Sunday 31 May 2009

பாடமே படமாக...


நீங்கள் ஒரு கதையையோ, ஒரு நாவலையோ வாசிக்கும்போது அதில் வரும் கதாபாத்திரங்கள் மற்றும் சம்பவங்களை மனதுக்குள் காட்சிப்படுத்திப் பார்ப்பதுண்டா? நான் செய்வதுண்டு. இவ்வாறு நீங்கள் வாசித்த கதையோ, நாவலோ திரைப்படமாக வெளிவந்திருந்தால் அதைப் பார்ப்பதற்கு ஒரு தனி ஆவல் எற்படும். அவ்வாறு நான் வாசித்த நாவல் ஒன்றின் திரைப்பட வடிவத்தை திரைப்படமாகப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு சமீபத்தில் கிட்டியது. அது சர். ஆர்தர் கொனான் டொய்ல் (Sir. Arthur Conan Doyle) அவர்கள் எழுதிய த ஹவுண்ட் ஒஃப் த பாஸ்கெர்வில்ஸ் (The Hound of the Baskervilles) என்ற நாவலின் திரைப்பட வடிவம். உடனே ஆரம்பிச்சுட்டான்யா அடுத்த உலக சினிமா ரசிகன் என்று ஓடிவிடாதீர்கள். டொய்லும் அவரது நாவலும் எனக்கு எப்படி அறிமுகமானார்கள் என்று சொன்னால் நான் அந்தப் படத்தைப் பார்க்க ஏன் ஆவல் கொண்டிருந்தேன் என்று புரிந்து கொள்ளலாம்.

சிறீலங்காவில் நாங்கள் 11ம் வகுப்பில் நாடளாவியா ரீதியில் ஒரு பரீட்சை நடக்கும். அதற்கு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (General Certificate of Education, Ordinary Level) என்று பெயர். (13ம் வகுப்பில் நடப்பது க.பொ.த உயர் தரப் பரீட்சை). நான் 9ம் வகுப்புக்குப் போகும்போது என்று நினைக்கிறேன், தமிழ்மொழி, கணிதம், விஞ்ஞானமும் தொழிநுட்பவியலும், சமயம், சமூகக் கல்வியும் வரலாறும், ஆங்கிலம், கவின்கலை (சித்திரம், சங்கீதம், நடனம் ஆகியவற்றில் ஒன்று), சுகாதாரமும் உடற்கல்வியும் ஆகிய 8 பாடங்களோடு (கட்டாய பாடங்களை சரியாகவே பட்டியலிட்டிருக்கிறேன் என நம்புகிறேன்), புவியியல், தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், வர்த்தகமும் கணக்கியலும் அல்லது இலத்திரனியல் ஆகிய தெரிவுகளிலிருந்து இரண்டு பாடங்களுமாக 10 பாடங்களைத் தெரிவுசெய்து 11ம் வகுப்புவரை படிக்க வேண்டும் என்றார்கள் அரசாங்கம். நான் தெரிவுசெய்தது வர்த்தகமும் கணக்கியலும் மற்றும் ஆங்கில இலக்கியம். (மிகச்சொற்பமே ஆங்கில இலக்கியம் படித்தோம். 15 பேரைத் தாண்டாது. 3 பேர் A எடுத்தார்கள். எனக்கு B மட்டுமே. A எடுத்த மூவருமே ஸ்பெஷலாக ரியூசன் போனார்கள். அவர்களில் ஒருவன் ரஞ்சித் அங்கே ரியூசன் வருமாறு என்னை வற்புறுத்தாத நாளே இல்லை. நான் தான் சோம்பல் பட்டு போகவே இல்லை). அப்படி ஆங்கில இலக்கியம் படித்த போதுதான் Sir. Arthur Conan Doyle மற்றும் அவரது நாவலான The Hound of the Baskervilles பற்றித் தெரிந்து கொண்டேன்.

ஆங்கில இலக்கியப் பாடத்திட்டப்படி அரசாங்கம் ஒரு பாடப் புத்தகம் தந்தார்கள். அதில் கவிதைகள் மற்றும் 5 சிறுகதைகள் அடங்கியிருக்கும். இவை தவிர அவர்கள் சிபாரிசு செய்யும் ஐந்து நாவல்களில், மூன்று நாவல்களை நாம் தெரிவு செய்து வாசிக்கவேண்டும். தெரிவைச் சுலபமாக்கவென ஒரு நாவலைக் கட்டாயத் தேர்வாக அரசாங்கமே சொல்லியிருந்தது. அந்நாவல்கள் வருமாறு:
  1. Oliver Twist by Charles Dickens (Compulsury)
  2. Mangrove Island by Martin Wickramasinghe
  3. The Mill on the Floss by George Elliott (இந்த நாவலின் பெயரை மறந்தே விட்டேன். ஞாபகப்படுத்திய நண்பன் பகீதரனுக்கு நன்றி)
  4. Swami and Friends by R. K. Narayan
  5. The Hound of the Baskervilles by Sir. Arthur Conan Doyle
என்னுடைய அப்பாவின் ஈடுபாடு காரணமாக ஐந்து நாவல்களுமே எனக்குக் கிடைத்தன. (என்னிடம் மட்டும் தான் ஐந்தும் இருந்தது. ஆசிரியர்களிடம் கூட இல்லை). அப்போது வாசித்த அந்த ஐந்து நாவல்களில் அனைத்துமே எனக்குப் பிடித்திருந்தபோதும் நான் மீண்டும் மீண்டும் வாசித்தது டொய்ல் மற்றும் ஆர். கே. நாராயண் இருவரையும் தான். Oliver Twist ஐ நாடகமாக நடித்ததால் அது கிட்டத்தட்ட எனக்கு தலைகீழ் பாடம். இப்படி என் பதின்ம வயதுகளில் என் மனம் கவர்ந்த, இலக்கியத்தரம் மிகுந்த டொய்லின் துப்பறியும் நாவலின் திரைப்பட வடிவம் சமீபத்தில் ஒரு வலைமனையில் DVD Rip ஆகக் கிடைத்தபோது அதைப் பார்க்கும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டதில் அதிசயம் இல்லை.

கதை:
இது டொய்லின் புகழ்பெற்ற Sherlock Holmes வரிசைக் கதை. இங்கிலாந்தின் டெவன்சயர் பிரதேசத்தில் உள்ள ஒரு நிலப்பிரபுவான சார்ள்ஸ் பாஸ்கெர்வில் மர்மமான முறையில் இறந்து போகிறார். சொத்துக்களைப் பொறுப்பேற்க கனடாவிலிருந்து சட்டபூர்வ வாரிசான ஹென்றி பாஸ்கெர்வில் இங்கிலாந்து வருகிறார். சார்ள்ஸ் பாஸ்கெர்வில்லின் குடும்ப வைத்தியர் லண்டனில் ஷெர்லக் ஹோல்ம்ஸை சந்தித்து, சார்ள்ஸ் பாஸ்கெர்வில்லின் மரணத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாயும், புதிய வாரிசு ஹென்றிக்கும் துர்மரணம் சம்பவிக்கலாம் என்று தான் சந்தேகிப்பதாயும் கூறுகிறார். அத்துடன், பாஸ்கெர்வில் பரம்பரையில் முன்னொரு காலத்தில் வாழ்ந்த ஹுகோ பாஸ்கெர்வில் என்ற கொடியவன் ஒரு பெண்ணை வன்புணர முயன்றதால் பாஸ்கெர்வில் குடும்பத்துக்கு ஒரு சாபம் கிடைத்ததாயும், ஹூகோவை ஒரு வேட்டைநாய் கொன்றதாயும், அதன் பின் வந்த எல்ல பாஸ்கெர்வில்களும் ஏதாவது ஒருவகையில் துர்மரணம் அடைவதாயும் குறிப்பிடும் வைத்தியர், தான் இந்த சாபக் கதையை நம்பவில்லை என்றும், சார்ள்ஸின் மரணத்தில் வேறேதோ மர்மம் இருப்பதாயும் சொல்கிறார். ஹோல்ம்ஸின் உதவியையும் நாடி நிற்கிறார். லண்டன் வந்த ஹென்றியை டெவன்சயருக்கு வரவேண்டாம் என்று ஒரு எச்சரிக்கைக் கடிதம் வருகிறது, ஒரு மர்ம நபர் அவரையும் வைத்தியரையும் பின்தொடர்கிறார். முதலில் ஹென்றியின் புத்தம் புதிய ஸூ காணாமல் போகிறது. சிறிது நேரம் கழித்து புது ஸூ திரும்பக்கிடைத்து அவர் பாவித்த ஸூ காணாமல் போகிறது. ஹென்றியைப் பின் தொடர்ந்த மர்ம மனிதன் அவனை ஏற்றிச்சென்ற குதிரை வண்டிக்காரனிடம் தனது பெயர் ஷெர்லோக் ஹோல்ம்ஸ் என்கிறான். இந்த சம்பவங்கள் எல்லாம் நிஜ ஷெர்லோக் ஹோல்ம்ஸை இந்த சிக்கலான் வழக்கில் ஈடுபாடடைய வைக்கிறது. அதன் பின் ஹோல்ம்ஸ் என்ன செய்தார், சாபம் உண்மையா, சார்ள்ஸ் பாஸ்கர்வில்லின் மரணத்திலிருந்த மர்மங்கள் என்ன போன்றவற்றை டொய்லின் நாவலை வாங்கிப் படிப்பதன் மூலமோ, DVD மூலமோ தெரிந்து கொள்ளுங்கள்.

படம் பார்த்தபோது எனது மனதில் பட்டவை:
  • 1959ல் வந்த படம் என்பதால், நாடகத்தன்மை அதிகமாக இருந்தது. சில சீரியஸ் காட்சிகளில் நடிகர்களின் நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பு சிரிப்பூட்டியது.
  • Sherlock Holmes ஆக நடித்த Peter Cushing நான் மனதில் காட்சிப்படுத்திய ஹோல்ம்ஸைவிட கம்பீரமாக இருந்தார். (இவருக்கு முன் ஹோல்ம்ஸ் வேடங்களை Basil Rathbone என்பவர் செய்வாராம். பீற்றரால் பாசில் அளவுக்கு சோபிக்க முடியவில்லை என்பது அந்நாளைய விமர்சகர்களின் கருத்தாம்).
  • நாவலில் உள்ள சில கதாபாத்திரங்கள் படத்தில் இல்லை அல்லது பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறன.
  • 75 நிமிடம் ஓடும் படம் என்பதால் நாவலாசிரியர் சொன்ன பல நுணுக்கமான விடயங்கள் விடப்பட்டிருக்கின்றன. (உதாரணமாக, வில்லனின் Background and Identity).
  • நாவலைவிட படத்தில் கொஞ்சம் நகைச்சுவையுணர்வு தெறித்தது.
  • படத்தில் இந்நாளைய ஆங்கிலப்படங்களில் பாவிக்கப்படும் பிரபல F@@K Word பாவிக்கப்படவில்லை. இரண்டே இரண்டு வரைமுறை மீறாத முத்தக்காட்சிகளும் படத்தில் இருந்தன.
நான் ஒன்றும் பெரிய இலக்கிய விமர்சகனோ, சினிமா விமர்சகனோ இல்லை. ஆனால் துப்பறியும் கதை எழுத்தாளர்களின் God Father ஆன டொய்லின் கதையைப் படம் பண்ணும் போது இன்னும் கொஞ்சம் நுணுக்கமாகப் பண்ணியிருக்கலாம் (சுஜாதாவின் கதைகளில் வரும் கணேஷ்-வஸந்த் டொய்லின் Sherlock Holmes- Dr. Watson ஜோடி தந்த ஐடியா என்று சுஜாதா எங்கோ ஒரு பேட்டியில் குறிப்பிட்ட ஞாபகம், அந்தளவுக்கு டொய்ல் துப்பறியும் கதை எழுதுபவர்களிடம் ஆதிக்கம் செலுத்தினார். லண்டனில் ஷெர்லோக் ஹோல்ம்ஸின் அலுவலகத்தைத் தேடி அலைந்த வாசகர்கள் ஏராளமாம்). நாவல் வாசிக்கும்போது (அதுவும் மக்மில்லன் இந்தியாவால் குறுக்கிச்சொல்லப்பட்ட ஒரு Version) இருந்த பரபரப்பு, திகில், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், நிறைவு படத்தில் இல்லை. அந்தக் கதையை இன்றைக்கு ரீ-மேக் செய்தால் கூட ஓடும். ஏன், தமிழ்நாட்டில் ஒரு மூலையிலுள்ள குக்கிராமத்தில் நடப்பதுபோலக் கூடப் படம் எடுக்கலாம், பிய்த்துக்கொண்டு ஓடும். இருந்தும் சொல்கிறேன், ஒரு கதையை எழுதிய எழுத்தாளரின் நேரடிப் பங்களிப்பு இல்லாமல், கதையில் இயக்குனரால் சிறு மாற்றங்கள் செய்து எடுக்கப்படும் படங்கள் நாவலைப்போலவே மகா வெற்றி பெறுமா என்று கேட்டால், எனது பதில், இல்லை, ஒரு போதும் இல்லை.


4 comments:

Anonymous said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,


நன்றி
தமிழ்ர்ஸ்

Prasanna Rajan said...

கவலைப் பட வேண்டாம் நண்பரே!! கய் ரிச்சி இயக்கத்தில், ராபர்ட் டவ்னி ஜூனியர் நடிக்க, புது ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ திரைப்படம் வரும் நவம்பரில் வெளியாகிறது. இதன் டிரைலர் இங்கே:
http://www.youtube.com/watch?v=LiBzbNk0lZ0

Suresh said...

அருமையான பதிவு நண்பா

vasu balaji said...

நல்ல எழுத்தோட்டம். பாராட்டுக்கள்.