Friday 11 September 2009

தமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-2

தமிழ் கற்பித்தலில் பல்லூடனப் பயன்பாடு- பட்டறை பற்றிய பார்வை; பாகம்-1

திரு. சிவபாலு அவர்களின் அறிமுகத்தின் பின்னர் திரு. சிவா பிள்ளை அவர்கள் தன்னைப் பற்றிய ஒரு சுய அறிமுகத்தைத் தந்தார். அதிலேயே ஆள் விஷயமுள்ள மனிதர் என்ற ஈர்ப்பு வரத்தக்கதான அறிமுகம். இவருடைய தகமைகள் மற்றும் சிறப்புகள் வருமாறு:
  • கேம்பிறிட்ஜ் பல்கலைக் கழக அயல் மொழிகளுக்கான தலைமைப் பரீட்சகர்
  • இலண்டன் Ed Excel பரீட்சைப் பகுதியில் தமிழ் மொழிக்கான தலமைப் பரீட்சகர்
  • கணினி விரிவுரையாளர்
  • ஐரோப்பிய மற்றும் சமூக மொழிகளைக் கணனித் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி எவ்வாறு கற்றுக் கொடுப்பது என்ற துறையிக்குப் பொறுப்பாக இருக்கிறார்.
  • அரசாங்கப் பாடசாலைகளில் பாடசாலை நேரத்தின் பின்னர் நடக்கும் தமிழ்ப் பாடசாலைகளுக்கும், சனிக்கிழமைகளில் நடாத்தப்படும் தமிழ்க் கலைப் பள்ளிக்கும் பொறுப்பாக இருக்கிறார்.
  • 2008/09 ல் Ourlanguage வேலைத் திட்டத்துக்கான விருதையும், 2007 ல் மொழிகளுக்கான ஐரோப்பிய விருதையும் பெற்றிருக்கிறார்.
  • Nuffield வேலைத் திட்டத்தில் தமிழ் மொழிக்கான பாடத்திட்ட வடிவமைப்பாளராக இருக்கிறார்.
  • ஐக்கிய இராச்சிய சீனப் பாடசாலைகள் சம்மேளனத்தின் கௌரவ உறுப்பினராக இருக்கிறார்.
அவ்வாறாக தன்னைப் பற்றிய அறிமுகத்தைத் தொடர்ந்து கணனி மூலமான தமிழ் கற்பித்தல் பாடத்திட்டம் உருவான கதையைச் சுருக்கமாகச் சொன்னார். இங்கிலாந்தில் தமிழ் கற்கும் பாடத்திட்டம் உருவான கதையும், அதில் சிவா பிள்ளையின் ஈடுபாடும் இங்கே எங்களுக்கு ஆழமாகத் தேவைப்படப் போவதில்லை. சிவா பிள்ளை எனப்படும் சிவகுருநாத பிள்ளை அவர்களைப் பற்றி மேலதிக விபரங்களை இங்கே அல்லது இங்கே சென்று அறிந்து கொள்ளுங்கள். அவர் chennaionline க்கு வழங்கிய பேட்டியை இங்கே படியுங்கள்.

ஒரு வேண்டுகோள்: சிவா பிள்ளையவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி என்னிடம் தற்போது இல்லை. அவரது தொழில் சார் மின்னஞ்சலில் நான் அவரைத் தொடர்பு கொண்டதும் இல்லை. அவரை இணையமூலம் சந்திக்க விரும்புபவர்களுக்கு அவரது தனிப்பட்ட இணையத் தொடர்பு முகவரிகள் தெரிந்த யாராவது உதவிசெய்யலாமே!!

இனிமேல் பட்டறைக்குள் நுழைவோம்.

சிவா பிள்ளை தமிழைக் கற்பதற்குப் புலம் பெயர் நாடுகளில் வாழும் இளம் சமுதாயம் பின்னடிப்பதற்கு தமிழை இன்னும் அன்றுதொட்டு நாங்கள் கற்ற பழைய முறையிலேயே கற்றுக் கொடுப்பதைக் காரணமாகச் சொல்கிறார். உதாரணமாக, ஐரோப்பிய மொழிகளைக் கற்றுக் கொடுப்பதற்குப் புதிய வழிமுறைகளைக் கையாள்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் புதிய புதிய நடைமுறைகளைப் புகுத்தி, பழைய வழிமுறைகளை நீக்கி மொழிக் கற்றலை இலகுவாக்குகிறார்கள். கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் என்கிற வகைகளாக இந்தக் கற்பித்தலைப் பிரித்துக் கற்றுக் கொடுக்கிறார்கள். இதுவே எளிமையான முறையாக அங்கே கருதப்படுகிறதாம். ஏன் அப்படியான எளிய முறைகளைப் பயன்படுத்தித் தமிழைக் கற்றுக் கொடுக்கக் கூடாது என்பதுதான் அவரது கேள்வி.

கற்பித்தலை எளிமையாக்குவதற்கு முதலில் மாணவனை தான் கற்கின்ற பாடத்தில் ஆர்வம் கொள்ளச் செய்வது அவசியம் என்பது சிவா பிள்ளையின் வாதமாக இருக்கிறது.

அவரது இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். எனக்குத் தெரிந்து கனேடிய மண்ணில் பிறந்து வளரும் எத்தனையோ குழந்தைகள் பெற்றோரின் உந்துதல் காரணமாக மட்டுமே தமிழ் கற்கவெனப் பள்ளி செல்கிறார்கள். இதைக் கண்கூடாகக் கண்டுமிருக்கிறேன். அப்படிப் போன சில பிள்ளைகள் தமிழில் மிக ஆர்வம்கொண்டு படிக்க ஆரம்பித்ததையும், சிலர் வெறுப்படைந்து தமிழ் படிக்கப் பின்னடித்ததையும் கண்டிருக்கிறேன். இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தபோது சில ஆசிரியர்களிடம் படிக்கும் குழந்தைகள் ஆர்வமாகத் தமிழ் படித்தார்கள், சிலரிடம் படிப்பவர்கள் ‘தமிழ் Class' என்றாலே அலறுகிறார்கள். இங்கே இந்த வித்தியாசத்துக்குக் காரணம், ஆசிரியரின் கற்பித்தல் முறை.

இன்னும் கொஞ்சம் ஆழமாகப் போகும்போது, சில நல்ல ஆசிரியர்களிடம் படிக்கிற பிள்ளைகளும் தமிழ் படிக்கப் பின்னடிக்கிறார்கள். சில சோத்தி ஆசிரியர்களிடம் படிக்கும் பிள்ளைகள் ஆச்சரியகரமாக தமிழ் படிப்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். இது எதனால் என்று பார்த்தால், அந்தப் பிள்ளைக்குத் தமிழ் கற்றுக் கொடுப்பதில் பெற்றோர் எவ்வளவு ஈடுபாடு காட்டுகிறார்கள் என்பதில் தங்கியிருக்கிறது. அதனால் பட்டறைக்குப் போகும் முன்னரே என் மனதில் இந்த விஷயம் தெளிவாக இருந்தது. பிள்ளை ஆர்வமாகத் தமிழ் படிப்பது ஆசிரியரின் கற்பித்தல் திறண், பெற்றோரின் ஆர்வம் இரண்டிலும் தங்கியிருக்கிறது. இருவரில் ஒருவர் தவறினாலும், பிள்ளை தமிழை ஆர்வமாகக் கற்கப் போவதில்லை. இது தமிழ் மட்டுமல்ல எல்லாப் பாடங்களுக்கும் பொருந்தும் என்பது என்னுடைய கருத்து.

இப்போது மீண்டும் சிவா பிள்ளையின் பட்டறைக்கு வருவோம். சிவா பிள்ளை தமிழ் கற்பதினால் பிள்ளைக்கு என்ன பயன் இருக்கிறது என்பதை விளங்கப் படுத்துவது அவசியம் என்கிறார். உதாரணமாக இப்போது கனடாவில் பல்கலைக் கழக அனுமதிக்கான credit course களில் ஒன்றாகத் தமிழும் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது. அதைச் சொல்லி அவர்களைத் தமிழ் படிக்க ஊக்குவிப்பதில் தவறேதும் இல்லை என்பதாக அவர் கருதுகிறார்.

உண்மைதான், ஆனால் இந்த விஷயத்தில் நம்மவர்கள் மிகவும் கேவலமாக நடந்து கொள்கிறார்கள். சில ஆசிரியர்களிடம் பிள்ளையை அனுப்பினால், பிள்ளை சரியாகக் கற்றுக் கொள்கிறதோ இல்லையோ, பிள்ளைக்குத் தேவையான credit கொடுத்து விடுவார்கள். அதாவது எனக்குச் சம்பளம் வருகிறது, உனக்கு பல்கலைக் கழக அனுமதிக்கு ஒரு மேலதிக credit வருகிறது.. இருவருக்குமே லாபம் என்கிற வியாபாரமாகத் தமிழ்க் கல்வி மாறிவிட்டதை நான் இங்கே சுட்டிக் காட்டவேண்டும்.

எல்லா ஆசிரியர்கள் மீதும் நான் இந்தக் குற்றச்சாட்டை வைக்கவில்லை. சிலர் மட்டுமே அப்படிச் செயற்படுகிறார்கள். பெற்றோரும் சளைத்தவர்கள் இல்லை. எந்த ஆசிரியரிடம் போனால் பிள்ளைக்கு இலகுவாக மதிப்பெண் கிடைக்குமோ அவர்களிடம் அனுப்பி தங்களையும் ஏமாற்றி, பிள்ளையையும் ஏமாற்றி சமூகத்தையும் ஏமாற்றிக் கொள்கிறார்கள். இந்த நிகழ்வை ஒழுங்கு செய்த சின்னையா சிவநேசன் அவர்கள் ஒன்பதாம் வகுப்புக்குத் தமிழ் படிப்பிப்பவர். ஒவ்வொரு வருடமும் தன்னுடைய வகுப்புக்கு வரும் மாணவர்களில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் ‘அ', ‘ஆ' சரியாகத் தெரியாமல் வருவதாகக் அடிக்கடி குறைபட்டுக் கொள்வார். எனக்குத் தெரிந்து இங்கே LKG, UKG வகுப்புகளில் இருந்தே தமிழ் கற்பிக்கிறார்கள் (என்னுடைய தமக்கையார் அந்த வகுப்புகளுக்குத் தான் தமிழ் கற்றுக் கொடுக்கிறார்). இருந்தும் ஒன்பதாம் வகுப்பில் ‘அ' ‘ஆ' தெரியாமல் ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் வருகிறார்கள் என்றால், எங்கோ பிழை செய்கிறோம் அல்லவா?

சிவா பிள்ளையின் பார்வையில் மாணவனைத் தமிழ் படிப்பதால் வரக்கூடிய கல்வியியல் ரீதியான பலன்களைச் சொல்லி (Credit Course, University Entrance) வகுப்பறைக்குள் அழைத்து வந்தாலும், அவனை ஆர்வமாகத் தமிழ் கற்க வைக்க எம்முடைய பழைய கற்பித்தல் முறைகள் உதவாது என்கிறார். முக்கியமாக புள்ளிக் கோடுகளை இணைத்து ‘அ' எழுதுதலில் மொழியைக் கற்றுக் கொடுக்கத் தொடங்காமல், கேட்டல், பேசுதல் வாசித்தல் கடைசியாக எழுதுதல் என்ற வரிசைக் கிரமத்தில் கற்றுக் கொடுக்கவேண்டும் என்று சொல்கிறார்.

இங்கே தான் சபைக்கும் சிவா பிள்ளைக்கும் முதல் முரண்பாடு வந்தது, பண்டிதர் திரு. அலெக்ஸாண்டரின் ரூபத்தில். உங்களுக்கே தெரிந்திருக்கும் என்ன சர்ச்சை என்று... தொன்று தொட்டு இருந்துவரும் எழுத்து மூலமான கற்பித்தலை விடுத்து, சொல்மூலமான கற்பித்தலால் எழுத்துவடிவங்கள் அழியாதா? என்கிற கேள்விதான் அலெக்ஸாண்டரிடம் இருந்து எழுந்தது. சிவா பிள்ளை என்ன பதில் சொன்னார்? இந்த விஷயத்தில் என்னுடைய கருத்து என்ன? இதுபற்றி அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

2 comments:

vasu balaji said...

இங்கேயும் சீக்கிரம் இப்படி நிலமை வந்துடும். தொடருங்கள் கிருத்திகன்.

Unknown said...

தமிழ் இரண்டாம் மொழியாகக் கற்கும் நிலையா பாலா???