Friday 25 September 2009

நான் பார்க்கும் உலகம்: செப்ரெம்பர் 20-26 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

அரசியல்-பிறந்தகம்
வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கும் இலங்கை அரச படைகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள முகாம் ஒன்றில் இடம்பெற்ற இவ்வாறான மோதல் ஒன்றில் ஒரு குடிமகன் காயமடைந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. முகாமில் இருந்த ஒருவரை இராணுவம் கடத்திச் சென்று கொன்று விட்டதாகக் கூறி மக்கள் இராணுவத்துக்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், அதனால் சென்ற புதன்கிழமை மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை முகாமில் இருந்து கள்ளமாகத் தப்பி ஓட முயன்ற ஒருவர் படையினரிடம் அகப்பட்டுக் கொண்டதால் விளைந்த பிரச்சினையே இது என்று காவல்துறை கூறியிருக்கிறது. இதனால் இம்முகாமுக்குச் செல்லும் பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்றன. ஊடகவியலாளர்கள் அப்பகுதிக்குச் செல்வதும் தடுக்கப்பட்டது. (எப்போது ஊடகவியலாளர்களை உள்ளே விட்டார்கள் இப்போது தடுப்பதற்கு)


இதே வேளை ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து மேலும் சில அதிகாரிகள் இந்த மக்களைப் போய்ப் பார்வையிட்டு வந்திருக்கிறார்கள். வழமை போலவே இலங்கைக்கு ஐ.நா. அறிவுறுத்தல், இலங்கையிடம் ஐ.நா. கோரிக்கை, இலங்கையிடம் ஐ.நா. வலியுறுத்தல் போன்ற தலைப்புகளில் செய்திகள் வர ஆரம்பித்திருக்கின்றன. ஏதோ கண்காட்சிக்குப் போய்ப் பார்த்துவிட்டு வந்து கருத்துச் சொல்வதுபோல் செய்துகொண்டிருக்கிறார்கள் ஐ.நா. அதிகாரிகள். (இன்னுமாடா உலகம் நம்மளை நம்பிக்கிட்டிருக்கு என்று வடிவேலு பாணியில் பேசிக்கொள்வார்களோ இந்த ஐ.நா. அதிகாரிகள்???)

அரசியல்-புகுந்தகம்

ரொரொன்ரோ நகரபிதா டேவிட் மில்லர் மூன்றாவது முறையாகவும் நகரபிதா பதவிக்குப் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்திருக்கிறார். நகரசபை மண்டபத்துக்கு வெளியே செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். தன்னுடைய குழந்தைகளை வழிநடத்துவதில் கவனம் செலுத்த தனக்குக் கூடிய நேரம் தேவைப்படுவதாகக் கூறிய மில்லர், மிகவும் கடினமான முடிவாக இருந்தபோதும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்வின் நெருக்கடி கருதி இந்த முடிவை எடுக்கவேண்டி இருப்பதாகக் கூறிக் கண் கலங்கினார். இந்த வருடக் கோடை காலத்தில் நகரசபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் பற்றிய பிரச்சினையை மில்லர் சரியாக சமாளிக்கவில்லை என்றும், அதனால் 79% ரொரொன்ரோ நகரவாசிகள் ஒரு புதிய நகரபிதா தேவை என்று விரும்புவதாகவும் சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு வெளியாகியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. (விழுந்தாலும் மீசையில மண் ஒட்டேல்லை இவருக்கு... அட அவருக்கு மீசையே இல்லையே)

அரசியல்-உலகம்

ஆப்கானைப் பிறப்பிடமாகக் கொண்ட நஜிபுல்லா ஸாஸி என்ற 24 வயது இளைஞர் அமெரிக்காவில் குண்டுகளை வெடிக்க வைக்கச் சதித்திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் அடிக்கடி கனடாவுக்கும் வந்து போயிருப்பதாகவும், கனடாவிலும் ஒரு தீவிரவாத கட்டமைப்பை இவர் உருவாக்க முயன்றிருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கொலராடோ விமான நிலையத்தில் ஷட்டில் பஸ் ஓட்டுனராகவும், நியூயோர்க்கில் ஒரு சிறிய கோப்பி விற்கும் தள்ளுவண்டி உரிமையாளருமான நஜிபுல்லா, மேலதிக விசாரணைகளுக்காக நியூயோர்க் நகரத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். செப்ரெம்பர்-11 இன்னொரு தீவிரவாதத் தாக்குதலுக்கு இவர் முயன்றிருக்கலாம் என்பதான அனுமானங்களும் இருக்கின்றன. இஸ்லாத்தின் பெயரால் இவன் குண்டு வைப்பதும், அதையே காரணம் காட்டி எல்லா முஸ்லீமையும் தீவிரவாதியாக்கி அமெரிக்காக்காரன் கொன்றொழிப்பதும் எப்போதுதான் முடியப்போகிறதோ.

வணிகம்-பொருளாதாரம்-தொழில் நுட்பம்

Blackberry பிதாமகர்கள் Research in Motion வெளியிட்ட மூன்றாவது காலாண்டுக்கான வியாபார எதிர்வுகூறல் மோசமாகப் பிழைத்துவிட்டது. 3.91 பில்லியன் வருமானத்தை எதிர்பார்த்த இந்நிறுவனத்தால் 3.6-3.85 பில்லியன் மட்டுமே இந்தக் காலாண்டில் ஈட்டக்கூடியதாய் இருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த எதிர்மறை அறிக்கை காரணமாக பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகளின் விலைகள் 17% வீழ்ந்திருக்கின்றன. Apple நிறுவனத்தின் i-Phone உடன் ஒப்பிடும்போது Blackberry வகைகள் விலை கூடியதாய் இருப்பதால், Apple நிறுவனத்தோடு போட்டி போட குறைந்த செலவில் Smart Phoneகளைத் தயாரித்துக், குறைந்த விலையில் சந்தைப்படுத்தும் வழி வகைகளை Research in Motion நிறுவனம் செயற்படுத்த வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. என்னதான் சொல்லுங்கள், Steve Jobs, Steve Wozniack மற்றும் Ronald Wayne ஆகியோர் Apple ஐ ஆரம்பித்த போது அவர்களின் தாரக மந்திரமே புதிதாகச் சிந்தித்தல் என்பதுதான். அதனால்தான் பலமுறை விழுந்தும் மீண்டும் மீண்டும் வந்து மற்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள்.

விளையாட்டு
ஐ.சி.சி. சாம்பியன் கோப்பைப் போட்டித் தொடர் தென்னாபிரிக்காவில் ஆரம்பம் ஆகியிருக்கிறது. முதல் நாள் போட்டியிலேயே உலகின் முதல் நிலை அணியான தென்னாபிரிக்காவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது இலங்கை அணி. அந்த இலங்கை அணியை வீழ்த்தி மிரட்டியிருக்கிறது இங்கிலாந்து அணி. ஒரு விஷயம் உண்மை. ஆடுகளங்கள் இப்படியாக Swing Bowlingக்கு சாதகமாய் இருக்கும் என்றால் இங்கிலாந்து ஒரு கறுப்புக் குதிரையாக மாறவும் வாய்ப்பிருக்கிறது. யார் கண்டார்? மேற்கிந்தியத் தீவுகள் அணிதான் பரிதாபகரமாக இருக்கிறது. சிலவேளை அவர்களுக்கு இந்தியா மகிழ்ச்சி அளிக்கலாம் (பாகிஸ்தான் கிட்டத்தட்ட தோற்றுப் போனார்கள்). சேவாக் இல்லாமல் ஏற்கனவே துவண்ட இந்தியாவுக்கு யுவராஜ் இல்லாதது இன்னும் ஒரு அதிர்ச்சி.


நாளை சனிக்கிழமை (26/09/2009) இந்தியா-பாகிஸ்தான் மோதுகிறார்கள். இதுவரை இவ்விரு அணிகளும் ஐ.சி.சி. போட்டித் தொடர்களில் 7 முறை மோதியிருக்கிறார்கள். 6 முறை இந்தியாவும் (1992, 1996, 1999, 2003 உலகக் கோப்பைகள், 2007 20-20 உலகக் கோப்பை) ஒரு முறை பாகிஸ்தானும் (2004 சாம்பியன் கிண்ணம்) வென்றிருக்கிறார்கள். என்ன இருந்தாலும் இந்த இந்திய அணியால் பாகிஸ்தானை சமாளிக்க முடியுமா தெரியவில்லை. பாகிஸ்தானை அடித்து நொறுக்கும் சேவாக்கும், யுவராஜும் இல்லாதது பெரிய குறை.

சினிமா
ஈரம் மற்றும் நினைத்தாலே இனிக்கும் ஆகிய படங்களைப் பார்த்தாயிற்று. (அதாவது இரண்டினதும் DVD Rip வந்துவிட்டது என்று அர்த்தம்). ஈரம் பிடித்திருக்கிறது. மிருகம் ஆதியா அவர்? சாதாரணமாக எங்கள் மத்தியில் பார்க்கும் கம்பீரமான இளைஞனாகத் தோன்றுகிறார். ஆனால் இவரும் பிரசன்னா, நந்தா வரிசையில் நிச்சயமாக, வெகு நிச்சயமாக வீணடிக்கப்படுவார் என்பது என் எண்ணம். நினைத்தாலே இனிக்கும் பார்த்த போது கொஞ்சம் பிடித்தது. சக்தியைப் பார்த்த போதெல்லாம் வெறுப்பாய் இருந்தது. A Wednesday முதலிலேயே பார்த்து உன்னைப் போல் ஒருவன் பார்ப்பதில் இருந்த ஆர்வம் குறைந்துபோன அனுபவத்தில், நினைத்தாலே இனிக்கும் படத்தின் மலையாளப் பதிப்பான Classmates படத்தை நினைத்தாலே இனிக்கும் பார்த்த பிறகுதான் தரவிறக்கிப் பார்த்தேன். Remake என்ற பெயரில் கெடுத்திருக்கிறார்கள் தமிழில். விரிவாக எழுதுகிறேன் இன்னொரு பதிவில்.


என்ன, ‘அதை'ப் பற்றி எழுதவில்லை என்று பார்க்கிறீர்களா? நான் ரவுடி இல்லை ரவுடி இல்லை ரவுடி இல்லை.

இது எப்பிடி இருக்கு??
Twitterல் பிரித்தானியப் Pop பாடகி Lily Allen ஐத் தொடர்கிறேன். ஒரு நாள் லில்லி lol lol lol என்று போட்டு ஒரு இணைப்புக் கொடுத்திருந்தார். இணைப்பைத் தொடர்ந்து போனால் 2009 Bestival நிகழ்வில் லில்லி தன்னுடைய Womanizer பாடலை நேரடியாக வழங்கும் காணொளி. காணொளியில் என்ன இருக்கிறது என்கிறீர்களா? பாருங்கள். (பார்த்த எனக்கே எப்போது விழும் எப்போது விழும் என்று பதைத்தது.... ம்ஹூம்.. லில்லி அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டாலதானே)

1 comment:

வந்தியத்தேவன் said...

உந்த லில்லி அக்காவின் கவுணை ஸ்ரேயா தரட்டாம்