Wednesday 23 September 2009

துள்ளித் திரிந்த காலம்.... பகுதி-3

முன்னைய பாகங்கள் இங்கே.

எட்டாம் வகுப்பில கொஞ்சம் கொஞ்சமா வெடிவால் முளைக்கத் தொடங்கியது. பொடியன்களுக்கு ஒரு புது வியாதி தொத்திக் கொண்டது. யாராவது ஒரு பொடியன் கொஞ்சம் ஏமிலாந்தி இருக்கும் நேரத்தில் பின் பக்கமாக வந்து காலகளுக்கு இடையே கையை விட்டு 'கண்டதை' பிடித்து நசுக்கும் ஒரு வழக்கம் இருந்தது. விமல்குமார், காந்தராஜ் என்று இருவர் இதில் வலு மும்முரம். சிலவேளை 'எல்லாமே நசுங்கிப் போச்சோ' என்று கலங்கும் அளவுக்கு கொடுமை செய்வார்கள். இதே எட்டாம் வகுப்பில் எங்களிடம் வந்து மாட்டிக் கொடுமை அனுபவித்தது இருவர். ஒருவர் எங்கள் வகுப்பு ஆசிரியரும், ஆங்கில ஆசிரியருமான திருச்செல்வம், மற்றவர் கணித ஆசிரியர் சேந்தன் சேர்.

திருச்செல்வம் சேருக்கு முக்கால் மண்டையில் மயிரே இல்லை. அந்த மண்டையைத் தடவி எல்லாம் பார்ப்பாங்கள். மஜிந்தன் மரம் பதம் பார்ப்பது போல் விரலால் குட்டிக்கூட அட்டகாசம் செய்வான். திருச்செல்வம் சேர் பொறுத்துக் கொள்வார். இவரோடு காந்தராஜ் பேசும் I mean you mean, you mean I mean வசனம் பிரபலம். ‘நீங்கள் நினைப்பதை நானும், நான் நினைப்பதை நீங்களும் நினைக்கிறோம்' என்று ஆங்கிலத்தில் எந்தக் கேள்விக்கும் பதிலளிப்பதுதான் காந்துவின் வேலை. அதே போல் சேந்தன் சேர். இவர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் இருந்து நேரடியாக வந்து சேர்ந்தது எங்கள் பாடசாலையில். அவருக்கு அடிக்கடி மகி மீசை ஷேப் பண்ணி விடுவான். உரிமையோடு அவரின் பொக்கற்றுக்குள் கை எல்லாம் விடுவான் காந்தராஜ்.

8ம் வகுப்பு இறுதியில் ஹாட்லிக்கு வந்து சேர்ந்த நிதி, நான், மகி, அரவிந்தன் எல்லாருமே ஒரே வகுப்புக்கு 9ம் வகுப்பில் மாற்றப் பட்டோம். ஒன்பதாம் வகுப்பிலிருந்து எங்களிடம் நொந்து நூலானவர்கள் பலர். அவர்களில் முதல்வர், கனகசபாபதி சேர். இந்தாள் பாவம், ஒரு கொஞ்சக்காலம் எங்களின் வகுப்பாசிரியராய் இருந்தது. ‘மெய்' எழுத்தை தடுமாறி ‘மொய்' என்று எழுதி, அவரது பேரே மொய் என்றாகிவிட்டது. இவருக்கும், விஞ்ஞானம் படிப்பிக்கும் VK சேருக்கும் தபால் மூலம் அந்த்ராக்ஸ் அனுப்பியவர்கள், நாங்கள். மொய் கடைசியில் எங்கள் வகுப்பாசிரியராக இருக்க மாட்டேன் என்று சொல்லும் அளவுக்கு அந்தாளை கஷ்டப்படுத்தினோம். பிறகு மன்னிப்பும் கேட்டோம்.

அது போல் எங்களிடம் மாட்டிய அடுத்த பாவம், ‘மொஸ்கோ மணி' எனப்பட்ட செல்வராஜா. அந்தாள் எங்களுக்கு ஆங்கிலம் படிப்பித்த காலத்தில் பட்ட பாடு சொல்லி மாளாது. ஒரு உதாரணம். ஆள் Oath பற்றிப் படிப்பித்தார். அதாவது சத்தியப்பிரமாணம் எடுப்பது பற்றி. எல்லா ஆசிரியர்களும் முதன் முதலாகப் படிப்பிக்கப் போகும் பாடசாலையில் சத்தியப்பிரமாணம் எடுக்க வேண்டும் என்று சொன்னார். அரவிந்தன் எழும்பினான். முகம் வலு சீரியஸாக இருக்க, செல்வராஜா சேரைக் கேட்டான், ‘சேர் நீங்கள் முதன் முதலாக எங்க படிப்பிச்சனியள்?'. அந்தாள் வரப்போற ஆப்பு விளங்காமல், ‘மெதடிஸ்டிலயடா, ஏன் கேட்கிறாய்?' என்றார். இவன் ‘ஒன்றும் இல்லை என்றான்'. அந்தாள் வேலியில போன ஓணானை எடுத்து மடியில விடுற மாதிரி திரும்பவும் ஏன் எண்டு கேட்டுது. இவன் பாவி கேட்டான், ‘அப்ப நீங்கள் மெதடிஸ்டிலையோ Oath எடுத்தனியள்?' என்று. சொன்னா நம்பமாட்டியள் எனக்கு சிரிச்சு சிரிச்சு கண்ணெல்லாம் தண்ணி. இன்றுகூட செல்வாராஜா சேரின் படத்தைப் பார்த்தால், அவரைப் பற்றி நினைத்தால் இந்தக் கேள்விதான் மனதில் வந்து நிற்கும்.

எங்களுக்கு வெடிவால் முளைத்த காலத்தில் எங்களின் பாடசாலை அதிபராக இருந்தவர் ஸ்ரீபதி சேர். ஆள் கொஞ்சம் அதிருப்தியை சம்பாதித்த மனிதர். எனக்கு அவர் மீது தனிப்பட்ட அதிருப்தி இல்லை. இவரது காலத்தில் கட்டப்பட்ட சில கட்டடங்களுக்கு நாங்கள் எங்கள் கையால் சீமெந்து சுமந்தது இன்றைக்கும் ஞாபகம் இருக்கு. மேடையிலை இவரைக்கண்டித்துப் போட்ட ஒரு நாடகத்தை துணிவாக மேடையிறக்கியவர். இவரின் காலத்தில் 11ம் வகுப்பில மரியதாஸ் மாஸ்டர் எங்களுக்கு சனி, ஞாயிறில வகுப்பெடுப்பார். ஒரு சனிக்கிழமை ஸ்ரீபதியும் மரியதாஸ் எடுக்கிற வகுப்பைப் பார்க்க வந்திட்டார். வந்து பார்த்தால் எல்லாரும் கலர் உடுப்போட இருக்கிறம். அவ்வளவு பேரையும் வெறும் மேலோட இருந்து படிக்க வைத்தார் ஸ்ரீபதி. நெஞ்சுக்குக் குறுக்கே ஒருத்தன் கையைக் கட்ட, ‘அதென்ன முத்தின மார்பகமே மறைக்கிறதுக்கு. கையை எடு' என்ற ரீதியில் ஏச்செல்லாம் விழும். ஸ்ரீபதியின் ‘நாய்தான் வாலை ஆட்டலாமே ஒழிய, வால் நாயை ஆட்ட முடியாது' என்ற ‘பஞ்ச்' மிகவும் பிரபலமானது.

மரியதாஸ் வாத்தியாரைப் பற்றிச் சொல்லாமல் இருக்கேலாது. எங்களுக்கு அப்போது இந்தக் ‘கணிப்பீடு' ‘ஒப்படை' என்றெல்லாம் தொல்லைகள் இருந்தது. இந்தாள் மரி எங்களுக்கு கணித்தத்தில் ஒரு ‘கணிப்பீடு' என்று சொல்லி, அடைக்கப்பட்ட உருவங்கள் பற்றி ஐந்து நிமிடம் சுத்தத் தமிழில் பேசச் சொல்லி எல்லாம் தொல்லை பண்ணும். இந்தாளின்ர அடிக்கு பயப்பிடாத ஆளே இல்லை. கள்ள வழி, அது இது என்று ஆள் வலு ஃபேமஸ். ‘ஏழிசை கீதமே' என்று ஜேசுதாஸ் மாதிரி இழுத்தார் என்றால், ம்ஹூம் சொக்கிப் போய்விடுவீர்கள். இந்த மரியிட்ட அடிவாங்காமல் நான் படிச்சதே பெரிய விசயம். ஒரே ஒரு முறை மட்டும் கிட்டத்தட்ட அடிவாங்கியிருக்க வேண்டியது, மயிரிழையில் தப்பினேன்.

மரியதாஸ் தொடைகள் பற்றிப் படிப்பித்த நேரம் அது. ஒரு வென் வரிப்படம் கீறும் போது அந்தாள் சொன்ன முறையில் கீறாமல் பிழையாய்க் கீறிவிட்டேன். மரி பிழை போட்டுவிட்டு ஆள் யார் என்று நிமிர்ந்து பார்த்தபோது என் பின்பக்கம் மட்டுமே தெரிந்திருக்கிறது. ஆக நான் போன திசையை மட்டும் பார்த்த மரிக்கு முகம் தெரியவில்லை. எல்லாருடைய கொப்பிகளையும் திருத்தி முடித்த பின் மரி விறு விறுவென்று வந்து எனக்கு நேரே பின் வரிசையில் இருந்த ரஜனிகாந்துக்கு சளார் பளாஎ என்று அடி. ரஜனிக்கு ஏன் அடி விழுகிறது என்று தெரியவேயில்லை. ஆனால் அடிக்கும்போது மரி வென் வரிப்படம் பற்றி உதிர்த்த ஒரு வசனம் அது எனக்கு விழ வேண்டிய அடி என்பதை உறுதிப்படுத்தியது. அந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு மாதிரி எனக்கு ‘பாட்ஷா பாரு பாட்ஷா பாரு' என்று ஆனந்தராஜ் ரஜினிக்கு பாட்ஷா படத்தில் அடிக்கும்போது ஒரு சோகமான பின்னணிப் பாட்டு வருமே, அது ஞாபகம் வந்து தொலைத்தது.

11ம் வகுப்பில் நாங்கள் செய்த இன்னொரு அட்டூழியம் Prefect Enmity Pupils Party என்ற பெயரில் அப்போ பிரிஃபெக்டாக இருந்தவர்களின் ‘அன்பைத்' தேடிப்போய் வாங்கிக் கொண்டதுதான். அண்ணன் கரவைக்குரல் இதைப் பற்றிக் கதை கதையாச் சொல்லுவார் என்று நினைக்கிறேன். அடிக்கடி டிற்றெஞ்சன் போடுவார்கள் எங்களின் வகுப்புக்கு.

இந்தக் காலத்தில் நான் உருப்படியாகச் செய்த ஒரு விஷயம், முதன் முறையாகப் பள்ளிக்கூட மேடை ஏறியதுதான். இது பற்றியும் தனியாக ஒரு பதிவே போட்டிருக்கிறேன். என்னை மேடை ஏற்றியது விஞ்ஞானம் படிப்பித்த விஜயகுமார் சேர். பச்சைய வீட்டு விளைவு பற்றி தமிழில் பேசினேன். அதன்பின் பல ஆங்கில நாடகங்களுக்காக என்னை சத்தியசீலன் சேர் மேடையேற்றினார். அதுதவிர, இப்படியான ரசனைகெட்ட குழப்படிகளே தொடர்ந்தன. என்னில் இருந்த 'நல்ல பொடியன்' இமேஜ் இந்தக் குழப்படிகளில் இருந்து என்னை அடிக்கடி காப்பாற்றியது. அதே போல் எங்கள் வகுப்பில் முக்கால்வாசிப் பேருக்கு நாடகம் நன்றாக வரும். அரவிந்தன் போட்ட ‘ஐயா எலெக்சன் கேட்கிறார்' என்ற நகைச்சுவை நாடகம், அவனை அறியாமலே உருவான ஒரு அருமையான குறியீட்டு நாடகம்.

ஒருவாறாக ஓ.எல் கடந்து ஏ.எல் வந்தோம். இனித்தான் நாங்கள் இன்றைக்கு நினைத்தாலும் இனிக்கும் காலங்கள் அவை பற்றி இன்னொரு பாகத்தில்.

6 comments:

vasu balaji said...

அடப் பாவிகளா!:)). வாத்திய இந்தப் பாடா படுத்தினீங்க.

Unknown said...

இன்னும் பல கெட்ட வேலை எல்லாம் செய்திருக்கிறம் பாலா... ஒப்புதல் வாக்குமூலம் எல்லாம் கொடுத்து உள்ள கொஞ்ச நஞ்ச நல்ல பேரை எல்லாம் கெடுக்க முடியாது

டவுட்டு கணேஷன் said...

விமல் குமார் காந்தறாஜ் உட்பட கனபேர் அந்த காலத்தில் இருந்தவன்கள்
நவனீ

பால்குடி said...

அருமையான நினைவுப் பதிவு. எங்கள வகுப்புகளில் நடந்த பல சம்பவங்களை மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்த உதவியது. அந்தக் கால நினைவுகளை மீட்டு ஆனந்தப்பட்டேன்.

Unknown said...

டவுட்டு கணேசன்
விமலும் காந்தராஜும் அந்தரங்க இடங்களைத் தேடித் தாக்குவதில் புகழ் பெற்றவர்கள்.. இப்ப நினைச்சாலும் அவடம் நோகுதய்யா

Unknown said...

நினைவுமீட்டலே சுகம்தானே பால்குடி