுபவர்களின் எண்ணிக்கை போன வருடத்தை விட இரண்டு மடங்காக அதிகரித்திருப்பதாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. ஜுன் 2008ல் 45, 080 பேர் EI பெற்றுக் கொண்டிருந்தார்கள். இப்போது 95, 820 பேர் பெறுகிறார்கள். அதாவது கிட்டத்தட்ட 113% ஆல் இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. முக்கியமாக தெற்கு ஒன்ராறியோவில் அதிகமாகக் காணப்படும் தொழிற்சாலைகளில் பலர் வேலையிழந்திருப்பது இதற்கு ஒரு முக்கிய காரணமாகச் சுட்டிக்காட்டப் படுகிறது.

தொழில் நுட்பம்
Smart Phone களின் முன்னோடியான RIM தற்போது Torch Mobile என்ற ஒரு நிறுவனத்தை வாங்கியுள்ளது. இந்த நிறுவனம் Iris என்கிற Browser ஐ கைத் தொலைபேசி உலகில் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்த நிறுவனம் ஆகும். Iris Browser ஆனது Webkit என்ற Open Source Layoutன் அடிப்படையிலானது. ஆக மொத்தத்தில் இது RIM ன் Apple உடனான நேரடிப் போட்டியின் அடுத்தகட்டம் என்பது தெளிவாகியிருக்கிறது. முதன் முதலாக Black Berry Smart Phone களை அறிமுகம் செய்யும் போது தாங்கள் Internet Browsing பற்றிப் பெருமளவு கவலைப் படவில்லை என்றாலும், Appleன் i-Phone அந்த நிலமையை மாற்றிவிட்டதாக RIM ஒப்புக் கொள்கிறது. ஏற்கனவே மற்ற Smart Phone களிலுள்ள Browser களோடு ஒப்பிடும்போது Blackberry பின்தங்கி இருப்பதாகப் பலர் கருதும் நிலையில் RIM இந்த முடிவை எடுத்திருக்கிறது. ஆனால் Open Source உலகில் ஆழமாக வேரூன்றிவிட்ட Apple உடன் இவர்கள் எவ்வளவுகாலம் தாக்குப் பிடிப்பார்கள் என்பது காலப் போக்கில் தெரியவரும்.

விளையாட்டு

இங்கிலாந்து கடந்த முறை இழந்த ஆஷஸ் கிண்ணத்தை மறுபடி கைப்பற்றி இருக்கிறது. ஓவல் மைதானத்தில் நடந்த கடைசிப் போட்டியில் 197 ஓட்டங்களால் வெற்றி பெற்று இதைச் சாதித்திருக்கிறார்கள். ஓய்வு பெறும் அன்றூ ஃபிளிண்டோஃபுக்கு நல்ல பரிசு இது. அவுஸ்திரேலியா டெஸ்ட் தரவரிசையில் 4வது இடத்துக்குப் தள்ளப்பட்டிருக்கிறது . அணித்தலைவர் பொண்டிங்கை மாற்றுமாறு சிலரும், மாற்றத் தேவையில்லை என்று பலரும் கூறியிருக்கிறார்கள். கிரெக் சப்பல் போன்றவர்கள் பொண்டிங்குக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அவுஸ்திரேலியக் கிரிக்கெட் வாரியமும் அவருக்கு ஆதரவாகவே இருக்கிறது.

இங்கிலாந்துக் கால்பந்தாட்டக் கழகங்களின் Premier League போட்டிகளின் ஆரம்பக் கட்டங்களில் ஸ்பேர்ஸ் (Tottenham Hotspurs) மற்றும் செல்ஸீ அணிகள் முன்னணி வகிக்கின்றன. ஆர்சனல், மான்செஸ்டர் யுனைற்றற் அணிகளும் பெரியளவுக்கு பின் தள்ளப்படவில்லை. சென்ற வருடம் இரண்டாமிடம் பெற்ற லிவர்பூல் அணி 3 போட்டிகளின் பின்னர் 10வது இடத்தில் இருக்கிறது. முதல் ஐந்து இடங்கள்: ஸ்பேர்ஸ் (3-போட்டிகள், 9 புள்ளிகள்), செல்ஸீ (3-9), ஆர்சனல் (2-6), மான்செஸ்டர் யுனைற்றற் (3-6), மான்செஸ்டர் சிற்றி (2-6).

ஜமேக்காவின் உசேய்ன் போல்ட் செய்யும் சாதனைகளுக்கு யாராவது சட்டம் இயற்றி முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். 100 மீற்றர் ஓட்டத்திலும், 200 மீற்றர் ஓட்டத்திலும் தனது முன்னைய முன்னைய உலக சாதனைகளை முறியடித்து தன்னை மீண்டும் நிரூபித்திருக்கிறார். 100 மீற்றர் ஓட்டத்தில் தன்னுடைய முன்னைய சாதனையான 9.69 செக்கன்கள் என்ற இலக்கைத் தாண்டி 9.58 செக்கன்களில் ஓடி முடித்த போல்ட், 200 மீற்றர் ஓட்டத்திலும் 19.19 செக்கன்களில் ஓடி தன்னுடைய சாதனையான 19.30 செக்கன்கள் என்ற சாதனையை இல்லாது செய்தார். ஜமேகாவில் பிறந்த இந்தத் தங்கமகன் இன்னும் எத்தனை சாதனைகள் செய்யப் போகிறாரோ?

Sunday 23 August 2009

இலங்கைப் பதிவர்கள் சந்திப்பு

இலங்கைப் பதிவர்கள் சந்திப்பு கொழும்பில் இன்று இனிதே நடந்தேறியது. கனேடிய நேரம் சரியாக சனிக்கிழமை இரவு 11:43 க்கு (இலங்கை நேரம் 9:13) ஆரம்பித்த இந்த ஒன்றுகூடல் சரியாக ஞாயிறு அதிகாலை 3.28க்கு நிறைவு பெற்றது. 'கௌபாய்மது' என்ற பதிவரால் இணையத்தில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்ட இந்த ஒன்றுகூடலை நானும் முழுமையாகப் பார்த்தேன். நேரடி ஒளியலை கிடைத்த வலைத்தளத்தில் இருந்த கலந்துரையாடும் வசதி காரணமாக, சந்திப்பில் நேரடியாகக் கலந்து கொண்டிருந்த பதிவர் ஊரோடி, கௌபாய்மது ஆகியோர் மூலமாக எங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதோடு, வசந்தன், கானாபிரபா, சயந்தன் ஆகியோர் நடத்திய இணையக் கலந்துரையாடலிலும் சில சுவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது. இந்தச் சந்திப்பில் நான் அவதானித்த, கற்றுக்கொண்ட விடயங்கள் வருமாறு.
  • இலங்கை நேரப்படி 9.13க்கு ஒன்றுகூடல் ஆரம்பமானது. இது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விடயம். 9.00 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய ஒன்றுகூடல் 10.00க்கு முன் ஆரம்பித்ததே ஒரு பெரிய சாதனை.
  • நேரடி ஒளிபரப்பு 9.30 இலிருந்து சீராக கிடைத்தது. இது மதுவின் முதல் முயற்சியாம். ஒன்றுகூடல் ஆரம்பமாகும் நேரத்துக்கு மண்டபத்துக்கு வந்தவர்கள் மட்டும் 55 பதிவர்கள். மூத்தவர்கள் தொடக்கம், 11 வயது இளையவன் வரை வந்திருந்தார்கள்.
  • புல்லட் அறிமுகவுரை நிகழ்த்தினார். அதன் பின் சுபானு உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து ஆதிரை Bloggerன் 10வது பிறந்த நாள் கொண்டாடினார்.
  • Blogger ஆரம்பித்த 10 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் நேற்று என்பது ஒரு தற்செயலான ஒற்றுமை. அதை கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். எழுந்தமானமாகத் தெரிவு செய்யப்பட்ட 10 பதிவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்க, மூத்தவர்களான திரு.அந்தனி ஜீவா, கவிஞர் திரு.மேமன் கவி, சிறப்பு விருந்தினரான திரு.எஸ்.எழில்வேந்தன் மற்றும் வலைப்பதிவர் டொக்ரர் ஜீவராஜ் ஆகியவர்கள் கேக் வெட்டினார்கள்
  • அதன் பின்னர் மருதமூரான், சேரன்கிரிஷ், லோஷன் ஆகியோர் உரையாற்றினர். சிறப்பு விருந்தினர் எழில்வேந்தன் மருதமூரானுக்குப் பின்னர் சிறப்புரை ஆற்றினார்.
  • லோஷனின் உரையைத் தொடர்ந்து விவாதங்களுக்குள் நுழைந்தார்கள், நேரடியாகப் பங்கு கொண்டவர்களும், இணையத்தில் இருந்தவர்களும்.
  • தமிழில் தட்டச்சு செய்வது பற்றி காரசாரமாக விவாதித்தார்கள். அதுவும் இணையத்தில் எங்களோடு உரையாடிக் கொண்டிருந்த வசந்தன் அண்ணாவும், சயந்தன் அண்ணாவும் Phonetic Unicode முறையைக் காரசாரமாக விமர்சித்தார்கள். (என்னட்டையும் தமிழ் எழுத்துக்கள் இருக்கிற கீ-போட் இருந்தா நானும் வடிவா டைப் செய்வன். ஊரில இருந்தது, இஞ்ச தேடோணும்.)
  • இலங்கைப் பதிவர்கள் அதிகளவில் இலங்கையில் பயன்பாட்டில் இல்லாத சொற்களைப் பயன்படுத்துவது பற்றி விமர்சிக்கப்பட்டது. சயந்தன் அண்ணா அடிக்கடி ‘கீத் இது உனக்குத்தான்' என்று சொல்லி நக்கலடித்தார். (அண்ணா, ஒன்லைனில நான் மாட்டீற்றன்... ஆனா கன ஆரம்பநிலை வலைப் பதிவர்களுக்கு தொப்பி பொருந்தும். அனுபவம் சேரச் சேர எல்லாம் சரிவரும் அண்ணா, இப்ப ஏசாதையுங்கோ)
  • புனைபெயர்களில் எழுதுபவர்கள் பற்றியும் கொஞ்சம் விவாதித்தார்கள். நான் புனை பெயரில் எழுதாவிட்டாலும், இலங்கையில் உள்ள பதிவர்கள் சொந்தப் பெயர்களில் எழுதுவது எந்தளவு நடைமுறைச் சாத்தியமானது என்று சீர்தூக்கிப் பார்க்கவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
  • ழ,ல,ள, ந, ன, ண பற்றியும் பேசினார்கள். இந்தப் பிரச்சினையில் எனக்கு சம்பந்தம் இல்லை என்பது என்னுடைய கருத்து.
  • பல பதிவர்களின் பதிவுகள் சினிமா சம்பந்தப் பட்டு இருப்பதாக ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. அதை நானும் ஒப்புக் கொள்கிறேன். சில நாட்களுக்கு முன்னர் நடந்த ஒரு பிரச்சினையின் பின் முடிந்தளவுக்கு ‘சினிமா மட்டும்' கருப்பொருளான பதிவுகளை இயலுமானளவுக்குத் தவிர்த்திருக்கிறேன். அது தரமான பதிவுகளை, சுயம் நிறைந்த பதிவுகளைத் தருவதற்கான என்னாலான முயற்சி.
  • எங்கள் வாழ்வியலில் பயன்பாட்டில் இல்லாத சொற்களைப் பயன்படுத்தாமல், அன்றாடம் பயன்படுத்தும் சொற்களைப் பயன்படுத்துங்கள் என்ற கருத்தை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், இன்ன இன்ன விடயங்களைத்தான் ரசிக்க வேண்டும், இன்ன இன்ன விடயங்களை ரசிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடுகளையும், என்னமாதிரியான உரைநடையில் எழுதவேண்டும் என்பதையோ யாரும் கட்டுப்படுத்த முடியாது என்பது என் கருத்து.
  • யாழ்தேவி என்ற பெயரில் உள்ள திரட்டி இலங்கைப் பதிவர்கள் அனைவருக்கும் பொதுவான பெயராக இருக்க முடியாது என்ற வாதம் நியாயமானதாகப்படுகிறது. இப்போது கொழும்பு-தாண்டிக்குளம் (தகவல் தந்தது: சயந்தன் அண்ணா) செல்லும் புகையிரத வண்டிதான் யாழ்தேவி என்றால், அது ஒரு பொதுமைப் படுத்தப்பட்ட இலங்கைத் தமிழருக்கான அடையாளமாக இருக்காது.
  • விழாவை வந்தியத்தேவன் தன்னுடைய ‘பின்னூட்டத்துடன்' முடித்து வைத்தார். வந்திருந்த அனைவருக்கும் வடை, பற்றீஸ், கேக், நெஸ்கஃபே வழங்கப்பட்டது. இணையத்தில் இருந்து இணைந்த நாங்கள் கொட்டாவி மட்டும் விட்டோம்.
சந்திப்பு சம்பந்தமான படங்களை ஆதிரையின் தளத்திலோ, வந்தியத்தேவனின் தளத்திலோ பாருங்கள்.

தனிப்பட்ட சந்தோஷங்கள்
  • பள்ளிக்காலத் தோழர்களான பால்குடி, பனையூரான், ஆதிரை ஆகியோரை மீண்டும் கண்டது. வந்தியத்தேவன் அண்ணாவின் குரல் கேட்டது.
  • ஒன்றுகூடலில் பேசியவர்களின் பேச்சுக்களிலும், கலந்துரையாடலிலும், கானா பிரபா, சயந்தன், வசந்தன் ஆகிய மூத்தவர்களுடனான உரையாடலில் கிடைத்த சில பயனுள்ள கற்கைகள்.
  • எங்கட பொடியள் செய்த நேரடி ஒளிபரப்பு. மதுவுக்கு திரும்பவும் வாழ்த்துக்கள்.
  • இந்தியப் பதிவர்கள் சிலர் வந்து வாழ்த்தினார்கள், ஒன்லைனில்.
ஒரு தனிப்பட்ட துக்கம்
  • எங்கள் ஒன்லைன் விவாதத்தின் இடையே அடிக்கடி ஒருவர் பெயரை மாற்றி மாற்றி எங்களைக் கோபமூட்ட முயன்றது.
ஆக மொத்தத்தில், இரண்டு பேர் சேர்ந்தாலே பொதுக்கூட்டம் என்கின்ற மாதிரி ஒன்றுகூடல்கள் நிகழும் ஒரு காலத்தில் அறுபது பேர் கலந்து கொண்ட ஒன்றுகூடலை ஒருங்கிணைத்த வந்தியத்தேவன், லோஷன், புல்லட், சுபானு ஆகியோருக்கும், கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

பதிவர் சந்திப்பின் முழுமையான ஒலி வடிவம்: நன்றி மதுவதனன்

Friday 21 August 2009

தமிழ்த் தொலைக்காட்சிகளின் வண்ணம்

கனடாவில் தமிழ் தொலைக் காட்சிகளின் பெயர்களே ‘தமிழ் வன்' ‘ரி.வி.ஐ' இப்படித்தான் இருக்கின்றன. இதில் பெரிய தொல்லை என்னவென்றால் ‘ரி.வி.ஐ' சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், ‘தமிழ் வன்' கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் அப்படியே ஒளிபரப்புவதுதான். இதற்கு மாதாமாதம் $15 தண்டம் செலுத்த வேண்டியிருப்பது கொடுமையிலும் கொடுமை. வீட்டில் High Speed Extreme இணைய வசதி இருப்பதால் விரும்பிய நிகழ்ச்சிகளை இணையத் தளங்களில் இருந்து தரவிறக்கிப் பார்ப்போம் என்கிற என்னுடைய ஆலோசனை வீட்டில் எடுபடவில்லை. குடும்பத் தலைவர் சொன்ன காரணம் 'ஊர் நிலவரங்களைப் பார்க்க வீட்டில ஒரு தமிழ்ச் சனல் இல்லாட்டி சனம் மதிக்காது'. ஆனால் அவரது மகன் ஏதாவது ஆங்கில ஒளிபரப்புகளைப் பார்த்தால் துள்ளி விழுவார் என்பது வேறு விஷயம்.

சாப்பிடுவதற்காக கீழே போகின்ற தருணங்களையோ, அல்லது விருந்தினர்கள் வீட்டுக்கு வருகின்ற தருணங்களையோ தவிர்த்து நான் தொலைக்காட்சி முன்னால் அமர்வது செய்தி பார்க்க மட்டுமே. கொடுமை என்னவென்றால் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளும் சரி, நாங்கள் விருந்தாளிகளாகப் போகும் வீட்டுக்காரர்களும் சரி, போய் உள்ளே நுழைந்ததும் ‘எங்கட வீட்டு ரீ.வீ.ல இதெல்லாம் வரும்' என்று தம்பட்டம் அடித்துச் செய்கிற தொல்லை தாங்க முடிவதில்லை. அதிலும் ‘ரி.வி.ஐ பெஸ்டா, தமிழ் வன் பெஸ்டா' என்பது போன்ற இலக்கியச் சர்ச்சைகளைத் தாங்க முடிவதில்லை. இத்தனைக்கும் இரண்டு தொலைக்காட்சிகளும் முக்கால்வாசி நேரமும் அவைகளின் இந்தியத் தாய் நிறுவன (!!!???) நிகழ்ச்சிகளையே ஒளிபரப்புகின்றன.

‘அரட்டை அரங்கம்' பாணியில் ரோகிணி நடத்தும் நிகழ்ச்சி மிகவும் பொறுமையை சோதிக்கிறது. விஜய் ரி.வி. ‘நீயா நானா' போல் (ஆங்கிலத்தின் மிகையான பாவனையைக் குறைத்து) நல்ல நிகழ்ச்சிகளை நடத்தலாமே. ‘கலக்கப் போவது யாரு', ‘ஜோடி நம்பர் வன்' போன்ற விஜய் நிகழ்ச்சிகளை பிரதி பண்ணிய சன்னும் கலைஞரும் இப்படியான நிகழ்ச்சிகளைப் பிரதி பண்ணப் போவதில்லை. அப்படியிருக்கையில் அவர்கள் ஒளிபரப்பும் ரசனைக் குறைவான, அறிவுச் செறிவற்ற நிகழ்ச்சிகளை தமிழ் வன்னும், ரீ.வி.ஐ. யும் ஒளிபரப்புவதை என்னால் ஏனோ ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எம்மவர்களின் நிகழ்ச்சிகள் மிகக் குறைவானளவே ஒளிபரப்பாகின்றன. முழுமையாக சன் மற்றும் கலைஞர் போன்ற தொலைக்காட்சிகளின் படைப்புகள் உலகம் முழுக்க உள்ள தமிழர்களின் வரவேற்பறையை ஆக்கிரமித்துள்ளன.

எல்லா நாட்டுத் தொலைக்காட்சி ரசிகர்களுக்கும் ஒரு கேள்வி. சுப்பர் சிங்கர், சுப்பர் டான்ஸர் போல ஏன் அறிவு சம்பந்தமான நிகழ்ச்சிகளை இவர்கள் தயாரிப்பதில்லை? இந்த சுப்பர் சிங்கர், சுப்பர் டான்சர் போன்ற நிகழ்ச்சிகளில் பிள்ளைகளை பாடவிட்டும், ஆட விட்டும் ரசிக்கும் பெற்றோர் ஏன் அந்தக் குழந்தைகளைக் கல்வி சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு அனுப்புவதில்லை. எனக்கு காலாகாலத்துக்கும் மறக்கமுடியாத ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி முன்பொருகாலத்தில் பி.பி.சி. யில் ஒளிபரப்பான பொது அறிவு சம்பந்தமான நிகழ்ச்சி. அறிவிப்பாளரின் பெயர் நிகழ்ச்சியின் பெயர்கூட ஞாபகமில்லை, ஆனால் இன்றைக்கும் ஏதாவது பொது அறிவு நிகழ்ச்சிகளில் ஏதாவது கேள்விக்கு நான் சரியாகப் பதில் சொல்கிறேன் (அட, வீட்டில் பக்கத்தில் இருப்பவரிடம்தான்) என்றால் அதற்கு மூல காரணம், பி.பி.சி.யில் வந்த அந்த நிகழ்ச்சிதான்.

எனக்குப் புரியாதது இதுதான். கிட்டத்தட்ட அரைமணிக்கு ஒரு முறை ஒளிபரப்பாகும் எல்லாத் தொடருமே ஒரே மாதிரிதான் இருக்கிறது. இரண்டு மணிக்குப் போகும் தொடரின் கதைக்கும், நான்கு மணிக்கு போகும் தொடரின் கதைக்கும் எந்த வித்தியாசத்தையும் காணமுடியவில்லை. எல்லாத் தொடர்களும் ஒரு இடிதாங்கி, ஒழுக்கம் கெட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பலர், நல்லவராக யாரையாவது காட்ட வேண்டுமே என்பதற்காக ஒரு சிலர் இப்படித்தான் இருக்கிறது. இப்படியான தொடர்களில் வாரி இறைக்கும் காசை, ஒரு நல்ல பொது அறிவுப் போட்டி, உச்சரிப்புப் போட்டி, தமிழறிவுப் போட்டி, குறள் மனனப் போட்டி போன்ற போட்டிகளை இதே ஆரவாரத்தோடு பிரம்மாண்டமாக தயாரிக்கலாம் அல்லவா?

டென்மார்க்கில் வசிக்கும் என்னுடைய அக்கா ஒருவரின் மகள் இந்த சுப்பர் சிங்கர் யூனியர் போன்றதொரு நிகழ்ச்சியில் டென்மார்க்கில் தெரியப்பட்ட 10, இருவர் கொண்ட குழுக்களில் இடம்பெற்றிருக்கிறாள். இந்த நிகழ்ச்சிக்கும் சுப்பர் சிங்கருக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் அனைவரும் தாமே எழுதி, தாமே இசையமைத்துப் பாடவேண்டும். அவர்களின் வயதுகளுக்கேற்றபடி தரம் நிர்ணயம் செய்து தேர்ந்தெடுக்கிறார்கள். அக்காவின் மகளும் அவளோடு சேர்ந்து சங்கீதம் கற்கும் இன்னொரு பெண் பிள்ளையும் (15 வயதுதான்) சேர்ந்து ஒரு பாடலை உருவாக்கி, போட்டியிடுகிறார்கள். இப்படியான நிகழ்ச்சி அழகானது.
அதை விடுத்து ‘த வே ஒஃப் யுவர் சிங்கிங் இஸ் நொட் அப் டு த மார்க்' ‘வாவ்.. அம்ம்ம்மேஸிங்..எக்ஸலண்ட்... சான்சே இல்ல' இப்படியான இரண்டு விமர்சனங்களை மட்டும் வைத்து காலத்தை ஓட்டும் நடுவர்களை வைத்து நடத்தப்படும், பெற்றோர்களையும் குழந்தைகளையும் நன்றாக நடிப்புச் சொல்லிக் கொடுத்து நடிக்க வைக்கப்படும் நிகழ்ச்சிகள், ம்ஹூம்.. அதிலும் ஒரு கொஞ்சக்காலம் கிரிஷ் (சங்கீதா புருஷன்)செய்த அட்டகாசம் தாங்காமல் கிரிஷ் பாடும் சினிமாப் பாடல்கள்கூட வெறுத்துப் போனது. இவர்கள் எஸ்.பி.பியிடம் பாடுவதில் மட்டுமல்ல, ஒரு நிகழ்ச்சியை விமர்சனம் செய்வதில் கூட டியூஷன் எடுக்கலாம்.

முற்றுமுழுதாக கல்வி, அரசியல், சமூகம் என்று போய்விடுங்கள் என்பது என்னுடைய வாதம் இல்லை. நிச்சயமாக சில entertaining நிகழ்ச்சிகள் அவசியம்தான். அதற்காக முழுக்க முழுக்க entertainment என்று போய்விடக் கூடாது. இப்போதெல்லாம் தியேட்டரில் போய் படம் பார்ப்பதைவிட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது என்பது பிரதானமான பொழுதுபோக்காக மாறிவிட்ட நிலையில், திரைப்படங்களை நம்பி தொலைக்காட்சிகள் என்ற நிலை தலைகீழாகிவிட்ட நிலையில் தொலைக்காட்சிகளுக்கு அதிகப் பொறுப்பிருக்கிறது என்பது என்னுடைய அபிப்பிராயம்.

இதை யாரிடம் சொல்லி அழ?

எங்களுக்கு தொலைக்காட்சி கேபிள் தருபவர்கள் ‘ரோஜேர்ஸ்' என்னும் நிறுவனத்தினர். அவர்கள் இரண்டு வாரத்துக்கு முன்னர் ஒரு கடிதம் அனுப்பினார்கள். ஓகஸ்ட் 20ம் திகதியிலிருந்து குறிப்பிட்ட அலைவரிசைகளில் இயங்கும் சில தொலைக்காட்சிச் சானல்களை வேறு அலைவரிசைக்கு மாற்றப் போவதாக அறிவித்திருந்தார்கள். முக்கால்வாசிப் பேர் அந்தக் கடிதத்தை வாசிக்காமல் எறிந்து விட்டார்கள். நான் recycle binக்குளிருந்து கவனமாக எடுத்து வைத்திருந்தேன். ஓகஸ்ட் 2ஒம் திகதி 622ம் இலக்கத்தில் அதுவரை ஒளிபரப்பான தமிழ் வன்னைக் காணவில்லை. நான் என்னிடம் இருந்த கடிதம் மூலமாக அது 868ல் வருகிறது என அறிந்து வீட்டாருக்கும் சொன்னேன். 868 ல் ஒளிபரப்பான தமிழ் வன்னில் அடிக்கடி ஒரு அறிவிப்புப் போட்டுக் கொண்டிருந்தார்கள். ‘தமிழ் வன் இன்றுமுதல் 622இலிருந்து 868 க்கு மாற்றப்பட்டிருக்கிறது'. ‘இந்தக் கடிதம் கிடைக்கவில்லை என்றால் உடனே எனக்குத் தெரியப்படுத்தவும்' என்பதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம். 622லிருந்து 868க்கு மாற்றப்பட முன்னரே இந்த அறிவிப்பு வந்திருக்க வேண்டாமா?

Thursday 20 August 2009

பேசிய படங்கள்

நிறைய காலத்துக்குப் பிறகு ஒரு சினிமாப் பதிவு. அதாவது இரண்டு வாரத்துக்குப் பிறகு. நான் என்னுடைய முன்னைய பதிவு ஒன்றில் சொன்னது மாதிரியே பேசாப் பொருளைப் பேசத்துணிந்த இரு படங்களான அச்சமுண்டு அச்சமுண்டு மற்றும் வேலு பிரபாகரனின் அரிப்புக் கதை, மன்னிக்கவும், காதல் கதை இரண்டையும் சென்ற வார இறுதியில் பார்த்தேன். இரண்டைப் பற்றியும் என்ன நினைக்கிறேன் என்பதுதான் இந்தப் பதிவின் ஆதார நோக்கம்.

வேலு பிரபாகரனின் காதல் கதை

என்னதான் திட்டித் தீர்த்தாலும், வேலு பிரபாகரனைச் சில விஷயங்களுக்காகப் பாராட்டியாக வேண்டும். அவர் பேச வந்த விஷயம் கத்தி மேல் நடப்பது போன்றது. என்னதான் வாய்கிழியக் கத்தினாலும், காமம் கலக்காத காதல் இல்லை என்பது உண்மை. எனக்குத் தெரிந்து காதலியைத் தனிமையான இடத்தில் வைத்துச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது தொட்டுப் பார்க்காத காதலனும், அவ்வாறு தொட அனுமதிக்காத காதலியும் இருக்கவே முடியாது. இல்லை, நாங்கள் பெற்றோர் சம்மதம் கிடைத்து கல்யாணம் கட்டும் வரை தொட்டுக் கொள்ளவே மாட்டோம் என்று சபதம் எடுத்திருக்கிறோம் என்றெல்லாம் யாராவது சொன்னால், அது பச்சைப் பொய். ஒரு துளியாவது காமம் கலக்காமல் காதல் இல்லை என்பது நிதர்சன உண்மை.ஆனால் வேலு பிரபாகரன் எல்லாமே காமம்தான் என்று சொல்லத் தலைப்பட்டிருக்கிறார். அதுதான் உதைக்கிறது. கிட்டத்தட்ட காதல் என்ற ஒரு உணர்வே இல்லை, எல்லாமே காமம்தான் என்ற மாதிரி இருக்கிறது அவரது பார்வை.

எனக்குத் தெரிந்து மோசமான சிலரைத் தவிர வேறு எந்தக் காதலனோ காதலியோ குளத்தாங்கரையிலோ, பனந்தோப்புகளிலேயோ ‘கூடும்' அளவுக்குப் போவதில்லை. அங்கே இங்கே ஏடாகூடமாகத் தொட்டுக் கொள்வார்கள், முத்தமிட்டுக் கொள்வார்கள். சந்திக்கிற போதெல்லாம் கூடுவதை மட்டுமே ஆதார நோக்கம் கொண்டவர்களாக ஒரு காதல் ஜோடியைப் படைத்திருப்பது எனக்கு ஏனோ ஒப்பவில்லை. படம் முழுவதும் இப்படியான அழுத்தமில்லாத பாத்திரப் படைப்புகள். இதிலும் பெரிய irony என்னவென்றால் ஒரு கடற்கரையில் குறைந்த பட்ச ஆடைகளோடு ஆடும் பெண்கள் பற்றியும், அப்படி எல்லாவற்றையும் ‘திறந்து' வைத்தால் கற்பழிப்பு போன்ற பாலியல் சம்பந்தமான குற்றங்கள் குறையும் என்பது பற்றியும் முழுமையாக உடை அணிந்த வண்ணம் பாடம் நடத்துகிறார்.

நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான். ஏன் பெண்கள் மட்டும் திறந்து வைக்கவேண்டும்? நீங்களும் உங்களுடையவற்றை ‘ஆடவிட்டு' திரியலாமே. இவர் மட்டும் முழுக்க மூடியிருப்பாராம், இவரது இச்சை தணிக்க பெண்கள் மட்டும் 'திறந்து' பிடிக்க வேண்டுமாம். படம் முழுக்கவும் இவரது ஒரே ஒரு பார்வை மட்டுமே தென்படுகிறது, அதாவது காலம் காலமாக நிலவி வருகிற ‘பெண் ஒரு போகப் பொருள், அவள் திறந்து காட்டிக் கொண்டு திரிந்தால் எல்லாம் சரியாகிவிடும்' என்கிற கேவலமான ஆணாதிக்க சிந்தனை. இதில் பெரியார் வேஷத்தைத் தானும் போட்டு..அட கருமமே.. அம்மா, தாய்மாரே, நம்ம வேலு பிரபாகரன் என்ன சொல்ல வர்றார் தெரியுமோ? உங்கள் பிள்ளைகள் காமம் பற்றிய நல்ல அறிவோடு தெளிவாக வளர, நீங்கள் திற................. அடச்சீ.. பொத்திக் கொள்கிறேன். ஆக, சொல்லவேண்டிய ஒரு விஷயத்தை கேவலமான ஒரு கோணத்தில் சொல்லியிருக்கிறார் வேலு பிரபாகரன்.

அச்சமுண்டு அச்சமுண்டு

சின்னப் பிள்ளைகளைப் பயன்படுத்தித் தாகம் தணிக்கும் மனிதன் ஒருவனைப் பற்றிய கதை. இந்தப் படத்தில் வியாபார ரீதியாக சில விஷயங்கள் விட்டுப் போயிருக்கிறன. படம் மிக ஆறுதலாக நகர்கிறது. இன்னும் கொஞ்சம் படபடப்பை ஏற்றியிருக்கலாம். இப்போ இயக்குனர் அருண் வைத்தியநாதன் சொல்ல வந்திருக்கும் விஷயம் எந்த அளவுக்கு எங்கள் சமூகத்துக்கு பொருத்தமானது என்பதுதான் கேள்வியே.

இயக்குனர் சொல்லியிருப்பது போல் கடத்திப் போய் அனுபவிக்கும் அளவுக்கு இல்லையென்றாலும், அவர் சொல்லியிருக்கும் விஷயம் இருக்கிறது. இது பற்றிப் பேசுவதற்கு எனக்கு 'எல்லாத்' தகுதியும் இருக்கிறது என்பதை மட்டும் சொல்லிக் கொள்வேன். மூன்று வெவ்வேறான இடங்களில், சந்தர்ப்பங்களில் மூன்று வெவ்வேறு குணாதிசயம் கொண்டவர்களால் அந்தத் தகுதி எனக்கு 8 வயதுக்கு உள்ளாகவே வழங்கப்பட்டு விட்டது. இது பற்றி மேலும் சொல்லப் போனால் சில குடும்பங்கள் உடைந்து சின்னாபின்னப் படலாம என்பதால் இங்கேயே நிறுத்துவது உசிதம் என்று நினைக்கிறேன்.

நேரடியாகக் கிடைக்காத ஒரு தகுதி என் பதின்ம வயதுகளின் பிற்பகுதியில் கிடைத்தது. எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊரில் இருந்த அந்த மனிதர் பற்றி நண்பர்கள் சொன்ன செய்தி அது. அந்த மனிதர் பராயமெய்திய ஆண் பிள்ளைகளைக் குறி வைப்பவர். ஒரு வாசிக சாலையில் அடிக்கடி கை போட முயல்வாராம். கோவில் திருவிழா காலங்களில் இவரது அட்டகாசம் அதிகமாக இருக்குமாம். ஒருமுறை இவரது ஆசைக்கு இணங்குவது போல் நடித்து இவரது மர்மப் பிரதேசத்தில் ‘காஞ்சிரோண்டி' என எங்கள் பக்கத்தில் அழைக்கப்படும் பட்டால் பயங்கரமாக அரிக்கும் செடியின் இலையைப் பூசிவிட்டார்கள் அந்த ஊர் இளைஞர்கள். கொஞ்சக் காலம் அடங்கியிருந்தவர் ஒரு முறை நண்பனுக்காக நான் வாசிகசாலையில் காத்திருந்த போது தேவையில்லாமல் மிக நெருக்கமாய் உட்கார, இவரது வரலாறு தெரிந்த நான் நண்பன் வீட்டு மதிலில் போய் உட்கார்ந்து விட்டேன்.

ஆக, அருண் வைத்தியநாதன் சொல்ல வந்த அந்த child abuse விஷயம், ஒரு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பது உண்மை. அதுவும் எட்டு வயதுக்குள் மூன்று தகுதியளிப்புகள் அங்கொன்றும் இங்கொன்றும் என்பது சரியான சொல்லாடலா என்று சந்தேகம் வர வைப்பது உண்மை. என்ன நான் கொஞ்சம் வெளிப்படையாகப் பேசுகிறேன், பலர் பேசுவதில்லை. அருண் வைத்தியநாதனும் கொஞ்சம் வெளிப்படையகப் பேசியிருக்கிறார். இனி வீட்டுக்கு வரும் யாரையும் எப்படி நம்புவது என்கிற ஒரு மனநிலையைத் தோற்றுவித்திருக்கக்கூடிய கரு, அழுத்தம் போதாமை காரணமாக கொஞ்சமே போரடிக்கிறது. ஆனால் ஒரு துளி ஆபாசம் இல்லாமல் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.

அருண் சொல்லாத ஒரு விஷயம், இப்படியான அக்கிரமங்களை நிகழ்த்த உங்கள் வீட்டுக்குள் வெளியிலிருந்து ஒரு ஆள் வரவேண்டும் என்பதில்லை. இப்படியான வன் கொடுமைகள் உங்களால் அதிகம் நம்பி வீட்டுக்குள் அனுமதிக்கப்படும் உறவுக்காரர்கள், தெரிந்தவர்கள், நண்பர்களால்தான் அதிகளவில் நிகழ்த்தப் படுகின்றன என்பது உண்மை. இது பற்றிய மேலதிக தகவல்கள் வேண்டும் என்றால் ஞாநி (வேறு விடயங்களில் அவரது கருத்துக்களில் நான் உடன் படாவிட்டாலும்) எழுதிய அறிந்தும் அறியாமலும் (விகடனில் தொடராக வந்தது) கிடைத்தால் படிக்கலாம். சிக்கலான விஷயங்கள் பலவற்றை எளிய தமிழில் சொல்லியிருப்பார். (என்ன வல்லுனர்களை மேற்கோள் காட்டாமல் எல்லாம் தன் சொந்தச் சரக்கு என்ற பாணியில் எழுதியிருப்பார்).

ஒரு கேள்வி, அச்சமுண்டு அச்சமுண்டு பார்த்த போது எழுந்தது. அதாவது படங்களில் நடிக்கும் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளிகளாகக் கருதப்படுவது இல்லையா? 'குழந்தைத் தொழிலாளர்கள்' என்ற பதத்தை யாராவது சரியாக வரையறுத்துச் சொல்ல முடியுமா?

Wednesday 19 August 2009

நான் பார்க்கும் உலகம்: ஓகஸ்ட் 16-22 2009

இதுவரைக்கும் மனதில் பட்டவை என்ற தலைப்பிட்டு என்னை கொஞ்சமாவது தட்டிப் பார்த்த அரசியல், சமூக, ஆடுகளம் சம்பந்தமான செய்தித் தொகுப்பை இனிமேல் 'நான் பார்க்கும் உலகம்' என்கிற தலைப்பில் எழுதலாம் என்றிருக்கிறேன். நண்பர் கலை சொன்ன ‘சென்ற வார உலகம் வித் கீத்' என்ற தலைப்பும் பொருத்தமானது, இருந்தும் நான் இந்த வாரச் செய்திகளையும் தொகுப்பதால் வேறு தலைப்புத் தேடவேண்டியதாயிற்று. நான் பார்த்த உலகத்தில் நான் கண்ட, கேட்ட செய்திகளைத் தொகுப்பதால் நான் பார்க்கும் உலகம் என்று தலைப்பிட்டிருக்கிறேன். உலகத்தில் நாள்தோறும் நடக்கிற சம்பவங்களில் ஒரு துளியை மட்டுமே இங்கே தொகுக்கிறேன்.

அரசியல்-இலங்கை

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் செல்வராசா பத்மநாதன் இந்தியாவுக்கு நாடுகடத்தப்படலாம் என்றும் இதற்கான கோரிக்கையை இந்தியா விரைவில் வெளியிடும் என்றும் சில செய்தி ஊடகங்கள் செய்தி தெரிவித்திருக்கிறன. ஏற்கனவே இலங்கை அரசால் 600 பயங்கரவாதக் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்ட பத்மநாதனை ராஜீவ் காந்தி கொலையில் அவருக்கு இருக்கும் சம்பந்தத்தை காரணம் காட்டி இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோருவார்கள் என்று அந்தச் செய்தி ஊடகம் ஊகம் தெரிவித்திருக்கிறது. ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சம்பந்தப் பட்டவர்களுக்கு வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை வழங்கினார் என்பது பத்மநாதன் மீதான குற்றச்சாட்டாகும்.


வழமையாகவே பருவப் பெயர்ச்சி மழை என்பது சந்தோசம் தருகின்ற ஒன்று. ஆனால் இந்த முறை வவுனியாவில் பெய்திருக்கக் கூடிய கடும் மழையை நினைத்து சந்தோசப்படுவதா, துக்கப்படுவதா என்பது புரியவில்லை. வவுனியாவில் சமீபகாலமாக கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு இருந்து வந்தது. அகதிகளை இலங்கை அரசு அங்கே அடைத்து வைத்தபோது இன்னும் மோசமாக இந்தத் தட்டுப்பாடு மாறியது. தண்ணீர் இல்லாமல் சாகக் கிடந்த மக்களுக்கு வரப்பிரசாதம் போல் என்று மழையைத் துதிப்பதா அல்லது ஏற்கனவே கேவலமான சுகாதாரச் சூழலில், நோய்களுடன் போராடிக் கொண்டிருக்கும் அந்த மக்களுக்கு இன்னும் சுகாதாரச் சீரழிப்பாக வந்த மழையை நொந்து கொள்வதா என்று தெரியவில்லை. மழைக்காவது முற்றும் நனையாமல் அந்தச் சிறு கூடாரங்களுக்குள் ஒதுங்கலாம், ஆனால் சுகாதாரக் கேடான ஒரு பிரதேசத்தில் மழை காரணமாக அதிகரிக்கப் போகின்ற சுகாதாரக் கேட்டிலிருந்தும் அது காரணமாக வரப்போகும் நோய்களிலிருந்தும் எங்கே போய் ஒதுங்குவது?


இந்நிலையில் இந்த மோசமான நிலைக்கு ஐ. நா. சபைதான் காரணம் என்று இலங்கை அரசும். இலங்கை அரசுதான் காரணம் என்று மற்றக் கட்சிகளும் மாறி மாறிக் குற்றம் சாட்ட ஆரம்பித்திருக்கின்றன. சில கட்சிகள் அரசாங்கத்துக்கு எதிராக வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளைப் பாருங்கள்:
இடி அமீன் காலத்தில் கூட இப்படியான இடப் பெயர்வு முகாம்கள் காணப்படவில்லை- புதிய சிஹல உறுமய
அரசு முகாம் வாழ் மக்களின் அவலங்கள் தவிர வேறு பல விடயங்களையும் மறைக்கிறது- ஐக்கிய தேசியக் கட்சி
வன்னி மக்கள் படும் அவலத்தைக் கண்டு பால்சோறு வாங்கித்தின்ற சிங்கள மக்கள் கொதித்தெழுவார்கள்- புதிய இடதுசாரி முன்னணி.
என்னத்தைச் சொல்ல? எப்படித் தான் இப்படியெல்லாம் வாய்கூசாமல் பேசுகிறார்களோ இந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்?

அரசியல்-உலகம்

பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங் கட்சி விதிகளுக்கு எதிராகச் செயற்பட்டாஎ என்ற காரணத்துக்காக கட்சியை விட்டுத் தூக்கப்பட்டிருக்கிறார். ஜஸ்வந்த் சிங் சமீபத்தில் வெளியிட்ட புத்தகம் ஒன்றில் சர்தார் வல்லபாய் பட்டீல் மற்றும் முகமது அலி ஜின்னா ஆகியோர் சம்பந்தமாக வெளியிட்ட கருத்துக்கள் கட்சியின் கொள்கைக்கு எதிரானவை என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜ்வடேகர் தெரிவித்திருக்கிறார். ஆனால் அத்வானியின் தலைமை மீது ஜஸ்வந்த் சிங் மற்றும் வேறு சில பா.ஜ.க உறுப்பினர்கள் சமீபகாலமாகக் காட்டிவந்த வெளிப்படையான அதிருப்திக்குக் கிடைத்த பரிசாக (??!!) இதை அரசியல் ஆய்வாளர்கள் பார்க்கிறார்கள்.


நாளை (20.08.2009) நடைபெறவுள்ள உலகத்தமிழர் பிரகடனம் அரசின் மிரட்டலை மீறி திட்டமிட்டபடி நடைபெறும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் அறிவித்திருக்கிறார். மேலும் இந்த விஷயத்தில் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து விட்டு வந்து கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். வை.கோ, இராமதாசு, தா. பாண்டியன், பாரதிராஜா போன்றோர் கலந்து உரையாற்றுவார்களாம். (திருமாவும் வருவாரா?) திருமாவின் பிறந்த நாள் சுவரொட்டிகளில் ஈழம் என்கிற வார்த்தையை போலிஸார் கிழித்திருக்கிறார்கள் அல்லது, கிழிக்க வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்தப் பிரகடன மாநாடு நடந்தால் கைதுகள் நிகழலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது.

ஆப்கானிஸ்தானில் நடைபெறவுள்ள தேர்தல்களுக்குப் பங்கம் விளைவிக்கப் போவதாக தலிபான்கள் எச்சரித்திருக்கிறார்கள். வியாழக் கிழமை நடைபெற உள்ள தேர்தலைப் புறக்கணிக்குமாறும், மீறி வாக்களித்தால் வாக்குச் சாவடிகள் தாக்கப்படும் என்றும் தலிபான்கள் எச்சரித்திருக்கிறார்கள். இவர்களின் இப்படியான நடவடிக்கைகளுக்கு காரணம் கற்பிப்பது முடியாத காரியமாகிவிட்டது. கரீபியன் தீவுகளைச் சேர்ந்த மக்கள் தங்களிடையே வாழும் அடாவடி இளைஞர்களை ‘தலிபான்' என்று அழைக்கும் அளவுக்கு இவர்களின் 'புகழ்' பரவியிருக்கிறது.


பொருளாதாரம்

பெற்றோலியப் பொருட்களின் விலை வீழ்ச்சி காரணமாகக் கனடாவின் வருடாந்திரப் பணவீக்கம் 0.9% ஆல் வீழ்ச்சியடைந்திருக்கிறது. 2008 ஜூலையில் பெற்றோலின் விலைக்கும் 2009 ஜூலையில் பெற்றோல் விலைக்குமிடையே 28% வித்தியாசம் காணப்படுவதாகவும் பணவீக்கத்தில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பணவீக்க வீழ்ச்சி கடந்த 56 ஆண்டுகள் காணாத சரித்திர வீழ்ச்சி என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டியது. இதே வேளை கனடாவில் இருக்கும் உற்பத்திசார் தொழிற்சாலைகள் செலவைக் குறைக்கும் பொருட்டு குறைந்த சம்பளத்தில் தற்காலிக வேலையாட்களைப் பயன்படுத்துவதில் மும்முரம் காட்டுவதும், ஆகக் குறைந்தது 1 மாதத்துக்கு ஒரு வேலை தேடும் நிலையில் கனடாவில் புதிதாக வந்து சேர்ந்தவர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. (சொந்தக் கதை சோகக் கதை)


விளையாட்டு

இந்தவாரம் இரண்டு பேரைக் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். ஒருவர் ஸிம்பாப்வேயின் சார்ள்ஸ் கொவென்றி. 12-வருட காலமாக நிலைத்த சயீத் அன்வரின் சாதனையைச் சமன் செய்த காரணத்துக்காக. அது பற்றிய என் பதிவு இங்கே. அடுத்தது ஆண்டி மர்ரே. பிரித்தானியாவின் டென்னிஸ் நம்பிக்கை நட்சத்திரமான இவர் ஃபெடரர், நடால், ரொடிக் போன்ற ஜாம்பவான்கள் விளையாடிய ரோஜேர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரை வென்றிருக்கிறார். அமெரிக்க ஓபன் நெருங்கும் இந்த சமயத்தில் இது அவருக்கு நல்ல உத்வேகத்தை கொடுக்கலாம். இந்த வெற்றி மூலம் நடாலைப் பின்னுக்குத் தள்ளி டென்னிஸ் தரவரிசையில் 2ம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறார் மர்ரே.


பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டிகள் ஆரம்பமாகிவிட்டன. முன்னணி வீரர்கள் பலரை இழந்த நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் யுனைடட் ஞாயிற்றுக் கிழமை வெற்றியோடு இந்த வருடத்தை ஆரம்பித்தாலும் இன்று (19.8.2009) நடந்த பேர்ன்லியுடனான போட்டியில் தோற்றிருக்கிறது. கடந்த வருடம் இரண்டாம் இடம் பிடித்த லிவர்பூல் ஒரு தோல்வி, ஒரு வெற்றி இதுவரை. செல்ஸீ இரண்டு போட்டிகளிலும் வென்றிருக்கிறார்கள். இந்த முறை மான்செஸ்டர் யுனைடட்டை நம்பமுடியுமா தெரியவில்லை. ஃபேர்கஸன் என்ன மாஜிக்கும் செய்யக் கூடியவர் என்பதால் மட்டும் மான்செஸ்டர் யுனைடட் மீது பணம் கட்ட முடியாது. எனது நம்பிக்கைகள் லிவர்பூல் அல்லது செல்ஸீ. இந்த வருடத்துக் கறுப்புக் குதிரையாக மான்செஸ்டர் சிட்டி அணி மாறலாம்.


சினிமா

பேசாத விஷயத்தைப் பேசத் துணிந்த இரு தமிழ் சினிமாக்களை இந்தவார இறுதியில் பார்த்தேன் (டி.வி.டி யில்தான்). ஒன்று அச்சமுண்டு அச்சமுண்டு, மற்றது காதல் கதை. பாதிவர்கள் வேலு. பிரபாகரனைத் திட்டியதில் தப்பே இல்லை. சினிமாவில் எதையும் சொல்லலாம். எப்படிச் சொல்வது என்பதுதான் பிரச்சினையே. சிக்கலான கரு ஒன்றைப் பற்றி அழகாகத் தமிழில் பேசிய படம் ருத்ரய்யாவின் ‘அவள் அப்படித்தான்' மட்டும் என்பது என் அபிப்பிராயம். அச்சமுண்டு அச்சமுண்டுவில் இன்னும் கொஞ்சம் த்ரில் சேர்த்துச் சொல்லியிருக்கலாம். பல காட்சிகள் மிக இயல்பாக இருந்தாலும் படம் கொஞ்சம் மெதுவாக நகர்கிறது. 100 நிமிட சினிமாவைப் பார்ப்பதற்குள் மூன்று முறை தூங்கிவிட்டேன், (அன்றைக்கு விடுமுறை). அந்தக் குட்டிப் பெண் அழகு


ஒரு அடப்பாவிகளா விஷயம்

130 மில்லியன் கடன் அட்டை எண்களைத் திருடிய ஆல்பேர்ட் கொன்சாலஸ் என்பவரை அமெரிக்கப் போலீசார் கைது செய்திருக்கிறார்களாம். கடன் அட்டைகளின் பாதுகாப்பைக் கூட்டுகிறேன் என்று புதிதாக ‘சிப்' கடனட்டைகளை வழங்கும் நிறுவனங்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்? இங்கிருந்து இப்படியான கடனட்டைகளைக் கொண்டுபோய் ஐரோப்பாவில் பணமாக மாற்றி மீண்டும் இங்கே கொண்டுவரும் எங்களவர்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். எப்படியெல்லாம் வாழ்கிறார்கள். உழைத்து வாழ மட்டும் வாய்ப்புத் தருகிறார்களில்லை. திருடப்பட்ட கடனட்டை எண்களில் ஒன்று உங்களுடையதாய்க்கூட இருக்கலாம். என்னுடையதாய் இருக்க முடியாது... ஏனென்றால் என்னிடம்தான் கடனட்டை இல்லையே.. (அப்படியே இருந்தாலும்..................)

Tuesday 18 August 2009

கிரிக்கெட் வசைபாடிகள்-3 (18+)

கிரிக்கெட்டில் இப்போதெல்லாம் வசைபாடுதல் (Sledging) கிட்டத்தட்ட ஒரு நாகரிகமான செயலாகவே மாறிவிட்டது. இப்படியான வசைபாடுதல்கள் சில வேளைகளில் வரம்பு மீறியதாகவும், சில வேளைகளில் மிகவும் நகைச்சுவையாகவும் அமைந்து விடுவதும் உண்டு. அப்படிப்பட்ட சில சம்பவங்களை இங்கே தொகுத்திருக்கிறேன்:

அப்துல் காதர் எதிர் கட்டையான சின்னப் பையன் (Abdul Quadir)
பாகிஸ்தானின் புகழ் பெற்ற லெக்-ஸ்பின் பந்துவீச்சாளரான அப்துல் காதிர் அன்றைக்கு கொஞ்சம் அதிகமாகவே கடுப்பாகியிருந்தார். அவருக்கு அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட்டில் புகழ் பெற்று விளங்குவார் என்று எதிர்பார்க்கப் பட்ட முஷ்தாக் அகமது ஒரு ஓவரில், இந்தியாவைச் சேர்ந்த ஒரு பால்குடிப் பையன் முஷ்தாக்கை இரண்டு முறை சிக்ஸருக்கு அடித்தான். அது ஒரு கண்காட்சி ஆட்டம் என்றாலும் காதிர் அதைக் கொஞ்சம் சீரியஸாகவே எடுத்து ஆடிக்கொண்டிருந்தார். முஷ்தாக்கின்பால் அந்தச் சின்னப் பையன் காட்டிய அலட்சியத்தைக் கண்ட காதிர் அவனிடம் போய், ‘ஏய், நீ சின்னப் பையன்களை ஏன் அடித்து நொருக்குகிறாய்? முடிந்தால் எந்து பந்துகளை அடி பார்க்கலாம்' என்றார். காதிரின் அந்த வேண்டுகோளை அந்தப் பால்குடிப் பையன் சிரமேற் கொண்டு நிறைவேற்றி வைத்தான்.. காதிரின் அந்த ஓவரின் 6 பந்துகளில் பெறப்பட்ட ஓட்டங்கள் வருமாறு.. 6,0,4,6,6,6. அந்தத் தொடரிலேயே அந்தப் பால்குடிக்கு இந்தியாவுக்கு விளையாடும் வாய்ப்புக் கிடைத்தது. பெரிதாக எதையும் அந்தத் தொடரில் சாதிக்காவிட்டாலும், 1989 இல் 16 வயது நிரம்பிய அந்தப் பையனின் இன்றைய சாதனைகள் மலைக்க வைப்பன. அந்தப் பையன் சச்சின் என்று நான் சொல்லவும் வேண்டுமா?

மார்க் வோ எதிர் அடம் பரோரே (Mark Waugh vs Adam Parore)
நியூசிலாந்து விக்கெட் காப்பாளரான பரோரே அவுஸ்திரேலியாவுக்கு எதிராக துடுப்பெடுத்தாடக் களம் இறங்கினார். ஸ்லிப்பில் நின்ற மார்க் வோ அவரைப் பார்த்து ‘அட, உன்னை எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. இரண்டு வருஷத்துக்கு முன்னர் உன்னை அவுஸ்திரேலியாவில எப்படி பார்த்தேனோ, அப்படியே இருக்கிறாய். கொஞ்சம் கூட முன்னேறவேயில்லை' என்றார். பரோரே சொன்னார், ‘நான் முன்னேறவில்லை, அதை ஒத்துக் கொள்ளுறேன். ஆனால், நீ ரொம்பவே முன்னேறிவிட்டாய். இரண்டு வருஷத்துக்கு முன் ஒரு கிழவியைக் காதலித்துக் கொண்டிருந்தாய். இப்போது அவளை விட கிழவியான ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டு விட்டாயாம் என்று கேள்விப்பட்டேன்'. மார்க் வோ கப்சிப்.

சேர். இயன் பொதம் எதிர் ரொட்னி மார்ஷ் (Sir. Ian Botham vs Rodney Marsh)
உலகப் புகழ் பெற்ற இருவரின் உலகப் புகழ பெற்ற மோதல் இது. ஆஷஸ் தொடரில் துடுப்பெடுத்தாட பொதம் களமிறங்கியபோது, அப்போதைய அவுஸ்திரேலிய விக்கட் காப்பாளரான மார்ஷ் அவரைப் பார்த்துக் கேட்டார், ‘இயன், உன்னுடைய மனைவியும் என்னுடைய குழந்தைகளும் நலமா நண்பனே' என்று. பொதம் சிரித்துவிட்டுப் பதில் சொன்னார், 'என்னுடைய மனைவி என்றைக்குமே நலம். உன்னுடைய குழந்தைகள் தெருவில் போகிற வருகிற பெண்கள் எல்லோருக்கும் பின்னால் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைகிறார்கள்'.

மேர்வ் ஹியூஸ் (Merv Hughes)

மேர்வ் ஹியூசின் நகைச்சுவை கிரிக்கெட் உலகம் அறிந்தது. ஒருமுறை இவரைப் பார்த்து பாகிஸ்தானின் குழப்படிகாரனான மியண்டாட் ‘உன்னைப் பார்த்தால் எங்கள் ஊரில் இருக்கும் ஒரு குண்டான பஸ் கொண்டக்டர் போல இருக்கிறது' என்று கிண்டல் செய்திருக்கிறார். அன்றைக்கு சொல்லில் இருந்த வேகம் மியண்டாட்டுக்கு செயலில் இருக்கவில்லை. ஹியூசின் பந்திலேயே ஆட்டமிழந்த மியண்டாட்டைப் பார்த்து ஹியூஸ் கத்தினார் ‘டிக்கெட்டைக் காட்டிட்டுப் போ' என்று. இதைத்தான் தடி கொடுத்து அடி வாங்குவது என்பார்கள்.

இதே ஹியூஸ் ஒருமுறை அடிக்கடி சேர். விவியன் ரிச்சார்ட்ஸை அண்டிகுவா மைதானத்தில் நடந்த ஒரு போட்டியில் முறைத்துப் பார்த்துக் கடுப்பேத்தினார். ரிச்சார்ட்ஸ் அவரைக் கூப்பிட்டு ‘ இது என்னுடைய நாடு, என்னுடைய கலாச்சாரம். இங்கே நீ என்னை முறைத்துப் பார்க்கக் கூடாது. உன்னுடைய வேலை பந்து வீசுவது மட்டுமே' என்றார். துரதிர்ஷ்டவசமாக ஹியூசின் பந்திலேயே ஆட்டமிழந்தார். ஹியூஸ் சொன்னார் ‘எந்த ஊரிலும் போய் அந்த ஊர் ஆட்களை f**k-off என்று திட்டிக் கலைப்பதுதான் எங்கள் காலாச்சாரம்'

இப்படி அடி கொடுத்த ஹியூஸ் அடிவாங்கிய சந்தர்ப்பமும் உண்டு. ஒரு முறை இங்கிலாந்துக்கு எதிராக ஆடியபோது ஹியூஸ் வீசிய ஒரு பந்தை மிகவும் கஷ்டப்பட்டு சமாளித்தார் இங்கிலாந்தின் ரொபின் ஸ்மித். ‘உனக்கு batting வரவேயில்லையே.. நீயெல்லாம எதுக்காக கிரிக்கெட் ஆடுகிறாய்?' என்றிருக்கிறார் ஹியூஸ். அடுத்த பந்தை பவுண்ட்ரிக்கு அடித்த ஸ்மித் சொன்னார், 'என்ன ஒற்றுமை பார்த்தாயா? எனக்கு batting தெரியாது, உனக்கு bowling தெரியாது'.

இந்த வசைகள் மிகவும் மோசமான சொற்களைப் பாவித்து பேசப்பட்டவை. என்னால் முடிந்த அளவுக்கு நாகரிகப் படுத்தி இருக்கிறேன். இவற்றைவிடப் புகழ் பெற்ற மோசமான வசைகள் பல இருக்கின்றன. அவற்றை எல்லாம் தமிழ்ப் படுத்தி எழுத முடியாது. விரும்பினால் கூகிளாண்டவரிடம் கேட்டு ஆங்கிலத்தில் படிக்கலாம். ஆக, இத்துடன் ‘கிரிக்கெட் வசைபாடிகள்' விடைபெறுகிறார்கள்.


Sunday 16 August 2009

வாயகரா தாத்தா-5 (18+)

ஆனந்த விகடனில் வெளியான 'வயாகரா தாத்தா சொன்ன விபரீதக் கதைகள்' என்ற தலைப்பில் வெளியான வயது வந்தவர்களுக்கான ஜோக்ஸ்சின் தொகுப்பு இது. 'A' ஜோக்ஸ் பிடிக்காதவங்க இப்பவே தெறிச்சு ஓடிடுங்க.
சின்னக்கண்ணுக்கும் அவன் மனைவி பொன்னுக்கண்ணுக்கும் ஒரு பார்ட்டிக்கு அழைப்பிதழ் வந்தது. வித்தியாசமான மாறு வேடத்தில்தான் அந்தப் பார்ட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கண்டிஷன் போட்டிருந்தார்கள். பார்ட்டிக்கு கிளம்பும் தினத்தன்று பொன்னு கண்ணுக்கு தலைவலி மண்டையை பிளக்க... 'நான் வரலை... நீங்க போய் என்ஜாய் பண்ணுங்க' என்று அனுப்பி வைத்தாள். சின்னகண்ணு குடுகுடுப்பைக்காரன் வேஷத்துக்கான மாறுவேஷ ட்ரெஸ்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். அவன் போன கொஞ்ச நேரத்தில் பொன்னுக்கண்ணுக்கு தலைவலி போய்விட... இவளும் தான் வாங்கிவைத்த மாறுவேஷ ட்ரெஸ்ஸை மாட்டிக்கொண்டு கிளம்பினாள்.

பார்ட்டிக்குப் போனபோது குடுகுடுப்பை ட்ரெஸ்ஸோடு தன் புருஷன் வேறு பல பெண்களோடு ஜாலியாக ஆடிப்பாடுவதும், சான்ஸ் கிடைத்தால் முத்தா கொடுப்பதுமாக இருப்பதைப் பார்த்தாள். அவன் எந்த ரேஞ்சுக்குப் போகக் கூடியவன் என்று ஆழம் பார்க்க இவளும் அருகே போனாள். மாறு வேஷத்தில் இருப்பது யார் என்றே தெரியாமால் அவனும் இறுக்கி அணைத்தான். புருஷன் தானே என்ற தைரியத்தில் இவளும் சும்மா இருக்க... அவன் இவள் காதில் குனிந்து ஏதோ கிசுகிசுக்க... இவளும் 'எந்தளவுக்கு நம்ம புருஷன் மோசமானவன்' என்று தெரிந்துகொள்ள முடிவெடுத்து அவனோடு சேர்ந்து பார்ட்டி பங்களாவுக்கு வெளியே இருட்டுப் புல்தரைக்குப் போனாள்.

எல்லாமே ஆகிப் போச்சு அங்கே. அப்பவும் தன் மாறுவேஷத்தைக் கலைக்காமல், யாரென்றும் சொல்லாமல் குடுகுடுவென வீட்டுக்குத் திரும்பி வந்தாள் பொன்னுக்கண்ணு. புருஷனின் சபல புத்திக்கு சூடு வைப்பதற்காகக் காத்திருந்தாள். கோபத்தின் உச்சியில் அவள் காத்திருக்க சின்னக்கண்ணுவும் திரும்பி வந்தான்.

‘எப்படிக் கழிஞ்சிச்சு இந்த ராத்திரி?' அப்டீன்னு கோபத்தை வெளிக்காட்டாமல் கேட்டாள் பொன்னுக்கண்ணு. அவன் சொன்னான், ‘சீட்டாட்டம், ரெண்டு பெக் விஸ்கி, வயிறு முட்ட சாப்பாடு என்று ஜாலியாதான் போச்சு. ஆனால் எல்லாம் எங்க ஆபீஸ் கிளப்பில்! நீ இல்லாம மாறுவேஷ பார்ட்டிக்குப் போனா ரொம்ப போரடிக்கும்னு குடுகுடுப்பை ட்ரெஸ்ஸை என் ஃப்ரெண்டுக்கு குடுத்துட்டேன்!'

நன்றி: ஆனந்த விகடன்
வாயகரா தாத்தா இத்துடன் விடை பெறுகிறார்

Thursday 13 August 2009

ஜனநாயகம் மீது மக்கள் நம்பிக்கை இழக்கிறார்களா?


யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் நடந்த தேர்தல்கள், அவற்றின் முடிவுகளில் யாருக்கு சந்தோஷம், யாருக்கு சந்தோஷமில்லை என்பது பற்றியெல்லாம் பலரும் எழுதித் தீர்த்துவிட்டார்கள். ஆனால் நான் இங்கே ஆராயப் போவது, அந்தத் தேர்தலில் என்னைப் பாதித்த இன்னொரு புள்ளி விபரத்தைப் பற்றி. இந்தப் பிரச்சினை இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கிற ஒரு பொதுப் பிரச்சினை.

அந்தப் புள்ளி விபரம் இதுதான்:
முறையே, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில்
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்: 100, 417; 24,626
செலுத்தப்பட்ட வாக்குகள்: 22,280: 12,850
அங்கீகரிக்கப்பட்ட வாக்குகள்: 20, 922: 12,292
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: 1,358; 558

இந்தப் புள்ளிவிபரங்களில் ஒரே ஒரு விஷயம்தான் சந்தோசமளிக்கிறது. அதாவது வவுனியாவில் செலுத்தப்பட்ட வாக்குகளில் 95.66% மும், யாழ்ப்பாணத்தில் செலுத்தப்பட்ட வாக்குகளில் 93.9% மும் செல்லுபடியான வாக்குகள். அதாவது, வாக்குப் போட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எப்படி சரியாக வாக்களிக்கவேண்டும் என்பது தெரிந்திருக்கிறது. ஆனால் பிரச்சினை அதுவல்ல. வவுனியாவில் தகுதிபடைத்த வாக்காளர்களில் வெறும் 52.2% மட்டுமே வாக்குச் செலுத்தியிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் நிலமை இதவிட மோசம்; வெறும் 22.2% தான் வாக்குச் செலுத்தியிருக்கிறார்கள். (ஆதாரம்: இலங்கைத் தேர்தல் ஆணையம்)

அளிக்கப்பட்ட வாக்குகளில் எத்தனை கள்ள வாக்குகள், எத்தனை நல்ல வாக்குகள் என்ற சர்ச்சைகளை விடுத்து, எல்லாமே நல்ல வாக்குக்கள் என்ற அனுமானத்தின் அடிப்படையில் பார்த்தால் கூட, இந்த எண்ணிக்கைகள் ஜனநாயகத்திலிருந்து மக்கள் தம்மை விலக்கிக் கொள்கிறார்களோ என்ற ஒரு சந்தேகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இதே நாள் ஊவா மாகாணத்தில் நடந்த தேர்தலில் 70% பேர் வாக்களித்திருப்பது இந்தக் குழப்பத்தை மேலும் பெரிதாக்குகிறது. எதனால் இப்படிப்பட்ட வித்தியாசம் நிகழ்ந்திருக்கிறது என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால், அதையும் தாண்டிய ஒரு பிரச்சினை இருக்கிறது.

இங்கே கனடாவில் சென்ற ஒக்டோபரில் நடந்த பொதுத் தேர்தலில் வெறும் 58.8% வாக்காளர்களே வாக்களித்திருந்தார்கள் (ஆதாரம்: Elections Canada). உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகக் கருதப்படும் இந்தியாவின் பதினான்காவது பொதுத் தேர்தலில் வாக்களித்தவர்கள் வெறும் 48.74 பேர் மட்டுமே (ஆதாரம்: இந்தியத் தேர்தல் ஆணையம்). அதாவது ஒரு நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட வாக்காளர்களில் ஐம்பது சதவீதத்துக்கு கொஞ்சம் கூடியவர்களோ அல்லது கொஞ்சம் குறைந்த வாக்காளர்களோதான் வாக்களிக்கிறார்கள். இப்படியான தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்படும் அரசாங்கங்கள் எப்படி ஒரு நாட்டின் மக்களை முழுமையாகப் பிரதிநிதித்துவப் படுத்தும்?

இப்படி ஒரு சாரார் மட்டும் அளிக்கும் வாக்குகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதமே அரசாங்கம் அமைக்கும் கட்சிக்குப் போய்ச்சேரும். உதாரணத்துக்கு, கடந்த கனேடியப் பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 37.65% வாக்குகளை மட்டுமே பெற்றது. அதாவது, தகுதியான வாக்காளர்களின் 58.8% வாக்குகளில், 37.65%. ஆக, தகுதியான வாக்காளர்களில் 22.1%ஐ மட்டும் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சி, கனடாவை இப்போது ஆண்டு கொண்டிருக்கிறது. கருத்துச் சுதந்திரம், இயலுமானளவுக்கு அடக்கு முறையின்மை, கள்ள வாக்குகள் இன்மை போன்ற நல்ல சூழ்நிலை நிலவும் இந்த நாட்டிலேயே, ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறக்கூடிய இந்த நாட்டிலேயே, வாக்களிப்பு என்கிற கடமை இந்தளவுக்குப் புறக்கணிக்கப்படுவது, உண்மையாகவே ஜனநாயகம் நிலைத்து நிற்குமா என்பது பற்றிய பாரிய சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

ஏன் இந்த நிலமை? மக்கள் ஜனநாயக முறைப்படி வாக்களிக்க அனுமதிக்கப் படுவதில்லை. மிரட்டப் படுகிறார்கள் என்கிற சாட்டை ஆசிய நாடுகள், ஆபிரிக்க நாடுகளில் சொல்லலாம். ஏதோ திருமண வீட்டுக்கு வருபவரை வரவேற்பது போல் வரவேற்று வாக்களிக்க வைக்கும் வாக்குச் சாவடி அதிகாரிகள் இருக்கும் இந்த நாட்டில் என்னால் அப்படி ஒரு காரணத்தைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஆக, எனக்கு மனதில் படுகிற காரணங்களாக இவற்றைத்தான் சொல்லுவேன்
  • மக்கள் ஜனநாயகத்தின் மீதும், அரசியல்வாதிகள் மீதும் நம்பிக்கை இழந்து விட்டார்கள். எல்லா நாடுகளிலும் ஊழலும், ஏமாற்றிச் சொத்துச் சேர்ப்பதும், ஒழுக்கக் குறைவும் பரவிவிட்டன. அதனால் எல்லா நாட்டிலும் மக்கள் மனதில் அரசியல் ஒரு சாக்கடை என்ற எண்ணம் ஆழமாகப் படிந்துவிட்டது. அந்த எண்ணம் அவர்களை அரசியல்வாதிகளைப் புறக்கணிக்கச் சொல்கிறது. அதனால் தேர்தலையும், ஜனநாயகத்தையும் மொத்தமாகப் புறக்கணிக்கிறார்கள். சில இடங்களில் தேர்தல் மூலம் தெரிவு செய்யும் அரசாங்கத்தைவிட ஒரு சர்வாதிகார ஆட்சியே மேல் என்கிற நிலமைக்கு மக்கள் தள்ளப் பட்டிருக்கிறார்கள்.
  • எந்த ஒரு நாட்டிலும் உள்ள கல்வித்திட்டங்கள் என்ன வேலை செய்தால் எவ்வளவு உழைக்கலாம் என்று சொல்லித் தருமளவுக்கு, நீ பிறந்த நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், அதனால் கிடைக்கக்கூடிய உரிமைகளையும் சொல்லிக் கொடுப்பதில்லை.
  • படித்தவர்களின் மெத்தனப் போக்கு. ஏழைகள், பெரியளவு படிக்காதவர்கள் வாக்குப் போடாவிட்டால் பரவாயில்லை, மன்னிக்கலாம். படித்தவர்கள் வாக்குப் போடாமல் விட்டுவிட்டு, அதைப் பற்றிப் பெருமைவேறு பேசுகிறார்கள். அப்படிப் பேசிவிட்டு பொருளாதாரத் தேக்கநிலை, வேலையின்மை என்று எல்லாப் பிரச்சினைக்கும் அரசாங்கத்தைக் கைகாட்டுகிறார்கள். இவர்களை எல்லாம் மன்னிக்கவே கூடாது.
  • இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் அதிகரித்து வரும் தேர்தல் முறைகேடுகள். வறுமைப்பட்டவர்களின் இயலாமையைப் பயன்படுத்தி சோறு போட்டு வாக்குப் போடவைப்பதை விட ஒரு சமூக அநீதி இல்லை. அது தப்பென்று உணரும் நிலையில் இப்படிப் பயன்படுத்தப்படும் மக்களும் இல்லை. உணரும் நிலையில் இருப்பவர்கள் அதைத் தடுக்க முயல்வதும் இல்லை.
மேலே சொன்னதைவிட உங்கள் மனதில் படும் காரணங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். எது எப்படியோ, ஜனநாயகத்தை அழியவிடாமல் பார்ப்பது, ஒவ்வொரு குடிமகனதும்/மகளதும் கடமை, அவன்/அவள் எந்த நாட்டவனாக/நாட்டவளாக இருந்தாலும். இல்லாவிட்டால், விரைவில் மனிதகுலம் அழிவைத் தேடிக் கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம்.

டிஸ்கி: இது சம்பந்தமாக என் வலைப்பூவின் வலப் பக்க மூலையில் இருக்கும் கருத்துக் கணிப்புக்காவது வாக்களியுங்கள். (அதே போல் திரட்டிகளிலும்தான், ஹி ஹி...)

Wednesday 12 August 2009

ஆன்மீகம்

நான் பிறந்தது இலங்கையில் வடக்கில் நவிண்டில் ஒரு குக்கிராமத்தில். பக்கத்தில் நெல்லியடி என்ற ஒரு சிறிய நகரம். என்னுடைய சிறுவயது முதலே எனக்கு என்ன கற்றுத்தரப்பட்டதோ இல்லையோ, கடவுள் பற்றிக் கற்றுத் தரப்பட்டது. என்னுடைய ஆரம்பக்கல்வியை நான் கரணவாய் தாமோதர வித்தியாசாலையில் கற்ற போது, அங்கே கூட கடவுளை முன்னிறுத்தும் ஒரு பழக்கம் இருந்தது. எனது பாடசாலைக் காலத்தின் முதல் வருடத்தில் அதிபராய் இருந்த வைத்திய நாதக் குருக்கள் தொடக்கம், அதே பாடசாலையின் அனுபவம் கூடிய ஆசிரியரான ஆறுமுகம் வாத்தியார் வரை எல்லோருமே சைவப் பழங்கள். பள்ளிக்கூடத்தின் ஒவ்வொரு நாளும் கூட்டுப் பிரார்த்தனையோடுதான் தொடங்குவது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. கூட்டுப்பிரார்த்தனையில் பாடும் பஞ்ச புராணத்தை வீட்டிலும் சாமி அறையில் பாடி வணங்கி, காலையில் வீபூதி பூசி சந்தனப் பொட்டு வைக்காமல் பள்ளிக்கூடம் போனதேயில்லை நான்.

எனக்கும் என் குடும்பத்துக்கும் இரண்டு குலதெய்வங்கள். அப்பா வழியாக மூத்த விநாயகரும், அம்மா வழியாக குலனைப் பிள்ளையாரும் குல தெய்வங்களானார்கள். மேலும் அப்பா வழியில் உச்சில் அம்மாள், முதலைக் குழி முருகன், தூதாவளைக் காளி, தில்லையம்பலப் பிள்ளையார் ஆகியோரும், அம்மா வழியாக குழவியடி அம்மன், பொலிகண்டி முருகன், சக்கலாவத்தை வைரவர், பூதராயர் பிள்ளையார் ஆகியோரும் அறிமுகமானார்கள். மேலே சொன்ன கோவில்களில் எல்லாம் அப்பா பகுதியால் அல்லது அம்மா பகுதியால் மகோற்சவ காலங்களில் எங்களுக்கு உரித்தான ஒரு பூசை நடப்பதுண்டு. அந்த நாட்களில் கட்டாயமாகக் கோவிலுக்குப் போவதுண்டு. அதிலும் குலனைப் பிள்ளையாரும், குழவியடி அம்மனும் எங்கள் அன்றாட வாழ்வில் ஒன்றிப் போனார்கள்.

திருவிழா தவிர்த்து பாடசாலை இல்லாத எல்லா வெள்ளிக்கிழமையும் நான் குலனைப் பிள்ளையாரிடமும், குழவியடி அம்மனிடமும் செல்வதுண்டு. அப்பாவும் அம்மாவும் ஒவ்வொரு வெள்ளியும் போவார்கள். நன்றாகக் காசு கொடுத்து அர்ச்சனை செய்வார்கள் இரு கோவில்களிலுமே. மூத்தவிநாயகரிடம் திருவிழாக் காலங்களில் தவறாமல் போவோம். உச்சில் அம்மனிடம் ஒவ்வொரு மாசி மகத்துக்கும் போய் வந்துகொண்டிருந்தோம். நவராத்திரி, கந்தசஷ்டி, பொங்கள், தீபாவளி, வருடப்பிறப்பு, திருவெம்பாவை காலங்களில் குலனைப் பிள்ளையாரையும், குழவியடி அம்மனையும் விட்டுப் பிரிவதேயில்லை நான். அதுவும் திருவெம்பாவைக் காலங்களில் விடிய மூன்று மணிக்கெல்லாம் எழுந்து, குளித்து வெளிக்கிட்டு குலனைப் பிள்ளையாருக்குப் போய், சங்கு, மணி, சேமக்கலம் சகிதமாக ஊரைக் கோவிலுக்கு அழைப்பதும், கோவிலில் என்னால் முடிந்த சின்னச் சின்ன சரியைத் தொண்டுகள் செய்வதும் எனக்கு மிகவும் சந்தோசம் தரும் விஷயமாக இருந்தது, பதினெட்டு வயது வரை.

கடவுள்தான் எல்லாம், கடவுளில்லாமல் எதுவுமே அசையாது என்ற மாதிரியான ஒரு வளர்ப்பில் வேறூ சில விஷயங்களை நான் கவனிக்கத் தவறியிருக்கிறேன் என்று நான் உணர்ந்து கொண்டது அந்த வயதில்தான். அதுவும் குலனைப் பிள்ளையாரில் மக்கள் மனம் ஒருமித்து சாமி கும்பிட வேண்டும் என்கிற காரணத்துக்காக ஆலய தர்மகத்தா மற்றும் நிர்வாக சபை ஒரு காலமும் காவி நிறத்தைத் தவிர வேறு நிறத்தில் வண்ணம் பூச ஒப்புக் கொண்டதில்லை. இப்படியாக பக்தி மார்க்கத்தை எனக்கு ஊட்டி வளர்த்த அதே சமூகம், அந்த பக்தி நெறியிலிருந்து என்னைத் துரத்துவதற்குமான ஒரு செயலைச் செய்து கொண்டிருந்ததை அந்த வருடத்தில் நடந்த ஒரு நவராத்திரி எனக்குப் பொட்டில் அடித்துச் சொல்லிக் காட்டியது.

கூடுதலாக ஒவ்வொரு மாலையிலும் நான் ஒரு மைதானத்துக்கு விளையாடப் போவது வழக்கம். விளையாடி முடிய எப்போதுமே மாலை ஆகிவிடும். அந்த இடத்திலிருந்து என் வீட்டுக்கு வரும் வழியில் இரண்டு கோவில்கள். ஒன்று நாச்சியார் கோவில் இன்னொன்று வைரவர் கோவில். இரண்டிலுமே நாங்கள் என்றைக்கும் கும்பிடுவதில்லை. காரணம் இரண்டு கோவிலின் பேருக்கு முன்னாலும் ஊரின் பெயரை விட சாதியின் பெயரே குறிக்கப்பட்டிருந்தது. ஆனால் நான் அந்தக் கோவில்களைக் கடக்கும் போது வழமையாவே நெற்றியிலும் நெஞ்சிலும் தொட்டுக் கும்பிட்டுவிட்டுச் செல்வேன். காரணம், கடவுள் பற்றிய பயம் என்று பிற்காலங்களில் உணர்ந்து கொண்டேன். அன்றைக்கும் அப்படித் தொட்டுக் கும்பிட்ட போது, கடலைச் சுண்டல், அவல் போன்றவற்றோடு சேர்த்த ஒரு பிரசாதப் பையை நீட்டினார் ஒருவர். எனக்கு அதை வாங்கிக் கொள்வதில் தயக்கம் இருக்கவில்லை. என்னுடைய எளிய மனதுக்கு அது சாமிப் பிரசாதம். என்ன, உடனேயே சாப்பிடாமல் வீட்டுக்கு எடுத்துச் சென்றேன். அங்கே ஆரம்பித்தது பிரச்சினை.

அம்மாவும், பெரியம்மாவும், மாமியும் சன்னதம் ஆடினார்கள். 'ஏன் அதுகளிட்ட பிரசாதம் வாங்கினனி, கொப்பருக்குத் தெரிஞ்சா என்ன நடக்கும் தெரியுமே?' எண்டு கேட்டு மாமி பிரசாதத்தை நாய்க்குப் போட்டார். எனக்கு அழுகையாக வந்தது. அதைவிடக் கேவலம் என்ன தெரியுமா? எனக்குப் பிரசாதம் தந்த அன்பர் ஒரு இளம் வயதினர். அதே சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபர் எங்கள் வீடு தேடி அடுத்த நாள் காலை வந்து, அப்பாவிடம் 'ஐயா, தம்பி உங்கட மகன் எண்டு தெரியாமல் ஒருத்தன் பிரசாதம் குடுத்திட்டான். மன்னிச்சுக் கொள்ளுங்கோ' என்று கேட்டுக் கொண்டிருந்தார். அப்பா ஒரு சட்டத்தரணி என்பதால் எல்லா சமூகங்களோடும் பழகுபவர். மற்றவர்களோடு ஒப்பிடும்போது கொஞ்சம் புரிந்துணர்வு உள்ளவர். அதற்காக முற்று முழுதாக சாதீய அடையாளங்களையும் திமிரையும் துறந்தவர் அல்ல. அவர் அந்த நண்பரிடம் ‘பரவாயில்ல, சாமிப் பிரசாதத்தை வாங்கிறதில என்ன இருக்கு' என்று சொல்லி அந்த நபரை அனுப்பினார். அந்தப் பிரசாதம் வாங்கிய பிரச்சினை பற்றி என்னையோ, நாய்க்குப் போட்ட மாமியிடமோ எதுவும் கேட்கவில்லை. சம்பந்தப் பட்ட எல்லோரையும் பொறுத்த வரை அந்தப் பிரசாதப் பிரச்சினை அன்றோடு சுமுகமாக முடிந்தது.

ஆனால் எனக்குள் புயல் வீச ஆரம்பித்தது. எங்கள் சமூக அமைப்பில் அவ்வாறு எனக்குப் பிரசாதம் தந்த சாதியை விட உயர்ந்தவர்களாக எங்கள் சாதி கருதப்பட்டது. ஆக, அந்தச் சாதிக் கோவில்களில் எங்களவர்கள் போய்க் கும்பிட மாட்டார்களாம். அவர்களின் சாமியிடம் படைத்த பிரசாதத்தை வாங்கி உண்பது தப்பாம். நன்றாக அறிவுறுத்தினர் மாமியும் பெரியம்மாவும். எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. எனக்குள் எழுந்த கேள்விகள் இவைதான்.
  • எனக்குத் தெரிந்து வைரவர் என்பது ஒரு கடவுள் வடிவம். அப்படி ஒரே ஒருவர்தான் இருக்கிறார். எங்கள் சாதி வழிபடும் சக்கலாவத்தையில் இருப்பவரும் அதே வைரவர்தான். அந்த நண்பர்கள் வழிபடும் கோவிலில் இருப்பவரும் வைரவர்தான். வைரவர்தான் சிறப்பானவர், அவர்தான் மனிதர்களை விட மேலானவர் என்றால், நீங்கள் சாதியைக் கடந்து அவருக்கு யார் கோவில் கட்டினாலும் அனைவருக்கும் வழிபடும் உரிமை இருக்கிறதா இல்லையா?
  • இல்லை, சாதிதான் வைரவரின் சிறப்பைத் தீர்மானிக்கிறது. உயர் சாதிக்காரனின் கோவிலுக்குள் கீழ் சாதிக்காரன் வந்தால் கோவிலுக்கு அசிங்கமென்றும், கீழ் சாதிக்காரனின் கோவிலுக்குள் உயர் சாதிக்காரன் போனால் உயர் சாதிக்காரனுக்கு கௌரவக் குறைச்சல் என்றும் சொல்கிறீர்களானால், கடவுளின் சிறப்பைத் தீர்மானிக்கும் மனிதன் உயர்ந்தவன் ஆகிறான் இல்லையா? ஆக கடவுள் மனிதனிலும் கீழானவன், அவனிடம் நான் பயப்படத் தேவையில்லை எனபதுதானே அர்த்தமாகிறது?
இந்த இரண்டு கேள்விகளையும் நான் மதித்த பலரிடம் கேட்டுப் பார்த்தேன். யாருமே இன்றைக்கு வரைக்கும் பதிலளிக்கவில்லை. நவிண்டில் என்ற குக்கிராமத்தில் தொடங்கிய தேடலுக்கு இன்றுவரை விடையில்லை. நான் கேட்டவுடனே யாராவது சாதி முக்கியமில்லை கடவுள்தான் முக்கியம் என்று பதில் சொல்லியிருந்தால் நல்ல பக்திமானாகவோ, இல்லை கடவுள் எல்லாம் சும்மா ஒரு ஏமாற்று வேலை, சாதிதான் முக்கியம் என்றி சொல்லியிருந்தால் ஒரு சாதீயப் பதராகவோ வளர்ந்து விட்டிருப்பேன். நல்ல காலம், யாருக்குமே பதில் தெரியாத படியால் நான் பதில் தேட முயன்றேன். அந்த முயற்சியின் விளைவாக நான் இதுவரையில் கண்டது இரண்டு உண்மைகளைத் தான்; ஒன்று, எங்களை எல்லாம் மீறிய ஏதோ ஒரு அற்புதமான சக்தி எங்களை எல்லாம் ஆட்டுவிக்கிறது. அதற்கு பெயரில்லை, உருவமுமில்லை. அது எங்கே எப்படி இருக்கிறது என்று ஒரு தகவலுமில்லை. அது மேகக்கூட்டங்களில் இருக்கலாம், இல்லை மலர்ந்து சிரிக்கும் சின்னக் குழந்தையின் சிரிப்பில் இருக்கலாம். அந்தச் சக்தியைக் கண்டடைவதுக்கு எனக்கு இதுவரையில் தெரிந்த சுலபமான, பெரியளவில் சிக்கல்கள் இல்லாத, விரைவான, மிகச்சிறந்த மார்க்கம், மனிதம்.

Monday 10 August 2009

மனதில் பட்டவை- வாரம்: ஓகஸ்ட் 9-15, 2009

அரசியல்-இலங்கை

யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்திருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியும் வவுனியாவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் வெற்றி பெற்றிருக்கின்றன. முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கைக் கட்சி ஒன்று ஜெயித்திருக்கிறது, டக்ளஸ் தேவானந்தாவின் பெருமுயற்சியால். ஆனால் சோகம் என்ன வென்றால், 100,417 வாக்காளர்கள் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு வாக்காளர்களே வாக்களித்திருக்கிறார்கள். வவுனியாவில் கொஞ்சம் பரவாயில்லை, 50% பேர் வாக்களித்திருக்கிறார்கள். அந்த வாக்குகளின் அடிப்படையில் எப்படிப் பிரதிநிதித்துவத்தைத் தீர்மானிக்கலாம்? யாருடைய தவறு? ஜனநாயகத்தில் நம்பிக்கை இழந்த மக்களது தவறா? நம்பிக்கை இழக்க வைத்த தலைவர்களின் தவறா? இல்லை நாடுவிட்டு ஓடிவிட்ட என் மாதிரிப் பேடிகளின் தவறா?

ஒவ்வொரு தலைவரும் தேர்தல் முடிவுகள் பற்றி ஒவ்வொரு விதமான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார்கள். யார் நேர்மையாகக் கருத்துச் சொல்லி இருக்கிறார், யார் புலம்புகிறார் என்றெல்லாம் என்னால் முடிவுசெய்ய முடியாது. எனக்கென்னவோ எல்லோருமே நன்றாகப் புளுகுகிறார்கள் என்றுதான் படுகிறது. ஒரு தேர்தலில் வெறும் 20% வாக்காளர்கள்தான் (அதில் பல முறைகேடான வாக்குகளும் உள்ளடக்கம்) வாக்களித்திருக்கிறார்கள் என்பது ஐக்கிய இலங்கை ஜனநாயாகத்தை நோக்கிப் போகவில்லை என்றுதான் காட்டுகிறது. அதற்காக முன்னைய தேர்தல்களில் அமோகமாக வாக்குப் பதிவு நிகழ்ந்தபோது மட்டும் ஜனநாயகம் உயர்ந்து நின்றது என்றும் மனச்சாட்சிக்கு விரோதமாகப் புளுகவும் மனம் ஒப்பவில்லை. கருத்துச் சுதந்திரமும் தனிமனித பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்ட ஒரு தேசத்திலிருந்து நான் புலம்புவது எந்த வகையில் நியாயம் என்று எனக்குத் தெரியாவிட்டாலும், என் மனதில் பட்டதைச் சொல்லியிருக்கிறேன். தயவுசெய்து சண்டைக்கு வராதீர்கள்.

அரசியல்- உலகம்

வட அமெரிக்கக் கண்ட நாடுகளின் தலைவர்களின் ஐந்தாவது உச்சி மாநாடு தனது ஒன்பதாவது நாளில் முக்கிய கட்டத்தை அடைந்திருக்கிறது. கனேடியப் பிரதம மந்திரி ஸ்டீஃபன் ஹார்பர், அமெரிக்க ஜனாதிபதி பாராக் ஒபாமா, மெக்சிக்க ஜனாதிபதி ஃபெலிப்பே கால்டரோன் ஆகியோர் முத்தரப்புக் கலந்துரையாடல்கள் நிகழ்த்தி வருகிறார்கள். இவர்களது கலந்துரையாடல்களில் பொருளாதாரம், H1N1 வைரஸ், சுற்றுச்சூழல், தேசிய பாதுகாப்பு, போதைப் பொருள் எதிர்ப்பு ஆகியவை முக்கிய இடம் பெறும். தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் ஏதாவது ஒரு நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுக்காமலும், அதற்கு வட அமெரிக்காவின் மற்ற இரு தலைவர்களும் தலையசைக்காமலும் எதை வேண்டுமானாலும் கலந்துரையாடட்டும்.

ஆப்கானிஸ்தானிலிருந்து சீனா நோக்கிப் பயணித்த விமானம் ஒன்று வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக கந்தகாருக்குத் திருப்பி அனுப்பபாட்டது. சீனாவின் ஸின்ஜியாங் என்ற மாநிலத்திலுள்ள உரும்கி என்ற நகரிலுள்ள விமானத் தளத்தில் இறங்க வேண்டிய விமானத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக அச்சுறுத்தல் வந்த காரணத்தால் விமானம் கந்தகாருக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதே சமயம் இந்த விமானம் அல்-கெய்தா தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சில செய்தி ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. எது எப்படியோ இன்னுமொரு 9/11 வேண்டாம் என்பது என்னுடைய அபிப்பிராயம். (உயரமான கட்டடங்களில் வேலை கேட்டுப் போகும்போது வயிற்றைக் கலக்குகிறது. நல்ல வேளை, யாரும் உயரமான கட்டடங்களிலோ, உயரமில்லாத கட்டடங்களிலோ எனக்கு வேலை தரவில்லை, இன்றுவரை)

பொருளாதாரம்

கனடாவில் கேபிள் தொலைக்காட்சி சேவைகளை வழங்கும் பிரபலமான இரு நிறுவனங்கள் கேபிள் தொலைக்காட்சிக் கட்டனங்கள் வருகிற நாட்களில் உயரலாம் என்று எச்சரித்திருக்கின்றன. பெல் கனடா மற்றும் ரோஜேர்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் கனேடிய தொலைகாட்சி, வானொலி மற்றும் தொலைத் தொடர்பாளர்கள் ஆணையம் அறிவித்துள்ள புதிய சட்டதிட்டங்களுக்கமைய சேவைகளை வழங்குவதற்கு தம் வாடிக்கையாளர்களிடமிருந்து இன்னும் 1.5% கட்டணம் கூடுதலாக அறவிடவேண்டியதாக இருக்கும் என்று எதிர்வு கூறியிருக்கிறார்கள். ஏற்கனவே இந்தத் துறைகளில் நன்றாகக் கால்பதித்த நிறுவனங்கள் இவை என்பதால் புதியவர்கல் சந்தைக்குள் வருவது மிகவும் கடினமாகிப் போய்விட்டது. அதனால் கிட்டத்தட்ட எல்லாப் பாவனையாளர்களும் இவர்களின் கட்டண அதிகரிப்பை ஏற்றுக் கொண்டாக வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். சமீபகாலமாக ஒருவரை ஒருவர் தாக்கி விளம்பரம் செய்து வந்த இரு நிறுவனங்களும் ஒரே மாதிரி அறிக்கை விட்டது காலத்தின் கட்டாயம் இல்லையில்லை பொருளாதாரத்தின் கட்டாயம்.


விளையாட்டு

ஆஷஸ் தொடர் உச்சக் கட்டத்தை எட்டியிருக்கிறது. லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது போட்டியில் மிகவும் அற்புதமாக ஆடிய அவுஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று போட்டித் தொடரை 1-1 என்று சமன் செய்திருக்கிறது. ஓவலில் நடைபெறும் இறுதிப் போட்டியை சம்நிலையில் முடித்தாலே அவர்கள் ஆஷஸ் தொடரைத் தக்க வைத்துக் கொள்ளலாம். இதற்கிடையில் ஃபிளிண்டோஃப் நான்காவது போட்டியில் காயம் காரணமாக ஒதுக்கப் பட்டது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. விளையாட ஃபிளிண்டோஃப் தயாராக இருந்த போதும், அணித்தலைவர் ஸ்ரோஸ் மற்றும் அணி நிர்வாகம் அவரது உடல் நிலை முழுமையாகத் தேறவில்லை என்று சொல்லி நிறுத்தி வைத்ததாக ஃபிளிண்டோஃபின் முகவர் கூறியிருக்கிறார். இந்த விஷயத்தில் நான் ஸ்ரோஸின் பக்கமே. என்னைப் பொறுத்தவரை ஃபிளிண்டோஃப் இந்த ஆஷஸ் தொடருக்கே தெரிவு செய்யப்பட்டிருக்கக் கூடாது. ஏனென்பதை ஆஷஸ் முடிந்ததும் நான் எழுதவிருக்கும் ‘ஆஷஸ் 2009-ஒரு பார்வை' தொடரில் சொல்கிறேன்.

ஒரு வருத்தம்

பதிவுலக சர்ச்சை ஒன்றில் நானும் அகப்பட்டுப் போனேன். என்னுடைய மொழிநடையால் வந்த சிக்கல் அது. என் பக்கமும் தப்பு இருப்பதால், என் மொழிநடை யாரையாவது பாதித்திருந்தால் மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன். அதே போல் ஒரு வேண்டுகோளையும் இங்கே வைக்க வேண்டியுள்ளது. சொந்த இடங்களைவிட்டுப் பிரிந்து வாழும் பதிவர்களோ, படைப்பாளிகளோ ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இருந்த காலத்தில் இருந்த மாதிரி சூழ்நிலை இப்போதும் இருக்கவேண்டும் என்று நினைப்பது தவறு. சூழ்நிலைகளும் பழக்க வழக்கங்களும் இப்போது வெகு விரைவாக மாறுகின்றன. யாழ்ப்பாணத்தில் ராஜா டாக்கீஸ் என்ற பெயரும் வழங்கி வருகிறது, சைக்கிள்களின் கைப்பிடிக்குள் ‘பிரிதிப்பை' என்று அழைக்கப்படும் ஆணுறைகளும் தாராளமாக வாழ்ந்து வருகின்றன. அந்த சமூகத்தின் சமீபத்திய எச்சங்களான என்போன்றோரிடம் ‘சுயம்' இல்லாமலிருக்க நாங்கள் மட்டுமே காரணமல்ல. அதை மூத்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு சந்தோஷம்

இதேவேளை வருகின்ற இருபத்து மூன்றாம் திகதி கொழும்பில் நடக்கவுள்ள பதிவர்கள் சந்திப்பு சந்தோஷமாகவும், ஆரோக்கியமான விவாதங்களை உள்ளடக்கியதாகவும் நடந்து முடியவேண்டும் என்பது என்னுடைய பேராசை. பதிவுலகம் மூலம் அறிமுகமான இனிய நண்பர்களும், பதிவுலகில் நான் புக முன்னமே எனக்கு அறிமுகமான நண்பர்களும், அண்ணன்களும் அந்தச் சந்திப்பை இனிதே நடத்திவைப்பார்கள் என்பது என் நம்பிக்கை. இது பற்றிய மேலதிக தகவல்களை வந்தியண்ணா, ஆதிரை மற்றும் சுபானு ஆகியோரின் வலைப் பூக்களில் அறிந்து கொள்ளலாம்.

இதையும் வாசியுங்கள்

ஃபேஸ் புக்கில் அதிக நேரம் செலவிடுபவரா நீங்கள்? (நான் அப்படித்தான் என்பது வேறு கதை) அதுவும் திருமணமானவராயோ, அல்லது காதலன்/காதலி உள்ளவராயோ இருந்தால் இதை வாசியுங்கள். உங்கள் உறவில் (கணவன்- மனைவி, காதலன-காதலி) விரிசல் விழுவதற்கு ஃபேஸ் புக்கும் ஒரு காரணமாகலாமாம். குவெல்ப் பல்கலைக்கழக (University of Guelph) மாணவர்கள் நிகழ்த்திய ஆய்வறிக்கையின் படி எவ்வளவு அதிகநேரம் ஃபேஸ் புக்கில் இருக்கும் இப்படியான ஜோடிகளுக்கிடையே பொறாமையும் சந்தேகமும் அதிகரித்திருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. உதாரணமாக ஒருவரது ஃபேஸ் புக் Wallல் 'நேற்றிரவு உன்னுடனான சந்திப்பு இனிமையாக இருந்தது' என்பது போன்ற ஒரு சின்ன தகவல் பரிமாற்றமே பூதாகரமான பிரச்சினையாக வடிவெடுக்கும் வாய்ப்பு இருப்பதாக அந்த ஆய்வு மேலும் தெரிவித்திருக்கிறது. அந்தப் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்கும் 308 மாணவ, மாணவிகளிடம் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவே இது. எல்லாவற்றிலும் நல்லது கெட்டது இருக்கிறது. பார்க்கும் கண்களிலும், பகுத்தறியும் அறிவிலும் இருக்கிறது சூட்சுமம் என்பது என் கருத்து.