Showing posts with label தமிழனென்று சொல்லடா... Show all posts
Showing posts with label தமிழனென்று சொல்லடா... Show all posts

Thursday, 11 June 2009

தமிழனென்று சொல்லடா -3: ஈரோடு வெங்கட ராமசாமி (பெரியார்)


பதிவுக்குள் செல்ல முன்பு: தமிழனென்று சொல்லடா தொகுப்பின் முந்தைய அத்தியாயங்களைப் படிக்க இங்கே அழுத்தவும்.
தமிழர்களின் வரலாற்றில் நீங்காத இடம்பெற்ற தலைவர்கள், அறிஞர்கள் மற்றும் சம்பவங்கள் பற்றிய எளியேனின் தொகுப்பு.

1925ல் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிய பின்னர் பெரியார் சுயமரியாதைக் கோட்பாடுகளை மக்களிடையே பரப்புவதில் முழுமூச்சாக ஈடுபட்டார். ‘குடியரசு' பத்திரிகை மூலமும், ஆங்கிலப் பத்திரிகையான 'Revolt' மூலமும் உணர்ச்சியற்று ஜடங்களாய் வாழ்ந்த தமிழர்களுக்கு உணர்வூட்டப் போராடினார் பெரியார். 1929ல் உலகளாவிய ரீதியில் நிலவிய பொருளாதார நெருக்கடிக் காலகட்டத்தில், உலகளாவிய ரீதியில் அரசியல் சிந்தனையாளர்களிடம் உலகளாவிய கம்யூனிசத்துக்கு ஆதரவான் போக்கு தென்பட்டது. இந்தப் போக்கின் தாக்கம் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தையும் விட்டுவைக்கவில்லை. சுயமரியாதை இயக்கக் கோட்பாடுகளில் இடதுசாரிப் போக்கு மிகையாக இருந்தது. அதே சமயம் இயக்கத்தை அரசியல் ரீதியாக ஸ்திரப்படுத்த வேண்டிய தேவையும் பெரியாருக்கு இருந்தது. அதன் பொருட்டு பெரியார் உலக அரசியலை உற்று நோக்க ஆரம்பித்தார்.

உலக அரசியல் எப்படியெல்லாம் இயங்குகிறது என அறிய விரும்பிய பெரியார் பல நாடுகளுக்குச் சென்று வந்தார். அவர் முதலில் 1929 ல் மலேஷியா சென்று, அங்கே இருந்த தமிழர்கள் மத்தியில் சுயமரியாதை இயக்கம் பற்றி பிரசாரம் மேற்கொண்டார். அதன் பின் சிங்கப்பூர், ஜேர்மனி, எகிப்து, கிரேக்கம், ருஷ்யா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், துருக்கி, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்து அங்கேயிருந்த சமூக, அரசியல், பொருளாதாரக் கொள்கைகளை எல்லாம் அறிந்து இந்தியா திரும்பினார். அவருடைய இந்த வெளிநாட்டு விஜயங்கள் தான் சுயமரியாதை இயக்கத்தின் அரசியல் கொள்கைகள் வடிவம் பெற ஏதுவாயின. குறிப்பாக ருஷ்யாவில் அன்று நிலவிய கம்யூனிசக் கொள்கைகள் பெரியாரைப் பெரிதும் கவர்ந்தன. ஆனால் எல்லா நிறுவனங்களையுமே பொதுவுடமையாக்குவது என்ற கோட்பாட்டை மட்டும் அவரால் ஏற்றுக்கொள்ள கடினாமாயிருந்தது. தீவிர கம்யூனிஸ்டான சிங்காரவேலு செட்டியார் என்பவருடன் சேர்ந்து, சுயமரியாதைக் கொள்கைகளையும், சோஷலிசக் கொள்கைகளையும் கலந்து பெரியார் உருவாக்கிய கொள்கைகள் தான் தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கம் ஒரு அரசியல் இயக்கமாக வேரூன்ற முக்கிய காரணமானது.

பெரியார் தனது சுயமரியாதை இயக்கத்தை ஒரு கழகமாகப் பதிவு செய்தபோது பின்வரும் விடயங்களை இயக்கத்தின் கொள்கைகளாகக் கூறினார். அவற்றில் வருமாறு:
  • அரசியல் பற்றிய அறிவும் தகவல்களும் யாவர்க்கும் கிடைக்க வேண்டும்.
  • தேவையில்லாத சடங்குகள், சம்பிரதாயங்கள், மூடநம்பிக்கைகள் அழிக்கப்பட வேண்டும்.
  • பிறக்கும் குல அடிப்படையில் தொழில் செய்யும் முறை (வண்ணான் பிள்ளை வண்ணான்), சாதி, மதம், தீண்டாமை ஆகிய மனுசாத்திர அடிப்படையில் சமூகத்தில் காணப்படும் சமரசமின்மை களையப்பட வேண்டும்.
  • காரணமின்றி சமூகத்தில் நிலவும் ஆண்டான் - அடிமை முறை இல்லாமல் செய்யப்பட வேண்டும்.
  • தீண்டாமை இல்லாதொழிக்கப் பட்டு, சமூகத்தில் யாவரும் சமமாக வாழ வழி செய்ய வேண்டும்.
  • பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்பட வேண்டும்.
  • பால்ய விவாகங்கள் தடுக்கப் படவேண்டும். ஒரு சாராருக்கு மட்டும் சார்பான திருமணச் சட்டங்கள் புறக்கணிக்கப்பட வேண்டும். காதல் திருமணங்கள், கலப்புத்திருமணங்கள், விதவை மறுமணம் யாவற்றுக்கும் சமூக அங்கீகாரம் பெற்றுத்தர வேண்டும். இம்மணங்கள் சட்டரீதியாக பதிவு செய்யப்பட வேண்டும்.
  • அனாதைகளுக்கும், விதவைகளுக்கும் கல்வி நிலையங்கள் அமைத்து வாழ்வாதாரங்கள் வழங்க வேண்டும்.
பெரியாரின் அரசியல் வாழ்வில் அடுத்த கட்டம் இந்தி எதிர்ப்புப் போராட்டம். ராஜாஜி என்கிற சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி அன்றைய மதராஸின் முதல்வரான போது பாடசாலைகளில் இந்தியைக் கட்டாய பாடமாக்கும் சட்டமூலம் ஒன்றைக் கொண்டு வந்தார். இது தமிழ் ஆர்வலர்களிடையே பெரும் சலசலப்பைக் கிளப்பியது. ஜஸ்டிஸ் கட்சித்தலைவர் பன்னீர்செல்வம் அவர்களுடன் இணைந்து ‘தமிழ் நாடு தமிழர்களுக்கே' என்ற கோஷத்தை முன்வைத்து இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை நடாத்தினார் பெரியார். இந்தி ஆரியர்களால் திராவிட கலாசாரத்தை அளிக்க ஏவப்பட்ட ஆயுதம் என்று கருதினார் பெரியார். கட்டாய இந்திக்கல்வி தமிழர்கள் பன்னெடுங்காலம் போற்றிப் பாராட்டிய கலாசார விழுமியங்களை இல்லாதழித்துவிடும் என்று திடமாக நம்பினார் பெரியார். மேலும், ஏற்கனவே இளக்காரமாகப் பார்க்கப்படும் தென்னகத்தார் மேலும் அடிமைப்படுத்தப்படுவார்கள் என்பது அவரது வாதமாயிருந்தது. அதனால் பெரியார் மும்முரமாக இந்தி எதிர்ப்பை முன்னெடுக்க கட்சி பேதமின்றி பல தமிழ் ஆர்வலர்களும் அவருடன் இணைந்து பணியாற்றினர். பொறுக்க முடியாத ராஜாஜி அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி பலரைக் கைது செய்து இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் வீரியத்தைக் குறைத்தது. இந்த முதல் போராட்டம்தான் 1948, 1952, 1965 ஆகிய ஆண்டுகளில் நிகழ்ந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களுக்கெல்லாம் மூலம்.

இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பெரியாரோடு சேர்ந்து ஈடுபட்ட ஜஸ்டிஸ் கட்சியின் தலைவராய் பெரியார் சில காலம் பதவி வகித்தார். பிராமணரல்லாத மக்களுக்கு சமூக அந்தஸ்து பெற்றுத்தரவென ஆரம்பிக்கப்பட்ட ஜஸ்டிஸ் கட்சி இந்தி எதிர்ப்புப் போராட்டம் முடிகிற தறுவாயில் சற்றே பலமிழக்க ஆரம்பித்திருந்தது. சாதாரண மக்களிடம் பெரியளவு ஆதரவு இல்லாததுதான் அதற்குரிய காரணமாயிருந்தது. இதனால் 1939ல் இந்தி எதிர்ப்புக்காக சிறை சென்று வந்தபின் ஜஸ்டிஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அவரது தலைமைத்துவத்தில் கட்சி உருப்பட்ட போதும், சில படித்த ஜஸ்டிஸ் கட்சி உறுப்பினர்கள் அவரது தலைமையை பெருமளவில் ஆதரிக்க மறுத்தார்கள். ஜஸ்டிஸ் கட்சி பிளவுபட்டும் போனது. அது 1944ல் கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என்று மாற்றுவதாகப் பெரியார் அறிவித்தபோது நிகழ்ந்தது. அதுபற்றி அடுத்த ‘தமிழனென்று சொல்லடா...' பதிவில் பார்ப்போமா?

தமிழனென்று சொல்லடா-4