Tuesday, 7 July 2009

கொல்லாமல் கொன்றேன்

அப்போது பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். தங்கவேலுவின் கொட்டிலில் நடந்தது. அப்போது நிஜமாகவே சாதீயத்தின் வலி தெரியாது எனக்கு. அதன் முழு அர்த்தம் தெரியாது. எனக்கு முன்வந்த பெரியவர்கள் காட்டிய சாதீயப் பாதையில், தெளிவான பார்வையின்றி நான் நடந்துகொண்டிருந்த காலம். அப்போது நட்பில் இருக்கும் அன்பு காரணமாக நிகழ்ந்த ஒரு சம்பவத்தில் நான் ஒரு சில நண்பர்களை மோசமாகக் காயப்படுத்திவிட்டேன். அதிலும் ஆயுர்வேத டாக்டர் ஒருவனின் பையனின் மனதைக் குத்திக் கிழித்துவிட்டேன் என்று கூடச் சொல்லலாம். இப்போது அவன் எங்கே எப்படி இருக்கிறான் என்பதெல்லாம எனக்குத் தெரியாது. இருந்தும் ஒரு ஒப்புதல் வாகுமூலம் போல் அவனிடமும், என் செய்கையால் அன்று வலி அனுபவித்த அத்தனை பேரிடமும் நான் கேட்கப்போகும் பகிரங்க மன்னிப்பு இது.

நான் பிறந்தது, நினைவு மலர்களில் உயர் சைவ வேளாளர் என்று போட்டுக் கொள்ளும் வெள்ளாளர் குலத்தில். யாழ்ப்பாணச் சாதீயக் கட்டுமானத்தில் கிட்டத்தட்ட இவர்கள்தான் ஆதிக்கவாதிகள். இவர்களுக்குள்ளேயே பல உயர்வு தாழ்வுகள் உண்டு. சில வன்னிய வெள்ளாளர்கள் சாதாரண வெள்ளாளர்கள் வீட்டில் தண்ணீர்கூடக் குடிக்கமாட்டார்கள். யாழ்ப்பாணத்தில் உரிமைப் போராட்டங்களில் எல்லாம் தாங்கள்தான் முன்னின்றவர்கள் என்று பீற்றிக் கொள்வதும் இவர்களின் இன்னொரு இயல்பு. இவர்கள் வீட்டில் வேலை செய்யும் சாதி குறைந்த மக்களுக்குக் நீர் கொடுக்கும் குவளைகள் கூடத் தனியாக இருக்கும். எங்கள் வீட்டில் கூட அப்படிப்பட்ட குவளைகள் கிணத்தடியில் ஒரு மரக் கொப்பில் கட்டித் தூக்கப்பட்டிருக்கும். அப்பாவிடம் வேலை நிமித்தம் வந்த ஒருவர் தண்ணீர் கேட்க, வீட்டுக்குள் இருந்து ஒரு செம்பில் தண்ணீர் கொடுத்த காரணத்தால் என் மாமியிடம் நான் வாங்கிய திட்டுக்குக் காரணம் புரியவில்லை என்றாலும், சில பேருக்கு சில உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன என்பது மட்டும் புரிந்தது.

தீபாவளி, வருடப் பிறப்பு போன்ற நிகழ்வுகளுக்கு நாங்கள் போகும் நண்பர்களின் வீடுகள் கூடக் கட்டுப்பட்டிருந்தன. இதில் பெரிய பிரச்சனை என்னவென்றால், இவர்கள் குறிப்பிட்ட சில கீழ்சாதி நண்பர்களுடன் பழகுவதைத்தான் அனுமதிக்க மாட்டார்கள். வேறு சில சாதி நண்பர்களுடன் பழகலாமாம். இந்த நியாயம் எனக்கு அப்போது மட்டுமல்ல இப்போதும் புரியவில்லை. அதே போல் குறிப்பிட்ட வீடுகளில் மட்டும்தான் சாப்பிடலாம், குறிப்பிட்ட வீடுகளில் மட்டும்தான் தண்ணீர் குடிக்கலாம் என்றெல்லாம் பல பல அறிவுறுத்தல்கள். கிட்டத்தட்ட என்னோடு பழகிய பல நண்பர்களும் இப்படித்தான் வளர்க்கப்பட்டு இருந்தார்கள் என்பது வருத்தமான உண்மை. இப்படியாக வளர்ந்த காலப்பகுதியில்தான் அந்த சம்பவம் நடந்தது.

அப்போ நான் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். அந்த நண்பர்கள் குழாம் இமையாணன் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். அந்த ஊரில் வாழும் அனைவரும் குறித்த ஒரு சாதிதான் என்றமாதிரி ஒரு பிம்பம் இருந்தது. அந்த நண்பர்கள் ஒரு நாள் ரியூசனுக்கு நெல்லிக்காய் கொண்டு வந்தார்கள். தங்களுக்குள் பங்கிட்டவர்கள் என்னைப்பார்த்து ‘வேணுமா?' என்று என்னையும் கேட்டார்கள். நான் வாங்கத் தயாரானபோது ஸ்ரீகாந்தன் தடுத்தான். தனியே கூட்டிக்கொண்டு போய் 'டே, அவங்கள் அந்த சாதிடா... அவங்களிட்ட வாங்கித் தின்னாதே' என்றான். ஏதோ சாக்கு சொல்லி நெல்லிகாய்களைத் தவிர்த்தேன். அப்போதான் அந்த டாக்டர் மகன் நுழைந்தான். அவனுக்கும் நெல்லிக்காய் கொடுத்தார்கள். சாதிப்பிசாசு பிடித்திருந்ததல்லவா எனக்கு, ஸ்ரீகாந்தன் செய்ததை நானும் செய்தேன். இந்த டாக்டர் மகனைத் தனியே கூட்டிப்போய் ‘டே, நெல்லிக்காயை எறிடா, அவங்க அந்த சாதிடா' என்று சொல்லி நெல்லிக்காயை எறியவைத்தேன். அவன் என்னை பார்த்த பார்வையில் ஏதோ ஒரு வித்தியாசம். அடிபட்ட வலி தெரிந்தது போல் ஒரு உணர்வு.

திரும்பி வகுப்புக்கு வர, ஸ்ரீகாந்தன் தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்தான். நித்து பல்லைக் கடித்தவாறே ‘டே பண்ணாட... அவனும் அதே சாதிதாண்டா' என்றான் என்னிடம் ரகசியமாக. டாக்டர் மகனைத் திரும்பிப் பார்த்தேன். அவன் என்னைப் பார்க்கவில்லை. அவன் முகம் கறுத்திருந்தது. எனக்கு ஏதோ ஒரு முள் உறுத்த ஆரம்பித்தது. அதன் பிறகு அவனுக்கும் எனக்கும் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வந்து பேசாமல் விட்டுவிட்டோம். இன்று வரைக்கும், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஒரு வார்த்தை பேசிக்கொண்டதில்லை. அவனுக்குத் தெரியாது, சாதிப்பெயர் சொல்லி அவனைக் காயப்படுத்திய நாளிலிருந்தான சில தூங்காத இரவுகளும், வாசிப்புப் பழக்கமும் என்னை மாற்றிவிட்ட கதை. இருந்தும் ஏனோ அவனிடம் மன்னிப்புக் கேட்கவோ பேசவோ நான் துணியவில்லை. வரட்டுக் கௌரவமாகக் கூட இருக்கலாம்.

இதற்குப் பிறகு இரண்டு சம்பவங்கள் என்னை மிகவும் பாதித்தன. மூத்த விநாயகர் கோவிலில் ஒரு வைரவர் சந்நிதானம் கட்டினார்கள். எங்கள் கொலின்ஸ் விளையாட்டுக் கழக் உறுப்பினர்கள் ஒரு நாள் முழுவதும் பங்குபற்றி சீமெந்துக் கலைவையை சந்நிதானம் கட்டுமிடம் வரை கடத்திப் போக உதவினோம். அந்தக் கோவிலில் திருவிழாக்கள் கூட சாதிப்படி நடக்கும் (கரணவாய் நண்பர்களுக்குத் தெரியும்). அதை மறைப்பதற்காக வேட்டைத்திருவிழா இந்தக் குடும்பம், தேர் இவர்கள், தீர்த்தம் இவர்கள் என்று சப்பைக்கட்டு கட்டினாலும் அடி மன அழுக்கு பல்ருக்குத் தெரிந்தே இருந்தது. அப்படிப்பட்ட கோயிலின் சந்நிதானம் கட்டும்போது வரிசையாக நின்றி சீமெந்துக் கலவை தாங்கிய வாளிகளை பரிமாறிய நண்பர்கள் வரிசையில், இவர்கள் சொன்ன அத்தனை சாதிப்பிரிவு நண்பர்களும் கைகோர்த்து நின்றபோது, ஒரு இனம் புரியாத சந்தோஷம், கிட்டத்தட்ட ஒரு புரட்சி செய்துவிட்டது போல் ஒரு மிதப்பு இருந்தது. அப்போ ஆட்டோ ஓட்டும் ஒரு அண்ணா வந்து என்னை யாரென்று மற்றவர்களிடம் வினவினார். நான் பெரியளவில் மூத்தவிநாயகர் கோவில் பக்கம் செல்வதில்லை. விளையாட கொலின்ஸ் செல்வதோடு சரி. என்னை இன்னாருடைய மகன் என்று சொல்ல அவர் ஒரு வசனம் உதிர்த்தார்.. “அட, இஞ்ச பார் ஐயாண்ட பொடியனே இறங்கி வேலை செய்யிறான்' என்றார். (அப்பா வக்கீல் அதனால் அவரை ஐயா என்பார்கள்). அவருக்கு அது ஏதோ உலகமகா அதிசயமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், எனக்கு வலித்தது. தங்களில் ஒருவனாக என்னைப் பார்க்காமல் ஏதோ விசித்திர ஜந்து போல் அவரை விட வயதில் சிறிய என்னை அவர் பார்க்க வைத்த சாதீயத்தை சபித்தேன்.

இரண்டாவது சம்பவம் கனடாவில் நடந்தது. ஒரு பெண்மணி. அவர்களும் எங்கள் சாதிதான், ஆனால் ஏதோ வகையில் கொஞ்சம் உயர்ந்த வெள்ளாளர்கள். எங்கள் வீட்டில் சாப்பிட கொஞ்சம் பின்னடித்தார்கள். அக்கா போட்டுக் கொடுத்த தேநீரைக்கூட மறுத்தார்கள். இத்தனைக்கும் அவர்களின் கணவரும், எனது இன்னொரு அக்காவின் கணவரும் கூடப்பிறந்த சகோதரர்கள். அந்த இன்னொரு அக்கா டென்மார்க்கிலிருந்து வந்திருந்தார். அவரைப் பார்க்கவே இந்தப் பெண்மணி கணவருடன் வந்தார். சகஜமாகப் பேசிப் பழகினாலும் உணவுண்ண மட்டும் மறுத்தார்கள். கிட்டத்தட்ட இரவு 10 மணிவரை பேசிக் கொண்டிருந்துவிட்டுப் போகும் போது கணவரிடம் சொன்னார் ‘இஞ்சேரப்பா, இனிப்போய் சமைக்கேலாது... உதில பாபு கேட்டரிங்ல ஏதாவது வாங்குவமே ' என்றார். அவர் எங்கே உணவு வாங்கினார் என்பதெல்லாம் பிரச்சினை இல்லை. அந்த சாதீய வெறியால் விளைந்த வரட்டுக் கௌரவம் என்னைக் கொல்லாமல் கொன்றது, பத்தாம் வகுப்பில் டாக்டர் பையன் உட்பட அந்த நண்பர்களை நான் கொன்றது போலவே.

15 comments:

  1. innum jaffa sathi pathi kathaika vendam. athu sethu pooi niraya kaalam aakivitathu. ithai pesi perithan engal pooratamum malungadikka pattathu. irunththu unmai. ahtu kurainthu vittathu ippo. neengal mattr kulathai sollamal vittathu poola ungalathaiyum sollamal vittirukkalam. ithuvum oru saathi veri endu oru kalahtil oruhtan book eluthuvar. athuku sivathambi sir munurai eluthuvar.

    ReplyDelete
  2. வெண்காட்டான் அண்ணா,
    ஒரு வீட்டில ஒரு பூனை இருந்திச்சாம்...அது கண்ணை மூடிக்கொண்டு பாலைக் களவாகக் குடிச்சுதாம்.. குடிச்ச பூனை நினைச்சுதாம் தான் பால் குடிச்சதை ஒருத்தரும் பார்க்கேல்ல என்று...அப்படி இருக்கு யாழ்ப்பாணத்தில் சாதீயம் குறைந்துவிட்டதாக நீங்கள் சொன்ன கதை. மற்றது நான் எவரையும் தாழ்த்தியோ உயர்த்தியோ சொல்லவில்லை... எனக்கு சாதீயம் எப்படி ஊட்டப்பட்டது எனபதற்கு என் சாதியைக் குறித்துக்காட்டி எழுதவேண்டியிருந்தது.... யாரையாவது குற்றம் சொல்ல வேண்டும் மட்டம் தட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டும் பின்னூட்டம் போடவேண்டாம் நண்பரே... என் வலைப்பூவில் மட்டுமல்ல, நீங்கள் எல்லா வலைப்பூக்களிலுமே இதைத்தான் செய்கிறீர்கள்

    ReplyDelete
  3. கிருத்திகன்,

    உண்மையைச் சொல்லத் துணிந்ததிற்கு பாராட்டுக்கள்.

    இது பற்றிய ஈழத்து நண்பர் ஒருவரது பதிவு

    செத்துப்போகாத யாழ்ப்பாணச் சாதித்திமிர் - 1
    http://nettrayakaattru.blogspot.com/2009/03/1.html

    செத்துப்போகாத யாழ்ப்பாணச் சாதித்திமிர் - 2
    http://nettrayakaattru.blogspot.com/2009/03/blog-post_31.html

    ReplyDelete
  4. ல் தோன்றி, மண் தோன்றி காலத்திலேயே தமிழனை தோண்டியது நம் சாதி. இல்லையென்றால் நாம் தெரு தெருவாய் அலைகிறோம்??? இது போன்ற பதிவுகள் நிறைய வர வேண்டும். தமிழன் சாதியில்லாமல் பிறக்க வேண்டும்.

    //அவர்களும் எங்கள் சாதிதான், ஆனால் ஏதோ வகையில் கொஞ்சம் உயர்ந்த வெள்ளாளர்கள்.//

    வெளி நாடு போனாலாவது நம் சாதி புத்தி கொஞ்சம் குறையும் நினைத்திருந்தேன். கடவுளே இங்கேயுமா??

    முன்பு ஒற்றுமையின் அவசியத்தை நாங்கு மாடுகளையும் புலியையும் சொல்வார்கள். நண்பர் சொன்ன கதையை கேட்ட பிறகு இனி இலங்கை கதையை சொல்லலாம் போல இருக்கிறது.

    மனம் திறந்த பகிர்தலுக்கு நன்றி நண்பரே. இப்போது கொஞ்சம் சுமை குறைந்திருக்கும் என நினைக்கிறேன்.

    உங்கள் வலைப்பக்கத்தில் என்னால் பின்னூட்டம் இடமுடியவில்லை.சாரி.

    ReplyDelete
  5. என்ன சொல்ல?
    தவறை தவறென ஒத்துக் கொள்ளும் மனம் எல்லாருக்கும் வராது. உங்களுக்கு வந்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  6. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி ஜோதி மற்றும் விக்னேஷ்வரி

    ReplyDelete
  7. நண்பரே நான் உங்கள் பதிவுக்கு புதியவள் கடந்த இரவு உங்கள் பதிவு வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது எல்லா பதிவுகளுமே வாசித்து முடித்தேன் ..முடித்த நேரத்தை கேட்டு விடாதீர்கள். மிகவும் துணிவாக நன்றாக எழுதியுள்ளீர்கள் இந்த பதிவுக்கு நான் நிச்சயமாக ஒரு பின்னூட்டம் போடணும் என்று நினைத்தேன் நானும் உங்கள் ஜாதியில் பிறந்தவள் தான்..நான் பிறந்த ஊர் அல்வாய் இப்போது கனடா வில் வசிக்கிறேன் .உங்கள் நண்பர்கள் கூட எனது ஊரில் இருக்குறார்கள்.எனது ஊரிலும் இந்த ஜாதி வெறி தலை விதித்து ஆடியது இப்போதும் ஆடிக்கொண்டு இருக்குகிறது.. நீங்கள் சொன்னதை போல எங்கள் ஜாதியிலே இரண்டு பிரிவு.எங்களை கொஞ்சம் குறைத்தே மதிப்பிடுவார்கள் எனக்கு இதுவரை தெரியாது ஏன் அப்பிடி பிரித்தார்கள் என்று எங்கள் வீடுகளுக்கு வந்தால் தண்ணீர் குடிப்பதோ சாப்பிடவோ மாட்டர்கள் அந்த உயர்ந்தவர்கள் இத்தனைக்கும் நாங்கள் எல்லோருமே ஒரே ஜாதி இங்கும் அவர்கள் அதை தொடர்கிறார்கள் மானம் கெட்ட பிழைப்பு, இப்பிடி தான் எனக்கு சொல்ல தோனுது ஏனென்றால் நாங்கள் பட்ட வலிகளும் காயங்களும் ஏராளம். ஆனால் இது எல்லாவற்றுக்கும் மாறாக எனது குடும்பத்தில் அங்கு எனது அப்பாவுக்கும் சரி எனக்கும் சரி எங்கள் ஜாதியை சாராதவர்கள் தான் நண்பர்கள் அதிகம். நான் அங்கு படிக்கும் காலத்தில் எனது நண்பி ஒருவரும் நானும் சேந்து எனது வீட்டில் ஒன்றாக படித்தோம் அவள் அடுத்த நாள் காலையில் தான் தனது வீடு செல்லுவாள் அதை அறிந்த எனது நண்பிகள் என்னை ஏசினார்கள் நான் அவர்களை கருத்தில் எடுக்கவில்லை இதெல்லாம் திருந்தாத வர்க்கம் என்று விட்டுவிடேன். நான் என் ஜாதி சாரதா எந்த நண்பி வீடு சென்றாலும் தண்ணீரோ தேநீரோ குடிக்க தவறுவதில்லை இது நாங்கள் பட்ட வலிகளுக்கு எனக்கு காயமாக நான் நினைப்பதுண்டு. இன்னும் இந்த திமிர் பிடித்த ஜாதி வெறி ஒழிவதாக எனக்கு தெரியவில்லை.. , இது உண்மை ..மன்னிக்கவும் நீண்ட ஒரு பின்னுட்டத்தை இட்டுவிட்டேன் .

    ReplyDelete
  8. அன்பின் ஜெயா (அக்கா என்று நினைக்கிறேன்)..
    எதற்கு மன்னிப்பு... கருத்தைத்தானே சொன்னீர்கள்..
    அல்வாய்... கனடா....சிலவேளை தெரிந்தவர்களாகக் கூட இருக்கலாம்... என்ன செய்வது.. சாதியும் சாதித் திமிரும் எங்கள் இனத்தின் சாபக்கேடாகப் போய்விட்டது.துரதிர்ஷ்டவசமாக கனடாவில்கூட தொடர்கிறார்கள் சாதிக் கொடுமையை.. என் 'என்று திருந்துவோம்' பதிவை படியுங்கள்

    ReplyDelete
  9. எனக்கு உங்களை விட ஒரு வயது கூட தான் எனினும் அக்கா என்று ஏன் பெரியவார்த்தை haha... எனக்கும் உங்களை அங்கும் சரி இங்கும் சரி எங்கோ பார்த்த நினைவு இருக்கு .நானும் வட இந்து மகளிர் கல்லூரியில் தான் படித்தேன் கண்டிப்பா உங்களை எங்கள் வீதியால் போக கண்டிருப்பேன் .மேலும் நீங்கள் பதிவில் கூறிய அதிகமானவர்களை எனக்கு தெரியும் எனவே உங்கள் பதிலுக்கு நன்றி .... உங்கள் அனைத்து பதிவுகளும் எனது கடந்த காலத்தை புரட்டி பாக்க வைத்துவிட்டது...

    ReplyDelete
  10. ///எனக்கு உங்களை விட ஒரு வயது கூட தான் எனினும் அக்கா என்று ஏன் பெரியவார்த்தை /// அதானே பார்த்தேன்... நிச்சயமாக உங்கள் வீதியால் போகக் கண்டிருப்பீர்கள்...ஏனென்றால் அல்வாயில் என் நெருங்கிய நண்பன் ஒருவன் இருந்தான்...நானும் அவனும் கூடுதலாக ஒன்றாகத்தான் பள்ளி செல்வோம்

    ReplyDelete
  11. டவுட்டுக் கணேஷன்16 July 2009 at 09:36

    கீத் உந்த சாதி பிரச்சினை எங்கட ஊரிலும் இருக்கிறது.எங்கட வீட்டில் வேலை செய்ய வாற அவர்களுக்கு பிளாஷ்டிக் கோப்பையில் சாப்பாடு தேத்தண்ணி கொடுத்ததை,அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்கப் படாமல் இருந்ததை நான் கண்டிருக்கிறேன்(எனது அம்மம்மாவின் காலத்தில் -15 வருடங்களுக்கு முன்) ஆனால் இப்போது எல்லாம் எங்கட வீட்டில் அப்பிடி அந்தளவுக்கு நிலைமை இல்லை.அப்பா ஒரு ஆசிரியர் என்பதாலோ அப்பா அதை அனுமதிப்பதில்லை.எனது நிலைப்பாடும் அப்பாவின் நிலைப்பாddஉடன் ஒன்றிப் போகிரது. நான் இதை தம்பட்டம் அடிப்பதாக் நினைக்க வேண்டாம்

    ReplyDelete
  12. வணக்கம் கீர்த்...

    நீங்கள் சாதீயம் பற்றி நெறய விசயம் துணிச்சலாக எழுதி வாரீங்க.... பாராட்டுக்கள்.

    ஆனால் உங்கள் வீட்டிலேயே அது தாராளமாக வாழ்கின்றது... அதையும் நீங்களே சொல்லீட்டீங்க. துணிச்சல்...

    நான் உங்களால் அவமானப்படுத்தப்பட்ட (நெல்லிக்காய்) ஒருவன்.

    மீண்டும் ஒரு அவமானம். (உங்கள் வீட்டு கதிரையில் இருந்ததிற்கு)

    உங்கள் வீட்டில் ஒரு வழக்கு விசயமாக சென்ற போது.

    அதுவும் எங்கள் வீட்டு பணத்தில் நடந்த வழக்கு.

    ReplyDelete
  13. வாங்க அனானி...
    நெல்லிக்காய் விசயம் நான் அறியாமல் செய்த தப்பு.. பதிவிலேயே மன்னிப்புக் கேட்டிருக்கிறேன்..

    எங்கள் வீட்டுக் கதிரையில் இருந்ததுக்கு நான் உங்களை எதுவும் சொல்லியிருக்க மாட்டேன் என்பது என் கருத்து.. என் நினைவில் என்னுடன் படித்த யாரையும் நான் அப்படி அவமானப் படுத்தியிருக்கவில்லை..என் வீட்டார் அதைச் செய்திருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்

    மற்றது ‘எங்கள் பணத்தில் நடந்த வழக்கு' என்பது கொஞ்சம் கொச்சையான சொற்பிரயோகம்.. அது தொழில்.. பணம் வாங்காமல் வழக்காடுவது எங்கும் நடப்பதில்லை.. ஒருவர் செய்கிற தொழிலுக்குக் கொடுக்கும் கூலியைச் சொல்லிக் காட்டக்கூடாது

    ReplyDelete
  14. நான் பணம் கொடுத்ததை சுட்டிக் காட்டவில்லை. தொழில் ரீதியாக வந்தும் உரிய மரியாதை இல்லையே என்ற வேதனையே..
    மற்றப்படி எதுவும் இல்லை... தப்பாக இருந்தால் மன்னித்தருளுக....

    நல்ல நல்ல படைப்புகள்.. நல்ல தமிழ் உரைநடை.. வெற்றிகரமாக தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  15. அனானி...
    மன்னித்தருளுக என்பதெல்லாம் ரொம்ப ஓவர் மச்சான்..

    உங்கள் அடையாளத்தோடு மெயிலுங்கள் (shokkuddy@gmail.com)

    ReplyDelete

சரி.. சமாதானமாப் போவோம்... பின்னூட்டம் போட்டுட்டுப் போங்க...