Wednesday 17 June 2009

என்று திருந்துவோம்?

வருகின்ற வெள்ளிக்கிழமை கல்லூரியில் பட்டமளிப்பு விழா. பங்கேற்பதில் பெரியளவு ஆர்வம் எனக்கில்லை, இருந்தும் செலவு செய்து படிக்கவைத்த அக்கா ஆசைப்பட்டதால் கலந்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். தலையில் கத்தரி அல்லது முடிவெட்டும் இயந்திரம் (என் கேஸில் இரண்டாவது) பட்டு கிட்டத்தட்ட மூன்று மூன்றரை மாதங்கள் ஓடிவிட்டதால் தலை காக்கைக் கூடுபோல் எனக்கே அசிங்கமாக இருந்தது. சரி, முடிவெட்டலாம் என்று புறப்பட்டேன். சிகை திருத்த சென்ற இடத்தில் ஒரு அனுபவம். துரதிர்ஷ்ட வசமாக, கசப்பான அனுபவம். எம்மவர் மனதில் சாதி வெறி மிக ஆழமாக வேரூன்றி விட்டது என்று மீண்டும் ஒரு உயர்சாதி மனிதன் (பகுத்தறிவின்படி பார்த்தால் அவன் இழிசாதி.. வர்ணாசிரமப் படி அவன் அந்தணன் என்பதால் உயர்சாதி) குத்திக்காட்டினான்.

முடி திருத்துவதற்கு நான் இங்கே இரண்டு சிகையலங்கார நிலையங்களைத் தெரிவு செய்து வைத்திருக்கிறேன். ஒன்று பெண்டிக்ட் பாக்கியநாதன் என்பவர் நடத்தும் ‘மில்லர் சலூன்'. அங்கே முதலாளி தொழிலாளி எல்லாமே பாக்கியநாதன் ஒருவர்தான். மிகவும் பரபரப்பான ஒரு கடைத்தொகுதியில் (Plaza) இடத்தில் அவரது சலூன் இருக்கிறது. பழைய எம். ஜி. ஆர் பாடல்கள் ஒலிக்க எங்களுக்கு என்ன மாதிரி வெட்டிவிட வேண்டும் என்று கேட்டு பாக்கியநாதன் முடி திருத்தும் அனுபவம் ஒரு சுகானுபவம். வார நாட்களில் பாக்கியநாதனைப் பிடிப்பது கொஞ்சம் கடினம். வாடிக்கையாளர்கள் வருவதில்லை என்பதால் மூடிவிட்டு சென்று விடுவார். பாக்கியநாதன் கிடைக்காத நாட்களில் எனது தேர்வு ‘டயனா ப்யூட்டி சலூன்'. இது கனடாவின் ஸ்காபுரோ நகர் வாழ் தமிழ் மக்களின் மத்தியில் மிகவும் புகழ் பெற்ற சிகைதிருத்தும் நிலையம். வர்ணாசிரம் தர்மத்தை மீறி தன் குலத்தொழில் முடி திருத்துவது இல்லாமல் இருந்த போதும், தன் சொந்தக் காலில் நிற்பதற்காக தமிழ் இளைஞன் ஒருவன் ஆரம்பித்த சலூன் இது. எல்லா நேரமும் 6 பேர் ஆண்களுக்கும், இருவர் பெண்களுக்கும் முடி வெட்டுவதற்குத் தயாராய் இருப்பார்கள் (பெண்களுக்கென தனிப் பகுதி). இப்போது ஊரில் முடிதிருத்துவதை குலத்தொழிலாகக் கொண்ட, அல்லது வேறு குலத்தொழில் இருந்தும் முடிதிருத்தும் கலை தெரிந்த 10-12 பேர் அங்கே வேலை செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். நம்மவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், மற்ற சமூகத்தினரிடமும் (வெள்ளைக்காரர்கள், கறுப்பின மக்கள், இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள்) புகழ் பெற்ற இவர்களிடம் எப்போதும் கூட்டம் இருக்கும், வார நாட்களில் மதியம் தவிர. நான் தங்கியிருக்கும் இடத்திலிருந்து இவர்கள் தான் மிக அருகில் இருக்கிறார்கள். இங்கே பணி செய்யும் நண்பர்கள் பாக்கியநாதனை விட கொஞ்சம் அழகுணர்ச்சி கூடியவர்கள். இப்படிப்பட்ட காரணங்களால் இன்று (ஜூன் 17, 2009) முடி வெட்டிக் கொள்ள டயானா சலூனைத் தெரிவு செய்தேன்.

வழமை போல ‘வாங்கோ' (இது ஐயராத்து வாங்கோ அல்ல, யாழ்ப்பாண வாங்கோ) என்று சொல்லி ஒரு நண்பர் என்னை நிலைக் கண்ணாடிக்குமுன் அழைத்துச் சென்று நாற்காலியில் அமர வைத்தார். பெரிதாகக் கூட்டமில்லை. 3 பேர் மட்டும்தான் முடிதிருத்த வந்திருந்தார்கள். இருவருக்கு முடியும் நிலை. நான் நாலாமவன். என் தலையில் தன் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்தார் நண்பர். அப்போ புதிதாக் ஒருவர் நுழைந்தார். முடிதிருத்தும் 6 நண்பர்களில் சும்மா நின்ற நண்பர்கள் உட்பட எல்லோரும் 'வாங்கோ ஐயா' என்று வரவேற்றார்கள். கண்ணாடியில் பார்த்தேன். ஒரு ஐயர் முடிதிருத்த வந்திருந்தார். அவரையும் ஒரு கண்ணாடி முன் இருத்தி முடிதிருத்த ஆரம்பித்தார் ஒரு நண்பர். இந்த நண்பர்களில் ஒரு நல்ல பழக்கம். முடிதிருத்தும் போது, வாடிக்கையாளருடனோ, சக வேலைபார்ப்பவருடனோ நகைச்சுவையாகப் பேசிக் கொண்டுதான் வேலை செய்வார்கள். முடிதிருத்த வந்தோம் என்பதைவிட ஒரு நண்பனுடன் பேச வந்தது போன்ற ஒரு உணர்வைத் தருவதில் கெட்டிக்காரர்கள். அப்படித்தான் அந்த ஐயருடனும் அவர்கள் பேச ஆரம்பித்தார்கள்.

ஐயர் வலு கில்லாடி. கனடா வந்து 17 வருடம் ஆகிவிட்டதாம். அவர் பல கடைத் தொகுதிகளில் முதலீடு செய்திருக்கிறாராம். அதாவது கடைத் தொகுதிகளில் ஒரு சிறிய கடையை வாங்கி அவற்றை வாடகைக்கு விட்டு நன்றாகச் சம்பாதிக்கிறார். இபோதும் எங்கோ ஒரு கடைத்தொகுதியின் ஒரு சிறிய Unit விற்பனைக்கு வருவதாயும் அதை வாங்கி வாடகைக்கு விடவிருப்பதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார். கனடாவில் பல ஐயர்கள் ஊரிலுள்ள கோயில்களின் பெயரில் கடைத்தொகுதிகளில் கோவில்கள் வைத்திருப்பது பற்றிப் பேச்சு திரும்பியது. ஆகம விதிகளின் படி அது பிழை அப்படி இப்படி ஏதாவது சொல்லி வாதிட்டிருக்க வேண்டிய ஐயர், ஒரு வார்த்தைவிட்டார் பாருங்கள், உற்சாகமாகப் பேசிக்கொண்டு முடிதிருத்திக் கொண்டிருந்த ஆறு நண்பர்களும் பேச்சை நிறுத்தியே விட்டனர். பலசரக்குக் கடைகள், மதுபானக் கடைகள், மாமிசக் கடைகள், சாப்பாட்டுக்கடைகள் இப்படி எத்தனையோ கடைகள் இருக்கும் கடைத் தொகுதிகளில் கோயில்கள் இருக்கக்கூடாது என்றாவது சொல்லியிருக்கலாம். அதை எல்லாம் விடுத்து ஐயர் சொன்னார்: ‘அடேயப்பா, உங்கட அம்பட்டக் கடைகளையும் பிளாசாவளுக்கை வச்சிருக்கேக்கை, அதுவளுக்கை கோயில் இருக்கக் கூடாதடாப்பா'.

ஒரு கணம் எனக்கே உடம்பில் மயிர்க்கால்கள் குத்தி நின்றன. என்ன வார்த்தை சொல்லிவிட்டாய் முட்டாளே என்று மனம் ஓலமிட்டது. கண்ணாடியில் பார்த்தேன். அந்த நிலையத்து நண்பர்கள் முகம் கறுத்திருந்தது. பேச்சு நின்று போயிருந்தது. எனக்கு முடிதிருத்துபவர் முகத்தை கண்ணாடியில் பார்த்தேன். என்பார்வையும் அவர் பார்வையும் சந்தித்தபோது அந்தக் கண்ணில் வலி தெரிந்தது. ஐயரைத் திரும்பி முறைத்தோம். அது பற்றிச் சட்டை செய்யாமல் ஐயர் தந்து அழகை நிலைக் கண்ணாடியில் ரசித்துக் கொண்டிருந்தார். கோபத்தில் ‘எழும்பி வெளியே போடா நாயே' என்று யாராவது சொல்வார்களா என்று எதிர்பார்த்தேன். அவ்வளவு அநாகரிகமாக நடந்து கொள்ளவில்லை அந்த நண்பர்கள். எனக்கு சரி நேரே பின்னால் முடிதிருத்திக் கொண்டிருந்த நண்பர் எனக்கு முடிதிருத்திய நண்பரை மெதுவாகக் கூப்பிட்டார். ஏதோ குசு குசுத்துவிட்டு அவர் தன் வேலையைத் தொடர இவர் என் தலையில் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். ஐயரின் வாய் அவர்களை காயப்படுத்தியது மட்டும் நிஜம். ஆனால் இவர்களின் அமைதி என்னை ஆச்சரியப்படுத்தியது.

அப்போது பின்னால் முடிதிருத்திக்கொண்டிருந்த நண்பர் கடையின் பின்பகுதிக்குச் சென்றார். சென்றதும் எனக்கு முடிதிருத்தும் நண்பருக்கு செல்லில் ஒரு அழைப்பு வந்தது. செல்லை எடுத்த நண்பர் ஆரம்பித்தார் பாருங்கள் ‘அண்ணை, எந்த ஊர் நீங்கள்.. ஆ, உங்களுக்கு ஒரு பப்ளிக் பிளேசில் என்ன கதைக்கிறது என்று தெரியாதே. இனிமேல் இப்பிடிக் கதைக்காதீங்க' என்று கத்திவிட்டு ஓய்ந்தார். அவரின் முகத்தின் கண்ணாடி விம்பத்தில் வெளிவந்த அனல் பயமுறுத்தியது. அதுவரை தன் சுய புராணத்தைச் சொல்லிக் கொண்டிருந்த ஐயரின் முகத்தில் ஈயாடவில்லை. மெதுவாக முடிதிருத்துவது போல் என் காதில் சொன்னார் அந்த நண்பர் ‘எங்களுக்கு வேற வழி தெரியேல தம்பி ஐயரைத் திட்ட'. ஆம், கடையின் பின்புறம் போன நண்பர் இவருக்கு ஃபோன் செய்ய அவரைத் திட்டுவது போல் ஐயரைக் காய்ச்சி எடுத்துவிட்டார் அந்த நண்பர். முடி திருத்தியதற்குரிய காசை அவரிடம் கொடுத்துவிட்டு வெளியே வரும்போது மெதுவாக ஐயரைப் பார்த்தேன். ஏ.சி குளிரிலும் வேர்த்திருந்தார்.

இதில் இரண்டு விஷயங்கள் என்னைப் பாதித்தன. குலத்தொழில்கள் என்று சில தொழில்களை ஒதுக்கி, அந்தக் குலத்தவரைக் காலுக்குள் மிதிக்கும் அந்தப் பழக்கம் ஒரு முன்னேறிய மேலை நாட்டில் தொடர்வது ஒன்று. இன்னொன்று கோபத்தைக்கூட நேரடியாக வெளிப்படுத்த முடியாமல் அடக்கப்பட்டிருக்கும் அந்த மனிதர்களின் அவலம். இதை நினைக்கும் போது 2001ல் இலங்கையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடந்த காலத்தில் யாழ்ப்பாணத்திலும், மொத்த காலமும் வன்னியிலும் புலிகள் நாவிதர்கள் வீடுகளுக்குச் சென்று சேவை செய்யும் கலாசாரத்தை (கிட்டத்தட்ட ஒரு ஆண்டான் அடிமை கலாசாரம்) தடை செய்திருந்தது நினைவுக்கு வந்தது. முடிவெட்ட, மொட்டை போட, சவரம் செய்ய என்று குறிப்பிட்ட தொகைகளை 'முடிதிருத்துவோர் சங்கம்' மூலம் முடிவு செய்து, சலூன்களை எல்லோரும் தேடிப்போக வைத்தார்கள். எல்லா அத்தியாவசியமான சேவைகளுக்குக் கிடைக்கும் அதே கௌரவத்தை முடிதிருத்துவோருக்கும், சலவைத்தொழிலாளிகளுக்கும் பெற்றுத் தந்தார்கள். சமரசம் இல்லாத சமதர்ம சமூகம் அமைக்க முற்பட்ட அந்த நல்லரசு இன்று கனவாய் போய்விட்டது. கூடவே இந்த சமூக அவலங்களுக்கெல்லாம் மிகவிரைவில் தீர்வு வரும் என்று எண்ணியிருந்த இந்த ஒடுக்கப்பட்ட ஜீவன்களின் நம்பிக்கையும்தான்.

பி.கு: யாழ்ப்பாண சமூக அமைப்பில் சாதீயம், அதற்கெதிரான புலிகளின் நடவடிக்கைகள் பற்றிய என் நினைவுகளை வருங்காலத்தில் பகிர்ந்து கொள்வேன். நான் கூட ஒரு காலத்தில் சாதீயம் பேசியவன். ஆனால் என் பள்ளிக்கால சம்பவங்கள் சாதீயத்தின் மீது அசாத்திய வெறுப்பை ஏற்படுத்தின. அவைபற்றியும் பகிர்ந்து கொள்வேன்.

14 comments:

Unknown said...

//இதில் இரண்டு விஷயங்கள் என்னைப் பாதித்தன. குலத்தொழில்கள் என்று சில தொழில்களை ஒதுக்கி, அந்தக் குலத்தவரைக் காலுக்குள் மிதிக்கும் அந்தப் பழக்கம் ஒரு முன்னேறிய மேலை நாட்டில் தொடர்வது ஒன்று. இன்னொன்று கோபத்தைக்கூட நேரடியாக வெளிப்படுத்த முடியாமல் அடக்கப்பட்டிருக்கும் அந்த மனிதர்களின் அவலம்.//

இதுதான் உண்மை..........
இளைய சமுதாயம்(நாம்) தான் இதை மாற்றவேண்டும்.
கண்டிப்பாக மாற்றுவோம்.

குடுகுடுப்பை said...

நல்ல பதிவு நண்பரே

ஆபிரகாம் said...

எங்கள் கனவுகள் எல்லாம் கனவுகளாகியேவிட்டன! சமாதன காலத்தில் நிகழ்ந்த அந்த அரிய மாற்றங்கள் சமூகத்தில் மிகுந்தவரவேற்பினை பெற்றதோடு,சாதியத்தின் வேற்றுமைகளையும் வேகுவகவே குறைத்தன,குறிப்பாக கலப்புதிருமணங்கள். பல் சாதியினரும் கலந்து வாழ்ந்த எங்கள் கிராமத்தினைல் சாதியத்தின் வீரியம் அவ்வளாவாக இருக்கவில்லை ஒருவேளை அதனை எல்லாம் விட எங்க்கள் இனைப்பிரச்சினை முக்கியமானதாக இருந்திருக்கலாம்!
நல்ல பகிர்வு!
பதிவு கொஞ்சம் நீண்டுவிட்டது இரு பதிவுகளாக இட்டிருக்கலாம்!

Unknown said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி என் பக்கம் மற்றும் குடுகுடுப்பை.

ஆபிரகாம்:
முடிவெட்டி வந்ததும் தலைக்குக் குளிக்காமல் எழுதிய பதிவு அது. அதனால் கொஞ்சம் நீண்டுவிட்டது. உணர்ச்சிக் குவியல்களை நான் சுருக்குவதில்லை. (என் எல்லாப் பதிவுகளும் அப்படியே). இனப்பிரச்சனை காலத்திலும் சாதீயத்தின் வீரியத்தையும் குறைத்த ஒரு முன்னுதாரண சமுகத்திலும் இப்படி இன்னும் பல புல்லுருவிகள் இருக்கிறார்கள் என்பதுதான் வலிக்கிறது

Anonymous said...

அவங்களிட்ட ஊ..... போறவங்களுக்கு பரிசு கொடுத்தாச் சரி.

Unknown said...

புரியவில்லை புகழினி... நீங்க சொன்ன ஊ... வும் நான் யூகித்த ஊ...வும் ஒன்றென்றால்... நீங்களும் கடுப்படைந்திருப்பது தெரிகிறது. அப்புறம் உங்கள் பதிவுகள் பார்த்தேன். அனல் பறக்கிறது.. தொடரட்டும்

பனையூரான் said...

//சமாதானப் பேச்சுவார்த்தை நடந்த காலத்தில் யாழ்ப்பாணத்திலும், மொத்த காலமும் வன்னியிலும் புலிகள் நாவிதர்கள் வீடுகளுக்குச் சென்று சேவை செய்யும் கலாசாரத்தை (கிட்டத்தட்ட ஒரு ஆண்டான் அடிமை கலாசாரம்) தடை செய்திருந்தது //

உங்கள் ஆக்கங்கள் தொடரட்டும் நண்பா

Unknown said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பனையூரான்

தீப்பெட்டி said...

நல்ல பதிவு..

//யாழ்ப்பாண சமூக அமைப்பில் சாதீயம், அதற்கெதிரான புலிகளின் நடவடிக்கைகள் பற்றிய என் நினைவுகளை வருங்காலத்தில் பகிர்ந்து கொள்வேன்//

பயனுள்ளதாய் இருக்கும்..

Unknown said...

நன்றி தீப்பெட்டி

DJ said...

தொடர்ச்சியாக இவ்வாறான விடயங்களை அம்பலத்துங்கள்.

டவுட்டுக் கணெஷன் said...

ஓரளவு அடங்கிக் கிடந்த சாதியம் மீண்டும் துளிர் விட போகிறது நண்பரே ... கேட்க ஆள் இல்லாத துணிவில்

Unknown said...

உண்மைதான் டவுட்டு

Anonymous said...

//2001ல் இலங்கையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடந்த காலத்தில் யாழ்ப்பாணத்திலும், மொத்த காலமும் வன்னியிலும் புலிகள் நாவிதர்கள் வீடுகளுக்குச் சென்று சேவை செய்யும் கலாசாரத்தை (கிட்டத்தட்ட ஒரு ஆண்டான் அடிமை கலாசாரம்) தடை செய்திருந்தது நினைவுக்கு வந்தது. முடிவெட்ட, மொட்டை போட, சவரம் செய்ய என்று குறிப்பிட்ட தொகைகளை 'முடிதிருத்துவோர் சங்கம்' மூலம் முடிவு செய்து, சலூன்களை எல்லோரும் தேடிப்போக வைத்தார்கள். எல்லா அத்தியாவசியமான சேவைகளுக்குக் கிடைக்கும் அதே கௌரவத்தை முடிதிருத்துவோருக்கும், சலவைத்தொழிலாளிகளுக்கும் பெற்றுத் தந்தார்கள். சமரசம் இல்லாத சமதர்ம சமூகம் அமைக்க முற்பட்ட அந்த நல்லரசு இன்று கனவாய் போய்விட்டது. கூடவே இந்த சமூக அவலங்களுக்கெல்லாம் மிகவிரைவில் தீர்வு வரும் என்று எண்ணியிருந்த இந்த ஒடுக்கப்பட்ட ஜீவன்களின் நம்பிக்கையும்தான்.//

பரவாயில்லை. உண்மையை உணர்ந்ததுக்கு