Saturday 14 November 2009

நான் பார்க்கும் உலகம்: நவம்பர் 08-நவம்பர் 14 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

அரசியல்-பிறந்தகம்
ஒரு மாதிரிக் கத்தரிக்காய் சந்தைக்கு வந்துவிட்டது. சரத் பொன்சேகா ராஜினாமா செய்துவிட்டார். உடனடியாக அதை ராஜபக்ச ஏற்றுக்கொண்டும் விட்டார். இப்போது ஒருவரை ஒருவர் அறிக்கைகளால் தாக்கிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். கொஞ்ச நாளைக்கு முன்னர் உடன்பிறவா சகோதரர்கள் போல் திரிந்தவர்களை வெற்றி தந்த போதை எப்படி மாற்றியிருக்கிறது பாருங்கள். ராஜபக்ச தரப்பு பொன்சேகாவை துரோகியாகச் சித்தரிக்க முயல்கிறது. தான் நாட்டுக்குச் செய்த 'பங்களிப்பை' (வேறென்ன, ஆயிரக்கணக்கான படுகொலைகள்) மறந்து தன்னைத் துரோகி என்று வர்ணிக்கிறார்கள் என பொன்சேகா புலம்பியிருக்கிறார். 'ராணுவப் புரட்சி நடத்துவேன் என்று பயந்தே தன்னை ஜனாதிபதி பணிமாற்றம் செய்தார்' என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார். நாளைக்கே இவ்வளவு நாளும் தலைவராக இருந்த எனக்கு எந்த முக்கியத்துவமும் தருகிறார்களில்லை என்று ரணில் விக்கிரமசிங்கே ராஜபக்சவுடன் சேர்ந்தாலும் ஆச்சரியமில்லை.

போரில் கிடைக்கிற வெற்றிகள் தரும் போதையும், பதவி ஆசையும் இப்படித்தான் கேவலமாகத் தங்களுக்குள்ளே அடிபிடி வரவைத்துவிடும். இலங்கையில் நிலமை தலைகீழாக இருந்திருந்தால்கூட இப்படி இன்னொரு கூட்டம் அடிபட்டுக்கொண்டு இருந்திருக்கும். மக்களின் நலன்களைவிட தம் நலன்களைப் பெரிதாகக் கருதும் தலைவர்கள் வாழ்கிற ஒரு காலகட்டத்தில் நாங்கள் வாழ்கிறோம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்கள் ‘அறசரும்' ‘தலபதி'யும்.

அரசியல்-புகுந்தகம்
'நானோஸ் ரிசேர்ச்' (Nanos Research) என்ற நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்று பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தலமையிலான ஆளும் கொன்செர்வேற்றிவ் கட்சிக்கு பெரிய சந்தோசத்தைக் கொடுத்திருக்கிறது. கனடாவில் வாக்களிக்க விரும்பும் மக்களில் 38% பேர் தாங்கள் கொன்செர்வேற்றிவ் கட்சிக்கு ஆதரவாகவும், 29% பேர் பிரதான எதிர்க்கட்சியான லிபரல் கட்சிக்கு ஆதரவாகவும் வாக்களிப்போம் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். ப்ளொக் கியூபெக் கட்சிக்கு வெறும் 9% மக்களும், புதிய ஜனநாயகக் கட்சிக்கு 18% மக்களும், பசுமைக் கட்சிக்கு 5% மக்களும் ஆதரவளித்திருக்கிறார்கள். சென்ற மாதம் லிபரல் கட்சி கொண்டுவர இருந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திலிருந்து எதிர்க்கட்சிகளிடம் இருந்த ஒற்றுமையின்மையால் தப்பிப்பிழைத்த ஹார்ப்பர் அரசாங்கத்துக்கு இந்தச் செய்தி மிகவும் மகிழ்ச்சியானது என்பதை மறுக்கமுடியாது.

அரசியல்-உலகம்
அமெரிக்காவின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் முதன் முதலாக சீனாவுக்கு விஜயம் செய்திருக்கிறார் பராக் ஒபாமா. ஆசிய நாடுகளுக்கு அவர் மேற்கொண்டிருக்கும் எட்டு நாள் உத்தியோகபூர்வச் சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாகவே இந்த விஜயம் இடம் பெற இருக்கிறது. ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்க-சீன உறவுகள் மென்மேலும் மேம்பட்டிருப்பதாக இரு நாட்டு ஊடகங்களும் மாறிமாறி ஊதிக்கொண்டிருக்கின்றன. ஒபாமாவுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்ரன், வணிக அமைச்சர் காரி லொக் ஆகியோரும் சீனா செல்லவிருக்கிறார்கள்.
இதே வேளை தலாய் லாமாவுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவை நிறுத்தவேண்டும் என அறிக்கைவிட்டு தன் பங்குக்கு பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது சீனா. இப்போதைக்கு சீனர்களைப் பகைக்கும் நிலையில் அமெரிக்கா என்ன, எந்த நாடுமே இல்லை என்பது மறுக்கமுடியாத உண்மை. விரைவில் அவர்கள் உலக பொலிஸ்காரனாக மாறினாலும் ஆச்சரியமில்லை.

வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்
i-Phone மீதான முதலாவது பாரதூரமான குற்றச்சாட்டி பிரான்ஸின் கான்ஸ் நகரில் இருந்து எழுந்திருக்கிறது. அந்நகரைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் i-Phone திரை பாவித்துக்கொண்டிருக்கும்போதே வெடித்ததை முன்னிட்டு, i-Phone களின் பாவனைப் பாதுகாப்புக் குறித்து பிரெஞ்சு நீதிமன்றில் அவ்வர்த்தகர் வழக்குத் தாக்கல் செய்திருக்கிறார். இது Apple நிறுவனத்தின் வடிவமைப்பில் உள்ள குறைபாடா இல்லையா என ஒரு பொதுவான நபர் அல்லது அமைப்புத் தனக்குக் கண்டறிந்து சொல்லவேண்டும் என தன்னுடைய வழக்கறிஞர் மூலமாக அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே இப்படியான திரை வெடிப்புகள் பற்றிய செய்திகள் அரசல்புரசலாக வந்தபோதும், பாவனையாளர் ஒருவர் சட்ட உதவியை நாடியிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதே வேளை, இது வடிவமைப்பில் உள்ள குறைபாடு இல்லை என்றும், ஏலவே மோசடி i-Phone களைச் சந்தைப்படுத்தப்பட்டிருப்பதாக காவற்துறையால் விசாரிக்கப்படும் சம்பவங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று Apple நிறுவனமும், i-Phone களை பிரான்சின் சந்தைப்படுத்தும் Bouygues நிறுவனமும் தெரிவித்திருக்கின்றன.

விளையாட்டு
அவுஸ்திரேலியா-இந்தியா ஒரு நாள் தொடரை அவுஸ்திரேலியா 4-2 என்ற கணக்கில் கைப்பற்றியிருக்கிறது. மும்பையில் நடந்த 7வது போட்டி மழையால் கைவிடப்பட முன்னரே, கௌகாத்திப் போட்டியில் அபார வெற்றி பெற்று அவுஸ்திரேலியா தொடரைக் கைப்பற்றியிருக்கிறது. 9 முக்கிய வீரர்கள் இல்லாமல் பெற்ற இந்த வெற்றி தன்னுடைய வாழ்நாளில் மிகப் பெரிய சந்தோஷங்களில் ஒன்று என்று ரிக்கி பொன்ரிங் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவுக்கு அடுத்த சோதனையாக இலங்கை அணி காத்திருக்கிறது. இதுவரை இந்திய மண்ணில் எந்த ஒரு டெஸ்ட் போட்டியையும் வெல்லாத இலங்கை அணிக்கு இந்த முறை நல்ல வாய்ப்பு இருப்பதாக நம்புகிறார்கள் வல்லுனர்கள். ஸ்ஹீர் கான் அணிக்கு மீண்டிருப்பது இந்தியாவுக்குத் தெம்பூட்டினாலும், ஸ்ரீசாந்தை அணிக்கு அழைத்ததைப் போல் ஒரு முட்டாள்தனம் இருக்க முடியுமா தெரியவில்லை.

நாளையோடு (15 நவம்பர் 2009) சர்வதேசக் கிரிக்கெட் விளையாடவந்து 20 ஆண்டுகள் ஆகிறது சச்சினுக்கு. 1989ல் ஆரம்பித்த சச்சினின் சாதனைப் பயணம் இன்றும் தொடர்வது உண்மையில் மகத்தான சாதனையே. அதுவும் 1990 களின் பின்னரான ஒரு நாள் கிரிக்கெட்டின் வளர்ச்சியால் ஒரு ஆண்டில் இன்றைய வீரர்கள் விளையாடும் கிரிக்கெட்டின் அளவை வைத்துப் பார்க்கும்போது, 20 ஆண்டுகள் வில்பிரெட் ரோட்ஸின் 31 ஆண்டுகளைவிடப் பெரிய சாதனையே.

சினிமா-பொழுதுபோக்கு
கரீனா கபூர் வெற்று முதுகோடு இருக்கும் ஒரு திரைப்பட விளம்பரத்துக்கு இன்னும் அதிகமாக எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் விளம்பரம் தேடித்தந்திருக்கிறார்கள் சிவசேனா கட்சியினர். எது சரி எது பிழை என்ற விவாதம் இப்போதைக்கு வேண்டாம், ஆனால் இப்போதெல்லாம் ஒரு படத்தை ஓடவைக்க மிக சுலபமான வழிமுறைகளைக் கையாள்கிறார்கள் படக் குழுவினர் என்று எனக்குத் தோன்றுகிறது. கலாசாரக் காவலர்களுக்கு உறுத்தும்படி ஏதாவது செய்தால் போதும், இலவச விளம்பரம் செய்து குப்பைப் படத்தையும் ஓடவைத்துவிடுவார்கள். (சயீஃப் அலிகான் வெற்று மார்போடு இருக்கிறார் அதே படத்தில். அது ஆபாசமில்லையாமா?)

இதைச் சொல்லாவிட்டால் தலையே வெடித்துவிடும். கமலின் ஐம்பதாவது ஆண்டுவிழா டி.வி.டி. கிடைத்துப் பார்த்தேன். விஜய் ரி.வி. இப்படியான நிகழ்ச்சிகளுக்கு லாயக்கில்லை எனத் திரும்பவும் நிரூபித்திருக்கிறார்கள். அதுவும் எஸ்.பி.பி.யும், ஹரிஹரனும் சேர்ந்து ஒரு அரைமணித்தியாலம் அறுத்தார்கள் பாருங்கள், இதுவரை ரசித்த சில கமல் பாடல்களை இனிமேல் கேட்கவே முடியாமல் செய்துவிட்டார்கள் (அதுவும் ஹரிஹரனின் முகபாவனை சொல்லவே தேவையில்லை. எப்போதாவது மலச்சிக்கலால் அவதிப்படும்போது எங்கள் குளியலறைக் கண்ணாடியில் பார்த்த என்னுடைய முகபாவங்கள் இதற்கு மேல்). இதெல்லாம் தேவையா கமல்?

அடப் பாவி........
George Bush Quotes என்று நண்பர் ஒருவர் ஒரு இணையப் பக்கம் அனுப்பியிருந்தார். அதில் ஒன்று என்னைக் கவர்ந்தது. பிரான்சின் பொருளாதாரம் சரிவில் இருப்பது பற்றி பிரித்தானியப் பிரதமர் ரொனி ப்ளேய்ரிடம் புஷ் உதிர்த்த தத்துவ முத்து இது.
‘The problem with the French is that they don't have a word for entrepreneur'.
இதிலென்ன பிரச்சினை என்கிறீர்களா? Entreprenuer என்கிற சொல்லே ஆங்கிலம் பிரெஞ்சிடம் கடன்வாங்கிய சொல்தான். ஹூம்.... இப்படியாகப்பட்ட ஒரு புத்திசாலி கொஞ்சக்காலம் உலகின் பிரதான தலைவராக விளங்கியிருக்கிறார். என்னத்தைச் சொல்ல

4 comments:

கானா பிரபா said...

நல்லா இருக்கு

Unknown said...

நன்றி பிரபா அண்ணா

தர்ஷன் said...

அருமையாக இருந்தது

Unknown said...

நன்றி தர்ஷன்