Friday 20 November 2009

நான் பார்க்கும் உலகம்: நவம்பர் 15-நவம்பர் 21 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

அரசியல்-பிறந்தவீடு+பக்கத்துவீடு
அவரைத் துரோகி என்று திட்டித் தீர்த்து எல்லோரும் ஓய்ந்து போன நேரம் கலைஞர் திரும்பவும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியிருக்கிறார். சென்ற 17ம் திகதி ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி இவர் விட்ட அறிக்கை ஒன்றில் 'விடுதலைப் புலிகள் எடுத்த அவசரமான முடிவுகள்தான் இன்றைய நிலைக்குக் காரணம்' என்று கருத்தை உதிர்த்துச் சென்றிருக்கிறது இந்தக் கிழட்டுசிங்கம். விடுதலைப் புலிகளின் அரசியல் விமர்சிக்கப்பட வேண்டியதுதான். அதற்காகக் செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டியதைச் செய்யாமல் சும்மா இருந்துவிட்டு, ஏற்கனவே காயம்பட்ட நெஞ்சங்களில் கொதிக்கக் காய்ச்சிய வேலைப் பாய்ச்சிக் கிண்டிக் கிளறியிருக்கிறார் கருணாநிதி. ஆகக் குறைந்தது மே 19ம் திகதிக்கு முன்னராவது இந்த அறிக்கையை விட்டுத் தொலைத்திருந்தாலாவது அறிக்கையில் கொஞ்சமாவது யோக்கியத்தனம் இருந்திருக்கும். இப்போது வந்திருக்கும் அறிக்கை சமீபகாலமாக அரசியலில் பரபரப்பு இல்லாமல் இருப்பதால் கொஞ்சம் பரபரப்பைக் கூட்டும் முயற்சியாகவே பார்க்கப்படக்கூடியது. வை.கோ, நெடுமாறன் வழமை போல எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார். பச்சோந்தித் தலைவி, மன்னிக்கவும், புரட்சித் தலைவியும் கண்டன அறிக்கை விடுகிறார். ஆக மொத்தம் அவர்கள் உருட்டி விளையாடும் பந்துகளாகிவிட்டது ஈழத் தமிழர் பிரச்சினைகள்.

ஜனநாயகத்துக்காகப் போராடப் போகிறேன் என அறிவித்திருக்கிறார் சரத் பொன்சேகா. (கொஞ்சம் அப்படியே இருங்கள், சிரித்து முடித்துவிட்டு வருகிறேன்). இவ்வளவுகாலமாக தானும் சேர்ந்து கொன்று புதைத்த அந்த ‘ஜனநாயகத்தை' எப்படி உயிர்ப்பிக்கப் போகிறாரோ தெரியவில்லை. வரவர நகைச்சுவைக்காகப் படங்களைப் பார்ப்பதைவிட அரசியல் செய்திகளை வாசித்துவிடலாம் போலிருக்கிறது.

அரசியல்-புகுந்தகம்

ஆஃப்கானிஸ்தானில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகளை சிறைகளில் வைத்துக் கனேடிய அதிகாரிகள் துன்புறுத்தினார்கள் என்று முன்னாள் ஆஃப்கானிஸ்தானுக்கான கனேடியத் தூதரக அதிகாரி ரிச்சர்ட் கொல்வின் (Richard Colvin)குற்றம்சாட்டியிருக்கிறார். பின்வரும் அதிகாரிகளுக்கும் இந்தச் சித்திரவதைகளுக்கும் தொடர்பு இருப்பதாக கொல்வின் கனேடியப் பாராளுமன்றத்தில் தெரிவித்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
  1. டேவிட் மல்ரொனி (David Mulroney)- முன்னைநாள் ஆஃப்கான் துருப்புக்களுக்கான மத்திய அமைச்சர், இப்போதைய சீனாவுக்கான கனேடியத் தூதர்
  2. ரிக் ஹில்லியெர் (Rick Hillier)- முன்னைநாள் கனேடியப் பாதுகாப்புப் படைகளுக்கான தலைமை அதிகாரி
  3. மார்கரெட் ப்ளட்வேர்த் (Margaret Bloodworth)- முன்னைநாள் பிரதமருக்கான பாதுகாப்பு ஆலோசகர்
  4. ஜில் சின்கிளேயர் (Jill Sinclair)- முன்னைநாள் வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விடயங்களுக்கான அமைச்சகத்தில் உதவிச் செயலர்
  5. கொலீன் ஸ்வோர்ட்ஸ் (Colleen Swords)- வெளிநாட்டு விவகாரங்களின் சர்வதேசப் பாதுகாப்பு விவகாரங்கள் பிரிவின் முன்னாள் அமைச்சர். பழங்குடி இந்தியர்கள் விவகாரங்களுக்கான தற்போதைய உதவி அமைச்சர்
  6. டேவிட் ஸ்ப்ரோல் (David Sproule)- முன்னைநாள் ஆஃப்கானிஸ்தானுக்கான தூதர் (2006, 2007ல் ஒரு பகுதி)
  7. ஆரிஃப் லாலானி (Arif Lalani)- முன்னைநாள் ஆஃப்கானிஸ்தானுக்கான தூதர் (2007 ஒரு பகுதி, 2008)
  8. மைக்கேல் கோதியேர் (Michel Gauthier)- ஓய்வுபெற்ற லெப்டினண்ட் ஜெனரல். கனேடியப் படைகளின் எல்லா வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கும் பொறுப்பானவர்.
மேற்சொன்ன 8 பேரில் மூவரைத்தவிர மற்றவர்கள் இன்னும் எந்தவிதமான பதில்களையும் அளிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் இந்தக் குற்றச் சாட்டுகள் தொடர்பான விசாரணைக்குக் கோரிக்கை விடுத்திருக்கின்றன. அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்திருக்கிறது. இது தொடர்பாக ஊடகங்களையும் மக்களையும் அமைதிக்காக்குமாறு கேட்டிருக்கிறார்கள் அரசதரப்பு. கொஞ்சம் நாகரீகமான நாடாக நான் பார்க்கிற கனடாவும் உண்மையில் இப்படியானவர்களைக் கொண்டிருக்கிறது என்றால், 2012ல் உலகம் அழிந்து போய்விட்டால் நன்றாக இருக்கும்.

அரசியல்-உலகம்
பெல்ஜியம் ப்ருசெல்சில் நடக்கும் உலகின் பலம் மிக்க நாடுகளின் (தாதாக்களின்) அவசர ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், அணு ஆயுத உற்பத்தி பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் திட்ட வரைபை ஈரான் ஏற்றுக்கொள்ளாவிட்டால் ஈரான் கடுமையான தண்டனைகளைச் சந்திக்கவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்திருக்கிறார். கொஞ்சம் கடுமையான வார்த்தைகளோடு கூடிய இந்த உரையில் Sanctions என்கிற பதம் பயன்பட்டிருப்பது கொஞ்சம் நிம்மதியளிக்கிறது. வட கொரியா முதலான இன்னபிற அணு ஆயுத உற்பத்தி செய்யும் நாடுகளையும் சாடிய அவர், அமெரிக்காவின் அணு ஆயுத உற்பத்தி பற்றி ஒன்றும் சொல்லவில்லை (அட, அவர் எப்படிச் சொல்வார். அவைதானே தாதாக்கள், அவை என்னவும் செய்யலாம்). ஒபாமா, புஷ் போல் முட்டாள்தனமாகச் செயற்பட்டு நோபல் குழுவின் முகத்தில் கரிபூசமாட்டார் என்று நினைக்கிறேன்.



வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்
கனடாவின் தொலைத் தொடர்புத் துறையில் ரோஜேர்ஸ் (Rogers), ரெலஸ் (Telus) ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களைத் தொடர்ந்து பெல் கனடாவும் அவர்களுடைய System Access Fee ஐ இல்லாமல் செய்திருக்கிறார்கள். மாதாந்தம் $6.95 ஆக இருந்த இந்தக் கட்டணம் இனிமேல் புதிதான திட்டங்களில் இணைபவர்களுக்கு இனிமேல் அறவிடப்படமாட்டா. ரோஜேர்ஸ் மற்றும் ரெலஸ் ஏலவே இதை அறிமுகம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. பழைய வாடிக்கையாளர்கள் ஏதாவது புதிய திட்டங்களுக்கு மாறிக்கொண்டால் இந்தக் கட்டணத்தை இனிமேல் தவிர்க்கலாம்.

அதற்காக வாடிக்கையாளர்கள் பெரிதாகச் சந்தோசப்பட முடியாது. முன்பு இருந்த திட்டங்களிற்கான மாதாந்தக் கட்டணங்கள் சராசரியாக ஐந்து டொலர்களால் உயர்த்தப்பட்டிருக்கின்றன. மூன்று பெரிய போட்டியாளர்களும் இந்த விஷயத்தில் ஒரே மாதிரித்தான் சிந்தித்திருக்கிறார்கள். எப்படியோ, மாதத்துக்கு 1.95 டொலர்களாவது சேமிக்கலாம் வரும்காலங்களில்.

விளையாட்டு

இலங்கை-இந்தியா முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்திருக்கிறது. முதலாவது நாள் முதல் ஒரு மணித்தியாலம் தவிர மிகுதி நேரம் முழுவதும் துடுப்பாட்டக்காரர்கள் கையே ஓங்கியிருந்தது. ட்ராவிட்-177, தோனி-110 உதவியுடன் இந்தியா 426 ஓட்டங்கள் பெற, டில்சான்-112, மகேல-275, ப்ரசன்ன-154* உதவியுடன் இலங்கை 760-7 என்ற இமாலய இலக்கை அடைந்தது. 334 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இந்தியா ஐந்தாம் நாள் ஆட்ட நேர முடிவில் 412-4 என்ற எண்ணிக்கையைத் தொட்டது. கம்பீர்-114, சச்சின்-100* சிறப்பாக ஆடினார்கள். மகேல 9000 ஓட்டங்கள் கடந்த முதல் இலங்கை வீரர் என்ற புகழையும், ட்ராவிட் 11,000 கடந்த 5வது வீரர் என்ற பெருமையையும், சச்சின் 30,000 சர்வதேச ஓட்டங்கள் கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்கள். இப்படி ஒரு ஆடுகளத்தில் கிரிக்கெட் ஆடுவதைவிட இந்திய வீரர்கள் விளம்பரப்படங்களில் நடிக்கலாம். இலங்கை வீரர்கள் எல்லே விளையாடலாம். (இதைவிடக் கேவலமான ஆடுகளங்களும் இருக்கின்றன. அது பற்றித் தனிப்பதிவே போடலாம்)

சினிமா-பொழுதுபோக்கு
ராதிகா வித்தியாசமாக ஒன்றைச் செய்திருக்கிறார். சின்னத்திரைக் கலைஞர்கள் கூட்டமைப்பின் விருது வழங்கும் விழாவில் இவரை ‘அரசி' தொலைக்காட்சித் தொடருக்காக சிறந்த நடிகையாகத் தெரிவு செய்திருந்தார்கள். இந்தத் தெரிவுகளில் நடிகர், நடிகை, இயக்குனர் போன்ற பிரிவுகளில் பல திறமைசாலிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்படவில்லை என்றும், விருதுகளுக்கான தேர்வு முறையில் திருப்தி இல்லை என்றும் கூறி அவருக்கு வழங்கப்பட்ட விருதைத் திருப்பி அனுப்பியிருக்கிறார். தனக்குத் தகுதி திறமை அடிப்படையில் மேற்படி விருது வழங்கப்பட்டிருந்தாலும் (???!!!!), இனிமேலும் திறமைசாலிகள் ஓரம்கட்டப்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்த விருதைத் திருப்பி அனுப்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்திரா பார்த்தசாரதி செய்த அளவுக்கு சரியான மூக்குடைப்பு இல்லையென்றாலும், இன்னும் கொஞ்சம் பெரிய கலைஞர்கள் இப்படியான கேலிக்கூத்து விருதுகளைப் புறக்கணித்து விருதுகளுக்குரிய மரியாதையைப் பெற்றுத்தரவேண்டும். யாராவது இந்த ‘விஜய் விருதுகள்' கூத்தையும் தட்டிக்கேட்க வேண்டும். (அதுசரி பாரதிராசா பத்மஸ்ரீ விருதைத் திருப்பி அனுப்பிவிட்டாரா. இல்லை அதுவும் நல்லதொரு சீனா? யாரப்பா இயக்குனர்??)

இது எப்படி இருக்கு........

மேலே சொன்ன கனேடியத் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தொடர்பாக ஒரு விசித்திரமான வழக்கொன்று விரைவில் நீதிமன்றத்துக்கு வர இருக்கிறது. அதாவது ரோஜேர்ஸ் (Rogers) தங்களுடைய மகுட வாசகமாக 'Canadas fastest and most reliable network' என்பதைத் தம்முடைய விளம்பரங்களில் பயன்படுத்தி வந்தது. சமீபத்தில் ரெலஸ் (Telus) நிறுவனம் புதிதாக 3-G Network க்கு உரிய Server ஐ மேம்படுத்தி சென்ற வாரம் புத்தம் புதிய Network ஒன்றை களத்தில் இறக்கியது. இதன் காரணமாகத் தாங்களும் ரோஜேர்ஸ் போலவே வேகமானதும், நம்பகமானதுமான Network வைத்திருப்பதால், 'Canadas fastest and most reliable network' என்ற மகுட வாசகத்தை ரோஜேர்ஸ் பயன்படுத்துவது வாடிக்கையாளர்களைப் பிழையாக வழிப்படுத்தும் ஒரு முயற்சி என்றும் இனிமேல் அந்த வாசகத்தை அவர்கள் பயன்படுத்தக்கூடாது என்றும் ரோஜேர்ஸை ரெலஸ் கேட்க, ரோஜேர்ஸ் மறுத்துவிட்டது. இதனால் வான்கூவர் நகரில் இருக்கும் உச்ச நீதிமன்றத்தில் ‘Criminal Competition Law' என்கிற சட்டக் கோர்வையின் கீழ் ரோஜேர்ஸ் மீது நட்டஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள் ரெலஸ். அட இதில் என்ன என்கிறீர்களா? இந்தியாவில் நடிகர், நடிகைகளுக்குக் கோடிகள் கொடுத்து எடுத்த சில விளம்பரங்களை நம்மவர்கள் சர்வசாதாரணமாக அனுமதி எல்லாம் இல்லாமல் பாவிக்கிறார்கள். நாங்கள்தான் சிறந்தவர்கள் என்று அறை கூவுகிறார்கள். இப்படியான ஒரு சின்ன வாசகத்தை வைத்தே ஆப்படிக்கலாம் என்பது அவர்களுக்கெல்லாம் தெரியுமா??

No comments: