Saturday 11 July 2009

எழுதாத விதிகள் (எழுதுபவர்களுக்கு மட்டும்)


சுஜாதாவின் 'ரத்தம் ஒரே நிறம்' நாவலின் நாலாவது பதிப்புக்கு எழுதியிருந்த முன்னுரை எனக்குப் பிடித்திருந்தது. 18.12.2005 ல் அவர் எழுதிய யதார்த்தம், அங்கதம் எல்லாம் கலந்த அந்த முன்னுரையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். நாவல் கூட நல்லாயிருக்கும். சிப்பாய்க் கலகத்தில் ஒரு தமிழன் கலந்து கொண்டால் எப்படியிருக்கும் என்ற கற்பனைக் கதை அது. சில பல நிஜத் தகவல்களையும் கலந்து உண்மைக்கதை போலச் சொல்லியிருப்பார். சமீபத்தில் இரண்டாம் முறையும் வாசித்தேன். அப்போது கண்ணில் பட்டதுதான் இந்த முன்னுரை.

நான் இதுவரை இரண்டு சரித்திர நாவல்களை எழுதியிருக்கிறேன். ‘ரத்தம் ஒரே நிறம்’, ‘கந்தளூர் வசந்தகுமாரன் கதை’. ‘ரத்தம் ஒரே நிறம்’ கதைக்கே ஒரு சிறிய சரித்திரம் உண்டு. முதலில் அது ‘கறுப்பு சிவப்பு வெளுப்பு’ என்ற தலைப்பில் குமுதத்தில் தொடர்கதையாக அட்டகாசமாகத் துவங்கியது, மணியம் செல்வனின் அழகான சித்திரங்களுடன். மூன்று வாரங்கள் சிறப்பாக வந்த பின் எதிர்பாராத ஓர் எதிர்ப்பு அதற்கு நாடார் இனத்தவரிடமிருந்து வந்தது. நான் அப்போது பெங்களூரில் இருந்தேன். எனக்கு ஏகப்பட்ட மிரட்டல் கடிதங்கள் வந்தன. தமிழில் புதுப்புது திட்டுவார்த்தைகள் எல்லாம் எனக்கு பாடமாயின. தொலைபேசியில் கொலை பேசினார்கள். குமுதம் இதழைக் கடையில் எரித்தார்கள். அதன் ஆசிரியருக்கு நாடார் சங்கத்தைச் சார்ந்தவர்கள் கதையை உடனே நிறுத்தும்படியும் மன்னிப்புக் கேட்கும்படியும் வற்புறுத்தினார்கள்.

ஆசிரியர் ஏ.எஸ்.பி. எனக்கு போன் போட்டு ‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார். நான் ‘ஓர் இனத்தின் மனத்தைப் புண்படுத்திவிட்டதாகத் தெரிகிறது. அவர்களின் தற்போதைய கோபத்தில் கதையின் நோக்கம் அதுவல்ல, அடுத்துவரும் அத்தியாயங்களைப் படித்தால் தெரியும் என்று என்னதான் விவாதித்தாலும் உணர்ச்சிபொங்கும் இந்தக் கணத்தில் யாரும் ஒத்துக்கொள்ளப் போவதில்லை. மேலும் தொடர்ந்து எழுதினால் என் வலது கையை வெட்டுவேன் என்று சொல்லியிருக்கிறார்கள். எனக்கு இடது கையால் எழுதவேறு பழகவேண்டும். நிறுத்திவிடுங்கள். அடம்பிடித்து மரணத்துடன் விளையாட இது ஒன்றும் பிரெஞ்சுப் புரட்சி அல்ல’ என்றேன். கதை நிறுத்தப்பட்டது.

ஆசிரியர் ஏ.எஸ்.பி ஆறுமாதம் கழித்து கோபம் அடங்கியதும் இதே கதையை தலைப்பை மாற்றி வெளியிடலாம் என்றார். ‘கருப்பு சிவப்பு வெளுப்பு’ அதேபோல் ஆற அமர ‘ரத்தம் ஒரே நிறமாக’ வெளிவந்தது. சிப்பாய்க்கலகத்தைப் பற்றிப்படித்தபின் அதில் ஒரு தமிழன் கலந்துகொண்டால் எப்படி இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்த்த கதை இது.

இப்போது இதைப்படிக்கும்போது எதற்காக இதை எதிர்த்தார்கள் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதை மறுபடி கிளற எனக்கு இஷ்டமில்லை. ஆனால் இந்த சம்பவத்தில் எனக்குப் பல விஷயங்கள் புலனாயின. தமிழ் சமூகத்தில் சில கதைகளை சிலர்தான் எழுதலாம் என்ற எழுதப்படாத ஓர் விதி இருக்கிறது. அதை மீறினதால் வந்த வினை என்பது இப்போது புரிகிறது. எழுத்தின் மேல் பிடிவாதம் இருப்பதோ, எழுதினது வேதவாக்கு, அதை யாராவது வழிமறித்தால் உயிருள்ளவரை போராடுவேன் என்பதெல்லாம் விஞ்ஞானச் சூழ்நிலையில் வளர்ந்த எனக்கு சிறுபிள்ளைத்தனம்.

எல்லாப் போராட்டங்களும் அலுத்துவிடுகின்றன. புதிய காரணங்கள் தேடப்படுகின்றன. ‘ரத்தம் ஒரே நிறம்’ மீண்டும் வந்தபோது முதலில் அதை எதிர்த்தவர்கள் யாருமே அதைக் கண்டுகொள்ளவில்லை. இந்தப் புதியபதிப்பை சிறப்பாக வெளியிடும் உயிர்மை பதிப்பகத்தார்க்கு என் நன்றிகள்.

-சுஜாதா (18.12.2005)

2 comments:

ஆ.ஞானசேகரன் said...

//இந்தப் புதியபதிப்பை சிறப்பாக வெளியிடும் உயிர்மை பதிப்பகத்தார்க்கு என் நன்றிகள்.//

நல்ல பகிர்வு வாழ்த்துகள்

Unknown said...

ஆ.ஞானசேகரன் அண்ணா... அது சுஜாதாவே உயிர்மை பதிப்பகத்தார்க்குச் சொன்ன நன்றி... நீல நிற எழுத்துக்கள் சுஜாதாவுடையவை