Saturday 10 October 2009

நான் பார்க்கும் உலகம்: ஒக்ரோபர் 04-ஒக்ரோபர் 10 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

அரசியல்- பிறந்தகம்+ இந்தியா
தி.மு.க. கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்திருக்கிறது. ரி.ஆர். பாலு தலைமையில் கனிமொழி, திருமாவளவன் ஆகியோரை உள்ளடக்கிய பத்துப் பேர் கொண்ட குழுவின் விஜயத்துக்கான காரணம் விளங்கவேயில்லை. கருணாநிதி அவர்கள் இந்தக் குழு அரசாங்கத்தால் அனுப்பப்படவில்லை என்று அறிவித்திருக்கிறார். அந்தந்தக் கட்சிகள் தமது சொந்தச் செலவிலேயே உறுப்பினர்களை அனுப்புகின்றன என்று அறிவித்திருந்தார். இது கண்துடைப்பு நாடகம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருக்கின்றன. இலங்கை அதிபர் ராஜபக்ச, அமைச்சர்கள் சிலர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை இவர்கள் சந்திப்பார்களாம். மானிக் பாமிலும் வேறு சில அகதி முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டிருக்கும் அகதிகளையும் பார்ப்பார்களாம். ஆனால் யாழ்ப்பாணத்துக்கும், கண்டிக்குமான விஜயத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. கிழக்கு மாகாணங்களுக்குப் போகமாட்டார்கள் போல் தெரிகிறது. இந்திய எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில் இந்த முறை கொஞ்சம் உண்மை இருக்கிறது.


புல்மோட்டை முகாம் ஒன்றிலிருந்து 78 தமிழர்கள் வெள்ளிக்கிழமை இரவு அரசபடையினரால் பலவந்தமாக பவள் வாகனங்களில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். இரவில் திடீரென உள்ளே நுழைந்து பலவந்தமாக யுவதிகளை ஏற்றிச் சென்ற இராணுவத்தினர் மீண்டும் வந்து இளம் பெண்களை ஏற்றிச் செல்ல முயன்றதாகவும், மக்கள் எல்லாம் ஒன்றுகூடி அதனைத் தடுத்து நிறுத்தியதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொஞ்சம் முன்னுக்குப் பின் முரணான செய்தியாக இது பட்டாலும், உண்மைகளை உறுதிசெய்வதென்பது முடியாத காரியமாகிவிட்டது இலங்கையில்.

அரசியல்-புகுந்தகம்
24 வயதான சகாரியா அமாரா என்ற ரொரன்ரோ 18 என்கிற பாரிய தொடர் குண்டுவெடிப்புத் திட்டம் ஒன்றுக்குத் தாங்கள் திட்டமிட்டிருந்தோம் என்று பிராம்ப்டன் நகரநீதி மன்றம் ஒன்றில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார். ரொரன்ரோவின் முக்கிய வர்த்தக வலயமான Bay Street ரொரன்ரோ பங்குச் சந்தைக்கு அருகில் ஒரு குண்டும், கனேடிய உளவுத்துறை அலுவலகத்துக்கு அருகே இன்னொரு குண்டும், ரொரன்ரோவிலிருந்து ஒட்டாவா செல்லும் 401 நெடுஞ்சாலையிலுள்ள ஒரு இராணுவ முகாமில் மூன்றாவது குண்டும் வைப்பதற்குத் திட்டமிட்டதாக அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். இனிமேல் கனடாவிலும் இஸ்லாமியர்களின் கதி அதோ கதிதான். உண்மையிலேயா இப்படியான வேலைகளில் இந்தச் சகோதரர்கள் மட்டும்தான் ஈடுபடுகிறார்களா இல்லாவிட்டால் அவர்களை மட்டுமே தேடித்தேடிப் பிடிக்கிறார்களா?


இந்த வழக்கு தொடர்பான செய்திகளில் ஒரு விசித்திரமான விஷயம் இருக்கிறது. இது வரை, அவரது புகைப்படம் என்று கருதப்படும் ஒரு புகைப்படத்தை மட்டுமே ஊடகங்கள் எங்கோ தேடி எடுத்துப் போட்டிருக்கின்றன. வழக்கு விசாரணை செய்யப்படும் நீதிமன்றத்தில் அவரைப் பார்த்து வரையப்பட்ட சித்திரமே ஊடகங்களால் பிரசுரிக்கப்பட்டு வந்திருக்கிறது. பல வழக்குகளிலும் இப்படியான ஒரு நடைமுறையையே பின்பற்றுகிறார்கள். இதே போல் இரண்டொரு கற்பழிப்பு வழக்கு, ஒரு கொலை வழக்கிலும் செய்தார்கள்.

அரசியல்-உலகம்
இந்த வார உலக அரசியலில் எல்லாச் செய்திகளையும் பின்தள்ளி முன்னே வந்து நிற்பது, ஒபாமாவும் அவருக்குக் கிடைத்த உலக அமைதிகான நோபல் பரிசும். உலகின் பல தலைவர்களுக்கு பெரியண்ணனுக்குக் கிடைத்த விருது எரிச்சலளித்தாலும், பெரியண்ணனைப் பகைக்கமுடியாமல் அடக்கி வாசிக்கிறார்கள். வன்முறைக்கான நோபல் பரிசுக்குத் தகுதியானவர் என்று தலீபான் (யார் சொல்வது என்று பாருங்கள்) அமைப்புக் கிண்டல் செய்திருப்பதைத் தவிர இன்னும் கண்டனக் குரல்கள் எழவில்லை. என்ன, 'இதற்கு எனக்குத் தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை, என் மீதான பொறுப்பு அதிகரித்திருக்கிறது' என்று அடக்கமாகச் சொல்லியிருக்கிறார் ஒபாமா.

தனிப்பட்ட முறையில் ஒபாமாவை எனக்குப் பிடிக்கும். என்னதான் சொன்னாலும் அமெரிக்கா ஜனாதிபதிகளால் ஆளப்படுவதில்லை. முடிவுகள் எடுப்பது அவர்களின் தேசிய பாதுகாப்புக்கான அமைப்புகள், FBI, CIA மற்றும் தொழிலதிபர்கள் என்பதும், ஜனாதிபதி, அமைச்சர்கள் எல்லாம் அவர்கள் எடுக்கும் முடிவுகளை வெளியுலகுக்கு எடுத்துச் சொல்லும் தூதுவர்கள் என்பதும் அமெரிக்க அரசியலைக் கூர்ந்து கவனித்தால் தெரியும். என்ன, ஒபாமாவுக்குக் கொடுக்கப்பட்ட நோபல் பரிசு இந்தத் திரைமறைவு ஆட்களை எந்தளவுக்குக் கட்டுப்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். மற்றபடி, ஒரு சாதாரண பிரஜையாக ஒபாமாவில் தெறிக்கும் கம்பீரம் எனக்குப் பிடிக்கும்.

வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்
பொருளாதாரம் பற்றிய ஒரு வருத்தமான செய்தி. கனடாவில் இந்த வருடம் ஓகஸ்ற் 31ம் திகதி வரைக்கும், 143, 541 நுகர்வோர்கள் கடன் தீர்த் திறனை இழந்திருக்கிறார்கள். ஓகஸ்ற் மாதத்தில் மட்டும் 10,000 பேர் தனிப்பட்ட வங்குரோத்துக் கோரிக்கைகளைச் சமர்ப்பித்திருக்கிறார்கள். அதே ஓகஸ்ற் மாதம் 466 வர்த்தக நிறுவனங்கள் தம் கடன் தீர்த் திறணை இழந்திருக்கிறார்கள். தனிப்பட்ட வங்குரோத்துக்கள் அல்பேர்ட்டா மாகாணத்திலேயே அதிகளவில் (886) நிகழ்ந்திருக்கின்றன.

கொஞ்சக் காலமாக பலருக்கு வேலை அளித்து வந்த அல்பேர்ட்டாவிலும் வேலையில்லாத் திண்டாட்டம் சற்றே தலைதூக்கியிருந்தது. இப்போது வங்குரோத்துகள் பற்றிய செய்தி. இதற்கெல்லாம் மருந்து தடவுவது போல் அல்பேர்ட்டாவில் செப்ரெம்பர் மாதம் வேலையிழப்பு விகிதம் வெகுவாகக் குறைந்திருப்பதாக இன்னொரு அறிக்கையை அல்பேர்ட்டாவுக்கான குடிவரவு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் வெளியிட்டிருப்பது ஆறுதல்.

விளையாட்டு
கிரிக்கெட் உலகின் இன்னொரு பரபரப்பான மாற்றமான சாம்பியன்ஸ் லீக் 20-20 போட்டிகள் ஆரம்பமாகியிருக்கின்றன. தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து தலா இரண்டு அணிகளும், இலங்கை, மேற்கிந்தியா, நியூசிலாந்தில் இருந்து தலா ஒவ்வொரு அணியும், இந்தியாவில் இருந்து மூன்று அணிகளும் விளையாடுகிறன. இதுவரை நடந்து முடிந்திருக்கும் ஐந்து போட்டிகளில் தென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய அணிகள் கலக்கி வருகின்றன. முழுமையான போட்டிகள் பற்றிய விபரங்களை இங்கே பெறலாம்.

சீனாவில் நடைபெற்றுவரும் பீஜிங் ஓபன் ரென்னிஸ் போட்டிகளில் அரையிறுதியில் நடால், க்ரோசியாவின் மரின் சிலிச்சிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்திருக்கிறார். ஃபெடரருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் நடால் காயங்களால் சமீபகாலமாக அவதிப்படுவது குறிப்பிடத்தக்கது. என்னதான் ஃபெடரரை எனக்கு மிகவும் பிடித்தாலும், நடால் போன்ற கோலாகலமான விளையாட்டு வீரர்கள் காயம் காரணமாக அவதிப்படுவது ஏமாற்றம் அளிக்கக்கூடியது. போட்டிகளைச் சுவாரஸ்யமாகக் கொண்டு செல்லும் திறமை படைத்தவர்கள் இவர்கள். அதுவும் நடாலின் உடல்வாகுக்கும் அவர் சமீபகாலமாக சந்திக்கும் காயங்களுக்கும் தொடர்பே இல்லாமலிருக்கிறது. இங்கேதான் ஃபெடரர் தனித்து நிற்கிறார்.

சினிமா

தமிழ் சினிமா உலகம் கொதித்துக் கொண்டிருக்கிறது. அது பற்றிப் பதிவும் போட்டாயிற்று. சமீபத்தில் நான் பார்த்த இன்னொரு சினிமா பற்றிச் சொல்லவேண்டும். புரட்சி என்றாலே எல்லோருக்கும் ஞாபகம் வரக்கூடிய சே குவேராவின் The Motorcycle Diaries என்கிற புத்தகத்தின் அடிப்படையில் அதே தலைப்பில் உருவான படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. 'சே' பற்றி முழுமையாகத் தெரிந்தவர்களுக்கு இந்தப் படம் மிகவும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். 'சே' யின் வாழ்க்கையைத் திசைமாற்றிய மோட்டார் சைக்கிள் பயணங்களில் 'சே' சந்திக்கிற அவலங்கள் வலியுடன் காட்டப்படவில்லை என்று நினைக்கிறேன். ‘சே' பற்றி அரசல் புரசலாகப் படித்தவற்றில் இருந்து, படத்தில் அவரது மாற்றம் மற்றும் சிந்தனைகளின் வீரியம் முழுமையாக வெளிப்படவில்லை என்றே சொல்லலாம். ‘சே' பற்றி இன்னும் கொஞ்சம் நேரம் செலவளித்து இன்னும் ஆழமாக திரைக்கதை அமைத்து, பொலிவியாக் காடுகளில் அநியாயமாகக் கொல்லப்பட்ட அந்த அழகான போராளிக்கு நியாயம் செய்திருக்கலாம்.

ஒரு வருத்தம்
அவர்களின் முகம்கூட எனக்குத் தெரியாது. சமூகத்தில் அடக்குமுறைக்கு எதிரான போராளிகளாக, அறிவுஜீவிகளாக, கட்டுடைப்பவர்களாக, அறச்சீற்றம் கொண்டவர்களாகக் காட்டிக்கொண்டார்கள். என்னையும் வாசிக்க வைத்தார்கள். கட்டுடைத்தவர்கள் இப்போது மூக்குடைத்திருக்கிறார்கள். இவர்களின் எழுத்துக்களை பின்னூட்டம் எல்லாம் போட்டு இவர்களுக்கு வாளி எல்லாம் வைக்காவிட்டாலும், சமீபகாலமாக இவர்களிடம் தங்களுக்கு ஆதரவான ஆட்களைத்தவிர மற்றவர்களை துரும்பாகக் கூட மதிக்காமை, பெண்களை எடுத்தெறிந்து பேசுதல் ('போய்க் கவிதை எழுதிறதுதானே...'), எல்லாவற்றையும் தாண்டி, மோசமான தனிமனிதத் தாக்குதல் என்று போய், இப்போது நேரடித்தாக்குதலும் நடத்தி முடித்திருக்கிறார்கள். வருத்தமாக இருக்கிறது. (ஒருவேளை இதைத்தான் கட்டுடைத்தல், கட்டுடைத்தல் என்கிறார்களோ?)

நெகிழ்ச்சி
எங்கேயோ எதையோ தேடும்போது ஆயில்யன், கானா பிரபாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்தாக இப்படி எழுதியிருந்தார்.
நண்பனுக்கும்
சகோதரனுக்கும்
இடைப்பட்ட ஒர் உறவுக்கு,
பெயர் இருந்தால் அதை நான்
கானா பிரபா என்றே அழைப்பேன்!
ஒரு கணம் உண்மையில் கண்ணோரம் நீர் சிலிர்த்தது.

எப்புடி?
நெகிழந்தால் மட்டும் போதுமா? ஆப்படிக்க வேண்டாமா. ஆயில்யனின் அதே வாழ்த்தில் தமிழன் கருப்பி இப்படிக் கேட்டிருந்தார்.
///அண்ணனோட வயசைத்தான் யாரும் சொல்ல மாட்டேங்கிறாங்க...
பெரிய ரகசியமாவே இருக்கய்யா!!!///

அதைத் தேடிக் கண்டுபிடித்தாயிற்று. வருஷம் 16 படம் வந்தபோது அண்ணனுக்கு 16 வயசு. அந்தப்படம் 1989ல் வந்தது என்று நினைக்கிறேன். இப்ப எத்தினை வயசெண்டு கண்டுபிடிக்கலாம்தானே. (ஏதோ.. என்னாலை முடிஞ்சது. அடுத்த குறி... ச.....)

5 comments:

ஆதிரை said...

அடுத்த குறிக்காக காத்திருக்கின்றேன்

Unknown said...

kகொஞ்சம் நீண்டகாலம் காத்திருக்க வேணும்... தேடவேணுமெல்லோ

அருண்மொழிவர்மன் said...

விசாரணை செய்யப்படும் நீதிமன்றத்தில் அவரைப் பார்த்து வரையப்பட்ட சித்திரமே ஊடகங்களால் பிரசுரிக்கப்பட்டு வந்திருக்கிறது. பல வழக்குகளிலும் இப்படியான ஒரு நடைமுறையையே பின்பற்றுகிறார்கள்.//

கீத்.
நான் நினைக்கின்றேன் நீதி மன்றத்தில் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டிருப்பதால் தான் இப்படி செய்கிறார்கள் என்று..

Unknown said...

இருக்கலாம் அருண்மொழிவர்மன்.. நல்ல நடைமுறைதானே இது.. ஊரில் இதுக்கெல்லாம் தடை இல்லை

கானா பிரபா said...

;-) ஆகா என்னை வச்சு காமடி கீமடி ஒண்ணும் பண்ணலியே


ஆயில்யன், நீங்கள் உட்பட வலையுலகம் தந்த சகோதரங்கள் எப்பவுமே பெறுமதி வாய்ந்தவர்கள். உள்ளத்தில் இருப்பது தானே வெளியில் வரும்.

ஓ என் வயசைக் கேட்டீங்களா, 16 க்கு பிறகு ஏறவே இல்லையப்பா ;)