Sunday 20 September 2009

தமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-4

எங்களது பிள்ளைகள் தமிழ் கற்பது பற்றிய ஒரு நல்ல அணுகுமுறை பற்றிய தொடர் என்பதால், ஆற அமர்ந்து எழுத நேரம் கிடைக்கும் போது மட்டுமே எழுதுகிறேன். சில தொடர்களை அவசர அவசரமாக எழுதி முடித்திருக்கிறேன். சிலவற்றை இடையில் நிறுத்தியும் இருக்கிறேன். இந்தத் தொடரை அப்படியாக எழுதி முடிக்கவோ இல்லை இடையில் நிறுத்திவிடவோ விருப்பமில்லை. ஆகவே, கொஞ்சம் நேரம் கொடுங்கள், முழுமையாக எழுதுகிறேன். முன்னைய பாகங்களை இங்கே சென்று படிக்கவும்.

சென்ற பாகத்தில் சொன்னது போலவே, Microsoft PowerPoint பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பிப்பதில் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படலாம் என்று பட்டறை முடிவில் சிவா பிள்ளை அவர்கள் தந்த ஒரு கையேட்டில் சொல்கிறார். அது பற்றிச் சுருக்கமாக இங்கே:

PowerPoint ஒரு மிகவும் சுலபமான பல்லூடனச் சாதனம் ஆகும். கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஓரளவு அறிமுகமான ஒரு சாதனம் என்றுகூடச் சொல்லலாம். இது பல வழிகளில் எங்களது தேவைக்கேற்ப வளைந்து கொடுக்கக் கூடியது. மீ இணைப்பு (Hyperlink) செய்வதற்கும் இதில் வசதியுண்டு. (இணைய வசதியும் இருந்தால் எவ்வளவு விஷயங்களைக் காட்டலாம் என்று யோசித்துப் பாருங்கள்). இதில் சொற்களை மறைக்கவும், மங்கிப் பிறகு தெளிவாக வரவும், பல நிறங்களில் சொற்களையும் எழுத்துக்களையும் வேறுபடுத்திக் காட்டவும் முடியும். அதே போல், குறிப்பிட்ட நேரத் தாமதத்துக்குப் பிறகு எழுத்துக்கள், சொற்களை வரச் செய்யலாம். மேலிருந்து கீழ், இடமிருந்து வலம் என்று எப்படி வேண்டுமானாலும் வரச் செய்யலாம். ஒலி, ஒளித் துணுக்குகளை இணைக்கலாம். இப்படியாக எத்தனையோ வசதிகள் இருக்கிறன. (காகம் ‘கா கா' என்று கத்தும் என்று அபத்தமாகக் கத்திக் காட்டுவதைவிட, காகத்தின் குரல் உள்ள ஒலித் துணுக்கை ஒலிக்க விடலாம் அல்லவா?)

PowerPoint மூலம் பாடங்களை உருவாக்கிக் கற்பிப்பதில் பல நன்மைகள் இருக்கின்றன. ஏற்கனவே சந்தையில் இருக்கும் ஒரு பாடத்திட்ட சி.டி. யை உபயோகித்துக் கற்றுக் கொடுக்கும்போது, அந்த சி.டி. மாணவர்களைக் கவரவில்லை என்றால், அவர்களைக் கவரும்படி மாற்றம் ஏதும் செய்ய முடியாது. இதுவே, ஒரு ஆசிரியர் கொஞ்சம் நேரம் ஒதுக்கி, தானாகவே ஒரு பாடத்தை PowerPoint இல் உருவாக்கிக் கற்பிப்பாரேயானால், அவர் உருவாக்கிய பாடம் பிள்ளைகளுக்குப் பிடிக்காவிட்டால், மாற்றங்கள் செய்து அவர்களுக்குப் பிடிக்கக் கூடியாதாய் ஆக்கலாம். காரணம், இதன் ஆக்கவாளராக நாங்களே இருக்கப் போகிறோம். மாற்றம் செய்வதில் எந்தத் தடங்கலும் இருக்கப் போவதில்லை.

PowerPoint இல் ஏனைய பாடங்களுக்கு இணைப்புக் கொடுக்க, இணையப் பக்கங்களுக்கு இணைப்புக் கொடுக்க என்று பல வசதிகள் இருப்பது குறிப்பிடத் தக்கது. இதைக் கற்றுக் கொள்வதற்கு எந்தவித கஷ்டமும் படத் தேவையில்லை. (என்னுடைய பார்வையில் MS Office Suite ல் மிக இலகுவானதும், சிக்கல் இல்லாததுமான ஒரு Program, PowerPoint தான்). எந்தவிதமான Programming அறிவும் உங்களுக்குத் தேவைப்படப் போவதில்லை. மிகவும் இலகுவாக படைப்புக்களை உருவாக்கலாம். சிலவேளை பிழைகள் வருவது உண்மை. அப்போது மனம் சலிப்படையும். நேர விரயம் பற்றிய விரக்தி ஏற்படும். ஆன போதும், அதை விரயமாக நினைக்காமல், முதலீடாக நினைத்து செயற்பட்டால், நிச்சயம் ஆசிரியர்களில் கற்பித்தல் திறண் மேம்படும் என்பதில் ஐயமில்லை.

மேலே வர்ண எழுத்துக்களில் இருப்பவை சிவா பிள்ளை அவர்கள் பட்டறை முடிவில் தந்த கையேட்டில் இருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள். கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம் என்றால், இம்முறையில் பாடங்களை உருவாக்கிக் கற்றுக் கொடுப்பதில் பெரியளவு சிக்கல் இருக்கப் போவதில்லை. என்ன நம் சமூகத்தில் இருக்கிற ஆசிரியர்களிடம் இரண்டொரு தவறான மனப்பாங்குகள் இதில் தடையாக இருக்கும். ஒன்று, ஒரு நிலைக்குமேல் கற்றலில் இவர்கள் ஆர்வம் செலுத்துவதில்லை. ஆசிரியராக இருக்கும் நாங்கள் கற்க என்ன இருக்கிறது என்கிற எண்ணம், ஒரு வயதுக்குப் பிறகு கற்றலில் இருக்கும் கூச்சம் ஆகியன இந்த மனப்பாங்கு வளரக் காரணம். அடுத்தது, எம்மவர் மத்தியில் இருக்கும் ‘இவர் சொல்லி நான் என்ன கேக்கிறது' மனப்பாங்கு. இந்த இரண்டு மனப் பாங்குகளையும் தூக்கி எறிந்துவிட்டால், ஒரு ஆசிரியர் தன்னுடைய மகன், அல்லது மகளிடமே PowerPoint பற்றிக் கற்றுத் தேறிவிடலாம். ஆனால், ‘Hyperlinkல ஒரு தரம் கிளிக்கினால் போதும்' என்று வெளிப்படை உண்மையைப் பிள்ளை சொன்னாலே, ‘எனக்கு நீ சொல்லித் தாறியோ' என்று கேட்கிற பலர்தான் இங்கு அதிகம்.

தமிழ் மட்டுமல்லாமல் எந்த மொழி கற்பிப்பதிலும் கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய படிமுறைகள் இருக்கின்றன என்று முன்னர் ஒரு பாகத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதுபற்றி இன்னும் பலர் ஒரு தெளிவில்லாத நிலையிலேயே இருக்கிறார்கள். அப்படியானால் எழுத்து முக்கியமில்லையா? எங்கள் மொழியின் எழுத்து வடிவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டால், தமிழ் எழுத்துருக்கள் அழிந்துவிடாதா? என்று விசனப்படுகிறார்கள். ஆகையால், இந்த நான்கு படிமுறைகள் பற்றி இன்னும் கொஞ்சம் ஆழமாக அடுத்த பாகத்தில் பார்க்க இருக்கிறோம். முக்கியமாக எழுத்துக்களை எப்படிக் கற்றுக் கொடுப்பது என்றும் சில நல்ல வழிமுறைகளைச் சொல்கிறார் சிவா பிள்ளை. நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ள இன்னும் கொஞ்சம் பொறுப்பீர்கள்தானே?

2 comments:

vasu balaji said...

அருமையான அணுகுமுறை. நன்றி கிருத்திகன் பகிர்ந்தமைக்கு.

Tamil astrology said...

உங்கள் blog மிகவும் நன்றாக உள்ளது . உங்கள் தகவல்கள் பயனுள்ளதாக உள்ளது. தங்கள் சேவையை மேம்மேலும் தொடர வாழ்த்துக்கள்.. மிக்க நன்றி